Saturday, August 15, 2015

சுதந்திர தினத்தில் பூத்த அரவிந்தம் !

காலம் கனிய முழுவதும் இதழ்கள் அலர்த்தி விரிந்த அரவிந்தம்தான் நமது பாரதம். ஒவ்வொரு நாளுமே இந்த அரவிந்த மணம் கமழும் வகைதான் தேசியம். தேசிய சுயத்தின் மெய்யுணர்வு நாற்றங்கால் கொண்ட ஆண்டுதான் 1906. வங்காளத்தில் சுதேசிய இயக்கத்தின் தொடக்கம். விவேகாநந்தர் என்ற பெரும் ஆளுமை வழிவழியான பண்பாட்டின் ஆக்க பூர்வமான நலன்களைக் குறித்த ஒரு விழிப்புணர்வைத் தமது சொற்களாலும் எழுத்தாலும் தூண்டிவிட்டதன் விளைவின் ஒரு வடிவம் சுதேசிய எழுச்சி. அஃது மக்கள் அரசியல், சுய ஆட்சி என்ற மக்கள் சமுதாயத்தின் இலட்சிய வடிவாக்கமாய் மாறி அமைய முழங்கிய சங்கம் வாய்மடுத்து ஊத ஆதர்சங்களாய் முன்னின்ற அணியினரில் முதன்மையானவர்கள் ஸ்ரீஅரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோர். 

ஸ்ரீஅரவிந்தரின் சுதந்திரப் போராட்டப் பகுதி நன்கு நூல்களிலும், இதழ்களிலும் பதியப்பட்ட ஒன்றுதான். ஆனல் அவர் 1910ல் திடீரென்று தமக்கு ஆன்மிக அருள் அநுபவங்கள் ஏற்பட, அதற்குப்பின் முழுக்கவும் தம்மை புதிய ஆன்மிகப் பாதைகளைத் திறக்கும் வாழ்க்கைப் பணிக்காக ஈடுபடுத்திக் கொண்டது, 1950ல் அவர் காலமாகும் வரையில் மிகவும் தெளிவாகப் பதியப் பட்டு, அதனோடும் கூட அவருடைய நூல்கள் தொடர்ந்து கற்றவர்களால் படிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அவர் 1910க்குப் பின் பேசிய வகையெல்லாம் தாம் இந்த பிரபஞ்சத்தின் ரகசியம் ஒன்றை உணர்ந்து உரைக்க வந்த ரிஷி என்றபடிதான் பேசினார். அதுமட்டுமின்றி அரவிந்த ஆசிரமம், அன்னை, பாண்டிச்சேரி என்ற அடையாளம் பெருகி, அடையாளப் படுத்தப்படும் அரவிந்த சிந்தனையே அதுதான் என்னும் அளவிற்கு நிறுவனப்படுத்தப்பட்ட கருத்துக் கட்டடமாக ஆன பின்னர் பரோடா சமஸ்தானத்து ஆங்கிலப் பேராசிரியரையோ, சிறையிலிருந்து வெளிவந்த அந்த முரட்டு யோகி ஸ்ரீஅரவிந்த கோஷ் என்பவரையோ நாம் தேடுவது கடினம்தான்.ஆனலும் அப்படிக் காண்பதில்தான் அந்த மலரை நாம் Fossil ஆக மாறிவிடாமல் உயிர்நலம் திகழ வென்றெடுக்கிறோம் என்பது இருக்கிறது. ஆனால் அப்படிக் காண்பதை ஸ்ரீஅரவிந்தரே நேரடியாக இருந்தால் ஒப்புவாரா என்பதும் ஒரு கேள்விதான். தம்மைச் சுற்றியுள்ளவர்களின் விருப்பங்களால் தமக்கென்று சில அடையாளங்கள் எழுவதை அனுமதித்துதான் இருந்தார் என்று தோன்றுகிறது. ஆனால் அது அவருடைய முழுமையான கணங்களின் உயிரொளியை, அதன்பின் அவர் வாழ்க்கையில் தொடர்ந்த காலங்களில் அவர் கருத்துகள் வடிவமைக்க முடிந்த மாட்சிகளை மறைக்க முடியாது,  

ஏனெனில் அவர் சென்ற பாதை ஆன்மிகத்தில் மிகவும் துணிச்சலான பாதை. அந்தத் துணிச்சலுக்கான வேர்களை அவர் மரபிலிருந்துதான் பெற்றார் என்பதால் மரபுகள் அவர் சென்ற பாதைகளின் துணிச்சலை முன் கூட்டியே கருதியிருந்தன என்று நாம் சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் மரபு ரீதியான பார்வையில் அவருடைய கருத்துகளின் ஒரு பகுதி அர்த்தப் படாமல் போகும் வாய்ப்பு உண்டு. மரபுகளுக்கும் தம்முடைய செய்திக்கும் உள்ள பாரதூரத்தை அவரே நன்கு அறிந்திருந்தார். 

The traditions of the past are very great in their own place, in the past, but I do not see why we should merely repeat them and not go farther. In the spiritual development of the consciousness upon earth the great past ought to be followed by a greater future. (pp122) 

In the beginning, before I discovered the secret of the Supermind, I myself tried to seek the reconciliation through an association of the spiritual consciousness with the vital, but my experience and all experience show that this leads to nothing definite and final, - it ends where it began, midway between the two poles of human nature. An association is not enough, a transformation is indispensable. (pp 120) 
(Sri Aurobindo on Himself) 

நான் சிறுவயதில் படித்த அவருடைய நூல்கள் வேதங்களைப் பற்றிய யோக ரீதியான விளக்கங்களாக அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள். அன்றிலிருந்து சுதந்திர தினம் வரும் போதெல்லாம் அவருடைய நினைவும் வரத்தான் செய்கிறது. அவருடைய பிறந்த தேதி ஆகஸ்ட் 15 என்பது ஒரு யதேச்சை ஆயினும், சுதந்திரமாய் மலரும் அரவிந்தம் சுடரும் ஆய்வுப் பரிதியில் காணத்தக்க ஓர் அழகு அன்றோ! வந்தே மாதரம் என்போம்! 

பொதுவாக ஆன்மிகம் கூறுவது மனம் உடல் சார்ந்த சுய அடையாளப் பற்றின் சிக்கல்களால் இந்த ஜீவன் உலக வாழ்க்கையில் முழுகித் தன்னை மறந்து விடாமல், தான் மனம் உடல் என்பதற்கு அப்பாற்பட்ட மெய்மை என்பதை நன்குணர்ந்து இந்த உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு என்றும் நிலைத்த பரம்பொருள் தன்மையோடு ஒன்றுவதுதான் இலக்கு என்பதைத்தான்.ஆக இந்த இலக்கை அடைய முயலும் ஜீவனுக்குத் தடையாக ஆகிவிடுவன இந்த உலகியல் வாழ்க்கையும், இதன் அடிப்படைகளான உடல் சார்ந்த பசி, தேவைகள், மனம் சார்ந்த இச்சைகள், வேட்கைகள், அகங்காரம் அடிப்படையாக எழும் தன் முனைப்புகள். இவற்றிலிருந்து தப்ப மனிதருக்கு ஒரே வழி புலனடக்கம், மன அடக்கம், மனத்தை இலட்சியத்தின் பால் ஒரு முக ஆக்கம். ஸ்ரீ அரவிந்தரும் இதைச் சொல்லாமல் இல்லை. ஆனால் இந்த நிலைப்பாட்டை ஆரம்பக் கட்டம் என்கிறார். பவக் கடல் என்பது இந்த உலகியல் வாழ்வின் அலைத்தனமான சுழற்சி. இதைக் கண்டு அஞ்சிக் கடவுளிடம் சரண் புக்கு இந்த ஜீவனானது தன் கடைத்தேற்றத்திற்கு முனைவது என்ற சித்திரத்தில் ஒரு பார்வை மாற்றம் என்பதை ஸ்ரீ அரவிந்தர் கொண்டு வர முயற்சி செய்கிறார். தனித்தனி ஜீவன்களுக்கான கடைத்தேற்றம் என்பது பண்டைய நெறிகளின் இலக்காக இருக்க ஏன் இந்த உலகம், ஜீவனின் வாழ்க்கைச் சக்திகள், மனத்தின் இயல்பு ஆற்றல்கள் என்று அனைத்தையும் வேர்முதல் மாற்றம் செய்து இந்தத் தரை மீது இயன்ற வாழ்க்கையையே ஆன்மிகத் தன்மை சார்ந்ததுவாய் ஆக்கினால் என்ன என்பது அவருடைய பார்வையின் மையம். உலகியற்கை இவ்வளவுதான் என்று அஞ்சி ஒதுங்காமல், இந்த உலகின் இயற்கையையே மாற்றாமல் போனால் அப்புறம் ஆன்மிகத்தின் அனைத்தையும் விஞ்சிய சுயத்தின் பெருமை என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்கிறார் அவர். அதைச் செய்வதற்கு நம்முடைய நிலையற்ற உலக வாழ்வின், ஜீவர்களின் ஆற்றல் போதுமா? என்னும் கேள்வியை அவர் எதிர் கொள்ளும் போதுதான் அவருடைய நெடிய கருத்து அமைப்புகளின் கட்டுமானப் பணி தொடங்குகிறது. 

சாதாரண மனித சக்திகள் போதா மனித வாழ்க்கையின் வேர்முதல் மாற்றம் நிகழ என்பதை அவரும் உணர்கிறார். எனவே நாம் செய்ய வேண்டியன முக்கியமாக தெய்வ சக்திகளை நம் வாழ்வில் இறக்கம் செய்ய வேண்டிய ஆயத்தங்கள் என்கிறார். ஸ்ரீ அரவிந்தரின் கூடப்பழகி அவரது கருத்துகளை உள்வாங்கிய பாரதியார் இந்தக் கருத்தைப் பாடிக் காட்டுகிறார்: 

சொல் ஒன்று வேண்டும் 
தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்ய 
சொல் ஒன்று வேண்டும்
அவ்விதம் மேன்மை நிலையின் சக்திகள் முந்தைய நிலைக்குள் இறக்கம் ஆகி அதுவரை ஒரே வித இயல்புடன் போய்க் கொண்டிருந்த உயிரின வாழ்க்கையை ஒரேயடியாக வேர்முதல் மாற்றம் கொள்ளும்படிச் செய்தது இனித்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. ஏற்கனவே ஒரு முறை நடந்து ள்ளது என்று அவர் சுட்டுவது இயற்கையின் பரிணாம மாற்றத்தையே ஆகும். இந்தக் கருத்தை அவரது ஆங்கிலக் காவியமாகிய சாவித்திரி மிக அழகாகப் படம் பிடிக்கிறது. 

அந்தப் பகுதியை யதேச்சையாகத் தமிழில் மொழிபெயர்த்து வைத்திருக்கிறார் கவிஞர் திருலோக சீதாராம்..

போன காலம் ஓர் கான் விலங்கினில் 
பூத்த மானுடர் போலவே 
வானவர் குலம் ஒன்று நம்மினும் 
வந்து உதிப்பது ஓர் வாய்மையே. 

அத்தகைய தெய்வ சக்திகளை வாழ்வில் இறக்கம் செய்யவும், தெய்வத் தன்மை இயன்ற வாழ்க்கையை நன்கு நிலவச் செய்யவும் ஆகின்ற கருத்தாக்கங்களை அவர் தொடர்ந்து பதிய வைத்த நூல்தான் The Life Divine. 

வேத ரிஷிகள் செய்ததை விடவும், செய்யாத காரியத்தை நீங்கள் செய்கிறீர்களா? அவ்வாறு கருத்துப்பட நீங்கள் கூறியதற்கான விமரிசனத்தை எப்படி ஏற்கிறீர்கள்? என்று ஒருவர் கேட்க, அவர் சொல்லும் பதில்: 

It is not I only who have done what the Vedic Rishis did not do. Chaitanya and others developed an intensity of Bhakthi which is absent in the Veda and many other instances can be given. Why should the past be the limit of spiritual experience? (pp 134) 

 அவருடைய நோக்கம் உலக இயற்கையையே, மனித குலத்தையே தெய்வத் தன்மையும், தெய்வ சக்திகளும் நிலவும் பூமியாக மாற்றிவிட வேண்டும் என்பது. அதன் அடிப்படையில் அவர் எழுப்பிய கருத்துக் கட்டுமானங்களாய் அவருடைய நூல்களால் ஆன நூலகமே பெருகியுள்ளது. எல்லாம் என்ன பார்க்கப் போனால் ஒரு பகற்கனவுதானே என்று சொல்லும் பொது புத்தியால் இதுவரை எந்த மனித குல முன்னேற்றமான அடிவைப்பும் நிகழ்ந்ததில்லை. ஆனாலும் அத்தகைய பொது புத்தியின் குரல் வழிநடைப் பயணத்தின் உதவி ஒலி என்ற அளவில்தான் அதன் பயன். ஆனால் மனித குலத்தையே தழுவிய ஏதாவது ஓர் வேர்முதல் மாற்றம் வந்துதானே தீர வேண்டும், இயற்கையின் பரிணாம மாற்றத்தின் எதிர்காலம் நோக்கிய அம்புக்குறியின் போக்கை உற்று நோக்கினால் என்ற சிந்தனை எழும்போது ஸ்ரீ அரவிந்தரின் இந்தக் கருத்துகளின் துணிச்சலையாவது எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்? 

இந்தியாவில் நிகழ்ந்தது மறுமலர்ச்சி என்றால் அது எத்தகைய மறுமலர்ச்சி என்பதை மிகத் தெளிவாக அவர் விளக்கும் கட்டுரையில் (அதுவும் 1906 சுதேசி இயக்கத்தின் பிறப்பு தொடங்கியே அதன் முன்னணியில் நின்ற ‘அந்த முரடராலேயே’ எழுதப்பட்ட கட்டுரை என்னும் போது அதன் முக்கியத்துவமும், ஆவணத் தன்மையும் சொல்லாமலே விளங்கும்.) அதில் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பி விடையைச் சிந்திக்க வைக்கிறார் ஸ்ரீஅரவிந்தர்: 

What was this ancient spirit and characteristic soul of India? European writers, struck by the general metaphysical bent of the Indian mind, by its strong religious instincts and religious idealism, by its other-worldliness, are inclined to write as if this were all the Indian spirit. An abstract, metaphysical, religious mind overpowered by the sense of the infinite, not apt for life, dreamy, unpractical, turning away from life and action as Maya, this, they said, is India; and for a time Indians in this as in other matters submissively echoed their new Western teachers and masters. They learned to speak with pride of their metaphysics, of their literature, of their religion, but in all else they were content to be learners and imitators. 

இந்தியா வெறுமனே அப்பாலைய உலகம் பற்றியே பேசிக் கொண்டிருந்த நாடு மட்டும்தானா? அதுதான் அதனுடைய காலம் காலமான பண்பாட்டின் முழுமையா? பெரும் ஆன்மிகம் ஒரு பண்பாட்டில் விழுமியமாக மலர வேண்டுமானால் பெரும் வளம் மிக்க பல பரிமாணங்கள் உடைய வாழ்வின் திகழ்ச்சி முன்னர் அங்கு நிலவாமல் எப்படி அந்தரத்தில் ஆன்மிகத் தெளிவு மட்டும் வந்துவிடும்? என்று அவர் கேட்கும் கேள்வி சிந்தனைக்குரியது. 

Spirituality is indeed the master-key of the Indian mind; the sense of the infinite is native to it. India saw from the beginning, - and, even in her ages of reason and her age of increasing ignorance, she never lost hold of the insight, - that life cannot be rightly seen in the sole light, cannot be perfectly lived in the sole power of its externalities. She was alive to the greatness of material laws and forces; she had a keen eye for the importance of the physical sciences; she knew how to organise the arts of ordinary life. But she saw that the physical does not get its full sense until it stands in right relation to the supra-physical; she saw that the complexity of the universe could not be explained in the present terms of man or seen by his superficial sight, that there were other powers behind, other powers within man himself of which he is normally unaware, that he is conscious only of a small part of himself, that the invisible always surrounds the visible, the suprasensible the sensible, even as infinity always surrounds the finite. She saw too that man has the power of exceeding himself, of becoming himself more entirely and profoundly than he is, - truths which have only recently begun to be seen in Europe and seem even now too great for its common intelligence. 

But this was not and could not be her whole mentality, her entire spirit; spirituality itself does not flourish on earth in the void, even as our mountaintops do not rise like those of an enchantment of dream out of the clouds without a base. When we look at the past of India, what strikes us next is her stupendous vitality, her inexhaustible power of life and joy of life, her almost unimaginably prolific creativeness. For three thousand years at least, - it is indeed much longer, - she has been creating abundantly and incessantly, lavishly, with an inexhaustible many-sidedness, republics and kingdoms and empires, philosophies and cosmogonies and sciences and creeds and arts and poems and all kinds of monuments, palaces and temples and public works, communities and societies and religious orders, laws and codes and rituals, physical sciences, psychic sciences, systems of Yoga, systems of politics and administration, arts spiritual, arts worldly, trades, industries, fine crafts, - the list is endless and in each item there is almost a plethora of activity. She creates and creates and is not satisfied and is not tired; she will not have an end of it, seems hardly to need a space for rest, a time for inertia and lying fallow. 

சுதந்திர தினத்தில் எப்பொழுதும் ஸ்ரீஅரவிந்தரின் கருத்துகள் குறித்த தியானத்தில் ஆழ்தலே என்னுடைய சுதந்திர தினக் கொண்டாட்ட வழியாக நெடுங்காலம் இருந்து வருகிறது. விடுதலை மலர்ந்த இந்த நன்னாளில், பூரண விடுதலையை நோக்கி மலர்ந்த அரவிந்தம் என்பதை அறிவின் கதிரொளியில் காண்பதே ஓர் அலாதியான இன்பம் அன்றோ ! 

*** 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

Saturday, August 1, 2015

ஞானவாசிட்டம்

தமிழில் தத்வார்த்தங்களை வெளிப்படுத்தமுடியும் என்பதை 2000 ஆண்டுகளுக்கும் மேலான மெய்ஞானவியல் சொல்லாடல்கள் நிறுவிவந்திருக்கின்றன. ஓரளவிற்கு தாராளமாகவே வடமொழிச் சொற்களை பயன்கொண்டு மீயியல் நுண்மைகளை மொழிப்படுத்தி வந்திருக்கின்றனர் நமது முன்னோர்.

ஒரு மதம், ஒரு வாதம், ஒரு தத்துவம் என்று இன்றி பொதுவாகவே அனைத்துத் தரப்பையும் சேர்ந்த கருத்தியலாளர்கள் வடமொழி சொற்தொகையை அதிக பட்ச கருத்துச்செறிவுடைய சொல்லுருவாக்கத்தை வேண்டி தங்கள் மொழியாடல் அமைப்பில் கைக்கொண்டனர். நேரடி தமிழ்ச் சொற்களை உருவாக்க முயன்றவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் 18, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாதவ சிவஞான யோகிகள். இவருடைய சிவஞான போத மாபாடியம் சைவ சித்தாந்தத்திற்கு பெருஞ்செல்வம் மட்டுமின்றி தமிழில் வேதாந்த அணுகுமுறைக்கான சொல்லாடல்களை முனைந்த பெருமுயற்சி என்ற கவனத்தையும் உடையது.

இதைப்போலவே சற்றேறக்குறைய இதே காலகட்டத்தில் ஸ்ரீஞானவாசிட்டம் எனப்படும் யோகவாசிஷ்டம், அதாவது வசிஷ்டர் இராமருக்கு தத்துவ ஞானம் போதிப்பதாக ஆரம்பித்து அத்வைதபரமான வேதாந்தத்தை ஒரு நுண்ணிய ரீதியில் கொண்டு செல்லும் நூல் இது. வடமொழியில் மஹாயோக வாசிஷ்டம் என்று பெருகியமைந்த நூலைச் சுருக்கி ஸ்ரீகாஷ்மீர பண்டிதர் லகுயோக வாசிஷ்டம் என்று ஒரு நூலைச் செய்தார். இதனை ஸ்ரீகவிராஜ பண்டிதர் குமாரர் வீரை ஸ்ரீஆளவந்தான் முனிவர் தமிழ்ச் செய்யுள் வடிவமாய் மொழிபெயர்த்தார். வடமொழி மூலத்திற்கு அமைந்த ஸம்ஸார தரணி என்னும் உரையை ஸ்ரீநித்தியானந்தர் தமிழில் 1870களில் சமுசார தரணி என்று மொழிபெயர்த்து வைத்திருந்தார். ஸ்ரீசுப்பைய ஞானதேசிகேந்திரர் பல வடமொழிநூல்களை ஆராய்ந்து ஸ்ரீவீரசேகரம் என்னும் உரையை இயற்றினார். மேலும், தமிழ்ச்செய்யுள், சமுசார தரணி, தம்முடைய ஸ்ரீவீரசேகரம் அனைத்தையும் சேர்த்து 1800 பக்கங்களில் பெரிய அளவு நூலாக 1928ல் சென்னை ஆனந்த போதினி அச்சுக்கூடத்தில் வெளியிட்டார்கள். அச்சு சின்னஎழுத்து.

இந்த நூல் ஸ்ரீரமண மஹரிஷியால் தம் கருத்துக்கு ஆதரவாக எடுத்துக்காட்டப்பட்ட நூல்..'நான் யார்?' என்ற விசாரத்திலேயே தத்துவம், வழி, தேட்டம், பயன் என்ற அனைத்தையும் அடக்கியவர் ரமணர். அவர் கருத்துக்கு ஆதரவாக ஒரு பாடல் ஸ்ரீஞானவாசிட்டத்தில், உபசமப்பிரகரணத்தில் 12வது பாடல்,

அகம் அகம்என்று
அனைத்துயிரினிடத்தும் இருந்து
அனவரதம் உரைப்பதாகி
நிகழ் ஒளியாய்
ஆன்ம தத்துவமான சொரூபத்தை
நினைத்தல் செய்வாம்.
திகழ் இதயக் குகை உறையும்
தேவதையை விட்டு
அயலே தெய்வம் தேடேல்.
மிக அரிய கௌத்துவத்தை எறிந்து
சிறுமணி தேடும் வேட்கை போல் ஆம்
.

மொழியை இயல்பாக தத்துவ நுண்கருத்திற்கு முறுக்கியிருக்கும் அழகைப் பார்க்கலாம்.

1928 ஆம் ஆண்டு வெளியிட்ட வீரசேகர ஸ்ரீ சுப்பய்ய ஞானதேசிகேந்திர ஸ்வாமிகள், அவரது சிஷ்யர் ஸ்ரீ அநந்தாநந்த ஸ்வாமிகள் சமுசார தரணி என்னும் தமிழாக்கமுற்ற உரையைப் பற்றி ஒரு தகவலைத் தெரிவிக்கின்றார்கள். ஸ்ரீ நித்தியநந்த ஸ்வாமிகள் என்பவர் அற்றைக்கு, அதாவது 1928க்கு 60 வருஷங்களுக்கு முன்னரே அந்தத் தமிழாக்கத்தைச் செய்து வைத்து அந்த 60 ஆண்டுகளாக அந்த உரை பாடம் கேட்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தது என்கிறார்.

அப்படி என்றால் 1868ஆம் ஆண்டு, அதன் முன்னரும் தமிழில் அத்வைத சாத்திரங்களைப் பாடம் கேட்கும் முறை இருந்து வந்திருக்கிறது. வீரை ஆளவந்தார் முனிவர் ஞான வாசிட்டத்தை அழகிய விருத்தப்பாக்களால் தமிழாக்கியது 18 ஆம் நூற். எப்படியும் 16 ஆம் நூற் இருந்து அத்வைத சாத்திரம் தமிழ் நூல்கள் அல்லது தமிழ் மொழியின் மூலம் ஆன்மிக சாதகர்களால் பயிலப்பட்டு வந்திருக்கிறது.

*

ஞானவாசிட்டமாம் இந்த நூலுக்கு ஸ்ரீவீரசேகரம், சமுசாரதரணி என்னும் இரு உரைகள் இருக்கின்றன என்று பார்த்தோம். அதில் சமுசாரதரணி என்னும் உரையின் தொடக்க உரையில் ஓர் அருமையான செய்யுள் -

பொன்னுலகத்தினில்
புவியில்
அந்தரத்து
என்னுடை உட்புறத்து
இலங்குகின்றது
மன்னு சித் சோதியே
வடிவம் யாவுமாய்த் துன்னுவது
அப்பொருள் தொழுது இறைஞ்சுவாம்.

*

இந்த நூல் யாருக்காக எழுதப்பட்டது? யார் இதைக் கற்பதற்கு அதிகாரிகள்? மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகிறது உரையான சமுசாரதரணி.

பந்தம் உற்றனன்
பரபதத்தைச் சேர்க என்று
அந்த நிச்சயம் உளான்
அறிவிலான் அலான்
சிந்தனைத் துயர்கெடச்
சித்தைச் சேர்ந்துளான்
இந்த நூற்கு உரியவன்
என்று கொள்கவே.

*

இலக்கணம், சொரூபம், சாதனம், பலம் என்பவற்றால் ஜீவன்முக்தி நிலைமையை விரிவாகக் கூறுகிறது ஞானவாசிட்டம். அதற்கு முன்னர் அறிமுகமாக ஒரு பாடல்,

இறப்பிலா இந்த மோகம்
இறையும் மீட்டெண்ணமின்றி
மறப்பதே நல்லது என்று மதித்தும்
உயர் மனத்தினுக்குத் திறப்படக்
காணப்பட்டது இல் எனச்
சித்தினாலே உறப்பெறும் எப்போது
அப்போது உயர் பரசுகம் அதாமே.

*

யாருக்கு எது பாரம்? ஒரு பட்டியல் தருகிறது ஞானவாசிட்டம்

அவிவேகிக்குப் பாரம் சாத்திரம்
மெய்யறிவிலோர்க்கு அங்கம் பாரம்
நவில் சாந்தி இல்லாதோர்க்கு உளம் பாரம்
அவாவினர்க்கு ஞானம் பாரம்
செவிதான உரு, வாணாள், மனம், புந்தி
அகங்காரம் செயல்கள் எல்லாம்
குவிபாரமாம்
சுமடர் சுமை போலப்
புந்திநலம் கூடாதார்க்கே.

*
சுமடர் என்பது அந்தக் காலத்தில் சுமை தூக்குவோருக்குப் பெயர் என்று இந்த நூலின் உரை கூறுகிறது. அதாவது மூட்டைத் தூக்கி என்று அர்த்தம் வரும் போலும். அவர்கள் சுமை தூக்கும் போது அந்தச் சுமைக்குள் இருப்பதின் மதிப்பு என்ன என்பது அவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று. சுமை மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். ஒரே கையில், ஒரே தடவை தூக்கி விடலாமா அல்லது இரண்டு நடை போய் வர வேண்டுமா என்றுதான் யோசிப்பார்கள்.

அது போல் புந்தி ஆகிய அறிவுநலம் வாய்க்காதவர்கள் தாம் பெற்ற அரும் மதிப்பு உள்ள உடல், இந்திரியங்கள், வாழ் நாள், அஹங்காரம், மனம் என்பதையெல்லாம் உரியவண்ணம் அவற்றின் மதிப்பு அறிந்து பயன் கொள்ளாமல், அதாவது இந்த வாழ்க்கையிலேயே தம்முடைய முத்திக்கு முனையாமல் வீணடித்து, வெறுமனே உண்டு உடுத்து தூங்கி வாழ் நாள் சுகமே கழிவதை மட்டும் கணக்கில் கொண்டு விரயமாக்குவர் என்பதைச் சொல்ல வந்தது இந்தப் பாடல் ஞானவாசிட்டத்தில்.
*

உலகத்தில் எவ்வளவு பொருட்கள்! எவ்வளவு வாழ்க்கைகள்! எவ்வளவு இன்பங்கள்!
தோன்றுகின்ற இவையெல்லாம் என்ன?

பாவமதாய்
ஆபத்துப் பயிலிடமாய்த்
தம்மில் தாம் பற்றின்றாயும்
தாவு மனக் கற்பனையால் சம்பந்தமாய்
இருப்புச் சலாகை போலாம்
மேவு பெரும் செல்வத்துக்கு இடமாகும்
எப்பொருளும் விடயத்தாலும்
பூவலயத்தாலும்
எது பயன்?
யாமார்?
வருவதெது?
பொய் பொய் பொய்யாம்.

*
இவ்வாறு ஒருவர் வெறுமனே நினைக்க முடியாது. வாழ் நாளில் பல அனுபவம் உற்று, பல படிப்பினைகளை அடைந்து மனம் பக்குவம் உறும்போது, தாம் அதுவரை மிக திரமானது நிலைத்தது என்று நம்பிய அனைத்தும் பொய் மேல் பொய் மேல் பொய்யாகப் போய்விட்டதே என்று நிதரிசனமாக உணர்ந்து கொள்வது என்பது ஆன்மிக நெறியின் தொடக்கம். இந்தப் படிப்பினையை மனம் உணராதவரையில், உள்ளம் பச்சை மட்டையாக வாழ்வில் பற்றுடன் காணப்படும். இந்த விரக்தி நினைப்பாக இல்லாமல் வாழ்க்கையின் நிலைப்பாடாக உணர வாய்க்கும் போதுதான் ஆன்மிகத்தின் எல்கேஜியே ஆரம்பம். அதுவரையில் எதுவும் ஏதோ சொல்லி வைத்த கொடேஷன்கள் போன்று இருக்குமே ஒழிய உண்மையில் புரியாது. ஆயினும் மனம் பொறுமையும் ஆர்வமும் கொண்டு விடாமல் முயன்று வர, சிறுகச் சிறுக இந்த விரக்தி ஏற்படும். இதையே ஸ்ரீதாயுமானவரும், 'நிராசையின்றேல் தெய்வம் உண்டோ?' என்று கூறுகிறார்.
*

காவின் மதர் வண்டென்னப்
பாதலம் விண் திசை அனைத்தும்
கணத்துலாவும்
வாவிவளர் மயலொன்றே
வருத்தம் அனைத்தினும்
பெரிய வருத்தம் நல்கும்
மேவும் அரண் உறைபவர்க்கும்
துயர் செய்யும்
ஆசை என்னும் விடூசிகைக்குத்
தேவர் புகழ் மந்திரமாம்
சிந்தையறல்
உலகிடர் போம் சிந்தையற்றால்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*