Saturday, October 24, 2020

ஓம் ஹ்ரீம் ருதம் - ஸ்ரீராமக்ருஷ்ண ஸ்தோத்ரம் - சுவாமி விவேகாநந்தர்

 (சுவாமி விவேகாநந்தர் அருளிய ஓம் ஹ்ரீம் ருதம் என்னும் ஸ்ரீராமக்ருஷ்ண ஸ்தோத்ரம் முழுமையும் பொருள், குறிப்புகளுடன் - ஸ்ரீரங்கம் மோகனரங்கன்)

பக்தி உலகில் சில ஸ்தோத்திரங்கள் தாமே இயல்பாக மந்த்ரங்களாக அமைந்துவிடுவதும் உண்டு. பாடியவரின் ஆத்ம சக்தியும், தியானத்தின் பூர்ணதையும், தெய்வத்தின் கனிந்த பிரஸன்னமும் ஒரு சொல்லை மந்திரமாக ஆக்குகிறது. அந்த விதத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களின் உலகில் ஒரு ஸ்தோத்திரம் துதியாகவும் அதேநேரம் மந்திரமாகவும் கருதப்படுவது சம்ஸ்க்ருதத்தில் அமைந்த ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் என்னும் ஓம் ஹ்ரீம் ருதம் ஸ்தோத்ரமாகும். இதை அருளிச் செய்தவர் சுவாமி விவேகாநந்தர் ஆவார்.
இந்த ஸ்தோத்திரத்தில் சப்தாலங்காரம் ஒன்று அமைந்துள்ளது. நான்கு சுலோகங்களும் ஒரு கடைசி சுலோகம் நமஸ்கார மந்த்ரம் என்று அறியப்படுகின்றதுமான சுலோகம் சேர்ந்து ஐந்து சுலோகங்களால் ஆகியது இந்த ஸ்தோத்திரம். இதில் கடைசி நமஸ்கார சுலோகத்தைத் தவிர்த்து முதல் நான்கு சுலோகங்களைக் கவனித்தால் ஓர் அழகு புலப்படுகிறது. ஒவ்வொரு சுலோகத்திலும் இருக்கும் நான்கு வரிகளில் முதல் மூன்று வரிகளை மட்டும் கணக்கில் கொள்வோம். ஒவ்வொரு சுலோகத்திலும் வரும் நான்காவது வரி ஒரே வரியாக மடங்கி வரக் கூடியது. ‘எனவே நீரே எனக்குச் சரணம்...’ என்ற ப்ரார்த்தனையை மீட்டும் உரைப்பதாக வருவது. முதல் நான்கு சுலோகங்களிலும் உள்ள முதல் மூன்று மூன்று வரிகளின் முதல் எழுத்துகளை நிரல்பட அமைத்தால் நமக்குக் கிட்டுவதோ ஓம் நமோ பகவதே ராமக்ருஷ்ணாய என்னும் மந்த்ரம் ஆகும். இந்த ஸ்தோத்திரத்தைப் பாடும் பொழுதே ராமக்ருஷ்ண மந்த்ரத்தையும் ஜபிக்கும் விதமாக சுவாமி விவேகாநந்தர் அமைத்திருப்பது பக்தர்களுக்குப் பெரும் பேறு ஆகும்.
*
முதல் சுலோகம் :

ஓம் ஹ்ரீம் ருதம் த்வமசலோ கு3ணஜித் கு3ணேட்3
நக்தம் தி3வம் ஸகருணம் தவ பாத3பத்3மம் | 
மோஹங்கஷம் 3ஹுக்ருதம்  4ஜே யதோSஹம் 
தஸ்மாத்த்வமேவ ரணம் மம தீ3நப3ந்தோ4 || 

அனைத்து வேதங்களின் சாரமான கருத்துகளையும் ஓரெழுத்து ஒரு மொழி ஒன்றில் செம்மி வைக்க வேண்டும் என்றால் அந்த ஓரெழுத்து ஒரு மொழியானது ஓம் என்னும் ப்ரணவமாகும். ஓம் என்னும் எழுத்தாம் சொல்லையே தாது அர்த்தங்கள் என்ற ரீதியில் பொருள்படுத்தினால் அது கிட்டத்தட்ட பத்தொன்பது விதமான அர்த்தங்களைத் தரக் கூடும் என்று வியாகரண சாத்திரம் உரைக்கிறது. அதே போல் அனைத்து ஆகமங்களின் சாரமாகவும் திகழ்வது ‘வித்தாகும் எழுத்து’ என்று பொருள்படும் பீஜாக்ஷரமான ஹ்ரீம் என்பதாகும். வேதம், ஆகமம் என்ற இரண்டின் சாமரஸ்யமே பண்டைக் காலத்தில் சநாதனம் என்றும் இற்றைக் காலத்தில் ஹிந்துமதம் என்றும் போற்றப்படும் மஹத்தான ஆன்மிக நெறியாகும். ஹிந்துமதத்தின் உயிர்க்கருத்தாய் இருப்பது ’பலவழிகளிலும் சென்றடையக் கூடியது ஒரு பெரும் பரம்பொருள்’ என்னும் கருத்தாகும்.

பரம்பொருளைப் பற்றிய உயிரான கருத்து இதுவென்றால், பரம்பொருளை அடையும் வழிகளின் பொதுத்தன்மையின் உயிரான அம்சம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அத்தகைய அடையும் வழிகளைப் பற்றிய உயிரான அம்சமே த்யாகம்தான் என்பது உபநிஷதங்கள் அறுதியிட்டு உரைக்கும் முடிவாகும். உலகியல் என்பதைத் துறக்காமல் பரத்தின் உண்மையை உணர்தல் ஒருகாலும் இயலாது. ‘த்யாகேநைகே அம்ருதத்வமானசு:’ தியாகம் ஒன்றினாலேயே அம்ருதத்துவம் அடையப் படுகிறது. ‘நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ’ என்பார் ஸ்ரீதாயுமானவர்.
எனவே அடையப்படும் பெருநிலையைப் பற்றிய தெளிவையும், அடையும் வழிகளைப் பொறுத்தவரை இன்றியமையாத அம்சத்தையும் ஒருங்கே தம் வாழ்வாலும் வாக்காலும் விளங்கச் செய்த பரமபுருஷர் நம் காலத்தில் வந்த ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸர் ஆவார். ஸ்ரீராமக்ருஷ்ணரின் வாழ்க்கையே வேதம், ஆகமம், புராணம், தந்த்ரம், யோகம் என்ற பலதுறைகளின் சாரமாக அமைந்து திகழ்வது. ‘ஹிந்துமதமே அவருடைய குரு என்ற ஓருருவம் தாங்கி வாழ்ந்தது’ என்னும் பொருள்பட சகோதரி நிவேதிதை உரைக்கின்றார். எனவே முதல் சுலோகத்தின் தொடக்கச் சொற்களே பெரும் உள்ளடக்கமான பெரும் கருத்துகளின் சாரமாக அமைந்திருக்கிறது. ‘ஓம் ஹ்ரீம் ருதம்’ என்று. ‘வேதம் ஆகமம் ஆகியவற்றின் சாமரஸ்யமாகவும், த்யாகம் என்னும் வேதாந்த தர்மத்தின் வடிவாகவும் அமைந்தவர்’ என்பது அந்த மூன்று மந்த்ரச் சொற்களின் பொருளாம்.
அந்த த்யாகம் என்னும் பெரும் தர்மம் மாறுதலற்றது என்பதையே சநாதனம் என்னும் சொல் உரைக்கின்றது என்றால் இங்கோ சுவாமிஜியின் திருவாக்கில் அதே கருத்து அமையும் விதம் அழகு. ‘த்வமசலோ’ ஹிந்துமதத்தின் பேருருவாய் விளங்கும் நீர் கலக்கமற்றவர் என்னும் பொருளில் த்வம் அசல: என்கிறார். கலக்கமும், மாற்றமும், வேறுபாடும் சத்வம், ரஜஸ் தமஸ் என்னும் முக்குணங்களின் தாக்கத்தால் நிகழ்பவை. முக்குணம் கடந்த நிலையில் இருப்பவர் கலக்கமற்றவராக இருக்கிறார். ஆனால் அதேநேரம் அனைத்து உயர்குணங்களும் ஒருங்கே திகழும் ஒருவராயும் இருக்கிறார். அவருடைய குணங்களில் ஈடுபட்டவர்களால் அவர் என்றும் விரும்பப் படுகிறார். குணஜித் குணேட்ய:.
இரவுபகலாக இடையீடின்றி அவருடைய பாதகமலங்கள் ஒரு செயலைச் செய்கின்றன. அதுவும் நிஷ்காரணமான கருணையோடு செய்கின்றன. அது என்னவெனில் மோஹம் என்பதை நீக்கும் பெரும் செயலாம். ஆனால் அதே இரவுபகலாக இடையீடின்றி வணங்க வேண்டிய நானோ ஒன்றைச் செய்கிறேன். என்னவெனில் என்ன என்னவோ பலவேலைகளைச் செய்கிறேன் சம்பந்தமே இல்லாமல், அவருடைய பாதபத்மங்களை வணங்கும் ஒன்றைத் தவிர. இப்படி இருக்கும் எனக்கு என்னதான் வழி? நிர்கதிதானா? இப்படி நான் எதற்கும் பற்றாத தீனனாக, ஆத்மிகத் தகுதியில் கேட்பாரற்று நாதியற்ற வறியனாக ஆகிநிற்கும் எனக்கு என்ன கதி? எனவேதான் எங்கள் தீனபந்து ஆனவரே, திக்கற்றவர்க்கு உற்ற ஒரே புகலே! உம்மையே சரணம் என்று எய்தினோம் ஐயா!
தஸ்மாத் த்வம் ஏவ சரணம் மம தீனபந்தோ !
*
இரண்டாவது சுலோகம் :
4க்திர் 43ஸ்ச் 4ஜநம் 4வபே43காரி
3ச்ச2ந்த்யலம் ஸுவிபுலம் 3மநாய தத்வம் |
வக்த்ரோத்3த்4ருதோSபி ஹ்ருத3யே   பா4தி சிஞ்சித்
தஸ்மாத் த்வமேவ ரணம் மம தீ3நப3ந்தோ4 || 

பவம் என்னும் உலகியல் நோயை நீக்கவேண்டிப் பக்தி என்பதும், ஞான வைராக்கியாதி குணங்களான ஷட்குணங்களும், பஜனம் என்னும் சங்கீர்த்தனம் முதலியவற்றில் ஈடுபடுவதும் எல்லாம் தம்மளவில் பார்த்தால் ஓரொன்றுமே கூட பரதத்வத்தை அடைவதற்குப் போதியதும் பொருத்தமானதுமான சிறந்த வழிகளே ஆகும். ஆனாலும் என்ன, என் விஷயத்திலோவென்னில் எல்லாம் வாய்ப்பேச்சில் விளக்கமாய் இருக்கின்றன. இதயத்திலோ என்றால் ஒரு சிறிதும் ஒளிவிடக் காணேன். எனவேதான் எங்கள் தீனபந்து ஆனவரே, திக்கற்றவர்க்கு உற்ற ஒரே புகலே ! உம்மையே சரணம் என்று எய்தினோம் ஐயா!
*
மூன்றாவது சுலோகம் :

தேஜஸ்தரந்தி தரஸா த்வயி த்ருப்தத்ருஷ்ணா: ராகே3 க்ருதே ருதபதே2 த்வயி ராமக்ருஷ்ணே | மர்த்யாம்ருதம் தவ பத3ம் மரணோர்மி நாம் தஸ்மாத் த்வமேவ ரணம் மம தீ3நப3ந்தோ4 ||

ஞான வைராக்கியாதிகள் இல்லை, பக்தி இல்லை என்போரும் கூட உலகியல் வேகங்களைக் கடந்துவிடுகின்றனர். எப்படியென்றால் உம்மைப் பற்றிப் பேசுவதிலும், நினைப்பதிலும் திருப்தி உற்றவர்களாய், தமது பற்றின் விஷயமாக உம்மை ஆக்கிக் கொண்டு விடுகிறார்கள் ஐயனே ராமக்ருஷ்ண!. உம்மையே தாம் எய்த வேண்டிய சத்ய நிலையாக மட்டுமின்றி, அந்தப் பெருநிலையை அடைவிக்கும் நெறியாகவும் உம்மையே வரித்து விடுகின்றனர். மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு என்று இருக்கும் மனிதர்க்கு மரணமில்லாப் பெருநிலையை அளிக்க வல்லன உமது திருவடிகள். எனவேதான் எங்கள் தீனபந்து ஆனவரே, திக்கற்றவர்க்கு உற்ற ஒரே புகலே ! உம்மையே சரணம் என்று எய்தினோம் ஐயா!
(மரணோர்மி - பிறப்பு முதல் இறப்பு உள்பட ஆறு மாற்றங்களாக, அல்லது பவக்கடலின் ஆறு பெரும் அலைகளாக ஷட் ஊர்மி = ஷடூர்மி என்று சொல்லப்படும். அதில் மரணம் என்னும் ஊர்மியை நீக்கினாலே மற்ற ஊர்மிகள் தம்மிடையே மறையும்)
*
நான்காவது சுலோகம் :
க்ருத்யம் கரோதி கலுஷம் குஹகாந்தகாரி
ஷ்ணாந்தம் சிவம் ஸுவிமலம் தவ நாம நாத2 |
யஸ்மாத3ஹம் த்வரணோ ஜகதே3கக3ம்ய
தஸ்மாத் த்வமேவ ரணம் மம தீ3நப3ந்தோ4 ||
குற்றம் குறை இருந்தாலும் களைந்து நன்மைக்கு ஆக்கிப் பணிகொள்ள வல்லது பகவானின் கருணை. தோஷங்களுக்கெல்லாம் எதிர்தட்டாயது பகவானின் குணம். தன்னளவில் தோஷம் அற்றதாய் இருப்பதோடல்லாமல் தன்னைச் சரணடைந்தார்களின் தோஷங்களையும் நீக்குவது கடவுளின் சிறப்பு. இந்தக் கருத்தை முதல் வரியில் சொல்கிறார் சுவாமி விவேகாநந்தர். குஹக எனப்படும் மாயையை அழிப்பது பகவானின் திருநாமம். ராமக்ருஷ்ண என்னும் நாமம் ஷ்ண என்னும் எழுத்தில் முடிகிறது. ஷ்ண என்னும் எழுத்தில் முடிவதும், மங்களத்தையே நல்குவதும், தோஷங்களுக்கெல்லாம் எதிரானதும் ஆன ராமக்ருஷ்ண என்னும் திருநாமத்தின் சிறப்பை உன்னுங்கால் உவகை பெருக்குவது. நம்மிடம் இருக்கும் தவறுகளையும் திருத்தி நம்மை நன்மைக்கு ஆக்குவது. ‘செயல் நன்றாகவே திருத்திப் பணிகொள்வான்’ என்று நம்மாழ்வாரைப் போற்றுகிறார் ஸ்ரீமதுரகவியாழ்வார். நானோ புகலிடம் ஏதுமற்றவன். செயல்களோ திருத்தம் இல்லை. அசரணனான எனக்கு என்ன கதி? எனவேதான் எங்கள் தீனபந்து ஆனவரே, திக்கற்றவர்க்கு உற்ற ஒரே புகலே ! உம்மையே சரணம் என்று எய்தினோம் ஐயா!
*
ஐந்தாவது சுலோகம் :
ஓம் ஸ்தா2பகாய 4ர்மஸ்ய ஸர்வத4ர்மஸ்வரூபிணே |
அவதாரவரிஷ்டா2 ராமக்ருஷ்ணாய தே நம : ||
நமஸ்கார மந்த்ரம் என்று அறியப்படும் இந்த சுலோகமானது சுவாமி விவேகாநந்தரால் 1898ல் ஃபெப்ரவரி 6 அன்று ஸ்ரீநவகோபால் கோஷரின் வீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட பூஜையறையின் தொடக்க பூஜையில் பாடப்பட்டது. இது அமைந்தவிதத்தால் ஸ்ரீராமகிருஷ்ண மந்திரமாகக் கருதப்பட்டு அடியார்களால் ஓம் ஹ்ரீம் ருதம் என்ற ஸ்தோத்திரத்துடன் சேர்த்துப் பாடப்பட்டு வருகிறது. இதற்குப் பல துறவியரும், அடியார்களும் ஓரொரு விதத்தில் பொருளுரைக்க முயன்றுள்ளனர். பெரியோர்கள் முயலும் விஷயத்தில் சில சிறுவர்களும் தங்கள் ஆர்வக் கோளாறு காரணமாக முயன்று நகைச்சுவைக்கு விஷயமாவது என்பது உலகில் புதிதல்ல. அந்தக் கணக்கில் என்னுடைய முயற்சியும் அமைகிறது. தகுதி என்று பார்த்தால் ஒரு நாளும் பொருந்தாத செயல். வித்வத் என்று பார்த்தால் வெறும் கேலிக்கே விஷயமாகும். இதையெல்லாம் விட ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸருக்கும் கொஞ்சம் ஹாஸ்யரஸத்திற்கான நிகழ்ச்சிகள் வேண்டாமா? அந்தக் கணக்கில் என்னுடைய முயற்சி.
இந்தச் சுலோகத்தில் ஸ்தாபகாய ச தர்மஸ்ய என்று சொல்கிறார் சுவாமிஜி. தர்மத்தை ஸ்தாபித்தவர் என்று வருகிறது. இதற்கு என்ன பொருள்? சநாதன தர்மம் என்பது இருந்துகொண்டு தானே இருக்கிறது? இங்குதான் நாம் உட்பொருள் என்ன என்றுபார்க்க வேண்டும். தர்மம் என்றால் என்ன? எது வாழ்க்கையைப் பயன் உள்ளது ஆக்குமோ அதுவே தர்மம். வாழ்க்கையை உணர்ச்சிகளின் வழியே செல்லும்படி விட்டுவிடுதல் மிருக நிலை. ஆனால் அதே வாழ்க்கையைக் கருத்துடன் ஊன்றிக் கல்வியினால் நன்கு விளங்கப் பெற்று அர்த்தம் உள்ளதாய் ஜீவிதத்தை ஆக்கினால் அப்பொழுதே மனிதப் பிறவி என்பது நிறைவு பெறுகிறது. வாழ்க்கையை உட்பொருள் துலங்க நிறைவு பெறுத்தும் வழிதான் கல்வி என்பது. அவரவர் கல்வியைப் பொறுத்து அவரவர்தம் வாழ்க்கையின் நிறைவு அமைகிறது. ‘வெள்ளத்தனையது மலர்நீட்டம். மாந்தர் உள்ளத்தனையது உயர்வு’ என்கிறார் திருவள்ளுவர். கல்வியின் முழுமை என்பது அஃது கடவுளைக் காட்டும் கல்வியாக ஆகும்பொழுது சித்திக்கிறது. எத்தனை கற்றும் கடவுளை நோக்கி மனித மனம் திரும்பாதவரையில் அஃது குறைக்கல்வியாகவே இருந்து விடுகிறது. இதைத்தான் ஆணியடித்தாற்போல் திருவள்ளுவர், ‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்’ என்று கூறுகிறார்.
வாழ்க்கையின் பயன் கடவுளைக் காணல்; கல்வியின் முழுமை கடவுளைக் காட்டல் என்றால் இப்பொழுது கடவுள் என்றால் என்ன, கடவுளைக் காணல் என்றால் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. கடவுள் என்றதுமே அது மதங்களின் விஷயம் என்றாகி விடுகிறது. ஆனால் கடவுள் என்பது வாழ்க்கையின் அறுதியான அர்த்தம் என்ற விதத்தில் வாழ்க்கையோடு சேர்ந்த விஷயம். பழங்காலங்களில் மக்கள் இந்த வாழ்க்கையின் ஆகச்சிறந்த அர்த்தத்தைக் குறித்துத் தாம் நம்பியவற்றை பலவேறு விதங்களில் நூல்களாகவும், நிறுவனங்கள் ஆகவும் ஆக்கி வருபவை நம்மிடையே பல நெறிகளாய் இருக்கின்றன. ஆனால் வாழ்க்கையின் அறுதியான அர்த்தத்தைத் தேடுவது என்பது ஒவ்வோர் உயிரினுள்ளும் கிளர்ந்து அவ்வுயிரை வாழ்வின் நிறைவுக்கு இட்டுச் செல்வது ஆகும்.
ஓர் உயிர் தனக்கு அமைந்த வாழ்க்கையை நன்கு புரிந்துகொண்டு, சூழும் உலகை நன்கு அறிந்து, தன்னையும் உள்ளடக்கிய முழுமையை உணரத் தலைப்படும் பொழுது அந்த ஏக்கம், அந்தத் தேட்டம் தலைசிறந்த தர்மம் ஆகும். அத்தகைய உயிரின் விழிப்புணர்வை, வாழ்க்கையின் நிறைவைக் குறித்த ஏக்கத்தை, கடவுள் காதலையே தனிப்பட நனிசிறந்த தர்மம் என்று ஸ்தாபித்தவர் என்று பார்த்தால் மனிதகுல வரலாற்றில் ஸ்ரீராமக்ருஷ்ணரைத் தவிர எவருமிலர். அனைத்து நெறிகளின் உட்கிடையும் இந்தக் கடவுள் தாகம்தான் என்றாலும் வெளிவடிவங்களிலும், நெறிகள் கோட்பாடுகள், ஒழுகுமுறைகள், கட்டளையிடுவோர், கீழ்ப்படிவோர், குழுக்கள், தம்மைச் சார்ந்தோர், மற்று பிறர் என்று பல நிறுவனமயமான விஷயங்களில் உட்சாரமான விஷயம் மறைந்து போனதுதான் நாம் காணக் கிடைப்பது. வாழ்க்கையின் இயல்பான நிறைவின் தர்மமாய் இருக்கும் ஒன்றிற்கு இனி அந்த நிலை ஏற்படாவண்ணம் வாழ்வின் நிறைவாம் கடவுளுக்கான ஏக்கத்தை நேரடியான தர்மமாக நிலைநாட்டிய ஸ்ரீராமக்ருஷ்ணர் என்றென்றும் மனித குல நன்றிக்கு உரியவர் ஆகிறார். எனவே அந்தச் சிறப்பையிட்டு ‘ஸ்தாபகாய ச தர்மஸ்ய’ என்கிறார் சுவாமிஜி.
அடிப்படையான உயிரான தர்மம் என்ன என்று நன்கு வாழ்வாலும், வாக்காலும் விளக்கிக் காட்டியவர் மக்களுக்குப் பழக்கத்தில் வந்து அமைந்த நெறிகள் அனைத்தையும் அனுஷ்டித்துக் காட்டி, அனைத்திலும் இந்த அடிப்படையான கடவுள் காதலே, வாழ்க்கையின் நிறைவுக்கான ஏக்கமே ஆகச் சிறந்த இன்றியமையாத அம்சம் என்று எடுத்துக் காட்டியது ஸ்ரீராமக்ருஷ்ணரின் சிறப்பாகும். அதையே ஸர்வதர்ம ஸ்வரூபிணே என்பதால் சுட்டுகிறார்.
ஒவ்வொரு காலத்திற்கும், பண்பாட்டிற்கும், சூழலுக்கும் உரிய வகையில் ஒவ்வொரு நெறியை ஓரோ காலங்களில் நிலைநாட்ட அவதார புருஷர்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் அடிப்படையான தர்மம் ஆன, வாழ்க்கையின் நிறைவு, அர்த்தம் என்பதற்கு நேரடியாக விளக்கம் தருவதான கடவுள் காதல், ஏக்கம் என்பதை வாழ்வாலும், வாக்காலும், வழிவழியான உபதேசங்களாலும் மறைந்து போகாத வண்ணம் ஆக்கி வைத்தவர் ஆகையினால் ஸ்ரீராமக்ருஷ்ணரை அவதாரவரிஷ்டர் என்று ஏற்றுகிறார் சுவாமி விவேகாநந்தர். அத்தகைய ஸ்ரீராமக்ருஷ்ணரிடத்தில் தம் உள்ளம் உரை செயல் என்ற அனைத்தையும் ஈடுபடச் செய்வதால் உயிரின் உன்னத நோக்கமான வாழ்க்கையின் நிறைவு, ஜீவிதத்தின் பூரண அர்த்தம் என்னும் இலட்சியம் எளிதில் நிறைவேறுகிறது என்பதைக் காட்டுவது ‘ஸ்ரீராமக்ருஷ்ணாய தே நம:’ என்பது.
ஸ்ரீராமக்ருஷ்ணருக்கு என்றும் வெற்றி உண்டாகுக !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

பரிணாமமும் ஸ்ரீஅரவிந்தரின் லைஃப் டிவைன் உம்

 பரிணாமம் என்ற பெரும் விஞ்ஞான உண்மையை உள்ளபடி கவனம் கொள்ளும் தத்துவங்கள், தியாலஜி வரைநெறிகள், அத்யாத்மிக சித்தாந்தங்கள், சாஸ்திரங்கள் என்று பார்த்தால் உலகெங்கும் உள்ள நிலை மிஞ்சிப் போனால் ஏதோ ஒரு பார்வை பார்த்தபடிப் போகும்; பெரும்பாலும் பரிணாமம் என்பது ஒவ்வாது என்றபடிதான் இருக்கும்; ‘இல்லை பரிணாமம் ஒன்றும் பிரச்சனை இல்லை’ என்று இருக்கும் கிரந்தங்களோ பரிணாமக் கொள்கையின் முழுவீச்சை உள்வாங்காமல் ஒரு சௌகரியமான விதத்தில் கடந்து போவதாய் இருக்கும். ஆனால் பரிணாமம் என்பதை நேருக்குநேர் சந்தித்தபடி உள்வாங்கி அதற்கும் மேலும் ஒரு முழுமையைக் குறைந்தபட்சம் கருதுகோள் என்ற அளவிலாவது அளிக்கும் வல்லபமும், லாகவமும் ஒருங்கே அமைந்து திகழும் தத்துவ சாஸ்திரம், யோகாரூட சமக்ரதர்சனம் என்று பார்த்தால் அது பகவான் ஸ்ரீஅரவிந்தர் அருளிய ‘தெய்வ வாழ்க்கை’ என்னும் லைஃப் டிவைன் ஆகும்.

”A spiritual evolution, an evolution of consciousness in Matter in a constant developing self-formation till the form can reveal the indwelling spirit, is then the key-note, the central significant motive of the terrestrial existence. This significance is concealed at the outset by the involution of the Spirit, the Divine Reality, in a dense material Inconscience; a veil of Inconscience, a veil of insensibility of Matter hides the universal Consciousness-Force which works within it, so that the Energy, which is the first form the Force of creation assumes in the physical universe, appears to be itself inconscient and yet does the works of a vast occult Intelligence. The obscure mysterious creatrix ends indeed by delivering the secret consciousness out of its thick and tenebrous prison; but she delivers it slowly, little by little, in minute infinitesimal drops, in thin jets, in small vibrant concretions of energy and substance, of life, of mind, as if that were all she could get out through the crass obstacle, the dull reluctant medium of an inconscient stuff of existence. At first she houses herself in forms of Matter which appear to be altogether unconscious, then struggles towards mentality in the guise of living Matter and attains to it imperfectly in the conscious animal. This consciousness is at first rudimentary, mostly a half subconscious or just conscious instinct ; it develops slowly till in more organised forms of living Matter it reaches its climax of intelligence and exceeds itself in Man, the thinking animal who develops into the reasoning mental being but carries along with him even at his highest elevation the mould of original animality, the dead weight of subconscience of body, the downward pull of gravitation towards the original Inertia and Nescience, the control of an inconscient material Nature over his conscious evolution, its power for limitation, its law of difficult development, its immense force for retardation and frustration. This control by the original Inconscience over the consciousness emerging from it takes the general shape of a mentality struggling towards knowledge but itself, in what seems to be its fundamental nature, an Ignorance. Thus hampered and burdened, mental man has still to evolve out of himself the fully conscious being, a divine manhood or a spiritual and supramental supermanhood which shall be the next product of the evolution. That transition will mark the passage from the evolution in the Ignorance to a greater evolution in the Knowledge, founded and proceeding in the light of the Superconscient and no longer in the darkness of the Ignorance and Inconscience." (Life Divine, SriAurobindo, ed 1951, pp 734-735)
***

சுவாமி அபேதாநந்தர் அருளிய துதிப்பாக்கள்

 ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய துதிப்பாக்களில் சுவாமி அபேதாநந்தர் அருளியவை அதிகம் எனலாம். இன்னும் கூட அதிகமாக அருளிச்செய்திருக்காலாம் என்று நினைக்கத் தூண்டுபவை. அந்தத் துதிகளில் பஜ ராமகிருஷ்ண ஸ்தோத்திரம் என்பது ஒரு தனி அழகு! நாம் ஏதோ வழியல்லா வழிகளில் கண்டமேனிக்குத் திரிந்து களைத்து மரத்தடியில் மயங்கி விழுந்திருக்கும் பொழுது நம்முடைய நண்பரோ அல்லது உறவினரோ அல்லது ஆசிரியரோ மனம் வருந்தி முகத்தில் நீர் தெளித்து வாழ வழி சொல்வது போன்ற உணர்ச்சியைத் தரக் கூடியது. வாய்விட்டுப் பாடுங்கால் அழச்செய்து விடும் அருள்நலம் வாய்ந்தது.

ரே ப்ராந்த போகவிஷயேஷு கதம் ஹி ரக்தோ
மோஹம் கதோ ப்ரமஸி வர்த்மநி தீர்க்ககாலம்|
விச்ராந்திமிச்சஸி யதி ஹ்யநிசம் ஸுகாப்தௌ
ஸந்தாபஸம்ஸ்ருதிஹரம் பஜ ராமகிருஷ்ணம் ||
ஏ பைத்தியமே! இன்பவிஷயங்களில் பற்றுகொண்டு, மோஹம் அடைந்து பிரமையில் ஆழ்ந்து சுற்றித் திரிகின்றாயே நெடுங்காலமாக பைத்தியமே! பேரின்பமாகிய அமைதிப் பெருங்கடலில் ஆழ்ந்து ஸம்ஸாரப் பாலையின் வெப்பெல்லாம் நீங்கி விச்ராந்தியடைய நீ எண்ணினாய் ஆகில் துதிப்பாய் ராமகிருஷ்ணரை!
*
ஸ்ரீராமகிருஷ்ண லோகநாத ஸ்தோத்திரம் என்பது சுவாமி அபேதாநந்தர் அருளியது. அதில் ஒரு ஸ்லோகம் -
‘பூஜிதா யேந வை சச்வத் ஸர்வேSபி ஸாம்ப்ரதாயிகா:
ஸம்ப்ரதாய விஹீநோ ய: ஸம்ப்ரதாயம் ந நிந்ததி |
நமோSஸ்து ராமக்ருஷ்ணாய தஸ்மை ஸ்ரீகுரவே நம: |’
யாரால் அனைத்து சம்ப்ரதாயத்தினரும் பூஜிக்கப் பட்டார்களோ, யார் தமக்கென்று ஒரு தனி சம்ப்ரதாயம் அற்றவராய் இருந்தாரோ, எந்த சம்ப்ரதாயத்தையும் இகழாமல் இருந்தாரோ, அந்த ஸ்ரீகுருநாதரான ஸ்ரீராமகிருஷ்ணருக்கு நமஸ்காரம்.
*
வாஸனைகள் இருந்தால் ஆசைகள் உண்டாகும். அவருக்கோ வாஸனைகள் எதுவும் கிடையாது. ஆனால் வேட்கை இருந்தது. ஆம். பிறருக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்பதில் அப்படி ஒரு வேட்கை! அவரிடமிருந்து கர்மங்கள் கழன்று போயின. ஆனால் பிறருக்காக எப்பொழுதும் பிறர் ஆத்ம நலத்திற்காகச் செயல்கள் செய்தவண்ணம் இருந்தார். பிரம்மம் என்பதில் பிரதிஷ்டையாய் இருந்தவர். அவருக்கு ஏது துக்கம்? ஆனாலும் எப்பொழுதும் வருந்தியவண்ணம் இருந்தார். ஆம் ஆத்ம ஞானமடையாமல் உலகியலில் அமிழ்வோரைக் குறித்து, பக்தர்கள் தம் பக்தியில் முன்னேற வேண்டும் என்று எப்பொழுதும் கவலை, வருத்தம்! அப்படியெல்லாம் இருந்தவரான ராமகிருஷ்ணரைத் துதிப்பாய்.
நிர்வாஸநோSபி ஸததம் பரமங்களார்த்தீ
நிஷ்கர்மகோSபி ஸததம் பரகர்மகர்த்தா
நிர்துக்கலேசமபி தம் ஸததம் பரேஷாம்
துக்கேஷு காதரமஹோ பஜ ராமக்ருஷ்ணம் ||
(சுவாமி அபேதாநந்தர்)
*
என்னவோ சாஸ்திரங்கள், இந்த நூல் அந்த நூல் என்று ஆத்ம ஞானத்திற்கு உதவாத பிரயாசைகளையெல்லாம் படித்துக்கொண்டிருக்கிறாயே, இன்னதுதான் முடிவாகச் சொல்ல வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு அதற்குத் தகுந்தாற்போல் ஜோடித்து தர்க்கங்களை அமைத்துக் காட்டும் முயற்சிகள் பலதும் என்று நீ அறிய மாட்டாயா? உண்மை உணர்ந்த ஞானியர் கூறுவதற்கு நேர் விரோதம். தாமும் இன்னதுதான் முடிவு என்று எதையும் கூறா அவை. மந்த புத்தியுள்ள நீ அவற்றை ஒதுக்கு. சந்தேகம், பிரமை எல்லாம் அகற்றும் ராமகிருஷ்ணரைத் துதிப்பாய்.
சாஸ்த்ரேஷு அநாத்மஸு கதம் ஹி தவ ப்ரவ்ருத்தி:
துஸ்தர்கஜாலம் இஹ தேசிக வாக்விருத்தம் |
ஸித்தாந்தஹீநமபி ஸந்த்யஜ மந்தபுத்தே
ஸந்தேஹவிப்ரமஹரம் பஜராமக்ருஷ்ணம் ||
***

கண்டன பவபந்தன - ஸ்ரீராமக்ருஷ்ண ஸ்தோத்ரம் - சுவாமி விவேகாநந்தர்

 (கண்டன பவபந்தன ஸ்தோத்திரம் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி சுவாமி விவேகாநந்தர் அருளியது தமிழ் அர்த்தத்துடன் முழுத் தொகுப்பாக )

ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் உன்னத இடத்தை வகிப்பவை சுவாமி விவேகாநந்தர் அருளிய வங்காள மொழியில் அமைந்ததான ‘கண்டன பவ பந்தன’ என்னும் ஸ்தோத்திரம், ஓம் ஹ்ரீம் ருதம் த்வமசலோ என்னும் சம்ஸ்க்ருத மொழியில் அமைந்த ஸ்தோத்திரம் ஆகும். இவை மாலை நேரத்தில் பொதுவாக ஸ்ரீராமகிருஷ்ண மடங்களில் ஆராத்ரிக பூஜையில் பாடப் படுகின்றான. கேட்பதற்கே மிகவும் எழுச்சியூட்டும் துதியாக அமைந்தது ‘கண்டன பவ பந்தன’ என்னும் துதி. பெரும் சமுத்திர அலைகளின் அணி போல் திரண்டு எழும் நாத அலை போன்றே பாடுங்கால் அமைவது.
கண்டன பவ பந்தன ஜக வந்தன வந்தி தோமாய் |
நிரஞ்ஜன நரரூபதர நிர்குண குணமய் ||
உலகியல் கட்டுகளை வெட்டியருள்வோய்!
உலகத்தால் வணங்கப் படுவோய்!
மாசுமறுவற்றோய்! மனித உரு தரித்தோய்!
குணங்களைக் கடந்தோய்!
உயர் குணங்களின் மயமாய் நின்றோய்!
உன்னை வணங்குவம் யாமே.
பவம் என்பது உலக இயலாக இருப்பது. அதன் இயல்பிலேயே பந்திக்கும் ஒன்றாக அமைவது. கருவிகரணங்கள் அமையப் பெற்று உருவாகும் மனித உயிர் அந்த கரணங்களைப் பயன்படுத்தும் முன்பே உலக இயல் அந்த உயிரின் அந்தக்கரணங்களில், அதாவது மனத்தில் உள்புகுந்து கலந்து விடுகிறது. பிறகு அந்த உயிர் தன்னியல்பு போல் நினைத்துச் செயல் படுவதெல்லாம் மேலும் பந்தக் கட்டுகளை வலுவாக்கும் செயலாக அமைந்து விடுகிறது. ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசாரியர்கள் இந்த இடத்தில் மிகவும் அற்புதமான கருத்தொன்றைக் கூறுகின்றனர். அதாவது இந்த ஜீவன் தனக்கு நன்மை என்று நினைத்துச் செய்வது எல்லாமும் கூட தனக்கே தீமையைச் சூழ்த்துக் கொள்ளும் உபாயமாக ஆகிவிடுகிறது என்பது அவர்கள் கருத்து. மேலும் அந்தப் பெரியோர்கள் கூறுவது யாதெனில் ஒருவன் கட்டுண்டு நின்றால் அவன் கட்டிலிருந்து விடுபட ஒரு கத்தியை யாரேனும் தந்தால் அதைக் கொண்டு கட்டினை வெட்டிக்களையாமல் கழுத்தை அறுத்துக் கொள்வது போல இருக்கிறது இந்த ஜீவன் தான் உய்வு பெற வேண்டி இயற்கையில் தரப்பட்ட அறிவை உரிய வழியில் பயன்படுத்தாமல் மேலும் தன்னை மோசம் போக்கிக் கொள்ளும் வழிகளில் போக்கிக் கொள்ளவே அந்த அறிவு பயன்படுகிறது. வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவருக்கு நீஞ்சிக் கரை சேரும் படியாக ஒரு புணை ஒன்றைக் கொடுத்தால் அதைக் கொண்டு கரையை நோக்கி நீஞ்சாமல் அடித்துப் போகும் வெள்ளத்தின் ஓட்டத்தின் வழியிலேயே போவது சுலபமாக இருக்கிறது என்று கொண்டு அப்படியே கடலில் போய் மூழ்கிவிடும் அபத்தமாகத்தான் இந்த ஜீவன் தனக்கு இயற்கையில் கொடுக்கப்பட்ட திறமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது என்று மிகவும் துல்லியமாக இந்த நிலைமையை விவரிக்கின்றனர் ஸ்ரீவைஷ்ணவ பெரும் ஆசிரியர்கள். எனவே கடவுளின் கிருபை எந்தக் காரணமும் இல்லாது ஒரு ஜீவனின் மேல் விழுந்தால் அன்றி இந்த உலகியல் கட்டுகள் வெட்டியெறியப்படுதல் யாங்ஙனம்? உலகியல் கட்டுகளை வெட்டியெறிவதை விட இந்த ஜீவனுக்குக் கிடைக்கக் கூடிய வரமோ, கிருபையோ வேறு எதுவும் இல்லை எனலாம்.
அவ்வாறு உலகியல் கட்டுகளைத் தம்பால் ஈடுபாடு கொண்ட மாத்திரத்திலேயே தன்னிச்சையாக நிகழும் வண்ணம் செய்துவிடும் அருள்மூர்த்தியை உலகமே வணங்கிப் போற்றுவதை விட என்ன செய்து விடமுடியும்?
உலகியல் கட்டுகள் இவ்வளவு கொடியன என்னும் பொழுது இந்த ஜீவர்களைக் காக்க வேண்டித் தானும் மனிதர்களோடு மனிதராக அவதாரம் செய்யும் பகவானின் ஜனனம் கர்மவினை என்னும் குறைபாடு எதுவும் அற்ற திவ்யமான செயலாகும். நாராயணன் நர ரூபம் தரித்தல் என்பதைப் போல திவ்யமும் அற்புதமும் ஆன செயல் என்ன இருக்கிறது? உலகமே மூன்று குணங்களான சத்வம், ரஜோகுணம், தமஸ் என்னும் மூன்றால் ஆனது போல் இருக்கிறது. எனவே பவபந்தம் என்பதும் உள்ளே நுணுக்கமாய்ப் பார்த்தால் இந்த மூன்று குணங்களின் புரிகளால் முடையப் பட்டதுதான் என்பது தெளிவாகிறது. அப்படி என்றால் இந்த மூன்று குணங்களைக் கடந்து போய்விட்டால்? பவபந்தம் என்பதிலிருந்து விடுதலைதானே? ஆம். ஆனால் அதை எப்படிச் செய்வது? அதுதானே பிரச்சனை? நம் அறிவைக் கொண்டுசெய்யும் முயற்சி மேலும் நாம் விலக்கும் திசைக்கே கொண்டு போய்ச் சொருகுவதாய்ச் சூழ்ச்சி இருப்பது போல் தோன்றுகிறது என்றால்? வெள்ளத்தில் குதித்துக் காப்பாற்றுபவர்கள் ஒன்று செய்வது வழக்கம். தம்மைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் தாம் கரையேறும் வாய்ப்பிலேயே தம்மைப் பற்றினார்களையும் கரைக்கு ஏற்றிவிட்டு மீண்டும் வெள்ளத்தில் குதித்து விடுவார்கள் அடுத்தவர்களை மீட்க. அது போல் முக்குணங்களைக் கடந்த மூர்த்தியாக இலகுபவர் தம்மை உள்ளத்தால், வாக்கால், செயலால் ஜீவர்கள் பற்றிக் கொள்வதற்கு வாய்ப்பாக அனைத்து உயர்ந்த குணங்களின் மயமாகவே இருக்கின்றார். ஜீவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். அவருடைய குணங்களைப் பாடி, சிந்தித்து, அவர் பெருமை விளங்கும்படியான செயல்களைச் செய்து அதிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலே போதும் பவபந்தனம் கண்டிக்கப்படுவதும், முக்தியும் தம்மைப் போல் நடந்தேறிவிடும். இவ்வாறு உள்ளம், உரை, செயல் மூன்றாலும் பகவத் குணங்களில் ஈடுபடுவதைத்தான் வந்தனம் என்று சொல்லப் படுவது.
கண்டன பவபந்தன
ஜகவந்தன வந்தி தோமாய்
நிரஞ்ஜன நரரூபதர
நிர்குண குணமய்
*
மோசன அகதூஷண ஜகபூஷண சித்கனகாய் |
ஜ்நானாஞ்ஜன விமலநயந வீக்ஷணே மோஹ ஜாய் ||
பாபம் என்பது அக(4)ம். மகாபாபம் என்பது அகதூஷணம். ஓர் உயிர் தான் முக்தி அடையும் மார்க்கத்திலிருந்து உலக மயக்கத்தில் ஆழும் வழிகளில் நடப்பது என்பது அந்த உயிரைத் தனக்குச் சொந்தமான ஆத்ம ஞானத்தை மறக்கடிக்கச் செய்கிறது என்பதால் பாபம் எனப்படுகிறது. முக்தி என்னும் இலட்சியத்தை மறந்து விடுவதும், தான் தூய அறிவுருவான ஆன்மா என்பதை மறந்து தேகமே தான் என்று மயங்குவதும், அதனால் எண்ணிறந்த துன்பத்திற்கும், தொடர்ந்த சோகத்திற்கும் ஆளாவதும் பாபத்தின் விளைவுகளாம். ஆனால் முக்திக்கான வழிகளையும், ஆன்ம ஞானத்திற்கான உதவிகள், வழிகள், உபாயங்கள் என்று உய்விக்கும் வழியையே அழிக்கத் துணிவது என்பது உலக மயக்கிலிருந்து தன்னை விடுவிக்கும் உபாயங்களையே அழிக்கும் செயல் ஆகையாலே மகாபாபம் என்று கருதப்படும். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றிய காலம் பாபம் மலிந்த காலம் மட்டுமன்று. முக்திக்கான வழிகளையே கூட மனிதர்கள் அழிக்கத் துணிந்த மகாபாபமான காலமும் கூட. அத்தகைய காலத்தில்தான் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பகவானின் தரிசனத்தாலும், அவரது அமுத மொழிகளைக் கேட்பதனாலும், அவருக்குத் தொண்டு செய்வதாலும் பாபம் தெறித்து ஓடுவதோடு அன்றி, மகாபாபமும் இருந்த இடம் தெரியாமல் மறையும் அற்புதம் நிகழக் கண்டவர்கள் பலர். உலக மயக்கம் நீங்கியது பலருக்கு என்றால், முக்திக்கான வழியைப் பகைப்பவர்களுக்கோ முக்தியில் நாட்டமும், ஆன்ம ஞானத்தின் அவசியமும் நன்கு உணரும் முனைப்பு தோன்றியது பேரதிசயம்.
எப்படி இது நடந்தது? ஆம். ஆத்ம ஞானமே, சித் மயமான ஆன்ம உணர்வே வடிவெடுத்து அவதாரம் செய்தால் பின்னர் பாபங்கள் தீயில் பட்ட பஞ்சிழைதானே!. மேலும் இந்த ஆன்ம ஞானத் தீயோ தன்னிலிருந்து கொளுத்திய பந்தமாய்ப் பலரைச் சுடர வைத்துவிட்டாலோ பின்னர் பாபங்களின் வேர்களும் அன்றோ கருகிவிடுகின்றன! இதை மிக அற்புதமாக முதல் வரியில் தெரிவிக்கிறார் சுவாமி விவேகாநந்தர். ‘மோசன அகதூஷண.. சிதகன காய்’. இந்த அதிசயம் நிகழ்ந்ததும் உலகியல் மயக்கம் அகன்றதும் உலகமே அணிகலன் போன்று மிகவும் விரும்பி அணிந்து ரசிக்கத் தக்கதாய் ஆகிவிடுகிறது. ஆன்ம ஞானம் பெற்ற மகான்களோ நடமாடும் அணிகலன்களாய் இந்த உலகை அழகான இடமாக ஆக்குகின்றனர். ’மோசன அகதூஷண ஜகபூஷண சித்கனகாய்’
மை என்பது மையல் என்னும் பொருளது. கண்ணிற்குக் குளிர்ச்சியும், அழகும் ஊட்டும் அழகு சாதனமும் மை என்று கூறப்படும். கரிய நிறமும் மை என்பதன் பொருளதாகும். சில சமயம் மந்திர சாத்திரங்களில் மறைத்து வைத்த புதையல் கண்ணிற்குப் புலப்பட உரிய மை ஒன்றை அணிந்தால் மறைவான புதையல் புலப்படும் என்ற பழங்கால அபிப்ராயமும் உண்டு. மனித வாழ்க்கையில் பெரும் புதையல் என்பதோ ஒன்றே ஒன்றுதான். அதுவே ஆத்ம ஞானம். கடவுளைக் காணும் காட்சி ஒன்றுதான் பெரும் மறைப்பாய் இருக்கிறது. ஒரு அதிசய மை இருக்கிறது. அதைக் கண்ணில் பூசிக் கொண்டால் காலம் காலமாக மறைந்துபட்ட பொக்கிஷமான புதையல் என்னும் ஆத்ம ஞானம் தெள்ளத் தெளிவாகக் காட்சிப்படும். அந்த மைதான் ஞானாஞ்சனம் என்பது. இந்த மையை அவரவர் தம் கண்ணில் அணிந்தால் உண்மை புலப்படும் என்பது ஒரு புறம். ஆனால் சித்கனமே உருவாக வந்த பகவானோ காணாத கண்ணிற்கெல்லாம் உற்ற ஞானக் கண்ணாய், ஞானாஞ்சனமாய், இருள் கடியும் ஒளியாய், மருள் கடியும் மாட்சியாய்த் துலங்குகிறார். அவரது கடைக்கணோக்கம் யார் மேல் விழுகிறதோ அவர்களின் மோகம் நசித்து விடுகிறது.
ஜ்நானாஞ்ஜன விமல நயந வீக்ஷணே மோஹ ஜாய்.
*
பா(4)ஸ்வர பா(4)வஸாகர சிர உன்மத ப்ரேம பாதார் |
பக்தார்ஜன யுகளசரண தாரண பவ பார் ||
இங்கே மிக அழகிய நயத்துடன் சுவாமி விவேகாநந்தர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் படம் பிடித்துக் காட்டுகிறார். பிரேமமே உருவான ஒருவர், அதுவும் பிரேமைப் பித்து தலைக்கேறிய ஒருவர், நிற்பதற்கும், தமது உடல், உடை, உரைகளை ஒரு நிதானத்தில் வைத்துக் கொள்ளவே கஷ்டப்படும் அளவிற்கு பிரேமையினால் ஆவேசமுண்ட ஒருவர் - இத்தகைய ஒருவரைப் பற்றிய சித்திரம் முதல் வரியில் காட்டப் படுகிறது. ஆனால் இத்தகைய ஒருவர்தாம் எத்தனையோ பக்தர்கள், தம்மை நாடி வந்தோர் உலகமெனும் பெருங்கடலில் கடந்து நித்தியம் என்னும் அக்கரையை அடைய ஸ்திரமான பாலமாய் நின்றவர், தம் மீது ஏந்திச் சென்று அக்கரை சேர்க்கும் பெருங்கலமாய் விளங்கியதே பிரேமையினால் கால்கள் தரையில் ஊன்றி நிற்க முடியாமல் துவண்ட திருவடிகள்தாம் திவத்திற்கு ஏற்ற திண்ணிய புணை என்று இரண்டாவது வரியில் காட்டும் பொழுது நயமும், நயக்கும் நல்லுள்ளமும் ஒருங்கே திகழக் காண்கிறோம். அதுவும் எத்தகைய பிரேமம்? சிர உன்மத ப்ரேமம் தலைக்கு ஏறிவிட்ட பித்தம் என்னும்படியான பிரேமம், பக்தி சாஸ்திரங்கள் பா(4)வ நிலை என்பதைக் குறித்துப் பேசுகின்றன. மஹாபா(4)வம் என்னும் நிலையை பக்தர்களின் உலகிலேயே மிகச்சிலர்தாம் எய்தியிருந்தனர் என்கின்றனர். (ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் அவ்வாறு மஹாபா(4)வம் என்னும் பெருநிலை எய்தப் பெற்றவர். சுவாமி நம்மாழ்வார் இத்தகைய மஹாபா(4)வம் என்னும் பெருநிலை அடைந்திருந்தார் என்பதை ஈட்டு வியாக்கியானம் முதலிய உரைகளால் நம்மால் அறிய முடிகிறது. ஸ்ரீகிருஷ்ணன் ஆய்க்குலத்தில் குழந்தையாய் வந்து தோன்றி யசோதை ஆச்சியிடம் வெண்ணைக்காகக் கெஞ்சி நெகிழ்ந்து நின்றான் என்ற செய்தியைப் பாட வந்த நம்மாழ்வார் பரமாத்மா, ஸர்வஸ்மாத்பரன் இவ்வாறு மனிச்சப் பிறவியில் தோன்றி ஆய்ச்சியர் கடைந்த வெண்ணைக்காக ஏங்கினான் என்னும் தீர்க்க முடியாத புதிரான பேரருளில் நெஞ்சைப் பறிகொடுத்தவர் ஆறுமாசம் மோகித்துக் கிடந்தார் என்னும் செய்தியை ஈடு பதிவு செய்கிறது. மேலும் நம்மாழ்வார் உற்ற பெருநிலையை அடைந்த முந்தைய உதாரணமான மகாத்மாக்களைச் சொல்லும் வாய்ப்பில் வாமதேவர், ருத்ரர் போன்றோரைக் காட்டுகிறது ஈடு வியாக்கியானம்.)
அத்தகைய பா(4)வநிலைகளின் சாகரமாகத் திகழ்ந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்பதைக் கூறுமிடத்து சுவாமி விவேகாநந்தர் ஒரு முக்கியமான பதத்தை இடுகிறார். அதுவே பாஸ்வர என்பதாகும். பாஸ்வர என்றால் ஒளி மிகுந்த என்று பொருள். பா(4)வம் என்பது காவ்ய சாஸ்திரம் காட்டும் பொருளில் உள்ளத்தின் உணர்ச்சியடங்கா நெகிழ்நிலை என்பதைச் சாதாரணமாகக் குறிக்கும். அதிலிருந்து சிறப்பித்துக் காட்டும் வகையில் ஞானமே பக்தியாகப் பரிணமித்து உருபொலிந்து நிற்கிறது என்பதையே பாஸ்வர பாவஸாகர என்கிறார் சுவாமிஜி. ஸ்ரீராமாநுஜர் பக்தியின் உருவை அடைந்த ஞானம் - பக்தி ரூப ஆபந்ந ஜ்நாநம் - என்பார். யுகளம் என்பது இரட்டையைக் குறிக்கும். இங்கு சரண யுகளம் என்பது திருவடிகள்.
ஸ்ரீராமகிருஷ்ண சரணம்!
*
ஜ்ரும்பித யுக ஈச்வர ஜகதீச்வர யோகஸஹாய் |
நிரோதந ஸமாஹிதமன நிரகி தவ க்ருபாய் ||
ஜகத்திற்கெல்லாம் ஈச்வரர் ஜகதீச்வரர் எனப்படுகிறார். நியமன ஸாமர்த்தியம் ஈச: என்னும் பதத்தின் வேர்ப்பொருள். புறத்தில் நின்று நியமிப்பதைவிட அகத்தில் நின்று உள்ளுயிராய், அந்தர்யாமியாய் நியமிப்பது விசேஷமானது. அந்தர் + யாமி என்னும் சொல்லே அதைச் சுட்டுகிறது. ‘உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்’ என்கிறார் நம்மாழ்வார். பரந்து உளன் என்னும் சொல் சேர்க்கையில் ஓர் உண்மை மறைந்து கிடக்கிறது. எங்கும் பரந்து இருப்பதனாலேயே எப்படி நியமிக்க முடியும்? நியமித்தல் என்னும் போது இருத்தல் என்பதை விட கூடுதலான ஓர் முனைப்பும் ஆட்சியும் அன்றோ தொனிக்கிறது! அதெல்லாம் பரந்து உளன் என்று சொன்னாலே அர்த்தம் ஆகிவிடுமா? இருத்தலும், இயக்கலும் தனித்தனி என்பது உலகியலில் உள்ள சிறுமையினால் உண்டாகும் தடைகள். உண்மையே ஆகிநிற்கும் உணர்வுப் பொருள் விஷயத்தில் அது இருப்பது என்பதே உலகையும், உலகப் பொருட்களையும் உளது என்ற உண்மை நல்குவதாய் அமைகிறது. இதைத்தான் உபநிஷதங்கள் சத்யம், சத்யஸ்ய சத்யம் என்று பிரித்துக் காட்டுகின்றன. எனவே உலகைக் கடந்த உண்மையாய் இருக்கும் பரம்பொருள் ஏன் உலகு என்பதற்கு உண்மை என்பதை நல்க வேண்டும்? உயிர்களின் பக்குவத்திற்காகவும், பரம்பொருளை அடைவதற்காகவும் என்றே உலகம் தோன்றுகிறது. உலகம் என்பதன் பொருளே பருப்பொருளோடு கலந்திருக்கும் உயிர் பரம்பொருளை அடைவிக்கும் அமைப்பு என்று சொல்லலாம். உயிர்கள் பரிபாகம் அடையும் தொடர்ச்ச்சியான காலங்கள் யுகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. ஒவ்வொரு யுகமும் கனியும் பொழுது அந்த யுகத்திற்கான மார்க்கத்தைத் துலக்கிக் காட்டி உயிர்களை முன்னேற்றும் அருளையும் உலகத்தின் ஈச்வரராய் இருப்பவர் செய்கிறார். அதுகால் அவர் யுக ஈச்வரர் என்று அழைக்கப் படுகிறார். யுகத்தின் ஈச்வரர் தோன்றும் பொழுது யுகம் கனிகிறதா அல்லது யுகம் கனிந்த பொழுது யுக ஈச்வரர் தோன்றுகிறாரா என்று அறிதல் கடினம். ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றிலிருந்து ஒன்று வேறிலாது நடக்கும் ஒன்றை மிக அழகாக ஜ்ரும்பித என்னும் சொல் உணர்த்துகிறது. ஜ்ரும்பித யுக ஈச்வரர் வேறு யாரும் இல்லை ஜக ஈச்வரர்தாம். பரிபாகத்திற்கு வந்த ஜீவர்களின் பரத்தை நோக்கிய நாட்டம் யோகம் எனப்படும். ஜீவர்களின் யோகத்திற்குப் பெரும் ஸஹாயமாக இருப்பவர் என்பதால் யோகஸஹாய்.
இந்த திவ்யமான ரகசிய உண்மையைச் சிலர் சமகாலத்திலும் கூடப் பார்த்துப் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் பார்க்கிறார்கள் என்பதை விட ஜகதீச்வரர் அவர்களுக்குத் தம் கிருபையால் பார்க்கும் கண்களை அருள்கிறார் என்பதே உண்மை. அநேகமாக அவர்களும் அவதார புருஷரின் அருட்செயலுக்குத் துணை புரிய வந்தவர்களாகவே அமைகின்றனர். ஸ்ரீராமகிருஷ்ணர் என்னும் யுக ஈச்வரருக்கு உதவியாக வந்தவர்களில் தலையாயவர் சுவாமி விவேகாநந்தர் எனலாம். ஆனால் அவரே இந்த உண்மையைத் தாம் புரிந்து கொண்டது ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் என்று கூறுகிறார். சிலர் பார்க்க முடிகிறது என்றால் அதுவும் அருளால் என்றால் அந்தப் பார்வையின் நுட்பம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை விளக்குகிறார் சுவாமிஜி. மனம் நம்மிடம் அலைக்கழிக்கும் உள்ளாற்றலாய் உணரப்படுகிறது. ஆனால் நெடிய யோக சாதனைகளால் மனத்தைச் சமப்படுத்தியவர்களுக்கோ சமநிலை அடைந்த மனமே ஆன்மிக உண்மைகளை நன்கு பிரதிபலிக்கும் திவ்ய சக்தியாகத் திகழ்கிறது. ஆனால் அத்தகைய மனத்திலும் அவதார புருஷர்களின் திவ்யமான லீலைகளைப் புரிந்து கொள்வது என்பது தெய்வ அருளால் மட்டுமே சாத்தியமாகின்றது.
நிரோதந ஸமாஹிதமன நிரகி தவ க்ருபாய்
நன்கு கட்டுண்டு அடங்கிச் சமநிலை உற்ற மனத்தால் உங்களுடைய அருளால் மட்டுமே இதை நான் காண்கிறேன் - என்பது சுவாமி விவேகாநந்தர் பாடும் இரண்டாவது வரியின் பொருள்.
*
பஞ்ஜன துக்க கஞ்ஜன கருணாகன கர்மகடோர் |
ப்ராணார்ப்பண ஜகத தாரண க்ருந்தன கலிடோர் ||
பெருத்த துக்கத்தை அழிப்பவராய் செயற்கரிய அதிசெயல்களைச் செய்தார். கடும் ஆத்ம சாதனைகள். என்ன காரணம்? தாம் கருணையே உருவாக இருந்த காரணம் ஒன்றுமே அமைகிறது. தம் சரிதத்தைப் படித்தாலே பக்தர்களுக்கு அதுவே ஆத்ம சாதனையாக அமையும் அளவிற்கு அவர் செய்த சாதனைகளின் கடுமை. தமது உயிரையே தந்து உலகை உய்விக்க வேண்டி அத்தகைய கருணை. அவரது அந்தத் தனிப்பெரும் கருணையே கொடிய கலியின் கட்டுகளை வெட்டிவிட்டு விடுதலை அளிக்க வல்லதாய் ஆகுகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆராத்ரிக ஸ்தோத்ரமாக வங்காள மொழியில் சுவாமி விவேகாநந்தர் அருளியதில் ஐந்தாவது சுலோகம் இதுவாகும்.
*
வஞ்சந காமகாஞ்சந அதிநிந்தித இந்த்ரியராக் |
த்யாகீச்வர ஹே நரவர தேஹ பதே அநுராக் ||
ஸ்ரீராமகிருஷ்ண ஆராத்ரிக கண்டனபவ பந்தன ஸ்தோத்திரத்தில் 6ஆவது சுலோகம்.
காமம் காஞ்சனம் என்னும் இன்பப் பற்று, பொருள் பற்று இரண்டையும் துறந்து நின்றீர்! இந்திரியங்களின்பால் ஈர்ப்பு என்பதை மிகவும் கண்டித்து ஒதுக்கி நின்றீர்! தியாகத்தின் ஈசுவரராய் மனிதரில் உயர்ந்து நின்றீர்! ஐயா! தங்கள் பதமலரில் எனக்குத் தீவிரமான பற்றையே தந்தருள்க ஐயனே!
உலகப் பற்றுகளை ஒழித்து நின்றவர், புலனிச்சைகளைக் கண்டித்து ஒதுக்கியவர், தியாகத்தின் தலைவர், ஸ்ரீராமகிருஷ்ணர். ஆனால் சுவாமி விவேகாநந்தர் அவரிடம் வேண்டுவதோ அவரது பதமாமலர்களில் தீவிரமான பற்று. இந்த நயம் அறிந்து அனுபவிக்கத் தக்கது. செந்நாப்போதாரும் சொன்னது என்ன? ‘பற்றுக பற்று அற்றான் பற்றினை’ எதற்கு? ‘பற்று விடற்கு’ என்றார். பற்று விடுவதற்கும் அவருடைய தாளே கதி.
சுவாமி நம்மாழ்வார் ’பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்; பற்றிலையாய் அவன் முற்றில் ஒடுங்கே’ என்று கூறினார். பற்று விட்ட பின் என்ன செய்வது? பற்று விட்டவனின் பூர்ணத்துவத்தில் ஒடுங்குவதே செயற்பாலது. பற்றின்மையை அருளி உலகியல் கடியும் வழியும் அவரது இணையடிகள்; பற்று விட்டோர்க்குப் புகலாவதும் அவருடைய திருவடிகள் என்னும் கருத்தையே சுவாமி விவேகாநந்தர் இந்த சுலோகத்தில் அமைத்துப் பாடியிருக்கிறார்.
*
நிர்பய கதஸம்சய த்ருடநிச்சய மாநஸவான் |
நிஷ்காரண பக்தசரண த்யஜி ஜாதி குல மான் ||
பயம் சிறிதும் அற்றவர்; ஐயம் அகன்றவர்; திடநிச்சயம் வாய்ந்தவர். பயமற்ற, ஐயங்களற்ற, திடநிச்சயமே உருவான மனம் உம்முடையது. பக்தர்களுக்குப் புகலிடம் ஆனீர்! ஏதோ காரணமாகவா என்றால் இல்லை காரண நிமித்தமாக அல்லாமல் இயல்பாகவே பக்தர்களுக்கான சரணமாக இருக்கின்றீர்! ஐயனே! ஜாதி, குலம் போன்றவற்றில் பெருமித எண்ணம் கொள்ளுவதை முழுவதும் அகற்றிக் கடிந்தீர் ஐயனே!
(ஸ்ரீராமகிருஷ்ன ஆராத்ரிக ஸ்தோத்ரம் கண்டனபவ பந்தன ஸ்தோத்ரத்தில் 7ஆவது சுலோகம்)
*
ஸம்பத தவஸ்ரீபத பவகோஷ்பத வாரியதாய் |
ப்ரேமார்ப்பண ஸமதரசந ஜகஜந துக்க ஜாய் ||
உம்முடைய திவ்ய பதமலர்கள் பக்தர்களுக்குப் பெருநிதியம் ஆகும். உமது பதமலர்களைப் புகலாகக் கொண்டால் பவம் என்னும் ஸம்ஸாரமானது பசுவின் குளம்படிக் குழியில் தேங்கும் நீருக்குச் சமமாய்க் கடப்பதற்கு வெகு எளிதாய் ஆகும். பகவானின் பிரேமம் என்பதற்கே அர்ப்பணிக்கப்பட்ட மூர்த்தமாய் நின்றவரே! ஸமதர்சநம் என்பதற்கே விளக்கமாய் நின்றவர் நீர்! ஜகத்தில் உள்ள ஜநங்களின் துக்கமெல்லாம் நீங்குவதற்காக அன்றோ!
(கண்டன பவ பந்தன ஸ்தோத்ரம் ஸ்ரீராமகிருஷ்ண ஆராத்ரிகம், 8ஆவது சுலோகம்)
*
நமோ நமோ ப்ரபு வாக்யமனாதீத
மநோவசனைகாதார்
ஜ்யோதிர ஜ்யோதி உஜல ஹ்ருதிகந்தர
துமி தமோபஞ்ஜனஹார் ||
வாக்கு மனம் கடந்துநிற்கும் பிரபுவிற்கு வணக்கம்
மனம் வாக்குக்கிற்கெல்லாம் ஆதாரமாய் விளங்கும்
பிரபுவிற்கு வணக்கம்
வாக்கு மனம் அனைத்தாலும் வணக்கம்
ஒளியில் சிறந்த பேரொளியாம் பிரபுவிற்கு வணக்கம்
இதயக் குகையில் ஒளிரும் பெருஞ்சுடர் ஆன பிரபுவிற்கு வணக்கம்
மருளாம் இருளைக் கடியும் ஒளிநீர் பிரபுவே!
தே தே தே லங்க ரங்க பங்க பாஜே
அங்க ஸங்க ம்ருதங்க
காயிசே சந்த பகதவ்ருந்த
ஆரதி தோமார் ||
ஜய ஜய ஆரதி தோமார்
ஹர ஹர ஆரதி தோமார்
சிவ சிவ ஆரதி தோமார் ||
தே தே தே லங்க ரங்க பங்க என்றே
பல்விதமாயின ஒலிகளுடன்
பக்க வாத்தியங்கள் தாளக் கருவிகள் முழங்க
பக்தஜனங்கள் குழுமிநின்றே
காதல் உள்ளம் கரைந்து நினக்கே
ஆரதி பூஜை செய்கின்றார்!
ஜய ஜய ஆரதிபூஜை செய்கின்றார் !
சிவ சிவ ஆரதி பூஜை செய்கின்றார் !
(ஸ்ரீஸ்ரீராமகிருஷ்ண ஆராத்ரிக கண்டன பவ பந்தன ஸ்தோத்திரம் நிறைவுற்றது. ஜய ஜய ஸ்ரீராமகிருஷ்ண !)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
*

இருத்தல், உணர்தல்

 ’இருத்தல்’ ~ ‘உணர்தல்’ ~~~ தத்துவப் பள்ளிகள் நெடுக இதன் விசதீகரணம் என்று சொல்லி விடலாம். ஒன்றுதான் இருவிதத்தில் நோக்கப் படுகிறது. இருத்தல் என்னும் கணத்தில் உணர்தல் கருதுபொருளாக ஆகிறது. உணர்தல் என்னும் கணத்தில் இருத்தல் கருதுபொருளாக ஆகிறது. ஸத் என்னும் பொழுது சித் ஆச்ரயமாகவும், சித் என்னும் பொழுது ஸத் ஆச்ரயமாகவும் ஆகிநிற்கும் ஒரு ஜேனஸ் ஸ்திதி இந்தத் தத்துவச் சிந்தனை. இதை அகப்படுத்தி, செறிவுடன் செம்மி உரைத்தவர்களும் உண்டு. சமீபத்தில் ட்ரிஸ்டன் கார்ஸியா என்னும் ப்ரெஞ்சு தத்துவ ஆசிரியர் என நினைக்கிறேன்.

”Being is being comprehended. Comprehending is being been -- être été. The active sense of one is the passive sense of the other.” (Form and Object, by Tristan Garcia, pp 105)
***

ஞானபாகம் பொதுவுடைமை?

 ’ஞானபாகம் பொதுவுடைமை’ இப்படி ஒருவர், மேடைப் பிரசங்கியார்,பலகாலம் முன்பு என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது. என்ன அர்த்தமிதற்கு? அதாவது அறிவு என்பது யாருடைய தனிச் சொத்தும் அன்று. அனைவருக்கும் பொதுவானது என்பதுதான் அதன் பொருளோ? பார்த்தால் நியாயம்தானே என்று கூடச் சமயத்தில் தோன்றலாம். ‘லாம்’ என்றால் அப்பொழுது உண்மையில் உண்மையில்லையா? ஆம் உண்மையில்லை. இருந்தாலும் உண்மைதான். குழப்பம்.

அதாவது அறிவதில் ஆர்வம் கொண்டு முயல்வோர் யாருக்கும் சரியான விதத்தில் முயற்சி அமையும் போது, அதுவரை விடாத முயற்சியும் தொடரும் போது கிடைக்கக் கூடியதுதான் அறிவு என்பது. இன்னாருக்குத்தான் கிடைக்கும் என்று இயற்கையில் தடையில்லை. மனிதர் பொதுவானது. ஒரு உராங்குட்டான் எவ்வளவு முயன்றாலும், அது முதலில் முயற்சி செய்யுமா, முயற்சி செய்ய வேண்டும் என்று அதற்கு முதலில் அறிவுத் தேட்டம் விழுமியமாக அமைய இயலுமா, சரி எவ்வளவு முயன்றாலும் இயற்கை வைத்த தடையை அகற்றுவது இன்றைய நிலைவரையில் பார்த்தால் முடியாது. ஏதோ சில வார்த்தைகள், பொருளுக்கும், சொல்லுக்கும் தொடர்பை நெடும் பழக்கத்தால் நினைவில் கொள்ளுதல் போன்ற சில இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நூலகத்தில் புத்தகம் தேர்ந்தெடுத்துவிட்டுப் பதிவேட்டில் பதிய நிற்கும் க்யூவில், பின்னாடியில் இருந்து முதுகில் சொரிந்து ‘எக்ஸ்க்யூஸ் மி, அர்ஜண்டாகப் போக வேண்டும். நான் முன்னால் சென்று பதிந்துகொண்டு போகிறேன். அனுமதிப்பீர்களா’ என்று உரங்கார் சொல்லும் நிலை ஒரு நாளும் உருவாகாது எனலாம். ஏனென்றால் மூளை அமைப்பு, இயற்கையின் வடிவம் எல்லாம் காரணம்.
சரி மனித வடிவம், மூளை எல்லாம் இயற்கைதான் தந்துவிட்டதே, அனைவருக்கும் ப்ளக்கில் சொருகினால் போல் அறிவு டவுன்லோட் ஆகிறதா என்று பார்த்தால் ம்.. ம் அதற்கும் வழியில்லை. நீங்கள் கருத வேண்டும். விழைய வேண்டும். வேட்கை வேண்டும். பிறகு சரியான முயற்சி. ஓ தட் சிம்பிள்! முயற்சி செய்ததும் கிடைத்து விடுமா? ‘லாம்’ தான் இங்கேயும். விடாப்பிடியான வைராக்கியம் வேண்டும். வெறுமனே முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டுவிட்டால் வைராக்கியம் வந்துவிடாது. ஏக்கம் அடிப்படையாக இருந்தால்தான் வைராக்கியமும் வரும். இல்லையென்றால் வெறுமனே ஊருக்காக வெற்று விரைப்பு என்று ஆகிவிடும். பெரும்பாலும் காமெடி பீஸில் முடிந்துவிடும். எனவே இங்குதான் இருக்கிறது அறிவு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் தன்மை, முயற்சி, ஆர்வம் பொறுத்த தனிப்பட்ட ஈட்டம் என்பது சொல்லாமலே விளங்கும். அவ்வாறு ஈட்டிய அறிவர்கள் தம் கருணையினால் பின்னால் தம்மைப் போல் பேரார்வம் கொண்டு ஏக்கம் கொண்டு முயலும் மாந்தருக்கு உதவியாக இருக்கட்டுமே என்று தாம் பெற்ற அறிவையும், பட்ட கஷ்டங்களையும் பற்றி எழுதி வைத்துவிட்டுப் போகலாம். சொல்லிவிட்டுப் போகலாம். உடனே ஆகா பொதுவுடைமை ஆகிவிட்டது. இனி விட்டது கவலை. ஜாலி. குழாயைத் திறந்தால் தண்ணி, நூலைத் திறந்தால் அறிவு என்று டோண்ட்கேர் டான்ஸெல்லாம் ஆடமுடியாது. காரணம், நூலைத் திறந்தால் வரிகள் இருக்கும், எழுத்துகள் இருக்கும், மொழி இருக்கும், மொழியமைதி இருக்கும், சொல்லப்பட்ட பொருள் பாதி, குறிப்புணர்த்தும் பொருள் மீதி என்று இருக்கும். அத்தனைக்கும் ஒழுங்கான பயிற்சி அடிப்படையாக அமைய வேண்டும். பிறகு நூலின் வாக்கியங்களை நெட்டுரு போட்டு ஒப்பித்தால் சாக்கலேட்டுத்தான் கிடைக்கும் அறிவு கிடைக்காது. ஏனெனில் அறிவை உற்று உள்வாங்கும் உணர்வு உள்ளே விழிக்க வேண்டும். அதெல்லாம் யார் சார் பார்த்துக்கிட்டு.. இருக்கவே இருக்கு காப்பி பேஸ்ட், யாருக்குத் தெரியப் போறது... என்றால் இம்சை அரசனில் போல் உராங்ஏ காறியுமிழ்ந்துவிடும்.
இவ்வளவு ஏன் என்று மிக அழகாகச் சொல்லிக் கொடுக்கிறார் திருவள்ளுவர் - எப்படிக் கற்பது என்று -
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
இருக்கறவங்க முன்னால் நின்று ஏதேனும் கிடைக்காதா என்று இல்லாதவர்கள் ஏங்கி நின்று வாங்குவது போல், அறிவு நம்முள் உண்டாகும் வழிவகை யாதோ என்று கவலை கொண்டு, ஏக்கத்துடன் விடாமல் முயற்சி செய்வோருக்கே அறிவு உடைமையாகும்.
***