Wednesday, November 8, 2017

திருப்பாவை முதல்பாட்டில் ஒரு வரி

திருப்பாவையில் முதல் பாட்டான மார்கழித்திங்கள் பாசுரத்தில் வரும் வரிகள், 

’கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்;
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்’ 

இதற்கு வியாக்யானங்களில் ஒரு நயவுரை காணப்படுகிறது. இதில் இருக்கும் முதல் வரியின் சொற்களைத் தனித்தனியாகப் பார்த்து ஏன் இந்தச் சொல் இங்கு வரவேண்டும் என்று அதற்கான அழகியல் நியாயங்களுடன் கவிதையின் தர்க்கத்தை வெளிக்கொணர்கிறார் மூவாயிரப்படியின் ஆசிரியரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவர்கள். ’கூர்வேல்’ என்பதில் உள்ள கூர்மையும், ‘கொடுந்தொழிலன்’ என்பதில் உள்ள கொடுமையும், ‘நந்தகோபன்’ என்பதில் உள்ள மகிழ்ச்சி என்பதைக் குறிக்கும் நந்த என்ற பகுதியும், ‘குமரன்’ என்பதின் பொருளும் அவர்களுடைய கவிதையாட்கொண்ட கண்களுக்குத் தனிப்பொருள் பெய்து நிற்கின்றன.
நந்தகோபன் ரொம்ப சாது. அவனைப் பார்த்தால் கோப தலைவன் என்பதே தெரியாது. பாடியில் இருக்கும் அத்தனைச் சிறார்களும், சிறுமியரும் அவனுக்குச் செல்லம். தங்கள் வீட்டில் கிடைக்காத பாசமும் அரவணைப்பும் அவன் ஒருவனிடத்திலே அவர்களுக்குக் கிடைத்தன. ஊருக்கே ஏதோ ஏவினதைச் செய்யும் வேலைக்காரன் போன்றுதான் அவன் பழக்கம். ஒருவர் துன்பத்தையும் காணப் பொறாதவன். இவ்வளவு நளினமானவன் என்பதை எப்படிச் சொல்வது? ‘நந்தகோபன் பசும்புல் சாவ மிதியாதவராய்த்து நம் சிறியாத்தானைப் போலே’ என்கிறார் வியாக்யான ஆசிரியர். சிறியாத்தான் என்பவர் அப்பொழுது வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர் ஒருவர். கல்வியும், கடவுட்காதலும், மன்னுயிர்பால் பெருகும் அருளும் அவரது அன்றாட நடவடிக்கைகளையே முற்றிலும் மாற்றிவிட்டது என்கிறார். அவர் பாட்டையில் நடக்கும் பொழுது அவர் நடப்பதே வினோதமாக இருக்கும். இங்கு ஒரு கால் வைப்பர். பிறகு பூச்சி புழு ஏதேனும் இல்லாத இடமாகத் தேடி அடுத்த காலடி வைப்பர். பசும்புல் தலை தூக்கியிருந்தாலும் போச்சு, வேறு இடம்தான் பார்க்கவேண்டும் அடுத்த அடி வைப்பதற்கு. நினைத்துப்பாருங்கள். பெரும் வேடிக்கையாக இருக்கும்.

இவ்வாறு இவர் உயிர் திகழ்ச்சி இருக்கும் இடத்தையெல்லாம் கண்டு அருளால் அஞ்சி ஒதுங்கித் தன்னால் அவ்வுயிருக்கு என் வருகிறதோ என்று பெருங்கவலையுடன் அன்றாடப் பொழுதைக் கழிப்பவரானால் அவரது மனப்பாங்கு எத்தனை மிருதுவானதாக, நளினமாக மாறியிருக்கவேண்டும். நம் கண்ணுக்குப் பழைய பைத்தியங்களில் இதுவும் ஒன்று என்று தோன்றினாலும்! அந்தச் சிறியாத்தானைப் போன்றவராம் நந்தகோபன். அத்தகைய சாத்வி, அமைதியும், இரக்கமும், உயிர்பால் சுரந்த அருளும் வடிவுகொண்டு இலகும் நந்தகோபன் திடீரென்று கொடுந்தொழிலன் ஆகிவிட்டார்!! அப்புறம்தான் அவருக்கு ஞாபகம் வருகிறது. இந்தக் கையில் ஏதோ குச்சி போன்று வைத்திருப்பார்களே முனையில் உலோகத்தில் கூர்மையாக ஹாங் ... வேல்!. அது எங்கே போட்டோம்? என்று பரண் ஒன்று விடாமல் தேடுகிறார். இது எதற்குத் தனக்கு? என்று தலைவன் ஆன அன்று ஏதோ மரியாதைக்கு சடங்கிற்காக கையில் வைத்துக்கொண்டு நின்றது. பின்னர் விட்டு எறிந்ததுதான். இங்குதான் எந்தப் பரணிலாவது இருக்கவேண்டும். அ.. அ..ம் இதோ என்று தேடிப்பிடித்து மும்முரமாக சாணை பிடித்துக் கொண்டிருக்கிறார். எறிந்தால் தப்பக் கூடாது. பட்டால் விழக்கூடாது. தைத்தால் நிற்கக் கூடாது. அப்படி இருக்க வேண்டும்!
என்ன ஆயிற்று இந்த ஆளுக்கு? எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்? சரி வேலைக் கையில் பிடித்தபடி என்ன செய்கிறார்? அங்கு கிருஷ்ணன் இருக்கும் தொட்டில் பக்கம் ஏதாவது எறும்பு போனாலும் போதும் உடனே பாய்ந்து வேல் முதலிலா இவர் முதலிலா என்று தெரியாதபடி கொடுந்தொழில்!. வெறும் புல் பூண்டு வண்டி பறவை என்று எந்த உருவிலும் கம்சன் ஏவிவிடும் அரக்கர்கள் வந்து தாக்கலாம் அல்லவா? இது எறும்புதானே என்று எப்படி விடுவது? எந்த அரக்கன் இந்த உருவில் கிருஷ்ணனை அண்ட முயற்சிக்கின்றானோ? சரி கிருஷ்ணன் தான் கடவுள் ஆயிற்றே? அனைவருள்ளும் இருந்து அனைத்தையும் காக்கும் கரம் அவனுடையதாய் இருக்க,....இதோ பாருங்கள் உங்களோடு வெட்டிப்பேச்சு பேச நேரம் இல்லை. இந்த இடைவெளியில் எந்த அரக்கன், ஏவல் பூதம், கிருஷ்ணனுக்கு ஊறு செய்யத் தேடுகிறதோ? கிருஷ்ணன் மேல் பாசம் இவனைப் படுத்தும் படி!
என்னதான் இருந்தாலும் இப்படியும் உண்டா? பாசம் இவ்வளவா கண்ணை மறைக்கும்? காதலும், பாசமும், அதற்கு ஊறு விளைந்து விடுமோ என்ற பயமும் சேர்ந்து என்ன மனநிலையைத் தோற்றுவிக்கும் என்று எப்படி சொல்லமுடியும்?
ஒருவர் விஷயத்தில் கடவுள் காதல் பசும்புல்லைக் கூட சாவ மிதிக்காமல் தத்தித் தத்தி நடக்கின்ற பைத்தியக்காரத்தனத்தில் கொண்டு போய் விடுகின்றது. இன்னொருவர் விஷயத்தில் தன்னியல்பு கெட்டுத் துருப்பிடித்த வேலைப் புகரெழக் கடைந்து, கண்முன் தெரியாது பாயும் கொடுந்தொழிலில் கொண்டு போய் விடுகிறது.