Tuesday, June 2, 2015

பத்துப்பாட்டில் ஜீவாத்மா

நாம் பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை உள்ளபடிப் புரிந்து கொண்டுள்ளோமா?

இந்த சந்தேகம் எனக்கு ஏன் வந்தது என்றால், மதுரைக் காஞ்சியில் சில வரிகள் -

'நின்னொடு முன்னிலை எவனோ
கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்'

என்ற வரிகளுக்கு உரையில் கூறியிருக்கும் பொருளைப் பார்த்தால் தலையைச் சுற்றுகிறது.

முன்னிலை நின்னொடு எவனோ? என்று மாற்றிப் படிக்க வேண்டுமாம் முதல் வரியை. அடுத்து 'நின்' என்றது சீவான்மாவை. முன்னிலை என்பது ஐம்பொறிகளால் நுகரப்படும் பொருள்களை.

முன்னிலை நின்னொடு எவனோ - நுகரப்படும் ஐம்புல நுகர்ச்சிகளுக்கும், சீவான்மாவாகிய நினக்கும் என்ன தொடர்பு உண்டு?

அடுத்தது, கெடுக நின் அவலம் - உன்னிடம் உள்ள மாயை கெடுவதாகுக

அடுபோர் அண்ணல் - அம்மாயையைக் கொல்கின்ற போர்த்தொழில் வல்ல தலைவனே!

கொன் ஒன்று கிளக்குவல் - பெரிதாய் இருக்கும் பொருளாகிய பரம்பொருளைப் பற்றி உனக்குக் கூறுவேன்.

கேட்டிசின் - அதனை நீ வல்ல ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவாயாக.

அந்த பரம்பொருள் இயல்பாவது கந்தழி என்பதனை. அதன் விளக்கம் திருமுருகாற்றுப்படையின் ஈற்றுப் பகுதியில் கண்டு தெளிக - இவ்வண்ணம் போகிறது உரை.

திரு எம் சுந்தர்ராஜ் என்று ஒருவர் இருந்தார். இரயில்வேயில் பெரும் அதிகாரி. வேத ஆய்வுகளில் பெரும் ஈடுபாடு. பல நூல்கள் வேத ஆய்வுகள் பற்றி எழுதியுள்ளார்.

அவரிடம் பேசிக் கொண்டிருந்த சமயம் ஒரு தடவை கூறினார். - சங்க இலக்கியம் முழுதுமே ஆன்மிகப் பொருள் உடையது. இவர்கள் நினைப்பது போல் ஏதோ அகம் புறம் என்று காதல் வீரம் பற்றிப் பேசிய பாடல்கள் இல்லை அவை என்று. அதுதான் இப்பொழுது நினைவில் வந்தது.

***

கடவுள் என்னும் வலை

கடவுளை ஒவ்வொருவர் ஒவ்வொன்றாக உருவகம் செய்துப் பேசியிருக்கின்றனர். ஆனால் கடவுளை யாரேனும் 'வலை' என்று உருவகம் செய்து பேசியிருக்கிறார்களா தெரியவில்லை. பேசியிருக்கக் கூடும்.

ஆனால் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பேசியிருக்கின்றார்கள்.

அது போல் ஆழ்வார்கள் பேசியிருக்கின்றார்கள்.

ஸுதந்து: , தந்துவர்த்தன: என்று இரண்டு திருநாமங்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உண்டு எனச் சொல்கிறது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். ஸுதந்து: அழகிய வலை, தந்து வர்த்தன: - வலையை வளரச் செய்வோன், பெருகச் செய்வோன். அல்லது பெருகிய, வளர்ந்த, நீளும் வலையே அவன் என்கிறது.

யோசித்துப் பாருங்கள் - GOD IS A WEB and that too A WEB THAT IS GOING STRONGER AND STRONGER.

ஆழ்வாருடைய பாடல் -

தன்னுள்ளே திரைத்தெழும்
தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து
அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து
நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற
நீர்மை நின்கண் நின்றதே.

(திருச்சந்தவிருத்தம்)

பீட்டர் ஸ்டெர்ரி என்பார் கூறுவார் - படைப்பு என்பது கடவுளின் முகம் போர்த்திய சலாகை. சலாகையில் அந்த முகத்தின் சாயல் படிந்துள்ளது.

ஷபிஸ்தாரி கூறுவது - புள்ளியில் இருந்து கோடு; கோட்டில் இருந்து வட்டம்; வட்டம் முடிந்தால் கடையும் முதலும் இணையும்.

ஷ்வாங்ஸீ கூறுகிறார் தாவோ பற்றி -

கடலினும் அளத்தற்கரியது
கணம் தொறும் முடிவில் தொடக்கம்
அனைத்துக்கும் அறிவீந்தும் அந்தம் அறியா நெறி
முழுமையானவரின் தாவோ
இயல்பு மங்காது திகழும் தன் இயக்கத்தில்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*



ஸ்ரீரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கவிதை ஒன்று


இன்று ஸ்ரீரவீந்திரநாத தாகூர் பிறந்த தினமாம். தேடும் போது இந்தப் பாடல் கிடைத்தது. இதையொட்டித் தமிழில் -

படகோட்டி எந்தன் வழிகாட்டி!
பதைபதைக்கும் என் உள்ளம்
தொலைதூரத்து நிலம் தேடியே
தாகம் கொண்டுள்ளது என் உள்ளம்.
கையிரண்டினில் காலத் தாளங்கள்
கண்ணெதிரினில் கடலாழங்கள்
கிராமத்தில் அவள் பெயர் கன்னங்கருங் காளி
கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குவிந்தது வசந்தம்
உவமையற்றவளே!
ஓடிவிட்டன நாட்கள் இதயம் சுமந்த அழகோடு
இந்த நாளொன்றினில் அவளிடம் சொல்லல் ஆம்
பொன்னால் வனைந்ததொரு கூட்டில்
புள்ளொன்று வதிந்ததும் உண்டு சிலகாலம்
உண்மையும் நீயே
உயிர் அன்பெனும் நீயே
உற்றது போல் அண்மை வந்ததும் நீயே
அன்றி வாராது நின்றதும் நீயே.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*