Friday, January 31, 2020

பிரம்ம கீதை

சூத சம்ஹிதையில் பிரும்ம கீதை என்றொரு பகுதி. அதை பல நூற்றாண்டுகள் முன்னம் வந்துதித்த தத்துவராயர் சுவாமிகள் என்பார் தமிழ்ச் செய்யுள் வடிவமாக இயற்றி வைத்தார். அந்தத் தமிழுக்கு அரிய உரை ஒன்றைப் பின்னர் வந்த காலத்தில் வந்துதித்த கோடகநல்லூர் சுந்தரஸ்வாமிகள் என்பார் செய்து வைத்தார். இவையெல்லாவற்றையும் சேர்த்து 1936ல் இ மா கோபாலகிருஷ்ண கோனாரால் நல்திருத்தங்களுடன் நூல் கொண்டு வரப் பட்டது. அதற்குப் பலர் பாயிர உரைகளும் செய்யுட்களும் தந்துள்ளனர். அதில் வையை ராமசந்திர ஐயர் என்பார் இயற்றிய செய்யுள்களில் ஓரிடம் சிந்தை கவர்ந்தது.

மான்காட்டி மான்பிடித்தன் மானவே
நம்போலோர் வடிவம் தன்னைத்
தான்காட்டிக் காண்பவெலாந் தனிற்பிறிதன்று
என எவர்க்கும் தகவால் காட்டி
ஊன் காட்டும் உடல் பொய் என்று உணர்விலேன்
உணரும்வகை உணர்த்த வந்து
தேன்காட்டு மொழிகாட்டும் சுந்தரதே
சிகன் என அத் திருப்பேர் தாங்கி

என்று போகிறது வையையாரின் பாடல்கள். இந்த இடம்தான் என்ன அற்புதம்! - ‘மான்காட்டி மான்பிடித்தல் மானவே நம் போல் ஓர் வடிவம் தன்னைத் தான் காட்டிக் காண்ப எலாம் தனில் பிறிதன்று என எவர்க்கும் தகவால் காட்டி’

அதனோடு விடவில்லை - ‘ஊன்காட்டும் உடல் பொய் என்று உணர்விலேன் உணரும் வகை உணர்த்த வந்து தேன் காட்டு மொழி காட்டும் சுந்தரத் தேசிகன்’

கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளை வார்த்தையால் வடித்து விட்டார் வையைக்காரர்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

வாசகன்

”துணிச்சலும் தணியாத ஆர்வமும்
கொண்டு விளங்கும் பிசாசு !
ஆனாலும் பரம சாது
படு விஷமம்
ரொம்ப முன்சாக்கிரதை
கருவிலே திருவான
சாகசக்காரர்
கண்டுபிடிப்பதில் முனைபவர்
இப்படித்தான் தோன்றுகிறது
நான் மிகச்சரியான
இலட்சிய வாசகர் என்பவரைச்
சித்திரித்துப் பார்க்கும் பொழுது ! ”

-- இப்படியெல்லாம் ஒருவர், திட்டுகிறாரா அல்லது வாழ்த்துகிறாரா என்பது தெரியாமல் யார் வாசகர் என்பதற்கு ஆன பொன்மொழி ஒன்றைக் கூறியிருக்கிறார். வேறு யார் ஃப்ரெடரிக் நீஷே !

’When I picture a perfect reader, I always picture a monster of courage and curiosity, also something supple, cunning, cautious, a born adventurer and discoverer.’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

இடைச்சுவரைத் தள்ளி

தம்முடைய ஆசிரியரான ஸ்ரீஆளவந்தார் என்னும் யாமுன முனிவரை நேரடியாகச் சந்தித்திருந்தால், வாழ்நிலையில், தாம் இந்த உலகிற்கும், ஸ்ரீவைகுண்டத்திற்குமே இருக்கும் இடைச்சுவரைத் தள்ளி ஓர் சுழல்படிக்கட்டையே கட்டியிருப்பேன் என்று கூறுகிறார் எம்பெருமானார் என்னும் ஸ்ரீராமாநுஜர். ஆக இந்த மண்ணுலகம் என்பதற்கும் அந்த விண்ணுலகம் என்பதற்கும் இடையில் கடக்கலாகா ஒரு சுவர் இருக்கிறது என்பது புரிகிறது. இந்த மண்ணையே விண்ணாகப் புரிகிற ஊக்கங்கள்தாமே எல்லா ஐடியாலஜிகளும்! முடிந்ததா என்பது சரித்திர மீள்பார்வை. முடியுமா என்பது கிரிட்டிஸிஸம். முடியாது என்றால் பெஸிமிஸம். முடியும் என்றால் ஆப்டிமிஸம். எது முடிகிறதோ அதை ஏற்போம் என்பது ரியலிஸமா? இப்படியே சோழி உருட்டிக் கொண்டும் இருக்கலாம்.

ஆனால் மிஷேல் ஃபூக்கோ அல்லது (கரக்டா உச்சரிக்கணும்னா மைக்கேல் ஃபூகோல்ட் :-) ) என்ன சொல்கிறார் என்பதும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

Truth is a thing of this world.

சரி. இவராவது பரவாயில்லை. பத்தில் ஐந்து பழுதில்லை என்றபடிக் கூறுகிறார் என்று விட்டால், மார்டின் ஹைடெக்கர் என்பவர்

The all-decisive question - What happens when the distinction
between a true world and an apparent world falls away? What becomes of the metaphysical essence of truth?

இவர் அப்படி ஆனால் அடுத்த நிலையில் என்ன ஆகும் என்று யோசி என்கிறார்.

உண்மையே உன் விலை என்ன என்று கேட்கும் உலகில் இருந்து கொண்டுதான், அந்த உலகைப் பற்றித்தான் இவர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்பதும் உண்மைதானே ! :-)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஜ்யூயிஷ் அமெரிக்கக் கவிதை

ஜ்யூயிஷ் அமெரிக்கன் கவிதைகள் சிலவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஹீப்ரு கவிஞர்களின் கவிதைகளில் ஒரு ப்ரத்யேகமான மூர்ச்சனை விழுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஜ்யூயிஷ் அமெரிக்கன் குரலிலும் அதே சாம்பர் வாய்ஸ் - நேம ஒலி எழுவதைப் பார்க்க முடிகிறது. லூஸில் லாங் டே என்னும் பெண்மணி. ஓக்லாந்தில் பிறந்து படித்து, ஆஸ்பத்திரியில் ஊழிய விஞ்ஞானியாகப் பணி புரிபவர். ரயில் வண்டி மாறுகிறோம் - என்னும் கவிதையில் அவர் காட்டும் ஆழக் காட்டு அமைதி வியக்கத்தக்கதாய் இருக்கிறது.

We are changing trains
in the middle of the night,
those of us who knew
it was time to get off.

என்று ஆரம்பிக்கும் கவிதையில் அவர் செய்யும் சொல் மாயங்கள் பல. போகும் இடம் புதிது. அந்நியம். அந்த அந்நியத்தனம் காற்றிலேயே அப்பிக் கொண்டு கிடக்கிறது என்கிறார். அந்த அந்நியத்தனத்திற்கு அமைந்த சேகண்டியாக ஒலிக்கிறது பூச்சிகளின் உலோகத்தனமான ஓசை!

the unfamiliar air grows thick
with insects that glisten metallically.

தொண்டை வறள்கிறது. உள்ளே பாலை விரிகிறது - என்று அவர் சொடுக்கும் சொல்லாட்சியில் மொத்த அனுபவமும் சூல் கொண்டு விடுகிறது.

My throat is dry,
a desert spreading inside me.

அதாவது இருட்டை ஏதோ பதார்த்தம் போல் தள்ளி நகர்த்தி ஒதுக்கி எல்லாம் செய்ய முடியுமா? முடியும் என்று சொன்னால் நம்ப முடியுமா? நம்ப முடியவில்லை என்றாலும் லூஸில் எழுதும் இந்த வரிகள் நன்கு புரிகிறதே?

Fingers of light from the coach
push back the darkness,
pulling me forward
toward a mapless country.

அந்த நாட்டிற்கு வரைபடம் இருக்கலாம். ஆனால் செல்பவருக்குச் சொந்தம் பந்தம் தொடர்புகள் இல்லா அந்நிய தேசத்தில் ரேகைகளால் ஆன வரைபடம் என்ன அர்த்தம் தர முடியும்? நான்கு திசைகளிலும் கைகளைப் பரப்பிக் கொண்டு கிடக்கும் ஒரு நிலப்பரப்பு தன்னை என்ன செய்யப் போகிறது என்பதை இனித்தானே அந்தப் புலம் பெயரும் ஜீவன் பார்க்க முடியும்? ஆம் மரணமும் இத்தகைய ஓர் அந்நியப் பயணம்தானே?

I climb on board. என்று முடிக்கிறார். இறுதிப் பயணத்தில் ஒரே வித்யாசம் - We have to climb on board.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

எண்ணக் கதிர்கள்

புராணங்களிலேயே மிகவும் அழகானதும், கவிதை கொழிப்பதும், மிக தெய்விகமானதும் ஆன புராணம் ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம் என்பது. அத்தனை வேதாந்தக் கருத்துகளையும் தன்னகத்தே திகழும்படியாகக் கொண்டு, சுகர் என்னும் பரமஹம்ஸ மஹரிஷியால் சொல்லப்பட்ட பெருமை உடையது. ஸ்ரீமஹாபாரதம் முழுவதும் சண்டைகளையும், அரசர்களின் அகங்காரங்களையும் பற்றியே எழுத நேர்ந்ததனால் மனம் நிம்மதி இழந்து வாடிய ஸ்ரீவேத வியாசரின் உள்ளம் இந்த ஸ்ரீபாகவதம் இயற்றியதும்தான் குளிர்ந்து அமைதி அடைந்தது என்பர். முழுவதும் சச்சிதாநந்த பிரம்மமாகிய ஸ்ரீகிருஷ்ண தியானமாகவே புராணம் அமைந்ததால் கலியினுக்கு முடிவாகவும், கவிகளுக்கு அமுதாகவும், பக்தர்களுக்குப் பேரின்பமாகவும், ஞானிகளுக்குக் களிக்கும் நந்தவனமாகவும் அமைந்து விளங்குவது ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கதாம்ருதம்.

***

சுவாமி சித்பவாநந்தரின் நூல்கள் தமிழில் நமக்குற்ற பெரும்பயனாகும். ஹிந்துமதச் சிந்தனைகளின் தெளிவு சுவாமிகளின் எழுத்து, உரை அனைத்திலும் காணலாம். சுவாமிகளின் மொழிநடை மிகவும் அமைதியானதும், ஆழ்ந்ததும் ஆன நடை. படிப்பவருடைய மனப்பாங்கை மிகக் கவனம் கொண்டு சுவாமி சித்பவாநந்தர் அருளியிருக்கும் எளிமையும், அழகும் காலத்தை வென்று நிலைப்பது. தர்ம சக்கரத்தில் பல ஆண்டுகளாகப் பல அன்பர்கள் பல நேரங்களில் எழுப்பிய வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் சுவாமிகள் மிகவும் பொறுமையாகவும், கனிவுடனும் அருளிய விளக்கங்களும், பதில்களும் தொகுத்து மூன்று பகுதிகளாக ‘ஐயம் தெளிதல்’ என்று ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை 1997ல் போட்டிருக்கிறது. இது ஓர் அத்யாவசியமான பொக்கிஷம் ஹிந்துமக்களாகிய நமக்கு. மேலும் பல வேறு தலைப்புகளில் சுவாமிகள் சிறு சிறு நூல்கள் வரைந்துள்ளார். அவை அனைத்தும் இன்றும் எவ்வளவு முக்கியமான சேகரங்கள் என்பது அவற்றைப் படித்தாலே புரியும்.

***

மொழி, எழுத்து என்பதை நினைத்தால் சில விஷயங்கள் புதிராக இருக்கின்றன. பொதுவாக நான் எழுதும் போது, மொழியைக் கையாளும் போது மிகவும் கடுகடு என்றெல்லாம் முகத்தை, மனநிலையை வைத்துக்கொண்டு எழுதுவதெல்லாம் கிடையாது. ஒரு சின்ன நகையுணர்வுடன்தான் என் எழுத்துக்களையே நான் பார்க்கிறேன் என்பதை என்னிடம் நேரில் பேசி அனுபவம் உள்ளவர்கள் அறிவார்கள். ஆனாலும் நேரில் பேசும் போதாவது ஒருவருடைய முகபாவங்கள் குரல் தெரிவதால் சரியான முறையில் மொழியை வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் கண்ணால் கண்டு படித்து மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்றபடியான சூழ்ந்நிலையில், காகிதம் மூலமாகவோ, அல்லது ஸ்க்ரீனிலோ நாம் எழுதுவதைப் படித்து அறியும் சூழலில், நாம் கருதாத போதிலும், நம் மனநிலையில் அப்படி எதுவும் இல்லாத போதிலும், ஒரு கடுமை, எதிர்ப்பு குணம், தாக்கும் தொனி ஏன் அமைந்து விடுகிறது? இது எனக்கு மட்டும் என்று இல்லை. பலருடைய சூழலிலும் இப்படி நடைபெறுவதைக் கவனித்திருக்கிறேன். சில சமயம் பிறர் கடுமையாக, ஏதேதோ எதிர்ப்பு, உள்கோபம் ஆகியவற்றுடன் எழுதுகிறார்கள் என்று நினைத்தது அவர்களை நேரில் கண்டு உரையாடும் போது அது எழுத்தில் படிக்கும் போது தெரிந்த வெறும் மிராஷ் என்று புரிய வருகிறது.

***

அகத்தில் இருக்கும் பொருள்

கண்ணிற்கு முன்னால் ஒரு பொருள் இருக்கிறது. அது என்ன என்று அறியப் போனால் பல தகவல் வருகிறது. பல பகுதிகள் பொருந்திச் சேர்ந்த பொருள் என்றால் பிரித்தால் எப்படிச் சேர்ந்தது என்றும் அறிய முடிகிறது. அந்தப் பொருளை நான் விரும்ப வேண்டியதில்லை. அது சம்பந்தமில்லாத பொருளாக இருக்கலாம். நான் அது என்ன என்று அறிந்து பின்னர் என் வழியில் போகலாம். ஆனால் வேறு ஒரு பொருள் இருக்கிறது. அதை நான் அறிய வேண்டும் எனில் முதலில் அதை நான் விரும்ப வேண்டும். பிறகு அந்தப் பொருள் என்ன என்று அறிய அறிய நான் பழைய ஆளாய் இருக்க முடியாது. ஏனெனில் அந்தப் பொருள் இருப்பதே எனக்குள் என்றால் அந்தப் பொருளை அறிவது என்பதே என்னை நான் மேலும் மேலும் அறிவது என்பதுதான் என்று ஆகிவிடுகிறது. தன்னை அறிதல்தான் மனித வாழ்விற்கான இறுதி இலட்சியமாகப் பல பண்பாட்டு அறிஞர்களும் செல்கிறார்கள். சாக்கிரடீஸ் டெல்ஃபி அருள்வாக்கும் ‘உன்னையே நீ அறிவாயாக’ என்பதாம். வெளிப்பொருளில் நாட்டம் இருக்கும்வரையில் உள்முகமாகத் திரும்பி அறிய விரும்புதல் என்பது நிகழ்வதில்லை. ‘எனக்கு வெளியில்தான் நான் அறிய இருக்கிறது. எனக்குள் அறிய ஒன்றுமிலை’ என்றும் கூடத் தோன்றுகிறது. எனக்குள் என்பது இருக்கட்டும்; என்னை அறிந்துகொள்ள வேண்டும் என்பது பல துறைகள் ரீதியாகப் பார்த்தாலும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு துறையிலும் அவ்வாறு தன்னை அறிதல் என்பது வேறுபடுகிறது.


அருணகிரிநாதர் இப்படித்தான் ஒன்றைக் கூறுகிறார்: ‘அன்பைத் தா’ என்று கேட்கிறார். பிறகு ‘அறியும் அன்பைத் தா’ என்கிறார். அது என்னது? ‘உன்னை எனக்குள் அறியும் அன்பைத் தா’ என்று முருகனிடம் கேட்கிறார். அதற்கு ஏதோ ஒரு கடல் இருக்கிறதாம். இன்பக் கடலாம். அது உயர் கருணை புரியும் இன்பக் கடலாம். அந்த ‘உயர்கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே’ என்பது அவருடைய பிரார்த்தனை.

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர்கருணை பொழியும் இன்பக் கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே!

அப்பொழுது தான் என்று அறிந்தால் அல்லவா தனக்குள் இருக்கும் அந்த ‘உனை’ அறிய முடியும்!

மயில்தகர் கல் இடையர் அந்தத் தினகாவல்
வனச குறமகளை வந்தித்து அணைவோனே!
கயிலைமலை அனைய செந்திற்பதி வாழ்வே!
கரிமுகவன் இளைய கந்தப்பெருமாளே!

என்று அருணகிரியார் பாடும்பொழுது அதில் முக்கியமான ஒரு கருத்தை அருமையாகச் சொல்லிவிடுகிறார். தன்னை அறிதல், தனக்குள் இருக்கும் அப்பொருளை அறிதல் எல்லாவற்றுக்கும் முன்னால் வேண்டுவது வெளிமுகமாகப் போகும் விழைவு மாறி உள்முகமாகச் செல்லும் விருப்பம், அன்பு என்பது வேண்டும். அது இருந்தால்தான் அடுத்து மற்றவை நிகழும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நரேன் பாடிய முதல் பாடல்

புதிய இந்தியாவின் பொன்னொளியாம் சுவாமி விவேகாநந்தர் தம் கல்லூரி நாட்களில் நரேந்திரநாதராக தக்ஷிணேஸ்வரத்துப் பேரொளியாம் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவரைக் கண்டதும், அவர் கேட்டதற்கிணங்க பாடிய முதல் பாடல். அற்புதமான பொருள் பொதிந்த பாடல். என்னுடைய தமிழ் மொழிபெயர்ப்பைத் தருகிறேன். முதன் முதலில் சுவாமி விவேகாநந்தர் தக்ஷிணேச்வரத்து ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்த பொழுது ப்ரம்ம சமாஜத்துப் பாடல் ஒன்றைப் பாடினார். அதைக் கேட்டதும் பரமஹம்ஸருக்கு இளைஞன் நரேந்திரனின் ஆன்மிக ஜீவிதமே புரிந்துவிட்டது.

‘மனமே! ஏன் நீ அந்நிய இடம் இங்கு திரிகின்றாய்?
நம் சொந்த நிலயத்திற்குப் போவோம் வா’

என்று ஆரம்பிக்கும் ‘மொனொ சொலொ நிஜொ நிகொதொனெ’ என்ற பாடல்.

மனமே நம் நிஜ
வசிப்பிடம் செல்வோமே !
ஸம்ஸாரமாகிய இவ்வன்னிய பூமியில்
அயல்நாட்டினன் போலே வேடமிட்டே
லட்சியம் அற்றே அலைவதுமேன்?

சுற்றியுள்ளவரும்
சூழ்ந்துள பஞ்ச பூதங்களும்
உன்னுடையர் அல்லவே
ஒரு நாளும்
உனக்கு உரியவை அல்லவே
உன் சொந்தமென
எவருமே இங்கில்லையே
அந்நியமாம் இவற்றினில்
பற்று வைத்தே ஏன் நீ
அறிவிழந்தே போனாய்
என் மனமே?
உன் சொந்தம் எது என
மறந்தும் போனாய் மனமே !

சத்தியப் பாதையில்
முன்னேறு என் மனமே !
சலித்து விடாமல் நீ அனுதினமே !
அன்பு என்பதை உன் வழிவிளக்காக
ஏந்திச் செல் நீ என் மனமே!

வழிநடைத் தேவைக்காக
நற்குணங்கள் தமையே
போற்றிப் பாதுகாப்பாகக்
கொணர்ந்திடு என் மனமே !
ஏனெனில் வழியினில்
ஆறலைக் களவர்கள் இருவர்
அறிவு மயக்கம், பேராசையென்பார்
உன் அருந்தனம் அனைத்தையும்
கொள்ளையடிக்கவே காத்துக் கிடப்பார்

ஆபத்துகளில் உன் தற்காப்புக்கென
எப்பொழுதும் நீ அண்டைகொள் மனமே!
மனச் சாந்தி என்பது ஒன்றும்
புலனடக்கம் என்பது ஒன்றும்
என்றும் உனக்கரண் ஆகிடுமே

சாதுசங்கமே நீ வழி இளைப்பாறத்
தகுந்த புகலிடம் ஆகும் என் மனமே !
அவ்விடம் நீ தங்கி
அலுப்புற்ற அங்கத் தளர்வுகள் நீங்கி
மேற்கொண்டு செல்லும் வழியினைப் பற்றி
ஏற்ற நல் உபதேசம் கேட்பாய் !
என்றும் உனைக் கண்வைத்துக் காக்கும்
அவன் உண்டோ என ஐயுற்றுப் பார்க்கும்
உன் சந்தேகம் தீர்ந்திடக் கேட்பாய் !

வழியினில் பயமெனில்
மொழிந்திடும் அவன் நாமத்தை
உரக்கச் சொல் மனமே !
ஏனெனில் அவனே அந்தப்
பாதைக்கெல்லாம் தலைவன்;
அவன் பேரைச் சொன்னாலே
மரணமும் தலை தாழ்த்தி வண்ங்கிடுமே.

மனமே என் மனமே !
மனமே நம் நிஜ
வசிப்பிடம் செல்வோமே !
(மொழிபெயர்ப்பு -- ஸ்ரீரங்கம் மோகனரங்கன் )

***

ஸென் கதைகளின் தனித்தன்மை

ஸென் கதைகளுக்கு என்று ஒரு தனி... தன்மை உண்டு.

அமைதியாய் இருக்கும். ஆனால் திடீரென்று முகத்தில் குத்து விழும். யார் குத்தினார் என்ன குத்தினார் என்று பார்ப்பதற்குள் ஒரு முக்கியமான யதார்த்தம் புரிய ஆரம்பிக்கும். அதுவும் அந்த திடீர் காரணமாகத்தான் புரியும். அந்த அதிர்ச்சியின் கணத்தில் நம் மனம் வழக்கப்படியான தற்காப்புகள் போட்டுக் கொள்வதைத்தாண்டி ஒரு முக்கிய கருத்தைக் கொண்டு வந்து நம் கவனத்தில் பதிவு பண்ணிவிடும்.

ஒரு யுனிவர்ஸிடி ப்ரொஃபஸர் ஸென் ஆசிரியர் ஒருவரைப் பார்க்கச் சென்றார். வந்தவருக்கு டீ வழங்கினார் ஆசிரியர். அப்பொழுது ப்ரொஃபஸர் கேட்டார்: ‘ஐயா! ஸென் பற்றிச் சொல்லுங்களேன்.’

ஸென் ஆசிரியர் டீ ஊற்றிக்கொண்டே இருந்தார்.

டீ கப் நிரம்பி வழிந்தது. அப்படியும் ஸென் ஆசிரியர் ஊற்றியவண்ணம்.... தாங்க முடியாமல் ப்ரொஃபஸர், ‘ஐயா! ஏற்கனவே நிரம்பி வழிகிறது. மேலும் எப்படி அதிலேயே ஊற்ற முடியும்?’

டீ ஜக்கை எடுத்துக்கொண்டு சிரித்தபடியே ஸென் ஆசிரியர் சென்று விட்டார். ப்ரொஃபஸர் அவர் வருவாரா மாட்டாரா என்று குழம்பியபடி அமர்ந்திருக்கிறார்.

*
ஒரு நல்ல விஷயம் என்னவெனில் ஸென் கதை எதுவும் ஐந்து ஆறு வரிகளுக்கு மேல் இருக்காது.

ஒரு ஸென் ஆசிரியரிடம் பலர் பயின்றனர். அவரோ புதிதாகச் சேர்ந்த ஒரு இளம் மாணவரைக் குறித்து அவர் ஞானம் பெற்று விட்டார் என்று அறிவித்து விட்டார். வயதான பழகிப் போன முதிய மாணவ ஸென் பிக்ஷுக்களுக்கெல்லாம் ஒரே மூளையில் குடைச்சல்! என்னது.... நாம் எத்தனை மாமாங்கம்.... ... எவ்வளவு நாளா நாமும் இருக்கோம். ஏதோ இப்ப வந்த பையன்.... கேட்டா ஞானம் அடைந்து விட்டார் என்று... !!! சரி என்று மிகவும் கரிசனத்துடன் போய்,

‘என்னப்பா.... ஞானம் அடைந்து விட்டாயாமே..... ?’

ஆமாம்

இப்பொழுது எப்படி உணர்கிறாய்?

‘பழையபடிதான் இருக்கிறது’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*** 

பழைய நினைவுகள்

பழம் சேகரங்கள், அதுவும் நமது எழுத்துகளின் கைப்பிரதிகள், அதுவும் பள்ளிப்பருவம் முடியும் தருணத்தில் எழுதப்பட்டவை என்றால் இப்பொழுது படிக்கும் பொழுது அவற்றின் முளைக்கும் எழிலாலும், முதிராக் கருத்தாலும் இப்பொழுது அவை நம்மை ஒரு விதத்தில் ஈர்க்காமல் போகாது. அதுவும் எழுதிய நானே அவற்றைப் பார்க்கும் பொழுது அது ஒரு வித கால ஜன்னலாகவும், அந்தப் பழைய நாட்கள், அவை எழுதப்பட்ட தருணம், அப்பொழுது யார் யார் உரையாடினார்கள் என்னும் குறிப்புகள் - எல்லாம் ஒரு போதையே தந்துவிடுகின்றன. 1972 ஆ அல்லது 73 ஆ நினைவில்லை. எனக்கு 14 அல்லது 15 வயசு. ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூலில் தந்தையாரும், ஆங்கிலப் பேராசிரியர் திரு சி எஸ் கமலபதியும் இணைந்து Merchant of Venice by Shakespeare போட்டு முடித்த தருணம். அதில் தந்தையார் டைரக்டர். அவருக்கு நான் அஸிஸ்டண்ட். மைனர் ரோல்களைப் பயிற்றுவதும், டையலாக் சொல்லச் சொல்லிக் கேட்பதும் என் பணி. அந்த ஆங்கில நாடகம் ஷேக்ஸ்பியர் நாடகம் போட்டது திருச்சி வட்டாரங்களில் அதுதான் கடைசி என்று நினைக்கிறேன். பிறகு யாரும் போட்டதாக நினைவில்லை. வெற்றிகரமாக நாடகம் போட்ட சாதனையைக் கொண்டாட வேண்டி திரு கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களது தலைமையில் ஒரு மீட்டிங், இன்னும் சொல்லப் போனால் நடிகர்கள் (பலரும் கல்லூரி மாணவர்கள்) நண்பர்கள், ஆர்வலர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கெட் டு கெதர். திரு கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களின் குமாரர்கள் பெஸ்ஸானியோவும். போர்ஷியாவும். திரு கஸ்தூரி அண்டோனியோ. திரு சி எஸ் கமலாபதி ஷைலக். அதில் அனைவரையும் வரவேற்று நடந்து முடிந்த சாதனையை வாழ்த்திப் பாட எனக்குப் பொறுப்பு. அப்பொழுது நான் எழுதிய வரிகள், -

“ கலைமுறை நாடகக் குழுவினர்காள் !
நடைமுறை உளவியல் அரங்கத்தின்
இயக்குநர் கமலபதி பேராசிரிய !
தலைவராய் விளங்கும் தகைமைப் பெரிய!
இளமை மணம் மாறா இனிய முகத்தினிலே
சிரிப்புதவழ் இதழ்களலங் கரிக்கும்
குன்றாத பேரார்வம் சிலிர்த்திடுகும்
சிறந்தவரே ! கிருஷ்ணமூர்த்தி ராவவரே!
தேவவிருந்தென அருமருந்தென எம்செவிக்கு
பேராசான் உரைகளையே துவக்கியுள்ளீர் !
சிலநாளாய் அவ்விருந்து
நடக்கவில்லை என்பதனால்
செயத்துணிந்தீர் போலுமிங்கே
வயிற்றுக்கொரு விருந்து
வையத்துள் வாழ்வாங்கு நீர் வாழ்ந்திடவே
வற்றாத மாகருணை வாழ்வுக்கொரு புகலாம்
மாசக்தி காத்திடவே கவிபாடி துதிக்கின்றோம்.

வெனிஸ்நகர வணிகன் வந்து
போட்ட பெரும் முழக்கத்தை
காவிரியாள் அலைக்கரத்தால்
பல இடத்தில் முழக்குகிறாள்.
எதிரொலியாய் பலபேர்கள்
எமக்கென்று கேட்கின்றார்.
வணிகனீட்டித் தந்த செல்வம்
வற்றாத செல்வம்தான்
அவனடைந்த வெற்றியிலே
திளைத்துள்ளோம் நாமெல்லாம்.

அந்தபெரும் வெற்றியிலே
பெரும்பங்கு வகித்திடுவோர்
பாய்ஸ்ஹைஸ்கூல் ஆசிரியப்
பெருமக்களே யாவார்கள்.
அவர்க்கெல்லாம் பிரதிநிதியாம்
தலைமையாசிரியரைக் கேட்டால்
கலைமாமணி சி எஸ் கேயின்
நிலைத்தபுக ழேயென்பார்
நன்றென்று கலைப்பதியை
அணுகிநாம் வினவிட்டால்
அன்றன்றென் மறுஆத்மா
வேணுசெய்த வேலையென்பார்
சரியென்று
டைரக்டர் ஐயாவிடம் சென்று கேட்டால்
இல்லையில்லை நானில்லை
டைரக்டர்; டிக்டேடரும் அல்லைநான்;
ஆக்குவதும் ஊக்குவதும் இயக்குவதும் எல்லாமாகி
நிற்குமுயர் கமலபதிப் பேராசான் தானென்பார்;
தானவரின் தொண்டரடிப்
பொடியென்று கரங்குவிப்பார்;
கவனிக்க...
நடித்தவரின் பேரூக்கம்;
ஆசிரியர் அளித்த பெரும் உழைப்பு;
இவ்விரண்டே நல்வெற்றிதனை ஆக்கியது
என்றுநமைத் திருத்திடுவார்.
நடித்தவரை நாடிப்போய் நாம் கேட்டால்
அன்றென்று டைரக்டரை
நோக்கிநமை திருப்பிடுவார்.

இத்துணை பேர்களையும் விட்டுவிட்டு
வெற்றியென்று ஓருருவம் உளதென்றால்
அணுகியதை நாம் வினவ முடியுமானால்
வெற்றியென்ன பதில் சொல்லும் எண்ணிடுவீர்!

”அனைவர் தந்த காரணமும் சரியேயென வமைக!
ஆனாலும்
கிருஷ்ணமூர்த்தி ராவவர்கள் அளித்தவாசி
அத்தனைக்கும் அழகுதரும் காரணமாகும்”

என்றுசொலும் நன்றுசொலும், உண்மைதானே!
குழந்தையுளம் கொண்டவர் நம் கிருஷ்ணமூர்த்தி
அவரளித்த ஆசியென பொய்த்தா போகும்?
குழந்தையுளம் கொண்டவர்கள்
குவலயத்தில் பெரியவர்கள்;
ரசிப்பதற்குத் தெரிந்தவரை
நசிப்பவைகள் ஏதுமில்லை;
ரசிப்பதிலும், குழந்தையுளப் பண்பினிலும்
குன்றுகளாய் திகழ்ந்திடுவோர்
கமலபதிப் பேராசான்
கிருஷ்ணமூர்த்தி ராவவர்கள்.
அன்னோரின் வாழ்வினிலே
அனைத்துநலன் பொலிந்திடவே
அவர் குழந்தை உளம்,
வாழ்வின் வளம் செழித்திடவே
வாழிசத்தி பதத்தினையே நாம் துதிப்போம்.”

மேற்கண்ட வாழ்த்துப்பாவில் நடைமுறை உளவியல் அரங்கத்தின் இயக்குநர் என்று திரு சி எஸ் கமலபதி அவர்களை விளித்தும், அவருடைய உரைத் தொடர்ச்சி திரு கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுச் சின்னாள் நடந்து பின் நடுவில் நின்று மீண்டும் துவங்கியது, அந்த நடுவில் நின்ற சமயத்தில் திரு ராவ் அவர்கள் ஒரு விருந்து அளித்து அனைவரையும் கூட்டி மீண்டும் புதுப்பித்தார் என்றபடிக் குறிப்பிடிருக்கிறேன். இதை இப்பொழுது படித்ததும் அந்த உளவியல் அரங்கம் பற்றிய சிந்தனைகள் வந்து கவிந்து கொண்டன. மேற்கத்திய உள இயல் சிந்தனைகளையும், வாழ்வை முன்னேற்ற நடைமுறை உளவியல் என்னும் நோக்கோடு பல உரைகளையும் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூல் அரங்கங்களில் வாரவிடுமுறைகள் மாலைநேரங்கள் ஆகிய பொழுதுகளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அள்ளி அள்ளித் தந்தவர் அந்தக் காலத்தில் பேராசிரியர் திரு சி எஸ் கமலபதி அவர்கள். மேலைக் கல்வித்துறைகள் பலவற்றையும் திருச்சி வட்டாரங்களில் இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னரே வள்ளலாக வாரித் தந்த பெருங் கல்வியாளர். எனது தந்தையார் திரு ஆர் வேணுகோபால் அவர்களும், அவரும் உயிர் சிநேகம். My Alter-ego Venu என்றுதான் அவர் என் தந்தையைக் குறிப்பிடுவது வழக்கம். 1950கள் தொடக்கமாக அவரும் என் தந்தையும் பல ஷேக்ஸ்பியர் நாடகங்களையும், தமிழ் நாடகங்களையும் அமெச்சூர் நாடக ஊக்கங்கள் என்னும் வகையில் திருச்சி, கும்பகோணம், மதுரை, சென்னை என்று பல இடங்களிலும் மேடை ஏற்றியவர்கள். ஷேக்ஸ்பியர் நாடகங்களை அவர்கள் மேடை ஏற்றியது Shakespeare Head Players என்னும் அமைப்பை வைத்துக்கொண்டு.

நான் சிறு குழந்தையாக இருக்குங்காலத்தில் அவர் மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ் நாடகத்தில் பிரின்ஸ் ஆஃப் மொராக்க்கோ சீனில் மூன்று பெட்டிகளில் ஒரு பெட்டியில் மண்டையோடு ஒன்று இருக்கும்; அதற்காக வெண்களிமண்ணில் பண்ண ஒரு மண்டையோட்டை ஒரு பெட்டியில் போட்டு எலெக்ட்ரிக் ரீடிங் ரூலில் அவர் வைத்திருக்கவும், அதை எதேச்சையாக எதையோ நோண்டும் போது (பயங்கர நோண்டிப் பண்டாரம்தான் நான் ) நான் கண்டுவிட்டு பயத்தில் ‘குய்யோ முறையோ’ என்று அலறியதையும், பிறகு அம்மா மிகவும் தொணப்பவே வேறெங்கோ கொண்டு போய் வைத்துக் கொண்டதும் இப்பொழுது லேசாக நினைவில் நிழலாடுகின்றன. என்ன காலங்கள் அவையெல்லாம் ! எவ்வளவு பெரும் சிம்மங்கள் அவர்கள்! ஒரு சிறு பையனான நான் தறுக்கு முறுக்கு என்று செய்யும் முயற்சிகளுக்கு எவ்வளவு ஆதரவும், உற்சாகமும் தந்திருக்கிறார்கள் ! இன்று நினைக்குங்கால் அடங்காக் கண்ணீர்தான் பதிலாக வடிகிறது. பொய்யில்லாமல் பழங்கதையாய் மெல்லப் போயின நாட்கள்.!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

காலை இளங்கதிர் நடையின் எண்ணம்

காலை வேளையில் இளங்கதிர் தடவும் வேளையில் நடத்தல் என்பது தேன்பாகு மதுரமாக இருக்கிறது. அது போழ்து சேருகின்ற நடைத் தோழர்களுக்கு என்று ஓர் சுமுகமான சுகமான மனப்பான்மை அமைந்து விடுகிறது. கண் விழித்த புத்துணர்ச்சி, ஒளியும், காற்றும் கலந்துறவாடும் உதய காலம், அதில் துயிலுணர்ந்த பல் வேறு உயிரினங்களின் சப்தங்கள், மாந்தர்தம் அன்றாடக் கவலைகள் எழுந்திருக்கும் முன்னர் நிலவும் ஓர் தெய்விகம் - எனக்கு இந்த நேரமும், அந்த நேரத்து வெளியுலாவும் காட்சியும், பேச்சும் மிகவும் ரசனைக்குரியனவாய் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஏதேனும் தாம் படித்த நினைவுகளை, ரசித்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வது என்பது மிக இயல்பாய் நடக்கின்றது. வாக்குவாதம், பதில் மறுபதில் என்ற கடபுடா எதுவும் இன்றி, எல்லோரும் தம்மில் நிறைவுற்று, கூட நடக்கும் நபர்களோடு இனிமையாகப் பேசி ரசிக்கும் அந்த ஒலிகள் இனியவை.

ஒருவர் ஒரு சுலோகம் சொல்லி அதன் அர்த்தம் சொல்வார். சின்ன கருத்துதான். ஆனால் அழுத்தமாக மனத்தில் பதியும். மனம் ரசனையில் தோய்ந்து வரும் போதே இன்னொருவர் வேறு ஒரு நிகழ்ச்சியை ஞாபகம் வந்தவராய், ‘அதுல பாருஙக’ என்று ஆரம்பிப்பார். அது ஓர் உலகம், அந்த உலகத்தின் ஜன்னல் திறக்கும். அப்படி எட்டிப் பார்த்தபடியே நடை தொடரும். ஒன்றும் யாருக்கும் உள்நோக்கம், திட்டம், கோபம் தாபம் எதுவுமின்றி மிக இயல்பாக மனிதர்கள் சுதந்திரமாகத் தங்கள் மனங்களை ரசனையுடன் பேச விடும் பொழுதுகள் இந்த காலை இளங்கதிரில் நடக்கும் பொழுதுகள்.
பெண் ஆண், முதியோர் இளையோர், தெரிந்தோர் தெரியாதோர் என்ற எந்தப் பிரிவினைகளும் எல்லாம் அர்த்தம் இழந்து விடியல் காலம் மட்டுமே ஆட்சி புரியும் அற்புதமான நேரம்!

அவரவர் தமதமது அறிவறி வகைவகை, அன்பும் இன்பும் மட்டுமே நம் மொழியின் பண்புகளாய் இருக்கட்டுமே. எப்படி உரையாட வேண்டும் என்பதை அந்தச் சிட்டுகுருவிகளின் பேச்சுகள் உணர்த்தும். ‘விட்டுவிடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவியைப் போலே’ என்கிறார் பாரதியார்.
சிட்டுக்குருவிகளைத்தான் விரட்டிவிட்டது நம் நாகரிகம். சிட்டுக்குருவிகளின் நாகரிகத்தையாவது நாம் இங்கு கைக்கொள்வோமே! உதய காலத்தில் சூரியனே இவ்வாறு புவியுடன் இனிய கதைகள், அரட்டைகள் பேசி மகிழத்தான் வருகின்றதாகக் கூறுகிறார் திருலோக சீதாராம்.

’எழுதரிய வண்ணம் அவை
எண்ணரிய வாகும்
தொழுதுவல மாகிவரு
கோடிபல கோளம்

முழுதுமொளி தடவிபுவி
மொய்த்துவரு கின்றாய்
கெழுதகைய அன்பினொடு
கேண்மை கொளவென்றோ?’
(கந்தர்வகானம்)

நூல்களை எல்லாம் போக்கிவிட்ட நிலையில் ஒரு வித நிரக்ஷர குக்ஷியாக இருக்கிறேன். எனவே குறிப்புகளுக்கு உதவிகள் இல்லை. நினைவில் நின்றவை; போக டைரியில் குறித்து வைத்த சிலது அவ்வளவே. அவரது ’இலக்கியப்படகு’ என்னும் கட்டுரை நூலில் தொடக்கத்தில் கவிஞர் பெருமான் திருலோக சீதாராம் எழுதியுள்ள இவ்வரிகள் மறக்கற்பாற்றதன்று.

“ வெளியுலகை ஒரு கனவாகக் கொண்டு மன உலகின் நனவில் நிலைத்து வாழும் சூழ்ச்சியே இலக்கியம். உலகம் விழித்திருக்கும் போது ஞானி தூங்குகிறான். உலகம் உறங்கும் போது அவன் விழித்திருக்கிறான் என்று கூறக் கேட்டதுண்டு. இலக்கிய உலகிலும் இதுதான் உண்மை. இலக்கிய மாணவனும் ஆன்ம சாதகனும் ஒருவரே.

”கழிந்து போகின்ற ஒவ்வொரு கணமும் நம்மைத் தொடராமல் தூர விலகிப் போய்விடுவது போல வேறு பெரிய சித்தி ஒன்றுமில்லை. ஒவ்வொரு கணமும் தூங்கி விழித்தது போலப் புத்துணர்ச்சி வேண்டும். சென்ற வினைப் பயன்கள் நமைத் தீண்டாமலும், நாளைத் தொல்லைகள் நம்முள் நின்று அச்சுறுத்தாமலும் ஒவ்வொரு கணமும் நம்முடையதாக ஆகிவிட்டால் அல்லவோ, நாம் வாழ்ந்ததாக ஆகும்.

“கணந்தொறும் தோற்றும் நிகழ்ச்சிகள் யாவும் உடனுக்குடன் கனவுபோல் கழிந்து அவ்வக்கணமும் புது விழிப்புத் தருகின்ற சக்திதான் இலக்கியம். கனவுக் காட்சிகள் நனவில் நம்மைத் தொடுவதில்லை; அதுபோல் வாழ்வின் தொல்லைகள் நம்மைத் தொடாமல் விலகி நிற்கச் செய்யும் தந்திரம்தான் இலக்கியம். உணர்ச்சி உலகு ஒன்றுதான் சத்தியமென்பதையும் புற உலகு வெறும் கனவென்பதையும் புரிந்துகொள்ள இலக்கியப்படகு மிகவும் பயன்படும்.

“வாழ்வென்னும் பெருங்கடல் நீந்த வாய்த்த சிறு படகுதான் இலக்கியம். இந்தப் படகு வலித்துச் சென்றால் இன்பக்கரை ஏறலாம். மனித்தப் பிறவிதான் வேண்டுமென்று அடித்துக்கூறும் ஆற்றலும்கூட இலக்கியப்படகில் மிதக்கும் போதே தோற்றும்.”
(இலக்கியப்படகு, திருலோக சீதாராம், கலைஞன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை தியாகராயநகர். சென்னை 600017)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Thursday, January 30, 2020

தோடகாசாரியரும், இரண்டு சுப்பைய தேசிகரும்

ஸ்ரீஆதிசங்கரரின் சிஷ்யர்களில் ஒருவர் ஆனந்தகிரி. குருவின் சேவையே அன்றி வேறெதுவும் அறியாராய் இருந்தவர். சமயத்தில் அவர் தமது கடமைகளை முடித்துவிட்டு வருமளவும் பாட வகுப்புகளைக் காத்திருக்கும்படிச் செய்வார் ஸ்ரீஆதிசங்கரர். பொறுத்திருந்து பார்த்த பத்மபாதர் ஒரு நாள் சாஸ்திர ஞானம் பெரிதும் இல்லாத ஆனந்தகிரிக்காக ஏன் அனைவரும் காத்திருக்க வேண்டும். அவர் வந்த பின் ஆரம்பிப்போம் என்று ஆணையிடுவதன் உட்கருத்து என்ன என்று கேட்டு விட்டார் குருவை. முறுவல் தவழ குருவும் போகப் போகத் தெரியும் என்று இருந்து விட்டார். ஆனந்தகிரி அவர்களுக்கு குருவின் அருளால் சாத்திரங்களின் உட்பொருள் அனைத்தும் உள்ளே நன்கு புரிந்தது. சாத்திரங்களின் சாரமான கருத்துகளைத் தோடகம் என்னும் வேதசார சமுத்தரணம் என்ற சிறு நூலாக இயற்றி குருவினிடம் சமர்ப்பித்தார். அதை நன்கு பார்வையிடுமாறு பத்மாதரிடம் பணித்தார் குரு. அதைக் கண்ணுற்ற பத்மபாதருக்கு மிகுந்த வெட்கமாக ஆகிவிட்டது. சாத்திரங்களின் கருத்துப் பிழிவாய் ஒரு சிறிய நூலில் அடக்கி இயற்றும் ஆனந்தகிரியின் அறிவுக் கூர்மையும், மொழித் தேர்ச்சியும் அவருக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.

அந்த தோடகம் என்னும் வேதசார சமுத்தரணம் என்னும் வடமொழி நூலை ஸ்ரீசுப்பய்ய ஞானதேசிகேந்திர சுவாமிகள் என்பவர் தமிழ்ச் செய்யுள் வடிவமாக இயற்றினார். அந்தச் செய்யுள்களும் உரையின்றிப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்பதைக் கண்ட ஸ்ரீசிதம்பரம் பொன்னம்பல ஞானதேசிகர் மடாலயம் ஸ்ரீசுப்பய்ய சுவாமிகள் என்பவர் அதற்கு ஓர் உரையும் வரைந்து, செய்யுளும் உரையுமாக திரு நா முனிசாமி முதலியார் என்பவர் சென்னை ஆனந்த போதினி பவர்பிரஸ்ஸில் 1921 ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். 171 சொச்சம் பக்கங்கள். அந்தக் காலத்தில் 8அணா.

ஏன் இதனைத் தமிழ்ச் செய்யுள் வடிவமாக இயற்றினார்?

இவ்வெழில் அமுத நூலை
இருசதத்து ஒருபத்தின்றாம்
செவ்விய செய்யுளாலே
சிறியனும் செப்பல் தானும்
எவ்விதத்தினும் என்சிந்தை
இன்பு அறிவுருவில் வாழ
அவ்விதம் அலது வேறோர்
ஆசையைப் பற்றியன்றால்.

ஆனந்தகிரியின் வாக்கை அருமைத் தமிழால் சுப்பைய தேசிகர் உரைக்கும் திறம் -

விடமமாம் விடயம் தனின்
வேட்கையை விடுத்தே
உடலை யான் எனும் உளம் ஒழித்து
உயர்பர ஒளியில்
திடமதாய் நிட்டை அடைந்து
அனுதினம் பரமான்ம
நெடுவிஞ்ஞானம் கொண்டு
அவித்தை காரிய மயல் நீப்பாய்.

இரண்டு சுப்பைய தேசிகர்களும் தமிழில் அத்வைத வேதாந்தம் தழைக்கச் செய்திருக்கும் உபகாரம் மிகவும் பெரிது. வாழியவர் புகழ்! வாழ்த்துக நம் நன்றியறி நெஞ்சம்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*

குயில் பாட்டில் பழைய நெருப்பு

குயில் பாட்டில் ஓரிடம் -

......படைப்புக் கடவுளே! நான்முகனே,
பண்டை யுலகு படைத்தனை நீ யென்கின்றார்;
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்,
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்,
காற்றை முன்னே யூதினாய், காணரிய வானவெளி
தோற்றுவித்தாய், நின்றன் தொழில்வலிமை யாரறிவார்
............

இதில் நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய் - என்று சொல்லியபின், ‘நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்’ என்று வருகிறது. இது என்ன அர்த்தம்? அது எப்படி நீரை நெருப்பில் குளிர்விக்க முடியும்? அதுவும் பழைய நெருப்பில். பழைய நெருப்பு என்றால் அது சில் என்று போய்விடுமா என்ன?

’உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள்போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப்
பொல்லாப் பிரமா, புகுத்துவிட்டாய். அம்மாவோ!’

என்று தொடர்கிறது பகுதி. இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். வான வெளி, அண்டங்கள், கிரகங்கள் என்று இவற்றைத்தான் சொல்கிறார் பாரதி. ஆனாலும்

நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்,
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்,

என்று பாடினாரே ஏன்?

இதையே பாரதியின் வரிகள் எப்படி விளக்குகின்றன என்பதையும் காட்டுகின்றேன்.
வசனக் கவிதையில், இரண்டாங் கிளை: புகழ் என்னும் பகுதியில் ‘ஞாயிறு’ என்னும் தலைப்பில்
எழுதுகிறார்:

“ஞாயிறு வித்தை காட்டுகிறான்;
கடல்நீரைக் காற்றாகி மேலே கொண்டு போகிறான்;
அதனை மீளவும் நீராக்கும் படி காற்றை ஏவுகின்றான்.
மழை இனிமையுறப் பெய்கின்றது.
மழை பாடுகின்றது.
அது பலகோடி தந்திகள் உடையதோர் இசைக்கருவி.
வானத்திலிருந்து அமுத வயிரக் கோல்கள் விழுகின்றன.
பூமிப் பெண் விடாய் தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள்.
வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் விளைகின்றன.
அனைத்தும் ஒன்றாதலால்.
வெப்பம் தவம், தண்மை யோகம்
வெப்பம் ஆண், தண்மை பெண்.
வெப்பம் வலியது, தண்மை இனிது.
ஆணிலும் பெண் சிறந்ததன்றோ?
நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம்.
அது வாழ்க.”

அதேபோல் ‘சக்தி’ என்னும் பகுதியிலும் எழுதுகிறார்:

”சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்.
சக்தி பொஉகையிலே ஞாயிறு ஒரு மலர்.
......
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது,
.............
கொதிப்புத் தருவது, ஆற்றுவது ”

இது போல் பாரதியே ஓரிடத்தில் தாம் சொன்னதற்கு விளக்கம் தரும் வகையில் மற்றோர் இடத்தில் எழுதி வைத்திருப்பது அவருடைய சிறப்பு. அதாவது பாரதிக்குப் பாரதியே நல்ல விளக்கமாகவும் அமைகிறார்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

யதிராஜ விம்சதி - இரண்டாம் பகுதி (11 -20)

பதினோராவது சுலோகம்

பாபே க்ருதேயதி பவந்தி பயாநுதாப
லஜ்ஜா: புந: கரணமஸ்யகதம் கடேத |
மோஹேநமேந பவதீஹ பயாதிலேச:
தஸ்மாத் புந: புந: அகம் யதிராஜ குர்வே ||

*
பாபம் செய்தால் அதனால் அநர்த்தமும் துக்கமும் வரும் என்ற பயமும், தீய வாசனையால் செய்தால் செய்து விட்டோமே என்ற லஜ்ஜையும், புத்தி பூர்வமாகச் செய்தால் பெரியோர்களின் தண்டனையைக் குறித்த அச்சமும் வருவதால் பாபம் செய்வது எப்படித் தொடரும், இயலாதன்றோ! ஆனால் ஈதொன்றையும் கணிசியாத அளவு அஞ்ஞானத்தில் மண்டியிருக்கும் நானோ மீண்டும் மீண்டும் பாபத்தையே அன்றோ செய்து போருகிறேன்! யதிராஜரே!

*

பன்னிரண்டாவது சுலோகம் 

அந்தர்பஹிஸ் ஸகலவஸ்துஷு ஸந்தம் ஈசம்
அந்த: புரஸ் ஸ்திதம் இவாஹம் அவீக்ஷமாண: |
கந்தர்ப்பவச்ய ஹ்ருதயஸ் ஸததம் பவாமி
ஹந்த த்வத் அக்ர கமநஸ்ய யதீந்த்ர நார்ஹ: ||

*
உள்ளும் புறமும் அனைத்துப் பொருளிலும் ஒழிவின்றிப் பரந்து நிற்கும் பகவானை, பிறவிக் குருடன் நேர் நிற்கும் மனிதனைக் காணமாட்டாதாப் போலெ, நானும் மன்மதனின் வேகமாகிய காமத்தில் நெஞ்சை இழந்தவனாய் ஒருபோதும் காண்பதில்லை. அதனால், யதிராஜரே! புலனடக்கமே இயல்பாக வாய்ந்தோர் அடிபணிந்து ஏற்றித் தொழும் தேவரீரின் திருமுன்பே வருவதற்கு நான் அருகதை உடையவன் இல்லை.

*
பதிமூன்றாவது சுலோகம்

தாபத்ரயாயீ ஜநித துக்க நிபாதிநோபி
தேஹஸ்திதௌ மமருசிஸ்து நதந்நிவ்ருத்தௌ |
ஏதஸ்ய காரணம் அஹோ மம பாபம் ஏவ
நாத த்வம் ஏவ ஹரதத் யதிராஜ சீக்ரம் ||

*
ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் என்னும் மூன்று தாபங்களால் உண்டான துக்க பரம்பரைகளில் அழுந்தினவனாய் இருக்கச் செய்தேயும் எனக்கோ இந்த உடம்பில் ஈடுபாடான ரக்ஷணத்தில் ருசியானது உண்டாகி ஒழிவில்லாமல் நீள்கிறது. இதற்குக் காரணம் என்னுடைய பாபமே அன்றோ! அந்தோ கஷ்டம்! யதிராஜரே! என்னுடைய நாதரே! அந்த பாபத்தைத் தேவரீரேதான் சீக்கிரம் போக்கியருள வேண்டும்.

*
(குறிப்புகள்: அத்யாத்மம் - அகம் தழீஇயது; ஆதிபௌதிகம் - பூதங்கள் தழுவியது; அதிப்ரஜம் - மக்கள் தழுவியது அதாவது சமுதாயம் சார்ந்தது; அதிதைவதம் - த்ய: என்பது விண் அதாவது வானம் பற்றியது. அதாவது கோள்கள், வான நிலை சம்பந்தமானது. அதியஜ்ஞம் - வேள்வி சார்ந்தது.

கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் அதியஜ்ஞம், அத்யாத்மம் என்று ஒரு லிஸ்ட் தருகிறார். அதில் அதியஜ்ஞம் என்றால் அது தானே என்று சொல்லி விடுகிறார். எனவே வேதம், வேதாந்தம், தர்சனம் என்று துறைக்கேற்ப லிஸ்டுகளில் மாறுபாடுகள் இருக்கின்றன. முந்தைய பயன்பாடு, பிந்தைய பயன்பாடு என்றும் வேறுபாடுகள் உண்டு. சாதாரணமாக ஆதிபௌதிகம் என்பதையும் இயற்கை சார்ந்த என்று கூறலாம். அதிதைவதம் என்பது இன்றைய நம் காதுகளுக்கு தெய்வம் பற்றியது என்று ஒலிக்கும். அப்படியும் பொருள் கொண்டால் பெரும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் பொதுவாக இந்த இடத்தில் த்ய: என்பது ஸ்கை ஃபினாமினன் என்ற பொருளில் வருகிறது. பொதுவாக க்லைமேட், சொஸைடி, உடல் ஆகிய மூன்று காரணங்களால் மனிதர்களுக்கு தாபம் ஆகிய நோவு வருகின்றன என்பது கருத்து. ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்பதை உடலில் எழும் துன்பங்கள், சூழலால் எழும் துன்பங்கள், வான் நிலையால் எழும் துன்பங்கள் என்று சொல்லலாம்.


அத்யாத்மம் என்பது ஆத்மிகமான விஷயங்கள் என்னும் பொருளில் வருவது வேறுவகையான பயன்பாடு.)



*
பதினான்காவது சுலோகம்

வாசாமகோசர மஹாகுண தேசிகாக்ரய
கூராதிநாத கதிதாகில நைச்யபாத்ரம் |
ஏஷோஹமேவ நபுநர்ஜகதீத்ருசஸ்தத்
ராமாநுஜார்ய கருணைவது மத்கதிஸ்தே ||

*
மொழியைக் கடக்கும் பெரும் புகழார் மஹாகுணங்கள் நிரம்பிய கூரத்தாழ்வான் போன்ற தலைமை ஆசார்யவர்யர்கள் எல்லாம் தேவரீர் திருவடிகளிலே தெரிவித்திருப்பதான நைச்ய வார்த்தைகள் எல்லாம் பொருந்தும் முழு பாத்ரமாக இருப்பவன் நான் தான். இப்படிப்பட்ட என்னை ஒத்தாரை இந்த ஜகத்திலேயே எங்கும் பார்க்க முடியாது. எனவே மோக்ஷத்தை மட்டுமே தந்தே தீருமதான சதுரக்ஷரீ என்று கொண்டாடப்பட்ட ராமாநுஜ என்னும் திவ்ய நாமத்தை உடையவரே! தாங்கள் அனைத்தையும் அறிவீர் அன்றோ! இப்படிப்பட்ட எனக்கு உங்கள் கருணையை விட்டால் ஏது கதி?

*
பதினைந்தாவது சுலோகம்

சுத்தாத்ம யாமுந குரூத்தம கூரநாத
பட்டாக்ய தேசிகவரோக்த ஸமஸ்தநைச்யம் |
அத்யாஸ்தி அஸங்குசிதமேவ மயீஹ லோகே
தஸ்மாத் யதீந்த்ர கருணைவது மத்கதிஸ்தே ||

*
தூய மனமே வடிவாய்ப் பொலிந்த உத்தம ஆசார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பராசர பட்டர் போன்ற ஆசார்யவர்யர்கள் தமது கிரந்தங்களில் தமது நைச்யம் தோன்ற சொல்லியிருப்பவையெல்லாம் சிறிதும் பொருட் சுருக்கமே இன்றி முழுவதும் பொருந்துவது என்பது இந்த உலகத்தில் என்னொருவனிடத்தில் மட்டுமே. எனவேதான் யதீந்திரரே! தங்களுடைய கிருபை ஒன்றுதான் எனக்குப் புகலாவது.

*
பதினாறாவது சுலோகம்

சப்தாதி போக விஷயா ருசிரஸ்மதீயா
நஷ்டாபவத்விஹ பவத்தயயாயதீந்த்ர |
த்வத் தாஸ தாஸகண நாசரமாவதௌய:
தத்தாஸதைகரஸதா விரதாமமாஸ்து ||

*
யதீந்திரரே! சப்தாதி போக விஷயங்களில் உள்ள ருசியானது எனக்கு இந்தப் பிறவியிலேயே தேவரீருடைய திருவருளால் நசிக்க வேண்டும். அது மட்டுமன்று. தேவரீருடைய திருவடிகளில் அடியார்களுக்கு அடியார்களுக்கு அடியார்களாய் இருப்பவர்களின் பரம எல்லையில் நிற்பவர்களான அந்த அடியார்களிடத்து நான் சேஷத்துவம் பூண்டவனாக, அதிலேயே ருசி உடையவனாக நான் நடக்க வேணும். இதுவே பரம புருஷார்த்தம் என்று அறுதியிட்டிருக்கும் எனக்கு இது இடைவிடாமல் நடந்தேற வேண்டும். இது தேவரீருடைய தயையால் மட்டுமே கூடும்.

*
பதினேழாவது சுலோகம்

ச்ருத்யக்ர வேத்ய நிஜ திவ்யகுணஸ்வரூப:
ப்ரத்யக்ஷதாம் உபகதஸ்த்விஹரங்கராஜ: |
வச்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ்வகீயஜந பாப விமோசநேத்வம் ||

*
ச்ருதி சிரங்கள் என்னும் உபநிஷதங்களால் உள்ளபடி அறியத்தக்கதான தன்னுடைய திவ்யகுணங்கள், ஸ்வரூபம், ரூபம், விபூதிகள் ஆகியவற்றை இவ்வுலகில் உள்ளாரும் நேரே கண்டு அனுபவிக்கலாம்படி கண்ணுக்கு இலக்காக்கி வந்து எழுந்தருளி, பூலோக வைகுண்டம் என்னலாம்படியான திருவரங்கத்திற்கு ராஜாவாகிய ரங்கராஜர், யதிராஜரே!, தம்முடைய செல்வம், அரசு, அதிகாரம் முழுவதும் உமக்கே ஆக்கி ‘உடையவர்’ என்று தேவரீரையே தம்முடைய மிகுந்த வாத்சல்யத்தால் முற்றிலும் சார்ந்து, தேவரீர் என்ன சொன்னாலும் அதை உடன்பட்டு உடனே நடத்தி வைக்கக் காத்திருப்பவராய் இருக்கின்றார். அதனால் தேவரீருக்கோ, உம்மைச் சார்ந்த இராமானுசனுடையார்களை பாபங்களிலிருந்து விடுவித்தல் என்பது இயலுவதாய் இருக்கிறது.

*
பதினெட்டாவது சுலோகம்

காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி
பாபக்ரியஸ்ய சரணம் பகவத்க்ஷமைவ |
ஸாசத்வயைவ கமலாரமணேர்த்திதாயத்
க்ஷேமஸ்ஸ ஏவ ஹி யதீந்த்ர பவச்ஸ்ரீதாநாம் ||

*
கடந்த காலம் நிகழ்காலம் இனிவருங்காலம் என்னும் முக்காலத்தும், மனம், சொல், சரீரம் என்னும் மூன்றுவழியாலும் செய்பாபங்களான பழித்தன செய்தல், பகவதபசாரம், பொறுக்கொணா குற்றங்கள் என்பனவற்றை உடையோருக்கு அந்த பகவானின் குணமான ‘குற்றங்களைப் பொறுத்தல்’ என்னும் க்ஷமை என்னும் அருங்குணம் அல்லவோ ரக்ஷணமாக இருப்பது! அந்த க்ஷமை அல்லவோ தேவரீராலே திருமகள் கொழுநனிடத்தில் ‘மநோவாக்காயை:..’ என்னும் வாக்கியங்களாலே ப்ரார்த்திக்கப்பட்டதும் என்ற இந்த யாதொன்று உண்டோ அதுதான் தேவரீரைப் புகலாக அண்டியவர்களுக்கு, கவலையெல்லாம் விட்டு நிம்மதியாக இருக்கத்தக்கக் காப்பு ஆக இருப்பது!

*
பத்தொன்பதாவது சுலோகம்

நிறைவு செய்யும் இரண்டு சுலோகங்களான 19,20 ஆல் எம்பெருமானார் திருவடிகளில் ஸேவையாகிற பரமப்ராப்யம் தினம் வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்றும், அதற்குத் தடையான உலக விஷயப் பற்று முதலியவை நசிக்க வேண்டும் என்றும், இந்த ப்ரார்த்தனை ரூபமான தமது பிரபந்தத்தை ஆதரத்துடன் யதிராஜர் அங்கீகரித்தருள வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து யதிராஜ விம்சதியைத் தலைக்கட்டுகிறார் பெரிய ஜீயர் என்று போற்றப்படும் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள்.

ஸ்ரீமந்யதீந்த்ர தவதிவ்ய பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீசைலநாத கருணா பரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தய நாததஸ்யா:
காமம் விருத்தம் அகிலஞ்ச நிவர்த்தயத்வம் ||

*
பகவத் கைங்கரியமாகிற செல்வம் மன்னும் யதீந்த்ரரே! தேவரீருடைய திவ்யமான பதகமலங்களில் தொண்டு செய்தல் ஆகிய பாக்கியத்தை அடியேனுடைய குருநாதரான ஸ்ரீசைலநாதர் என்னும் திருவாய்மொழிப் பிள்ளையானவர் தாமே உகந்து தமது கருணையினால் அன்றோ எனக்கு உபதேசம் செய்து உள்ளத்தில் பதிய வைத்து அனுக்ரஹித்தார். அந்த குருகிருபையால் கிடைத்த தங்கள் திருவடிகளில் தொண்டு என்பது எனக்கு நித்யம் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அதற்குத் தடையாகித் தொக்கியலும் ஊழ்வினைகளைத் தேவரீர்தான் போக்கியருள வேண்டும்.

*
இருபதாவது சுலோகம்

விஜ்ஞாபநம் யதிதம் அத்யது மாமகீநம்
அங்கீகுருஷ்வ யதிராஜ தயாம்பு ராசே |
அஜ்ஞோயம் ஆத்மகுணலேச விவர்ஜிதச்ச
தஸ்மாத் அநந்யசரணோ பவதீதிமத்வா ||

பிறர் துக்கம் கண்டு துக்கித்தல் ஆகிய தயை என்னும் அருங்குணத்துக்குக் கடலாக இருப்பவரே! யதிராஜரே! இதுகால் அடியேன் தேவரீர் திருவடிகளிலே பிரார்த்தித்துக்கொண்ட இந்த ஹ்ருதய பூர்வமான வேண்டுகோளை அங்கீகரித்தருள வேண்டும். ’தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள ஞானம் இல்லாதவன், சாதுக்கள் இவனை ஏற்றுக்கொள்ளத் தக்க ஆத்மகுணங்கள் ஏதும் இல்லாதவன்; அதனாலேயே நம்முடைய அடைக்கலம் தவிர புகல் வேறு எதுவும் அற்றவன்’ என்று என்பால் கிருபை கொண்டு அங்கீகரித்தருள வேண்டும், கருணையங்கடலே!

***

இத்துடன் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் அருளிச்செய்ததான யதிராஜ விம்சதி என்னும் அருமையான சுலோக ரத்தினம் முடிவுற்றது. இருபதே சுலோகங்களில் என்னைப் போன்ற முருடு பாறையான, குயுக்திகள் நிறைந்த, வன்மங்கள் சூழ்ந்த நெஞ்சையும் நீராய்க் கரைக்கவல்லது இந்த பிரபந்தம். காரணம், பெரிய ஜீயரின் வித்வத் மேன்மை அன்று. பெரும் வித்வத் பெருமைகள் கொண்டவர் தாம் எனினும், இங்கு தம்மை ‘கெட்டொழிந்த ஜீவன் ஒன்று மீண்டும் உய்வதற்கு வேட்கும் நிலையில்’தான் தம்முடைய கவிதாபாவத்தை இங்கு கொண்டுள்ளார். அதுவும் ஏதோ பிரபந்தம் இயற்ற வேண்டிச் செய்தது என்றிராமல், அவருடைய இதயம் தம்பால் உள்ள அத்தனை சிறப்புகளையும் மறந்து, எதையும் இருப்பதாகவே கருதாமல், அத்தனை துர்குணங்களுக்கும் இடமாகத் தம்மை எண்ணி, நெஞ்சம் அயிர்த்து அந்த நடுக்கத்தில் எழும் இதய அலறலாகத்தான் எழுதியிருக்கிறார்.

இப்படி ஆன்மிக வழியில் பெரும் நிலையடைந்த மகான்கள் தம்மை இவ்வாறு மிகவும் தண்ணியவர்களாகக் கருதிப் பாடுவது என்பது ஒரு நிலையாகும். நற்கதி அடையத் துடிக்கும் ஜீவர்கள் அனைவருடைய ஏக்கக் குரலும் அதுகால் அவர்களின் ஹ்ருதய தாபத்தோடு சேர்ந்து கொண்டு வெளிப்படும். அவர்களிடம் கேட்டால் தாம் பிறருக்காகச் சொன்ன வார்த்தைகள் அல்ல அவை; தம்முடைய தண்ணிய நிலையைத்தான் பாடியதாகக் கூறுவர். ஆனால் அவர்களிடத்தே அரும் பெரும் ஆத்ம குணங்கள் அன்றி வேறு எதுவும் இரா. இருந்தாலும் இத்தகைய தன்னிரங்கல் மனநிலை ஏன் அருளாளர்களிடத்தில் ஏற்படுகிறது, தம்மிடம் இல்லாத தோஷங்களை ஏன் இவ்வாறு தம்மிடம் உள்ளதாகப் பாட வேண்டும் என்பது ஒருவகையில் புதிர்தான்.

ஆனால் ஆன்மிக வழியில் போகும் வாழ்வு என்பது உலகியல் வாழ்வைப் போன்ற காரணிகளால் இயங்குவதன்று. உலகியல் வாழ்வு இயங்குவதற்கான நோக்கங்கள் மட்டுமே அறிந்த நாம் ஆன்மிக வாழ்வு இயங்குவதற்கும் அதேதான் நோக்கங்கள் என்று மயங்கித் தவறான பல கருத்தாக்கங்களைக் கொள்கிறோம். ஆன்மிக வாழ்வு என்பது இருக்கட்டும். சாதாரணமான நாம் அறிந்த வாழ்விலேயே, மனநிலை பிறழ்ந்தவர்களின் இயங்கு காரணங்களே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்கு ஒரு பெரும் விஞ்ஞானத் துறையே வேண்டியிருக்கிறது ‘பிதிர்மனநிலை உள இயல்’ என்று. அந்தத் துறையில் கூறும் கருத்துகள் சாதாரண நிலையில் உள்ளவர்களால் உண்மை என்று கூட நம்ப முடியாது. ஆனால் அந்தக் கருத்துகள்தாம் விஞ்ஞான பூர்வமான சத்யங்கள். இதை நாம் நன்கு நினைவில் கொண்டால், அன்றாட வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான ஆன்மிக வாழ்வு என்பதனுடைய அவஸ்தைகள் நம் கணக்குகளில் வராத ஒன்று என்பதாவது புரியும். ஆன்மிக மனநிலை என்பது ஒரு தனி வாழ்முறை. அதை ‘பிறழ்ந்த மனநிலை’ என்று கொண்டாலும், அது சரியில்லை என்ற போதிலும், சாதாரண வாழ்க்கை முறையின் கணக்கில் வராத ஒன்று என்ற அளவிற்காவது புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே ஆன்மிக ஈடுபாடுகள் கொண்டவர்களுக்கு ஓரளவு இது புரியும். மற்றவர்கள் இப்படி ஒன்று இருக்கிறது என்று புரிந்து கொண்டாலே ஆன்மிகம் புரியத் தொடங்கும்.

எவ்வாறு ஆயினும் இத்தகைய அருள் நிலை சுய இரங்கல் என்னும் நைச்சியாநுசந்தானம் என்பதை இந்த அளவிற்கு உள்ளத்துணர்ச்சிகளை எல்லாம் பெய்து எழுதப்பட்ட பாடல்கள் மிக மிக அரிதே எனலாம். நான் பார்த்தவற்றில் இதைத்தவிர இந்த அளவிற்கு இன்னும் ஒன்றைக் கண்டிலேன். பெரிய ஜீயரின் பெருமை விளங்குவதாகுக!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

யதிராஜ விம்சதி - முதல் பகுதி (1 - 10)

யதிராஜ விம்சதி - ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள்
(இதற்கு அரிய உரை எழுதி உதவியவர் ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் அவர்கள்)

யதி என்ற சொல் துறவியைக் குறிக்கும். இந்திரியங்களின் விஷயங்களில் நிராசையும், அலட்சியமும் கொண்டவர்கள் யதிகள். காமக்ரோத வியுக்தாநாம் யதீநாம் யத சேதஸாம் - என்பது கீதை. யதிகளுக்கெல்லாம் ராஜர் என்பவர், துறவு என்னும் பற்றின்மை என்பதில் மற்றவர்கள் எல்லாம் யாரைப் பார்த்து, யாரைப் பற்றி நினைப்பதாலேயே தமக்கும் துறவு மனப்பான்மை வரப்பெறுகிறார்களோ அத்தகையோர் யதிராஜர் எனலாம். யதிராஜர் என்பது ஸ்ரீராமாநுஜருக்கு அமைந்த காரணப் பெயர். ஸ்ரீராமாநுஜர் காலத்திற்குப் பிறகு பல ஆசாரியர்கள் வந்தாலும், ஸ்ரீராமாநுஜரே மீண்டும் அவதரித்தாரோ என்று வைணவர்கள் வியந்து போற்றும் வண்ணம் தோன்றிய ஆசாரியர் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள். இவரது முழுப்பெயர் ஸ்ரீஅழகியமணவாள மஹாமுனிகள் என்பது. இவருக்கு ஆசாரியராக அமைந்து, இவரை ஸ்ரீராமாநுஜரின் அளக்கலாகா ஒண்பெருமையை உணரப் பண்ணியவர் திருவாய்மொழிப் பிள்ளை அவர்கள். திருவாய்மொழியில் மிகுந்த ஈடுபாடு காரணமாக, அந்த நம்மாழ்வாரின் அருளிச்செயலின் பெயரை இட்டே அவருக்கு திருவாய்மொழிப்பிள்ளை என்று பெயர் ஏற்பட்டது. தம் ஆசாரியரிடமிருந்து தாம் பெற்ற ஸ்ரீராமாநுஜ பக்தியை தம்முள் புறவெள்ளமிட, படிக்கும் நம் கண்கள் எல்லாம் குளமாக, நாம் நம்மைப்பற்றி நினைக்க வேண்டிய துர்நிலையைத் தம்மிடம் இருப்பது போன்று அநுகாரம் செய்து பரிதபித்துப் பாசுரம் இடுகிறார் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள். விம்சதி என்பது இருபது என்னும் எண் பெயர். யதிராஜ விம்சதி என்பது 20 சுலோகங்களால் ஸ்ரீராமாநுஜரைக் குறித்து ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் வடமொழியில் பாடியருளிய பிரபந்தம்.

ஸ்ரீராமாநுஜரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள இதைவிடப் பொருத்தமான வார்த்தைகள் என் விஷயத்தில் இல்லை எனலாம். மூல சுலோகத்தையும், கூடவே என் மொழிபெயர்ப்புடன் கூடிய விளக்கத்தையும் தருகிறேன்.

*
முதல் சுலோகம்:

ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா
ப்ரேமாவிலாசய பராங்குச பாதபக்தம் |
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாஸ்ரீதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா ||

’அடிமை செய்வார் திருமாலுக்கு’ என்று நம்மாழ்வார் கூறியபடியே திருமகள் கேள்வன் பதமலர் இணைகளில் ஆழ்ந்ததும் நித்யமானதுமான தொண்டையே தமது புறம்பொசிந்த பக்தியின் வேட்கையாய்க் கொண்ட நம்மாழ்வாரின் பாதங்களில் அவரத்தனை பக்தி கொண்டவர் ஸ்ரீராமாநுஜன் என்னும் யதிராஜர். அந்த ஸ்ரீராமாநுஜரோ தமது திருவடிகளை அடைந்த அடியார்களிடத்தில் பகவத் பக்திக்கும், கைங்கரியத்துக்கும் இடையூறாக இருக்கும் காமம் முதலிய குற்றங்களைத் தமது கடைக்கண் நோக்கினாலேயே அழித்துவிடும் அருளாளர். அத்தகைய யதிபதியானவரை எனது அனைத்துப் பொறுப்புகளையும் அவரிடம் தந்துவிடுவதைக் குறிக்கும்வகையில் என் தலையினால் வணங்குகிறேன்.

*
இரண்டாவது சுலோகம்:

ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜஹம்ஸம்
ஸ்ரீமத்பராங்குச பதாம்புஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிந்ஹ சரணம் யதிராஜமீடே ||

*
‘பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமாநுசன்’ என்பதற்கேற்ப திருவரங்கநாதனது சரண பத்மங்களில் நித்ய வாசம் செய்யும் அரச அன்னம் போன்றவரும், பகவானாலும் முடியாது கைகழிந்த சம்சாரிகளைத் தமது செஞ்சொல் கவிகளால் தலைவணக்கி வைணவ கோஷ்டியில் சேர்க்கின்ற மாபெரும் கைங்கரியச் செல்வம் நிறைந்த பராங்குசரின் பாதாரவிந்தங்களில் திருவாய்மொழியெனும் மதுவைத் துய்க்கும் அறுகாலச் சிறைவண்டானவரும் ஸ்ரீராமாநுஜரே ஆவார். தமது அருட்பொழிவால் பெருந்திரளாக ஸ்ரீவைஷ்ணவர்களைப் பொலியச் செய்வதால் பெரியாழ்வாரின் முக மலர்த்திக்கும், திவ்ய தேசங்களை என்றைக்கும் மாறாமல் திருத்தி வைப்பதால் திருமங்கையாழ்வாரின் முகமலர்த்திக்கும் ஸ்ரீராமாநுஜர் இலக்காகிறார். ஸ்ரீவத்ஸசின்ஹர் எனப்படும் கூரத்தாழ்வானுக்கு அனைத்துமான புகலிடம் ஆனவரும் ஸ்ரீராமாநுஜரே. அத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீராமாநுஜரை என் திருப்திக்காக ஏற்றித் தொழுகிறேன்.

*
மூன்றாவது சுலோகம்:

வாசாயதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதாரவிந்த யுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாத குருகேச முகாத்ய பும்ஸாம்
பாதாநுசிந்தந பரஸ்ஸததம் பவேயம் ||

*

யதீந்திரரே! வாக்கு, உடல், மனம் ஆகிய திரிகரணங்களாலும் பகவானை வணங்க வேண்டும் என்ற நியதியிலும் உன்னதமாக, அந்தப் பகவத் தத்துவத்தை உள்ளபடிக் காட்டிக் கொடுத்த ஆசாரியர் விஷயத்தில் திரிவித கரணங்களாலும் வணங்குபவர்களாய் உங்களுடைய பாதாரவிந்தங்களை அநவரதம் பஜிக்கின்றனர் கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான் பிள்ளான் போன்ற பூர்வாசாரியர்கள். எனக்கோ அந்த உத்தமர்களின் பாதாரவிந்தங்களில் அத்தகைய திருவடி தொழுதல் இடைவிடாமல் ஏற்பட அருள்வீராக!

*
நான்காவது சுலோகம்:

நித்யம் யதீந்த்ர தவ திவ்ய வபு: ஸ்ம்ருதௌ மே
ஸக்தம் மநோபவது வாக் குணகீர்த்தநேஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்யகரணே துகரத்வயஸ்ய
வ்ருத்த்யந்தரேஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச ||

*
உலக விஷயங்களில் மண்டிக் கிடந்த என் மனமானது, ‘உன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலேன்’ என்னும்படியாக தியாநத்துக்கு சுபாச்ரயமான தேவரீருடைய திவ்யமங்கள விக்ரஹத்திலேயே தோய்ந்து அமிழ வேண்டும். உலகின் அல்ப சாரங்களைப் பற்றியே பேசிப் போந்த என் வாக்கானது தேவரீருடைய கல்யாண குணங்களையே வாய்வெருவி நிற்க வேண்டும். உலக சுகங்களுக்காக எவ்வித இழிந்த சேவையையும் செய்யத் துணிந்த என் இரு கைகள் தேவரீருடைய திருப்பாதங்களுக்கே ஆன கைங்கரியங்கள் அனைத்தும் செய்வதிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும். பண்டை வாழ்க்கையைத் தவிர்ந்தாலன்றி, போன செயல்களிலிருந்தும் முகம் மாறினாலன்றி, தேவரீரிடத்தில் ஈடுபாடானது நிலைநிற்க மாட்டாதாகையாலே பண்டை வழிகளின் வாசனைகளையும் தேவரீரே பாற்றியருள வேண்டும்.

*
ஐந்தாவது சுலோகம்

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த
நிஷடாம் மமாத்ரவிதராத்ய யதீந்த்ரநாத |
சிஷ்டாக்ரகண்யஜந ஸேவ்யபவத்பதாப்ஜே
ஹ்ருஷ்டாஸ்துநித்யம் அநுபூய மமாஸ்யபுத்தி: ||

*
திருவெட்டெழுத்து என்னும் மந்திரராஜம் என்பதினுடைய மூன்று அறுதியிட்ட அர்த்தங்களான பாகவதரிடத்தில் சேஷத்வம், பாகவதர்களையே சரண் ஆகக் கொள்ளுதல் என்னும் பாகவத சரணத்வம், அடியார்களுக்கே உகந்தவனாக இருக்குமதான பாகவத போக்யத்வம் என்னும் மூன்றும், ‘நின் திருவெட்டெழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கடிமை’ என்னுமாப்போலே எனக்கு இங்கேயே விரைவில் தந்தருள வேண்டும். இந்தப் பரமார்த்தத்தைத் தம் வாழ்விலே எப்பொழுதும் அநுஷ்டித்த சிஷ்டர்களில் முதன்மை பெற்றவர்களான கூரத்தாழ்வான் போன்றவர்களால் சேவிக்கப்பட்ட தேவரீருடைய திருவடித்தாமரைகளில், ‘உனதடிப் போதில் ஒண்சீராம் தெளிதேன் உண்டமர்ந்திட வேண்டி நின்பால் அதுவே போந்தது என் நெஞ்சென்னும் பொன்வண்டு’ என்பதைப் போல் என் புத்தியானது என்றும் பொருந்தி இன்புற்றிட வேண்டும்.

*
ஆறாவது சுலோகம்

அல்பாபிமேந பவதீய பதாப்ஜ பக்தி:
சப்தாதிபோக ருசிரந்வஹமேததேஹா |
மத்பாபமேவ ஹிநிதாநமமுஷ்யநாந்யத்
தத்வாரயார்ய யதிராஜ தயைகஸிந்தோ ||

*
ஞானம் குணம் முதலிய ஆசிரியத் தன்மைகளால் நிறைந்த யதிராஜரே! தங்கள் திருவடித் தாமரைகளில் பக்தியானது எனக்கு லவலேசமும் இல்லை என்று தெரிகிறது. ஆனால் சப்தாதி உலக விஷயங்களில் ருசியானது நாளுக்கு நாள் மேன்மேலென வளர்ந்து கொண்டே போகின்றது. இந்த முரண்பாடான நிலைமைக்குக் காரணம் என்ன என்று யோசித்தால் நிச்சயம் தங்கள் அருளின்மையோ அல்லது தங்களால் இதை என்னிடம் நிவர்த்திக்க முடியாது என்பது ஒன்றும் இல்லை. நிச்சயம் இது என்னுடைய பாபத்தினால் என்னுடைய முன்வினைப் பயன்களின் விளைவேயாகும். இதிலிருந்து நான் விடுபட்டு, தங்கள் திருவடிகளில் பக்தி கொள்ள வேண்டும் எனில் நிச்சயம் அது தங்களுடைய தயையினால் மாத்திரமே சாத்தியம் ஆகும், தயை அலையெறியும் கடலாக இருப்பவரே !

*
ஏழாவது சுலோகம்

வ்ருத்த்யா பசுர் நரவபுஸ்த்வஹம் ஈத்ருசோபி
ச்ருத்யாதிஸித்த நிகிலாத்ம குணாச்ரயோயம் |
இத்யாதரேண க்ருதிநோபி மித: ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சநபரோத்ர யதீந்த்ரவர்த்தே ||

*
வாழ்க்கையின் நடவடிக்கைகளில் பார்த்தால் ஒரு விலங்குக்கு ஒப்பாகவும், உருவத்தைப் பார்த்தால் மனிதரைப் போன்றும் வளையவரும் இப்படிப்பட்ட என்னுடைய வஞ்சக நடத்தையோ என்றால் பெரும் ஞானம் குணம் ஆகியவற்றால் நிறைந்தோரும் கூட என்னைப் பார்த்து, ‘இவரைப் போல சாத்திரங்களில் சொல்லியுள்ள ஆத்ம குணங்களால் நிறைந்தவர் உண்டுகொல்!’ என்று தமக்குள்ளே மாறி மாறிப் புகழும் அளவிற்கு, இப்பொழுதும், தேவரீரை ஸ்துதி செய்யும் இந்த நேரத்திலும் கூட, வஞ்சித்துத் திரிகின்றேன் யதீந்திரரே !


*
எட்டாவது சுலோகம்

துக்காவஹோஹம் அநிசம் தவ துஷ்ட சேஷ்ட:
சப்தாதிபோக நிரதச் சரணாகதாக்ய: |
த்வத்பாதபக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே
மித்யாசராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க: ||

*

கெடுதியான நடவடிக்கைகள் கொண்டவனாய், சப்தாதி உலக விஷயங்களிலேயே தோய்ந்தவனாய், ஆனால் பெயருக்கு மாத்திரம் தங்கள் திருவடிகளில் சரணம் அடைந்தவன் என்று சொல்லும்படியாக நானோ தேவரீருக்கு எப்பொழுதும், (கைவிடுவதா, காப்பதா என்று நிச்சயிக்கப் போகாதவாறு), துக்கத்தைத் தருபவனாகவே இருந்து வருகிறேன். (ஆனால் அத்தோடு போயிற்றா!) தேவரீருடைய திருவடிகளில் சிறிதும் செயற்கையற்ற இயற்கையான பக்தி பூண்ட உத்தம சிஷ்டர்களுக்கு மத்தியில், தங்கள் திருவடிகளில் பக்தியே உருவானவர் அன்றோ இவர் என்று அவர்களே கருதும் அளவிற்கு ஏமாற்றித் திரியும் பொய்நடை மிக்க மூர்க்கனாய் அன்றோ நான் இருப்பது, யதிராஜா !

*
ஒன்பதாவது சுலோகம்

நித்யம் த்வஹம் பரிபவாமி குருஞ்ச மந்த்ரம்
தத்தேவதாமபிநகிஞ்சித் அஹோ பிபேமி |
இத்தம் சடோப்ய சடவத் பவதீய ஸங்கே
ஹ்ருஷ்டச்சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க: ||

*

யதிராஜரே! தினமும் நான் திருவெட்டெழுத்தை உபதேசித்த குருவையும், அந்த பெரிய திருமந்திரத்தையும், அந்த மந்த்ரத்தின் தெய்வமான எம்பெருமானையும் அவமரியாதை செய்துகொண்டே சிறிதும் பயமற்றவனாய் இருக்கின்றேன். அந்தோ! இப்படிப் பட்ட துர்நடத்தை உடையவனாக இருந்தும் தேவரீருடைய அடியார்களின் திரளில் ‘குரு, மந்த்ரம், தெய்வம்’ ஆகியவற்றில் இவனைப் போல பக்தியுடையார் எவருமிலர்’ என்று பிறர் கருதுமளவிற்கு சந்தோஷம் புறவெள்ளமிட சஞ்சரிக்கின்றேன் அன்றோ! அதனால் மூர்க்கனாய் அன்றோ இருக்கின்றேன் நான்.!

*
பத்தாவது சுலோகம்

ஹாஹந்தஹந்த மநஸா க்ரியயாச வாசா
யோஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத் வதேவம்
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க: ||

*

ஐயோ கஷ்டம் கஷ்டம் கஷ்டம்! பகவான், பாகவதர், ஆசாரியன் ஆகியோர் விஷயத்தில் மனத்தால், வாக்கால், உடலால் கைங்கரியங்கள் செய்து உய்வடைவதற்காக ஏற்பட்ட மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் நானோ அதற்கு எதிரிடையாக அபசாரங்களே எப்பொழுதும் மூவர் திறத்தும் செய்து போருகிறேனே! ஆத்ம ஸ்வரூபத்துக்குச் சேர கைங்கரியம் என்னும் பெரும் பேறு அடைந்து இந்த ஜீவர்கள் உய்ய வேண்டும் என்று அநவரதம் அதற்கு ஆவனவெல்லாம் அரும்பாடுபட்டுச் செய்து போரும் தேவரீருக்கு மிகவும் அநிஷ்டமாக அன்றோ என் மனமும், சொல்லும், செயலும் வர்த்திக்கிறது! ஆனாலும் யதிராஜரே! தேவரீருமே கூட என் விஷயத்தில் பார்த்து, ‘பகவத் பாகவத் ஆசார்ய விஷயங்களில் இவனத்தனை பிரேமம் உடையாரோ, கைங்கரிய ருசியுடையாரோ இல்லை அன்றோ!’ என்று உகந்து நினைக்கும் வண்ணம் வஞ்சித்துமன்றோ நடந்து கொள்கிறேன்! என்ன மூர்க்கத்தனம்! ஐயோ!

*

(ஸ்ரீரங்கம் மோகனரங்கன்)

Wednesday, January 29, 2020

கப்பல் கோவை

சாதாரணமாக, பண்டைய செய்யுள் வகைகளைப் பற்றிக் கேள்விப் பட்டவர்கள், சிற்றிலக்கிய வகைகளை அறிந்தவர்களுக்குக் கோவை என்றால் என்ன என்று தெரிந்திருக்கும். கோவை என்றால் ஒன்றும் குழப்பம் இல்லை. கோக்கப்படுவது கோவை. ஆந்தாலஜி, கலக்ஷன் என்று சொல்லலாம். ஆனால் வெறுமனே எதையாவது கோத்ததா என்றால் இல்லை. தொல்காப்பியத்தில் அகத்துறைச் செய்திகள் கைக்கிளை தொடங்கி, காட்சி நலம் உரைத்தல் ஆரம்பமாக பல நிலைகள். ஆண், பெண் இருவரும் வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் இரண்டு பேரும் உயிருக்கு உயிராகக் காதல் பூண்டு விடுவதைத்தான் சங்கப் புலவர் ஆழ்ந்து ஆய்ந்து நோக்கி ஓர் இயலாகவே ஆக்கி வைத்துள்ளனர், அகத்திணை என்று. அதாவது வாழ்க்கையையே இனிமை ஆக்கும் விஷயம் எது? தன் உள்ளம் கவர்ந்த காதல், உயிர்க்காதல், இதுதான் இந்த மற்றபடி பல கஷ்டங்கள் சோகங்கள் நிறைந்த மனித வாழ்வை 'இனிமை' என்று ஆக்குவதே. இந்த இனிமைக்கு ஓர் இயல் என்று சொன்னால், ஆணும் பெண்ணும் உள்ளம் கலந்து அவர்க்கு இடையிலான இலட்சியக் காதலை அன்பின் ஐந்திணையாக, ஆருயிர்க் காதலுக்கு இலக்கணமாக, அகத்திணை என்று இயலே இருக்கிறது. இறையனார் களவியல் உரையில், "இந்நூல் என் நுதிலிற்றோ எனின் தமிழ் நுதலியதென்பது" என்று அகத்திணை இலக்கணம் சொல்ல வந்த ஒரு நூலை உரை இந்த நூல் தமிழ் நுதலிற்று என்று 5-6ஆம் நூற் இல் அறிமுகப் படுத்துகிறது. தொல்காப்பியம் இந்த மனித வாழ்வின் இன்பம் ஆகிய அகத்திணை என்னும் தமிழைப் பல்துறைகளால் வகுத்து வைத்தது. ஆயினும் இலக்கணம். சூத்திரம். நூற்பா உணர்த்தும் கருத்தை உள்ளவாறு புரிந்து கொண்டாலும் இலக்கணமும், இலக்கியமும் ஒருங்கே நடைபெற வேண்டும் என்று விழையும் ஓர் ஆசிரியர் அந்தத் துறைகளை எல்லாம் ஒருங்கு படுத்தி ஓர் உள இயல் மாற்றத்து படிநிலை எழுச்சியாக அமைத்து சுமார் 400 கட்டளைக் கலித்துறைகளால் ஆனதாக அமைத்தால் அதுவே கோவை ஆனது.

வச்சணந்தி மாலை இதனை, 'ஆய்ந்த கலித்துறைதான் நானூ றகப்பொருண்மேல் வாய்ந்த நற்கோவை மற்றுரைப்பின்' என்று வெளிப்படுத்தும். பன்னிருபாட்டியலோ, 'கோவை என்பது கூறுங்காலை, மேவிய கற்பு களவெனுங் கிளவி, ஐந்திணை திரிய, அகப்பொருள் தழீஇ, முந்திய கலித்துறை நானூறென்ப.' என்று கூறும். இவ்வாறு புலவர்கள் அகப்பொருள் துறைகளை, முதலில் காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் காணும் வாய்ப்பு தொடங்கிப் பின்னர் மணப்பேறு வரை பல துறைகளாகப் பாடுவது அக்காலத்து செய்யுள் மரபில் அமைத்துப் பாடுவது மரபு. இதனை ஆன்மிக உள்ளீடு பொதியப் பாடிய திருக்கோவையாரில் நூலுக்கே கோவை என்று திருத்தமுறப் பெயரே அமைந்து விட்டது. அங்ஙனமே திருமால் காதல் பொதிய நம்மாழ்வார் பாடிய திருவிருத்தம் கோவை இலக்கணம் கொண்டது. தெய்வங்களைக் குறித்து கோவைகள் பாடப்பட்டது ஒரு வகை என்றால் நல்ல குணங்கள் பொருந்திய இறையாண்மை கொண்ட மனிதர்களைக் குறித்தும் கோவைகள் பாடப்பட்டன. இதில் பாண்டிக் கோவை பழமை மிக்கது என்பர். இந்தக் கோவை இலக்கணமே மேலும் நன்கு செவ்வை உற்று களவியல், வரைவியல், கற்பியல் என்று தெள்ளெனப் பகுப்புண்டு அமைந்த வகையை நாம் தஞ்சைவாணன் கோவை, அம்பிகாபதிக் கோவை ஆகிய கோவை நூல்களில் காணலாம். நான் சொல்ல வந்தது இவ்விதம் மிகத் திருத்தமான வடிவை அடையாத கோவை இலக்கணம் கொண்டு பாடப்பட்ட, மனிதரைப் பாடிய கோவை நூல் ஒன்று. பழம் கோவை நூல்கள் என்ற கணக்கில் சேருவது. 13ஆம் நூற் ஐச் சேர்ந்தது. கப்பல் கோவை என்னும் பெயரினது.

அது என்ன கப்பல்? இந்நூலின் பாட்டுடைத் தலைவன் கருமாணிக்கன் என்னும் பெயரினன். பாண்டி மண்டலத்தில் ஒரு பகுதியாய் இருந்ததும், இப்பொழுது புதுக்கோட்டையைச் சேர்ந்ததுமான கப்பலூர், துவரங்குறிச்சி ஆகிய ஊர்கள் கொண்ட பரப்பை ஆண்டவன். குறுநில மன்னன். பாண்டிநாட்டு படைத்தலைவனாகவும் அமைச்சனாகவும் இருந்து, கல்வி கேள்விகளிலும், அருங்கலைகளிலும் மிக்க கீர்த்தி கொண்டவன். யாதவர் குலச்செம்மல். வைணவ சமயத்தினன். துளவம், முல்லை, குவளை ஆகியவற்றைத் தன் குல மாலையாகவும், போர் மாலையாகவும் கொண்டவன். திருமாலின் அவதாரச் செயல்கள் பலவற்றை இந்த நூல் இக்குறுநில மன்னனுக்கு ஏற்றிப் பாடுகிறது. தென்னிந்திய சாஸனம் வால்யூம் 4,112 இவனை, 'முத்தூர்க் கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர்க் கருமாணிக்காழ்வான்' என்று குறிப்பிடுகிறது. ஜடாவர்ம சுந்தரபாண்டியன், ஜடாவர்ம வீரபாண்டியன், மாறவர்ம குலசேகரன் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் இருந்தவன் இவன். 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவை நூல். பாடப்பட்டவரின் பெயர் தெரிந்தாலும், பாடியவர் யார் என்று தெரியாமல் போனது வருத்தத்திற்குரியது. ஆனாலும் நூலின் ஆசிரியர் பண்டைத் தமிழ் நூல்களில் துறை போய ஞானம் மிக்கவர் என்பது தெள்ளிய இன்பம் மிக்க அவர்தம் பாடல்களில் தெற்றெனப் புலனாகிறது. இந்த அரும் நூலைக் கிடைத்த சில பிரதிகள் கொண்டும், டாக்டர் உ வே சா அவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் கொண்டும், மேலும் பல ஆய்வுகள் செய்தும் திரு எல் ஸ்ரீநிவாசய்யர் என்பார் பதிப்பாசிரியராக மெட்ராஸ் கவர்ன்மெண்டு ஓரியண்டல் சீரீஸ் 1958ல் கொண்டு வந்துள்ளது.

கப்பல் கோவை என்னும் இந்நூல் 30 துறைகளில் காதலம் வாழ்வின் எழுச்சியை அமைக்கிறது. கைக்கிளை, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கிமதியுடன்பாடு, பாங்கியிற்கூட்டம், ஒருசார் பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி, இரவுக்குறி இடையீடு, வரைதல் வேட்கை, வரைவுகடாதல், ஒருவழித்தணத்தல், வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல், வரைவு மலிவு, அறத்தொடுநிற்றல், உடன்போக்கு, கற்பொடுபுணர்ந்த கவ்வை, மீட்சி, தன்மனைவரைதல், உடன்போக்கு இடையீடு, வரைதல், இல்வாழ்க்கை, பரத்தையிற்பிரிவு, ஓதற்பிரிவு, காவற்பிரிவு, பகைதணி வினைப்பிரிவு, உற்றுழிப்பிரிவு, பொருள்வயிற்பிரிவு, துறவறம்.

முதலில் கைக்கிளை என்பதை எடுத்துக் கொள்வோம். இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து மனம் கலந்து பழகும் உறவுதான் உள்ளபடியான அன்பு. இனித்தான் நேருறக் காணப் போகின்றனர்; நெஞ்சும் மாறிப்புக்கப் போகின்றனர் என்றால் காதலர்பால் உள்ளது கைக்கிளை. கைக்கிளையின் போது என்ன உணர்ச்சிகள் இருக்கும். காட்சியை வியப்பார்; ஐயம் கொள்வார் - இப்படி இந்த மனநிலைகளைத்தான் கைக்கிளை என்னும் துறை பாடும். இது போல் மற்ற துறைகள்.

முதலில் கண்டவர் பாடுகிறார் – காட்சி

சீர்தங்கு பங்கயம் கொண்டல்
பொற்கோங்கு அலர் செங்குமுதம்
கூர்தங்கு முல்லை குமிழ்நெய்தல்
பூத்து ஒரு கொம்புசெம்பொன்
கார்தங்கு செங்கரத்தான்
கருமாணிக்கன் கப்பல் என்னும்
ஊர்தங்கு சோலையின்கண்
ஒருகாலத்து ஒளிர்கின்றதே.

பொருப்போ? கருங்கடலோ? பொழி
லோ? உயர்பொன்னுலகோ?
விருப்பொடு பன்னக மேவுல
கோ? விரைநாண்மலரோ?
சுருப்பொடு மேவுதண் தார்த்தொண்டை
மான் கப்பல் சூழ்சிலம்பின்
மருப்போ? எனும் தனவல்லி,அன்
னாருக்கு வாழ்பதியே!

பழகிய பின் பெற்றாரை வாழ்த்துகிறான்:

கந்தார் கட களிற்றான் கரு
மாணிக்கன் கப்பல் வெற்பில்
வந்து ஆவி பெற்று மகிழும் நெஞ்
சே! வளமாய் உனக்குச்
சிந்தாமணியைத் தெவிட்டா
அமுதைத் திருவை இங்ஙன்
தந்தார் இருக்க என்னோ சல
ராசி தவம் பெற்றதே.

கலித்தொகை காட்டும் காட்சி போன்று வழியில் முக்கோல் பகவர்களைப் பார்க்கிறாள் செவிலித்தாய். திரிதண்டம் தாங்கி, முந்நூல் அணிந்து, செம்மை ஆடையும், திருமால் நெறியும் மிக்கார் எதிர்வரக் கேட்கிறாள்

குடையும் கரகமும் தோலும் முந்
நூலும் முக்கோலும் செம்மை
உடையும் தரித்து ஒல்கி முன்வரு
வீர்! கடல் உள் அமையக்
கடையும் புயல் தொண்டைமான் கரு
மாணிக்கன் கப்பல் வெற்பில்
விடையும் புணர்துணையும் வந்த
தோ இந்த வெஞ்சுரத்தே?

முக்கோல் பகவர் அவளைத் தெருட்டுகின்றனர்.

கற்று ஆயரில் வளர்ந்தோன் கரு
மாணிக்கன் கப்பல் மன்னன்
பொற்றாள் முளரி பொருந்தலர்
போலப் புகை எழும் தீ
வற்றாத வெஞ்சுரம் வந்தது
நீ மடவாய்! மகவைப்
பெற்றாயும் இல்லைப் பிறந்தாயும்
இல்லை ஓர் பெண் வயிற்றே!

பாடல் 391ல் ஒரு சரித்திரச் செய்தி உள்ளதாகக் கூறுகிறார் திரு ஸ்ரீநிவாசய்யர். திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் மடத்தைச் சேர்ந்த ஒரு முனிவரை கப்பலூரில் வந்து வதியுமாறு வேண்டி, அவர் வந்து தங்க அனைத்து வாய்ப்பும் செய்தனன் கப்பலூர்த் தலைவனான கருமாணிக்கன் என்பதை பாடல் தெரிவிப்பதாக ஸ்ரீராவ்ஸாஹிப் மு இராகவையங்கார் ஸ்வாமிகளின் கருத்தைக் காட்டி அவர் கூறும் பாடல் –

கோவல் அமர் முனி கொண்டு வந்து
ஏத்தும் முத்தூர்த் துவரைக்
காவலன் எண் எண் கலைக் கரு
மாணிக்கன் கப்பலன்னீர்
மேவலர் தம் வினைமேல் பிரிந்
தோர் இன்று மீண்டனர் நம்
மா அலர் சோலை மறுகு எங்கும்
ஆர்க்கும் வலம்புரியே.

மொத்தம் 398 பாடல்கள். நறுந்தேன் அனைத்தும் தமிழைக் காதலிப்பார்க்கு கப்பல் கோவை அரும் நூல்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

சம்ஸ்க்ருத சுலோகங்கள் சிலவற்றின் மொழியாக்கங்கள்

மிருத்யுவின் நாவுகள் மூன்றும்
மித மிஞ்சிய ஆசையில் சுழன்றே
மூவுலகும் ஒருவாயில் உண்டு களிக்க
வெளிப்பட்டுப் போந்தனதாமோ?
நீர்மூன்று கலந்திழி கங்கை
கிருஷ்ணனின் பதகமலச் செம்மையில்
தானும் கன்றிச் சிவந்தனள்கொல்லோ?
அந்திமூன்று தம்முள் முயங்கிச் சிவந்து
காமத்தை எரிப்பவன் முன்னர்
கூடிக் கலங்குவதாமோ?
மும்முனைச் சூலத்தால் மகிடனைச்
சண்டி வதைத்த கணத்தினில்
மண்டிப் பாய்ந்திடும் குருதியைக் கண்டு
எண்டிசை குழுமிய தேவர்கள்
எண்ணி அயர்ந்தனர் இவ்விதம்.

(பாணரின் சண்டி சதக நூலில் நான்காவது பாடல் இது. வடமொழி சுலோகத்திற்கான மொழியாக்கம் என்னுடையது)

*
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பகவத்பாத ஸ்ரீஆதிசங்கரரின் பாஷ்யத்தில் தொடக்கத்தில் வரும் ஸ்ரீகிருஷ்ண ஸ்துதியும், வியாசருக்கு வணக்கமும், தாம் பாஷ்யம் செய்த காரணத்தை சுலோகமாக உரைப்பதும் மிகவும் அர்த்தம் நிறைந்ததுவாய் இருக்கிறது.

சத்சிதாநந்த உருவினரும்
கிலேசங்களினின்றும் நிவிருத்தி செய்பவரும்
வேதாந்தங்களால் அறியப்படுபவரும்
குருவும்
புத்தியின் சாட்சியாய் விளங்குபவரும்
ஆன ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.

சச்சிதாநந்த ரூபாய கிருஷ்ணாய அக்லிஷ்ட காரிணே|
நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே||

அனைத்து உலகங்களின் நன்மையில்
ஊக்கம் உள்ளவர்
வேதங்கள் என்னும் தாமரைகளுக்குச்
சூரியன் ஆனவர்
சாந்தி முதலாம் குணங்களுக்கு
இருப்பிடம் ஆயவர்
ஆன முனிவர் கிருஷ்ணத்வைபாயநரை
வணங்குகிறேன்

கிருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் ஸர்வபூதஹிதே ரதம்|
வேதாப்ஜ பாஸ்கரம் வந்தே சமாதிநிலயம் முநிம்||

ஆயிரம் உருவும் கண்கள் ஆயிரமும்
ஆயிரம் கால்களும் கைகளும் தோள்களும்
பரப்பிப் பரந்த புருஷோத்தமரின்
ஆயிரம் நாமங்கள் புகன்றநற்புகழும்
பிறவியும் மூப்பும் பொன்றிட விளக்குவாம்.

ஸஹஸ்ர மூர்த்தே: புருஷோத்தமஸ்ய
ஸஹஸ்ர நேத்ராநந பாத பாஹோ:|
ஸஹஸ்ர நாம்நாம் ஸ்தவநம் ப்ரசஸ்தம்
த்ருச்யதே ஜந்மஜராதி சாந்த்யை||

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

மொழியின் கனிவும் மனிதரின் வன்மமும்

மொழியால் மயங்காதவர்,
மொழியில் மயங்காதவர்,
மொழிக்கு மயங்காதவர்
யார் இருக்கிறார்கள்?

ஒரு கொடி படர்வது போன்ற நளினத்துடன்
மொழி நமது சிந்தையை முழுவதும் ஆக்கிரமித்து விடுகிறதே! வடமொழியில் பழைய வாசகம் ஒன்று சொல்கிறது:

பாஷா ப்ரசஸ்தா ஸுமநோ லதேவ
கேஷாம் ந சேதாம்ஸி ஆவர்ஜயதி?

பொருள்: மங்கலமான மொழியானது ஒரு கொடியைப் போல் தன் நளினமான அழகால் மனத்தை இன்புறச் செய்கிறது. நம் யாருடைய சித்தம்தான் அதனால் ஆட்கொள்ளப்படவில்லை!

மொழியின் தன்மையே இவ்வாறு என்று பழைய வடமொழி வாசகம் ஒன்று கூறுமேயானால், மொழியைக் கடுமையாகவும், மூர்க்கமான கோபத்திற்குக் கருவியாகவும் இன்னாத வழியில் பயன் படுத்துவோரை என்னென்பது! மொழியே இனிமையானது என்னும் போது அதை இன்னாத கூறலாக ஆக்கினால், அந்தோ! அது எப்படி இருக்கிறதாம், கனி கனியாக இருக்கிறதே என்று ஒருவர் நொந்துகொண்டு காயைத் தேர்ந்தெடுத்தால் எப்படியோ அப்படி இருக்கிறதாம்! சொல்கிறார் திருவள்ளுவர்:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

பாஷா ப்ரசஸ்தா ஸுமநோ லதேவ
கேஷாம் ந சேதாம்ஸி ஆவர்ஜயதி?

என்று கேட்கிறது வடமொழி வாசகம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

கல்வியும் மரணமின்மையும்

உயிர்கள் பிறப்பதும், ஜீவர்கள் இறந்து போவதும் உலகில் கணம்தொறும் நடந்தவண்ணம் இருக்கிற விஷயம். பிறப்பிலிருந்து இறப்புவரை அனைத்து செயல்களும் நம் இச்சையில்தான் நடக்கிறது என்று யாரும் சொல்லத் துணியோம். இதில் கல்வி, உணர்வு என்பது நன்கு முதிரும் நிலை என்பது பொதுவாக மனித உயிர்களில் சிறப்பாகத் திகழ்கிறது என்று நம்புகிறோம். அதிலும் மிகவும் கருத்துடன் தம் வாழ்க்கையைக் கல்வியினாலும், உணர்வின் பெருக்கத்தினாலும் விழுப்பம் கொண்டதுவாகச் செய்பவர்கள், வாழ்க்கையைப் பொருள் நிறைந்ததாகச் செய்துகொள்கின்றனர் எனலாம்.

உயர்ந்த வாழ்க்கையை நோக்கிப் பயணிப்பது என்பது மனிதரிடையே பொதுவாகக் கல்வி, படிப்பு, சிந்தனை, தியானம் என்ற சாதனங்களின் வழியாக நடக்கிறது. இதையே வேதாந்தம் ச்ரவணம், மனனம், சிந்தனம், நிதித்யாஸனம் என்ற படித்தரங்களாகக் கூறுகிறது. எளிமையாக உரைக்குமிடத்து, இதனையே படித்தல், கற்றல், ஆழ்ந்து சிந்தித்தல், மனம் குவிந்து தியானம் புரிதல் என்று கூறலாம். இத்தகைய ஆன்மிக உயர்வுக்கான பயிற்சியையே போதாயன தர்ம ஸூத்ரம் வேறொரு விதமாகக் காட்டுகிறது. ஸமிதை என்பது அக்காலத்தில் தீமூட்டி அமர்ந்து வேள்விகள் புரிதலும், பிரம்மத்தைப் பற்றிய விசாரங்கள் புரிதலும், சீடர்கள் குருவை அண்டித் தம் ஐயங்களை நீக்கிக் கொள்ளும் கற்றலும் நடைபெறுவதற்கான ஒரு குறியீடாகச் சுட்டப் படுகிறது. ஏனெனில் ஸமிதை என்னும் சுள்ளிகள் மிகவும் தேவை தீமூட்டிச் சுற்றிலும் அமர்ந்து கொள்ள. எனவே ஒரு சீடர் குருவிடம் போகும் பொழுது அவருக்கு மிகவும் வேண்டியதான ஸமிதைகள் என்பனவற்றைச் சேகரித்துக் கொண்டு செல்லுதல் உரிய கிரமமாகக் கருதப்பட்டது. ஒரு குருவை அண்டிக் கற்றல் என்பதுவே ஸமித்பாணியாகச் செல்லுதல் எனப்பட்டது. கல்வியின் பயன் பிரம்மத்தை அறிதல். அந்தப் பிரம்மத்தை அறிந்துகொள்ள வழியாக இருக்கும் கல்வியே ஒரு விதத்தில் பார்த்தால் பிரம்மம் என்று கருதப்பட்டது. வேதம் என்பதை பிரம்மம் என்ற பெயராலும் குறிப்பதுண்டு. குறிப்பாக சப்த ப்ரம்மம் என்றும் சொல்வதுண்டு. கடவுளை அறிந்து தொழுதலே கல்வியினால் ஆய பயன் என்பதால்தான் திருவள்ளுவரும் ‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்’ என்றார்.

போதாயன தர்ம ஸூத்ரத்தில் வருகின்ற ஒரு கருத்து கடவுளைக் காட்டும் கல்வியின் முக்கியத்தையும், சிறப்பையும் கூறுகிறது. உலகைப் படைத்த ஆதிகாரணமாகிய பிரஹ்மம் உயிர்களை முடிவுக் காலத்தில் மரணத்திடம் கொடுத்ததாம். ஆனால் வேதத்தைக் கற்கும் பிரஹ்மசாரியை மரணத்திடம் கொடுக்கவில்லையாம். ஏன்? பிரஹ்மத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால். அதாவது பிரஹ்மம் என்றாலே கடவுளைக் காட்டும் படிப்பின் உருவம். மரணம் பிரஹ்மத்திடம் கேட்டதாம் - பிரஹ்மசாரியிடமும் தனக்கு உரிமை வேண்டும் என்று. அதற்கு பிரஹ்மம் சொல்லிற்றாம் - எந்த இரவில் படிப்பிற்காக, கற்பவர் விளக்கு ஏற்றவில்லையோ அந்த இரவில் உனக்கு உரிமை உண்டு.

”ப்ரஹ்ம வை ம்ருத்யவே ப்ரஜா: ப்ராயச்சத் தஸ்மை ப்ரஹ்மசாரிணம் ஏவ ந ப்ராயச்சத்; ஸோ அப்ரவீத் அஸ்து மஹ்யம் அபி ஏதஸ்மிந் பாக இதி யாமேவ ராத்ரிம் ஸமிதம் நா~~ஹராதா இதி’ (போதாயன தர்ம ஸூத்ரம்)

படிக்கிறவர்கள், பகவானை அடைய தவம் மேற்கொள்பவர்கள் மரணம் அடைவதில்லையா என்பது அல்ல பொருள். வாழ்வின் உயர்ந்த பொருள் என்னவோ அதை நாம் நன்கு உணர்ந்துகொண்டு விட்டால் பின்னர் இந்தப் பிறவியால் ஆய பயனைப் பெற்று விடுகிறோம். தோன்றிமறையும் உடல் அன்று நாம் என்பதை உணர்ந்து உணர்வே வடிவான மரணமற்ற நிலையை எய்துகிறோம் என்பது இதன் உட்பொருள். அந்த உயர்நிலையை எய்தப் பெற்றவர்கள் மட்டுமன்று, அந்த உயர்நிலைக்காகக் கடவுளை அறியும் ஆத்ம சாதனத்தில் முயல்பவரும் கூட மரணத்தின் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் என்பது எத்தகைய உயர்ந்த ஒரு சித்திரம்! கல்வியின் பயன் என்ன, அதன் சிறப்பு யாது என்பதை நாம் உணர வேண்டும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

தமிழ்வாத்யார் எஸ் ஜி பற்றி ஒரு ஞாபகம்

தமிழ் வாத்யார் எஸ் ஜி அவர்களைப் பற்றி ஒரு ஞாபகம். பத்தாம் வகுப்பு. அவ்வப்பொழுது வகுப்பில் சின்ன பரிட்சைகள் நடக்கும். முதல் நாள் சொல்லிவிடுவார். அப்பொழுதைக்குச் சமீபத்திய போர்ஷன்ஸ் பரிட்சையில் கேள்விக்குரிய பகுதிகள். பரிட்சை நடந்தது. அதில் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவைப் பகுதி ‘நாராயணா என்னா நாவென்ன நாவே, கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே’. அதற்கு விளக்கம் எழுத வேண்டும். அப்பொழுதெல்லாம் கோனார் நோட்ஸ் மாணவர்களுக்குப் பெரும் உதவி. அகத்தியர் நோட்ஸும் உண்டு.

பரிட்சைக்கு மறுநாள் வகுப்பில் கட்டு விடைத்தாளுடன் நுழைந்தார். என்னதான் சின்ன பரிட்சை என்றாலும் பரிட்சை ரிஸல்ட் என்றதுமே மாணவர்களுக்குக் கொஞ்சம் வயிற்றில் கலக்கத்தான் செய்யும் என்பது பிரம்மாவின் எழுதப்படாத விதி. ஒவ்வொருவரையாகப் பெயர் படித்து மார்க்கைச் சொல்லி விடைத்தாள் தருகிறார். அடேயப்பா அள்ளு என்றெல்லாம் மார்க்குகள் வந்தவண்ணம், இளநகையோடு அரைட்ரௌஸர் வீரர்கள் வெற்றி நடை போட்ட படியும், குறைந்த மார்க் விருட்டென்று சீட்டிற்கு வர யத்தனித்து வழியில் ஒரு பையன் கொடு பார்க்கலாம் என்றவனை எரிந்துவிழுந்து, அந்தப் பதட்டத்தில் கீழே வைத்த ஒருவன் பை தடுக்கி விழுந்து வந்து சேர்வதற்குள் அவுட்டரில் போட்ட வண்டி ஒரு வழியாக ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்த கதையாக அரைவல். அதிக மார்க் வாங்கிய பேர்வழி ஏதோ கம்பநாட்டாழ்வாருடைய தூரத்துச் சொந்தம் மாதிரி போடாத டிக்டேஷனுக்கு நோட் புக்கை எடுத்துப் பிரித்துக் கவனமாக எதையோ எழுத வேண்டியது. ‘டேய் அவன் நன்னா படிப்பாண்ட்டா...’ இந்தக் குற்றொலிக் குழிப்புகள் சகஜம். என்ன நீங்க பெரிய விழா எடுத்து படாடோப விருதுகள் கொடுங்க... அந்தக் கணத்துல வகுப்பறையில் கிடைக்கும் இந்தமாதிரியான ’பெப்’புக்கு ஈடு இணையே இல்லை.

இப்படியாகத்தானே.... கிட்டத்தட்ட எல்லாருடைய விடைத்தாள்களும் அநேகமாகக் கொடுக்கப்பட்டு முடியும் தருவாய். என்னுடையது வரவில்லை. சக அமர்வுத் தோழர்கள் எல்லாம் என் பக்கம் பார்வையைத் திருப்புவதும், உன்னோடது வரலை? என்று பரத நாட்டிய அபிநயம் பிடிப்பதும்.... எனக்கு அடிவயித்துல கொஞ்சமா... ஆமாம். கடைசி வரை வரவில்லை என்றால் மிகக் கேவலமான மார்க். கொஞ்சம் ’சாற்றுக்கவி’யெல்லாம் பாடித்தான் தருவார் என்று அர்த்தம். ஐயய்யோ.. நன்னாத்தானே எழுதியிருந்தோம்... என்ன தப்பு பண்ணினோம்... அடச்ச நமக்குன்னு ஏன் இந்த நிலை... அவமானம்.....

எல்லாம் முடிந்தது. ‘சார்.. இவனுது வரலை...’ என்று கூவினார்கள். எஸ் ஜி ‘ஸ்ஸ்.. உட்காருங்க...’ என்று சொல்லிவிட்டு, ‘ஏய் எல்லாரும் அப்படியே கோனார் நோட்ஸுல சொன்னதை வாந்தி எடுத்து வச்சுருகீங்க... அதைக் கூட ஒழுங்கா எழுதாம சில பேரு. ஒரு சொந்த யோஜனை, எண்ணம் ஒண்ணுமே கிடையாதா... கடனெழவுக்கேஎன்னு படிக்கறதா... இல்ல கேக்கறேன்... திருத்தறத்துக்குள்ளே மனுஷனுக்கு... ஆனால் இந்த ஒரு விடைத்தாள் மாத்திரம்... யாருய்யா இது? என்று பேரைச் சொல்லிக் கேட்கவும் தயங்கியபடியே எழுந்து நின்றேன். ;மிக நல்லது’ பாருங்கய்யா... பொதுவாகவே பதில்கள், மொழிநடை வித்யாசமாக இருக்கிறது. அதுவும் சிலப்பதிகாரம் ‘கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே’ பகுதிக்கு இந்த விடையைப் பாருங்கள்.

‘நித்ய விபூதியில் இருக்கும் நித்ய சூரிகள் எல்லாம் யாரை விடாமல் இமைக்காமல் நோக்குகின்றார்கள் என்று வேதம் சொல்லுகிறதோ அந்த நாராயணனை கண் இமைத்துக் காண்பார் - கண் இமைக்கும் நேரப் பொழுதேனும் காண்பாருடைய கண்கள் தாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கின்றன! ஒருகணம் அவனைக் கண்டாலும் முடிவற்ற காலம் செய்த பாபங்கள் எல்லாம் அழிந்து உயர்வற உயர்நலம் ஏற்படுகின்றது என்பதற்கேற்ப கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே! என்று ஆய்ச்சியர் பாடினர்’

பார்த்தியாய்யா... எல்லாம் என்ன எழுதியிருக்கீங்க... பார்க்கவே வேண்டாம். எங்க கோனார் நோட்ஸ்ல என்ன இருக்கோ... காணாத கண் என்ன கண், கண்ணிமைத்துக் காண்பாருடைய கண் எவ்வளவு இழிந்த கண். அதேதான்.

ஏன்யா.. நீ என்ன புத்தகங்கள் நிறைய படிப்பியா...

ஆமாம் சார். கதாகாலக்ஷேபங்கள், உபந்யாஸங்கள் இதெல்லாம் விடாம போயிடுவேன் சார்.

யாருடைய உபந்யாஸம் எல்லாம் கேட்டிருக்கிறாய்

அண்ணங்கராசாரியார், வேளுக்குடி வரதாசாரியார், எம்பார், மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள்...

உட்காரு. இந்தா மிக நன்று. அதிக பட்சமான மார்க் இந்த விடைத்தாளுக்குத்தான் தந்திருக்கிறேன்.

அப்புறம் அந்த வகுப்பிற்குரிய பாடங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் யார் கவனித்தார்கள்? பெரும் கலக்கம், அடுத்த கணம் பெரும் பாராட்டு இந்த கிரேடியண்ட்ல பாஸ் ஆகிற கரண்ட் மூளையில் ஓடும்பொழுது... எந்தப் பரிசும் ஈடாகாது.

இடது கையால் ஷர்ட் காலர் முனைகளை ஒருங்குறப் பிடித்து வலப்பக்கம் தலையைச் சிறிது திருப்பியவாறு ஏர்ஃபோர்ஸ் ஸ்டைலில் தமிழ் முழங்கும் எஸ் ஜி,! இன்றும் அந்தப் பத்தாம் வகுப்பில் யாரும் இல்லாத நேரம் பார்த்துப் போய் உட்கார்ந்து விட்டு வரவேண்டும் என்று தோன்றுகிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

மனத்தில் கள்ளம் 4

மனித மனத்தின் வக்கிரத்தனம் போல் புதிரானது எதுவுமில்லை. ஒரு பெரிய ஓவியக் கண்காட்சி. பெரும் ஓவியங்கள், பல வண்ணங்களில் திகழ்கின்றன. பொதுமக்கள் அனைத்தையும் பிரமிப்புடன் பார்த்து மலைத்துப் போய் மகிழ்கின்றனர். ஓரிடத்தில் வண்ணக் கீற்றுகள் முயங்கும் சித்திரம். அது என்ன என்று தெரியவில்லை. ஆனாலும் எதையோ அது சொல்ல வருவது போல் ஒரு யத்தனம் அதில் தொனிக்கிறது. இன்னொரு ஓவியத்தில் அப்படியே தத்ரூபம். ஆனாலும் அது இல்லை என்றபடி ஒரு வித்யாசம். மக்கள் தோய்ந்து பார்க்கும் அந்தக் கூடத்தில் ஒருவர் இழவு வீட்டில் எதையோ பறிகொடுத்தவர் போன்று வெறித்துப் பார்த்தபடியே இரண்டு ஓவியங்களுக்கு இடையில் இருக்கும் வெற்றுச் சுவரைப் பார்த்தபடி, அதுவும் ஏதோ உன்னிப்பாகக் கவனிப்பவர் போல் முறைத்துப் போகிறார். சட்டென்று பார்த்தால் இவர்தான் அந்தக் கட்டடத்தைக் கட்டிய மேஸ்திரியோ என்று சந்தெகம் வருகிறது. அவர் ஏன் அந்த ஓவியங்களுக்கிடையில் வந்தார், ஏன் இப்படி எதையுமே காணாமல் உள இயல் நோய் பிடித்தவர் போல் சம்பந்தமே இல்லாமல் வெற்றுச் சுவரைப் பார்க்கிறார், ஏன் இவர் அநுபவிக்க அந்த ஓவியங்களில் அம்சங்கள் எதுவும் இல்லையா என்று பார்ப்பவர் எண்ணினாலும் அவருக்கும் மகிழ்ச்சி என்பதற்கும் சம்பந்தம் இல்லையோ என்றுதான் படுகிறது.

ஏதோ நல்ல வேளை இருந்தால் யாராவது அவரைப் பார்த்து, ‘என்னங்க.. நீங்க இங்க வந்திருக்கீங்க...’ என்று ஒரு வேளை சொல்லக் கூடுமெனில், அப்பாடா அவருக்கு அப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதி. ‘இல்லை ஏதோ ஓவியம் கண்காட்சின்னு சொன்னாங்க... அதான்’. அதற்கு மேல் யாரும் பேசாமல் இருந்தால் நல்லது. தவறிப் போய் அவரிடம், ‘என்ன... பல ஓவியங்களைக் கண்டு களித்தீர்களா...’ என்று ஏதோ பேச்சுக்காகக் கேட்டு விட்டாலும் போச்சு... சனிதான்,..... ‘இல்லை... அதான் தேடிண்டு இருக்கேன். ஓவியம் எங்க என்று’ - இந்த டயலாக் சொல்வதற்கென்றே தாம் இவ்வளவு நாள் உயிர் சுமந்து அலைந்தது போன்ற கிளப்பல் எகத்தாளத்துடன் மொத்த ஹாலையும் அப்படியே 250 டிகிரி ஸ்கேன் ஒன்று செய்வார். அதாவஃது அவருடைய அந்த லைட் ஹௌஸ் ஒளிவட்டப் பார்வையில் அத்தனை ஓவியங்களும் அப்படியே பரிதாபமாக கீழே விழுந்து நொறுங்கி, ஏனடா முதலில் காட்சியில் ஏறினோம் என்று நொந்து கொள்வது போல் ஒரு ஜோடனை அநேகமாக அவர் மனத்திலாவது ஓடும். அந்த மில்லியன் டாலர் கணத்தைத் தனக்குத் தந்தமைக்காக அந்தக் கேள்வி கேட்ட நபருக்கு ஒரு கவனிப்பான பார்வையை நாட்டி அருள்வார்.

பார்க்கின்ற நமக்குத் தோன்றும். என்ன இது! இவருக்கு இத்தனை ஓவியங்களில் பார்க்க எதுவும் இல்லையா.. அதுவும் ஓவியம் எங்கே என்று தேடுகிறேன் என்கிறாரே.... அப்படி என்றால் இவையெல்லாம்.... நீங்கள் கொஞ்சம் உஷாரான ஆள் என்றால் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒரு புதிரான மனநிலையை உங்களிடம், பார்ப்பவர்களிடம் தோற்றுவிப்பது ஒன்றுதான் அவருடைய செயல்களின் பொருளே ஆகும். அதாவது ஓவியங்களைக் கண்டு பாராட்டி, வியந்து பலர் சென்றிருப்பார்கள். சாதாரண மக்களும் வியப்பார்கள். தாமும் எதையாவது கண்டு வியந்து விட்டால் பின்னர் தன்னை எப்படித்தான் பிறர் வித்யாசமாகத் தனிப்பட கவனிப்பார்கள்? அதற்காக இப்படி ஒரு உல்டாவைத் தூக்கிப் போடுவார். பார்க்கப் போனால் அவருக்கு ஓவியத்தைப் பற்றியே சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்ததை விட ஒன்றும் பெரிதாக எதுவும் தெரியாமல் இருக்கும். ஆனால் இப்படி உல்டாவாக அவர் அடித்து விட்டதும் அவரை எல்லாரும் பெரிய வித்வரிஷ்டர் நிலைக்குக் கொண்டு போய் விடுவார்கள். ‘அவரே சொல்லிட்டார்னா அப்பறம் என்ன’ ‘அவர் சொல்லணும்.... என்னன்னு’ இப்படியே பில்டப் கொடுத்துப் பழகிய வழக்கங்கள் ஆரம்பித்து விட்டால் அப்பறம் ஒ ரு சின்ன சைஸுக்காவது ஒளிவட்டம் ஒன்று அவர் கூடவே ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும். அதற்கு அப்புறம் அவருக்கு ஜாலி. அவர் எதையும் பற்றி எதையுமே தெரிந்து கொள்ள வேண்டாம். எல்லாம் தெரிந்தால் போல் அஸ்துகொட்டத்தான் அவர் கையில் வழி இருக்கிறதே... அப்படியே சொல்லியும் சொல்லாமல் பட்டும் படாமல்....சமயம் பார்த்து கருப்பு இங்க் அடிப்பது எப்படி என்று மட்டும் தெரிந்தால் போதும். பெரிதாக ஒன்றும் தெரியாதவர் மேதையாக ஆகிவிடுவார்; அதுவும் மற்றவர்கள் எல்லாம் அவர் ஏதாவது குத்தம் கொனஷ்டையாகவேனும் ஏதாவது சொல்ல மாட்டாரா என்று ஏங்கும் ஒருவராக.....

ஓவியம், சிற்பம் போன்ற கலைத் துறைகளில்தான் இப்படி என்று இல்லை. எழுத்துத் துறையிலும் இது போன்ற வெறும் கையில் முழம் போடும் அட்டகாசங்கள் வளைய வருவதுண்டு. பலரும் பல விதங்களிலும் மிக முயன்று பல விஷயங்களைத் தேடி எடுத்து அருமையான முயற்சிகளாக எழுதுவார்கள், கட்டுரைகளாக, புதினங்களாக, சிறுகதைகளாக, பெரும் ஆய்வுகளாக. ஆனால் கருப்பு இங்கி தெளிக்கும் கலையை மட்டும் கற்ற வெறுங்கை முழ மேதையார் அங்கும் வருவார். எழுதியவர் எங்கோ ஒரு க் அல்லது ச் என்பதை விட்டிருப்பார். அல்லது ஒரு தகவல் பிழையாக இருக்கும். அல்லது ஒரு பெயரைத் தவறாகச் சுட்டியிருப்பார். அவ்வளவுதான் இந்த ஒட்டுண்ணி ஆசாமிக்குப் பெரிய லாட்டரியே அடிச்சது போன்ற குஷி பிறந்துவிடும். அதை மட்டும் தனியாக எடுத்து - இது தவறு - என்று காட்டிவிட்டு அவர் அடையும் இன்பத்திற்கு எல்லையே இருக்காது.

அதாவது நேரடியாக உயிர்வாழும் ஜீவன்கள் இயற்கையில் என்றால், அந்த ஜீவன்களில் சார்ந்து அவை தவற விடும் நேரம் பார்த்து அவற்றின் உயிர்சாரத்தை உறிஞ்சி வாழும் ஜந்துக்களும் உண்டுதானே! அது உயிரியலாய் இருந்தால் என்ன, அல்லது கலைகள், எழுத்து துறைகளாய் இருந்தால் என்ன? ஒரு தவறாவது சிக்காதா என்பதுவே நோக்கமாக ஆனால் வாழ்க்கை இழந்து போகுமே என்பது உயிர்வாழும் ஜீவன்களின் கவலையாய் இருக்கலாம், ஆனால் உயிர்ச்சாரத்தின் உண்ணிகளாய் வாழும் ஜந்துக்களுக்கு அது கவலை இல்லையே! ஆனால், தவறுகளைச் சுட்டிக் காட்டி அதனால் செம்மை கூட வேண்டும் என்று அனைவருக்கும் இருக்கும் அக்கறை என்பது வேறு. அது வாழ்க்கை இயல்போடு கலந்தது. அதையும் இதையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. 

***

புராணங்கள் கற்றுத்தரும் தியானம்

மக்களுக்குப் பல விஷயங்களைப் பற்றியும் சாவகாசமாக கூடியமர்ந்து ஆன்மிக மன நிலையுடன் சிந்தித்துப் பார்க்கும் வாய்ப்புகளை புராணப் பிரவசனங்கள் தந்து வந்திருக்கின்றன என்பது உண்மை. கதை வடிவம், ஸிம்பாலிஸம் என்னு அமைப்பிலேயே பெரும் தத்துவ அர்த்தங்களை மக்களின் மனத்தில் புகுத்திவிடும் வல்லமை புராணங்களுக்கும், பொதுவாக பௌராணிகர்களுக்கும் இருந்து வந்திருக்கிறது. இந்த முழு உலகையும் பகவானின் சரீரமாக நினைத்துப் பார்க்கும் உன்னதப் பயிற்சியை அவை தர முயன்றுள்ளன. இந்த அம்சத்தை நமது தற்கால கல்வி இனிமேல்தான் எட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது. உதாரணத்திற்கு புராணங்களில் திலகமான ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பகவானைப் பூஜிப்பதாகிய கிரியா யோகம் பற்றி வினவும் சந்தர்ப்பத்தில் பூஜைக்குரிய ஸ்ரீவிஷ்ணுவின் உருவமாக எப்படி நினைக்க வேண்டும் என்று கடைசிப் பகுதியான பன்னிரண்டாவது ஸ்கந்தம் விளக்குகிறது -

பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் விக்கிரகம் அன்று வணங்கப்படுவது. உண்மையில் பிரபஞ்ச மயமாக இருக்கும் விராட் விக்கிரகம்தான் வணங்கப்படுவதாம். அந்த விராட் விக்கிரகம் எதனால் ஆனது?

சேதனர்கள் என்னும் ஜீவர்களின் முழுமையும் சேர்ந்து ஒரு பெரிய சரீரம் என்று கருதினால் அந்தச் சரீரத்தில் இருக்கும் ஆத்மாவாக நாராயணன் இருக்கிறார். அவருடைய உருவமாக, அவர் மயமாகவே இருப்பது இந்த விராட் விக்கிரகம். அந்த விராட் விக்கிரகத்தில் மூன்று லோகங்களும் காணப்படுகின்றன. அனைத்து இந்திரியங்கள், பஞ்ச மகா பூதங்கள் இவற்றின் மயமாகவே இருக்கிறது அந்த விராட் விக்கிரகம். மாயை, சூத்திரம், மஹத், அகங்காரம், ஐந்து தன்மாத்திரைகள் ஆகிய ஒன்பது தத்துவங்களால் ஆனது அந்த விராட் விக்கிரகம். இதுதான் விராட் புருஷனின் நாராயண ரூபம். விராட் விராட் என்றால் பிரபஞ்ச முழுமையானது என்று பொருள். இனி இந்த விராட் என்பதற்கு பாதங்கள் முதலிய வெவ்வேறு அங்கங்கள் என்ன என்று பார்ப்போம்.

பூமிதான் பாதங்கள். த்யு லோகம் என்னும் விண் என்பதுதான் சிரம். ஆகாயம் என்பது நாபி. சூரியன் தான் கண்கள். வாயு மூக்குகள். திக்குகள்தாம் காதுகள். பிரஜாபதியைக் குறியாக உடைய அந்த விராட்டிற்கு மரணம் என்னும் மிருத்யுதான் அபானம். லோகபாலர்கள் அவருடைய கைகள். சந்திரன் மனம். யமன் புருவங்கள். லஜ்ஜை மேலுதடு. லோபம் கீழுதடு. சந்திரிகை பற்கள். பிரமம் சிரிப்பு. மரங்கள் உரோமங்கள். மேகங்கள் விராட்டினுடைய தலைமயிர்கள். இந்த நாராயண ரூபன் ஜீவ சைதன்யமாகிய சோதியையே தமது மார்பில் கௌஸ்துப மணியாக தரிக்கிறார். அந்த சோதியின் பிரபையாகிய ஒளியைத் தமது மார்பில் ஸ்ரீவத்ஸம் என்னும் மச்சமாக தரிக்கிறார். பலதரப்பட்ட குணங்களாகிய மாயையை வனமாலை என்று கழுத்தில் அணிகிறார். அவருடைய பீதாம்பரம் சந்தங்களால் ஆன வேதம். மூன்று மாத்திரைகள் அளவுள்ள பிரணவம் என்பது அவர் அணிந்திருக்கும் உபவீதமாகிய பிரம்ம ஸூத்திரம். சாங்கியமும், யோகமும் அவர் காதுகளில் மகர குண்டலங்கள். சர்வ லோகங்களுக்கும் அபயம் அளிக்கும் பிரம்ம லோகமானது அவருடைய தலைப்பகுதி. வெளிப்படாத பிரபஞ்ச உள்ளிருப்பான அவ்யாகிருதம் என்பதே அவர் அமரும் ஆசனமாகிய அனந்தன் என்னும் சேஷன். தர்மம், ஞானம் என்பவற்றுடன் கூடிய சத்துவ குணமே அவருடைய ஆசனத்தைத் தாங்கும் பத்மம்.

ஓஜஸ், ஸஹஸ், பலம் இவற்றால் ஆன பிராணன் என்பதையே கதையாக தரிக்கிறார். நீர் என்னும் தத்துவமே அவருடைய சங்கம். தேஜஸ் தத்துவமே சக்கிரம். ஆகாய தத்துவமே அவருடைய குற்றம் அற்ற நந்தகம் என்ற கத்தி. கத்தியின் உறை தமோகுணம். கால ரூபமே சார்ங்கம் என்னும் வில். கர்ம வினைத் தொகுதிகளே சரங்கள் அடங்கிய அம்பறாத் தூணி. இந்திரியங்களே அம்புகள். கிரியா சக்தியுடன் கூடிய மனமே இவருடைய தேர். தன்மத்திரைகளே இந்தத் தேரின் வெளி வடிவம். வரத்தை அளிக்கும் கை முத்திரை வரதானம். அபயம் அளிக்கும் முத்திரை அபயப் பிரதானம். சூரிய மண்டலமே பூஜை செய்யும் இடம்.

ஞானம், ஐஸ்வர்யம், யசஸ் (மெய்ப்புகழ்), தர்மம், ஸ்ரீ, வைராக்கியம் என்னும் பகம் என்னும் ஆறு குணங்கள் கொண்டவர் பக + வான், பகவான் ஆகிறார். அவருக்கு ஐஸ்வரியம், ஸ்ரீ, ஜ்ஞானம், வைராக்கியம் என்பன விளையாட்டாக ஏந்தியுள்ள பத்மம். தர்மம் சாமரம். யசஸ் என்பது விசிறி. எங்கும் பயமற்ற வைகுண்டம் அவருடைய குடை. ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் ஆகிய வேதமயமாகிய கருடன் யக்ஞ புருஷனாகிய பகவானை ஏந்தி வருகிறார் என்று நினைக்க வேண்டும். பரமாத்மாவான ஹரியின் அழிவற்ற சக்திதான் பகவதியாகிய லக்ஷ்மி.

பாஞ்சராத்திர ஆகம ரூபர்தான் விஷ்வக்ஸேனர். அந்தப் பகவானின் நான்கு வடிவங்கள் வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன். அத்யாத்மத்தில் அவரே விச்வன், தைஜஸன், பிராஜ்ஞன், துரீயன். படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றையும் செய்பவராக இருந்தும், பரமாத்ம அனுபவத்தில் ஈடுபட்டவர்களால் ஆத்மாவாகக் காணப்பட்டவர் ஆகிறார்.

ஹே கிருஷ்ணனே! அர்ஜுனனின் தோழனே! யாதவரில் சிறந்தோனே! பூமிக்குத் துரோகம் செய்யும் அரசர்களின் வம்சங்களுக்கு (வம்சம் - மூங்கில்) அக்கினி போன்றவரே! குறையாத வீரியம் உடையோய்! கோவிந்தா! கோபிகளாலும் நாரதர் முதலிய அந்தரங்க பக்தர்களாலும் சூழப்பட்டு கானம் செய்யப்பட்ட பரிசுத்தமான கீர்த்தியை உடையவரே! கேட்பதற்கே மங்களமான சரிதத்தை உடையவரே! பக்தர்களைக் காக்க வேண்டும் ஐயா!

என்று விடியற்காலத்தில் எவன் எழுந்திருந்து பரிசுத்தனாக, பகவனிடத்தில் செலுத்திய சித்தம் கொண்டவனாய் இந்த மகா புருஷ விராட் வடிவத்தை ஜபிப்பானோ அவனுடைய இதய குகையில் பிரகாசிக்கின்ற பிரஹ்மத்தை அறிந்துகொண்டு விடுகிறான்.

*
இவ்வாறு அகில பிரபஞ்சத்தையும் ஒரே தத்துவ வடிவாகக் கண்டு போற்றுதல்தான் உண்மையில் நாராயண வழிபாடு என்னும் அரிய பெரிய கருத்தை எவ்வளவு அழகாகப் புராணங்களால் குறியீடுகளின் மூலம் காட்டிவிட முடிகிறது! இந்த அளவிற்கு தத்துவச் செறிவான உள்கருத்துகளை பௌராணிகர்கள் பலர் அந்நாளில் மிகவும் முயன்று மக்களுக்குப் பொதுவில் அமர்ந்து விளக்கியதன் காரணமாகத்தான் பாரதம் ஆன்மிகச் செழுமை உடையது என்ற கீர்த்தி ஏற்பட வாய்ப்பானது. இன்றும் இவ்வண்ணம் தத்துவச் செறிவுகளை ஆழ்ந்து விளக்குவதில் மிகுந்த முனைப்பு காட்டி வரும் பௌராணிகர் என்று சொன்னால் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களைச் சொல்ல முடியும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பௌராணிகர்கள்

புராணம் என்ற வார்த்தை தொன்மை, பழமை, முற்காலம், ஆதிகாலம் என்றெல்லாம் அர்த்தம் தருகிறது. பொதுவாக பழங்காலச் சரிதங்கள், கதைகள், வழிவழியாக வரும் ஆக்கியானங்கள் என்பதைப் புராணம் என்ற சொல் குறிக்கிறதாகச் சொல்லலாம். நிருக்தம் புராணம் என்பதை புரா+நவம் என்று காட்டுகிறது. அதாவது காலத்துக்குக் காலம் சொல்லாடலால் புதுப்பிக்கப்பட்டு வரும் பழங்காலச் சங்கதிகளுக்குப் புராணம் என்று பொருள் என்றும் இருக்கலாம். புராணம் என்பது ஐந்து இலக்கணங்கள் உடையது என்று ஒரு சொலவு இருக்கிறது. புராணம் பஞ்ச லக்ஷணம். உற்பத்தி, பிரளயம், வம்சங்களின் கதை, மன்வந்தரங்களின் கதைகள், வம்சங்களைப் பற்றிய தொடர்ச்சியான செய்திகள் என்பன அந்த ஐந்து இலக்கணங்கள். பத்து இலக்கணங்கள் என்ற கணக்கும் உண்டு, இன்னும் விரிவான தலைப்புகளில் பழம் வரலாறுகள், கதைகள், கலைகளைப் பற்றிய விஷயங்கள், சமய அனுஷ்டானங்கள், சிற்பக் கலை நுணுக்கங்கள், பல தீர்த்த நிலைகளின் செய்திகள், அவதார புருஷர்களின் கதைகள், தத்துவ உபதேசங்கள் என்று விரிவான ஒரு கல்விக் கழகமாகவே புராணம் என்பது அந்தக் காலத்தில் இயங்கி வந்துள்ளது.

புராணங்களை முற்றிலும் தள்ளுபடி பண்ணும் பார்வை கொண்டவர்களும் அந்தக் காலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றனர். பொது ஜனங்களுக்குப் பண்பாடு ரீதியான அடக்கம் கீழ்ப்படிதல் முதலியன ஏற்படுத்தும் கேந்திரம்தான் புராணம் என்று சிலரும் கருதி வந்துள்ளனர். சமீப காலத்தில் வந்துள்ள சுவாமி தயாநந்தர் ஆரிய சமாஜத்தை நிறுவியவர், புராணங்களின் மீது கடும் விமரிசனப் பார்வையை உடையவராய் இருந்தார். இவர்கள் சொல்வதற்கெல்லாம் காரணங்கள் இருப்பினும், அவ்வளவு லேசில் புராணங்களில் வந்து சேர்ந்துள்ள பழம் செய்திகளைக் கருதாமலேயே விட்டு விடுதலும் அறிவுடைமை ஆகாது. காரணம் பெரும் வித்வான்களுக்கும் உதவியான குறிப்புகளும், விளக்கங்களும் இலக்கிய வடிவம் கலந்த சொற் சித்திரங்களில் தரப்படுகின்றன. எனவே புராணங்களில் பரிச்சயம் என்பது ஒருவருக்கு முழுமையான சித்திரத்தைப் பெற உதவியாய் இருக்கிறது. மேலும் வேதங்களின் அர்த்தங்கள் சிலவற்றை நன்கு விளங்கிக்கொள்ள புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் விளக்க உதவி நூல்கள் என்றும் கருதப்பட்டன. புராணங்களில், பாகவத புராணம் என்பது பெரும்பாலும் தன்னளவிலேயே முழுமையான பெரும் வேதாந்த சாத்திரமாகவே சில துறை சார்ந்த வித்வான்களால் கருதப்படுகிறது. இன்றும் அதைப் படித்தால் அதனுடைய கவிதை எழிலும், ஆன்மிக நலமும், அரும் வேதாந்த பொருள் நிறைந்த சொல்லாடல்களும் நம்மை வியக்க வைக்கிறது. மொத்தத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களிலிருந்து, அரசாட்சி, பொருளாதாரம், சிற்பம், கட்டடக்கலைகள், நாட்டியம், இசை, மந்திர தந்திரங்கள், வழிவழியான வாழ்வியல் போதனைகள், பல தேசங்கள், கிராமங்கள், நதிகள், காடுகள் ஆகியவற்றைப் பற்றிய மக்களின் வழக்காறுச் செய்திகள் என்பன எல்லாம் சேர்ந்து புராண படனம் என்பதையே அந்தக் காலம் தொட்டே பெரும் பொது மக்களின் கல்வி நிலையம் என்று ஆக்கி வைத்திருக்கிறது.

பெரும்பாலும் புராணங்கள் பொதுவில் தெருக்களில், பொது திடல்களில் கோவில்களில்தான் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய புராணங்கள் பெரும் புராணங்கள் பதினெட்டும், உபபுராணங்கள் பதினெட்டும் என்ற கணக்கில் வந்துள்ளன. பதினெண் புராணங்களிலும் சேர்ந்து மொத்தம் சுமார் நான்கு லக்ஷம் கிரந்தக் கணக்கு இருப்பதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்லுகிறது. ஒரு கிரந்தம் என்பது உயிர் உயிர்மெய் எழுத்துகள் 32 கொண்ட கணக்கின் அலகு. நான்கு லக்ஷம் கிரந்தங்கள் என்றால் நான்கு லக்ஷத்தை 32 ஆல் பெருக்கிய அளவு எழுத்துக் கணக்கு என்று ஆகிறது. இதையெல்லாம் இன்றைய கணினி யுகத்தில் துல்லியமாகக் கணக்கிட்டிருக்கிறார்களா தெரியாது. ஒரு வேளை செய்திருக்கலாம்.

இத்தகைய பெரும் நூல் தொகுதிகளைக் கூடிய வரையில் பரிச்சயம் செய்து கொண்டு, இதிகாசங்களையும் நன்கு கற்றவர்களாய், மக்களிடையில் இவற்றை இசைப் பாடல், வாத்தியங்களுடன் கலந்து கதை காலக்ஷேபங்களாய் நிகழ்த்தியவர்களுக்குப் பெயர் பௌராணிகர்கள். புராணங்களைச் சார்ந்து தங்கள் கதைப் பொழிவுகளைச் செய்தவர்கள் என்று பொருள். இப்படிப் பட்டவர்களே மக்களுக்கும் சாத்திரங்களுக்கும் கோவில்களுக்கும் மத நிறுவன அமைப்புகளுக்கும் சமுதாயங்களுக்கு மத்தியில் வேலை என்று அமர்த்தப்படாத வழிவழியான பண்பாட்டுப் போதகர்களாய் இருந்திருக்கிறார்கள். புராணங்களைக் கொண்டு இவர்கள் சொல்வதோடு சேர்த்து அங்கங்கே பல பக்தர்கள் நிலவும் மொழிகளில் யாத்த பாடல்களையும், கீர்த்தனைகளையும் இசையுடன் அமைத்து நாட்டின் பல பகுதிகளிலும், பட்டி தொட்டிகளிலும். கோவில் இருக்கும் இடங்களிலெல்லாம் சென்று தங்கள் கதை நிகழ்த்துகளை ஒரு வாரம் பத்து நாள், ஒரு மாதம் என்று தொடர்ந்து நடத்தி வந்ததன் மூலம் பாரதம் என்ற பண்பாட்டு மெய்மையை அக்காலம் முதற்கொண்டே மக்களின் உணர்வில் நிறுவி வந்துள்ளனர். இன்றைய கல்வி விஞ்ஞானப் பெருக்கம் என்பதை வைத்துப் பார்க்கும் பொழுது நம்பிக்கைகள்தாமே பெருகின என்று தோன்றினாலும், அன்றைய நிலையில் பௌராணிகர்களால் விளைந்த பண்பாட்டு ஒற்றுமையையும், தத்துவச் சிந்தனைகளின் பரவலாக்கத்தையும் நாம் உணரவேண்டும். தத்துவ சேவை, பண்பாட்டு போதனை என்ற விதத்தில் மக்களின் மன வாழ்க்கையையும் கட்டிக் காப்பதில் இவர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. அங்கங்கே இருந்த செல்வந்தர்களின் உதவிகளும், மக்களிடையே தட்டு எடுத்து வசூலிக்கப்பட்ட பணமுமே இவர்களுக்குச் சன்மானமாக வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு நிறுவனம் ஆக்கப்படாத ஒரு பிரிவினர் தொடர்ந்து இவ்வண்ணம் பொதுஜனக் கல்வி என்னும் தளத்தில் இயங்கி வந்திருப்பதை நன்கு ஆவணப் படுத்த வேண்டும். ஏற்கனவே சில முயற்சிகள் நடைபெற்றிருப்பினும், இன்றைய பல்லூடக வசதிகள் இன்னும் இத்தகைய ஆவண முயற்சியைச் சிறப்பாக ஆக்கக் கூடும்.

எனக்கு நினைவு தெரிந்த வரையில் பல பௌராணிகர்களைக் கேட்ட நினைவு. சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், மஞ்சக்குடி ராஜகோபால சாத்திரிகள் என்று நினைவு, எம்பார் விஜயராகவாசாரியார், நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் (இவருடையது மிகவும் சிறப்பான இயல் இசை நாடகப் பாங்கு மிளிரும் பொழிவுகள்),இன்னும் சிலர். நம் காலத்தில் மிகச் சிறப்பாக பௌராணிக சேவையைச் செய்யும் பெரியவர் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்கள். சமீப காலத்தில் இலக்கிய சொற்பொழிவுகளாய் ஆக்கியவர்கள் வாரியார், புலவர் கீரன், புலவர் ராதாகிருஷ்ணன் இன்னும் பலர். பழங்காலத்தில் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்கள் குறித்து உ வே சா அவர்களின் என் சரித்திரம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றிய சரித்திரம் ஆகிய நூல்களில் சில குறிப்புகள் உண்டு,
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்

திரு பி எல் சாமி அவர்கள் எழுதிய ‘சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்’ என்னும் நூல்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் வெளியிட்ட இந்த நூல் வந்த் ஆண்டு -- 1967. கிட்டத்தட்ட 210 பக்கங்கள் கொண்ட சிறு நூல் ஆனால் பெரும் பயன் உடைய நூல் இது எனலாம். சங்க இலக்கியத்தில் செடி நூற் செய்திகள், குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை, காந்தள், பாம்புச் செடி, நரந்தம், முருக்கும் கவிரும், கொன்றை, பாதிரி, புன்னை, முசுண்டையும் அடும்பும், இலவும் கோங்கும், இலுப்பை, தாழை, குருகு, குரவு, குருந்து, நெல்லி, கருவிளம், கூவிளம் ஆகிய தலைப்புகளில் நூலை அமைத்திருக்கிறார். அத்தனைத் தலைப்புகளிலும் ஆசிரியர் சங்க இலக்கியத்தில் காணும் மலர்கள் பற்றிய உவமைச் செய்திகளை, மலர்களின் செடிநூல் உண்மைகளுடனும் பொருத்திக் காட்டுவது ஒருங்கே பல செய்திகளை நமக்கு உரைக்கின்றது. பழந்தமிழரின் இயற்கையைப் பற்றிய உணர்வு, கவிஞர்களின் இயற்கையைச் சார்ந்த அனுபவம், இயற்கை தாவர இயல் உண்மைகளைப் புலவர்கள் நயமாக உணர்ச்சி சார்ந்த அனுபவங்களைச் சொல்லப் பயன்படுத்திய விதம் என்று பல செய்திகள் புலனாம் வண்ணம் ஆசிரியர் எழுதுகிறார். இந்த நூலில் மேலும் ஒரு சிறப்பு, பூக்களுக்கும் செடிகளுக்கும் வண்ணப் படங்கள் இட்டுக் காட்டியிருப்பது. இன்றும் இயற்கையில் நாம் நேரடியாகக் காணும் போது அடையாளம் தெரியும் வகையில் அமைந்திருக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Guide to the Economic Plants of South India

சில சமயம் துணை நூல்கள், முக்கியத்துவத்தாலும், அவை தரும் உதவியாலும் பல முதல் நூல்களை விடவும் நம் கவனத்திற்கு மிகவும் உரியதாக ஆகிவிடும். அத்தகைய நூல்கள் இரண்டு. இன்னும் பல இருக்கலாம். ஆனால் என் கவனத்தில் வந்தவற்றில் இவை இரண்டு நூல்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஒன்று --

Guide to the Economic Plants of South India
by Dr D Daniel Sundararaj and Girija Balasubramanyam
November 1959 Amudha Nilayam Private Limited

ஆங்கிலத்தில் அமைந்த இந்த நூல் இரு பகுதிகளாகப் பொருள் பிரிவு படுத்தப்பட்டிருக்கிறது. முதல் பகுதி கிட்டத்தட்ட 1140 தாவ்ர செடிகொடிகளின் அட்டவணை. ஒன்பது தூண் நிரல்களில் ஒவ்வொரு செடி கொடியின் பெயருக்கு உரிய பல மொழிப் பெயர்களும், குறிப்புகளும் தரப்படுகின்றன. உதாரணமாக வாகை என்ற மரத்தின் சம்பந்தமான பெயர்கள் முதலியவற்றை அறிய வேண்டும் என்றால் நூல் விவரங்களை இவ்வண்ணம் பட்டியல் இடுகிறது.

Botanical Name - Albizzia lebeck

Family - Leguminosae (Mimosaceae)

English or Popular Names -- Lebbeck; Siris

Tamil - Vaagai; Malayalam - Vaaka; Telugu - Dirisina; Duchiram; Kanarese - Bagae; Bengha; Hindi or Hindusthani - Siris

Notes - Wood used for agricultural implements, posts, spokes for cart wheel and in cabinet making. Leaves readily eaten by cattle. A good avenue tree and wind break plant for plains. A bee pasturage plant.

இவ்வண்ணம் 1145 பெயர்களுக்கும் 9 தூண் நிரல்களில் பெயர்களையும், குறிப்புகளையும் நூல் தருகிறது முதல் பகுதியில்.

இரண்டாம் பகுதியில் -- Classified list of Economic Plants என்னும் தலைப்பிட்டு

i) Food Crops

ii) Oil yielding plants

iii) Sugars and starches

iv) Fibres

v) Medicinal plants, narcotics and masticatories

vi) Spices, condiments and seasoning herbs

vii) Plants yielding rubber, tans, dyes, gums, resins and oleoresins

viii) Fodders

ix) Green Manure, green-leaf manure plants

x) Avenues, fuel trees, hedge plants, shade trees and wind break plants

xi) Timber

xii) miscellaneous economic plants

இதைத்தவிர க்ளாஸரி, குறிப்பு நூல்கள் என்று தருகின்றது நூல். இவற்றையும் தவிர தமிழ், மலையாளம், தெலுகு, கன்னடம், ஹிந்தி என்று ஐந்து அட்டவணைகளில் மரம் செடி கொடிகளின் அறியப்பட்ட பெயர்களில் நிரலிடுகிறது. அமுத நிலையம் அன்று போட்டிருக்கிறது. இன்றும் விற்பனையில் இருக்கிறதா தெரியவில்லை. பல துறையைச் சார்ந்தவர்களுக்கும் இந்த நூல் ஓர் அரிய பொக்கிஷம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

தொல்காப்பிய மேற்கோள் விளக்க அகராதி

தொல்காப்பியப் பொருளதிகாரம் பற்றிப் பலரும் அறிந்திருப்போம். தொல்காப்பியம் முழுமைக்குமே பலரும் உரைகள் எழுதியுள்ளார்கள், பழங்காலத்திலும், நம் காலத்திலும். அத்தனையும் தொகுத்து உரைவளம் என்ற பதிப்புகளும் வந்துள்ளன. ஆனால் தொல்காப்பியத்திலும், உரைகளிலும் காணக் கிடைக்கும் பல அரிய பழஞ்செய்யுட்கள் ஆகியவற்றைத் தொகுத்து, அந்தச் செய்யுட்களுக்கான விளக்கங்கள் எங்கு எங்கு வந்துள்ளன என்ற அட்டவணை மாதிரி யாராவது செய்ததுண்டா? இலக்கண அகராதி என்று கல்விக்கடல் கோபாலய்யர் செய்து அது வந்திருக்கிறது. மேலும் இளவழகனார் என்று நினைக்கிறேன், துணை நூல் என்று செய்திருக்கிறார், நம் காலத்தில். கணினியின் உதவிகள் இருக்கும் நம் காலத்தில் பல நூல்கள் சிறப்பாகக் கொண்டு வரமுடியும், துணைக் கருவி நூல்கள் என்ற முறையில். ஆனால் 1935 ஆம் வருடத்தை நினைத்துப் பாருங்கள். என்ன தொழில் நுட்பம் இருந்தது? ஒரு துணை நூல் செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு மெனக்கிட வேண்டும்! ஆனால் சிரமம் கருதாமல் ஒரு தமிழறிஞர் மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அன்றும் செய்துள்ளார்.

தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி முதலியன - தமிழறிஞர் திரு ம ஆ நாகமணி ; சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை 1935. அன்றையவிலையில் ராப்பர் பைண்டு 1-4-0, கலிகோ பைண்டு 1-8-0.

முகவுரையில் எழுதுகிறார்:

“புதியது தீது பழையது நன்றென்றல்
பூமி யுள்ளோர்
விதியது வேபொரு ளென்னன்மி னல்லோர்
விருப்ப முண்டேற்
புதியது நன்று பழையது தன்னினும்
பூம டந்தை
பதியதன் மேவிற் பருமுத் தொடா
டையைப் பார்மின்களே”

மேற்கோள் விளக்கம், பொருட்குறிப்பு, பேராசிரியர், நச்சினார்க்கினியர் வரலாறுகள் அடங்கிய இப்புத்தகம், பொருளதிகாரம் பயிலுபவர், ஆராய்ச்சி செய்பவர், பதிப்பிப்போர் ஆகியவர்களுக்குப் பெரிதும் பயன் தருவதாகும்.
- என்று குறிப்பிடுகிறார். இது உண்மை.

160 பக்கங்கள் ‘தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி அட்டவணையே ஓடுகிறது. அட்டவணையில் ஐந்து தூணிடங்கள் உள்ளன. தொல்காப்பிய சூத்திர எண், சி வை தாமோதரனாரின் பதிப்பு பக்க எண், புதுப்பதிப்பு பக்க எண், மேற்கோள் முதற்குறிப்பு, விளங்கிய இடங்கள் என்னும் ஐந்து பகுபொருள்கள் ஐந்து தூணிடங்களை நிரப்புகின்றன. உதாரணமாக, ‘அகமலியுவகையளாகி’ என்ற சொற்றொடர் மேற்கோளாக தொல்காப்பிய சூத்திரத்தில் ஆளப்பட்டிருந்தால், அட்டவணை - சூ 261, சி வை 491, பு ப 813, அகமலியுவகையளாகி, அகம் 86 என்று அட்டவணைப் படுத்துகிறது. இவ்வாறு 160 பக்கங்களில் நூற்றுக்கணக்கான மேற்கோள்களைச் சிறப்புற அட்டவணையாக்கிப் பேருதவி செய்திருக்கிறது நூல். இதைத் தவிர 110 பக்கங்களில் அருஞ்சொற்பொருள் அகராதி வேறு தருகிறது. இதைத் தவிர பேராசிரியர் வரலாற்றையும், நச்சினார்க்கினியர் வரலாற்றையும் மிக விரிவாக குறிப்புகளுடன் ஆசிரியர் தந்திருக்கிறார். தவிர்க்க முடியாமல் நூலில் புகுந்துவிட்ட பிழைகளுக்கான திருத்தங்களையும் பட்டியலிட்டுத் தந்துள்ளார் ஆசிரியர்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

நம்மாழ்வார் மீது பழம் பாடல்கள்

ஆழ்வார் திருநகரி பெரியன் வெ நா ஸ்ரீநிவாசன் அவர்கள் பிரசுரித்தது என்று சொல்லிப் பழம் ஏட்டுச் சுவடியில் கண்டபடி ஒரு பிரபந்தம், மாறன் செந்தமிழ் மாநாடு சிறப்பு மலர்,, ஆழ்வார் திருநகரி, 17-2-68 என்னும் மலரில் அச்சிடப்பட்டிருக்கிறது. மிக இனிய தமிழ். விஷயம் நம்மாழ்வார் மீது பாடப்பட்ட காதல் பிரபந்தம். யார் பாடினார்கள் தெரியவில்லை. ஆரம்பமே களை கட்டுகிறது.

’சீரார் செழுங்கமலத் தேனே திருமகளே!
வாராழித் தெள்ளமுதின் வந்துதித்த மாமகளே !

மண்மகளாய்ப் பின்னை மடமகளாய் வாழ்சனகன்
பெண்மகளாய் வந்து பிறந்தகுலப் பெய்வளையே!

சிட்டர் மகிழ்ந் தேத்தத் திருப்பல்லாண் டோதியநற்
பட்டர்பிரான் பெற்றெடுத்த பைந்தொடியே ! பாமாலை

பாடிக் கொடுத்தவளே! பாரதியே! பைந்தாமம்
சூடிக் கொடுத்தவளே! தூண்டா மணிவிளக்கே !

தென்னரங் கேசற்கும் திருவேங் கடவற்கும்
மன்னற்கும் சோலை மலைவாழ் அழகற்கும்

ஆலவிடப் பாம்பின் அணைமீது கண் துயிலும்
கோல வடபெருங் கோயி லுடையாற்கும்

மாமால் எனும் பேர் வழுவாமலே யளித்த
பூமாதே! வாழ்வில்லி புத்தூர்க்கு நாயகமே !

மானனையார் தங்கள் வயிற்றில் பிறவாமல்
ஆனதுழாய் நீழல் அவதரித்த ஆரமிழ்தே !

பாமகளே ! ஆழ்வார் பதின்மருக்கும் நன்மகளே !
நாமகளே ! உன்னை நயந்து தொழுதேன் அடியேன்.’ ...

என்று ஆரம்பிக்கிறது இந்தக் காதல் பிரபந்தம். நம்மாழ்வாரைக் குறிப்பிடும் போது,

’நான்மறையும் செந்தமிழ் நூல் நாலாகவே விரித்துத்
தான் உலகிலே உரைத்துத் தாபித்த தாளாளன்,

நாவலர்கள் தம்பிரான், நாதமுனி தம்பிரான்,
பூவலயம் போற்று பெரும்பூதூரன் தம்பிரான்,

காமாதி வென்ற கருணேசன், கார்மேனி
மாமால் இதயம் மலக்குதிரு நாவுடையான்,

தக்கிலமே என்றுரைத்த தண் தமிழ்நூற் பாடலிலே
அக்கமலம் பாடவல்லான், ஆழ்வார்கள் தம்பிரான்,

வஞ்சப் பரசமய வாதியரை வென்றபிரான்,
செஞ்சொல் தமிழ்தேர் திருவாய்மொழிப் பெருமாள்

தண்ணார் மகிழ்வாசத் தாமம் அணி மார்பன்,
பண்ணார் தமிழ்ச் சீர்ப் பராங்குச மாமுனிவன்,

செங்கயல்கள் தாவும் திருச்சங்கணித் துறைசேர்
பொங்குதிரை வீசும் பொருநைத் துறையுடையான்,

நாதன், சடகோபன், நாவீறு டையபிரான்,
வேதம் தமிழாய் விரித்த கவிராசன்,

அன்னக் கொடியுடையான், அம்போருகா சனத்தான்,
செந்நெல் கழனித் திருவழுதி நாடுடையான்,

பொங்குமறைத் தமிழ்முனிவன், பொதியமலைக் காவலவன்,
கொங்கலர்பூத் தங்கும் குமரித் துறையுடையான்.. ’

என்று முழுதும் ஊற்றெழுந்த செழுந்தமிழின் உவகைப் பெருக்காய்ப் பாய்கிறது முழு பிரபந்தமும். எந்தக் காலம் தெரியவில்லை. யார் எழுதியது தெரியவில்லை. இது போல் மொத்தம் 155 கண்ணிகள். அததனையும் ஆழ்வார் மேல் அருங்காதலில் ஊறும் நறுந்தேன்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

நுட்பமான மொழியும் அனுபவமும்

மிகவும் நுட்பமான அனுபவத்தை மொழியில் கொண்டுவர எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது ! மொழியை வைத்துக் கேள்வி எழுப்பலாம். ஆனால் மொழிந்த திறமையை நினைந்தால் வியப்புதான்.

உத்தர கீதையில் ஓரிடம் -- (எனது மொழிபெயர்ப்பில்)

'பானைக்குள் சூழ்ந்த ஆகாசம்
பானையோடு தான் செல்லும்
பானையுடைந்தால் அவ் ஆகாசம்
மானும் இந்த
ஜீவன் சுமக்கும் ஆத்மனுமே.

பானை உடைந்தால் ஆகாசம்
போன்றே ஆத்மனில் அடக்கம் என்றே
உணர்ந்தவர் எவரோ அவர் செல்வார்
உயர்ந்த நிராலம்ப நிலைக்கேதான்
ஞான ஒளியால் ஐயமில்லை.’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*** 

தயக்கமும் தயவும் கருணையே!

அழகியமணவாளப் பெருமாள் நாயனாரின் ‘அருளிச்செயல் ரஹஸ்யம்’ என்னும் நூலை வாசிக்கும் போது தோன்றுகிறது. வைணவத்தில் பொதுவாகத் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கும் போது எம்பெருமானாரின் கருணையே கருணை! ‘ஆசையுடையோர்க்கெல்லாம் கூறுமின் என்று பேசி வரம்பறுத்தார் பின்’ என்றபடி அனைவரும் தெரிந்துகொள்ள இப்படி வழி வகுத்து வைத்திருக்கிறாரே என்று நெஞ்சம் நனைகிறது.

வைணவத்தையும், ஆழ்வார்களின் அருளிச்செயல் ஆழ்பொருளையும் உன்னி உணரும் போது திருக்கோட்டியூர் நம்பியின் கவலையும், தயக்கமும் புரியவந்து அதுவே எம்பெருமானாரின் பெருங்கருணையை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள வைக்கிறது. முதலில் ஆழ் பொருளை அறிவிக்க ஸ்ரீராமாநுஜரைப் பதினெட்டு தடவை நடையாய் நடக்க விட்டார் என்பது உறுத்துகிறது. ஆனால் ஆழ்வார்களின் தத்துவ ஆழ்பொருள் உலகில் போய்ப் பார்க்கும் போது கடைசியில் சொன்னாரே அதெப்படி மனம் வந்தது, எவ்வளவு கருணை இருந்திருந்தால் திருக்கோட்டியூர் நம்பி சொல்லியிருப்பார் என்றும் தோன்றுகிறது. அப்படியும் தோன்றுகிறது. இப்படியும் தோன்றுகிறது. எம்பெருமானாரின் கருணை இல்லையேல் நம் போல்வார் அறிய வழி இல்லாமல் போயிருந்திருக்கும். ஆனால் ஆழ்வார்களின் அருளிச்செயலின் ஆழ்பொருளை உணர உணர திருக்கோட்டியூர் நம்பியின் கவலையும், பதைப்பும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த inevitable and intrinsic angst ஒரு பக்கமாக முடிவு செய்துவிட முடியாமல் தொடரும் ஒன்று என்றுதான் தோன்றுகிறது. என் செய்வேன் உலகத்தீரே !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்


***

உலகமும் பகவானும்

’ஈதென்ன உலகியற்கை!’, ‘இருள்தருமா உலகத்துப் பிறவி’ என்றெல்லாம் சொல்வதும் ஆழ்வார்கள்தாம் ஒரு நிலையில். ‘கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்’ மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்’ இப்படிச் சொல்வதும் ஆழ்வார்கள்தாம் வேறொரு நிலையில். உலகம் என்று பார்க்கும் பொழுது அதன் நிலை வேறு. உத்தமனுடைய சரீரம் என்று பார்க்கும் பொழுது அதன் நிலை வேறு. இதை ஸ்ரீநாராயண பட்டத்ரியும் பாடுகிறார்:

கஷ்டா தே ஸ்ருஷ்டி சேஷ்டா
பஹுதர பவ கேதாவஹா ஜீவபாஜாம்
இதி ஏவம் பூர்வம் ஆலோசித மஜித
மயா நைவமத்யாபி ஜானே:|
நோ சேஜ்ஜீவ: கதம் வா மதுரதரம் இதம்
த்வத்வபுச் சித்ர ஸார்த்ரம்
நேத்ரை: ச்ரோத்ரைச்ச பீத்வா
பரமரஸ சுதாம் போதி பூரே ரமேரன்||

முன்பெல்லாம் நான் கருதினேன்,
உயிர்களுக்குப் துன்பங்கள் பலவகையாய்
விளையக் காரணமாம்
படைப்பென்னும் காரியம்
கொடுமையிலும் கொடுமை என்று
முன்பெல்லாம் நினைத்தேன் யான்.
அந்தோ! வெல்லவொணா பரம்பொருளே!
இப்பொழுதோ
அவ்வாறு யான் எண்ணவில்லை.
உயிர்கள்தாம்
உணர்வெனும் சுவையே
உருவான நின் திரு மேனியைக்
கண்ணால் கண்டு பருகிக்
காதால் கேட்டுக் களித்து
உயர்வற உயர்ந்த சுவையமுதக் கடலாடி
உன்னத அனுபவமே
வேறு எவ்விதத்தில் தாம்பெறுவர்
படைப்பென்பது இல்லையென்றால்?
(தமிழாக்கம் என்னுடையது)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பாகவத அம்மாக்கள்

ஓங்கோலோ நெல்லூரோ அங்கிருந்து எந்தக் காலத்திலிருந்தோ வந்து ஸ்ரீபெரும்பூதூரே கதியெனத் தங்கிப் பல தலைமுறைகளைக் கண்ட கண்கள் இப்ப இப்பதான் டெலஸ்கோப் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அங்கு இருக்கும் ஸ்ரீராமானுஜரின் வழிவந்தவர்களான ஆசூரி ஸ்வாமி திருமாளிகையில் பெரிய ஆசூரி ஸ்வாமியிடம் அந்தக் காலத்தில் பல ஸ்ரீவைஷ்ணவ ரஹஸ்ய கிரந்தங்களைக் காலக்ஷேப முறையில் பாடம் கேட்டு அப்படியே மூலபாடம் வ்யாக்யானம், அதற்கு பத அர்த்தங்கள், நுட்பப் பொருட்கள் என்று நினைவில் வைத்தே சொல்லிக் கொண்டிருந்தார் மூதாட்டி. அந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் இந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் என்று authorwise catalogueம் போகிறவாக்கில் சொல்லிக்கொண்டு போகிறார். இத்தனைக்கும் தமிழ் எழுத படிக்கத் தெரியாது. தெலுங்குதான். தெலுங்கு லிபியில் போட்ட மணிப்ரவாள வ்யாக்யானங்களே மூதாட்டிக்கு ஜீவாது. மூதாட்டியின் பெயர் பத்தி யதிராஜம்மாள். அவருடைய அறை எது தெரியுமோ? வாசலில் நின்று பெல்லை அழுத்தினால் அதோ அந்தக் கடைசியில் நேர் ரேழி ஓடி கொல்லையில் முடிகிறதே அந்தக் கதவிற்கு முன்னால் போவோர் வருவோருக்கு வழிவிட்டு ஓரமாகக் கிடக்கை. வீட்டில் என்ன வண்டி வந்து போய்க்கொண்டிருக்கப் போகிறது? ஓரமாகத்தான் மூத்த தலைமுறைகளின் வாசம். நடுவில் அமர்ந்து நாம் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறோம் என்று எனக்குப் புரிந்தபாடில்லை. முதலில்தான் தயக்கம். பிறகு பேசத் தொடங்கியதும், சேஷத்வ போக்த்ருத்வங்கள் அதற்கும் மேற்பட்டு பாரதந்த்ர்ய போக்யதைகள் என்று அகண்ட காவிரியாய் அரட்டை போய்க்கொண்டிருக்கிறது. எனக்கோ மிகவும் பிடித்த பேச்சு. திரும்பிப் பார்த்தால் அரைநாள் ஆகிவிட்டிருக்கிறது. வடமொழிப் பதங்கள், வ்யாகரண கோட்பாடுகள், அவற்றைப் பயன்கொண்டு நிர்வாஹங்கள் எல்லாம் படிக்காத அந்தக் காலத்துப் பெண்மணி தள்ளாத வயதில் தடுமாட்டம் இல்லாத நினைவோடு கூறுவது எப்படி முடிந்தது?

முதலில் மாதர்கல்வி என்பது என்ன ? இது என்ன? என்றோ ஆயிர வருஷங்களுக்கு முன்னால் ஒருவர் அகழ்ந்த ஊருண்கேணி. காலத்தின் ஒற்றை வழிப்பாதைகளில் வந்து வந்து மொள்ள கொடுத்துக் கொண்டே இருக்கும் வற்றாத ஏரி. ஸ்ரீராமானுஜரின் இந்தப் பிரபாவங்களுக்கு ஏது கல்வெட்டு? கல்வெட்டா? உயிர்க்கட்டாக காலம் தோறும் தொடர்கிறதே இந்த மாதிரி பெண்ணுலகத் திருவிளக்குகளான பாகவத அம்மாக்கள்தான். முன்னரே சொன்னேனே தெலுங்கு எழுத்தில் வந்த சுமார் ஐயாயிரத்துப் பக்க அட்லாஸ் சைஸ் நூற்தொகுதியில் 15 புத்தகங்கள் அடுக்கடுக்காக உரைகள் அரும்பதங்கள். ப்ரூஃப் பார்த்தவர்கள் பாகவத அம்மாக்கள். இன்று பார்த்தாலும் அந்த ஸெட்டில் பிழைகள் பத்து எண்ணிக்கைக்கு வராதாம்.

பல சமயம் சந்நிதிக்குக் கூடப் போகாமல் வந்திருக்கிறேன். ஆனால் போனவுடன் இந்த பாகவத ஆன்மாவைச் சந்திக்காமல் வந்ததில்லை. இன்று போனால் சந்நிதிக்கு மட்டும்தான் போகமுடியும். ஏனென்றால் அங்குதானே ஆசார்யன் திருவடியில் அந்த மூதாட்டியும் இருப்பார், ஓரமாக அன்று; ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி உரிமையோடு நடு ஓலக்கத்தில், உதிக்கும் உத்தமர்தம் சிந்தையுள் ஒண்கழலோன் யதிராஜன் உவப்புக்கு இலக்காகி. எனக்கு ஒரு நப்பாசை! எப்பொழுதாவது என்னைப்பற்றி 'அதோ அந்த வாயாடிப் பையன் வந்திருக்கிறான்' என்று சொல்லமாட்டாரா யதிகட்கிறைவன் திருச்செவி கேட்க என்று.

*
மகாபாரதம் 18 பர்வங்கள் தமிழில் கொண்டு வந்த பெரியவர் மணலூர் ஸ்ரீ வீரவல்லி ராமானுஜாசாரியார் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். பல வித்வான்களைக் கொண்டு 1906ல் தொடங்கி 30 வருடங்கள் விடாமல் முயன்று சாதித்த சாதனை. அதற்காக மனிதர் தம் வீடு வயல் எல்லாவற்றையும் விற்று கொண்டு வந்தார். அப்படிப்பட்டவருடைய மகள் தி நகரில் இருப்பதாகச் சேதி தெரியவே, விடாமல் தேடி அவரைச் சந்திக்கப் போனேன். இது 1990களின் கதை. அப்பொழுது ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தது. எங்கு வேண்டுமானாலும் சுற்றுவதற்கு. தேடி, அந்த மாமியைப் பார்க்கப் போனால் ஒரு வயதான பெண் வெளியே வந்தார். அவரிடம் கேட்டேன். ராமானுஜாசாரியார் பெயரைச் சொல்லி, அவருடைய மகள் இங்கு இருக்கிறாராமே என்று. 'தெரியல்லியே' என்ற பதில் வந்தது. சரி என்று திரும்பலாம் என்றால், நல்ல வேளை உள்ளே இருந்து, யார் வேண்டும்? எந்த ராமானுஜாசாரியார்? என்று கேட்ட படி ஒரு மாமி வெளியே வரவும் பிழைத்தேன். அங்கு பேசிக் கொண்டிருந்த பொழுதுதான் கல்யாணி மாமி என்ற ஒருவரைச் சந்தித்தேன். கல்யாணி மாமிக்குப் பாவம் காதுதான் கண்களும். ஆனால் குரலை வைத்தே, பேச்சை வைத்தே ஒருவருடைய படிப்பு எவ்வளவு அவருக்கு எவ்வளவு தெரியும் என்பதைத் துல்லியமாகக் கணக்கு போடும் சாமர்த்தியம் அவரிடம் இருந்தது. அது நான் கண்டு அதிசயித்த ஒன்று. பார்வை பிற்காலத்தில் போயிற்றோ தெரியவில்லை. ஆனால் மாமியிடம் ஏராளமான நோட்டுப் புத்தகங்கள்! எல்லாம் அவர் சிறுவயதிலிருந்து பல வித்வான்களிடம் காலக்ஷேபம் கேட்ட குறிப்புகள், எங்கு என்ன கதை பிரசங்கம் நடந்தாலும் அந்தக் காலத்தில் மாமியை நோட்டும் கையுமாய்ப் பார்க்கலாமாம். விடாமல் சிறந்த நூதன விஷயங்களைக் குறிப்பெடுத்து வைத்து அந்த நோட்டுக் கிடங்குகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் கல்யாணி மாமி. 'உனக்கே எல்லாம் தந்துட்றேன் நீ ஏதாவது செஞ்சுக்கோயேன்' என்று அழாக்குறையாக ஒரு நாள் மாமி என்னைக் கேட்ட பொழுது நான் கண் கலங்கிவிட்டேன். அந்த நோட்டுகளை வாங்கிக் காப்பாற்றியிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றி என்ன பயன்? அப்பொழுது என் மனத்தில் தோன்றிய எண்ணம். 'என்ன ஆனாலும் நாம் நம் வாழ்க்கையில் இந்த மாதிரி நோட்டுகளில் குறிப்பெடுக்கும் வேலை மட்டும் வைத்துக்கொள்ளக் கூடாது' என்று. ஆமாம் அப்புறம் அதைக் கட்டி மேய்த்து ஆள் தேட வேண்டும்.!

ஆனால் மாமியிடம் பேசும் போது என்ன ஞானம்! என்ன சம்ப்ரதாயமான விஷயங்களில் பரிச்சயம்! பெண் கல்வி என்பது ஏதோ ஒரு விதத்தில் மீறி வளர்ந்து கொண்டுதான் நின்றிருக்கிறது. ஆனால் அவரைக் கவனிக்க அவரது உற்றார் உறவினர்கள் யாரும் இல்லை போலும், அல்லது இருந்தும் இல்லையோ என்னவோ..! எங்கோ முதியோர் இல்லங்களில் புகல் தேடிக் கொண்டிருந்தார் அந்த மாமி. யார் யாரோ பெரியவர்களிடம் எல்லாம் கேட்டிருக்கிறார் மாமி. குறிப்புகள் அந்த விவரங்களைத் தந்தன. ஆனால் என்ன நோட்டில் என்ன குறிப்பு இருக்கிறது என்ற மாஸ்டர் நிரல் மாமியின் மூளைக்குள் இருந்தது ஆச்சரியம்! இத்தனையாவது நம்பர் போட்ட நோட்டை எடுங்கோ என்பார். அதில் இத்தனையாவது பக்கத்தில் நீங்க கேட்டதற்கான குறிப்புகள் இன்னார் சொன்னது இருக்கும் பாருங்கள் என்பார். அப்படியே இருக்கும். ஆனால் அவரால் பார்த்து எடுக்க முடியாத நிலை.

இப்படியெல்லாமும் நடந்த காலங்கள் உண்டு. அதுதான் நான் கல்யாணி மாமியைப் பற்றிக் கேள்விப் பட்டது. அப்புறம் நானும் கேள்விப் படவில்லை. என்னுடைய விசாரங்களும் பல திசைகளில் செல்லத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டின் பிராசீன கல்வி வாய்ந்த பெண் திலகங்கள் சிலரையாவது நான் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் பத்தி யதிராஜம்மா, கல்யாணி மாமி, இவர்களையெல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் ஏன் என்னை நாடி என் வழியில் வரவேண்டும்! தெரியவில்லை. காலமே சில காட்சிகளைச் சிலரிடம் பிரத்யேகமாகக் காட்டிவைக்கும் போலும்! இப்படி எவ்வளவு கல்யாணி மாமிகள் கேட்பாரற்று, சமுதாயம் என்ற மெத்தனம் தான் பாட்டுக்குப் போகும் போக்கில்...ம் .. ம் யாரையும் குற்றம் சொல்லத் தோன்றவில்லை. கல்யாணி மாமியின் பார்வையற்ற விழிகள் கொஞ்சும் முகம் மனத்தில் நன்கு நிழலாடுகிறது. ஜீவன்கள் சிலவும் பலவுமாய் உண்டு உயிர்த்து உரையாடிச் செல்லும் வாழ்வில் இப்படி உன்னத கணங்கள் நினைவில் குளப்படி நீராய்த் தேங்கி அதில் நம் முகம் பிரதிபலிக்கும் போது.....! எங்கோ ஒரு குழலோசை கேட்கத்தான் செய்கிறது. அது எங்கே என்று அறிந்துவிடும் ஆர்வத்தில்தான் உயிர்கள் சென்றவண்ணம் உள்ளனவோ! செல்லும் போது ஓர் உசாத்துணைதானே சத்சங்கம்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்