Thursday, March 9, 2023

பெண் என்னும் பெருந்தகைக்கு ...

பெண் என்னும் பெருந்தகைக்கு

உன்னோடு நான் பிறந்தேன்
உன்னோடுதான் நான் திரிந்தேன்.
உன்னோடு விளையாடி
உன்னோடு போராடி
உன்னோடு மன்றாடி
உன்னோடுதான் வளைய வந்தேன்.
தம்பியாக உன்னுடன் நான்
பிடித்த அடங்களில்
நீதான் விட்டுக் கொடுத்தாய்.
நீயாக சில நேரம்
உனக்கு அழகு அதுதான் என்று
உற்றோரும் பெற்றோரும் உபதேசித்து 
வேண்டா வெறுப்பாய்ச்
சில நேரம்.
ஆனால் தம்பியாக நான் உனக்குச்
செய்திருக்க வேண்டிய சேவைகள்தாம் எத்துணை!
நானும் செய்யவில்லை.
நாலும் அறிந்து சூழ் மனிதர்
எவரும் அதுதான் எனக்கு அழகு
என்று உபதேசித்து உறுத்தவில்லை.
ஆண்பிள்ளையின் அழகு என்று
அனைவராலும் ரசிக்கப்பட்டது.
விரசம் என்ன என்றால்
நீயும் ரசித்தாய்
என் தம்பி ஒரு முரடனென்று.
பண்படுத்திப் படுத்திய
பண்பாட்டின் அனிச்சைவினை
அது என்று நீ அறிவாயோ
அறியேன் அறிதொறும் என்னை
நாணம் கவிகிறது.
அண்ணனாக உன்னை
ஏவிக் கூவி அடக்கி நியமித்து
அதிகாரம் செய்திருக்கிறேன்;
ஆனால் அண்ணனாக நான்
காட்ட வேண்டிய பாசம்?
அக்கறை என்ற பெயரில்
அத்தனையும் மிச்சமாகி
நிற்கிறது மோசம்.
என் அண்ணா என்னிடம்
எவ்வளவு பாசம் !
என்று நீ விதந்தோதும்
கணம் ஒன்றில்
தூக்குக் கயிற்றில்
தொங்குகிறது என் உள்ளம்.
கல்யாணமாகிப் போய்விட்ட
கண்மணிகளை இழந்து
பாசக் குருடாய்
அலைகிறது நெஞ்சம்.
அண்ணன் என்ற முகமூடி களைந்து
அலறுகிறது அன்பின் உயிர்;
தம்பி என்ற தகவிழந்து
புயல்பறவையாய்த்
தடுமாறி அழிகிறது ஏழைப் பாசம்;
அடுத்த வீட்டுத் தோழியாய்
எதிர் வீட்டு நண்பியாய்
ஒரு வகுப்புச் சகியாய்
மேல் வகுப்புப் பாச தேவதையாய்
நீ வந்த போதெல்லாம்
நான் என்னை மட்டுமே
கண்டு கொண்டிருந்தேன்;
என் ஆண் அகங்காரத்தின்
உத்யான வனமாய் உன்னைக் கருதிய
என் பிழைக்கே உன்மத்தமானேன்.
அப்பொழுது எல்லாம்
உவந்து உவந்து நீ எனக்கு
உணர்த்திய குறிப்பையெல்லாம்
என் மமகாரத்தின் முற்றத்தில்
நீ ஆடிய நடனம் எனக் களித்தேன்.
தாயாகி நீ வந்த போது
தனயனாகிச் செல்வனாகித் திமிர்ந்தேன்;
பாட்டியாகி நீ வருங்கால்
என் படாடோபத்தின் பாசறை
என மகிழ்ந்தேன்;
ஆனால் என் போலித்தனம் எல்லாம்
கருகிப் போய்ச்
சுய உணர்வின் மின் தந்தியில்
அடிபட்ட இளம் புள்ளாய்
இருட்டில் சொட்டும்
பனிமழைக்கு நடுங்கி மாயும்
என் முன்னர் 
தெய்வமாகி
வந்து விடாதே!
பெண்ணே! 
இப்படிக்கு இந்த வேதனையுடன்
இறக்க விரும்பும்
ஓர் மனித உயிர். 
(ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் கவிதைகள், பக்கம் 198, தமிழினி, 2021)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


Tuesday, March 7, 2023

வாழ்வதற்கான தத்துவம் - தொடக்கம்

’என்ன இப்படி இறங்கிவிட்டாய், திடீரென்று?’ என்று பார்க்கிறீர்களோ! நியாயம்தான். வைணவம், தத்துவம், வேதாந்தம், மெடஃபிஸிகல் என்று எழுதிக் கொண்டிருந்த ஆள் திடீரென்று ‘அன்றாட வாழ்க்கையைப் பார்ப்போம் அப்பா’ என்று விரக்தியடைந்து எழுதுவது போன்று தொடங்கவில்லை. உண்மையிலேயே என்ன தத்துவம், மதம், கோட்பாடு, யோக நிலை என்றெல்லாம் யோசித்தாலும் கடைசியில் மிஞ்சுவது என்ன? இதோ இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, இந்த வாழ்க்கை. உணவு, பசி, தூக்கம், விழிப்பு, உடல்நலம், அலைச்சல், கவலைகள், பிறகு கொஞ்சம் ஓய்வு, ஓய்வில் படிப்பு, சிந்தனை, அதிலும் கவலை, பிறகு ஏதோ நிம்மதி, பிரச்சனை, குடைச்சல், பின்னர் தீர்வு, பெருமூச்சு, இதற்கு நடுவில் நாளுக்கு நாள் வயதாகிப் போய்க் கொண்டிருக்கும் கண்ணிற்குத் தெரியாத சன்னமான ஓட்டம் -- இதெல்லாம் கலந்த உருவமாக வாழ்க்கை. அப்படியென்றால் எந்தத் தத்துவம், ஆன்மிகம், யோகம், அதீதம் என்றாலும் எல்லாம் நாமாகி நிற்கும், நடக்கும், நகரும், ஓடும், ஓடாமல் உட்காரும், பின் தொடரும் வாழ்க்கை என்பதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஏதாவது உதவி செய்தால்தான் அந்தத் தத்துவம், கோட்பாடு எல்லாவற்றிற்கும் அர்த்தம் ஏற்படுகிறது. இல்லையென்றால் ‘அப்பப்பா பெரிய விஷயம் எல்லாம். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று மிகவும் நாசூக்காக நம்முடைய மனமே அதை ஓரத்தில் அல்லது கைக்கெட்டாமல் பரணில் வைத்துவிட்டு ஜாக்கிரதையாகத் தள்ளிப் போய்விடுகிறது. அதாவது வாழ்க்கைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்றை நம்மால் உண்மையில் அக்கறை கொண்டு ஈடுபட முடியவில்லை. இது குற்றமன்று. ஏன் எனில் இப்படித்தான் நாம் கட்டமைக்கப் பட்டிருக்கிறோம். இதுதான் நாம். மனிதர் என்று சொல்லும் போது மனம் உடையவர் என்ற பொருளில், மனம் என்பது வாழ்க்கை என்பது யாது, அதற்குத் தேவை என்ன என்பதைக் கைக்கொண்டும், தொடர்பில்லாதவற்றைத் தள்ளி வைத்தும் கரிசனமும் சிக்கனமும் காட்டி நம்மைக் கொண்டு செல்கிறது. தொடக்கத்திலேயே இந்த உண்மையைக் கௌரவமாக, வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுவிடுதல் நலம். 

இந்த இயல்பான உண்மையை ஏற்றுக் கொண்டான பிறகு நம் விஷயங்கள் கொஞ்சம் சுலபமானது போல் ஆகிவிடுகின்றன. வாழ்க்கையை அமுக்கி அதன் மேல் ஏறி நின்று எங்கோ வானத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மனம் தன் இயல்பான இயக்கத்திற்கு வந்து சேருவதில் நஷ்டம் எதுவும் இல்லை. லாபமே. இப்பொழுது ஒரு புதிய கேள்வி பிறக்கிறது. வாழ்வதுதானே வாழ்க்கை? பின் பேசாமல் வாழ்ந்து விட்டுப் போவதை விட்டுவிட்டு ஏன் அதற்கான தத்துவம் என்று யோசிக்க வேண்டும்? இது ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்குப் பதிலாக ஓரமாக நின்று ரன்னிங் காமண்ட்ரி சொல்வது போல் ஆகாதா? ஆம். இந்தக் கேள்வியை நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். அதாவது புரியாத அதீத விஷயங்களைப் பற்றித்தான் தத்துவம் என்று நினைத்துப் பழகிய நமக்கு அன்றாடம் வந்து சேரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்வதைப் போல் பெரிய யோகம் எதுவும் இல்லை என்று சொன்னால் நம்ப முடியாது. ஆனாலும் வாழ்க்கைக்கான தத்துவம் என்று நாம் தொடர்ந்து பார்க்கும் பொழுது இந்தக் கேள்வி பொருந்தாது என்பது தானே புரியும். அதுமட்டுமன்று. நாம் ஏதோ அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றித்தான் பேசுகின்றன என்று நினைத்த பல தத்துவங்களும் உண்மையில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வந்துவிட்டுத்தான் வார்த்தைகளில் சிக்கிக் கொண்டு எங்கோ அந்தரத்தில் நின்றுவிட்டன என்பதும் நமக்குப் போகப் போகப் புரியும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***