Sunday, September 11, 2022

விவேகாநந்தரின் சிகாகோ பிரசங்கம் - சில சிந்தனைகள்

1893ல் சிகாகோ நகரில் உலக அனைத்து மதங்களின் மாநாடு நடந்தது என்பதும், அதற்கு இந்தியாவிலிருந்து சிலர் போய்க் கலந்து கொண்டனர் என்பதும், அதில் முக்கியமாக ஹிந்து மதப் பிரதிநிதியாகச் சுவாமி விவேகாநந்தர் கலந்து கொண்டார் என்பதும் இன்று அனைவரும் அறிந்த செய்தியாகத்தான் இருக்க வேண்டும். விவேகாநந்தரைக் கண்டு பிடித்து, அவரை அனுப்பி உலகிற்கே தந்து வான் புகழ் கொண்டதும் தமிழ்நாடே என்பதும் பலர் அறிந்த செய்தியாக இருக்கலாம். சென்னை, அதுவும் திருவல்லிக்கேணிவாசிகள் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார்கள். 

சென்னை இளைஞர்கள் அவரை இனம் கண்டு கொண்டபோது அவருக்கு விவேகாநந்தர் என்ற பெயர் ஏற்படவில்லை. ஏதோ வங்காளி சாது, விவிதிஷாநந்தர், சச்சிதாநந்தர் என்று அவ்வப்பொழுது ஒரு பெயரில்தான் பலரும் பேசிக் கொண்டனர். மிகச்சரளமாக இங்கிலீஷ் பேசக் கூடிய வங்காளத்துத் துறவி அனைவரின், குறிப்பாக இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். கல்லூர்க் கல்வி என்பது அப்பொழுதுதான் சமுதாயத்தில் வேர் விட்ட நேரம். உலக ஜன்னல்கள் பலவும் மக்களுக்குத் திறந்து கொண்ட புது யுகம் ஆரம்ப காலம். கேள்வி கேட்பதுதான் உயர்வு, மகிழ்வு, மன விரிவு என்று அனைத்துக்கும் தொடக்கம் என்று உற்சாகம் மக்களிடை பரவத் தொடங்கிய விடியற்காலம். கிளம்பும் போது கப்பல் கம்பெனிக்கு என்ன பெயர் கொடுப்பது, வெறுமனே சுவாமிஜி என்றால் போதாதே என்ற நிலை வந்த போது, அளசிங்கமய்யங்கார் என்ன பெயர் போடட்டும் என்று கேட்கிறார். அப்பொழுது யதேச்சையாக நரேந்திரர் சொன்ன பெயர் விவேகாநந்தர். 

விவேகாநந்தர் ஹிந்து மதத்திற்காகப் போனது போல வீர்சந்த் காந்தி ஜைனத்திற்கு, தர்மபாலா புத்த மதத்திற்கு, என்று இன்னும் சிலர். இது போதாது என்று அளசிங்கமய்யங்காரின் சொந்தக்கார இளைஞர் ஒருவர் நர்சிம்மாசாரியார் என்பவர் ஏதோ வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் பல வருஷங்களுக்கு முன்பே ஏதோ கப்பலில் ஏறிக் கொண்டு போய் உலகமெல்லாம் சுற்றிவிட்டு, பார்த்தால் விவேகாநந்தர் போகின்ற நேரத்தில் அங்கு வந்து நிற்கிறார். அவரும் ஒரு பேச்சாளராகக் கலந்து கொள்கிறார். யோகி பார்த்தசாரதி அய்யங்காருக்கு அழைப்பிதழ் வருகிறது சிகாகோ மகாசபையிலிருந்து, ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தப் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள. மனிதர் கடல் தாண்ட மாட்டேன் என்று சொல்லித் தமது கட்டுரையை மட்டும் அங்கும் படிக்கப்பட அனுப்பி விடுகிறார். 

ஊருக்கு முன்னாடி வந்து சேர்ந்துவிட்ட அவஸ்தை அங்கு போனால்தான் தெரிகிறது விவேகாநந்தருக்கு. புதிய பயணம், புதிய வாழ்க்கை முறை. முன் அனுபவம் இல்லாத வாழ்முறைகள், கட்டாயங்கள். Be patient, withstand and survive என்பதுதான் அப்பொழுதைய கைகண்ட மருந்து. பட்டபாடு போதாது என்று படுவதும், படவேண்டிய பாடும் வெருட்டும் சூழல். ஆனானப்பட்ட நாத்திகரும் ஆத்திகராக மாறிவிடும் கணங்கள் ! ஆனால் ரிஹர்சல் போன்று பல இடங்களிலும் குட்டிக் குட்டிப் பேச்சாக பேசுவது விவேகாநந்தருக்கே ஒரு நல்ல முன் தயார்படுத்திக் கொள்ளலாக அமைகிறது செம்படம்பர் மாதம் வருவதற்குள். அந்த உக்கிரமான இடைக்காலத்தில் விவேகாநந்தரின் ஆங்கிலமே செவ்வையாக நன்கு வேண்டிய முறையில் அமைந்து விடுகிறது. இது அதுவரையில் இந்தியாவில் இருந்த காலத்தில் அவர் எழுதிய கடிதங்களோடு ஒப்பிடும் போது வித்தியாசம் தெரிகிறது. 

அது போகட்டும். விவேகாநந்தரின் சிகாகோ பிரசங்கத்தைக் கொஞ்சம் ஆர அமர ஆழ்ந்து படிக்கலாம் என்று எண்ணம். உங்களைப் படிக்கச் சொல்லவில்லை. எனவே பள்ளிக்கு மட்டம் போடாதீர்கள். நான் தான் படிக்கலாம் என்று பார்க்கிறேன். நீங்களும் கூடக் கலந்து கொள்வீர்களோ அல்லது ஒட்டுக் கேட்பீர்களோ அல்லது கவனிக்காத மாதிரி அப்படி அசால்டாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பீர்களோ, என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். 

விவேகாநந்தர் சிகாகோ மாநாட்டில் பேசத் தொடங்கும் போது, Sisters and Brothers of America! என்று ஆரம்பித்ததும் மக்களின் உற்சாகமும் ஆரவாரமும் பெருமளவு பொங்கியது. காரணம் மற்றவர்கள் எல்லாம் சீமாட்டிகளே, சீமான்களே என்பது போல் ஆரம்பித்துப் பேச சுவாமிஜி மட்டும்தான் அனைவரையும் சகோதரப் பாசத்தோடு அரவணைத்துப் பேசினார் என்பார்கள். அதாவது மக்களுக்குத் திடீரென்று ஓர் இனம் தெரியாத ஆனந்தமும் ஊக்கமும் உலக நேய ஒட்டுறவும் அந்தக் கணத்தில் தோன்றி, அதாவது விவேகாநந்தர் வந்து நின்று பேச ஆரம்பித்த கணத்தில் தோன்றியது. 

விவேகாநந்தர் பேச ஆரம்பித்ததும், அவருடைய குரலில் இயல்பாகப் பொதிந்திருந்த பெரும் அமைதி, ஆக்க பூர்வமான வலிமை, கலக்கமே அற்ற நெடும் தெளிவு, ஆழமான அக்கறை, எல்லையற்ற அன்பு - இவைதான் அங்கு பேசாப் பேச்சாக மக்களுக்கு அத்தகைய அகவுலகப் பொங்கு மாகடலை ஆர்ப்பரிக்க வைத்ததே அன்றி சொன்ன சொற்களில் இல்லை சூட்சுமம். 

சொற்களை யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். மிமிக்ரி கலைஞனாக இருந்தால் அவரைப் போன்றே கூட உச்சரித்து விடலாம். ஆனால் அவரையன்றி யார் சொன்னாலும் தொனி முழக்கமாக எழாத இந்த அகத்தின் பண்புகள், இவைதான் ஒரே சொல்லில் மக்களுக்குப் புத்துலகின் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கின்றன. ஒரு மனிதன் ஒரு சொல்லைச் சொல்லும் போது அவன் அதுவரை வாழ்ந்த தன் வாழ்க்கையை அந்தக் கணத்தின் கர்ப்பத்தில் வைக்கிறான். அவர் அதுவரையில் வாழ்ந்த வாழ்க்கை, அடைந்த தெளிவு, கனிந்த அன்பு, இதய பூர்வமாக மனிதர்கள் மேல் அவர் கொண்ட மதிப்பு - இவற்றுக்கு மேல் கட்டிய ரிப்பன்தான் அவர் சொன்ன சொற்கள். ஆனால் சொற்களில் கர்ப்பம் கட்டும் இந்த அக உலகப் பண்பாற்றலை 'ஓஜஸ்' என்று வேதங்கள் கூறுகின்றன. 


அமெரிக்க சகோதரி சகோதரர்களை விளித்துவிட்டு, விவேகாநந்தர் அவர்கள் அளித்த அன்பும் ஆதுரமும் மிக்க வரவேற்புக்குத் தம் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். 

It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. 

ஏன்? என்ன அப்படி அன்பும் ஆதுரமும் துலங்க அவர்கள், அதாவது அமெரிக்க சகோதரி சகோதரர்கள், வரவேற்பு அளித்தார்கள்? அதற்கு விடை பின்னால் அவரே கூறுகிறார். அதாவது கிழக்கைச் சேர்ந்த மதப் பிரதிநிதிகளுக்கு என்று ஒரு சிறப்பான கௌரவம், மதிப்பு இருக்கிறதாக, விவேகாநந்தருக்கு முன் பேசிய சிலர் குறிப்பிட்டார்களாம். அதாவது பரஸ்பரம் மக்களுக்கிடயே உள்ள பண்பாட்டு வித்யாசங்களைப் புரிந்துணர்வுடனும், உரிய மதிப்பு அளித்தும் சகித்துக் கொள்ளுதலாகிய Toleration என்னும் கருத்தை உலகமெங்கும் கொண்டு செல்லும் கௌரவம் மிக்க சிறப்பு கிழக்கைச் சேர்ந்த மதவாதிகளுக்கும், பண்பாட்டுத் தூதுவர்களுக்கும் உரிய சிறப்பு என்று மேடையிலும், மக்களிலும் பொதுவாகக் குறிப்பிட்டு மதிப்பளிக்கின்றார்கள் என்பதை மனத்தில் கொண்டு மேற்கண்ட வாக்கியத்தைக் கூறுகிறார் விவேகாநந்தர். 

அத்தகைய அன்பும், புரிந்துணர்வும் வரலாற்றில் முன்னர் பல தடவை நடந்திருந்த போதினும் அவையெல்லாம் முற்றிலும் உலக மக்களுக்கு மறந்தே போனது போல அண்மைக் காலமாக கிழக்கும், மேற்கும் ஒரு நாளும் ஒன்று கலந்து வராது. ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாது என்பது போன்ற பொதுவான அபிப்ராயச் சூழல்தான் நிலவத் தொடங்கியது. பொதுவாக மாநாட்டுக்கு வந்திருந்த கிழக்கைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அப்படித்தான் எதிர்பார்த்து வந்திருப்பார்கள். ஆனால் அமெரிக்க மக்களின் மனோபாவம், இதயம் பொது ஊடகங்கள் மூலமும், பத்திரிக்கைகள் வாயிலாகவும் நேரடியாகவும் தெரிய வரும் போது ஓர் இனிய அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. 

சர்வே ஜனா சுகினோ பவந்து - அனைத்து மக்களும் சுகம் அடையட்டும். வஸுதா ஏக குடும்பகம் - உலகம் முழுதும் ஒரே குடும்பம் - என்பன போன்ற பார்வைகளை மிகப்பழங்காலம் முதல், புத்தருக்கும் முன்பிருந்தே உலகம் எங்கும் விதைத்து வரும் பாரம்பரியம் மிக்க பாரத தேசத்தின் பண்டைய துறவறத்தின் பெயரால் முதன்முன்னம் தம் ஆழ்ந்த உளத்தின் நன்றியைத் தெரிவிக்கிறார் விவேகாநந்தர். பின்னர் உலகத்தின் மதங்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் ஒன்றின் பெயரால் நன்றி என்கிறார். பின்னர், பல பிரிவுகள், பல நெறிகள் ஆகியவற்றைச் சேர்ந்த கோடானுகோடி ஹிந்து மக்களின் பெயரால் நன்றி என்கிறார். 

I thank you in the name of the most ancient order of monks in the world; 

I thank you in the name of the mother of religions; 

And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. 


தமக்கு முன்னால் பேசிய சிலர் கிழக்கைச் சேர்ந்த மத அறிஞர்களைப் பற்றிக் குறிப்பிட்ட புகழுரைக்கு நன்றி தெரிவிக்கிறார் விவேகாநந்தர். 

My thanks also, to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honour of bearing to different lands the idea of toleration. 

அடுத்து தாம் உரிய மதத்தைப் பற்றிய பெருமித உணர்வை வெளிப்படுத்துகிறார். இங்கு விவேகாநந்தர் சொல்லும் காரணங்கள் மிகச் சரியாக இருக்கின்றன. உலகத்திற்கெல்லாம் சகிப்புத் தன்மையை மட்டுமின்றி, அனைத்து மதங்களையும் உண்மை என ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையையும் கற்றுத் தந்தது ஹிந்து மதமே என்று உரிய பெருமிதத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறார். 

I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. 

உலகத்தின் அனைத்து மதங்களையும் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் வழிகள் என்று ஒப்பி ஏற்கும் மனப்பக்குவத்தை உடைய மதத்தைச் சேர்ந்தவர் என்னும் பெருமிதம் விவேகாநந்தருக்கு அந்த நேரத்தில் தம்மிடத்தே உண்டானதைத் தெரிவிக்கின்றார். எந்த ஒரு கருத்து சிகாகோ சர்வமத மாநாட்டினரால் அவ்வளவு செலவில், உலகை எல்லாம் அழைத்து நிரூபித்துக் காட்ட முயற்சி செய்யப்படுகிறதோ அந்தக் கருத்தான சர்வமத சமரஸம், அனைத்து மதங்களின்பாலும் ஒப்புணர்வுடன் கூடிய சம்மதமான அன்பு ஏற்கனவே தமது மதத்தின் அன்றாடப் பண்பாடாய் ஆகி நின்றதை நினைத்து இறும்பூதடைந்து பேசுகிறார் விவேகாநந்தர். அவருடையது வெறும் நூல் அறிவு மட்டுமன்று. நேரடியாக இந்தியா முழுமையும் சுற்றித் தாமே தம் சொந்த அனுபவத்தில் கண்ட நிச்சயம் அவர் வார்த்தைகளுக்கு அபரிமிதமான வலிமையை அளிக்கிறது. 

ஹிந்து மதத்தின் ஆக்க பூர்வமான அம்சங்கள் அனைத்தையும் ஒருசேர ஓர் உருவாகத் தமது குருவான ஸ்ரீராமகிருஷ்ணரிடத்தில் கண்டு அவர் பெற்ற கல்வி. ஆங்கிலம், வடமொழி என்னும் மொழிகளின் வாயிலாக உலக தத்துவங்களைப் பற்றியும், சாத்திரங்களைப் பற்றிய மூல நூல்களின் அறிவும் நிறைந்த அவருடைய பல்கலைக் கழகக் கல்வி. பாரதத்தை நடையாக நடந்து மக்களின் வாழ்க்கையையும், வழிவழியான பாரம்பர்யங்களையும் நேரடியாகக் கண்டு, நாட்டின் சீர்கேடுகளைப் பற்றிய நேரடி பார்வையின் மூலமும் தாம் பெற்ற அனுபவக் கல்வி. 

இந்த மூன்று கல்விகளும் விவேகாநந்தரிடத்தில் ஒன்று கலந்து பேசுகின்றன என்கிறார் சகோதரி நிவேதிதா. 

உலகத்தின் மூலை முடுக்களிலிருந்தெல்லாம் மதங்களின், தேசங்களின் காரணமாக ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வகை இழந்த அகதிகள் ஆகியோரை ஆதரித்து தன் நாட்டில் குடியமர்த்தி வாழ்வளித்த பாரத தேசத்தை நினைத்துப் பெரும் கர்வம் அடைவதாகக் கூறுகிறார். இச்ரவேலர்களில் ஒரு பகுதியினர் ரோமானிய அடக்குமுறையால் தமது புனித ஆலயம் இடிக்கப்பட்ட அதே ஆண்டில் வந்து புகலடைந்த அகதிகளான இச்ரவேலர்களுக்கு தென்னிந்தியாவில் புகலளித்து வாழ்வளித்த மதம் தமது மதம் என்று மிக்க பெருமிதத்துடன் கூறுகிறார். அதுமட்டுமில்லை. ஸொராஸ்த்ரிய தேசத்தின் மிஞ்சிய மக்களை இன்றும் தன்னகத்தே பேணிக்காக்கும் பெட்பு உடைய மதம் தன்னுடையது என்று அந்த உலக மகாமாநாட்டில் உரத்துக் கூறுகிறார். 

I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites, who came to Southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. 

ஒருவர் சொல்வதும் செய்வதும் ஊர் செய்வதாக ஆகிவிடுமா? ஊரே ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால் அது முதலில் வழிவழியான பண்பாடாக ஆகவேண்டும் அல்லவா. பண்பாடு என்று ஒன்று ஆவதற்குப் பல முகாந்திரங்கள் உண்டு. அனுதினம் மக்களின் சடங்குகள், பழக்க வழக்கங்கள், தினசரி பிரார்த்தனைகள் என்பவை அந்த முகாந்திரங்களில் சேர்ந்தவை. தினம் சொல்லப்படும் வழிபாட்டுச் சுலோகங்கள் உண்மையில் பார்க்கப் போனால் ஒரு மக்களின் auto-suggestion என்று சொல்லலாம். சுய ஊக்கக் குறிப்புகள் காலவட்டத்தில் குறிப்பிட்ட நடவடிக்கைகளில் முனைய மக்களைத் தூண்டும். அதனால்தான் முன்னோரகள் சிலபல சுலோகங்கள், பாடல்கள் என்பனவற்றை தினப்படி வழிபாட்டுக் கிரமம் என்பதில் கைக்கொள்ள என்று நெறிமுறைகளை வகுத்துள்ளனர். ஹிந்து மக்கள் இவ்வாறு மத ரீதியான பரந்த அணுகுமுறை கொண்டிருக்கின்றனர் என்றால் அது ஏதோ இன்று நேற்று யாரோ சொன்னதால் அன்று. அநாதிகாலமாக மக்களின் வழிபாடுகளில் எல்லாம் அத்தகைய பண்பாடு தினம் தினம், திருவிழாவிற்குத் திருவிழா, பண்டிகைக்குப் பண்டிகை ஊட்டப்பட்டதால்தான் இத்தகைய மனப்பக்குவங்கள் மக்களிடைப் புழக்கங்களாக ஆகிநிற்கின்றன. எனவே விவேகாநந்தர் அத்தகைய பண்பாட்டுப் பழக்கத்தைத் தமது பெருமிதத்திற்கு உதாரணம் ஆகவும் ஆதாரம் ஆகவும் எடுத்துக் காட்டுகிறார்.: 

I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings: "As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee.

தாம் சிறுவனாய் இருந்த காலம் தொடங்கியே தாம் கற்பிக்கப்பட்டு, விடாமல்  சொல்லி வந்திருக்கக் கூடிய ஒரு தோத்திரத்திலிருந்து ஒரு பாடலைக் கூறுகிறேன் என்கிறார். அது தாம் மட்டுமன்று, கோடானுகோடி இந்திய மக்களால் காலம் நெடுக சொல்லப்பட்டு வந்திருக்கிறது என்று அந்தச் சுலோகத்தை மாநாட்டில் எடுத்து மொழிகிறார். 

"பலப்பல இடங்களில் நின்றும் கிளம்பும் நதிகளும், புனல்களும், அருவிகளும்  கடைசியில் கடலிலேயே தமது நீர்களைக் கலப்பது போன்று, இறைவா! மக்கள் பின்பற்றும் பற்பல மார்க்கங்கள் எல்லாம், தமது தனித்தனி தன்மைகள் காரணமாக மக்கள் கைக்கொள்ளும் வழிமுறைகள் எல்லாம் கடைசியில், கடவுளே! எல்லாம், அவை நேராக இருப்பது போன்றோ வளைந்து நெளிந்து இருப்பது போன்றோ பார்வைக்குத் தோன்றினாலும், எல்லாம் கடைசியில் உன்னிடத்திலேயே அழைத்துச் செல்கின்றன." 

இந்த சுலோகம் வருகின்ற தோத்திரம் சிவ மஹிம்ன ஸ்தோத்திரம், சுலோகம் 7. 
ருசீனாம் வைசித்ரியாத் ருஜுகுடில நாநாபத ஜுஷாம் | 
ந்ருணாம் ஏக: கம்யஸ்த்வமஸி பயஸாம் அர்ண இவ || 

உலக மதங்களின் மாநாடு சிகாகோவில் கூட்டப்பட்டதன் தாத்பர்யம் என்ன? கிழக்கிலும், மேற்கிலும் உண்டான மத நெறிகள் தமக்குள் ஒன்று கூடி ஒரே மேடையில் தமது கருத்துகளை பொதுவாக மக்கள் முன் வழங்கும் போது நிதர்சனமாக ஓர் உண்மை தெரியவரும். அது என்னவென்றால் தமது மதமே சரி, பிற மதங்கள் பிழையானவை என்ற எண்ணம் மக்களுக்கு மாறி, மதங்கள் அனைத்துமே போதிப்பதைப் பார்த்தால் சாரமான கருத்துகள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. வித்யாசம் எல்லாம் வெளி விவரங்களில்தான் என்று மக்கள் உணர்வதன் மூலம் விரிந்த வித்யாசங்களை ரசிக்கக் கூடிய பார்வை, வேறுபாடுகளின் ஊடே இழையோடும் ஒற்றுமையைக் காணக் கூடிய பக்குவம் உலக அளவில் ஏற்படும் என்ற நோக்கம்தான் அத்தகைய மாநாட்டைத் திட்டமிட்டவர்களின் கருத்து. 

இங்கிலாந்தில் நடந்த தொழில் சாதனைகள் பற்றிய உலக மாநாடு சிகாகோ மாநாட்டிற்கு ஊக்கமாக இருந்தது. இங்கிலாந்து காட்டினால் அமெரிக்கர்கள் நாமும் காட்ட வேண்டும் என்ற ஊக்கம், கலந்துரையாடல்களின் போது பல வடிவங்கள் அடைந்தது. அனைத்து மத மாநாடு என்ற திட்டம் பிறந்தது. இந்தத் திட்டமெல்லாம் நடக்கும் போது விவேகாநந்தர் பள்ளிச் சிறுவனாக நரேந்திர நாதன். திட்டம் கனிந்து செயலாக நடை பெறும் கணத்தில் நரேந்திர நாத தத்தர் விவேகாநந்தராக வளர்ந்து செய்தி சொல்ல வந்து நிற்கிறார். அவருடைய பார்வையில் அந்த மாநாடே ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லியிருக்கும் கருத்து ஒன்றின் மெய்ப்பாடாகத்தான், செயல்வடிவ முழக்கமாகத்தான் கண்ணில் படுகிறது. 

The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita: “Whosoever comes to Me, through whatsoever form, I reach him; all men are struggling through paths which in the end lead to me.” 

"யார் யார் எந்த வடிவில் என்னை நோக்கி வந்தாலும், எந்த நெறியின் மூலமாக என்னை அடைய முயன்றாலும் அவர்களை நான் சென்று அடைகிறேன்; உலக மக்கள் அனைவருமே பல பாதைகளின் மூலம் சிரமப்பட்டு முனைந்து முன்னேறுவது எல்லாம், கடைசியில் அந்தப் பாதைகள் அனைத்துமே என்னை வந்து அடைகின்றன என்பதால் அவர்கள் அனைவருமே என்னை வந்து சேருகிறார்கள்." 

கீதையின் சுலோகம் 4.11 

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம் | 
மம வர்த்மானு வர்த்தந்தே மனுஷ்யா: பார்த்த ஸர்வச: || 

*
ஒரு மதப் பிரிவின் சித்தாந்த அடிப்படையில் அதைத் தம் நம்பிக்கைக் கொள்முதலாகக் கொண்டோர் எல்லாம் சேர்ந்து ஒரு குழுவாக ஆகின்றனர். அத்தகைய குழு மனப்பான்மை தம்முடைய சித்தாந்தம்தான் மிகப்பெரியது என்ற கூட்டு என்ணத்தை உண்டாக்குகிறது. அந்தக் கூட்டத்தில் சம்மதிப்போரே அங்கத்தினராக ஆவதால் மாற்றுச் சிந்தனை என்பதன் மூலம் பொதுவான பெறுமதி என்ன என்பதை யோசிக்கும் வாய்ப்பே இருப்பதில்லை. அவ்வாறு யாரேனும் யோசித்தாலும் அது அவரை இனம் கண்டு விலக்கிவிடத்தான் காரணமாக ஆகிறது. இத்தகைய மதக்குழு மனப்பான்மை மாற்று மதக் கருத்துகள், மதத்திற்கே மறுப்பான சிந்தனைகள் ஆகியவற்றைக் கண்டு சகிக்க முடியாத அருவருப்பு, சினம் வெறுப்பு ஆகியவற்றை ஏற்படுத்திக் கடைசியில் பார்த்தால் தம்முடைய சித்தாந்தம மட்டுமே உலகில் நிலவ வேண்டும், அதுதான் சரி, அதைக் கைக்கொள்ள மறுப்போர் வாழும் உரிமையை இழந்தவர் ஆகின்றனர் என்ற மதவெறியில் கொண்டு போய் விட்டு, தாம் பிற உயிர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையே அவர்களை எப்பாடு பட்டேனும் தமக்குத் தம் தெய்வ அருளால் கிடைத்துவிட்ட மதநெறியின்பால் மாற்றுவது என்றபடியான 'தாமே உய்வு அடைந்தவர், தமராக ஆகாதார் ஒழிந்தவரே' என்ற தீவிரத்தில் முடிகிறது. இத்தகைய மதக் குழுமனப்பான்மை, மாற்று கருத்துகளைச் சகியாமையும், அவற்றின்பால் சினமும், அதனால் விளைந்த மதவெறித் தீவிரமும் இந்த மூன்றும் மனித வரலாற்றில் ஓடவிட்ட ரத்தம் பெருவெள்ளம் ஆகும். இந்த அழகான பூமியை வன்முறையால் நிறைத்து, அடிக்கடி மனித ரத்தவெள்ளத்தால் இந்த பூமியை முழுக அடித்து, நாகரிகங்களை அடியோடு அழித்து, பல தேசங்களை அநாதரவான அத்வானங்களாக ஆக்கியிருக்கின்றன. 

விவேகாநந்தர் அந்த மாநாட்டில் அந்த அதிமுக்கியமான கணத்தில் இந்தக் கருத்தைக் குவிந்த மனித கவனத்தின்பால் வைக்கிறார்.: 

Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilisation and sent whole nations to despair. 

இந்தப் பிசாசுகள் மட்டும் இல்லையேல் என்கிறார் விவேகாநந்தர். எந்தப் பிசாசுகள்? Sectarianism, bigotry, fanaticism என்ற மூன்று பிசாசுகள். ஒன்றுக்கு ஒன்று பிறந்தது என்றபடி படிப்படியாக ஒன்று இன்னொன்றாக உருவெடுக்கும் அபாயம் கொண்டன் இந்த மூன்றும். இந்த மூன்றும் இல்லையேல் மனித வாழ்க்கை இன்னும் முன்னரே எவ்வளவோ நாகரிகம் அடைந்து திகழ்ந்திருக்கும் என்கிறார் விவேகாநந்தர். மனித குல முன்னேற்றம் என்றோ உயர்ந்து போயிருக்கும். 

குழு மனப்பான்மை என்பது அனைத்து மனித குலமும் ஒருங்கே கூடி, பார்த்து, பேசிப் பழகுவதன் மூலம் வலுவிழந்து போகக் கூடியது. குழு மனப்பான்மை வலுவிழந்தால் மற்றவை தமக்கான ஆற்றலை இழந்துவிடும். எனவே மனித குல வரலாற்றிலேயே ஆக்க பூர்வமான மகத்தான அடிவைப்பு என்பது இவ்விதமாக சிகாகோ நகரில் கூட்டப்பட்ட உலக அனைத்து மத மகாநாடு என்கிறார். 

முன்னர் குறிப்பிடப்பட்ட மூன்று தீய சக்திகளும் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டது. கூடிய மாநாடு ஒன்றே அதை ஆணித்தரமாகத் தெரிவிக்கும் முன்குறிப்பு நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது. சர்வமத மாநாடு தொடங்கும் போது முழங்கிய மணி ஓசை உண்மையில் இந்த தீய சக்திகளின் சாவுக்கு முன்னறிவிப்பாக அடிக்கப்பட்ட சாவு மணியாக இருக்கட்டும் என்கிறார். 

மாநாட்டின் தொடக்க மணி எதற்கு அடிக்கப்பட்ட சாவு மணி என்று மூன்று விஷயங்களைப் பட்டியல் இடுகிறார். 

1) மதவெறி அனைத்துக்கும் அடிக்கப்பட்ட சாவு மணி 

2) ஆயுத பலத்தாலோ, ஆட்சி பலத்தாலோ அல்லது எழுத்து மூலமாக செலுத்தப்படும் அதிகார மமதையினாலோ நடத்தப்படும் கொடுமைப்படுத்தல்கள் என்பவற்றுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி 

3) ஒரே இறுதி இலட்சியத்தின்பால் பயணிக்கும் மனித குலத்தின் பல்வேறு மாந்தருக்கிடையே ஏற்படக் கூடிய அன்பு தயையும் அற்ற மனப்பான்மைகள், வன்மம் சூழ்ந்த உணர்ச்சிகள் ஆகியவற்றுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி. 

நல்லிளங் காலையில் மாநாடு தொடங்கும் பொழுது அடிக்கப்பட்ட ஆரம்ப மணி முழக்கம் மனித குலத்தை நாசம் செய்து வந்திருக்கும் தீய சக்திகளின் சாவு மணியாக அமையட்டும் என்று தமது பிரார்த்தனை கலந்த விழைவைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் தமது அறிமுக உரையை. இதுதான் விவேகாநந்தரின் புகழ் பெற்ற சிகாகோ பிரசங்கம் என்று கூறப்படுவது. 

அன்று மட்டுமன்று. இன்றும் இந்தச் சிறுமாப் பேருரை எவ்வளவு மகத்தானது, மனித குலத்திற்கான அதிக பட்ச நன்மையை உட்கிடையாய்ப் பொதிந்து கொண்ட சிறப்பு உடையது, என்பது சொல்லாமலே போதரும். ஆனால் இன்றும் இந்த உலகளந்த உரை வரலாற்றுச் செய்தியாக ஆகிவிடாமல் தற்காலத்துக்கு மிக அத்யாவசியமான முக்கியமான உரையாகத் தொடர்ந்து இருப்பது நம்மைப் பற்றி, நம் உலகைப் பற்றி என்ன தெரிவிக்கின்றது என்பதை நம் மனசாட்சியைச் சோதனை செய்தே சொல்ல வேண்டும். 

மதத்தின் பேரால் இன்னும் வன்முறையையும், வன்மத்தையும் சிறிதும் வெட்கமின்றிப் பூசி மொழுகிக் கொண்டாடும் புன்மை அடைந்தவர்களாகத்தான் மனிதரில் பலர் வளைய வருகின்றனர். இந்தக் கணக்கில் பார்த்தால், காலத்திற்கும் தன் அவசியத்தை என்றும் இழக்காத அதி முக்கியமான சொற்பொழிவாகத்தான் தொடருமோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது விவேகாநந்தரின் சிகாகோ பிரசங்கத்தை நினைத்தால். 

Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come; and I fervently hope that the bell that tolled this morning in honour of this convention may be the death-knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal 

*** 

முழு உரையையும் இப்பொழுது ஒரே மூச்சில் படிக்க விழைவோருக்காக கீழே தருகிறேன் - 

Sisters and Brothers of America,

It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world; I thank you in the name of the mother of religions; and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects.

My thanks, also, to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honour of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees  of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites, who came to Southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings: "As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee."

The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita: "Whosoever comes to Me, through whatsoever form, I reach him; all men are struggling through paths which in the end lead to me." Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilisation and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come; and I fervently hope that the bell that tolled this morning in honour of this convention may be the death-knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. 

எதற்குச் சொல்கிறேன் என்றால் அந்தக் காலம் தொட்டே நம் நாட்டில் கருத்துகள், மாறுபட்ட கருத்துகள், அபிப்ராய பேதங்கள், அதை ஒப்பி அவரவர் தம் தம் நிலையில் உறுதியாய் நிற்பது, மற்றவர்களுக்கு அவர்களின் அபிப்ராய சுதந்திரத்தை மதித்து நடப்பது, தமது கருத்தை விட்டுத் தராமல் - இந்தப் பண்பாடுதான் நின்று நிலவுகிறது என்பது நன்கு புலனாகிறது. 

சுவாமி விவேகாநந்தரைப் பற்றி அவர் காலத்தவர்கள் சொன்னவற்றில் சிலர் சொன்னவை மிகவும் யோசிக்கத் தக்கனவாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ஸ்ரீராஜாஜி அவர்கள் சொன்னது:

“..... Looking back into recent history one sees clearly how much we owe to Swami Vivekananda. He opened the eyes of India to her true greatness. ."

அடுத்து ஸ்ரீஅரவிந்தர் கூறியது :

”The going forth of Vivekananda marked out by the Master (meaning Sri Ramakrishna) as the heroic soul destined to take the world between his two hands and change it, was the first visible sign to the world that India was awake, not only to survive but to conquer.

Swami Vivekananda was a soul of puissance, if ever there was one, a very lion among men. We perceive his influence still working gigantically, we know not well how, we know not well where, in something that is not yet formed, something leonine, grand, intuitive, upheaving, that has entered the soul of India, and we say. Behold! Vivekananda still lives in the soul of his Mother, and in the Soul of her children."

ஆனால் சுவாமி விவேகாநந்தர் சிகாகோவில் பேசிய அந்தத் திரு முகூர்த்தத்தில் அவர் எப்படி இருந்தார்; எப்படி அங்கு இருந்த இந்தியாவை நேசிக்கும் கண்களுக்கு எப்படித் தெரிந்தார் என்பதைப் பற்றிய விவரம் அங்கும் இங்குமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் சுவாமி விவேகாநந்தர் அங்கு அந்தக் கணத்தில் தத்துவம், சமயஞானம் பேசமட்டும் தாம் அனுப்பப்பட்டவராக உணரவில்லை. பாரத ராணியின் தூதுவர் என்பது அவருடைய ப்ரக்ஞையில் மிகவும் விஞ்சி நின்ற ஒன்று. இன்று உள்ளது போல் அன்று பாரதம் என்பதை உலக அளவில் யாரும் சரியாக உணரவில்லை. பாரதம் தன்னைத் தன் சொந்தக் குரலில் வெளிப்படுத்தும் தருணம். அதை ஓரளவிற்கு உள்ளபடிப் பதிவு செய்திருப்பது டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார்:

”A striking figure, clad in yellow and orange, shining like the sun of India in the midst of the heavy atmosphere of Chicago, a lion head, piercing eyes, mobile lips, movements swift and fast—such was my first impression of Swami Vivekananda, as I met him in one of the rooms set apart for the use of the delegates to the Parliament of Religions. Monk, they called him, not unwarrantably, but warrior-monk was he, and the first impression was of the warrior rather than of the monk, for he was off the platform, and his figure was instinct with pride of country, pride of race—the representative of the oldest of living religions, surrounded by various gazers of nearly the youngest. .. India was not to be shamed before the hurrying arrogant West by this her envoy and her son. He brought her message, he spoke in her name, and the herald remembered the dignity of the royal land whence he came. Purposeful, virile, strong, he stood out, a man among men, able to hold his own.

On the platform another side came out. The dignity and the inborn sense of worth and power still were there, but all was subdued to the exquisite beauty of the spiritual message which he had brought, to the sublimity of the matchless truth of the East which is the heart, the life of India, the wondrous teaching of the Self. Enraptured, the huge multitude hung upon his words; not a syllable must be lost, not a cadence missed ! ‘That man a heathen !’ said one, as he came out of the great hall, ‘and we send missionaries^ to his people ! It would be more fitting that they should send missionaries to us.’
(courtesy: https://www.vivekananda.net/ )

ஒவ்வொருவரின் பார்வை ஒவ்வொரு விதம். அவரைச் சந்தித்தவர்கள், அவருடைய எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவர்கள் எனப் பலரும் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கருத்தைப் பார்க்கும் பொழுது ஒரு சித்திரம் கிடைக்கும். அது ஒரு அனுபவம். ஆயினும் இவர்களின் கருத்துகள் எங்கோ கிட்டத்தில் நம்மைக் கொண்டு போவது போன்ற ஓர் எண்ணம்.

இந்திய ஆங்கிலம் என்னும் ஆங்கில மொழியின் ஒரு பிரிவு, பெருந்துறையாக, தனக்கென்று செம்மாந்த இலக்கியங்களைப் பெற்று வளர்ந்துள்ளது. 
இந்த இந்திய ஆங்கிலம் என்ற மொழி இலக்கியத்துறை உலக அளவில் சான்றாண்மையை முத்திரை பதித்தது விவேகாநந்தரின் இந்த சிகாகோ பிரசங்கத்தில் என்னும் உண்மையை இந்திய ஆங்கிலத் துறையினரோ அல்லது விவேகாநந்தாயனத் துறையினரோ கவனம் கொண்டார்களா என்று தெரியவில்லை. இந்தியர்களுக்கே தங்கள் மரபின் கொடையை உள்ளவாறு உணர்வு பெறக் காரணமாக இருந்தது இந்த இந்திய ஆங்கிலம். பொதுஜனங்கள், பெண்கள் இவர்களின் கல்வி கேள்வி ஏற்பட்டு, சிறந்திடக் காரணாமாக இருந்ததும் இந்த இந்திய ஆங்கிலம். சுதேசி இயக்கமே பார்க்கப் போனால் இந்த இந்திய ஆங்கிலம் பிறப்பித்த ஒன்றுதான். 1835ல் கல்வித் திட்ட அறிக்கை ஏற்பட்டாலும் அதற்கு மூன்று பத்தாண்டுகளுக்கு முன்னரே அதாவது 1805 லேயே ஆங்கிலத்தில் மொழிப் புலமையும், எழுத்துத் திறமையும் பெற்று இருந்தார்கள் நமது நாட்டினர் என்பதற்கு காவெல்லி வெங்கட போரய்யா, ராஜாராம் மோஹன்ராய், காவெல்லி வெங்கட ராமசாமி போன்ற பலர் சான்றாக இருந்தனர். காவெல்லி வெங்கட போரய்யா எழுதிய Account of the Jains, 1803ல் எழுதி, 1809ல் லண்டன் கழக இதழ் ஒன்றில் வெளிவந்ததுதான் இந்திய ஆங்கில இலக்கியத்  துறையிலேயே முதலில் வந்த இந்தியர்களின் ஆங்கில எழுத்து என்று சொல்கிறார் திரு எம் கே நாயக். (A History of Indian English Literature, Sahitya Akademi)  ஓர் அறை நூற்றாண்டுக்குள் பெரும் இலக்கிய ஆக்கங்கள் பொங்கி எழுந்து பொலிந்த விரிந்த நன்மை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்திய ஆங்கிலத்தின் கொடி உலக அரங்கில் ஏற்றப்பட்ட நாள் விவேகாநந்தர் சிகாகோவில் உரையாற்றிய நாள், 1893ல். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, September 5, 2022

ஆசிரியர்களைப் பற்றிய ஏக்க நினைவுகள் !

ஏனோ திடீரென்று மனம் பியூசி படித்த காலத்திற்குப் போகிறது! ஆம் ஓர் ஆசிரியர். ஆங்கில ஆசிரியர். யூஜின் டி வாஸ் Eugene D'Vaz என்னும் பெயர். வகுப்பு எடுப்பதில் மன்னாதி மன்னன். அப்பா! காட்சிகளைத் தன் குரல் என்னும் மந்திரக்கோலால் வா போ என்று கட்டிமேய்க்கும் மாயாஜாலன் அந்த டி வாஸ். ஆங்கிலக் கவிதையை அவன் எடுத்துக் கேட்க வேண்டும்; கேட்க வேண்டும்; கேட்டவண்ணமே இருக்க வேண்டும். அப்படி ஒரு குரல்; அப்படி ஓர் ஈடுபாடு தாம் போதிக்கும் பாடத்தில். பல துறை மாணவர்கள் தம் தம் முன் வகுப்பு முடிந்து அவர் வகுப்புக்கு வந்து சேர வேண்டும். சமயத்தில் எங்கள் கெமிஸ்ட்ரி வகுப்பு செயிண்ட் ஜோஸப் கல்லூரியின் உயரக் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இருக்கும். சமனபாடுகளைச் சொல்லி அந்த வாத்யார் காலச் சமன்பாட்டைக் கோட்டை விட்டு விடுவார். ஐந்து நி லேட் என்றாலும் நானும் ரவிக்குமார் என்னும் தோழனும் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி வருவோம் அவரது வகுப்பிற்கு. ஒரு நாள் எங்கள் ஆர்வத்தைக் கேட்டறிந்த யூஜின் அன்றிலிருந்து நாங்கள் வரும்வரை ஏதாவது பேசிக் காலம் கடத்தி வந்த பின் ஆரம்பிப்பார். நண்பனாய், நல்லாசிரியனாய், அன்பே உருவான மனிதனாய் யூஜின் டி வாஸ் இன்றும் திடீரெனெ நினைவுக்கு வந்து ஹலோ என்கிறார். இன்றும் அவர் எந்த உலகத்திலோ இருக்க வேண்டும் என்றே மனம் அவாவுகிறது.

அடுத்து ஈ ஆர் ஹைஸ்கூலில் நான் சந்தித்த ஒரு மன்னாதி மன்னன் டி எம் எஸ். டி எம் ஸ்ரீநிவாசன். T M Srinivasan. குரலில் அப்படியே மயக்கப்பொடி குழைத்து வைத்தே படைத்தானோ என்று தோன்றும். பியானோவின் இசையேற்ற இறக்க அலைச்சுழிகள் ஒன்றுமே இல்லை அவருடைய குரலின் ஆரோகண அவரோகண ஜாலங்களில். நடத்துவதோ சரித்திரம். ஆனால் மன்னர்களும், காலங்களும், குதிரைகளும், பெரும் படை பீரங்கிகளும் சர்வ சாதாரணமாக வகுப்பிற்குள் வந்து போன வண்ணம் இருப்பார்கள். ஒரு சரித்திர காலம் முடிந்து இன்னொரு சரித்திர காலம் ஆரம்பம் என்றால் அந்த நேரமே சேகண்டி ஒலிக்கும்.

ஏதேதோ நினைவு... ஏதேதோ கனவு.... மெல்ல நகர்ந்து விரையும் காலம்.

(31 - மார்ச் 2016 அன்று எழுதியது இன்றைய நிலைக்குச் சிறு மாற்றத்துடன்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்


***