Monday, June 1, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 05

இந்துமதத்தின் ஆகச்சிறந்த பொதுமைக் கருத்தை மிக அழகாக, நகைச்சுவையுடன் இந்த சுலோகத்தில் வெளியிடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். அதுவும் இன்றைய காலத்தில் இந்துமதத்தில் உள்ளவர்கள் மட்டுமன்று, உலகெங்கும் உள்ள அக்கறை உள்ள பெருமக்கள் யாவரும் தம் உள்ளத்தில் நன்கு பதிவிடவேண்டிய சுலோகம் இந்த சுலோகம் ஆகும். 

முதல் நான்கு சுலோகங்களில் ஸ்ரீஆதிசங்கரர் சொன்னதைச் சற்று பார்ப்போம். மகாகவி பாரதியார் எழுதிய மாயா பஞ்சகம் அவருடைய கவிதையான ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்றால், ஸ்ரீஆதிசங்கரர் எழுதிய ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்னும் கவிதைதான் இந்த மாயா பஞ்சகம் என்பது. அதுவும் ஐந்தாவது சுலோகத்தில் ஆணித்தரமாக அவர் இடுகின்ற வேரான கருத்து இந்துமதத்தின் ஆகச்சிறந்த அடிப்படை ஆகும். 

மாயையின் விசித்திரத்தை வியக்கின்ற பகவத்பாதர் முதலில் இந்த மாயையை ஓர் அடைமொழி இட்டு நமக்கு அடையாளப் படுத்துகிறார். அதுதான் ‘ஆகாததை ஆக்கி, கூடாததைக் கூட்டி வைக்கும் மாயை’ என்பது. அகடித கடநா படீயஸீ மாயா. (கடித என்றால் சாத்தியப் படுத்தும் என்று பொருள். அகடித என்றால் சாத்தியப் படுத்த முடியாத என்று பொருள். கடநா என்றால் சாத்தியப் படுத்த என்று பொருள். படீயஸீ என்றால் வல்லமையுள்ளதாக இருக்கிறாய் என்று பொருள்.) இந்த மாயையானது சாத்தியப்படுத்த முடியாததை சாதிக்கும் வல்லமை கொண்டதாய் இருக்கிறது. எப்படி? 

சித் மயமாய் (அறிவு மயமாய்), ஆனந்த வடிவாய், என்றும் உள்ள ஒரே சத்யமான ஆத்மாவிற்குள்ளேயே இந்த மாயை என்ன செய்கிறது? உலகம் என்றும், அதில் ஜீவர்கள் என்றும், அந்த ஜீவர்களின் வியவகார நிலையில் அனைத்தையும் நியமிக்கும் ஈச்வரன் என்றும் இந்த ஜீவ ஜகத் ஈச்வர மூன்றை வியாவகாரிக சத்யமாகத் தோற்ற வைக்கிறது அன்றோ! 

அடுத்து, வேதாந்தம் கற்ற மிகப் பெரிய வித்வான்களையும் இந்த மாயை தன் வல்லமையால் பணம், காமம் முதலிய ஆசைகளைக் காட்டி, வெறும் நாலு கால் மிருகங்கள் போல் ஆக்கிவிடுகின்றது அன்றோ! 

அடுத்து, ஆத்மா முற்றிலும் சடம் என்பதே கலவாத தூய அறிவு மயமானது. ஆனாலும் இந்த மாயை என்ன செய்கிறது? ஐம்பூதச் சேர்க்கையால் ஆன சடமான சரீரத்தோடு ஒன்றுபட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இந்த ஜீவனைத் தான் இந்தச் சரீரம்தான் என்று முற்றிலும் நம்ப வைத்துவிடுகிறதே! 

அடுத்து, சத் சித் ஆனந்த வடிவான ஆத்மாவில் எங்கிருந்து வந்தது வர்ணம், ஜாதி, குணம் எல்லாம்? ஆனால் இந்த மாயை என்ன செய்கிறது? இந்த ஜீவனை, தான் பிராம்மணன், தான் வைசயன் என்றெல்லாம் தன்னைப் பற்றி அகங்காரம் கொள்ளச் செய்து, என் மக்கள், என் மனைவி, என் கணவன், என் வீடு என்றெல்லாம் மமகாரம் என்ற உடைமை உணர்வில் இந்த ஜீவனை மயங்கச் செய்து விடுகிறதே! என்ன வியப்பு! 

ஐந்தாவதாக, இந்த மாயை செய்யும் விசித்திரம் பற்றிச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். சத் சித் ஆனந்த மயமான ஆத்மாவே பிரம்மமாக இருக்கிறது. அதில் ஜீவன், ஜகத், ஈச்வரன் என்று பேதங்கள் எல்லாம் மாயை உண்டாக்கும் தோற்றம். ஆயினும் மெத்தப்படித்த ஞானியரும் கூட என்ன செய்கின்றனர்? அந்தப் பிரம்மம் விஷ்ணுதான் இல்லை இல்லை சிவன் தான். இல்லை இல்லை நான்முகன் ஆகிய பிரம்மன் தான், என்று பேதங்களில் தம்மை இழந்து, பரம்பொருள் ஒன்றே, ஞானியர் பலவிதமாக அதை விவரிப்பார்கள் என்று வேதம் சொல்வதையும் மறந்து, மிகுந்த பிரமையில் அன்றோ ஆழ்த்திவிடுகிறது! என்ன வியப்பு இந்த மாயை! 

‘விதி ஹரிஹர பேதம் அபி அகண்டே 

பத விரசய்ய புதாநபி ப்ரகாமம் | 

ப்ரமயதி ஹரிஹர விபேதபாவாந் 

அகடித கடநா படீயஸீ மாயா ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, May 31, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 04

பொதுவாக உலகில் ஒரு பொருள் தான் என்னவாக இருக்கிறதோ உண்மையில், அது தெளிவாகவும், திடமாகவும் இருக்கும். தன்னை வேறு ஒரு பொருளாக யாரேனும் நினைத்து மயங்கினால் அவர் பொருளாகிய தன்னை நன்கு நோக்கினால் போதும், உண்மையில் தான் எந்தப் பொருள் என்பதை விளக்கும் வகையில் அந்தப் பொருள் இருக்கும். 

உலோகத்தால் ஆனது போல் ஒரு சிறிய பெட்டி கீழே கிடக்கிறது. பார்த்தால் உலோகம் போல்தான் படுகிறது. ஆனால் நிச்சயம் இல்லை. வேறு பொருளாக இருக்குமோ என்று சந்தேகம். எடுத்துப் பார்த்தால் அது ஏதோ ப்ளாஸ்டிக் போன்ற மென்மையான பொருளால் ஆனது. உலோகச் சாயம் பூசியதால் அப்படித் தெரிகிறது என்று புரிய வருகிறது. பேருந்து வருவதற்குக் காத்திருக்கிறோம். நாம் எதிர்பார்த்த நம்பர் பேருந்துதான் வருகிறது என்று தோன்றுகிறது. ஆனால் கிட்ட வந்ததும் நன்கு கவனித்தால் அது வேற நம்பர். 

அதாவது உண்மையில் இருப்பது எதுவோ அது நம் ஐயத்தைப் போக்கித் தன்னை நன்கு திடமாகக் காட்டுவதாக அமைந்திருப்பதுதான் உலகில் அனுபவம். ஆனால் மாயை இந்த அனுபவத்திலும் ஒரு விசித்திரத்தை நிகழ்த்துகிறது. நடைமுறையில், வியவகாரத்தில், தோற்றம் மிகத் தெளிவாகவும், திடமாகவும் அனுபவப் படுகிறது. ஆழ்ந்த சிந்தனை ஆராய்ச்சி என்பதன் விளைவாகப் புரியவரும் உண்மை வெறும் தோற்றம் போல் நிழலாடச் செய்கிறது. தோற்றம் திடமாகவும், தத்துவம் நிழலாகவும் தோன்றும் விசித்திரம் இந்த மாயையின் ஜாலம். 

இருக்கின்ற ஒரே உண்மை என்னவோ இந்த ஆத்மா. அறிவு மயமாகவும், ஆனந்த மயமாகவும் ஆனது ஆத்மா. சித் வடிவாகவும், சுக வடிவாகவும் உள்ள இந்த ஆத்மா யாருக்கேனும் நிச்சயமாகத் தெரிகிறதா? ‘அப்படி என்று சொல்வார்கள்’, ‘ஏதோ புத்தகத்தில் படித்தது. யார் கண்டார்?’ - இப்படித்தான் பதில் சொல்வோம். ஆனால் அந்தப் பதிலைச் சொல்வதும் ஆத்மாவாகிய நாம்தான் என்பது விநோதம். 

வெட்ட வெளிச்சமான, பட்டப் பகல் போன்ற உண்மை நிச்சயமற்றது போல் தோன்றுகிறது. ஆராய்ந்து பார்த்தால் தன் இருப்பே இல்லாமல் போகும் வியவகார வஸ்துகள் ஆகப்பெரும் சத்யம் போல் திடமாகத் தோன்றுகின்றன. குணம், வர்ணம், ஜாதி என்று எதுவுமற்ற ஆத்மாவில் நான் பிராம்மணன், நான் வைச்யன், போன்ற வர்ண ஜாதி பேதங்கள் சார்ந்த அஹங்காரம் எப்படித் தோன்றுகிறது? இது என் பிள்ளை, இது என் மனைவி, கணவன், இது என் வீடு போன்ற மமகார மயக்கங்கள் தோன்றுவது எப்படி இந்த ஆத்மாவில்? இப்படி வியவகாரத்தில் தோற்றத்தை மிகத் தெளிவானது போல் காட்டும், ஆகாததை ஆக்கி, கூடாததைக் கூட்டி வைக்கும் வல்லமை உள்ள இந்த மாயையின் விசித்ரம்தான் என்னே! 

‘அபகத குணவர்ண ஜாதி பேதே 

ஸுகசிதி விப்ரவிடாதி அஹங்க்ருதிம் ச | 

ஸ்புடயதி ஸுததாரகேஹ மோஹம் 

து அகடிதகடநா படீயஸீ மாயா ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, May 28, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 03

படித்தவர்களையும் சிலசமயம் பட்டிநிகராக ஆக்கிவிடுகிறது இந்த மாயை. சேராததைச் சேர்த்து, கூடாததைக் கூட்டி இந்த மாயை ஆடும் விளையாட்டு இந்த உலகம். பொருள் இல்லாப் பொருளின் விளைவு இல்லா விளைவு என்கிறார் மகாகவி பாரதியார். ஸ்ரீஆதிசங்கரர் இந்த மாயையின் விளையாட்டை, விசித்திரத்தை வியக்கிறார். காரணம், உண்மையில் இருப்பது சித் மயமாகவும், ஆனந்த மயமாகவும், தன்னைத் தவிர இரண்டாவது இல்லாததும், எல்லை பிரிவு அற்றதுவாய், என்றும் உளதான ஆத்மா ஒன்றே இருக்கிறது. ஆயினும் எங்கிருந்து ஆகாயம், வாயு, நெருப்பு, நீர், மண் என்று ஐம்பூதச் சேர்க்கையும், அதனால் ஆன உடலும், அந்த உடலே தான் என்ற மயக்கமும், அந்த மயக்கத்தால் அடுத்து அடுத்து மாறி மாறி நீளும் பிறப்பு இறப்பு என்னும் பிறவாழித் தொடரும் எல்லாம் இந்த அகண்டமான அறிவு மயமான ஆத்மா என்பதற்குள்தான் நடக்கிறது. பிரபஞ்சமே தோன்றி, தொடர்ந்து, தோய்வதும் இந்த சித் மயமான ஆத்மாவினுள்தான். 

‘சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகு சமைத்தாய்’ என்கிறார் பாரதி. ஆகாததை ஆக்கிவைக்கும் சாமர்த்தியம் உள்ள மாயை என்று வியக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். ‘அகடிதகடனா படீயஸீ மாயா’. 

‘அம்மா! காளீ! நீயும் என்னை விழிப்புடன் பார்த்தவண்ணம் இருக்கிறாய். நானும் உன் பிரசன்னத்தில்தான் விழிப்புடன் இருக்கிறேன். பின் எப்படி நடந்தது இந்தக் களவு?’ என்று சண்டை போடுகிறார் வங்காளத்துக் காளிபக்தர் ஸ்ரீராம்பிரசாதர்.

‘ஸுகசித் அகண்ட விபோதம் அத்விதீயம் 

வியத் அநிலாதி விநிர்மிதே நியோஜ்ய | 

ப்ரமயதி பவஸாகரே நிதாந்தம் 

து அகடிதகடனா படீயஸீ மாயா ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Sunday, May 17, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 02

என்னவெல்லாம் செய்கிறது இந்த மாயை! விவரம் தெரியாதவர்கள் சத்யம் எது என்று அறியாமல் மயங்கினால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் படித்தவர்கள்? வேதங்களைக் கற்று, வேதாந்தம் என்னும் உபநிஷதங்களை நன்கு கற்றுத் தேர்ந்து அறிஞர்களாக இருப்பவர்களும் கூட, பணம் மற்றும் பல நயங்களைக் கண்டு மனம் பேதுற்று, நாலுகால் பிராணிகளைவிட வித்யாசம் எதுவும் இல்லாதவர்களாய்க் கலங்க வைத்துவிடுகின்றதே சில சமயம் ! அப்படி ஆக்கிவிடுகிறதே இந்த மாயை! ஆகாததை ஆக்கிவைக்கும் இந்த மாயையின் வியப்புதான் என்னே! 

‘ச்ருதிசத நிகமாந்த சோதகாநபி 

அஹஹ தநாதிநிர்தர்சநேந ஸத்ய: | 

கலுஷயதி சதுஷ்பதாதி அபிந்நாந் 

அகடித கடநா படீயஸீ மாயா ||’ 


ஸ்ரீதாயுமானவ சுவாமிகள் அருமையாகப் பாடுகிறார்: 

‘ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு? 

என் அறிவு அன்றி இடம் இல்லையோ? 

அந்தரப் புஷ்பமும், கானலின் நீரும், ஓர் 

அவசரத்து உபயோகமோ? 

போதித்த நிலையையும் மயக்குதே! அபயம் நான் 

புக்க அருள் தோற்றிடாமல், 

பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி, என் 

புந்திக்குள் இந்த்ரஜாலம் 

சாதிக்குதே! இதனை வெல்லவும் உபாயம் நீ 

தந்து அருள்வது என்று புகல்வாய்?’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Friday, May 15, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 01

மெட்ரோ தடம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெரிய சைஸ் பொருட்களை அநாயாசமாகத் தூக்கி வைக்கிறது ஒரு கிரேன். கீழே பாறை போன்று கல்பகுதி இருந்தால் வெடி வைத்துத்தான் தகர்க்க முடிகிறது. மிக உயரத்தில் உழைப்பாளர் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார். கீழே இருந்து பார்த்தால் மிகச் சின்ன உருவம். அவர்தான், அவரைப் போலப் பலர்தான் சிறுகச் சிறுக, கணத்திற்குக் கணம் வேலை செய்து இத்தனை பெரிய, நீளமான வேலையை இயற்றுகின்றனர். ஒரு நிமிஷம், இந்தப் பெரிய கற்கள், இரும்புப் பொருட்கள், இயந்திரங்கள், மனிதர்கள், கிரேன்கள் எல்லாம் உண்மையில் கனமற்ற வெட்ட வெளி என்று சொன்னால் என்னை நீங்கள் சிரிக்க மாட்டீர்களா? எவ்வளவு கனம், பரிமாணம், நிச்சயம் எல்லாம் கண்ணுக்கும், அனுபவத்துக்கும் தெரிந்தும் எல்லாம் உண்மையில் வெட்ட வெளி என்று சொன்னால் அது சரியான முட்டாள்தனம் இல்லாமல் வேறு என்ன? 

நான் சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் அறிவியல் சொன்னால் என்ன செய்வீர்கள்? சாதாரண அனுபவத்தில் நீங்கள் நினைப்பதுதான் சரி. நானும் அதைத்தான் உணர்கிறேன். ஆனால் ஆழமாக அறிவியல் ரீதியாக ஆராய்ந்து போகும் பொழுது. பொருளின் அடிப்படைத் தன்மை என்று போய்ப் பார்க்கும் பொழுது விஞ்ஞானம் சொல்வது என்ன? இரும்பையோ, கல்லையோ எடுத்துக் கொள்வோம். நுணுக்கமான நிலையில் அது எதனால் ஆனது என்று பார்த்தால் அணுவால் ஆனது. அணுவின் அமைப்பு ரீதியாகப் போய்ப் பார்த்தால் ந்யூக்ளியஸ் அதைச் சுற்றி எலக்ட்ரான்கள். இந்த ந்யூக்ளியஸுக்கும், எலக்ட்ரானுக்கும் இடையில் இருப்பது வெட்ட வெளிதான். ந்யூக்ளியஸுக்குள் ஓர் அமைப்பு. அதனுள்ளும் வெட்ட வெளி. அதாவது வெட்ட வெளி என்பதை அகற்றி விட்டுப் பொருட் கூற்றின் பகுதியை மட்டும் உருட்டி வைத்தால் இந்த பூமியே சின்ன கோலி குண்டு அளவுக்கான குளிகை ஆகிவிடும் என்கிறார்கள். அப்படியென்றால் வெட்ட வெளியே பெரும்பாலும் நிறைந்த அமைப்புக் கட்டிடம்தான் நாம் காணும் கனமான பொருட்கள், நமது உடல், வெளியில் இருக்கும், நகரும் நகரா பொருட்கள் அனைத்தும். அதாவது வெட்ட வெளிக்கு மேல் வெட்ட வெளி நின்று கொண்டும், நகர்ந்து கொண்டும் போடும் ஆட்டம்தான் உலக இயக்கமோ என்று கவிதை இயற்றலாம் போல் இருக்கிறது யதார்த்த உலகம். 

ஆனால் நடைமுறை அனுபவத்தில் அப்படித் தெரிவதில்லை. ஆழ்ந்து ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாகச் சிந்தித்தால்தான் இந்த உண்மை தெரிகிறது. இதைத்தான் அத்வைதம் வேறு மொழியில் சொல்கிறது. அதாவது வியாவகாரிக நிலையில் ஒருவித உண்மையாக உலகம் புரிய வருகிறது. ஆனால் பாரமார்த்திக நிலையில் உண்மை என்பது முற்றிலும் வேறு என்று. பரம அர்த்தம் என்றால் Final Meaning. பரம அர்த்தம் என்பதனுடைய adjectival form பாரமார்த்திகம். பாரமார்த்திகம் என்றால் Meaning arrived at the final analysis என்று பொருள். ஆனால் பாரமார்த்திகம் என்ற சொல்லை நாம் போட்டுக் குழப்பிக் கொண்டு என்னவோ ஏதோ என்று பூடகமாக்கி மயங்குகிறோம். 

சரி. இதுதான் இப்படி என்றால், நமக்குத் தெரிந்தவர் ஒருவர் அயல்நாடு போகிறார். இன்றுதான் கிளம்பினார். இன்றைக்கு என்ன தேதி என்று கூட நம்மிடம் கேட்டார். சொன்னோம். ஆனால் பல மணி நேரங்கள் கழித்து, மறு நாள் இரவு போன் பண்ணுகிறார். பேச்சு வாக்கில் இன்றைக்குத் தேதி என்று நேற்றைய தேதியையே சொல்கிறார். இல்லை சார். இன்றைக்குத் தேதி என்று கரக்டாக நாம் சொல்கிறோம். இல்லவே இல்லை. இந்தத் தேதிதான் என்று அவர் முதலில் தவறாகச் சொன்னதையே மீண்டும் சொல்கிறார். என்ன ஆயிற்று இவருக்கு! அப்புறம்தான் விளக்குகிறார். அவ்வளவு நெடிய தொலைவு பறக்கும் போது காலக் கோடு மாறுகிறதாமே! இன்றைக்குக் கிளம்பி, நாளைக்குப் போய், மீண்டும் இன்றைக்கே அந்தத் தொலைதூர இடத்தை அடைந்து விடுகிறார் அவருடைய கணக்கின் படி. இதற்கே தலை சுற்றினால் எப்படி? 

விஞ்ஞானம் வேறு ஒரு விஷயம் சொல்கிறது. ஒளிதான் இருப்பதிலேயே மிக அதிக வேகமாகச் செல்லும் ஒன்று. ஆனால் அந்த ஒளியே சூரியனை விட்டுக் கிளம்பி நம்மை வந்தடைவதற்குள் 8 நிமிஷம் கடந்துவிடுகிறது. அதாவது எட்டு நிமிஷத்திற்கு முந்தைய சூரியனைத்தான் ஒவ்வொரு கணமும் நாம் காண முடிகிறது என்று பொருள். சூரியனாவது பரவாயில்லை. இன்னும் சில விண்வெளிக் கோளங்களிலிருந்து நமக்கு ஒளி வந்து சேரப் பல ஆண்டுகள், பல நூற்றாண்டுகள் கூட ஆகின்றன என்று விஞ்ஞானம் சொல்கிறது. அதாவது இன்று நேற்று நாளை என்பது ஒரு சின்ன எல்லைக்குள் நாம் ஆடுகின்ற பாண்டி விளையாட்டு. நமக்கு வாய்த்த எல்லைக்குள். நம் எல்லைகளை நாம் விரிவுபடுத்திப் பார்க்கலாம். அதாவது சில்லாக்கைச் சற்றுத் தள்ளித் தள்ளிப் போட்டு விளையாடலாம். ஆனாலும் என்றுமே இச்சா இனியாதான். 

ஒரு கற்பனை. ஒளியின் வேகத்தை விட அதிகமாகச் செல்லும் ஒரு ராக்கட் கட்டி அதில் பயணப்பட்டுப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். போய்விட்டு ஓர் அரைமணி நேரத்தில் திரும்பி வந்து விடுவோம் என்றும் வைத்துக் கொள்வோம். வந்து பார்த்தால் பல நூறு வருஷங்கள் கடந்து போய்விட்ட பூமிக்கும், அதில் நாம் கிளம்பிய நம்முடைய வீட்டிற்கும் ( அப்படி ஒரு வேளை அப்படியே அந்த வீடும், சூழலும் காப்பாற்றப் படுமானால் ) வந்து சேருவோம். 

விஷ்ணு புராணத்தில் ககுத்மியின் பெண் ரேவதியைப் பற்றிய கதை வருகிறது. ரேவதியை அழைத்துக் கொண்டு ககுத்மி பிரம்ம லோகம் போகிறார். பிரம்மா ஏதோ வேலையாக இருக்கவும் சற்றே காத்திருக்கிறார். மிகச் சிறிய காலம்தான் காத்திருக்க வேண்டியிருந்தது. உடனேயே பிரம்மா ‘என்னப்பா! என்ன இங்கெ வந்திருக்கிறாய்?’ என்று கேட்டார். பெண்ணுக்கு நல்ல வரன் அமைய வேண்டும். நீங்கள்தான் வரம் தர வேண்டும் என்றார். பிரம்மா சிரித்தார். ‘என்ன ஆளுய்யா நீ? காலம் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு கணக்கில் ஓடுகிறது. நீ ஒரே காலம்தான் பூமியிலும், இந்த மண்டலத்திலும் என்று நினைத்துக் கொண்டு வந்து விட்டாய். நீ இங்கே காத்திருந்த சில நிமிஷப் போதுகளில் உங்கள் பூமியில் பல சதுர்யுகங்கள் கடந்து போய்விட்டன. நீ இப்பொழுது மீண்டும் போனால் உன் ராச்சியம் இருக்காது, உன் உறவினர் யாரும் இருக்க மாட்டார்கள். நீ வரும் பொழுது இருந்த உலகமே இருக்காது. எல்லாம் மாறிவிட்டது, கடந்து விட்டது’ என்று கூறுகிறார். ககுத்மி, ரேவதி, பிரம்மா எல்லாம் புராணப் பெயர்களாக இருக்கலாம். ஆனால் சொல்லப் பட்ட விஷயம் காலத்தையும், ஆகாய வெளியையும் பற்றிய உண்மை விஞ்ஞானம் இன்று சொல்லும் உண்மை. 

இந்த சிருஷ்டி, இந்தப் பிரபஞ்சம் இதை நன்கு புரிந்துகொள்ளக் கவனம் செலுத்தினால் முழுக்க முழுக்க வியப்புதான். இந்த வியப்புதான் மாயை. இந்த மாயையை உடலும், மனமும் கொண்ட சமுதாய நிலைப்பட்ட மனிதன் என்ற கோணத்திலிருந்து விஞ்ஞானம் வியந்தும், நயந்தும் ஆய்வு நடத்துகிறது. 

இந்த மாயையை உடலும், மனமும் உபாதிகளாகக் கொண்ட ஜீவநிலை கடந்த, காலம், தேசம் என்ற எல்லைகள் அற்ற ஆத்மாவின் நிலையில் நின்று வியந்து ஸ்ரீஆதிசங்கரர் பாடிய ஐந்து சுலோகங்கள்தாம் இந்த மாயா பஞ்சகம் என்பது. 

காலம், தேசம், உடல், மனம், பஞ்ச பூதங்கள் என்ற உபாதிகளின் உள்ளே நிலவும் பிரபஞ்சத்திலேயே ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானம் இயற்கையின் அதிசயத்தை, காலத்தின் தன்மை, வெட்ட வெளியின் தன்மை எல்லாம் எவ்வளவு வினோதமாகவும், விடை ஓயாத புதிராகவும் விரிகிறது, மாறுகிறது என்னும் மாயா விசித்ரத்தை வியக்கிறது. 

மெய்ஞ்ஞானமோ உபாதிகளைக் கடந்து, உணர்வுமயமாகி நின்று, ஆத்ம போதத்தில், சித் ஸ்வரூபமாய் நின்ற அகண்டத்தில் இந்தப் பேத விசித்ரங்களை எப்படி மாயா ஜால நிகழ்ச்சிகள் போன்று நடத்துகிறது இந்த மாயை என்று வியக்கிறது. விஞ்ஞானத்தின் வியப்பு இன்றைய நவீன க்வாண்டம் அறிவியல் என்றால், மெய்ஞ்ஞானத்தின் வியப்பு பகவத்பாதரின் இந்த மாயா பஞ்சகம். 

இந்த மாயா பஞ்சகத்தில் பேசுவது யார் என்று பார்த்தால் நீங்கள், நான், அவர். ஆம். உடல்கள் தோறும் உள் நின்ற உயிராக இருப்பது நான் என்ற கண்ணன் கூற்றின் வெளிப்பாடுதான் இந்த வியப்பு. 

இதைப் புரிந்துகொள்ள ஒரு சின்ன உத்தி: வெட்ட வெளியில் இருக்கும் பொருளாக இல்லாமல் நீங்கள் உங்களை அந்த வெளியாகவும், உங்களுக்குள் இந்தப் பொருட்களும், பிரபஞ்சமும் உள்ளடங்குவதையும் ஒரு கற்பனையாகவேனும் தியானித்துப் பாருங்கள். உபாதிகளின் கட்டமைப்பிலிருந்து வெளியேறிய பார்வையைப் பெற அது ஒரு நல்ல பயிற்சி ஆகும். அந்தப் பார்வைக் கோணத்தில் நின்று புரிந்துகொள்ள வேண்டிய கருத்துகள் ஸ்ரீஆதிசங்கரர் இங்கே கூறும் கருத்துகள் என்பதை மறக்காதீர்கள். 

பார்த்தல் என்றதுமே நமக்கு மனத்தில் எழும் சித்திரம் ஓர் உருவம், அதற்குக் கண்கள். அதன் விழியில் படும் பொருட்கள். இந்தச் சித்திரத்தை மாற்றி உருவம் இல்லாது, விழி, கண் என்று இல்லாமல் பார்வை மட்டுமே, பார்வையாகவே பரந்த, நிறைந்த ஆகாயம். பார்வையாகவே ஆகிய தளம். Perceiving Field. அதுதான் நீங்கள் என்பதை எவ்வளவு ஆழமாக உள்வாங்குகிறீர்களோ அந்த அளவிற்கு ஸ்ரீஆதிசங்கரர் உங்களுக்கு அர்த்தம் ஆவார். 

நிச்சயம். சித் மயமாக இருக்கும் ‘உங்களுக்கு’ (எனக்கு, அவருக்கு) ஒப்புமையாக, உதாரணமாகக் காட்டக் கூடிய வேறு ஒன்று எங்கே இருக்கிறது? அன்றும், இன்றும், என்றும் இருக்கும் சித் கனமாகிய உங்களுக்கு மாற்றமோ, மறைவோ, என்றும் இல்லை என்பதனால் நீங்கள் நித்யம் ஆனவர். முற்றிலும் அறிவே மயமாக சித் மயமாக இருக்கும் உங்களிடம் இவ்வளவு அம்சம் என்று கூறுபோட்டுப் பார்க்க இயலாது ஆகையினாலே நீங்கள் நிரம்சகர். உடலாக இருந்தால் இதுதான் உங்கள் உருவம். இதனோடு நீங்கள் முடிந்துவிடுகிறீர்கள் என்று எல்லைகளை வகுத்துக் கூறலாம். ஆனால் அறிவு மயமான ஆகாயமாக இருக்கும் உங்கள் இருப்பு கண்டமானது (பகுதிபடுத்தக் கூடியது) அன்று. நீங்கள் அகண்டம். அறிவு மயமான உங்களிடம் (சித் மயமான உங்களிடம்) சித் இல்லாத வேறு எதுவும் கலந்திருந்தால் உங்களுக்குள்ளேயே கூட எதுவரை சித், இது சித் பகுதியா அல்லது சித் அற்ற பகுதியா என்று வேறுபடுத்திப் பார்க்க (விகல்பித்துப் பார்க்க) முடியும். முழுக்க முழுக்க சித் மயமே ஆன அகண்டாகார வெளியாக இருக்கும் உங்களிடம் அப்படி ஏதும் விகல்பிக்க முடியாது. அனைத்துவித விகல்பிக்கலாம் சாத்யங்களும் அற்றுப் போன நிலை உங்கள் நிலை. ஸர்வவிகல்பனாதிசூந்யம். இங்குதான் உங்கள் வியப்பின் தொடக்கம். 

இப்படி சித் மயமான அகண்டாகார வெளியாக, மாற்றம், மறைவு, கூடுதல், குறைவு, வேறுபடுதல் எனும் எதுவுமற்ற சைதன்யமாகிய என்னிடம் (நீங்கள் சிதாகாசம், உங்களுக்குள் அடங்கியிருப்பது பிரபஞ்சம்) ஜகத் என்றும், அதில் ஜீவர்கள் என்றும், அதில் நான் ஒரு ஜீவன் என்றும், ஜகத்துக்கும், ஜீவர்களுக்கும் நியாமகமாய் ஈச்வரன் என்றும் இப்படிப் பேதமயமான சித்திரத்தை, சாத்யமே இல்லாத இத்தகைய வியாவகாரிக உலகைச் சாத்யப்படுத்தி நடத்துகிறதே இந்த மாயை! என்ன வியப்பு என்ன வியப்பு ! 

நிருபம நித்ய நிரம்சகேSபி அகண்டே 

மயி சிதி ஸர்வ விகல்பநாதி சூன்யே | 

கடயதி ஜகதீச ஜீவ பேதம் 

து அகடித கடநாபடீயஸீ மாயா ||’ 

 

‘சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்குச் 

சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய் 

அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம் 

ஆகப் பலபல நல்லழகுகள் சமைத்தாய்’ (மகாகவி பாரதி) 

’சக்தி முதற்பொருள் 

பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு 

சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை 

சக்திவீணையிலே ஞாயிறு ஒரு வீடு, ஒரு ஸ்வரஸ்தானம் 

சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்’ (மகாகவி பாரதி) 

 ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, May 6, 2026

அத்வைத பஞ்சரத்னம் 05

மிகப் பெரிய பிரபஞ்ச உண்மை ஒன்றை இந்தச் சுலோகத்தில் கூறுகின்றார் ஸ்ரீஆதிசங்கரர். உண்மையில் மொழியில் கொண்டுவர மிகவும் சிரமமான உண்மை இது. மொழி குளறுபடி ஆகும். மிகவும் முயன்றால் மொழியில் வெறுமனே கோடிகாட்டத்தான் முடியும். ஆனாலும் அந்த உண்மையை மக்களுக்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்ற பெரும் ஆவல் ஸ்ரீசங்கரரை உந்துகிறது. இதைப் புரிந்துகொள்ளுவதற்கு ஓரிரு விஷயங்களை நன்கு மனத்தில் வாங்கிக் கொண்டால் நன்கு யூகிக்க வசதியாக இருக்கும். 

நீங்கள் மனத்தால் ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். உங்களைச் சுற்றிலும், அறையிலோ, அலுவலகத்திலோ, தெருவிலோ எங்கும் நீங்கள், மற்றவர்கள், மற்ற பொருட்கள், இந்த மனிதர்கள், உயிர்கள், பொருட்கள் எல்லாவற்றையும் உட்கொண்ட ஆகாயம், வெட்ட வெளி அனைத்தையும் உள்ளடக்கியபடி விரிந்து பரந்து அனைத்தையும் கவிந்திருக்கிறது. நீங்கள் விளையாட்டாக ஒரு கற்பனையைச் செய்து பாருங்கள். அதாவது நீங்கள் இந்த ஆகாயத்தினுள் அடங்கியுள்ள ஒரு பொருளாக, ஒரு எண்டிடியாக இல்லாமல், நீங்கள்தான் இந்த பரந்த ஆகாயம். உங்களுக்குள்தான் இந்தப் பொருட்கள், மனிதர்கள் எல்லாரும் இருக்கின்றனர். இதை நன்கு கற்பனை செய்து தத்ரூபமாக நினைத்துப் பாருங்கள். 

உங்களுக்குள்தான் எல்லாப் பொருட்களும், அவற்றின் இயக்கங்களும் நிகழும். நீங்கள் எந்தப் பொருளாலும், எந்த இயக்கத்தாலும் பாதிக்கப்படாத ஆகாயமாகச் சாட்சியாக மட்டும் இருப்பீர்கள். அதாவது நீங்கள் நன்கு கற்பனை செய்வீர்கள் என்றால், ஆகாயத்தினுள் அடங்கிய பொருளாக இருப்பதற்கும், அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கிய ஆகாயமாக இருப்பதற்கும் இயல்பிலேயே வேறுபாடு என்ன என்பதை யூகிக்க முடியும். 

அடுத்து, ஒரு பெரும் நிலைக்கண்ணாடி முன்னால் நில்லுங்கள். அதனுள் தெரியும் ஆகாயம், பொருட்கள், உங்களுடைய பிம்பம், மற்றவர்களின் பிம்பம் என்ற அனைத்தும் கலந்த ஓர் உலகமே அந்தக் கண்ணாடியுள் தெரிகிறது. வெளீயில் நீங்கள் இருக்கின்ற உலகம் சரி. ஆனால் கண்ணாடியுள் தெரியும் உலகத்தில் உங்கள் பிம்பம், பொருட்களின் பிம்பங்கள் எல்லாம் தத்ரூபமாகத் தெரிகின்றன, நகர்கின்றன, உங்கள் பிம்பமே இடம் வலம் மாறினாலும் கூட உங்களை மாதிரியே பேசுகிறது, கைகால் அசைக்கிறது. அப்படியென்றால் கண்ணாடிக்குப் புறத்தே தெரியும் நீங்கள் இருக்கின்ற இந்த உலகத்தைப் போன்றே, கண்ணாடியினுள் தெரிகின்ற அந்தப் பிரதிபிம்ப உலகமும் அதேபோல் உண்மையா? அப்படியென்றால் நீங்கள் வாங்கி மாட்டிய இந்தக் கண்ணாடிக்குள் ஓர் உலகமேவா இருக்கிறது? இல்லையே. அந்தப் பிரதிபிம்ப உலகம் உங்கள் உலகத்தைப் போன்று உண்மை இல்லை என்பது இப்பொழுது உங்களுக்குப் புரியும். அப்படியென்றால் கொஞ்சம் விடாமல் சிந்தனையைச் செலுத்தி இன்னும் ஒரு விஷயத்தையும் மனத்தில் வாங்கப் பாருங்கள். நீங்கள் இருக்கும் இந்த நிஜமான உலகமே மிகவும் மெய்ம்மையான கடந்தநிலையில் இருக்கும் ஒரு பரம சத்யத்தினுள் தோன்றும் ஒருவித பிரதிபிம்ப உலகம்தான் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? 

நாம் இப்பொழுது பார்த்த இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் நன்கு புரிந்துகொண்டால் ஸ்ரீஆதிசங்கரர் சொல்லும் இந்தச் சுலோகம் உங்களுக்குச் சுலபமாக இருக்கும். 

ஆத்மவஸ்து ஆகிய நான் மட்டும்தான் இங்கு இருக்கிறேன். என்னைத் தவிர ஒரு பொருள் இங்கு இல்லை. என்னிலும் வேறாகப் பிரபஞ்சம் என்று எதுவும் இல்லை. மாயையின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வெளி, பொருட்கள் முதலிய பேதங்கள் எல்லாம், இரண்டற்ற அத்வைதமான என்னிடம், கண்ணாடியினுள் தோன்றும் பொருட்கள் போன்று, எனக்குள்ளேயே தெரிகின்றன. இவை எவற்றாலும் சிறிதும் பாதிக்கப்படாமல் விளங்குவதால் நான் சிவமாகிய பிரம்மமேயாக இருக்கிறேன்.’ 

‘மத்தோ நாந்யத் கிஞ்சிதத்ராஸ்தி விச்வம் 

ஸத்யம் பாஹ்யம் வஸ்து மாயோபக்லுப்தம் | 

ஆதர்சாந்தர் பாஸமானஸ்ய துல்யம் 

மய்யத்வைதம் பாதி தஸ்மாச்சிவோSஹம் ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, May 5, 2026

அத்வைத பஞ்சரத்னம் 04

பிறந்து வளர்கிறோம். அப்பொழுது இயற்கையின் ரீதியாகப் பல நெறிகளை நாம் கடைப்பிடித்தாக வேண்டியிருக்கிறது. வளர்ந்த நிலையில் நம்மால் தாங்கக் கூடிய சில விஷயங்கள், பிறந்த குழந்தை நிலை, சற்று வளர்ந்த சிறுவயது நிலையில் எல்லாம் சாக்கிரதையாகத் தவிர்க்கப் படவேண்டியவையாய் இருக்கும். வளர்ந்த பின்னரும் பல சூழல்களைப் பொறுத்துச் செய்ய வேண்டியன, செய்யத் தவிர்க்க வேண்டியன, தட்பவெட்ப நிலையைப் பொறுத்து, மக்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து, நோக்கங்களைப் பொறுத்து என்று பல காரணங்களால், வழிவழியான பண்பாட்டின் காரணமாகவும் கூட, செய் செய்யாதே என்றபடியான விதிகள், விலக்குகள் எல்லாம் வாழ்க்கையின் இயற்கையில் நமக்கு ஏற்படுகின்றன. 

இதுவரையில் சொன்னதில் இந்த ‘நமக்கு’ என்ற சொல்லைத்தான் உன்னிப்பாக ஆராயச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். அதாவது பிறக்கிறோம், வளர்கிறோம், செய் செய்யாதே என்ற விதி விலக்குகள் ரீதியாக நமது கடமைகள், முயற்சிகள் எல்லாம் அமைகின்றன என்றோமே, இதில் நாம் என்பது எதைக் குறிக்கிறது என்று கேட்கிறார். அதாவது அவரவர், தம்மைப் பொறுத்தவரையில், ‘நான்’ என்பது என்ன என்று யோசிக்க வேண்டும். இந்த உடல், தானே தன் போக்கில் நான் என்று சொல்லிக் கொள்வதில்லை. நான் என்பது இந்த உடல் இல்லை. அதனால்தான் என்னுடைய உடல் என்று நம்மால் சொல்லவும் முடிகிறது. இந்த உடலை தன்னுடையது என்று சொல்லிக் கொள்ளும் ஒன்றுதான் நான். 

அந்த நான் உணர்வு மயமாக இருக்கும் ஆத்மா. அது பிறப்பதில்லை. பிறப்பது உடல்தான். வளர்வதும் ஆத்மா அன்று. பலவேறு சூழல்கள், கட்டுபாடுகள், விதிகள், விலக்குகள் எல்லாம் ஆத்மாவுக்கு இல்லை. அதாவது அவரவர் தன்னுள் எண்ணிக்கொண்டால் ‘எனக்கில்லை’. நான் பிறப்பதும் இல்லை. வளர்வதும் இல்லை. இயற்கையாக அமைந்த பல நெறிகளும், செய் செய்யாமைகளும் எனக்கில்லை. நான் செய்தேன் என்னும் கர்த்துருத்துவம் (செய்வோன் என்னும் தன்மை) அகங்காரத்திற்குத்தானே ஒழிய ஆத்மாவான எனக்கில்லை. ஆத்மா ஆகிய நான் சின்மயமாக, ஞான மயமாக இருக்கிறேன். பொருள்தன்மை சிறிதும் என்னிடம் கிடையாது. பொருள்தன்மை இருக்கும் எதுவும் பிறக்கும், மாறும், மறையும். நிலைத்து இராமல் இவ்வாறு தோன்றி மாறி மறையும் தன்மை என்பது சுபம் அற்றது. இத்தகைய அசுபம் சற்றும் இல்லாத நிலைத்த நித்யமான ஞானமயன் ஆகிய ஆத்மா நான். எனவே நான் சிவம். 

நான் பிறந்தவன் அன்று, வளர்ந்தவன் அன்று அழிபவனும் அன்று 

இயற்கையில் அமைந்த தர்மங்கள் இந்த உடலுக்கு அமைந்தவை ஆகும் 

செய்வோன் என்ற தன்மையும் அகங்காரம் பற்றியது ஆகும் 

சின்மயன் ஆகிய ஆத்மா என்னைப் பற்றியது அன்று சிவமே நான்’ 

‘நாஹம் ஜாதோ ந ப்ரவ்ருத்தோ ந நஷ்டோ 

தேஹஸ்யோக்தா: ப்ராக்ருதா: ஸர்வதர்மா: | 

கர்த்ருத்வாதிச்சின்மயஸ்யாஸ்தி நாஹங் 

காரஸ்யைவ ஹ்யாத்மனோ மே சிவோஹம் ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***