Wednesday, April 29, 2026

அத்வைத பஞ்சரத்னம் 01

அத்வைதம் நேரடியாக மிக எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய தத்துவப் பார்வை. ஆனால் சிக்கல் சிடுக்காக நாம் கட்டிவைத்திருக்கும் நம் மனத்தை அதற்குத் தகுந்த வகையில் எளிமையாக்கிக் கொள்வதுதான் பெரிய சிரமம். 

நம் மனத்திற்கு முதலில் தேவையானது எப்பொழுது அடைவோம் என்றே தெரியாமல் ‘அம்மா வீடு எங்கே? இன்னும் கொஞ்சம் தூரம்’ என்றபடி இழுத்துக் கொண்டே போகும் நீண்ட நெடிய மார்க்கம். கூடுதலாகக் கடைசியில் அடைவோமா என்பதும் நிச்சயமில்லை என்றபடி ஒரு மர்மம் இருந்தால்தான் நமக்கு எதுவுமே ரசிக்கிறது. அதற்கு உச்சபட்சமான மதிப்பையும் தரமுடிகிறது. அத்வைதம் போல் பொசுக்கென்று உண்மையைப் போட்டு உடைக்கும் ஒரு பார்வை முதலில் நமக்கு எரிச்சலைத்தான் தருகிறது. நாமோ ஏதேதோ உலகங்களுக்குப் படிப்படியாகப் போய், அங்கு நமக்கு ஏற்பட்ட பரிந்துரை, போனால் போகிறதென்ற தயவு எல்லாம் கனிந்து, நம்முடைய மன்னிக்கவே முடியாத குற்றம் எல்லாம் பெரும் தாட்சண்யத்தின் காரணமாக ஒதுக்கப்பட்டு, உள்ளே போகலாம் என்ற அனுமதி கிடைக்கின்ற வழிப்பட்டியலில் ஏற்படும் ஓர் உள்ளார்ந்த கனம் அலாதியானதுதான். அதை விட்டுவிட்டு நம்மைப் பார்த்து, ‘நீ உண்மையில் பரம்பொருள்தான். முக்தி என்பது ஏதோ இனிமேல் அடையப்படும் ஒன்றல்ல. அது ஏற்கனவே எக்காலத்திற்கும் அடையப்பட்டுதான் இருக்கிறது. நீதான் அவித்யையின் காரணமாக அடையாத ஜீவனாக உன்னை நீயே பிரமித்து, அடையப்படும் உலகம், அடைவதற்கான பெருவழி என்று பிரமைக்கு மேல் பிரமை என்று பின்னிக்கொண்டு இருக்கிறாய். விழித்திடு. நீ யார் என்று உணர்’ என்று அத்வைதம் சொல்லும் போது கன்னத்தில் பளார் என்று அறைவிட்டது போல் உணர்கிறோம். ஆட்டம் முடிந்துவிடுமோ என்ற அச்சமும் நமக்குள் எங்கோ எட்டித்தான் பார்க்கிறது. 

பிரமைகள் நிறைந்த மனிதரிடம் சென்று, ’இதெல்லாம் உன் பிரமைகள், உண்மை இதுதான்’ என்று சொல்ல ஒருவருக்கு அசகாயத் துணிச்சல் இருக்க வேண்டும். நமது நல்ல காலம். அத்தகைய துணிச்சல் கொண்டு வந்தவர் ஸ்ரீஆதிசங்கரர். சிறியதும், பெரியதுமாகப் பல நூல்களும், பிரபந்தங்களும் செய்தவர், அத்வைதம் என்பதில் நமக்கு எங்குச் சிக்கல் ஏற்படுமோ அந்தச் சிக்கல்களைத் தொட்டு விளக்கும் முகத்தால் ஐந்து சுலோகங்களை ‘அத்வைத பஞ்சரத்னம்’ என்று தந்திருக்கிறார். 

முதலில் பெரும் சிக்கல் ஜீவனா? ஆத்மாவா? என்பது. இரண்டும் ஒன்றுதானே என்பது குழப்பம். சில இடங்களில் ஜீவனைச் சொல்ல வேண்டிய இடத்தில் ஆத்மா என்று சொல்லியிருக்கிறதே என்ற சந்தேகம். ‘அவர் ஒரு நல்ல ஆத்மா’ என்று சொல்லும்போது ஜீவனைத்தானே சொல்கிறோம். நீங்கள் ஒரு ஜீவன் என்றால், நான் ஒரு ஜீவன் என்றால் நாம் படும் அவஸ்தை நமக்குத் தெரிந்துதானே இருக்கிறது. அப்பொழுது திடீரென்று ஒருவர் வந்து ‘அப்பா! நீ இந்த உடல், மனம், உணர்ச்சிகள், உறவுகள், இந்த உலகம், என்பதெல்லாம் உபாதிகளால் கட்டம் கட்டப்பட்டு, வேறு வேறு பேதங்களாகக் காட்சி அளிக்கும் அவித்யை. எப்படி ஒரே ஆகாயமோ அதே போல் நீ அந்த எல்லையற்ற ஆத்மா. ஆகாயம் ஒரு மண்பானைக்குள் இருக்கும் ஆகாயம், ஒரு அறைக்குள் இருக்கும் ஆகாயம், ஒரு குடுவைக்குள் இருக்கும் ஆகாயம் என்று வேறு வேறுபடுத்திப் பார்க்க முடிந்தாலும் உண்மையில் ஆகாயம் என்பதில் எந்தப் பிரிவினையும் இன்றி எல்லாம் ஒரே ஆகாயமோ அதுபோல்தான் ஆத்மா ஒன்று. உபாதிகளில் கட்டுண்டு ஜீவர்கள், இந்த ஜீவன், அந்த ஜீவன், நீ, நான் என்றெல்லாம் தோன்றுகிறது. இது அவித்யையால் தோன்றும் காட்சி. உண்மையில் இவ்வாறு இல்லை’ என்று ஒருவர் சொல்லும் போது, நாம் தெளிவதா? இன்னும் குழம்புவதா? என்று புரியாமல் முழிக்கிறோம். இந்தச் சிக்கலை முதலில் தீர்த்து விடுகிறார் முதல் சுலோகத்தில். முதலில் ஆத்மா என்றால் இன்னதென்று தெளிவாகக் காட்டிவிடுகிறார்.

‘நான் இந்த தேகம் இல்லை. நான் இந்த பொறிபுலன்கள், இந்திரியங்கள் இவையும் இல்லை. இந்த இந்திரியங்களையெல்லாம் உள்ளே இருந்து வாங்கிச் சிந்திக்கும் மனமும் இல்லை. மனத்தில் நான் நான் என்று எழுகின்ற அகங்காரம் அதுவும் நான் இல்லை. உள்ளே இயக்கமாக உணரப்படும் பிராணன் அதுவும் நான் இல்லை. மனம் பலவாறாகச் சிந்தித்த பின்னர் இது சரி இது சரியில்லை என்று முடிவு செய்கிறதே புத்தி, அதுவும் நான் இல்லை. இவைகள் எல்லாமே இப்படி என்றால் புறத்தில் உறவுகளாக இருக்கும் கணவன் மனைவி, பெற்றவர் குழந்தைகள், வசிக்கும் இடம், இருப்பில் இருக்கும் செல்வம் இதெல்லாம் நான் என்ற உண்மைக்கு மிகத் தூரத்தில் இருப்பவை என்பது சொல்ல வேண்டியதில்லை. சரி. இதெல்லாம் நான் இல்லையென்றால் அந்த ‘நான்’ என்பதுதான் என்னவாக இருக்கிறது என்ற விவரம்தான் என்ன? 

இதுவரையில் சொன்ன தேகம், மனம், இந்திரியம், புத்தி, புற உறவுகள், அந்த உறவுகள் பழகும் உலகம், அந்த உலகத்தில் இருக்கும் இடம், வாழத் தேவையான செல்வம் என்று அனைத்திலும் படாமல், பார்வையாளராக, சாட்சியாக ஒன்று உள்ளே இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறது. நம் தேகம் சுகம் உற்ற போதும் அது பார்வையாளராக, சாட்சியாக இருக்கிறது. தேகம் நோய் உற்ற காலத்திலும் சாட்சியாக இருக்கிறது. மனம் குதுகலம் அடையும் போதும் அது சாட்சி. மனம் நோகும் போதும் அது சாட்சி. புத்தி தீர்க்கமாக இருக்கும் போதும் அது சாட்சி. புத்தி தடுமாறும் போதும் அது சாட்சி. இந்திரியங்கள் அடங்கி, அமைதியாக  இருக்கும் போதும் அது சாட்சி, இந்திரியங்கள் தறிகெட்டு ஓடும்போதும் அது சாட்சி. உறவுகள் கூடிக் குலவும் போதும் அது சாட்சி. உறவுகள் பிணங்கித் தனிமைப்பட்ட காலத்தும் அது சாட்சி. சாட்சி தத்துவமாக மாறாமல் நம்முள் இருக்கும் அந்த ஒன்றுதான் உண்மையில் ‘நான்’. ஆத்மா. எதிலும் கலந்து உருண்டு பிரளாமல் தன்னில் தான் சாட்சியாக இருந்தபடியே இருக்கும் ஆத்மா. 

ஆனால் ஜீவன் என்பது சுகம் என்றால் குதிக்கும். கூடிக் குலவும். பார்க்கும் எதனோடும் அது இல்லாமல் தான் இல்லை என்று மயங்கும். மனத்தோடு ஒன்றறக் கலந்து புரளும். அகங்காரத்தோடு ஐக்கியமாகி நானே நான் என்று ஆணவப்படும். துக்கம் வந்த காலத்து ‘ஐயோ அப்பா தாங்கலையே..’ என்று அழுது ஓலமிடும், ஓடும், சுகம் வராதா என்று ஏங்கும், நிலையற்ற உறவுகள் பிரிந்தால் தான் அழிந்ததாக அஞ்சும். செல்வத்தில்தான் தன் உயிரே இருக்கிறது என்று பதைக்கும். இதுதான் நம்முடைய நிலைத்த முகவரி என்று நாமே மயங்கும்படி இருப்பதுதான் ஜீவன். இந்த ஜீவனையும் பார்த்தபடிச் சாட்சியாக இருப்பதுதான் உண்மையில் நான் என்று நாமாக இருக்கும் ஆத்மா. 

ஆத்மா என்ன என்று ஒரு வார்த்தையில் சொன்னால் ‘சாட்சி’. அந்தச் சாட்சி ஒரு காலத்துக்கு அன்றி எக்காலத்துக்கும் சாட்சியாகவே இருப்பது. அது நித்யம். நித்யமாய்ச் சாட்சியாக இருப்பது. அது சாட்சியாக இருப்பதைப் பார்க்க வேறு ஒன்று கிடையாது. அதுவேதான் தான் சாட்சியாக இருப்பதைத் தானே உணர்ந்து இருக்கிறது. தன்னுடைய இருப்பு, இயல்பு பிறிதொன்றால் அறியப்பட்டு அதன் மூலம் தன்னுடைய இருப்பு அடையாளப்படும்படி ஒன்று இருக்குமானால் அந்தப் பொருள் ‘பராக்’ என்ற வகையில் சேரும். பராக் என்றால் தான் பிறிதொன்றால் அறியப்பட இருப்பது என்று பொருள். ஆனால் எது ஒன்று தன் இருப்பு தன்னால் நேரடியாக உணரப்பட்டு இயலுமோ அந்தப் பொருள் ‘ப்ரத்யக்’ என்னும் வகையைச் சேர்ந்தது. ‘ப்ரத்யக்’ என்பது ஆத்மா. ப்ரத்யகாத்மா என்று சொல்வது வழக்கம். தான் யார் என்று உணராமல், சூழ்நிலையோடு மயங்கித் துன்புறும் ஜீவனின் உலகில் சிவம் எட்டாக் கனியாகத் தெரிகிறது. ஆனால் தான் என்பதில் மயக்கமின்றி என்றும் சாட்சியாக நிலைத்த ஆத்மா, அதுவேதான் சர்வமங்களமான சிவம். அந்தச் சர்வமங்களமான, சிவமான, சாட்சி உருவமான, ப்ரத்யக் என்னும் ஆத்மா தான் உண்மையில் நான்.’ 

‘நாஹம் தேஹோ நேந்த்ரியாணி அந்தரங்கோ 

நாஹங்கார: ப்ராணவர்க்கோ ந புத்தி: | 

தாராபத்யக்ஷேத்ர வித்தாதிதூர: 

ஸாக்ஷீ நித்ய: ப்ரத்யகாத்மா சிவோSஹம் ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, April 21, 2026

ஒற்றை விளக்கு (ஏகச்லோகீ ப்ரகரணம் - ஸ்ரீஆதிசங்கரர்)

நூறு செய்யுள், பத்துச் செய்யுள், ஐந்து செய்யுள் என்ற அளவில் எல்லாம் அத்வைதப் பேருண்மையை எளிமையாக விளக்கி நூல்கள் செய்த ஆதிசங்கரர் ஒரே செய்யுளிலும் அந்த அத்வைத தத்துவத்தைப் புரிய வைக்கும் அற்புத சுலோகம்தான் இந்த ஏகச்லோகீ என்பது. முக்கால் வரியிலேயே கூட அத்வைதத்தை விளக்கிக் காட்டியவர்தான் ஆதிசங்கரர். 

அத்வைத தத்துவம் யாது என்று அறியத் துடிக்கும் மனத்திற்கு அந்த முக்கால் வரியே போதுமானது. அந்த வரி இதுவாகும். ‘ப்ரஹ்ம ஸத்யம், ஜகன்மித்யா, ஜீவோ ப்ரஹ்மைவ, நாபர:’

இதன் பொருள் - பிரம்மம் மட்டுமே சத்யம். இந்த ஜகம் மித்யையே ஆகும். இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமேயாக இருக்கிறது. வேறாக இல்லை. 

முக்கால் வரியில் உணர்த்தியதை ஒரு சுலோகத்திலும் உணர்த்துகிறார் பகவத்பாதர். இந்த ஒரு சுலோக நூல் தோன்றிய சூழலைப் பற்றி உரையாசிரியர்கள் சில தகவலைத் தருகின்றனர். கண்ணொளி இல்லாது போன ஒருவர் ஸ்ரீஆதிசங்கரரைக் காண ஏங்கியதாகவும், அவரிடம் பகவத்பாதர் சென்று காண்பதற்கான ஒளி என்பதை வைத்தே படிப்படியாக விளக்கி, ஒற்றை விளக்காகவும், ஒற்றை ஜோதியாகவும் இருப்பது ஆத்மா என்றும், அதுதான் உண்மையில் அவரே என்றும் உணர்த்தி ஞானம் நல்கினார் என்பது சூழலின் கதை. 

ஒரே சுலோகம் என்பதால் ஒவ்வொரு சொல்லும் நன்கு நிறுத்தி நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உலகில் பொருளை நமக்குக் காட்டித்தரும் ஒளி எது? ஜோதி எது? என்ற கேள்விதான் தொடக்கம். 

இதை ஸ்ரீஆதிசங்கரர் கண்ணொளி இழந்த அந்த மனிதரை நோக்கிக் கேட்டதாக நினைப்பதைவிட நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கிறார் என்பதும் பொருத்தமாக இருக்கும். நாம் உண்மையைக் காணும் கண்ணொளி இல்லாமல்தானே அவதிப்படுகிறோம்? இனி சுலோகத்துள் போவோம். ஆதிசங்கரர் கேட்பதற்கு நம்முடைய பதில் என்று படிப்படியாகப் போகிறது. 

பொருள் இருப்பதைத் தெரிவிக்கும் வெளிச்சம் உனக்கு எது? 

பகலில் சூரியன் தான். சூரிய ஒளியில்தான் நாம் பொருட்களைப் பார்க்கிறோம். 

ஆனால் இரவில் உனக்குச் சூரிய வெளிச்சம் இருக்காதே! அப்படியென்றால் இரவில் உனக்கு உற்ற வெளிச்சம் எது? 

இரவில், ஏற்றிவைக்கப்படும் விளக்கு, மற்ற தீபங்கள் (நம் காலத்தில் இன்னும் அதிகமான விளக்குச் சாதன வகைகள்) இவைதாம் எனக்கு வெளிச்சம். 

அப்படியா? இருக்கலாம். ஆனால் சூரியனும், விளக்குகளும் இருந்தாலும் அந்தச் சூரியனும், விளக்குமே இருப்பது தெரியவேண்டும் என்றால் அதற்கு என்ன வெளிச்சம்? 

சூரியனையும், விளக்கையும் காட்டும் வெளிச்சமா? ஹாங்.. அது என் கண்கள்தாம். 

சரி. உன் கண்கள் 24 மணி நேரமும் மூடாமல் அயராமல் திறந்து பார்த்துக்கொண்டேவா இருக்கிறது? தூக்கத்தில் கண்கள் மூடிவிடுகின்றன. மூர்ச்சையில் கண் திறந்திருந்தாலும் பார்ப்பதில்லை. அப்படியென்றால் கண்ணே மூடிய பொழுதும் இருக்கும் வெளிச்சம் எது? 

கண்ணே மூடிய பொழுது ... என் புத்திதான் அப்பொழுது வெளிச்சம். அதாவது மனம். கண் தூங்கிய நிலையிலும் என் மன உணர்வு இருக்கிறதே. கனவு காண்கின்றேனே! 

சரி. சிலசமயம் ’என் புத்தி சரியில்லை’ என்று கூறுகிறாய். ’மனம் சரியில்லை’ என்று உணர்கிறாய்? அப்படியென்றால் மனத்தையும், புத்தியையும் உணரும் வேறு ஒரு வெளிச்சம் உண்டல்லவா? அது எது? 

... அது ’நான்’ தான். 

ஆம். நீர்தான் உமக்கு மேலான ஒரே வெளிச்சம். கடைசியில் மறையாமல் நிற்கும் ஒற்றை விளக்கு நீர்தான். நன்கு யோசித்துப் பாரும். புரியும். 

ப்ரபுவே! அந்த ஏக ஜோதி, ஒற்றை விளக்கு, தனிச்சுடர், அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியான ஒளி, அருட்பெரும் ஜோதி, அதுவாகத்தான் நான் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன் பிரபுவே! திறக்க வேண்டிய கண் திறந்து கொண்டது. என்றும் இருக்கும் ஒற்றை விளக்கு, அதுதான் நான் என்பது புரிந்தது. “ 

“ கிம்ஜ்யோதிஸ்தவ பானுமான் அஹநி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம் 

ஸ்யாதேவம் ரவிதீபதர்சநவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே | 

சக்ஷுஸ்தஸ்ய நிமீலநாதிஸாமயே கிம்தீர்தியோதர்சநே 

கிம் தத்ராஹமதோ பவாந் பரமகம் ஜ்யோதிஸ்ததஸ்மி ப்ரபோ || “ 

இந்த ஒற்றைச் சுலோகத்தில் ஸ்ரீஆதிசங்கரர் பிரகதாரண்யக உபநிஷதத்தின் 4ஆவது அத்யாயம், மூன்றாவது பகுதியில் யாக்ஞவல்க்யருக்கும், ஜனகராஜருக்கும் நடந்த ஸம்வாதமான ஜோதி என்பது எது என்னும் உபதேசத்தையே சுருக்கித் தந்துவிட்டார் என்கிறார்கள் உரையாசிரியர்கள். பிரகதாரண்யக உபநிஷதத்தில் வரும் அந்தக் கட்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சி என்னவென்றால் - 

ஒரு நாள் ஜனகரின் சபைக்கு யாக்ஞவல்கியர் அரசரைக் காணச் சென்றார். போகும் பொழுதே இன்று மன்னன் என்ன கேட்டாலும் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்று முடிவு கட்டியவண்ணம் சென்றார். 

(கேள்வி கேட்டே எல்லாவற்றையும் போட்டு வாங்கி விடுவார் போல் இருக்கிறது ஜனகர்!). 

ஆனால் மன்னர் அதைவிடக் கெட்டிக்காரர். முன்னொரு சமயம் ஏதோ சந்தர்ப்பத்தில் இதே யாக்ஞவல்கியர் ஜனகருக்கு ஒரு வரம் தந்திருக்கிறார். அதாவது எப்பொழுது வேண்டுமானாலும், விரும்பிய எதைப் பற்றியும் வேண்டியவாறு கேட்டுத் தன்னிடமிருந்து விடையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அந்த வரம். பாவம் முனிவர் மறந்து விட்டார். மன்னர் அதை நினைவு வைத்திருந்து இப்பொழுது அந்த வரத்தின்படிப் பதில் சொல்லுமாறு கேட்க வேறு வழியில்லாமல் யாக்ஞவல்கியர் பதில் சொன்னார் என்று வருகிறது அந்தச் சூழல். 

(எப்படியாவது நம்மையெல்லாம் கேள்வி கேட்குமாறு தூண்டுவதற்குச் செய்யப்படும் சூழ்ச்சி! நாமா அசருவோம்?) 

மன்னர் கேட்ட கேள்வியே இதுதான். எது நமக்கு வெளிச்சம்? எது மாறாத ஜோதி? என்னும் கேள்வி. அந்தப் பகுதிக்கே பெயர் ஜோதிப் பிராம்மணம் என்பது. அதை இன்னும் சுருக்கித்தான் இங்கே ஒற்றைச் செய்யுள் ஆக்கித் தந்துவிட்டாரே கருணையின் மூர்த்தி! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, April 12, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 05

எல்லையே அற்ற சுகவாரி ஆக இருப்பது ஆத்மா. அந்த ஆத்ம சுகத்தின் ஒரு திவலையில் திளைத்துத்தான் இந்திரன் முதலிய பதவியில் இருப்போரும் சுகிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த ஆத்ம சுகத்தை, தம் ஸ்வரூப சுகத்தை, தம் மனத்தில் அலைகளே எழாவண்ணம் மனம் அடங்கிய முனிவர்கள், என்றும் துய்த்தவாறு ஆனந்தபரர்களாக இருக்கின்றனர். அந்த நித்ய சுகம் ஆகிய எல்லையில்லாத பெருங்கடலில் தம்முடைய மனம் கரையப் பெற்றவர் எவரோ, அவர் யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் பிரம்ம ஞானியாகக் கூட ஆவதில்லை. பிரம்மமேயாக ஆகிவிடுகிறார். அவர் யாராய் இருந்தால் என்ன? அவர் குருமட்டும் அன்று. இந்திரன் முதலிய தேவதைகள் எல்லாம் தொழத்தக்க நிலையை அடைந்து விடுகிறார். இதுதான் தம்முடைய நிச்சயமான கருத்து என்று மநீஷா பஞ்சகத்தை நிறைவு செய்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

இனிப்பு இருக்கிறது. அதை ஒருவர் வாயிலிட்டுச் சுவைத்தால் அதன் இனிப்பை உணர முடியும். பிரம்மானந்தமாகிய ஆத்ம சுகத்தை அவ்வாறு அனுபவிப்பவரை நாம் பிரம்மத்தை உணர்ந்தவர் என்று கூறலாம். ஆனால் ஒருவர் பிரம்மமேவாக ஆகிவிட்டார் என்று சொன்னால் அவரை எப்படிப் பிரம்ம ஞானி என்று சொல்ல முடியும்? இனிப்பேயாக ஒருவர் ஆகிவிட்டால் இனிப்பைச் சுவைக்கும் அனுபவம் நிகழ முடியுமா? இனிப்பு விஷயத்தில் அது முடியாது. ஏனெனில் ஒரு சில புலன்கள், சூழ்நிலைகள், பொருட்கள் என்ற மாதிரியான உபாதிகளை முன்னிட்டு ஜீவன் உணரும் சுகம்தான் உலக சுகம் எல்லாம். அதுபோல் அறிதல் என்னும் உபாதியை முன்னிட்டு, மனத்தின் அறிவு நிகழ்ச்சி என்னும் உபாதியை முன்னிட்டுப் பிரம்மத்தை அனுபவிப்பது என்பது பிரம்மத்தை அறிந்து அனுபவித்தல் என்னும் பொருள்கொண்ட பிரம்மவித் என்னும் நிலையைத் தருகிறது. ஆனால் அந்த உபாதியும் அகன்று, எந்த உபாதியும் இல்லாத பிரம்மமேயாக ஒருவர் ஆகிவிட்டால், உபாதிகளுக்கு நிலைக்களனாய் இருக்கும் மனம் என்பதே ஆத்மா என்பதில் கரைந்து போய்விட்டால் பின்னர் யார் அறிவதற்கு இருக்கிறார்கள்? அங்குப் பிரம்மம் மட்டுமே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ‘அது ஆனால் அதுவாவர். அதுவே சொல்லும்’ என்கிறார் ஸ்ரீதாயுமானவர். 

‘யத்சௌக்யாம்புதி லேசலேசத இமே சக்ராதயோ நிர்வ்ருதா: 

யத்சித்தே நிதராம் ப்ரசாந்தகலனே லப்த்வா முநிர்நிர்வ்ருத: | 

யஸ்மின்நித்ய சுகாம்புதௌ கலிததீர் ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித் 

ய: கச்சித் ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூநம் மநீஷா மம ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, April 10, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 04

விளக்கை ஏற்றுகிறோம். பொருள்கள் தெரிகின்றன. அதற்கு முன்னர் இருட்டிலும் பொருள் இருந்தது. ஆனால் அதன் இருப்பு தெரியவில்லை. விளக்கின் ஒளி அதைத் தெரிவிக்கிறது. நம்மால் விளக்கின் ஒளியையும் பார்க்க முடிகிறது. பொருளையும் பார்க்க முடிகிறது. ஆனால் அல்ட்ராவைலட் ஒளி இருக்கிறது. அது நம் பார்வைக்குத் தெரியாது. ஆனால் பொருளில் அந்த யூ வி வெளிச்சம் பட்டு அந்தப் பொருள் ஒளிரும். இருட்டில் யூ வி லைட் போட்டால் பொருள் மட்டும் அலாதியாக ஒளிரும். பொருள் ஒளிர்வதை வைத்து நாம் யூ வி லைட் ஒளி இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறோம். 

ஆத்மா என்பது அறிவுமயமான ஒளி. அது இருப்பதால்தான் நாம் வெளியில் பொருள் இருப்பதையோ, அல்லது நமக்குள் மனம், புலன்கள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் உணரமுடிகிறது. நம்மில் ஐம்புலன் அறிவு ஏற்படுவதே நமக்குள் ஆத்ம ஒளி இருக்கிறது என்பதை அடையாளமாக நின்று காட்டுகிறது. 

எனவே, நமக்குக் கண்ணில் பொருள் தெரிகிறதே! அது போல் ஆத்மா எங்குத் தெரிகிறது? என்று நாம் நினைத்தால் அது நன்கு யோசிக்காமல் பேசும் பேச்சு. நமக்குக் கண்ணின் மூலம் காட்சி ஏற்பட்டு அந்தப் பொருள் இருப்பதாகப் புலன் அனுபவம் உண்டாவதே, அடிப்படையாக ஆத்ம ஒளி இருக்கப் போய்த்தான் ஏற்ப்படுகிறது. நாம் கண்ணால் பார்க்கிறோம் என்பதே, காதால் கேட்கிறோம் என்பதே, மூக்கால் முகர்கிறோம் என்பதே, நாவால் சுவைக்கிறோம் என்பதே, தொட்டு உணர்கிறோம் என்பதே உண்மையில் பார்க்கப் போனால் ஆத்ம ஒளி இருக்கிறது, இருக்கிறது என்று சான்று சொல்லும் அடையாளங்கள்தாம். இது விசித்திரமாக இல்லை! உலகில் நாம் அன்றாடம் அடையும் புலன் அறிவுகளே பார்க்கப் போனால் ஆத்மாவை நமக்குக் காட்டித்தரும் சாட்சிகள்தாம் என்பது? 

ஆனால் ஆத்ம ஒளியால்தான் நாம் புலன் அறிவுகளை அர்த்தப் படுத்திக் கொண்டாலும், உலகைக் காணும் உற்சாகம் நமக்கு உள் ஒளியான ஆத்ம ஒளியை மறைத்து விடுகிறது. சூரியனின் ஒளியில்தான் மேகங்கள் பலவேறு வடிவங்களில், பிரகாசமாக நமக்குக் கண்ணில் தெரிகின்றன. ஆனால் அதே சூரியனை அந்த மேகங்களே நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்தும் விடுகின்றன. அதைப் போன்று ஆத்ம ஒளியால் நமக்குப் புலனாகும் உலகம் அதே ஆத்மாவை நம் அனுபவத்தில் மறைக்கவும், மறக்கவும் செய்துவிடுகிறது. 

ஆனால் ஞானியானவர் என்ன செய்கிறார், உலகம் என்பதைக் காணும் போதே அதுவே ஆத்மா என்பதைக் காட்டும் என்பதை உணர்ந்து, உலகக் காட்சிகளூடே ஆத்மாவையே பார்க்கிறார். கோவிலுக்குப் போகிறோம். சந்நிதியில் தீபம் ஏற்றிக் காட்டுகிறார்கள். நாம் அந்தத் தீபத்தைப் பார்ப்பதில்லை. அந்தத் தீபத்தால் காட்டப்படும் மூர்த்தியைத் தரிசனம் செய்கிறோம். உலகமே ஒரு பெரும் தீபத் தட்டு. சதாசர்வ காலமும் தீபம் ஏற்றி நமக்கு இந்த உலகம் எதைக் காட்டுகிறது? நமக்குள் இருக்கும் ஆத்மாவைத்தான், அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்த பிரம்மத்தைத்தான் நாம் உணரக் காட்டுகிறது. ஆனால் உலகத்தின் தீபத்தட்டைப் பார்த்தபடியே நாம்தான் ஆத்மாவைப் பார்க்கத் தவறுகிறோம். ஞானி அந்த ஆத்மாவைப் பார்க்கிறார். அவர் பார்வையில் உலகமே ஆத்மாவுக்கான அடையாளம். அவருக்கு இந்த உலகமே ஆத்மாவைக் காட்டும் தீபம். என்றும் தடைப்படாத ஆத்ம தரிசனத்தைத் தியானித்தபடி இருக்கும் அவரே உண்மையில் குரு. இதுதான் என்னுடைய அறுதியான கருத்து என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

‘யா திர்யங்நரதேவதாபி: அஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே 

யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேஹ விஷயா பாந்தி ஸ்வதோSசேதநா: | 

தாம் பாஸ்யை: பிஹிதார்க்கமண்டலநிபாம் ஸ்பூர்த்திம் ஸதா பாவயந் 

யோகீ நிர்வ்ருத மானஸ: ஸ குரு: இத்யேஷா மநீஷா மம ||’ 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, April 9, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 03

நல்ல தூக்கம். கடுமையான கனவு. மலையில் ஏறிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று மலைச்சரிவு. பெரிய பாறை அப்படியே உருண்டு நெட்டுக் குத்தாகத் தலைமேல் விழ வருகிறது. ஓடுகிறீர்கள். ஓடி, பார்த்தால் நெடுஞ்சாலைக்கு வந்து விட்டீர்கள். ஓட்டம். திரும்பிப் பார்க்கிறீர்கள். அப்பொழுது கால்தடுக்கிப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் விழுந்து நனைந்தபடி நிலைமை. அப்பொழுது விழிப்பு. அந்தப் பாறை, ஓட்டம், தடுக்கு, குளம், நீரில் நனைதல் எல்லாம் என்ன ஆயிற்று? படுத்த நிலையில் எழுந்து உட்கார்ந்து என்ன ஆயிற்று என்று முழிக்கிறீர்கள். ஞானத்திற்கும், கர்மாவிற்கும் இதுதான் தொடர்பு. ஞானம் என்பது விழிப்பு. கர்மா, வினைப்பயன்கள் என்பது கனவு நிகழ்வு. ஆனால் கனவு முடிந்திருக்கலாம். ஆனால் அந்தப் பயம், அதில் வேர்த்து, ரத்த ஓட்டம் எகிறிப் பதட்டம் எல்லாம் விழித்த பின்பும் தொடரத்தானே செய்கிறது. அதனால்தானே ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டி எழுந்து போய் ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்கிறீர்கள். நனவில் தொடரும் அந்தப் பதட்டம்தான் கர்மாவின் பிராரப்த வினைப்பயன். 

அதாவது கேள்வி என்னவென்றால், பிரம்மம்தான் சத்யம். இந்த உலகம் மித்யை என்று குருவின் உபதேசத்தாலும், அதை நன்கு உணர்வு பூர்வமாகத் தனக்குள் சுய ஞானமாக ஆக்கிகொண்டதாலும் அந்த ஞானியின் ஞானத்தீயில் அவரின் கர்ம பலன்கள் அழிந்து விடுகின்றன. என்றால், அது எப்படி? அதற்குத்தான் கனவு உதாரணம். ஆனாலும் கர்மாவில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. சேர்ந்து போன பழைய கர்மா (சஞ்சிதம்), இனிப் புதிதாகச் சேரும் கர்மா(ஆகாமி), இப்பொழுதைக்குப் பலன் தரத்தொடங்கியிருக்கும் கர்மா (ப்ராரப்தம்). பலன் தரத் தொடங்கியிருக்கும் வினைப்பயனால்தான் ஒரு ஞானியின் உடல் வாழ்க்கையே தொடர்கிறது. ஒரு ஞானி தொடர்ந்து இருந்து இந்த உலகிற்கு அவரால் விளையும் நன்மைக்கு வழிவகுப்பது இந்தப் பிராரப்த கர்மம் என்னும் தொடங்கியுள்ள கர்மாதான். 

விழிப்புற்ற ஞானியானவர் என்ன செய்கிறார்? தம் உடல், அதைச் சார்ந்த வாழ்க்கை இதையெல்லாம் பிராரப்த கர்மாவிற்கு ஒப்புக் கொடுத்துவிட்டுத் தாம் எந்த வினைப்பயனும் அற்றவராக இருக்கிறார். ஏன்? நிலைத்தது ஒன்றுதான். அது பிரம்மம். நிலயற்றது மற்றது அனைத்தும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட காரணத்தால் அவர் மனத்தில் ஏற்பட்ட பதிவுகள் என்னும் வாசனைகள் நீங்கி விடுகின்றன. மனம் புதிதாக எந்த அலையையும் ஏற்படுத்துவதில்லை. மனம் அடங்கிய நிலையில் உள்ளிருக்கும் ஆன்ம ஒளி தடைப்படாமல் பிரகாசிக்கிறது. இதுதான் என் முடிவான கருத்து என்று கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

‘சச்வந்நச்வரமேவ விச்வமகிலம் நிச்சித்ய வாசா குரோ: 

நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருசதாம் நிர்வ்யாஜசாந்தாத்மநாம் | 

பூதம் பாவி ச துஷ்க்ருதம் ப்ரதஹதாம் ஸம்விந்மயே பாவகே 

ப்ராரப்தாய ஸமர்பிதம் ஸ்வவபு: இத்யேஷா மநீஷா மம ||’ 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, April 3, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 02

அதாவது குரு என்பவர் யார் என்றால் தாம் இந்தத் தேகம் இல்லை. உள்ளே சதாசர்வ காலமும் விளங்கும் உணர்வு, சைதன்யம் இதுதான் தாம் என்று யார் உறுதியாக உணர்ந்துவிட்டாரோ அவர்தான் குரு. A teacher is one who has realised that one's identity is Consciousness and not the body. அவர் எதுவும் பேச வேண்டாம். அவர் இருந்தாலே போதும். அது உபதேசம் ஆகும். ‘எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி’ என்று வர்ணிக்கிறது திருவிளையாடல் புராணம். ‘பொய்யாம் சடக்கைச் சடக்கெனச் சதமென்று சின்மயம் தானாகி நிற்பது என்றோ’ (கடைசியில் பொய்யாகிப் போகும் இந்த உடலைப் பொய் என்று முதலிலேயே உணர்ந்து, நிலைத்தது சைதன்யம் என்று உணர்ந்து சின்மயம் ஆகித் தன் இயல்பும், உருவும் உண்மையில் சைதன்யமே என்று அவ்வாறே உணர்ந்து நிற்பது என்றோ) என்று பாடுகிறார் ஸ்ரீதாயுமானவர். 

‘தான்’ என்பது இந்த உடல், புலன்கள், மனம், புத்தி, சூழ இருக்கும் இந்த உலகம், இதில் தான் யார் என்றும், தன்னுடையது எது என்றும் பல உபாதிகளின் தொடர்பில் அந்தத் ‘தான்’ என்பது ஒருவருக்கு ஜீவன் என்றும், இன்னார், இன்ன பெயருடைய மனிதர் என்றும் சுய அடையாளமாக நடைமுறையில் தெரிகிறது. நீங்கள் யார் என்று கேட்டால் நாம் ஒரு பயோடேட்டாவே வைத்திருப்போம். ஆனால் இந்த உபாதிகள் சமபந்தப்பட்டுத் தோன்றும் சுய அடையாளம் நன்கு தத்துவ விசாரம் செய்யும் போது பரம உண்மையாக இருப்பதில்லை. நனவில் இருக்கும் மனிதர் கனவில் இருப்பதில்லை. கனவில் இருந்தவர் முழித்தபின் எங்குப் போனார் தெரிவதில்லை. ஆனால் எல்லாம் நாம்தான் என்று நினைவின் தொடர்ச்சியை வைத்துக்கொண்டு வியவகாரம் (நடைமுறை) போகிறது. நாம் என்பது உண்மையில் யார் என்று அக்கறையோடு விசாரம் செய்யப் போனால் உபாதிகளின் சம்பந்தம் அற்ற தூய சைதன்யம், சித் என்பதுதான் மிஞ்சுகிறது. அந்தச் சைதன்யம் என்பது அந்தப் பிரம்மமேதான். இவ்வாறு நன்கு விசாரம் செய்து ‘நான் இந்த உபாதிகளோ, உபாதிகளால் கட்டமைக்கப்பட்டுத் தோற்றமளிக்கும் ஜீவனோ, ஸம்ஸாரி மனிதரோ இல்லை. நான் உண்மையில் பிரம்மமே தான்’ என்ற நிச்சயம், ஐயங்கள் அற்ற திடமான உணர்வு ஒருவருக்கு ஏற்படுமேயானால் அவர் யாராய் இருந்தால் என்ன? சாத்திரம் கற்ற பிராம்மணராய் இருந்தாலும் சரி, அல்லது கீழ்க்குலம் என்று சொல்லப்படும் எவராய் இருந்தாலும் சரி அவரே உண்மையில் குரு என்பதில் சந்தேகமில்லை. 

இவ்வாறு ‘நான் பிரம்மமே தான். இந்த உலகம் அனைத்தும் அந்தச் சைதன்யத்தின் விரிவாகத்தான் புலப்படுகிறது. சைதன்யம் இல்லாது நேரடியாக இந்த உலகம் என்பது நம் உணர்வுக்கு வந்ததும் இல்லை. வருவதும் இல்லை. வரப்போவதும் இல்லை. எனவே ஜகத் முழுமையும் சித் என்பதின் விஸ்தாரம்தான். இந்த விஸ்தாரமான இவையனைத்தும் மட்டுமா உணர்வில் தோன்றுகிறது? தான் ஜீவன் என்றும் தோன்றுகிறது. ஜீவனாகிய தான் நற்கதிக்கு வேண்டிப் பிரார்த்திக்கின்ற ஈசுவரன் என்றும் வியவகார உலகில் உணர்வில் தோன்றுகின்றன. ஜீவன், ஜகத், ஈசுவரன் என்னும் மூன்றுவகையான இந்த வியவகார உலகின் உண்மைகள் எப்படி அனுபவத்தில் ஏற்படுகின்றன? நான் பிரம்மமே என்னும் அந்த பாரமார்த்திக உணர்வு நிலையில் ஊன்றி நிற்கும் போது ஒரே சத்யம்தான் இருக்கிறது. ஆனால் வியவகார நிலையிலோ என்றால் ஜீவனாகிய தான்தான் அவித்யையின் காரணமாக, முக்குணங்களின் வசப்பட்டு, ஈசுவரன், ஜகத், ஜீவன் என்னும் இந்த முப்படையான காட்சி அனுபவ நிலையைக் கல்பித்துக் கொள்கிறேன்.’ - இவ்வாறு மிக உயர்ந்த ஆனந்தமும், நித்யமும், தான் அவித்யையின் காரணமாகக் கல்பித்துக் கொள்ளும் இந்த வியவகார நிலையால் எந்தப் பாதிப்பும், குறைவும் தன்பால் ஏற்படாத நிர்மலமானதும், என்றும் மாறாத சத்யமுமான பரத்தில் நிலைத்த திடமான மதி யாருக்கு இருக்கிறதோ அவர் எந்தச் சாதியாக இருந்தாலும் சரி, அவரே உண்மையில் குரு’ என்று இரண்டாவது சுலோகத்தில் பாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

பரமசிவன் உலகிற்கு எந்த வெளிச்சம் தர வேண்டும் என்று நினைத்தாரோ அது நடந்தேவிட்டது. 

‘ப்ரஹ்மைவாஹம் இதம்ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம் 

ஸர்வம் சைதத் அவித்யயா த்ரிகுணயா ஸேசம் மயா கல்பிதம் | 

இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகதரே நித்யே பரே நிர்மலே 

சாண்டாளோSஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மநீஷா மம || ‘ 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, March 29, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 01

'என்னுடைய கருத்து இதுதான்’ என்று சொல்வோம். அல்லது ‘முடிவாக நான் கருதும் நிச்சயம் இதுதான்’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இவ்வாறு ஒருவர் பலவிதங்களில் பரிசீலித்துப் பார்த்து இதுதான் தாம் கொள்ளும் கடைசி நிச்சயமான முடிவு என்று சொல்வதற்கு ‘மநீஷா’ என்று பெயர். மநீஷா என்றால் அறுதியான முடிவான கருத்து என்று பொருள். யாரோ ஸ்ரீஆதிசங்கரரிடம் கேட்டிருப்பார்கள் போல் இருக்கிறது, அவருடைய அறுதியான கருத்துகள் என்ன என்று. ஐந்து சுலோகங்களில் ‘மம மநீஷா நூநம்; என்று சொல்லிச் சொல்லிப் பாடுகிறார். மம - என்னுடைய, மநீஷா - அபிப்ராயம், கருத்து, முடிவு; நூநம் - நிச்சயம். எனவே ஏதோ பாட்டுக்கு என்று சொல்லிவிட்டார் என்று இதைக் கொள்ள முடியாது. தம்முடைய தேர்ந்த முடிவான கருத்து என்று அவரே சுருக்கமாக ஐந்து சுலோகங்களில் சொல்லும் போது, இது எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடியும். எனவேதான் போலும் இந்த சுலோகத்திற்கே ‘மநீஷா பஞ்சகம்’ என்று பெயர் வந்துவிட்டது. பஞ்சகம் என்றால் ஐந்து எண்ணிக்கை உள்ள தொகுதி என்று பொருள். இங்கே ஐந்து சுலோகங்கள் கொண்ட இந்தச் சிறுநூல். ஆங்கிலத்தில் எழுதினால் My Considered Conclusions in Five Verses என்று வரும். 

இந்தச் சுலோகங்களை வாசித்தால் இதில் திரும்பத் திரும்ப ஸ்ரீஆதிசங்கரர் யார் உண்மையில் குரு என்று வலியுறுத்திச் சொல்வது போல் இருக்கிறது. இதைப் படிக்கும் போது நமக்கே ஒரு நிமிஷம் சந்தேகம் வந்துவிடுகிறது. மரபு ரீதியாகச் சொல்லப்பட்ட ஏதோ ஓர் ஆசாரியரின் சுலோகத்தை வாசிக்கிறோமா? அல்லது நவீன யுகத்தின் ஜே கிருஷ்ணமூர்த்தி போன்ற புரட்சிகரச் சிந்தனையாளர்களின் கருத்துகளைத்தான் படிக்கிறோமா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. மீண்டும் ஒரு தடவை புத்தகத்தின் தலைப்பைத் திருப்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏன் சொல்கிறேன் என்றால் ஸ்ரீஆதிசங்கரர் இன்றும் நம்முடன் பேசுகிறார், இன்றைய மனிதராகவும் நம்முடன் பேசுகிறார் என்பது எத்தனை பெரிய விஷயம்! 

பொதுவாக ஞானிகள் யாவருமே என்றும் நம்முடன், நாமாகி, நம் பிரச்சனைகளைப் பேசக் கூடியவர்கள்தாம். ஆனால் நாம்தான் கொஞ்சம் வழிவழி வழக்கம், மாமூல் அபிப்ராயப் பழக்கம் என்று மாட்டிக் கொள்ளாமல் நம்மை விடுதலையாக, நம் மனத்தைத் திறந்து வைத்துக் கொண்டால் ஞானிகளின் ஓம்காரம் காதில் விழும். இல்லையென்றால் ஆமாம்சாமி கோஷத்தில் நாம் பேசுவதுதான் நம் காதுகளைக் கப்பிக் கொண்டு கிடக்கும். உண்மையை ஒப்பி உவந்து நீங்கள் ஏற்றால் அது ‘ஓம்’. உண்மைக்குப் பயந்து மனிதர்களின் ஒப்பந்த அபிப்ராயத்திற்குச் சிந்திக்காமல் நீங்கள் தலைவணங்கினால் அது ‘ஆம்’. 

‘அவர் யாராக வேண்டுமானால் இருக்கட்டும். எந்தச் சாதியாக வேண்டுமானால் இருக்கட்டும். இப்படி இருந்தால் அவர் குரு’ என்று சொல்லும் ஒருவரை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்கள் என்பதை இந்தச் சுலோகத்தைப் படித்தபின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள். 

மரபு ரீதியாகச் சில கதையாடல்கள் இந்தச் சுலோகத்தைச் சார்ந்து எழுந்துள்ளன. அந்தச் சூழ்நிலை விவரணைகளை இந்தச் சுலோகத்திற்கு ‘தாத்பர்ய தீபிகை’ என்னும் உரை எழுதிய ஸ்ரீசதாசிவ ப்ரஹ்மேந்த்ர யோகியார் தந்திருக்கிறார். ‘மதுமஞ்ஜரீ டீகை’ எழுதிய ஸ்ரீபாலகோபாலேந்த்ர முனிவரும் இந்தச் சூழ்நிலை விவரணையைத் தருகிறார். அதாவது காசியில் கங்கையில் குளித்துவிட்டு ஸ்ரீஆதிசங்கரர் வரும்பொழுது, எதிரே, இழிந்த சாதியாகக் கருதப்பட்ட ஒருவர் வர, அவரை ஆசாரியர் விலகும்படிக் கூறவும், அவர் பதிலாகக் கேட்ட கேள்வியே ஒரு சுலோகமாக அமைந்து, அதனால் விழிப்புணர்வு அடைந்த ஆதிசங்கரர் கூறுகின்ற பதிலாக இந்தச் சுலோகம் அமைந்தது என்பது அந்தக் கதையாடலின் சாரம். அவ்வாறு எதிரில் வந்தவர் காசியம்பதியின் சிவபெருமானே ஆவார் என்றும் இந்த விவரணை சொல்கிறது. அதாவது பிரம்மம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று அத்வைதம் போதித்த ஆசாரியருக்கும் மனத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பிறவி சார்ந்த ஏற்றத் தாழ்வு என்னும் எண்ணத்தை இறைவனே வந்து சுட்டிக் காட்டி, அது ஆசாரியரின் அத்வைதத் தத்துவத்திற்கே பொருந்தாதது என்று விழிப்புணர்த்திச் சென்றார் என்பது நல்லதொரு சமுதாயச் செய்தியை உடையது. ஆனால் கேள்விக்குப் பதிலாக அமைந்த இந்தச் சிறுநூலின் சூழ்நிலைச் சித்திரம், விரிவான விவரப் பதிவுகள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக நமக்குப் புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது (ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் மணிப்பிரவாளப் பதிவுகள் போன்று). இருப்பினும் மரபு ரீதியாக வந்திருக்கும் நல்லவிதமான செய்தி என்பதும் ஒரு விஷயம்தான். பரமசிவனார் கேட்ட கேள்விகள் இரண்டு சுலோகங்களாக உரைகள் குறிக்கின்றன. 

‘அன்னமயமான உடல் ஒன்றிலிருந்து இன்னொரு அன்னமயமான உடலையா? அல்லது (உம்முடைய அத்வைதக் கொள்கையின் படி உபாதிகளற்ற ஒரே படித்தான) சைதன்யத்திலிருந்து சைதன்யத்தையா எதிலிருந்து எதை விலகிப் போகும் படிச் சொல்கிறீர் யதிகளில் சிறந்தவரே?’ 

‘(நீர் உடலைச் சொல்லவில்லை, உயிரைத்தான் சொல்கிறீர் என்னும் பட்சத்தில்) தனக்குத்தானே என்றும் ஒளிரும் ஆத்மாவில் இவன் பிராம்மணன், இவன் நாய்மாம்சம் தின்னும் தாழ்ந்த பிறவியன் என்று பிரித்துக் காணும் இது என்ன பெரிய பிரமை! கங்கை நதியில் பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கும், எங்கோ சேரியில் தெருவில் தங்கியுள்ள ஜலத்தில் பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கும் பேதம் இருக்கிறதா? அல்லது தங்கப் பாத்திரத்தில் இருக்கும் ஆகாயத்திற்கும், மண்குடத்தில் இருக்கும் ஆகாயத்திற்கும் வேற்றுமை இருக்கிறதா? யதிகளில் சிறந்தவரே!’ 

இதற்கு ஸ்ரீஆதிசங்கரர் கூறும் பதில் : 

‘நனவு, கனவு, ஆழ்ந்த துயில் ஆகிய மூன்று நிலைகளிலும் எந்தச் சைதன்யமானது மிகத் தெளிவாக விளங்குகிறதோ, இந்த உலகுக்கெல்லாம் எது என்றும் சாக்ஷியாக அனைத்தையும் பார்த்தபடி விளங்குகிறதோ, பிரம்மா முதல் எறும்பு வரையில் அனைத்து உடல்களிலும் எது ஊடுருவித் திகழ்கிறதோ அந்தச் சைதன்யம்தான் நான், பார்க்கப்படும் இந்த உலகமோ, பொருளோ எதுவும் நான் இல்லை என்று யாருக்குத் திடமான பிரக்ஞை இருக்கிறதோ, அவர் சண்டாளரோ அல்லது இருபிறப்பாளரான அந்தணரோ யாரே ஆயினும் அவரே குரு. இதுவே என் உறுதியான கருத்து’ 

(ஜாக்ரத்ஸ்வப்னஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்வித் உஜ்ஜ்ரும்பதே 

யா ப்ரஹ்மாதிபிபீலிகாந்த தனுஷு ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணீ | 

ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்த்விதி த்ருடப்ரஜ்ஞாபி யஸ்யாஸ்தி சேத் 

சாண்டாளோSஸ்து ஸ து த்விஜோSஸ்து குருரித்யேஷா மநீஷா மம ||) 

இனி மநீஷா பஞ்சகம் என்னும் பிரகரணத்தைத் தொடர்ந்து பார்ப்போம். 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***