மிகப் பெரிய பிரபஞ்ச உண்மை ஒன்றை இந்தச் சுலோகத்தில் கூறுகின்றார் ஸ்ரீஆதிசங்கரர். உண்மையில் மொழியில் கொண்டுவர மிகவும் சிரமமான உண்மை இது. மொழி குளறுபடி ஆகும். மிகவும் முயன்றால் மொழியில் வெறுமனே கோடிகாட்டத்தான் முடியும். ஆனாலும் அந்த உண்மையை மக்களுக்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்ற பெரும் ஆவல் ஸ்ரீசங்கரரை உந்துகிறது. இதைப் புரிந்துகொள்ளுவதற்கு ஓரிரு விஷயங்களை நன்கு மனத்தில் வாங்கிக் கொண்டால் நன்கு யூகிக்க வசதியாக இருக்கும்.
நீங்கள் மனத்தால் ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். உங்களைச் சுற்றிலும், அறையிலோ, அலுவலகத்திலோ, தெருவிலோ எங்கும் நீங்கள், மற்றவர்கள், மற்ற பொருட்கள், இந்த மனிதர்கள், உயிர்கள், பொருட்கள் எல்லாவற்றையும் உட்கொண்ட ஆகாயம், வெட்ட வெளி அனைத்தையும் உள்ளடக்கியபடி விரிந்து பரந்து அனைத்தையும் கவிந்திருக்கிறது. நீங்கள் விளையாட்டாக ஒரு கற்பனையைச் செய்து பாருங்கள். அதாவது நீங்கள் இந்த ஆகாயத்தினுள் அடங்கியுள்ள ஒரு பொருளாக, ஒரு எண்டிடியாக இல்லாமல், நீங்கள்தான் இந்த பரந்த ஆகாயம். உங்களுக்குள்தான் இந்தப் பொருட்கள், மனிதர்கள் எல்லாரும் இருக்கின்றனர். இதை நன்கு கற்பனை செய்து தத்ரூபமாக நினைத்துப் பாருங்கள்.
உங்களுக்குள்தான் எல்லாப் பொருட்களும், அவற்றின் இயக்கங்களும் நிகழும். நீங்கள் எந்தப் பொருளாலும், எந்த இயக்கத்தாலும் பாதிக்கப்படாத ஆகாயமாகச் சாட்சியாக மட்டும் இருப்பீர்கள். அதாவது நீங்கள் நன்கு கற்பனை செய்வீர்கள் என்றால், ஆகாயத்தினுள் அடங்கிய பொருளாக இருப்பதற்கும், அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கிய ஆகாயமாக இருப்பதற்கும் இயல்பிலேயே வேறுபாடு என்ன என்பதை யூகிக்க முடியும்.
அடுத்து, ஒரு பெரும் நிலைக்கண்ணாடி முன்னால் நில்லுங்கள். அதனுள் தெரியும் ஆகாயம், பொருட்கள், உங்களுடைய பிம்பம், மற்றவர்களின் பிம்பம் என்ற அனைத்தும் கலந்த ஓர் உலகமே அந்தக் கண்ணாடியுள் தெரிகிறது. வெளீயில் நீங்கள் இருக்கின்ற உலகம் சரி. ஆனால் கண்ணாடியுள் தெரியும் உலகத்தில் உங்கள் பிம்பம், பொருட்களின் பிம்பங்கள் எல்லாம் தத்ரூபமாகத் தெரிகின்றன, நகர்கின்றன, உங்கள் பிம்பமே இடம் வலம் மாறினாலும் கூட உங்களை மாதிரியே பேசுகிறது, கைகால் அசைக்கிறது. அப்படியென்றால் கண்ணாடிக்குப் புறத்தே தெரியும் நீங்கள் இருக்கின்ற இந்த உலகத்தைப் போன்றே, கண்ணாடியினுள் தெரிகின்ற அந்தப் பிரதிபிம்ப உலகமும் அதேபோல் உண்மையா? அப்படியென்றால் நீங்கள் வாங்கி மாட்டிய இந்தக் கண்ணாடிக்குள் ஓர் உலகமேவா இருக்கிறது? இல்லையே. அந்தப் பிரதிபிம்ப உலகம் உங்கள் உலகத்தைப் போன்று உண்மை இல்லை என்பது இப்பொழுது உங்களுக்குப் புரியும். அப்படியென்றால் கொஞ்சம் விடாமல் சிந்தனையைச் செலுத்தி இன்னும் ஒரு விஷயத்தையும் மனத்தில் வாங்கப் பாருங்கள். நீங்கள் இருக்கும் இந்த நிஜமான உலகமே மிகவும் மெய்ம்மையான கடந்தநிலையில் இருக்கும் ஒரு பரம சத்யத்தினுள் தோன்றும் ஒருவித பிரதிபிம்ப உலகம்தான் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா?
நாம் இப்பொழுது பார்த்த இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் நன்கு புரிந்துகொண்டால் ஸ்ரீஆதிசங்கரர் சொல்லும் இந்தச் சுலோகம் உங்களுக்குச் சுலபமாக இருக்கும்.
‘ஆத்மவஸ்து ஆகிய நான் மட்டும்தான் இங்கு இருக்கிறேன். என்னைத் தவிர ஒரு பொருள் இங்கு இல்லை. என்னிலும் வேறாகப் பிரபஞ்சம் என்று எதுவும் இல்லை. மாயையின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த வெளி, பொருட்கள் முதலிய பேதங்கள் எல்லாம், இரண்டற்ற அத்வைதமான என்னிடம், கண்ணாடியினுள் தோன்றும் பொருட்கள் போன்று, எனக்குள்ளேயே தெரிகின்றன. இவை எவற்றாலும் சிறிதும் பாதிக்கப்படாமல் விளங்குவதால் நான் சிவமாகிய பிரம்மமேயாக இருக்கிறேன்.’
‘மத்தோ நாந்யத் கிஞ்சிதத்ராஸ்தி விச்வம்
ஸத்யம் பாஹ்யம் வஸ்து மாயோபக்லுப்தம் |
ஆதர்சாந்தர் பாஸமானஸ்ய துல்யம்
மய்யத்வைதம் பாதி தஸ்மாச்சிவோSஹம் ||’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***