அத்வைதம் நேரடியாக மிக எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய தத்துவப் பார்வை. ஆனால் சிக்கல் சிடுக்காக நாம் கட்டிவைத்திருக்கும் நம் மனத்தை அதற்குத் தகுந்த வகையில் எளிமையாக்கிக் கொள்வதுதான் பெரிய சிரமம்.
நம் மனத்திற்கு முதலில் தேவையானது எப்பொழுது அடைவோம் என்றே தெரியாமல் ‘அம்மா வீடு எங்கே? இன்னும் கொஞ்சம் தூரம்’ என்றபடி இழுத்துக் கொண்டே போகும் நீண்ட நெடிய மார்க்கம். கூடுதலாகக் கடைசியில் அடைவோமா என்பதும் நிச்சயமில்லை என்றபடி ஒரு மர்மம் இருந்தால்தான் நமக்கு எதுவுமே ரசிக்கிறது. அதற்கு உச்சபட்சமான மதிப்பையும் தரமுடிகிறது. அத்வைதம் போல் பொசுக்கென்று உண்மையைப் போட்டு உடைக்கும் ஒரு பார்வை முதலில் நமக்கு எரிச்சலைத்தான் தருகிறது. நாமோ ஏதேதோ உலகங்களுக்குப் படிப்படியாகப் போய், அங்கு நமக்கு ஏற்பட்ட பரிந்துரை, போனால் போகிறதென்ற தயவு எல்லாம் கனிந்து, நம்முடைய மன்னிக்கவே முடியாத குற்றம் எல்லாம் பெரும் தாட்சண்யத்தின் காரணமாக ஒதுக்கப்பட்டு, உள்ளே போகலாம் என்ற அனுமதி கிடைக்கின்ற வழிப்பட்டியலில் ஏற்படும் ஓர் உள்ளார்ந்த கனம் அலாதியானதுதான். அதை விட்டுவிட்டு நம்மைப் பார்த்து, ‘நீ உண்மையில் பரம்பொருள்தான். முக்தி என்பது ஏதோ இனிமேல் அடையப்படும் ஒன்றல்ல. அது ஏற்கனவே எக்காலத்திற்கும் அடையப்பட்டுதான் இருக்கிறது. நீதான் அவித்யையின் காரணமாக அடையாத ஜீவனாக உன்னை நீயே பிரமித்து, அடையப்படும் உலகம், அடைவதற்கான பெருவழி என்று பிரமைக்கு மேல் பிரமை என்று பின்னிக்கொண்டு இருக்கிறாய். விழித்திடு. நீ யார் என்று உணர்’ என்று அத்வைதம் சொல்லும் போது கன்னத்தில் பளார் என்று அறைவிட்டது போல் உணர்கிறோம். ஆட்டம் முடிந்துவிடுமோ என்ற அச்சமும் நமக்குள் எங்கோ எட்டித்தான் பார்க்கிறது.
பிரமைகள் நிறைந்த மனிதரிடம் சென்று, ’இதெல்லாம் உன் பிரமைகள், உண்மை இதுதான்’ என்று சொல்ல ஒருவருக்கு அசகாயத் துணிச்சல் இருக்க வேண்டும். நமது நல்ல காலம். அத்தகைய துணிச்சல் கொண்டு வந்தவர் ஸ்ரீஆதிசங்கரர். சிறியதும், பெரியதுமாகப் பல நூல்களும், பிரபந்தங்களும் செய்தவர், அத்வைதம் என்பதில் நமக்கு எங்குச் சிக்கல் ஏற்படுமோ அந்தச் சிக்கல்களைத் தொட்டு விளக்கும் முகத்தால் ஐந்து சுலோகங்களை ‘அத்வைத பஞ்சரத்னம்’ என்று தந்திருக்கிறார்.
முதலில் பெரும் சிக்கல் ஜீவனா? ஆத்மாவா? என்பது. இரண்டும் ஒன்றுதானே என்பது குழப்பம். சில இடங்களில் ஜீவனைச் சொல்ல வேண்டிய இடத்தில் ஆத்மா என்று சொல்லியிருக்கிறதே என்ற சந்தேகம். ‘அவர் ஒரு நல்ல ஆத்மா’ என்று சொல்லும்போது ஜீவனைத்தானே சொல்கிறோம். நீங்கள் ஒரு ஜீவன் என்றால், நான் ஒரு ஜீவன் என்றால் நாம் படும் அவஸ்தை நமக்குத் தெரிந்துதானே இருக்கிறது. அப்பொழுது திடீரென்று ஒருவர் வந்து ‘அப்பா! நீ இந்த உடல், மனம், உணர்ச்சிகள், உறவுகள், இந்த உலகம், என்பதெல்லாம் உபாதிகளால் கட்டம் கட்டப்பட்டு, வேறு வேறு பேதங்களாகக் காட்சி அளிக்கும் அவித்யை. எப்படி ஒரே ஆகாயமோ அதே போல் நீ அந்த எல்லையற்ற ஆத்மா. ஆகாயம் ஒரு மண்பானைக்குள் இருக்கும் ஆகாயம், ஒரு அறைக்குள் இருக்கும் ஆகாயம், ஒரு குடுவைக்குள் இருக்கும் ஆகாயம் என்று வேறு வேறுபடுத்திப் பார்க்க முடிந்தாலும் உண்மையில் ஆகாயம் என்பதில் எந்தப் பிரிவினையும் இன்றி எல்லாம் ஒரே ஆகாயமோ அதுபோல்தான் ஆத்மா ஒன்று. உபாதிகளில் கட்டுண்டு ஜீவர்கள், இந்த ஜீவன், அந்த ஜீவன், நீ, நான் என்றெல்லாம் தோன்றுகிறது. இது அவித்யையால் தோன்றும் காட்சி. உண்மையில் இவ்வாறு இல்லை’ என்று ஒருவர் சொல்லும் போது, நாம் தெளிவதா? இன்னும் குழம்புவதா? என்று புரியாமல் முழிக்கிறோம். இந்தச் சிக்கலை முதலில் தீர்த்து விடுகிறார் முதல் சுலோகத்தில். முதலில் ஆத்மா என்றால் இன்னதென்று தெளிவாகக் காட்டிவிடுகிறார்.
‘நான் இந்த தேகம் இல்லை. நான் இந்த பொறிபுலன்கள், இந்திரியங்கள் இவையும் இல்லை. இந்த இந்திரியங்களையெல்லாம் உள்ளே இருந்து வாங்கிச் சிந்திக்கும் மனமும் இல்லை. மனத்தில் நான் நான் என்று எழுகின்ற அகங்காரம் அதுவும் நான் இல்லை. உள்ளே இயக்கமாக உணரப்படும் பிராணன் அதுவும் நான் இல்லை. மனம் பலவாறாகச் சிந்தித்த பின்னர் இது சரி இது சரியில்லை என்று முடிவு செய்கிறதே புத்தி, அதுவும் நான் இல்லை. இவைகள் எல்லாமே இப்படி என்றால் புறத்தில் உறவுகளாக இருக்கும் கணவன் மனைவி, பெற்றவர் குழந்தைகள், வசிக்கும் இடம், இருப்பில் இருக்கும் செல்வம் இதெல்லாம் நான் என்ற உண்மைக்கு மிகத் தூரத்தில் இருப்பவை என்பது சொல்ல வேண்டியதில்லை. சரி. இதெல்லாம் நான் இல்லையென்றால் அந்த ‘நான்’ என்பதுதான் என்னவாக இருக்கிறது என்ற விவரம்தான் என்ன?
இதுவரையில் சொன்ன தேகம், மனம், இந்திரியம், புத்தி, புற உறவுகள், அந்த உறவுகள் பழகும் உலகம், அந்த உலகத்தில் இருக்கும் இடம், வாழத் தேவையான செல்வம் என்று அனைத்திலும் படாமல், பார்வையாளராக, சாட்சியாக ஒன்று உள்ளே இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறது. நம் தேகம் சுகம் உற்ற போதும் அது பார்வையாளராக, சாட்சியாக இருக்கிறது. தேகம் நோய் உற்ற காலத்திலும் சாட்சியாக இருக்கிறது. மனம் குதுகலம் அடையும் போதும் அது சாட்சி. மனம் நோகும் போதும் அது சாட்சி. புத்தி தீர்க்கமாக இருக்கும் போதும் அது சாட்சி. புத்தி தடுமாறும் போதும் அது சாட்சி. இந்திரியங்கள் அடங்கி, அமைதியாக இருக்கும் போதும் அது சாட்சி, இந்திரியங்கள் தறிகெட்டு ஓடும்போதும் அது சாட்சி. உறவுகள் கூடிக் குலவும் போதும் அது சாட்சி. உறவுகள் பிணங்கித் தனிமைப்பட்ட காலத்தும் அது சாட்சி. சாட்சி தத்துவமாக மாறாமல் நம்முள் இருக்கும் அந்த ஒன்றுதான் உண்மையில் ‘நான்’. ஆத்மா. எதிலும் கலந்து உருண்டு பிரளாமல் தன்னில் தான் சாட்சியாக இருந்தபடியே இருக்கும் ஆத்மா.
ஆனால் ஜீவன் என்பது சுகம் என்றால் குதிக்கும். கூடிக் குலவும். பார்க்கும் எதனோடும் அது இல்லாமல் தான் இல்லை என்று மயங்கும். மனத்தோடு ஒன்றறக் கலந்து புரளும். அகங்காரத்தோடு ஐக்கியமாகி நானே நான் என்று ஆணவப்படும். துக்கம் வந்த காலத்து ‘ஐயோ அப்பா தாங்கலையே..’ என்று அழுது ஓலமிடும், ஓடும், சுகம் வராதா என்று ஏங்கும், நிலையற்ற உறவுகள் பிரிந்தால் தான் அழிந்ததாக அஞ்சும். செல்வத்தில்தான் தன் உயிரே இருக்கிறது என்று பதைக்கும். இதுதான் நம்முடைய நிலைத்த முகவரி என்று நாமே மயங்கும்படி இருப்பதுதான் ஜீவன். இந்த ஜீவனையும் பார்த்தபடிச் சாட்சியாக இருப்பதுதான் உண்மையில் நான் என்று நாமாக இருக்கும் ஆத்மா.
ஆத்மா என்ன என்று ஒரு வார்த்தையில் சொன்னால் ‘சாட்சி’. அந்தச் சாட்சி ஒரு காலத்துக்கு அன்றி எக்காலத்துக்கும் சாட்சியாகவே இருப்பது. அது நித்யம். நித்யமாய்ச் சாட்சியாக இருப்பது. அது சாட்சியாக இருப்பதைப் பார்க்க வேறு ஒன்று கிடையாது. அதுவேதான் தான் சாட்சியாக இருப்பதைத் தானே உணர்ந்து இருக்கிறது. தன்னுடைய இருப்பு, இயல்பு பிறிதொன்றால் அறியப்பட்டு அதன் மூலம் தன்னுடைய இருப்பு அடையாளப்படும்படி ஒன்று இருக்குமானால் அந்தப் பொருள் ‘பராக்’ என்ற வகையில் சேரும். பராக் என்றால் தான் பிறிதொன்றால் அறியப்பட இருப்பது என்று பொருள். ஆனால் எது ஒன்று தன் இருப்பு தன்னால் நேரடியாக உணரப்பட்டு இயலுமோ அந்தப் பொருள் ‘ப்ரத்யக்’ என்னும் வகையைச் சேர்ந்தது. ‘ப்ரத்யக்’ என்பது ஆத்மா. ப்ரத்யகாத்மா என்று சொல்வது வழக்கம். தான் யார் என்று உணராமல், சூழ்நிலையோடு மயங்கித் துன்புறும் ஜீவனின் உலகில் சிவம் எட்டாக் கனியாகத் தெரிகிறது. ஆனால் தான் என்பதில் மயக்கமின்றி என்றும் சாட்சியாக நிலைத்த ஆத்மா, அதுவேதான் சர்வமங்களமான சிவம். அந்தச் சர்வமங்களமான, சிவமான, சாட்சி உருவமான, ப்ரத்யக் என்னும் ஆத்மா தான் உண்மையில் நான்.’
‘நாஹம் தேஹோ நேந்த்ரியாணி அந்தரங்கோ
நாஹங்கார: ப்ராணவர்க்கோ ந புத்தி: |
தாராபத்யக்ஷேத்ர வித்தாதிதூர:
ஸாக்ஷீ நித்ய: ப்ரத்யகாத்மா சிவோSஹம் ||’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***