Sunday, April 5, 2020

இந்துமதத்தின் சிறந்த கருத்து

ஸ்ரீவைத்யநாத தீக்ஷிதர் என்பவர் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரில் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த கண்டிரமாணிக்கம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். அவர் தம் காலத்தில் வழங்கிவந்த ஆசாரம், அனுஷ்டானம், தர்மக் கோட்பாடுகள், நியதிகள் ஆகியவற்றை அவற்றுக்கான சான்று நூல் குறிப்புகளை ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒரு நிரல்படத் தொகுத்து ஆறு பகுதிகளாக ஸ்ம்ருதிமுக்தாபலம் என்னும் தலைப்பில் சம்ஸ்க்ருதத்தில் தந்தார். அதை நடுக்காவேரி ப்ரஹ்மஸ்ரீ ஸ்ரீநிவாஸ சாஸ்திரி என்பவரது தமிழ் மொழிபெயர்ப்புடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீசாஸ்திரியாரால் வெளியிடப் பட்டிருந்தது. பின்பு வேத தர்மசாஸ்திர பரிபாலன சபையாரால் இருபதாம் நூற் மத்தியில் மீண்டும் கொண்டுவரப் பட்டது. பின்னர் 2010ல் வைத்ய ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரியாரால் தொகுத்தளிக்கப் பட்டது. இந்த நூலின் சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு தலைப்பிலும் பல தர்ம சாஸ்திர நூல்கள், நிர்ணயஸிந்து, சந்திரிகா, மிதாக்ஷரீ, மாதவீயம் போன்ற விரிவான துணை நூல்கள் என்றபடி அனைத்தின் பொருத்தமான பகுதிகளையெல்லாம் ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒருங்குறத் தந்திருப்பதாகும். மிகப்பண்டைக் காலம் முதல் வழங்கிவந்த நூல்கள், பின்னர் மத்திய காலங்களில் தொகுப்புண்ட கருத்துரீதியான நூல்கள் என்று சான்று நூல்களின் கருத்துக் குறிப்புகள் அனைத்தும் ஓரிடத்தில் காணக் கிடைக்கும் அரிய நூலாகும்.

இஃது இவ்வண்ணம் இருக்க, இந்த நூலில் ஒரு முக்கியமான கருத்து கண்ணில் பட்டது. பத்ததி என்ற பழம் நூலிலிருந்து சான்றுப் பகுதியை எடுத்துத் தொகுப்பில் வழங்கியிருக்கிறார்கள். அஃது என்னவெனில் ஈசுவரனின் பல ரூபங்கள்தாம் சிவன், விஷ்ணு, இந்திரன் முதலிய பல மூர்த்திகளும் ஆவர். எனவே அவரவர் மனம் தோயும் விதத்தில் தங்களுக்கு இஷ்டமான மூர்த்தியை ஆராதிப்பதால் மற்ற ஒரு மூர்த்தியைத் தாழ்வாக நினைத்தல் கூடாது. புராணங்களில் ஒரு சில இடங்களில் ஒரு மூர்த்தியைப் புகழ்வதும், பிறிதொரு மூர்த்தியைத் தாழ்வாகச் சொல்லுவது போல் வரும் இடங்கள் உண்மையில் அந்த மூர்த்தி உபாசனையில் ஈடுபாடு கொண்டவர்களின் பக்தியை வலிமையாக்கும் பொருட்டேயாம். அதனால் அந்தப் பிறிதொரு மூர்த்தி தாழ்வு என்று சொன்னதாகக் கொள்ளக் கூடாது. இந்த முடிவு அனைத்து இதிகாசங்கள், புராணங்கள், வேதங்கள் அனைத்திற்கும் உள்கருத்தாக நிற்பதாகும் - என்று மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பதைக் கண்டு ஒரு புறம் வியப்பு என்றாலும் மறு சமயம் இதில் வியப்பில்லை, ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி என்ற ரிக்வேத ரிஷிகளின் நிச்சயத்தைத் தானே மேலும் விவரித்துச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது ஸநாதந தர்மத்தின் மையக் கருத்தே இதுதானே என்று தோன்றுகிறது. அந்தப் பகுதி -

’ஏக ஏவ ஈச்வரோ ஜகத்ஸ்ருஷ்ட்யாதிகரணாய மாயயா ப்ரஹ்மவிஷ்ணுருத்ரேந்த்ராதி விக்ரஹாநுஸ்வீக்ருத்ய தத்தத் விக்ரஹே பக்தாந் தேந தேந ரூபேணாநுக்ருஹ்ணந் வர்ததே | அஷ்டாதச புராணாநாம் கர்த்தா வ்யாஸோபி தத்தத் விக்ரஹ பக்தாநாம் தத்ர தத்ர பக்த்யதிசயோத்பாதநாய தத்தத் ரூபம் ஸ்தௌதி | ’அயமேவ ஸர்வக்ஞ: ஸர்வேச்வர: ஸர்வாத்மா நாந்யே | அதோ அயம் ஏக ஏவ ஸேவ்ய’ இதி | ஸா து நிந்தா தேஷாம் நநிந்தாபரா பவதி | கிந்து ப்ரக்ருத விக்ரஹ ஸ்துதிபரா |”

பொருள் - ஈசுவரன் ஒருவனே உலகத்தின் ஸ்ருஷ்டி முதலியதைச் செய்வதற்காக, மாயையால், ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், இந்த்ரன் முதலிய மூர்த்திகளை ஸ்வீகரித்து, அந்தந்த மூர்த்தியில் பக்தி உடையவரை, அந்தந்த ரூபத்துடன் அனுக்ரஹிப்பவராய் இருக்கின்றார். பதினெட்டு புராணங்களை இயற்றிய வ்யாஸரும், அந்தந்த மூர்த்தியில் பக்தி உடையவருக்கு அது அதில் பக்தியை அதிகப்படுத்துவதற்காக அந்தந்த ரூபத்தை ஸ்துதிக்கின்றார். ‘இவனே ஸர்வக்ஞன், ஸர்வேச்வரான், ஸர்வாத்மா, மற்றவரல்ல, ஆகையால் இவனொருவனே ஸேவிக்கத் தகுந்தவன்’ என்று. அந்த நிந்தை அவர்களை நிந்திப்பதில் தாத்பர்யமுள்ளதல்ல. ஆனால் ப்ரக்ருதமான மூர்த்தியை ஸ்துதிப்பதில் தாத்பர்யமுள்ளது.

ஸநாதந தர்மம் என்னும் ஹிந்துமதத்தின் அடிப்படையான ’ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ என்னும் கருத்தை எவ்வளவு மகனீயர்கள், எவ்வளவு புராணங்கள், எவ்வளவு வேதப் பகுதிகள் வலியுறுத்தி வந்துள்ளன!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

தர்மம், கர்மம், யக்ஞம்

தர்மம், கர்மம், யக்ஞம்

இந்த மூன்று முக்கியமான கருத்துகளைப் புரிந்து கொள்வது மனித வாழ்க்கைக்குப் பெரும் ஆக்கமாக அமையும். வழக்கமாகச் சொல்லப்படும் விதத்தில் இவற்றைப் புரிந்துகொள்வதை விட உள்ளபடி நன்கு நம் வாழ்க்கையுடனும், காலத்துடனும் பொருத்திப் பார்த்து நுட்பமாகப் புரிந்துகொண்டால் பொதுவான உலகம் தழுவிய மனித வாழ்க்கைக்கான ஆக்கபூர்வமான பார்வையை நாம் அடையமுடியும். பெரும் கருத்துகளைத் தக்கவிதத்தில் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு மனிதருக்கு என்றும் உண்டு.

தர்மம் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் தரிக்கப்படுகிறது, தரித்தல் என்னும் பொருள் அம்சம் அடிப்படையாக இருக்கிறது. தரித்தல் என்றால் என்ன? ஒரு பொருள் மற்றொரு பொருளைத் தாங்கி நிற்குமேயானால் அப்பொழுது அது தரிக்கிறது என்று சொல்லிவிட முடியுமா? புழக்கத்தில் அங்கும் நாம் சொல்கிறோம் என்றாலும், அங்கு வெறுமனே ஒரு பொருளின் எடையை மற்றொரு பொருளின் கூடுதல் எடையின் திறனால் ஏந்தி நிற்கிறது என்பதுதான். ஆனால் தரிக்கிறது என்ற சொல்லுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. மழை பொழிகிறது. நிலத்தில் வளத்துடன் பச்சை பொலிகிறது. நிலத்தின் வளமான பச்சையை நம்பி உயிரினங்கள் அடுக்கடுக்காக ஜீவிக்கின்றன. கதிரொளியும், வெயிலும் இந்தத் தொடர் உயிராக்கத்திற்குப் பெருந்துணையாக நிற்கின்றன. நிலத்தில், நீரில், மரத்தில், வானில் வாழ் உயிரினங்களைத் தரித்து நிற்பவை கதிரும், மழையும் எனலாம், ஆனால் இங்கோ புற எடை ரீதியாக எந்தப் பொருளும் எந்தப் பொருளையும் ஏந்தி நிற்கவில்லை. ஆனால் இங்குதான் தரித்தல் என்பது மிகவும் பொருளுடையதாக இருக்கிறது.

கதிரின் வெப்பத்தினால் மேலே ஈர்க்கப்பட்ட நீர்ப்பசை காற்றின் குளிர்ச்சியில் ஒருங்குற்று நீரென நிலத்தில் பெய்கிறது. அத்துணையே அங்கு நடைபெறும் நிகழ்வு. ஆனால் அதன் தொடர்ச்சியாகக் காரண காரிய நியதியால் பல வேலைகள் அடுத்து அடுத்து நடைபெறுகின்றன. கடைசியில் பார்த்தால் பெறும் பொலிவிற்கு முதல்நிலை உதவியாக மழையும், கதிரும் திகழ்கின்றன. அப்பொழுது ஆக்க பூர்வமாகவும், ஆக்கத்தை மிகுக்கும் விதத்திலும், ஆக்கத்தின் விளைவை ஏற்படுத்தும் விதத்திலும் ஒரு பெரும் தொடர்ச்சியில் ஒரு பொருளோ, அல்லது ஒரு செயலோ, அல்லது ஓர் உயிரோ பங்கெடுக்குமானால் அங்கு தரித்தல், தரிக்கப்படுதல் என்ற சங்கிலியில் ஒரு பகுதியாக அமைந்துவிடுகிறது. அந்தத் தொடரில் பார்த்தால் ஒரு நோக்கில் தரிப்பதாக இருப்பது மறு நோக்கில் தரிக்கப் படுவதாகவும் அமைகிறது. இந்த பரஸ்பரம் சார்ந்து விளங்கும் வளம் சேர்க்கும் ஆக்க பூர்வமான உயிர்த் தொடர் நிகழ்வின் தத்துவத்திற்கு தர்மம் என்று பெயர்.

கர்மம் என்பது மனிதரின் செயல். ஒன்றைக் கருதிச் செய்யப்படுவது கர்மம். அந்தக் கர்மமானது உலகெங்கும் தொடர்ச்சியாக உயிராக்கத்தையும், வளத்தையும் கூட்டும் தர்மத்திற்கு விரோதிக்காமல், பொருந்தி அமையும் பொழுது அந்தக் கர்மம் சுபமான கர்மம், நன்மை தரும் செயலாக அமைகிறது. அதுவே தர்மத்திற்குப் புறம்பான கர்மம் என்னும் பொழுது அது அசுபமாக ஆகிறது. அப்பொழுது நமக்கு ஒன்று தெரியவரும். வாழ்வில், உலக நடவடிக்கைகளில் அசுபம் விளையும் காரணம் கர்மத்திற்கும், தர்மத்திற்கும் பொருந்தாமையினால் ஆகிறது. தர்மம் என்பது சூக்ஷ்மமானது. பொதுவான கல்வி, பொறுப்பு மிகுந்த பண்பாட்டுப் பயிற்சி முதலியவற்றால்தான் தர்மம் என்பதை நுணுகி மனிதர் புரிந்துகொள்ள முடியும். வழிவழியான படிப்பினைகளும், பாடங்களும் மனிதர்களுக்கு தர்மத்தைப் பற்றிய கவனத்தை வளர்க்கின்றன.

தம்முடைய கர்மங்கள் எல்லாம் அசுபமாக இல்லாமல் சுபமான கர்மங்களாக அமையும்படிக் கருத்துடனும், கவனத்துடனும், அடக்கமுடைமையுடனும் மனிதர் செயலாற்றுங்கால் அதுவே யக்ஞம் ஆகிறது. அதுவே கர்மங்கள் சுபமாக இல்லாமல் அசுபமாக அமையும்படி மனிதர் தம் பொறுப்பின்மையாலும், அறியாமையாலும், அகங்காரத்தாலும் நடந்து கொள்வார்கள் என்றால் அங்கு யக்ஞம் இல்லாமல் மறைந்து ‘தமஸ்’ என்னும் இருளே மிஞ்சுகிறது. எனவே தர்மத்திற்கு முரணாகாத கர்மங்கள் சுபமாக அமைந்து யக்ஞம் விளைகிறது. தர்மத்திற்கு ஒவ்வாத கர்மங்கள் மலியுங்கால் தமஸ் என்னும் இருளே மண்டுகிறது. நாம் சுபமான கர்மங்களையே வாழ்க்கையில் இயற்றி உலக வாழ்க்கை என்னும் யக்ஞத்திற்குத் துணை சேர்ப்போமாக.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Saturday, April 4, 2020

ஸநாதந தர்மம் என்றால் என்ன?

தர்மம் என்றால் என்ன? சநாதன தர்மம் என்பது எதைக் குறிக்கும்? இந்தக் கேள்விகளுக்குப் பலரும் பலவிதத்தில் சொல்லலாம். ஆனால் நம் ஹிந்துமதத்திற்கோ பொதுவான ஆசாரியர் என்று ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால் அவரே வியாஸ மஹரிஷியாவார். எத்தனை விதமான மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், பல வழிபாட்டு நெறிகள், பல வேறுபட்டவர்களின் பார்வைகள், அதன் அதன் நியாயங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே கண்டு, உள்ளவாறு பதிந்து, அவ்வவற்றிற்கானத் தகவுகளையும் எடுத்துக் காட்டிப் பல கிளைகள் கொண்ட ஒரு நிறுவனமாக அந்த ஒற்றை மகானே விளங்குகிறார் என்றால் என்ன வியப்பான விஷயம்! வேதங்களை வகைதொகை படுத்தி, புராணங்களைப் பதியவைத்து கவனத்தில் கொண்டு வந்து, வேதாந்த நெறிக்கான ஒருங்குபடுத்தலையும் சாதித்து ஒரு மனிதர் எத்தனை விதமான சாதனைகள்! அவர் என்ன சொல்கிறார் என்பது மிகவும் யோசிக்க வேண்டிய, ஏற்க வேண்டிய விஷயம் அல்லவா!

வியாஸர் சொல்வது:

’ஸத்யம் தமஸ்தபச்சௌசம் ஸந்தோஷோ ஹ்ரீ: க்ஷமாSSர்ஜவம் | ஜ்நானம் சமோ தயா த்யாநம் ஏஷ தர்ம: ஸநாதந: இதி’

பொருள் - உண்மை பேசுதல், இந்த்ரியங்களினடக்கம், தவம், தூய்மை, ஸந்தோஷம், வெட்கம், பொறுமை, நேர்மை, ஜ்நானம், மனத்தினடக்கம், தயை, தியானம் இவை ஸநாதந தர்மம் எனப்படும்.

ப்ருஹஸ்பதி என்னும் ரிஷியும் கூறுவது - ’ஞானம், யாகம், ஸத்துக்களைப் பூஜித்தல், வேதத்தைத் தரித்தல், கபடமின்மை, என்னும் இவை இஹ பர உலகங்களில் பலனை அளிக்கும் உயர்ந்த தர்மமாக அறியத் தக்கது.’ (இஹ பர உலக நன்மை - ஹிந்துமதம் சொல்லும் அப்யுதயம், நிச்ரேயஸம்)

பஞ்சசிகர் என்னும் முனிவர் கூறுவதும் அதுவே - ‘எப்பொழுதும் போகங்களில் பற்றில்லாமையும், ஆத்மஜ்ஞாநமும் மனிதர்களுக்கு மிகவும் நன்மை.

யாஜ்ஞவல்கியரோ இன்னும் வலியுறுத்திக் கூறுவது யாதெனில் - ’யாகம், ஆசாரம், தமம், அஹிம்சை, தானம், அத்யயனம் எனும் இக்கர்மங்களை விட, யோகத்தினால் ஆத்மாவை தர்சிப்பதே பெரிய தர்மம் ஆகும்’ - இஜ்யாசார தமாஹிம்ஸா தாநஸ்வாத்யாய கர்மணாம் | அயந்து பரமோ தர்மோ யத் யோகேந ஆத்ம தர்சநம் இதி’

ஸநாதந தர்மம் யாது என்று ரிஷிகளின் கருத்து இதுவாகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பால பாரதியின் ராமசெயத் திருப்புகழ்

மிகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நூல், கம்பர் தந்த பெருங்காவியத்திற்குப் பின்னர் ஸ்ரீராமகாதையைப் பாடுபொருளாகக் கொண்டு எழுந்தநூல்களுள் மிக அரிய நூல் என்றால், ஸ்ரீராமாயணத் திருப்புகழ் என்னும் ராமசெயத் திருப்புகழ் ஆகும். ஸ்ரீராமநாடகக் கீர்த்தனை செய்த ஸ்ரீஅருணாச்சலக் கவிராயர் காலம் பதினெட்டாம் நூற் முற்பகுதி. ’இராமாயணத்தைக் கம்பர் விருத்தங்களிலும், பாலபாரதி சந்தப் பாக்களிலும், பிறர் பிறபாக்களிலும் பாடினார்கள். அருணாச்சலக் கவிராயர் நாடகமாகப் பாடினார்’ என்று கூறுவர். அதற்கேற்ப 17ஆம் நூறைச் சேர்ந்த நூல் ராமசெயத் திருப்புகழ் என்னும் நூலாகும். திருப்புகழ் என்றாலே ஸ்ரீஅருணகிரியாரின் முருகன் திருப்புகழ்தான் என்னும் அளவிற்கு, திருப்புகழ் என்பதுவே சந்தப் பாக்களின் வகைப்பாட்டிற்குப் பெயராக அமைந்துவிட்டது போலும்! ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஸ்ரீவைஷ்ணவர் ஆகிய பாலபாரதியின் இயற்பெயர் ஸ்ரீராமய்யங்கார் என்று நூலின் குறிப்பு பேசுகிறது. தம் கவியாற்றலால் பாலபாரதி என்று அழைக்கப்பட்ட இவர் ஸ்ரீஅருணகிரியாரின் திருப்புகழ் நூலில் தோய்ந்தவர் என்பதும் தெரிகிறது. ஆனால் அது என்ன இராமசெயத் திருப்புகழ்?

‘ராமசெயம் என்பதன்றி யானறிவ திங்கோர் கிஞ்சில்
ஏதுமிலை அஞ்ச லென்று வருவாயே’

என்று இவரே பாடுவதற்கேற்ப சதாசர்வ காலமும் ஸ்ரீராமஜெயம் என்றே வாய்மணக்கும் பழக்கம் உடையார் என்பதனால் போலும் தாம் பாடிய ஸ்ரீராமாயணத்திற்கே இராமசெயத் திருப்புகழ் என்று பெயர் சூட்டினர்! ஆனால் யாரும் அவர் காலத்தில் தம் பெருமை பிறர் அறிய வாழும் வாய்ப்பு அரியதுதான் போலும்! ஏனெனில் நூலிறுதியில் ஒரு குறிப்பு இங்ஙனம் நினைக்கத் தூண்டுகிறது. ’வால பாரதியாகிய இராமய்யங்காரை நிந்தித்த போது ‘இந்தக் கோயிலார் முன்னே அரங்கேற்றுகிறதில்லை; இந்திரன் சபையிலே அரங்கேற்றுகிறேன்’ என்று கோயிலாருக்குச் சொல்லி இந்திரனுக்கு ஒரு சீட்டுக் கவி எழுதி அனுப்பினார்’ என்ற ஒரு குறிப்பு காணப்படுகிறது. ( அம்மாக்கண்ணு நிகழ்ச்சியில் நமது மகாகவி பாரதியும் ஏதோ ஆழ்ந்த நினைவில் இவ்வாறே ‘மாதலி! தேரை விடு’ என்று சொன்னதாகச் சொல்லுவர். கவிஞர்கள் எக்காலத்தும் ஒரு தன்மையரே போலும்!)

தேவ லோகத்திற்கு அவர் எழுதி அனுப்பிய சீட்டுக்கவியும் கிடைத்திருக்கிறது நம் அதிர்ஷ்டம்தான்.

”உந்திய செந்தமி ழான்வால பாரதி யோலையுண்மை
இந்திர ரானவ ரெல்லாங் காண்க யானுமங்கே
செந்தமிழ் பாடவும் பொன்னாடு பார்க்கவும் சீர்பெறவும்
வந்திட வேணும் விடுதியும் சோடித்து வைத்திடுமே.”

பாருங்கள் எத்தனை தமிழ்க்காதல்! வானவர் நாட்டிற்குப் போவாராம். அங்கும் போய் செந்தமிழ் பாடுவாராம். அதற்கு அவருக்கு விடுதி தயார் செய்து வைக்க வேண்டுமாம். இங்கிருந்து கட்டளை போயாகிறது இந்திரனுக்கு!

இவராவது பரவாயில்லை. நம்மாழ்வார் இருக்கிறாரே அவர் என்ன சொல்கிறார், ‘நீங்கள் திருவாய்மொழியை நன்கு உரு ஏற்றி மனப்பாடமாக ஆக்கிக் கொண்டு விடுங்கள். ஏனெனில் இங்கு விட்டு நீங்கள் என்னப்பன் ஸ்ரீவைகுண்டம் போனீர்கள் என்றால் அங்கிருக்கும் திவ்யசூரிகள் எல்லாம் உங்களைப் புடை சூழ்ந்துகொண்டு, ‘எங்கேயிருந்து? திவ்யதேசமா? திருவாய்மொழி நன்றாகத் தெரிந்திருக்குமே. எங்கே திருவாய்மொழி சொல்லுங்களேன் கேட்போம். என்று ஒரு குழு முடித்ததும் இன்னொரு குழு இப்படி மாற்றி மாற்றிக் கேட்டுக் கேட்டு உங்களைக் கொண்டாடியவண்ணம் இருப்பார்கள். அப்பொழுது பார்த்து ‘ஹி ஹி எனக்கு அவ்வளவா பாடம் இல்லை. ‘ என்று நீங்கள் சொன்னால் நன்றாகவா இருக்கும். அசிங்கமில்லையா? எனவே இப்பொழுதே ஆரம்பியுங்கள்’ என்கிறார்.’

பழைய ஓலைச்சுவடியிலிருந்து இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறார் திரு கோ பாலசுந்தர நாயகர், ஸ்ரீவெங்கடேஸ்வரா ஓரியண்டல் சீரீஸ் என்னும் வரிசையில். 1954ல்.

தாம் பாட அனுமனின் அருள் வேண்டும் பாட்டே அடேயப்பா!

பாரதிநெஞ் சாலு ணர்ந்து
மேல்வருமென் றேதெ ளிந்து
பாடியநன் காதை பண்டை

மொழிவேதம்

பாவவரந் தூய மந்த்ரம்
நோய்முழுதுந் தீர்ம ருந்து
பாலமிர்தந் தேனெ திர்ந்து

வினையீர்வாள்

ஈரமில்வெம் பாரை நெஞ்சும்
நேருருகும் பாட லண்டர்
ஈசனயன் பேணு மின்பம்

மறவாதோர்

யாதுநினைந் தாலு மந்த
வாழ்வுதருந் த்யாக சிந்தி
ராமசெயம் பாட வந்து

துணையாவாய்

வாரிகடந் தேகி வஞ்சி
ஆருயிர்பொன் றாது கண்டு
மாநகரஞ் சூறை கொண்டு

களமீதே

வானின்மருந் தேகொ ணர்ந்து
வீரர்மயங் காவி தந்து
மாவிருதிண் டோள்வி ளங்க

அமராடிச்

சோரர்மடிந் தேகு மன்று
தேவிபதஞ் சூடி நின்று
சோபனமுங் கூறி வந்து

சுடுதீமுன்

சூழ்பரதன் காண முந்தி
ஆவிபுரந் தேயு கந்த
தூதனெனும் பேர்பு னைந்த

பெருமாளே.

இன்று கொஞ்சம் நம் கவிராயரை வரவேற்கும் கமிட்டியில் இந்த்ரசபையில் சேர்ந்து கொள்வோமே!

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீரங்கத் திருவீதியில் எம்பார் ஸ்வாமியின் ஹரிகதா காலக்ஷேபம். ஓர் அரிய கருத்தைக் கூறுகிறார்; ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஒரு சுகர் வாய்த்தது போல் ஸ்ரீராமபிரானின் பால்ய லீலைகளை யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. ராம பாலன் என்ன குறும்பு பண்ணினான். குழந்தை ரகுவரன் என்ன சேட்டைகள் செய்தான். அவனைச் சமாளிக்க தாயார் கௌசலை தேவியார் என்ன தொல்லையின்பத்து அனுபவம் பெற்றாள் என்றெல்லாம் நமக்குத் தெரியவில்லை - என்று ஓர் நயத்துடன் ஆதங்கத்துடன் அவர் கூறினார். அவருடைய ஆதங்கத்தை ஓரளவு தீர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது பால பாரதியின் இராமசெயத் திருப்புகழ். வடதேசத்தில் ஸ்ரீராமலாலா என்னும் பக்தி சம்ப்ரதாயம் இருக்கிறது. அஃது முழுவதும் பாலன் ராமன் என்ற மூர்த்தியிடம் பக்தி நெறியால் ஆனது. ஆனால் இங்கு பால பாரதி பாடும் போது என்ன என்னவெல்லாம் சொல்லிவிடுகிறார்!

பயிர் இருக்கிறது. ஆனால் வேலியில்லை.
புனல் இருக்கிறது ஆனால் கரை இல்லை.
குழந்தை இருக்கிறது ஆனால் அஃது ஊட்டம் பெறத் தாயும் தாய்ப்பாலும் இல்லை.
குயில் இருக்கிறது ஆனால் இளவேனில் காலம் என்னும் வசந்தம் இல்லை.
மயில் இருக்கிறது ஆனால் அது தோகை விரித்தாட கார்மேகம் எதுவும் இல்லை.
தேசம் இருக்கிறது ஆனால் அதை ஆள வீரன் இல்லை.
படை இருக்கிறது. ஆனால் யானைகள் கிடையாது.
கடலில் செல்லும் கலம் இருக்கிறது. ஆனால் திசைக் காற்று கிடையாது.
தவம் செய்கிறார்கள் ஆனால் யாரிடமும் அரியதான அடக்கம் பொறுமை என்ற குணங்கள் இல்லை.
பூசுரர் இருந்தாலும் யாருக்கும் வேதம் தெரியவில்லை
பெரும் சபை இருக்கிறது. ஆனால் நல்ல அருங் கவிகள் யாரும் இல்லை.
கவிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கோ பல நூல் ஆய்ந்த சீலம் கிடையாது.
இல்லம் இருக்கிறது. இல்லாள் கிடையாது.
அழகான கொடியனையார் உண்டு ஆனால் நாணம் கிடையாது.
குடும்பம் இருக்கிறது ஆனால் விருந்து என்றால் விலக்கு என்கிறார்கள்.
குறை மட்டும் இருக்கிறது ஆனால் அதைக் களைய சேமிப்பு இல்லை.
இளமை இருக்கிறது ஆனால் நன்மை என்பதன்பால் ஆர்வம் இல்லை.
கமலம் குளத்தில் இருக்கிறது ஆனால் அதன் இதழை அலர்த்திச் செவ்வை உணர்த்த கதிரொளி இல்லை.

இதெல்லாம் உவமைகள். இதைப் போலே உடல் என்று பிறவியெடுத்தால் ஞானம் வாய்க்க வேண்டும். அதுவும் முழுமையான ஞானம். உடலின் பயனே பூரண ஞானத்தைப் பெறுதல். ஆனால் உடல் இருக்கிறது எனக்கு. ஞானம் எங்கே? ஞானம் இல்லா வாழ்க்கைக்கு உதாரணம்தான் முன் சொன்னதெல்லாம்.

ஐயா! ராகவா! கொஞ்சம் கருணை காட்டு. இதுதான் என் நிலைமை. இப்படிப்பட்ட எனக்கும் உன் இரு தாளிணை துணை வழங்குவது... புரிகிறது... மறைகளே தேடும் பாதங்கள் அவை. நான் அவற்றை விழைவது என்பது என் யோக்கியதையில் ஒருநாளும் கிடைக்காது. அதனால்தானே உன் காரணமற்ற பெருங்கருணையையே நம்பி மன்றாடுகிறேன். என்றோ எனக்கு உன் தாளிணை துணை தருவாய்?

காரணமற்ற அவ்யாஜ கருணைக்குப் பெரும் உதாரணமே சிறுகுழந்தைதான். பெரும் விலை உயர்ந்த ஒன்றைக் குடுகுடு என்று ஓடி முன்பின் தெரியாத யாரிடமோ கொடுக்கும். அதுபோல் ஒரு குழந்தையிடம் மன்றாடுகிறார். அந்தக் குழந்தையோ நானே இங்கு கட்டுப்பட்டுக் கிடக்கிறேன். எங்க அம்மா விட்டாத்தானே நான் வந்து தரமுடியும்? என்று சொல்கிறது.

அந்தக் குழந்தைதான் சிசுவான ஸ்ரீராகவன். ரகுகுல திலகன். அங்கு என்ன காட்சி என்று பார்ப்போம்?

தாயான கௌசலையார் பாலொடு நெய் கூட்டி ஒரு சங்கில் நிறைத்து மணிவாயிடைப் புகட்டுகிறாள். ஆனால் குழந்தையோ குடிக்காமல் திமிறுகிறது. குதப்புகிறது. வாயில் விரலை வைத்துத் தெறித்து அழுகிறது. அதற்கு ஏற்கும்படியாக இனிப்பான மதுரம் கலந்து குழைத்து விழுங்கப் பண்ணுகிறாள். பிறகு ‘அதான் பலே பலே சமத்து ‘ என்று அந்தப் பாலாடையைக் குழந்தையின் தலையைச் சுற்றித் திருஷ்டி கழிப்பது போல் சுற்றி, அதன் மூக்கு தரையில் படும்படியாக அழுத்தி எழுந்து, பிறகு கைகளை விரித்து அதனுள் குழந்தையை அகப்படுத்தி நிமிர்த்தித் தொடை மீது இட்டுக் கொண்டு தெளிந்த நீரினால் விட்டு வழித்துத் துடைத்து, மணமிக்க பொடிகளைத் தூவித் திருமேனியெங்கும் திமிர்த்து விளங்கும்படியாகத் தடவி, நெற்றியிலே நிலப்பொடியை அணிவித்துக் காப்பிட்டுச் சட்டென்று யாரும் பார்க்காத நேரத்தில் தரையில் குதிக்க முடியாத உயரத்தில் தொட்டிலைக் கட்டி அதில் விட்டு அங்கு மலரிதழ்களை நெருக்கிப் பரப்பி மிருதுவாக ஆக்கிய சயனத்தில் மிக உகக்கும் படியாகக் கிடத்தி அந்த உகப்பில் உதிர்க்கும் குழந்தைச் சிரிப்பில் களித்து, ‘என் செல்வமே! கண்வளர்வாய்’ என்று அந்தத் தாயாரான கோசலையார் சிறிதும் அங்கும் இங்கும் பராக்கு இடாமல் தொட்டில் கீழேயே கிடந்து வளர்க்கின்ற அழகான ராமனே! கமலாக்ஷனே! ரகுநந்தன! எங்கள் பெரிய பெருமாளே! மறை தேடும் இருதாள் துணை வழங்க நினைப்பது அந்த ஒரு நாள் எந்நாளோ?

பாடல் -

’வேலியடை யாப்பயிர் நெடுங்கரை யற்றபுனல்
தாய்முலைபெ றாச்சிறு குழந்தைத ருக்குமிள
வேனிலடை யாக்குயில் கரும்புய லற்றமயில்

அரசாளும்

வீரனையி லாப்புவி மதங்கய மற்றபடை
கால்விசை பெறாக்கல மரும்பொறை கெட்டதவம்
வேதமறு பூச்சுர ரருங்கவி யற்றவவை

பலநூலின்

சீலமுண ராக்கவி மடந்தையை யற்றமனை
நாணமறு கோற்றொடி விருந்துவி லக்குகுடி
சேர்பொருளி லாக்குறை பிரிந்தந லத்திளமை

கதிராளி

தேசுமரு வாக்கம லமிங்கிவை யொத்துமுழு
ஞானமறு யாக்கையொ டுழந்தவெ னக்குமறை
தேடுமிரு தாட்டுணை வழங்கநி னைப்பதுவு

மொருநாளோ

பாலொடுநெய் கூட்டியொ ருசங்குநி றைத்துமணி
வாயினிடை காட்டிவி ரல்கொண்டுதெ றித்தழுது
பாகுபடு தேக்கொடு குடைந்துகு டித்தவுடன்

முறையாலே

பால்வளைய நீட்டிமு டிநின்றுசு ழற்றியது
பூமிமிசை மூக்குற மருங்குக விழ்த்துவிரி
பாணிகொடு மீட்டுமு டலங்கமு லுக்கியிரு

தொடைமேற்கொண்

டேலமுது நீர்க்கொடு குடைந்துது டைத்துமண
மேவுபொடி போட்டுமெய் திமிர்ந்துநி லப்பொடியி
னேறுமொரு காப்பினி தணிந்துயர் தொட்டிலினுள்

வளர்வாயென்

றேடுசெறி சேக்கையி லுகந்துகி டத்திநனி
கோசலைப ராக்கற விருந்துவ ளர்க்குமபி
ராமகம லாட்சர குநந்தன நற்பெரிய

பெருமாளே.
*
விசுவாமித்திரர் கௌசல்யா ஸுப்ரஜா ராமா என்று பாடினார். கௌசல்யையின் நல்ல மகவே என்றும் பொருள் சொல்லலாம். கௌசல்யையால் நன்கு வளர்க்கப்பட்ட மகவே என்றும் பொருள் சொல்லலாம் என்று இந்தப் பாடல் விளக்கம் காட்டுகிறது போலும்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஸ்ரீஸுப்ரஹ்மண்ய ஸஹஸ்ரநாமம்

பல கடல்கள் உள்பொதிந்த பெருங்கடல். ஸமுத்ரங்கள் பல சங்கமமாகும் பெரும் ஸமுத்ரம். இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது நம் ஹிந்துமதத்தின் அருட்செல்வங்களைக் காணும் பொழுது. ஸஹஸ்ரநாமம் என்ற வகையில்தான் எவ்வளவு ஸஹஸ்ரநாமங்கள்! கந்தா கடம்பா கதிர்வேலா என்னும் ஸ்ரீஸுப்ரஹ்மண்ய ஸஹஸ்ரநாமம். ஸ்காந்த புராணத்தில் வருகிற ஸஹஸ்ரநாமத்திற்கு அரிய உரை ஒன்றும் எழுதி அளித்திருக்கிறார் திருவெண்காடு, அபிநவவ்யாஸர், வரகவி, வேதாந்த வித்வான், தைவக்ஞ பூஷணம் பண்டிட் T K ராமச்சந்திர சாஸ்திரிகள், 1962ல். கிரி பிரஸ் கைலாஸம் ஐயர் தூண்டுதலின் பேரில். ஒரு விதத்தில் இந்தத் தூண்டுதல் உபகாரம் பண்ணவர்களுக்கே தனி நன்றிக் கட்டுரை எழுத வேண்டும். உயர்ந்த விஷயங்கள், பெரும் சாதனைகள் எவ்வளவோ பார்த்தால் இந்த மாதிரி வெளியில் தெரியாமல் அதற்கு உரியவர்களை இனங்கண்டு, அவர்களை எப்படிப் பேசினால் அவர்களுக்கு உற்சாகம் ஏற்படுமோ அவ்வண்ணம் பேசி அரும்பெரும் நூல்களை எழுதிக் கொண்டுவர காரண பூதர்களாய் இருக்கும் இதுபோன்ற தூண்டுகோல் மகானுபாவர்கள் நம் வந்தனத்திற்கு உரியவர்கள்.

ஸ்கந்தன், குமரன், சுப்ரஹ்மண்யன் புகழ் புராணங்களிலும், இதிகாசங்களிலும், சாஸ்திரங்களிலும் பேசப்படுவது. சேநாபதிகளில் நான் கந்தனாய் இருக்கிறேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் ஸ்கந்தனின் புகழை எடுத்துக் கூறுகிறான். ஸ்ரீபீஷ்மரும் சேனைக்குத் தலைமை ஏற்கும்பொழுது ஐயன் குமரனை வணங்கியே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். பரம்பொருளின் வடிவமாகக் குமரனின் வழிபாட்டைத் தருகிறது கௌமாரம். பாடியதுமே நம்முள் பேராற்றல் பிறக்கச் செய்வது ஸ்ரீஅருணகிரியாரின் திருப்புகழ். தமிழில் பெரும் விரிவான தமிழ்க் கடல் காவியமாக கச்சியப்ப முனிவர் இயற்றியது கந்த புராணம். சரவணபவ குஹ சரணம் சரணம் என்றாலே ஒரு தனி ஊக்கம் பிறக்கும் மந்திரம் அழகன் குமரனின் மந்திரம். பாலன் தேவாராய முனிவர் யாத்த கந்த சஷ்டி கவசம் பாடினாலும், கேட்டாலும் பரவசமூட்டக் கூடியது.

அத்தகைய ஸுப்ரஹ்மண்யனுக்கு உரிய ஸஹஸ்ரநாமம் என்பதில் எவ்வளவு செறிவான தத்துவங்கள் அடங்கியுள்ளன.!

நாரதருக்கு உபதேசிக்கும் பிரம்மா சொல்லும் பொழுதும், ‘..ஜ்ஞானமோக்ஷ ஸுகப்ரதம் ஸஹஸ்ராணி ச நாமாநி ஷண்முகஸ்ய மஹாத்மந: யாநி நாமாநி திவ்யாநி துக்க ரோக ஹராணி ச ஜப மாத்ரேண ஸித்யந்தி மனஸா சிந்திதான்யபி’.

ஞானம் மோக்ஷம் ஸுகம் தருவது ஷண்முகனின் ஆயிரம் நாமங்கள். அந்த திவ்ய நாமங்களோ துக்கம், ரோகம் ஆகியவற்றை அழித்து, ஜபித்த மாத்திரத்திலேயே மனத்தால் சிந்தித்ததைத் தருவது - என்கிறார் நான்முகனார்.

முன்னரே நாம் பார்த்தபடி ஹிந்துமதம் தெளிவாக உரைக்கும் இவ்வுலக நன்மை, மறுமையின் செம்மை ஆகிய அப்யுதயம், நிச்ரேயஸம் ஆகிய இரண்டையும் தரக் கூடியது ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸஹஸ்ரநாமம் என்கிறார்.

இஹ அமுத்ர பரம்போகம் லபதே நாத்ர ஸம்சய:

இஹம் - இவ்வுல்க நன்மை; அமுத்ர - மறுமையின் நன்மை.

ஸ்ரீஸுப்ரஹ்மண்யனின் ஸஹஸ்ரநாமங்கள் தொடங்கும் போதே குமரனின் நினைத்தற்கரிய சக்தி விசேஷத்தைச் சொல்லியே தொடங்குகிறது. ஓம் அசிந்த்யசக்தயே நம: என்று. அசிந்த்யசக்தி உடையவர். ஆனால் குறையற்ற, குற்றம் கடியும் சக்தி. அநகர். என்றும் கலங்காதவர் எனவே அக்ஷோப்யர். எதிலும் தோல்வியடையாதவர் ஆகையால் அபராஜிதர். ஆனால் அவர் நாதியற்றவர்களுக்குத் தாயினும் சிறந்த தயாவான தத்துவன். எனவே அநாதவத்ஸலர்.

கந்தன் ஒரு மந்திரத்தை... என்று பித்துக்குளியார் பாடிய குரல் நினைவில் ஒலிக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஸ்ரீச்ருதி ஷட்லிங்க சங்கிரகம்

உபநிஷதங்களைப் படிக்கும் முறை என்பது ஆறு அம்சங்களைக் கொண்டு உபநிஷதங்களில் வரும் விசாரங்களின் தாத்பர்யம் என்ன என்று உணர வேண்டும். அந்த ஆறு அம்சங்கள், அர்த்தம் இன்னதுதான் என்று ஒருங்குணரும் விதத்தில், அவற்றுக்குப் பெயர் ஷட்வித தாத்பர்யலிங்கங்கள் என்பதாகும். தாத்பர்யவிங்கம் என்றால் இன்னதுதான் பொருள் என்று கண்டுபிடிக்க ஏதுவான அடையாளங்கள் என்று பொருள். ஷட்வித என்பது ஆறுவிதமான என்பதாகும். இவ்வாறு உபநிஷதங்களை எப்படிப் படிக்க வேண்டுமோ அத்தகைய கோட்பாடுகளின்படி முரண்பாடுகளின்றி அர்த்தம் செய்து கொண்டுதான் ஸ்ரீபிரஹ்ம ஸூத்ரம் என்னும் வேதாந்த ஸூத்ரமும் அமைந்திருக்கிறது.

இத்தகைய படிக்கும் முறைகள் அடிப்படையானவை. இவற்றை நமக்குக் கற்றுத் தரும் துறைக்குப் பெயர்தான் மீமாம்ஸை. வேள்விகளைப் பற்றிக் கற்பிக்கும் பூர்வ மீமாம்ஸையில் என்ன என்ன படிக்கும் முறைகள் கையாளப்பட்டனவோ அவைதான் உத்தர மீமாம்ஸை என்னும் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ர ஆய்விலும், உபநிஷதங்களின் அர்த்த நிர்ணயமான வேதாந்த விசாரத்திலும் கையாளப்படும். எனவே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல் தோன்றும் படிப்புகள் உண்மையில் தம்முள் நன்கு தொடர்ச்சியும், பொருத்தமும் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தாத்பர்ய ஷட்வித லிங்கங்களைப் பயன்படுத்தி உபநிஷதங்களிலும், ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ர வியாக்கியானங்களிலும் நெடுக அர்த்தம் அறுதியிட்டாலும் தனிப்பட இவ்வாறு ஷட்வித லிங்கங்களைப் பயன்படுத்தி பத்து உபநிஷதங்களுக்கும் அர்த்தம் காணும் கிரமத்தைத் தனி நூலாகப் பெரிதும் யாரேனும் செய்து வைக்கவில்லை. இஃது வித்வான்களுக்குத் தேவையில்லை எனினும், தொடக்க நிலையில் இருக்கும் அபிமானிகளுக்கு அறிமுகப் பயிற்சிகள் என்ற விதத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனாலும் ஸ்ரீபரமானந்த ஸரஸ்வதி என்பவர் அத்வைத சித்தாந்த ரீதியாகப் பொருளுணரும் விதத்தில் பத்து உபநிஷதங்களுக்கும் இவ்வாறு ஒரு நூல் எழுதியுள்ளார். அதாவது ஷட்வித லிங்கங்களை பத்து உபநிஷதங்களுக்கும் பொருத்திக் காட்டி அனைத்து உபநிஷதங்களும் ஒருமிக்கச் சொல்ல வருவது அத்வைத சித்தாந்தபரமான நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மமே என்று பொருத்திக் காட்டுகிறார். அந்த நூலுக்குப் பெயர் ஸ்ரீசுருதி ஷட்லிங்க சங்கிரகம் என்பதாகும்.

தஞ்சைமாநகரத்தில் ஸ்ரீ வி குப்புஸ்வாமி ராஜு என்னும் பெரும் வித்வானும் ஞானியுமான ஒருவர் இருந்தார் என்பாதை முன்னரே கண்டிருக்கிறோம். அவர்தான் நிச்சலதாஸ் அவர்களுடைய நூல்களையும், உபநிஷதங்களையும், இன்னும் பல நூல்களையும் தமிழில் ஆக்கி நம் தமிழ்நாட்டிற்கு வேதாந்த வளம் பெருகக் காலம் காலமாக வழிவகுத்தோரில் ஒருவரானார். அவரே பின்னாளில் ஸ்ரீப்ரஹ்மானந்ந்த ஸ்வாமிகள் என்று சந்நியாஸ ஆச்ரமம் பூண்டார். அவர் இந்த ஸ்ரீசுருதி ஷட்லிங்க சங்கிரகம் என்னும் நூலை மூலமும் தமிழில் பதவுரையும் தந்து தமிழுரையும் பெய்து அந்நாளில் (1920) கொண்டு வந்தார். மற்ற சித்தாந்தபரமாகவும் இவ்வாறு பிரகரண கிரந்தங்கள் வந்திருக்கலாம். தமிழிலும் ஆக்கித் தந்துள்ளனரா என்று தெரியவில்லை. நம் காலத்திலும் அறிஞர்கள் இவ்வாறு அந்த அந்த சித்தாந்த ரீதியாக இங்ஙனம் ஆறு பொருள்கோள் முறைகளைப் பொருத்திக் காட்டிச் சிறுநூல் இயற்றுதல் முன்னோர் பணியைத் தொடரும் நற்செயலாகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***