Saturday, November 22, 2025

காட்டுவதை வைத்துக் காணாததை உணர்தல்

உலகில் நமக்கு எதிலும் பார்த்தால் ஒரு பகுதி தெரிகிறது. இன்னொரு பகுதி தெரிவதில்லை. கண்கள் தெரிந்த பகுதியை மட்டுமே பார்க்கும் வல்லமை உடையது. தெரியாமல் மறைந்து இருக்கும் பகுதியை எப்படிக் காண்பது? தெரிந்த பகுதியைக் கொண்டு தெரியாத பகுதியைக் காணும் முறைதான் கருதல் என்பது. அனுமானம், யூகித்தல் என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் ஆரம்பம் கண்ணால் கண்டதைக் கொஞ்சம் கருத்து ஊன்றிச் சிந்திப்பதன் மூலமே காணாத பகுதி விளங்குகிறது. மரத்திலிருந்து ஆப்பிள் எல்லோர் மீதும் விழுந்துகொண்டுதான் இருந்தது. அனைவரும் கண்ட காட்சிதான் அது. ஆனால் நியூட்டன் அந்தக் காட்சியில் கருத்தை நாட்டினார். எனவே தெரியாமல் இருந்த பகுதியான விதியைக் கண்டுபிடித்தார். காட்டப்ப்பட்டது என்ன? கண்டது என்ன? கரந்து இருந்த பகுதியைக் கருதிக் கண்ட பொழுது அங்குக் கண்ட காட்சி என்ன? என்பதை ஞானசம்பந்தப் பெருமான் தமது தேவாரத்தில் ஒரு பாட்டில் சொல்கிறார். 

”கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.” 

சாதாரணமாகக் கண் என்பதைப் பார்க்கிறோம். கண்ணால் பார்க்கிறோம். கண்ணால் பார்க்கப்படுகிறோம். ஆனால் நுதல் என்ன வேலை செய்கிறது? பார்வையில்? அதுவே ஒருவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். அது நமக்கு எப்படிப் புலனாகிறது? அவருடைய புருவங்கள் குவிந்து, சுருங்கி அவர் ஏதோ தீவிர எண்ணத்தில் இருக்கிறார் அல்லது உணர்ச்சியில் இருக்கிறார் என்பதை நமக்குத் தடயம் சொல்கிறது. ஆனால் சிவனாரோ நுதல் விழியே உடையவர். அதாவது தியான விழியாலேயே அனைத்தையும் காண்பவர். தியானம் என்பது அனைத்து பேதங்களையும் நீக்கிக் காட்சியை ஒன்றாகக் காண்பதே காட்சி என்று ஆக்கவல்லது. எனவேதான் சிவனார் தமது நெற்றிக் கண்ணால் உலகை அழித்து விடும் வல்லமை உள்ளவர் என்கிறோம். உடனே நாம் ஏதோ உலகியல் ரீதியாக அழித்தல் என்று நினைக்கிறோம் ஆனால் அதுவோ பேதங்கள் அற்ற ஏகத்வமான பார்வையைக் குறிக்கிறது. பேதங்கள்தாமே நாம் காணும் உலகம். பேதங்கள் அற்ற பார்வைக்கு நாம் உயரவேண்டும் என்பதைத் தம் நெற்றிக் கண்ணால் உணர்த்துகிறார் முக்கண் முதல்வர். அந்தக் கண்காட்டு நுதலான் யார்? 

கனல் நாம் பார்க்கும் ஒன்று. ஆனால் ஊழித்தீ என்பது அனைத்தும் எரிந்து பின்பு சுடரும் தீ. உலகெலாம் அழிந்தபின்னர்ச் சுடரும் அந்தத் தீ என்ன? ஞானம் அல்லவோ? ‘ஞான அக்னியில் உன் கர்மங்கள் அழிந்துவிடும்’ என்கிறது ஸ்ரீபகவத் கீதை. கனலை வைத்து நாம் முடிவு செய்யலாம். அதை ஏந்தும் கை ஒன்று உண்டு என்று. ஞானம் வாய்க்கப் பெற்றால் நாம் உணரலாம் பிஞ்ஞகனராரின் பேரருள் கரத்தை. எனவே அந்தக் கனல் காட்டும் கையான் யார்? 

பெண் இருப்பது நம் காட்சிக்குப் புலனாகிறது. பெண் என்பவள் உயிரைக் கருவில் சுமந்து உருவாக்குபவள். எனவே உருவு பொலியும் பிரகிருதி, சக்தி என்பதற்கு அவளே தகுந்த குறியீடாக அமைகிறாள். ஆனால் உருவு என்பது கண்ணிற்குப் புலனாவது என்றாலும் அதற்குப் பக்கத்திலேயே புலனாகாத அருவம் என்பதுவும் இருக்கிறது. அந்த அருவத்தின் காரணமாகவே, துணைகொண்டே உருவும் தோன்றுகிறது. உண்மையில் உரு அரு என்பது நாம் காண்பதன் எல்லையையும், காணாததின் தொடக்கத்தையும் குறித்து நிற்கிறது. உரு அரு ஆக நிற்கும் சிவனாரின் கோலம் உருவருவத் திருமேனியாக பொலிகிறது. 

பிறை என்பதோ சந்திரனைக் குறிக்கிறது. இயற்கையின் பொங்கு நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் தூண்டுதலாக விளங்குவது பிறை. ஆனால் சிவனாரிடத்தில் அது காட்டுவதோ பொங்குவது அனைத்தும் அமைதியாக அடங்கிய நிலையைக் குறிக்கும் சடை அல்லது தவம். உலகில் ஒரு பொருளுள்ள பிறை கடவுளிடத்தில் கடந்த பொருளைக் காட்டி நிற்கிறது. தடைப்படாத செயல்களின் நடுவே தளும்பாத அமைதியைப் பேணும் குறிப்பை நமக்குக் காட்டுவது சிவனாரின் இந்தக் கோலம். பிறை காட்டும் சடையான் யார்? 

பாடல், இனிய பாடல், சோகமான பாடல், ஆழ்ந்த பாடல் கேட்கும் போது சொல்கடந்த நிலையில் நம் மனம் இசைகிறது. அந்த நிலையில் நம் மனத்தை இசைக்கிறது அந்தப் பண். சொல்லும், பொருளுமாய், பண்ணும் இசையுமாய் நிற்பது பார்வதி பரமேசுவரர்தான் என்பது நம் உணர்வில் உறைத்தால் எத்தனை நன்மை! பண் காட்டும் இசையோன் யார்? 

பாலை. வறண்ட நிலம். பயிர் வாடிக் கருகிக் கட்டைகள்தாம் இருக்கின்றன. என்ன கொடுமை என்கிறோம். எங்கோ போய்விட்டு மீண்டும் அந்த வழியே வருகிறோம். இடைப்பட்ட காலம் சில மாதங்கள்தான் என்றாலும், அந்த வறாட்சி எங்கே போயிற்று? பச்சை பசேல் என்று செடியும் கொடியும் போர்த்து, பூத்து, புள்ளும், மாவும் திரிந்து காட்சியே மாறிப் போய்விட்டது. கண்ணுக்குப் பயிர்தான் தெரிகிறது. ஆனால் அதன் பின்னால் பெய்த மழை, புயல் நம் கருத்திற்குப் புலனாகிறது. அதுபோல் வறண்ட வாழ்வில், கருகிப் போன பொழுதுகளில் அருளின் மழை பெய்கிறது. சிவனாரின் அருள் பெருமழையாய்ப் பெய்து வறட்சியை நீக்கி, எங்கும் புத்துணர்வையும், புது எழுச்சியையும் மலர்த்திவிடுகிறது. பயிர் காட்டும் புயலோன் ஆன அவன் யார்? 

திருவெண்காட்டில் உறைபவனும், விடை ஆகிய நந்தியைக் கொடியாக உடைய சிவபெருமான் தான் அது எல்லாம் என்று கவிதை பேசுகிறார் காழிப்பிள்ளை. தமிழ், கவிதைக்கான செல்ல மொழியோ என்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, November 12, 2025

மாயவரம் காமாக்ஷி அம்மா

மாயவரம் துபாஷி அக்ரகாரம். 1910 ஆண்டு. ஆந்திர தேசத்துக் குடும்பம் ஒன்று. ஒரு சிறுமி. தன் கணவர் யானமன்றம் ராமலிங்க ஐயர் 1871 ல் இறந்துபட அடுத்து வாழ்வில் அவள் எடுத்த முடிவும், அவள் அடைந்த புலமையும்தான் மிகவும் வியக்க வைப்பது. சம்ஸ்க்ருதத்தைக் கற்றுத் தேர்ந்தாள். அத்வைத சித்தாந்தத்தில் நெடுகப் பயின்றாள். ஆழமான புலமை. விளைவு அவள் தன் சொந்த உபயோகத்துக்கு என்று எழுதி வைத்த வடமொழிக் குறிப்புகள் அத்வைத நுணுக்கங்களைப் பற்றி, அதுவே நண்பர்கள் வற்புறுத்திப் போட வைத்தனர், அத்வைததீபிகா என்று 40 பக்கத்தில் அரிய, செறிய நூலாக ஆகியிருக்கிறது 1910ல். 

 

ஸ்ரீ டி எஸ் நடேச சாஸ்திரியார் அதை நூலாகப் பிரசுரித்துக் கூடவே ஆங்கிலத்தில் அதற்கான மொழிபெயர்ப்பும் தந்து 80 பக்க நூலாகத் தந்துள்ளார். 

துபாஷ் அக்ரகாரம் என்பது அம்மாளின் குல முன்னோரான துபாஷ்  ராமஸ்வாமி ஐயர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டதுவாம். துபாஷ் என்றால் த்விபாஷி. அதாவது அரசாங்கத்தில் இருமொழித் தொடர்பு நிபுணர்.  

நூலின் தொடக்கத்தில் ஏன் இந்த நூலை எழுதலாயிற்று என்று கூறுகிறார். 

“பரமபுருஷார்த்த ப்ரதாத்வைதஸித்தி க்ரந்தஸ்தாநாம் பக்ஷதாவச்சேதக விசாரமாரப்ய ப்ரத்யக்ஷஸ்யாகம பாத்யத்வ விசாராவதி கதிபயவாக்யாநாம் ஸம்யகுபபாதனாத்மக வாக்யஸமூஹரூப: அத்வைததீபிகாக்ய: ப்ரபந்த: ஸ்வபுத்திவைசத்யாய பாலாநாம் ஸுகபோதாய ச மஹாதிகாரவதா விதக்தேநாநுஜேந ஸுப்ரஹ்மண்யேநாதிஷ்டயா காமாக்ஷ்யா க்ரியதே | தஸ்மின் குணாட்யா: ஸந்த: கருணாம் க்ரியாஸுரிதி ஸவிநயம் அப்யர்த்தநா |”

அத்வைத சாஸ்திரங்களைக் கற்கும்போது சாஸ்திரம் கூறும் முடிவுகளுக்கும், பிரத்தியட்சமாகப் பார்த்துப் புரிந்து கொண்டுள்ள எண்ணங்களுக்கும் முரண் உண்டாகி ஐயங்கள் ஏற்படும்போது பலவித அனுமானங்களால்தான் அந்த ஐயங்களை நீக்கிச் சாஸ்திரங்களின் கருத்துகளில் உறுதி ஏற்பட முடியும். இந்த வழியே அத்வைதஸித்தி முதலிய நூல்களில் காட்டப்பட்டிருப்பதும் ஆகும். அந்த நூல்களை அடிப்படையாக வைத்தே சொந்த நலனுக்கும் சிறுவர்களின் நலனுக்குமாக இந்த அத்வைததீபிகா எழுதலாகிறது என்று கம்பீரமாகத் தொடங்குகிறார் காமாக்ஷி அம்மா. 

1871ல் ஆரம்பித்த கல்வி 1910ல் நூலாக வெளிவந்திருக்கிறது. இதுபோல் எத்தனை மகத்தான பெண்மணிகள்! ஸ்ரீபெரும்புதூரில் இருந்த பத்தி யதிராஜம்மாள் (இவரைப் பற்றி முன்னர் எழுதியுள்ளேன்), கல்யாணி மாமி, சாது நித்யானந்தம்மாள் (இவரைப் பற்றியும் எழுதியுள்ளேன்), இப்பொழுது மாயவரம் காமாக்ஷி அம்மா. எப்படியோ நான் தெரிந்துகொண்டு விடுகிறேனா அல்லது இந்த மகனீயர்களான மாதாக்கள் என்னைத் தேர்ந்து தம்மைத் தெரியப் படுத்துகின்றனரா? எப்படியோ வியப்புதான் ஏற்படுகிறது. பெண்களின் உலகத்தையும், அவர்கள் உலகத்தைப் பார்த்துக் கொள்ளும் அபிப்ராயங்களையும் நாம் சரிவரக் கவனம் தந்து பொருந்திக் கேட்பதில்லை என்ற வருத்தம் எனக்கு முன்னரே உண்டு. மொழிவு எல்லாம் அவசர உலகத்து ஆண்வழியாகவே அமைந்து விடுகிறதோ என்ற தயக்கமும் இருக்கிறது. நினைத்துப் பாருங்கள் அந்தக் காலத்தில், 1871ல், ஒரு சிறுமி, நமது மாயவரத்தில், துபாஷ் அக்ரகாரத்தில், வாழ்க்கை தனித்துப் போய்விட, சம்ஸ்க்ருதம், அதவைதக் கல்வி என்று தன் பயணத்தைத் தொடங்கியவர் எழுதி  வைத்திருப்பதெல்லாம் அரிய நடை வடமொழியில், பக்ஷம், ஸாதர்ம்யம், ஸாத்யதை, தோஷம், பக்ஷவிசேஷணம், அன்யதரஸித்தி, ஆச்ரயஸித்தி, சாத்யப்ரசித்தி என்றெல்லாம் நவ்யநியாயக் கடின பதங்களைப் பொழிந்து எழுதுகிறார் என்றால்... இன்னும் எவ்வளவு பெண்மணிகள் யாரும் அறியவராமலேயே... !

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***