Monday, June 1, 2026

என்ன வியப்பு இந்த மாயை ! ( மாயா பஞ்சகம் ) 05

இந்துமதத்தின் ஆகச்சிறந்த பொதுமைக் கருத்தை மிக அழகாக, நகைச்சுவையுடன் இந்த சுலோகத்தில் வெளியிடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். அதுவும் இன்றைய காலத்தில் இந்துமதத்தில் உள்ளவர்கள் மட்டுமன்று, உலகெங்கும் உள்ள அக்கறை உள்ள பெருமக்கள் யாவரும் தம் உள்ளத்தில் நன்கு பதிவிடவேண்டிய சுலோகம் இந்த சுலோகம் ஆகும். 

முதல் நான்கு சுலோகங்களில் ஸ்ரீஆதிசங்கரர் சொன்னதைச் சற்று பார்ப்போம். மகாகவி பாரதியார் எழுதிய மாயா பஞ்சகம் அவருடைய கவிதையான ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்றால், ஸ்ரீஆதிசங்கரர் எழுதிய ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்னும் கவிதைதான் இந்த மாயா பஞ்சகம் என்பது. அதுவும் ஐந்தாவது சுலோகத்தில் ஆணித்தரமாக அவர் இடுகின்ற வேரான கருத்து இந்துமதத்தின் ஆகச்சிறந்த அடிப்படை ஆகும். 

மாயையின் விசித்திரத்தை வியக்கின்ற பகவத்பாதர் முதலில் இந்த மாயையை ஓர் அடைமொழி இட்டு நமக்கு அடையாளப் படுத்துகிறார். அதுதான் ‘ஆகாததை ஆக்கி, கூடாததைக் கூட்டி வைக்கும் மாயை’ என்பது. அகடித கடநா படீயஸீ மாயா. (கடித என்றால் சாத்தியப் படுத்தும் என்று பொருள். அகடித என்றால் சாத்தியப் படுத்த முடியாத என்று பொருள். கடநா என்றால் சாத்தியப் படுத்த என்று பொருள். படீயஸீ என்றால் வல்லமையுள்ளதாக இருக்கிறாய் என்று பொருள்.) இந்த மாயையானது சாத்தியப்படுத்த முடியாததை சாதிக்கும் வல்லமை கொண்டதாய் இருக்கிறது. எப்படி? 

சித் மயமாய் (அறிவு மயமாய்), ஆனந்த வடிவாய், என்றும் உள்ள ஒரே சத்யமான ஆத்மாவிற்குள்ளேயே இந்த மாயை என்ன செய்கிறது? உலகம் என்றும், அதில் ஜீவர்கள் என்றும், அந்த ஜீவர்களின் வியவகார நிலையில் அனைத்தையும் நியமிக்கும் ஈச்வரன் என்றும் இந்த ஜீவ ஜகத் ஈச்வர மூன்றை வியாவகாரிக சத்யமாகத் தோற்ற வைக்கிறது அன்றோ! 

அடுத்து, வேதாந்தம் கற்ற மிகப் பெரிய வித்வான்களையும் இந்த மாயை தன் வல்லமையால் பணம், காமம் முதலிய ஆசைகளைக் காட்டி, வெறும் நாலு கால் மிருகங்கள் போல் ஆக்கிவிடுகின்றது அன்றோ! 

அடுத்து, ஆத்மா முற்றிலும் சடம் என்பதே கலவாத தூய அறிவு மயமானது. ஆனாலும் இந்த மாயை என்ன செய்கிறது? ஐம்பூதச் சேர்க்கையால் ஆன சடமான சரீரத்தோடு ஒன்றுபட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இந்த ஜீவனைத் தான் இந்தச் சரீரம்தான் என்று முற்றிலும் நம்ப வைத்துவிடுகிறதே! 

அடுத்து, சத் சித் ஆனந்த வடிவான ஆத்மாவில் எங்கிருந்து வந்தது வர்ணம், ஜாதி, குணம் எல்லாம்? ஆனால் இந்த மாயை என்ன செய்கிறது? இந்த ஜீவனை, தான் பிராம்மணன், தான் வைசயன் என்றெல்லாம் தன்னைப் பற்றி அகங்காரம் கொள்ளச் செய்து, என் மக்கள், என் மனைவி, என் கணவன், என் வீடு என்றெல்லாம் மமகாரம் என்ற உடைமை உணர்வில் இந்த ஜீவனை மயங்கச் செய்து விடுகிறதே! என்ன வியப்பு! 

ஐந்தாவதாக, இந்த மாயை செய்யும் விசித்திரம் பற்றிச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். சத் சித் ஆனந்த மயமான ஆத்மாவே பிரம்மமாக இருக்கிறது. அதில் ஜீவன், ஜகத், ஈச்வரன் என்று பேதங்கள் எல்லாம் மாயை உண்டாக்கும் தோற்றம். ஆயினும் மெத்தப்படித்த ஞானியரும் கூட என்ன செய்கின்றனர்? அந்தப் பிரம்மம் விஷ்ணுதான் இல்லை இல்லை சிவன் தான். இல்லை இல்லை நான்முகன் ஆகிய பிரம்மன் தான், என்று பேதங்களில் தம்மை இழந்து, பரம்பொருள் ஒன்றே, ஞானியர் பலவிதமாக அதை விவரிப்பார்கள் என்று வேதம் சொல்வதையும் மறந்து, மிகுந்த பிரமையில் அன்றோ ஆழ்த்திவிடுகிறது! என்ன வியப்பு இந்த மாயை! 

‘விதி ஹரிஹர பேதம் அபி அகண்டே 

பத விரசய்ய புதாநபி ப்ரகாமம் | 

ப்ரமயதி ஹரிஹர விபேதபாவாந் 

அகடித கடநா படீயஸீ மாயா ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***