ஒரு பெரும் கம்பெனி. அதன் உற்பத்தி, விரிவு, செயல்திறன் எல்லாம் சேர்ந்து பெரும் கிளைகள் கொண்ட, இயக்கம் மிகுந்த அமைப்பு. இதை நினைத்துப் பாருங்கள். என்ன இது! ரஹஸ்யத்ரய ஸாரம் என்று தலைப்பு போட்டுவிட்டு கம்பெனி, அது இது என்று யோசிக்காதீர்கள். அந்தக் கம்பெனியில் எதிர்கால சாதனையை நோக்கிய தர்சன ஊக்கம் ஒன்றை ஒரு பிரிவோ அல்லது ஒருவரோ வெகு மும்முரமாகக் காட்சிப் படுத்திக் கொண்டேயிருப்பார். அந்தத் தர்சன ஊக்கம் என்பதை மும்முரமாகத் திட்டமிடும் தலைவருக்கு இன்றைய யதார்த்தம் என்பதை விட இனிவருங்காலம் எப்படி அமைய வேண்டும், என்ன சாதிக்க வேண்டும், இன்றைய செயல்பாடுகள் எதை நோக்கிப் போக வேண்டும், கடந்தகால கம்பெனி வரலாற்றிலிருந்து என்ன கற்றுக் கொள்ள வேண்டும், இதைத்தான் அவர் முக்கியமாகக் கருதுவார். அதே கம்பெனியில் இன்னும் ஒரு பிரிவில் எஸ்டாப்ளிஷ்மெண்ட், முதலீடு, செல்வம், இருப்புத் தொகை, அன்றாடம் என்பதை எப்படிக் கட்டி மேய்ப்பது, இன்றைய கட்டாந்தரையான யதார்த்தம் என்ன, எந்த அளவுக்கு கம்பெனி துணிந்து புதுமையில் நுழையலாம், பழைய பாடங்கள் என்ன, கம்பெனிக்கு என்று இருக்கும் எழுதப்பட்ட, எழுதப்படாத விதிகள், சட்டங்களின் சூழல் இவை தரும் அவகாசமும், புழக்க வெளியும் என்ன, என்று இவையெல்லாம் பற்றிய கவலையோடு ஒரு தலைவர், ஒரு பிரிவு. அதே பெரிய வளாகத்தில் தங்களுடைய கண்ணோட்டத்தை ஆணித்தரமாக வாதித்தவாறு வளைய வந்துகொண்டிருப்பார். இந்த இருவரில் யார் முக்கியம்? நிச்சயம் கம்பெனிகளின் பழகிய பலரும் நம்மால் சொல்ல முடியும். இரண்டு பேரும். ஒவ்வொரு விதத்தில். ஒருவர் முன்னே எடுத்துச் செல்கிறார். ஒருவர் இருக்கின்ற நிலையில் நிலைகுலையாமல் ஸ்திரப்படுத்துகிறார்.
இந்த உதாரணம்தான் எனக்குத் தோன்றியது ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனாரின் ஆசார்ய ஹ்ருதயம் என்ற நூலின் வழியே ஸ்ரீவைஷ்ணவத்தைப் புரிந்துகொண்ட எனக்கு, முதன்முதலில் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகர் இயற்றிய ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்ற நூலைப் படித்த பொழுது. மகாத்மா காந்திஜிக்கு conscience-keeper என்று ராஜாஜி அவர்களைச் சொல்வார்கள். அதாவது சிறிதும் தயக்கமின்றி, துணிந்து தாம் என்ன நினைக்கிறோம் என்பதை, காந்தியின் கருத்துகளைக் குறித்தே காந்தியிடமே வெளிப்படையாக விவாதிக்கும் தன்மை உடையவராய் இருந்தார், அதனாலேயே காந்தி அவரைத் தமக்கு முக்கியமானவராகக் கருதினார் என்பதை இந்த கான்ஷியன்ஸ் கீப்பர் என்ற சொலவு குறிக்கிறது என்று நினைக்கிறேன். அரசியல் உதாரணத்தைக் காட்டுவதா என்று நீங்கள் தயங்கவில்லை என்றால் எனக்குத் தோன்றுவது ஸ்ரீவேதாந்த தேசிகர் ஆகட்டும், ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஆகட்டும் இருவருமே ஸ்ரீவைஷ்ணவத்தின் இருபெரும் கான்ஷியன்ஸ் கீப்பராகத்தான் தோன்றுகிறார்கள். அதாவது இருவரிடமும் உள்ள ஓர் ஒற்றுமை வெளிப்படையாக உடைத்துச் சொல்லும் அபாரமான துணிச்சல், தாம் ஏன் சொல்கிறோம் என்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் வாதங்கள். எனக்கு இருவரும் இன்றியமையாதவர்கள். ஏன் இனி வருங்காலத்தில் இத்தகைய மாபெரும் மனிதர்களை நாம் சந்திக்க முடியுமா தெரியவில்லை. நமக்கு இருவரில் ஒருவரிடம் சாய்வு இருக்கலாம். ஒருவர் சொல்லும் கருத்தில் நமக்கு உடன்பாடின்றி விவாதம் எழலாம். ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள் இருவரும் 700, 800 ஆண்டுகளுக்கு முன்னர்!
ஒருவர் பிரபத்தி நெறி பாகுபாடுகள், உயர்வு தாழ்வு, அந்தஸ்து, ஆண்பெண் பேதம், இல்லறம் துறவறம் வேறுபாடு எதுவும் கணக்கில்லை, அனைவருக்கும் உரியது, அதுவே நம்மாழ்வார் வழி நின்ற அனைத்து ஆசாரியர்களின் ஹ்ருதயம் என்று கூறுகிறார். அவர் ஆசார்ய ஹ்ருதயம் எழுதிய ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார். என்னைக் கவர்ந்தவர்.
மற்றவர் சாத்திரம், நியமம் என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை. பிரபன்னர்களுக்கும் சாத்திர நியமங்களின் வழி நின்று சரணாகத நெறியில் தொடர்வதுதான் சரியானது என்று கொள்கையுடைய ஸ்ரீவேதாந்த தேசிகர். விசிஷ்டாத்வைத தத்வத்தை விளக்கிப் பல நூல்கள் இயற்றியவர். மணவாள மாமுனிகள் இவர் இயற்றிய ரஹஸ்யத்ரய ஸாரத்திலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டி அபியுக்தரால் இவ்வாறு விஸ்தரேண பிரதிபாதிக்கப்பட்டது என்று கூறுகிறார். என்ன இடம் என்றால் உலகில் அனைத்துப் பொருட்களையும் கடவுள் உள் கலந்து உண்மையாகிய இயல்பால் மட்டுமே தாங்குகிறாரா அல்லது சங்கல்பத்தாலும் தாங்குகிறாரா என்பதற்கு விளக்கமாக வேதாந்த தேசிகர் காட்டிய விளக்கத்தை எடுத்துக் காட்டுகிறார். அதைப் போல் பெரிய திருமொழியில் நாராயண நாமம் குலம் தரும் என்று பாடியதற்கு விளக்கத்தை பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ஒரு பகுதியை எடுத்துக் காட்டி ‘என்று அபியுக்தர் நிஷ்கர்ஷித்தார் (அறுதியாக நிலைநாட்டினார்)’ என்று கூறுகிறார் வேதாந்த தேசிகர்.
கல்லூரி வகுப்பு என்று கருதிப் பார்த்தால் வேதாந்த தேசிகரின் வகுப்பை இழக்க விரும்ப மாட்டேன். ஆனால் அவரோடு மாறுபட்டு சதா வாக்கு வாதம்தான். அதுவே ஆசார்ய ஹ்ருதயம் என்பது நான் பிரமிப்பது. பேச்சு வராது. அவர் வாதம் செய்தாலும் வியப்புதான். ஆனால் வேதாந்த தேசிகர் என்னும் பேராசிரியரோடு நான் கேள்வி மேல் கேள்வி கேட்டு உரையாட முடியும். அவர் நான் கேட்கும் கேள்விக்கு மேல் ஆயிரம் மடங்கு கேள்விகளை எழுப்பி விடையும் சொல்லக் கூடியவர். அதில் எனக்கு அவரிடம் வியப்பு.
இருவரையும் சரியாகப் புரிந்து கொள்வதில்தான் இனிவருங்காலத்து வைணவம் பலன் பெறும் என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு யதார்த்தம் பாரதி காலத்திலிருந்தே கூட. என்னதான் ஆசார்ய ஹ்ருதயம் என்றாலும் எல்லாரும் புழக்கத்தில் பின்பற்றுவது ரஹஸ்யத்ரய ஸாரத்தைத்தான் என்று தோன்றுகிறது. ஒன்றுமில்லை. ரஹஸ்யத்ரய ஸாரத்திற்கு ஐந்து வியாக்கியானங்கள் உண்டு, சாக்ஷாத் ஸ்வாமி எழுதிய உரை இன்னும் சில உரைகள். விரிவான உரை ஸ்ரீஸாரபோதிநீ (அழகியசிங்கர் 42ஆம் பட்டம்). அதில் நினைவு தோயவே ஒரு சிந்தனை.
(தொடரும்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***