“ஸ்ரீபாஷ்யகாரருடைய சிஷ்ய ஸம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதமில்லை. வாக்ய யோஜநா பேதமே உள்ளது.”
அதாவது பொருள் ஒன்றுதான். அதைப் பார்க்கும் கோணமும், விளக்கும் விதமும் மட்டுமே வேறுபடுகிறது என்று அழகாகச் சொல்கிறார்.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அநேகமாக அனைத்துப் பகுதிகளுக்கும் உரையெழுதிய பெருமகனார் பெரியவாச்சான் பிள்ளை. அவரே ரஹஸ்ய நூல்களும் இயற்றினார். அவருக்கு முன்னர் ரஹஸ்யம் குறித்துப் பிரபலமாக அறியப்பட்ட ஸ்தோத்திரம் பராசர பட்டரின் அஷ்டச்லோகி ஆகும். அவர் (பெரியவாச்சான் பிள்ளை) காலத்திற்குப் பிறகு பிள்ளை லோகாசாரியார் இயற்றிய அஷ்டாதச ரஹஸ்யம் என்னும் பதினெட்டு ரஹஸ்ய நூல்களின் தொகுதி ரஹஸ்ய நூலுலகில் பெரும் பிரசித்தி பெற்றது. அந்தப் பதினெட்டு நூல்களில் ஒன்றான தத்வத்ரயம் என்னும் நூலுக்கான வியாக்கியானத்தில் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளால் ஆதரத்துடன் மேற்கோள் காட்டப்படும் நூலாகத் திகழ்கிறது ஸ்ரீவேதாந்த தேசிகரின் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்பதை நாம் காண முடிகிறது. அதேபோல் காலத்தால் தமக்கு மிகவும் அண்மையான முன்னவராகத் திகழும் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானத்தை ஆதரத்தோடு மேற்கோள் காட்டும் நிலையைத்தான் நாம் வேதாந்த தேசிகரின் நூலிலும் காண முடிகிறது. இந்தப் பெருமக்களுக்குள் கருத்து வேறுபாடு, விவாதம், மாற்றுக் கருத்து இருந்திருக்கலாம். ஆனால் யார் ஒருவருடைய நூலும் யார் ஒருவருக்கும் ’பிறருடைய’ நூலாக ஆகிவிடவில்லை என்பதைத்தான் தொகுத்து நாம் காணும் போது உணர முடிகிறது. ’நாம்’ >< ‘பிறர்’ என்ற பிளவான பார்வை பின்னர்க்காலங்களில் பரவத் தொடங்கியது என்றால் அதற்கு எந்த விதத்திலும் இந்த ஆசார்யப் பெருமக்கள் காரணமாக அமையவில்லை என்பதைத்தான் கூர்ந்து கற்கும் எவரும் உணரமுடியும்.
முந்தைய பகுதிகள் -- முதல் பகுதி , இரண்டாம் பகுதி
(தொடரும்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment