அதற்கு முன்னர் அவரவர் வாழ்ந்த காலக் கிரமத்தைப் பார்ப்போம். (குறிப்பு உதவி - ஆசார்யர்களின் கால நிர்ணயம், ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனர்) பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் காலம் 1167 - 1262 கி பி. வேதாந்த தேசிகர் இவருக்குப் பின்னர் ஏழு வருஷங்கள் கழித்துத்தான் 1269ல் தோன்றுகிறார். (1269 - 1369) மணவாள மாமுனிகள் தோற்றம் 1370 கி பி. அதாவது ஒருவர் மறைந்த பின்னர் ஒருவருடைய தோற்றம் என்ற காலக் கிரமத்தில் நிகழ்கிறது. பெரியவாச்சான் பிள்ளை திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் பாசுரமான ‘குலம் தரும் செல்வம் தந்திடும்’ என்ற இடத்தில் குலம் தரும் என்பதற்கு வியாக்கியானம் எழுதும் போது, நாராயண நாமம் ஒருவருடைய பண்டைக் குலம் எதுவாய் இருந்தாலும் அதை நீக்கித் தொண்டக் குலம் ஆக்கிவிடும்; ஆயினும் வழிவழியாக வருகின்ற திருமண உறவுகள் உலகியல் ரீதியில் அமைந்தாலும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பழகிக் கொள்வது தொண்டக் குலத்தின் ஞானப் பெருமையின் அடிப்படையாகப் பழக வேண்டுமே அன்றி அவர்களுடைய உலக ரீதியான பிறப்பின் அடிப்படையில் அன்று என்று தத்வார்த்தம் சார்ந்த உலக நடைமுறைக்கு ஒரு தெளிவான விளக்கம் தருகிறார் பெரியவாச்சான் பிள்ளை. அந்தப் பகுதியை அப்படியே தமது ரஹஸ்யத்ரய ஸாரத்தில் வேதாந்த தேசிகர், ‘ப்ரபாவ வ்யவஸ்தாதிகாரம்’ என்னும் பகுதியில் எடுத்துக் காட்டுகிறார். ‘குலந்தரும் என்னும் பாட்டுக்கு வ்யாக்யானம் பண்ணின அபியுக்தரும்’ என்று தொடங்கி, ‘ச்லாகை குணநிபந்தனம் என்று (அபியுக்தரும்) நிஷ்கர்ஷித்தார்கள்’ என்று மேற்கோள் காட்டுகிறார். ச்லாகை என்பது ஞானப் பெருமை அடிப்படையாக ஒருவரைச் சிறப்புற நடத்துவதும் கொண்டாடுவதும் ஆகும். நிஷ்கர்ஷித்தல் என்றால் பல அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஆய்ந்து அறுதியாக முடிவு கூறுதல் என்பது பொருள். தமக்கு ஏழு ஆண்டுகள் முன்னம் இருந்த ஆசாரியரை, அவருடைய தத்வார்த்தமான சமுதாயக் கருத்தியல் தீர்மானங்களை அவ்வண்ணமே உள்வாங்கிப் போற்றியுரைக்கும் பாங்கைக் கவனிக்க வேண்டும்.
விசிஷ்டாத்வைத தத்வத்திற்கும், ஸ்ரீராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யத்திற்கும் விளக்கமாகவும், அரணாகவும் பல நூல்களை இயற்றியவர் வேதாந்த தேசிகர். இதை அவருக்குப் பின்வந்த ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் எப்படிக் கருத்தில் கொண்டு அவருடைய தத்வார்த்த விளக்கங்களை மேற்கோளாக எடுத்து ஆள்கிறார் என்பதற்கு ஓர் உதாரணம் காட்டுகிறேன். ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ப்ரதாநப்ரதிதந்த்ர அதிகாரத்தில் உலகப் பொருட்களை உள்நின்று தாங்குபவனும் கடவுள்தான்; அதேநேரம் உள்நின்று தன் சங்கல்பத்தால் அவற்றின் இயக்கத்தைத் தாங்குபவன், செலுத்துபவனும் கடவுள்தான். உலகப் பொருட்களின் உள்நின்று தான் உண்மையால் அந்தப் பொருட்கள் உளதாம்படித் தன் இயல்பினாலேயே தாங்கி நிற்கவும் செய்கிறான். அதேநேரம் அவற்றின் இயக்கத்தையும், இருப்பையும் தன் சங்கல்பத்தாலும் நியமித்து நடத்துகிறான் - என்று இத்தகைய விளக்கத்தைத் தந்திருக்கிறார் வேதாந்த தேசிகர். அதற்கு உதாரணமாக அவர் காட்டுவது தூக்கத்தில் சலனம் இல்லை. நனவு நிலையில்லை. ஆனால் அப்பொழுதும் உயிர்கள் கடவுளால் தாங்கப்படுகின்றன. கடவுள் உள் இருக்கிறார் என்ற அவர் ஸ்வரூபத்தைச் சார்ந்துதான் உயிர்களின் இருப்பும் இயல்கிறது. இந்தச் சார்பு நிலையை ஸ்வரூபத்தைச் சார்ந்த இயல்பு இருப்பு நிலை என்று சொல்லலாம். அதாவது ஸ்வரூப ஆச்ரிதம். உயிர்களின் இந்தச் சார்பு நிலைக்கு ஆதேயத்வம் என்று பெயர். அதுவே விழிப்பு நிலையில் உயிர்களின் இயக்கத்தை உள்நின்று கடவுள் தன் சங்கல்பத்தால் நியமிக்கிறான். அப்பொழுது உயிர்களின் சார்பு நிலை ஸங்கல்ப ஆச்ரிதம். உயிர்களின் இந்தச் சார்பு நிலையிக்குப் பெயர் நியாம்யத்வம் (நியமிக்கப்படுவதாயிருக்கை). இந்த விளக்கத்தை வேதாந்த தேசிகர் அந்தப் பகுதியில் தருகிறார்.
பிள்ளை உலகாரியர் அருளிய 18 ரஹஸ்ய நூல்களுள் தத்வ த்ரயம் என்பது ஒன்று. அதற்கு வியாக்கியானம் எழுதிய மணவாள மாமுனிகள் அதில் சித் ப்ரகரணத்தில் 39 ஆவது சூர்ணையான
“தார்யமாகை ஆவது அவனுடைய ஸ்வரூப ஸங்கல்பங்களை ஒழிந்தபோது தன்ஸத்தை இல்லையாம்படி இருக்கை.”
என்பதற்கு வியாக்கியானம் எழுதும் போது ரஹஸ்யத்ரய ஸாரத்தில் வேதாந்த தேசிகர் ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரத்தில் அளித்த விளக்கத்தை மேற்கோள் காட்டும் போது மணவாள மாமுனிகள் எழுதுவது - தார்யவஸ்துக்களை ஸ்வரூப ஸங்கல்பம் இரண்டாலும் தரிக்கும் என்னுமிடம் அபியுக்தராலே விஸ்தரேண ப்ரதிபாதிக்கப்பட்டது.”, ”என்று இப்படி ரஹஸ்யத்ரய ஸாரத்திலே ப்ரதிபாதிக்கையாலே”.
ஆனால் 1766 கி பி யில் வரும் ஸ்ரீஅண்ணா அப்பங்கார் தமது பழநடை விளக்கம் என்னும் நூலில் பெரியவாச்சான் பிள்ளையை வேதாந்த தேசிகர் சந்தித்தார் என்று எழுதுகிறார். பெரியவாச்சான் பிள்ளையின் உபதேசத்தால் வேதாந்த தேசிகர் கொண்டிருந்த சில மாறான கருத்துகளில் திருத்தம் பெற்றார் என்றும் எழுதுகிறார். ஏழு வருஷங்கள் முன்னர் இருந்தவரை ஏழு வருஷங்களுக்குப் பின்னர்த் தோன்றியவர் சந்தித்து விமரிசனமும் விளக்கமும் நடந்தன என்பதைப் போன்ற கால மயக்கமான விவரணைகள் எழுந்ததன் காரணம் அந்தக் காலச் சூழ்நிலையின் விமரிசனப் பதில் விமரிசன இயல்பைக் காட்டும் போலும்.
இதன் முதல் பகுதியைப் படிக்க இங்கே - முன் பதிவு
(தொடரும்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
திவ்ய சக்தி உள்ளவர்கள் அவர்கள். அவங்களுக்கு எல்லாம் மானச சாஷாத்காரம். காலங்களில் இடைவெளி ஒரு பிரச்சனயாகவே இருக்காது. நமக்கு பிரதயக்ஷமா தெரிவதே கண்ண கட்டுது.
ReplyDelete