” அசோகனது சாஸனங்கள் உலக சரித்திரத்திலேயே ஒரு புதுமை எனலாம் . ஆயிரக்கணச்கான கல்வெட்டுக்களும் வேறு பலவித புராதன விதங்களும் நமக்கு இப்புவியின் பல பாகங்களிலிருந்து கிடைத்திருக்கன்றன; ஆயினும் தன் பிரஜைகளின் க்ஷேமத்தின் பொருட்டு, தர்மோபதேசங்களை எழுதிவைத்த அரசனை நாம் வேறெங்கும் கண்டிலேம். இந்த விதங்கள் இந்திய சரித்திரத்தில் மிகவும் ஏற்றமுடைய தஸ்தாவேஜுகள், முதலாவது, இவற்றைவிடப் பழைமையான லிகிதங்கள் அநேகமாக இந்தியாவிற் கிடையா, இவற்றின் கருத்தை அறியும் பொருட்டுச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இந்தியாவிற் சிலாசாஸன ஆராய்ச்சிக்குத் தொடக்கமாகும், இரண்டாவது, இவற்றிற் காணப்படும் லிபி எழுத்து நம் நாட்டில் தற்காலம் உபயோகப் படுத்தப்படும்
பல எழுத்துக்களின் ஆதியை விளக்குகிறது, மூன்றாவது, பெளத்தமத சரித்திரத்தை விளக்க இச்சாஸனங்கள் இன்றியமையாதன. நான்காவது, இந்த லிகிதங்களிலுள்ள பாஷை, மூன்றாவது நூற்றாண்டில் வடஇந்தியாவில் பேசம்பட்டு வந்த மொழியானது வடமொழியோடும் பிராக்ருத நடைகளோடும் எவ்வித ஒற்றுமை வேற்றுமைகளை உடையனவாயிருந்தன என்பதை விளக்கும், இலக்கியமாகக் கருதுமிடத்தும் அசோக சாஸனங்கள்
மிகச் சிரேஷ்டமானவைகளே. இவற்றிற் பெருந்தன்மையுடைய ஓர் அரசன் இதயத்தைக் காண்கிறோம்; அவனுடைய உள்ளத்தின் உயர்வும் கனிவும் எவரையும் வியப்படையச் செய்யுமென்பதிற் சந்தேகமில்லை.”
தெ வா னம் பி யோ பி ய த ஸி லா ஜா ஏ வம் ஆ ஹ
தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன்
இவ்விதம் கூறுகிறான் .
என்று சொல்லித்தான் பாறை எழுத்துகள், கல்வெட்டு லிகிதங்கள் காலம் காலமாகத் தாண்டி வந்து, கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத போஸ்ட்மேனால் நமக்குத் தரப்பட்டு நாமும் அதைப் படிக்கின்றோம். தேவர்களுக்குப் பிரியன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டான். ஆனால் படிக்கும்தோறும் நமக்குப் பிரியமான அரசனாக அசோகன் ஆகிவிடுகிறான். அவனுடைய லிகிதங்களில் காணப்படும் இதய சுத்தமான அக்கறை, கருத்து நம்மைக் கலங்கச் செய்துவிடும்.
”தேவர்களுக்குப் பிரியனானவன் இங்ஙனம் _ஆக்ஞாபிக்கிறான் . நற்
காரியங்களில் விசேஷ ஊக்கம் செலுத்தாமல் இரண்டரை வருஷங்களுக்கு மேலளவும் நான் உபாஸகனாயிருந்தென். இப்போது ஒருவருஷமாக ஸங்கத்திற் சேர்ந்து மிகுந்த ஊக்கத்தோடு உழைத்துவர எனக்கு நேரிட்டிருக்கிறது. இது வரையும் தேவர்களை அனுசரித்து ஒழுகா மனிதர் இப்பொழுது ஜம்பூத்வீப முழுவதும் தேவர்களை அனுசரித்து ஒழுகிவருகின்றனர். இது எனது உழைப்பின் பயனாகும் . .இத்தன்மை பெருமுயற்சியின்றிக் கிடைக்கக்கூடியதன்று. ஆனால் சிறியோரும் தமது உழைப்பால் மறுமையின் க்ஷேமத்தை யடையலாம். - இதனாலன்றோ “சிறியோரும் பெரியோரும் முயன்று வரட்டும் ” என்ற முதுமொழி ஏற்பட்டுள்ளது. என் அயலாரும் இப்போதனையை உணர்ந்து இத்தகைய நன்முயற்சியை அழியாதபடி நிலைநாட்ட வேண்டும் . இவ்வுத்தேசம்
கட்டாயமாய் வளரும் . இன்னுமின்னும் பல மடங்கு பயனளிக்கும்.”
“ தேவர்களுக்குப் பிரியனானவன் இப்படிச் சொல்லுகிறான் . தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்யவேண்டும். எல்லா ஜீவப் பிராணிகளுக்கும் அனுதாபம் ஸ்திரமாக ஏற்படவேண்டும் . சத்தியமே பேசவேண்டும் . தர்மத்தில்
உபதேசிக்கப்பட்டுள்ள போதனைகள் இவையே. மேலும் சீஷன் ஆசாரியனைக் கண்ணியஞ்செய்யவேண்டும், உற்றார் உறவினருக்குத் தகுந்த மரியாதை செய்யவேண்டும் . இது தீர்க்காயுளைத் தரும் . இது பிராசீன சம்பிரதாயம். இதன்படி, மனிதன் நடக்கவேண்டும்.”
“ மகதத்து அரசன் பியதஸி, ஸங்கத்தை நமஸ்கரித்து அவர்கள் சுகமும் ஆரோக்கியமும் அடையவேண்டுமென்று விரும்பிக் கூறுவதாவது. ’புண்ணியவான்களே ! புத்தர், தர்மம்; ஸங்கம் என்பனவற்றில் எனக்குள்ள விசுவாஸ வெகுமானமும் நம்பிக்கையும் எவ்வளவு அதிகமென்று உங்களுக்குத் தெரியும். புண்ணியவான்களே! பகவான் புத்தரால் கூறப்பட்டுள்ள யாவும் மிகச் சிரேஷ்டமாகவே கூறப்பட்டிருக்கின்றன. புண்ணியவான்களே! நான் உங்களுக்கு, ஒரு வாக்கியத்தைச் சுட்டிக்காட்ட அனுமதி கொடுப்பிர்களானால் அது “ஸத் தர்மம் , சாசுவதமாய் நிலைநிற்கும் ’' என்பதே. ....”
“தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் ஆக்கினையாக இத்தர்மலிகிதம் வரையப்பட்டது, இங்கே (என் தலைநகரத்தில் ) யாதொரு பிராணியையும் பலியாகங்களுக்காக வதை செய்யக் கூடாது. ஸமாஜங்களில் நடக்கும் விருந்தும் தவிர்க்கப்படுகிறது. ஏனென்றால் ஸமாஜங்களில் பலவித தோஷங்களுண்டென்று தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசனுக்குத்
தெரியும். ஆனால் சிற்சில ஸமாஜங்கள் நல்லவையென்று அவர் அபிப்பிராயப்படுகிறார். முன் தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அாசனின்
மடப்பள்ளியில் லக்ஷக்கணக்காகப் பலவித உயிர்ப் பிராணிகள் கறிக்காக வதை செய்யப்பட்டு வந்தன. இக் கட்டளை இடப்படும் இச் சமயமும் தினமும் மூன்று பிராணிகள் கொல்லப் படுகின்றன. அவையாவன, இரண்டு மயில்களும் சிலவேளைகளில் அதிகப்படியாக ஒரு மானும். இனிமேல் இம்மூன்று பிராணிகள் கூட வதைசெய்யப்பட மாட்டா.”
“அண்டை அரசர்கள் நாடுகளிலும் எல்லா இடத்தும் தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் சிகித்ஸைக்காக இருவித ஏற்பாடுகள் செய்திருக்கிறான்; அவையாவன, மனிதருக்கு வைத்தியசாலை மிருகங்களுக்கு வைத்தியசாலை. மேலும் மனிதருக்கு உபயோகமானதும், மிருகங்களுக்கு உபயோகமானதுமான மருந்து மூலிகைகள் எவையோ அவை கிடைக்குமிடங்களிலிருந்து எங்கெங்கு கிடைக்கவில்லையோ அவ்விடங்களுக்குக் கொண்டுவரப்பட்டு பயிர் செய்யப்படுகின்றன. கனி காய் கிழங்கு வகைகளும் வரவழைக்கப்பட்டுப் பயிராகின்றன. மனிதருக்கும் மற்றப் பிராணிகளுக்கும் செளக்கியத்தைக் கொடுப்பதற்காகப் பாதையோரங்களில் கிணறுகள் வெட்டவும் நிழல் கொடுக்கும் மரங்கள் வளர்க்கவும் செய்யப்படுகின்றன.”
“.... தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசனது புத்திரர்களும் பெளத்திரர்களும் பெளத்திரரின் பிள்ளைகளும் கல்பாந்த காலம் வரையும் தர்மத்திலும் சீலத்திலும் வழுவாது நிலைநின்று தர்மத்தைப் போதிக்கக் கடவர், தர்மத்தைக் கற்பிப்பது உயர்ந்த காரியமே, சீலமில்லாதவன் தா்மத்தைத் தழுவி ஒழுகுவது கஷ்டமாம். ஆயினும் இவ்விஷயத்தில் மனிதன் உள்ளம் சீர்திருந்துவதும் முன்னிலும் கெடாமலிருப்பதும் இரண்டும் சிறந்ததே. மனிதர் தம் குணத்தை அதிகரிக்க முயல்வதற்கும், குணம் குன்றுவதைத் தடுப்பதற்குமே இது எழுதப் பட்டுள்ளது. தேவர்களுக்குப் பிரியமான பிரியதர்சி அரசன் முடிசூடி பன்னிரண்டு வருடங்களான பின் இங்ஙனம் வரையச் செய்தார்.”
”தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் இப்படிச் சொல்லுகிறான் . நன்மைகள் செய்வது மிகக் கஷ்டம் . நற்கருமங்களைத் தொடங்குகிறவன் வெகு சிரமமான காரியத்தைச் செய்கிறான். பல நற்கருமங்கள் என்னால் செய்யப் பட்டிருக்கின்றன. என்னுடைய பிள்ளைகளும் பேரரும் யுகத்தின் முடிவுகாலம் வரையும் இவ்வண்ணமே நடப்பாராகில் சுகருதம் செய்தவராவர் . எவன் ஒருவன் தனது கடமையை அசட்டை செய்கிறானோ அவன் பாபத்தைச் சம்பாதித்துக் கொள்ளுகிறான் . பாபம் செய்வது நிரம்ப சுலபம். ஆதிமுதல் இதுவரையும் தர்மமகாமாத்திரர் என்ற அதிகாரிகள் கிடையா. நான் , முடிசூடி. பதின்மூன்று வருடங்கள் சென்ற பின் தர்மமகாமாத்திரரை நியமனஞ் செய்தேன். எல்லா மதத்தினருக்கும் தர்மத்தைப் போதித்து, தர்மத்தைச் சேர்ந்த விஷயங்களைக் கவனித்து மேற்கெல்லைப் புறமுள்ள யவனர் காம்போஜர் காந்தாரர் ராஷ்டிரிகர் பிதேனிகர் முதலியோரையும் நோக்கி, இவர் பிரவிர்த்தி செய்து வருகின்றனர். சேவகர் பிராமணர் பணக்காரர் ,
அனாதைகள் , கிழவர் முதலியோருக்குத் தர்மத்தை யனுசரித்து உதவிகள் புரிந்து தர்மத்தை அனுசரித்தவர்களைக் கவலையிலிருந்து நீக்கி உதவுவதற்காகவும் இவர் பிரவிர்த்தி செய்து வருகின்றனர். வயதுசென்றவராத
லாலோ, அல்லது பிள்ளை குட்டிகளுடையவராதலாலோ, அல்லது குற்றமில்லாதவரென்று மதிக்கப்படுவதாலோ, கைதிகளையும் குற்றவாளிகளையும் விடுதலைசெய்ய சிபார்சு செய்து அவர்களைக் கவலைகளிலிருந்து நீக்கி இவர் பிரவிர்த்தித்து வருகின்றனர்.”
“... கொஞ்சமும் காலதாமதமின்றி விஷயங்களை உடனுக்குடன் எனக்கு அறிவிக்க வேண்டும் . இதுவே எனது ஆக்ஞை. எனது ஜாக்கிரதையிலும் அரசாட்சி விஷயமான ஊக்கத்திலும் நான் ஒருபோதும் திருப்தியடைகிறதில்லை. நான் சகல ஜனங்களுடையவும் நன்மையை கருதக்கடவேன். இதற்கு மூலகாரணம் ஜாக்கிரதையும் ஊக்கமுடைமையுமே. சகல ஜனங்களுடையவும் நன்மையைக் கருதுவதைவிட மேன்மையான கருமமில்லை. எதற்காக நான் இங்ஙனம் பிரயாசையுடன் முயன்று வருகிறேன்? ஜீவராசிகளுக்கு நான் செலுத்தவேண்டிய கடன் செல்லாவதற்கும் சிலருக்கேனும் இம்மையில் சுகமும் மறுமையில் சுவர்க்கமும் கிடைப்பதற்குமேயாம் . இதற்காகவே இந்த தர்மலிபி வரையப் பட்டிருக்றெது. எதற்காக? என் கட்டளை நெடுங்காலம் நிலைபெறவும் என் புத்திரரும்
பெளத்திரரும் இவ்விதமே உலகத்தின் க்ஷேமத்திற்காக உழைத்து வருவதற்ருமே. விசேஷமான ஊக்கமிருந்தாலன்றி இது கஷ்டமான காரியம்.”
“தேவர்களுக்குப் பிரியனான பிரியதரிசி யரசன் எல்லா இடங்களிலும் சகல மதத்தோரும் சேர்ந்து வாழவேண்டுமென்று விரும்புகிறான். ஏனெனில், எல்லா மதங்களும் அடக்கமுடைமையும், மனத்தூய்மையும் அவசியமென்று சொல்லுவதில் ஒத்திருக்கின்றன. ஆனால் , மனிதர் தம் மனப் போக்கிலும் பலவிதமாயிருக்கின்றனர்; இச்சைகளிலும் பலவிதமாயிருக்கின்றனர். சில மதத்தினர் (என் கட்டளைகளை) முற்றிலும் பின்பற்றலாம் . மற்ற வகுப்பார் சில பாகங்களைப் பின்பற்றலாம். அளவற்ற ஈகை எல்லோருக்கும் சாத்தியமில்லை; ஆனாலும் அடக்கமுடைமை, மனத் தூய்மை, செய்ந்நன்றியறிதல், ஸ்திரபுத்தி இவை எக்காலத்தும் உயர்வைத் தருகின்றனவாம்.”
“தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் எல்லாமதத்தினருக்கும், இல்லறத்தார் துறவிகள் எனப் பாராட்டாமல் கொடைகள் அளித்து பூஜை மரியாதைகள் செய்து வருகிறான் . தேவர் பிரியன் வற்புறுத்துவது என்னவென்றால் , தானம் முதலிய வெளி மரியாதைகள் பாராட்டப்படவேண்டுமென்றல்ல, சகல மதங்களுக்கிடையிலும் சமரசபாவம் உண்டாக வேண்டுமென்பதே. சமரசபாவம் என்பது பலவிதமாகும். அதற்கு மூலாதாரம் சொல்நெறியே. அஃது எப்படிப்பட்டதென்றால், காரணமின்றிப் பிறர்மதங்களைத் தூஷணை செய்வதையும் சுயமதத்திற்குப் பக்ஷபாதமான
கண்யஞ் செய்வதையும் தவிர்த்தலே. சகல மதங்களிலும் ஓர் விஷயத்தில் அல்லது மற்றோர் விஷயத்தில் மேன்மையிருப்பதால் புறமதங்களுக்கு எல்லோருடைய மரியாதையும் உரியது. ... ஆனால் சமதிருஷ்டி மிகுந்த
சிலாக்கியம் அது என்னவெனின், நம் கக்ஷியைச் சேராதாரின் மதபோதனைகளுக்குச் செவிகொடுத்து நாம் அவற்றை மதிக்கவும் வேண்டும் .
தேவர்பிரியன் விருப்பம் இதுவே: எல்லா மதத்தினரும் ஆழ்ந்த கல்வி கேள்வியுடையோராய், பரஸ்பர அன்புடையோராய் வாழ்ந்துவரவேண்டும். இதுபற்றி எல்லா மதத்தினருக்கும் பின்வரும் அறிக்கை செய்யப்படுகின்றது, தேவர்பிரியன் வெளிவேஷமான தானமரியாதைகளை விட சகல சமயங்களுக்குள்ளும் சமரச பாவமும் பக்திபகுமானமுமே முக்கியமென
நினைக்கின்றான். “
இப்படிப் பட்ட அரசனின் வார்த்தைகளைப் படிக்கும் எவரும் வியப்பில் ஆழ்ந்து போகாமல் இருக்க முடியாது.
(குறிப்பு - அசோகனுடைய சாஸனங்கள், கும்பகோனம் காலேஜ் சரித்திர ஆசிரியர், R ராமய்யர், சென்னை ஸி குமாரசாமி நாயுடு ஸன்ஸ், 1925)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
ஆஹா!
ReplyDelete