Tuesday, March 1, 2016

சப்த வசுக்கள் (சிறுகதை)

மொத மொதல்ல ஒரு தலைச்சன் பொறந்துது. எண்ணி ஏழே நாள்தான் இருந்துது. ...ப்ச்...அப்பறம்...பாவம்... இந்த வார்த்தையில் பழகித்தான் வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் போயிருக்கின்றன அவனுக்குதங்களுக்கெல்லாம் முந்தி வந்து மூவிரு நாள் இருந்து சென்று விட்ட அந்த ஜீவன் இன்று எங்கு இருக்கும்ஒரு வேளை தங்களிலேயே யாராகவேனும் கூடப் பிறந்திருக்குமோ? ஒரு தடவை எல்லாரையும் கூர்ந்து கவனித்தான். தன்னையும் எதேச்சையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். ஏதோ அப்படி இருந்தாலும்இதோஎன்று தெரிந்துவிட சாத்தியம் ஏதோ அங்கு இருக்கும் பாவனை

இருப்பாரைக் கவனி. இல்லாதாரைப் பற்றி என்ன யோசனைஅவன் குடும்பத்திலேயே பலமுறை அவனுக்கு சொல்லப் பட்டதுண்டு. ஆனாலும் அந்த தலைச்சன்சிறு வயதில் பாச்சுவாத்தில் அவனுக்குத் தங்கை பிறந்திருக்கிறது என்று செய்தி. பாச்சு ஏதோ முக்கியத் தகவல் இவனுக்கு மட்டும் முதல் தகவல் கொடுக்கும் வேகத்தில் வந்து சொல்லிய பின் மூன்று நாள் கழித்து அவர்கள் வீட்டில் ஏதோ தூளி போல் கட்டிப் புறப்பட்டார்கள்

இவனும் பாச்சுவோடு சேர்ந்து துக்கம் காத்திருக்கிறான்ஒரு தடவை, இரண்டு தடவை பொறுத்துப் பார்த்தாள் அம்மாஎன்னடா இது சும்மா அதைப் பத்தியே பேசிண்டு? வேலையைக் கவனி. அவாளெல்லாம் பெருமாள்ட சௌக்கியமா போய்ச் சேர்ந்திருப்பாஇருக்கறவாதான் ஐயோ பாவம். போனவா புண்ணியம் செஞ்சவா. அதுவும் பொறந்து கண்ணு முழிக்காம போயிட்றது எல்லாம் கொடுத்துவச்சதுகள். என்னமோ அதையே பெனாத்திண்ட்ருக்க? படிக்கற வேலையைப் பாரு.’ அவன் பேசுவதைக் கேட்க அப்பாவுக்குப் பிடிக்கும். சந்திர கதி சூர்ய கதி என்று ஒருவாறு அதன் பயணகதியை ஃபிக்ஸ் பண்ண முயல்வார்அதற்குள் அம்மா, ‘போய் கறிகா இல்லை. வாங்கிண்டு வாங்கோஎன்று துரத்திவிடுவாள்ஆனாலும் அந்தத் தலைச்சன் அங்கு எங்கோதான் சுற்றிக் கொண்டு இருக்கும்

மாலை நேரம். வெளியில் விளையாடி விட்டு வந்து கைகால் அலம்பிக்கொண்டு வீட்டுப் பாடம் படிக்க உட்காரும் வேளையில் அம்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வு. பழைய நினைவுகள் ஏதேனும் எழுந்துகொள்ளும். அந்த நினைவுகளைக் கொஞ்சம் எடுத்துத் தூசி தட்டி வைக்கும் போது அங்கு எங்கோ இடுக்கில் இந்தத் தலைச்சன் உட்கார்ந்திருக்கும். கொஞ்ச நேரம் அதை லாலனை பண்ணுவாள்அவன் பாடத்தை நிறுத்திவிட்டு உற்றுக் கேட்கிறான் என்றதும் பேச்சை மாற்றி விடுவாள்

எதிர்த்த வீடு. அவர்களாத்து டேச்சு கதை கதையாய்ச் சொல்வான். எந்த மரித்த ஜீவன் தங்காத்தில் பின் எந்த ஜீவனாக வந்து பிறந்தது என்று துல்லியமான விவரம் காட்ட அவனால் முடியும். தயவு அவன் கிராமத்துத் தாத்தா ஒருவர்ஏன் ஒரு ஜன்மத்தில் எங்கோ பொறையில் ஒளித்து வைத்துப் போன காதுக் கம்மலை அடுத்த பேத்தியாகப் பிறந்து நினைவாக இங்க இருக்குன்னு எடுத்துத் தந்ததாக டேச்சு சொல்வதைக் கேட்டால்தான் நம்பமுடியும்இருந்தாலும் அவர்கள் வீட்டில் மூன்றாவது குழந்தை, நாலு வயசு, அழகான பெண் குழந்தை, அதன் சிரிப்பு என்பது சர்வ ஆகர்ஷணம். காரணம் என்ன என்று தெரியவில்லை. இப்படித்தான் கேள்விக்குறியாகிப் போனது. நேர்த்திக்கடன் பாக்கி. அதுக்குத்தான் வசூல் என்று அப்பொழுதும் டேச்சு ஃபைலைக் க்ளோஸ் பண்ணிவிட்டான்

ஒரு நாள் டேச்சு, இவன், கண்ணாமணி, விச்சு எல்லாரும் சேர்ந்து இரவு 8 மணி வரையில் துளசிங்கத்தாத்துத் திண்ணையில் இருட்டுப் புறை ஒட்டுத் திண்ணையில் சீரியஸான டிஸ்கஷன். ஆவி இருக்கா இல்லையாவழக்கம் போல் டேச்சுதான் ஆவிக்குக் குலம் கோத்திரம், சயனம் சஞ்சாரம் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டான்ஒரு நாள் காலை 2 மணிக்குத் தெரு வழியாகவே ஓர் ஆவி போனதையும், அது இவன் முழித்திருக்கிறான் என்று உணர்ந்து இவாத்துக் குறட்டை உற்றுப் பார்த்து முழித்ததாகவும், உடனே டேச்சு சம்யோசிதமாகக் குறட்டை விடும் சப்தத்தை அபிநயிக்கவே அது சரிதான் என்று சாந்தமாகி டேச்சுவாத்து லைட் கம்பம் வழியாகப் பிடித்துக் கொள்ளாமலேயே ஏறி மாடிப் பக்கம் எங்கோ போய் விட்டதாகவும் கூறினான்

இவன் வுட்டா ரீலு உடுவாண்டா இவன்என்று கண்ணாமணி கடுப்பாகிக் கத்தியதற்கு டேச்சு முனீஸ்வரன் மேலயே சத்யம் செய்துவிட்டான். அதற்கப்புறம்தான் ஆவி என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது இவனுக்கு

விச்சுவுக்கு ஏன் திடீரென்று தோன்றியதோ, கட்டைக் குரலில், ‘ஏய்! நாம சுடுகாட்டில சத்தம் போடாம ஒரு மந்திரம் சொல்றேன் அதைச் சொல்லிண்டே போய் நின்னா நிச்சயம் இதெல்லாம் அங்கதாண்டா வரும். அப்ப பார்த்துடலாம். ஆனா இந்த டேச்சுவைக் கூட்டிக்கிட்டுப் போகக் கூடாதுடா. சமயம் பார்த்து டமார்க் குசுவை விட்டான்னா அவ்வளவுதான் அதெல்லாம் கடுப்பாயிடும். துரத்த ஆரம்பிச்சுடும் அப்பறம்.’ 

டேச்சு உத்தரவாதம் தந்ததன் பேரில் உளவுப்படை மறுநாளே புறப்பட்டுப் போய்ப் பதுங்கிப் பதுங்கிச் சுடுகாட்டை அடைந்ததுகொஞ்சம் முன்னாடியே வந்து விட்டதாக அலுத்துக்கொண்டான் டேச்சு. இரவு 11.45 மணி இருக்கும்இவனுக்கு அந்தத் தலைச்சன் அங்குதான் எங்காவது தென்படும் என்ற நிச்சயம் அதிகப்பட்டது

டேச்சுவுக்கு முழிகள் முகத்தைவிட்டுத் தனியே வந்துவிட்டன என்பது போலத்தான்
உளவுத்துறைக்கு வெளிப்படையாகவே உதறல். எல்லாம் டேச்சுவால் என்று பொதுப் பழி

நான் என்னடா பண்ணட்டும். விச்சுதாண்டா சொன்னான்என்று தொண்டையோடு தொண்டையாக ரகசியமாக அரைத்தான். ஆவிகளின் காதில் விழுந்திருக்காது1.30, 2 மணி இருக்கும் மண்டபத்தை ஒட்டிய இருட்டுத் திட்டு திடீரென எழுந்துகொண்டது. எவ்வளவு கைகள் என்று நிச்சயமாகத் தெரியவில்லை. அப்படியும் இப்படியும் நகர்வுஐய்யயோ இந்தக் கூட்டம் இருப்பது பார்த்துவிட்டதா? இந்தப் பக்கம் நோக்கியே வருகிறதுகண்ணாமணிக்கு அடக்க முடியவில்லை. வாய் தந்தி. முதலில் வாங்கடா என்று ஓட ஆரம்பித்தவன். கூட்டமே அவன் பின்னால் மந்திரித்து விட்டால் போல்

ஏய் இங்க என்னடா இம்மா நேரத்துல பண்றீகளூ?’ என்று அது கேட்கிறது. இவனுக்கு அந்தக் குரல் ஆரடிக் குரல் போல் இருக்கிறது. ‘ஆரடி?’ ஆரடி?’ என்று ஒரு பைத்தியம். பாவம் வாழ்ந்து பின் கெட்டு, துரத்தப்பட்டு, ஜீவனம் பிடுங்கப்பட்டு, நிம்மதியாகத் தூங்கச் சுடுகாடு புகலிடம்
ஒரு வேளை இதனிடமே கேட்கலாமோ அந்தத் தலைச்சன் பற்றி. ஏய் சீக்கிரம் வாடா..... 

மற்ற எல்லாரும் பக்குவமாகப் போய் செட்டில் ஆகிவிட்டார்கள். இவன் தான் கொஞ்சம் கவனப் பிசகில் சத்தம் வர, ஏய் யாரது? என்பதைத் தொடர்ந்து லைட்டுகள் போடப்பட்டு, இவன் என்னமோ நிதானமாக விளக்குபவன் போல்நான் தான் கதவைத் திறந்துண்டு வந்தேன்என்று சொல்ல, பிறகு பெரிய இன்வெஸ்டிகேஷன், எதிர்வீட்டு மாமா, வீட்டில் உள்ளவர்கள், வாசலில் ஒண்ணுக்குப் பெய்ய வந்த கிழவர் -- ஐம்பேர் ஆயம், எண்மர் குழுவாக ஆகி, தெருச் சட்ட சபை ஆக இருந்தது. நல்ல வேளை. யாருடைய குரலோஎல்லாம் நாளை காலையில் பார்த்துக் கொள்ளலாம்என்ற தீர்ப்பில் கலைந்து போனது

மறுநாள் இவனின் தகப்பனாரும், தாயும் துயரக் காட்சியாய் அழாக் குறையாகக் கேட்டார்கள். டேச்சு, கண்ணாமணி இன்னும் மற்றவர்களின் வீட்டுப் பெரியவர்களும் இவன் வீடு தேடி வந்துவிட்டனர். ‘இந்தப் பசங்க போக்கே ஒன்னும் சரியில்லை’ 

என்ன சார்! ராத்திரி எழுந்து சுடுகாட்டுக்குப் போயிருக்கானுக

என்னடா என்ன குறை வைச்சோம் உங்களுக்கு 

வந்து பொறந்துருக்கு பார் போன ஜன்ம கர்மம்

ஏண்டா நீயாவது இவாளுக்குச் சொல்லக் கூடாதோ? நீயும் சேர்ந்து போனியா

என்ன அம்மக்கள்ளனாட்டம் உம்முனு இருக்காத. சொல்லு

இல்ல அந்தத் தலைச்சன் அங்க இருக்குமான்னு பார்க்கப் போனேன்

அதான் அதான் இவனுக்கு அதே பல்லவிதான். என்ன கர்மாந்திரமோ.....பெத்தவ நானே மறந்துட்டு ஒக்காந்திருக்கேன்உனக்கு என்னடா வழுச நாயி...தலைச்சன்.....மண்ணாங்கட்டின்னு. எங்க பாவத்தைக் கொட்டிக்கறதுக்குன்னே வந்து தொலைச்சிருக்கியா

அது பாருங்கோ....சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்துருக்கா,,,பசங்க...ஏதாவது சாங்கியம் பண்ணிட்ங்கோ...ஏன் சொல்றேன்னா..... 

ஓய் சும்மா இதான் சாக்குன்னு ஏதாவது கதை பண்ணாதீர் சாங்கியம் அது இதுன்னு...வேலையைப் பாரும்.... நீர் ராத்திரி ஆச்சுன்னா அப்பப்ப அங்க சுடுகாட்டுப் பக்கம் தானே ரகசியமாப் போயிட்டு வரீர். உமக்கு என்ன சாங்கியம் பண்ரது?..... 

சு ...சு சூ ....பேசாம....எதாவது கிண்டியாய நமன்னு சொல்லிவுட்றீரே..... 

எந்தச் சம்பவமும் போன்றே சுடுகாட்டுச் சம்பவமும் சூடு தணிந்து அன்றைய பொழுது மாறி மாறிப் போய்க் கொண்டிருந்ததுமாலையில் தெருமுக்கில் கதாகாலட்சேபம் ஆரம்பம். இவனையும் கூட்டிக் கொண்டு இவன் தந்தை அங்கு போகும் சமயத்தில் சந்தனு கங்கை கெட்டம். அஷ்ட வசுக்கள். சாபத்தால் பிறந்து, உடனே அவளால் கொல்லப் பட்டு, எட்டாவது மிஞ்சியது

மிஞ்சின வசு பீஷ்மர்......... 

இவனுக்கு மீண்டும் தலைச்சன் பிரச்சனைஆம் அந்தத் தலைச்சன்கள் ஏழு பேர் என்ன ஆனார்கள்? அந்த எட்டாவது பீஷ்மனுக்கு இந்தக் கேள்வி எழுந்திருந்திருக்குமாஇப்படி அங்கங்கே பிறந்து உடனே பதிவு இல்லாமலேயே இறந்து மறையும் இந்த மாதிரியான ஸப்த வசுக்கள் என்ன ஆகின்றார்கள்தலைச்சனும் ஸப்த வசுக்களாய் ஆகியிருக்குமோ

கதையிலிருந்து திரும்பி வரும் போது ஆரடிப் பைத்தியம் கத்திக்கொண்டு இருந்தது கந்தன் கடையின் பக்கம்.... 

அந்தக் கெட்ட பசங்களோட சேராத.....’ 

*** 
(20 - 2 - 2011)

Monday, February 29, 2016

காலை இளம் வெயிலின் முற்றம்

மென்மையான 'வெஜிடேரியன் நகைச்சுவை உணர்வை' எப்படி வெளியிடுவது?

பெரும் அரசியல் சித்தாந்தங்கள், மத ரீதியான வாத ப்ரதிவாத (வேண்டாம் எங்கு நிறுத்தறதுன்னு தெரியல்லை), அன்றாட சமுதாயச் சீர்கேடுகள், அலற வைக்கும் பொருளாதாரச் சீரழிவுகள் -- சார் சார்! வேண்டாம் சார்.

இப்பொழுதுதான் காலையில் எழுந்து உட்கார்ந்து விடிந்த உலகத்தைப் பார்த்து ஒரு கொட்டாவி விட்டு, ஒரு கப் டீ குடித்துக் கொண்டிருக்கிறேன். அல்லது

மாலையில் ஆஞ்சு ஓஞ்சு வந்து ஒரு கப் டீ அல்லது காபி குடித்துக்கொண்டே ஏதாவது மென்மையான நகைச்சுவை மிளிரும் இலக்கிய மிளகு ரசம் ஏதாவது சிப் பண்ணிக்கொண்டே.... இந்த மாதிரி நீங்க நினைப்பதுண்டா தெரியவில்லை. ஆனால் நான் நினைப்பதுண்டு.

அந்த நேரத்தில் ஏதாவது பெரிய சித்தாந்த பண்டிதர்களோ புரட்சி வீரர்களோ வந்தால் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிப் போய் ஒளிந்துகொண்டுவிடுவேன். 'கோழைப் பையா! கோழைப்பையா என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆளை விடுங்கப்பா...

அப்படிப்பட்ட தருணங்களில் சில விதமான எழுத்தாளர்களின் எழுத்துகள் மிகவும் தருணத்துக்கு இசைந்து மிக நளினமாகவும், அமைதியாகவும் ரசிக்க வரும். மார்க் ட்வெயின் ஓர் எழுத்தாளர். பழைய எஸ் வி வி ஒருவர். இன்னும் பலர் ஐரோப்பா, ப்ரெஞ்சு, அமெரிக்க, நம் நாட்டு தமிழ், இந்திய ஆங்கில (குறிப்பாக ஆர் கே நாராயணன்) இன்னும் பலர். ஜெரோம் கே ஜெரோம்.

(என்ன டேஸ்டுய்யா உன்னுது? சீரியஸ் எழுத்தாளன் சீண்டுவானா நீ சொல்ற ஆட்களையெல்லாம்? -- I don't care :-) You may or may not accept this as a genre in itself. But I have these in my register of my privacy)

இதில் தனிப்பெரும் இடம் வகிப்பவர் நமது மிடில் க்லாஸ் ஸ்ரீமான் பி ஜி வோட்ஹௌஸ் என்னும் P G Wodehouse.

அவரைப் பற்றிய ஒரு நல்ல வீடியோ பார்த்த நினைவு தேநீரோடு கமழ்கிறது. 




பண்டைய கிரேக்கம் ஏதன்ஸ், அரிஸ்டாடில், ப்லாட்டோ, ஹோமர் என்ற நினைவு மணங்கள் கமழ இருப்பது.

இன்றைய கிரேக்கம் எப்படி? என்பதற்கு ஓரு திசை காட்டியாகச் சினிமா உலகில் இருந்தவர் தியோ ஆஞ்ஜலோபோலஸ். Theo Angelopoulos. ஹாலிவுட் சினிமாத்தனத்திற்கு ஒரு மாற்றமாகத் திகழ்பவை தியோவின் இயக்கக் காட்சிகள். அமைதி, இயல்பு, ஆழ்ந்த நிதானம் இவை காமிராவின் கண்களிலும் நிரம்பியிருக்கலாம் என்று காட்டியவர் தியோ.

கவிதையும், தத்துவமும் அவசர் அடி உலகின் ஆரோக்கியமான மாற்றாக இருக்க முடியும் என்பதை சினிமா வாய்பாட்டை மாற்றிக் காட்டியதின் மூலம் கிரேக்க சினிமாவை ஓரடி முன்னெடுத்துச் சென்றவர் தியோ ஆஞ்ஜலோபோலஸ்.

அவருடைய Eternity and a Day என்னும் படத்திலிருந்து ஒரு காட்சியைப் பார்த்த நினைவு.


*

பழம் பழைய இசை எப்படி இருக்கும் கேட்பதற்கு?

யாரேனும் வாசிப்பார்களா?

சிலப்பதிகாரத்தில், சங்க இலக்கியத்தில் பாணர்கள் வாசித்த அந்தச் சீறியாழ் இசையைக் கேட்க முடியுமா? (விபுலாநந்த அடிகளே! எங்கு இருக்கீங்க...)

இசைக் குறியீடு கொண்டு முழுமையாக ஒரு பழம் பாடல் மாட்டியிருக்கிறது முழுமையாக.

கிரேக்க இசை.

ஸெயிக்லோஸ் என்பவர் தமது மனைவி.. காதலி?.. தெரியவில்லை.. அவளுக்குத் தெரிவிப்பதாக நான்கு வரி -

கானல்வரி என்பது போல் இதைக் கிரேக்கவரி என்று சொல்லிவிடலாமா?

வாழும்வரை சுடராய்
வருந்தாதே திகழ்வாய்
வாழ்வதுவும் புன்கணமே
காலத்தின் துர்குணமே 


இவ்வாறு இதை மொழிபெயர்த்துக் கொள்ளலாமா?


*

'ஐயோ பாவம் ஜீவன்கள்' என்று உலகத்தில் சில ஆட்கள் உண்டு.

யாரென்று பார்க்கிறீர்களா? புத்தகங்களைக் காதலிக்கும் பைத்தியங்கள்.

புத்தகக் காதல் எவ்வளவு பெரியது என்பது உங்களுக்குத் தெரியாது. அதில் அடிபட்ட ஆட்களுக்குத்தான் அந்த ரணம், அல்லது அந்தச் சுகம் புரியும். (சரி..சரி.. நீ அப்படிப்பட்ட ஆள்தானே.. என்று முறைக்காதீர்கள்... நான் தான் மறுக்கவில்லையே )

வாழ்க்கை ஒழுங்காத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் பாருங்கள் திடீரென்று இந்தப் புத்தகக் காதலில் விழுந்துவிட்டால்... ஓமை காட்.... அப்புறம் வாழ்க்கையில் எதுவுமே பெரிதில்லை.

அந்த அருமையான ஜாக்கெட் போட்ட.. அதோ அங்க இருக்கே.. அதுதான்... பார்த்தால் கொஞ்சம் க்ழிந்த ஜாக்கெட் மாதிரி இருக்கில்ல... வோவ்வ்வ்வ் என்ன ப்யூட்டி....!

இதெல்லாம் இந்த மாதிரிப் பைத்தியங்களின் காதல் வசனங்கள். மறுபக்கம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு பக்கம் மட்டுமே கண்ணில் பட்டதென்றால் உங்களுக்கு இவர்கள் பெரிய காமுகர்களோ என்று முகம் சுளிக்கத் தோன்றும். ஆனால் பாருங்கள்... பரிதாப ஜீவன்கள்.... பழம் புத்தகக் கடையில் அட்டை பிய்ந்தும், புது அட்டையுடனும் இருக்கும் நூல்களை இதுகள் விவரிக்கும் லட்சணம்... ராமா ராமா...

இதோ ஒரு பத்து நிமிஷம் அந்தப் புத்தகக் கடையில் நுழைந்துவிட்டு வந்துவிடுவோம். ஒரு புத்தகம் தேடிக் கொண்டிருக்கிறேன்... ஜஸ்ட் அது இருக்கான்னு மாத்திரம் கேட்டுவிட்டு.... நான் பண்ணும் இந்த மாதிரியான அப்பவித்தனங்களுக்கு இரையாகி என் நண்பர்கள் நொந்து நூலாகிப் போன கதைகள் இருக்கின்றனவே... ச்சோ ச்சோ.. அப்புறம் எனக்கே அசிங்கமாக இருக்கும்... ச என்னடா இது... கொஞ்சம் கூட கன்ஸிடரேஷனே இல்லாமல்... சீ.. ஆனாலும் அந்த கட்டு குலைந்தும் கட்டு குலையாதும் இருக்கும் சாகசக்காரி கண்ணில் பட்டுவிட்டால் ம்ம்ம் மானம் அவமானம்.. கருணை.. நயம்.. எல்லாம் அம்பேல்.

பத்து புத்தகங்களைக் கையில் அள்ளிக்கொண்டு வேர்க்க விறுவிறுக்க நான் ஏதோ இன் டைம் கீப் பண்ணால் போல் நண்பருடன் சேர்ந்து கொள்ளும் போது, சபித்துக்கொண்டிருந்த அந்தப் பொன்னிதழ்கள் நட்புக்காகப் பாவம் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்து, சகிப்புத்தன்மையில் விரிந்து, இட்ஸ் அ கேம் என்னும் பரந்த மனப்பான்மையில் விகசித்துப் பெரிதாகச் சிரிக்கும் பாருங்கள்... வாவ் லவ்லி காட்சி அதுதான்.

மோகன்! டூ யூ நோ ஹௌ மச் டைம்? யூ டோல்டு மீ 5 மி. நௌ ஈட் இஸ் 3 ஹவ்ர்ஸ்....

ஆனால் அடுத்தமுறை அதே நண்பர்கள் ஏமாற மட்டார்கள். கொஞ்சம் ரெக்யுபரேஷன் டைம் கொடுக்கணும். அதுவரை வேறு தேறிவிட்ட நண்பர்கள்... இல்லை சார்..  ஏஞ்ஜல்ஸ் என்பது எனக்கு என் நண்பர்கள்தான். அவர்கள் என்னைப் பொறுத்துக்கொண்டமைக்கு நான் என் கண்ணீரைத்தான் காணிக்கையாக ஆக்க முடியும். எனக்கு மனைவி இருந்திருந்தால் என்றோ டைவர்ஸ் செய்திருப்பாள். ஆனால் அதுகூட உறைக்காமல் இருந்திருக்கும் -- அப்படிப்பட்ட போதை புத்தகக் காதல்.


*



இந்தியா, ஐரோப்பா - இரண்டும் ஒன்றை ஒன்று, ஒன்றில் ஒன்றை கண்டு வியக்கும் கணங்கள் காலம் நெடுக இருந்து வந்துள்ளது.

விஷ்ணு பக்தி தென் ரஷ்யாவின் கோடி அஸ்ட்ரகானில் 16ஆம் நூற்றாண்டு முதல் 300 வருஷங்கள் செழித்திருந்தது.

பிரான்ஸின் இலக்கிய மாமேதை விக்டர் ஹ்யூகோ ஸ்ரீராமாயணத்தையும், மஹாபாரதத்தையும் கண்டு வியந்தார்.

யூஜின் புர்னோஃப் கொடுத்த வகுப்பு உரைகள் நெடும் பாரதப் படிப்புகளுக்கு வழி வகுத்து, மாக்ஸ் முல்லரைத் தூண்டிவிட்டு ரிக் வேதம் சாயண பாஷ்யத்துடன் திறனாய்வுப் பதிப்பாக வெளிவர வழிவகுத்தது.

பதினெட்டாம் நூற் ரஷ்யாவிலிருந்து கப்பல் ஊழியராய் வந்தவர் சென்னையில் தங்கி இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டுப் பின்னர் கல்கத்தா சென்று அங்கு வங்காள மொழியை நன்கு கற்று புதுவிதமான நாடக இயக்கத்தையே தோற்றுவித்தார்.

மீண்டும் மீண்டும் இந்தியாவும் ஐரோப்பாவும் இதயப் பார்வைகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன பண்பாட்டின் மொழிகளில்.


*

கலையை மனிதன் உண்டாக்குகிறான்.

கலை மனிதனை உண்டாக்குகிறது.

முதல் கலையின் அங்குரார்ப்பணத்தை அவன் மூளையின் இயக்கம் போடுகிறது.

முடிந்த கலையின் முகையிலும் அவன் மூலக்கலையின் மணம் அவிழ்கிறது.

படிந்து வந்த காலம் எல்லாம் அவன் பாவை விளக்காய் ஆகிறது.

கடிந்துவிட்ட வடிவமெல்லாம் அவன் களிப்பின் மிகுதியைச் சொல்கிறது.

கலையின் மொழி அவன் பெருமிதத்தின் பிரதி.

அலையும் அவன் ஆர்வப் புனல் பெருகி வந்த நதி.

35000 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்குலப் பேரெழில் இன்றைய பூசைப் புன்னடிக்குள்ளும் ஒளிந்து மயக்குகிறது.

மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை ஒன்றைத்தான் காதலித்திருக்கிறான்.

கண்கள் மயங்க கருத்து தியங்க ஒன்றுதான் அவன் பித்து.

மனித உடல்.

அன்றாடம் காணும் உடம்பு அன்று.

என்னாளும் நின்று அவனை ஆளும் மனித உடல்.

தன்னிலும் விஞ்சி, தானதை விஞ்சி, தமரிலும் விஞ்சித் தளராமல் மனித குலம் வனையும், புனையும், வடிக்கும், எழுப்பும், நடிக்கும், தீட்டும், பாடும், இசைக்கும் அத்தனை அத்தனை கலை வடிவங்களின் ஒற்றை ஸ்டூடியோ - மனித உடல்.



குகை ஓவியங்களின் மர்மம் என்ன? ஏன் குகையில் வரைவதை நிறுத்தினர்? மூளையின் வண்ணத் திசுக்களைப் பற்றிய மன வைத்தியச் சோதனை தொழில் நுட்பங்களுக்கும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரான்ஸு, ஸ்பெயின் குகை ஓவியங்களுக்கும், ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஆஃப்ரிக்க பழங்குடிகளின் ஓவியத்திற்கும் என்ன சம்ப்ந்தம்?

காட்டுக் கோதுமை அவிழ்க்கும் மர்மம் என்ன?

பூமிக்குள் ராக்ஷஸ தூண்கள் சுழல் படிக்கட்டு போல் போகும் அமைப்பின் மர்மம் இரவில் வெளிச்சமாகும் விந்தை - இவையெல்லாம் பிபிசியின் கலை உலகைச் செய்தது எப்படி என்ற வீடீயோ வெளியீடுகள்.

*

ரஷ்ய கிளாஸிகல் இசைப்பாட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

என்னவோ ஓர் எண்ணம். அங்கு எங்கோ பிறந்திருக்க வேண்டியவன் தவறிப் போய் இங்கு பிறந்துவிட்டேனோ என்று. என்னவோ உள்ளம் மிகவும் சொந்தம் கொண்டாடுகிறது அதைப் பார்க்கும் பொழுது. பைத்தியக்காரத் தனமான எண்ணம். பரவாயில்லை. ஆனால் அங்கு பிறந்திருந்தால் நமது பண்பாட்டை நன்கு புரிந்துகொண்டிருக்க முடியுமா? இங்கு பிறந்தால் எந்தப் பண்பாட்டையும் நன்கு புரிந்துகொள்ள  முடிகிறதே. அதுவோ நமது சிறப்பு! இருக்கலாம். தேவ ரகசியங்களை மிகவும் நோண்ட முடியாது.

அது போகட்டும் நல்ல டீ! இதமாக நன்கு இலைகள் பாந்தமாக நன்கு கொதித்திருக்கின்றன. தொண்டைக்கு நன்கு இதமாக இருக்கிறது. அப்படி ஒ ரு ஸொப்ரேனோவில் எடுத்து விட்டால் எப்படி இருக்கும்! வோவ்....

*


இசை என்பது என்ன?

ஆத்மா என்னும் பறவை தன் சிறகுகளைக் கோதிவிட்டுக்கொண்டு அவ்வப்பொழுது பறந்து, நெட்டுகுத்த நேர்விண் புள்ளியில் குறியாய் விரைந்து, மடங்கி, சிறகுகளைக் கீழே போட்டு மல்லாக்க மண்ணை நோக்கி வீழ்வதைப் போல் வந்து பின் நிரந்து திசை பூசிச் செல்லும் பல் வேறு வேகத் திரை அபிநயங்களால் தன் மகிழ்வில் திளைக்கும் அற்புதமான தனிமைக் கணம்.

இவ்வாறு எந்த இசை நம்மை உணர வைக்குமோ அது இசை. அல்லாதது வசை என்க.

உண்மையான இசைக்கு,
உண்மையின் இசைக்குச்
சொற்கள் வேண்டா.

தடைப்படாத உள்ளத்தின் அவகாசம்தான் வேண்டும். அந்த உள்ளம் என்னும் உள்வானின் பல கதுப்புகளைத் தன்னுள் அமிழ்த்தித் திறக்கும் வல்லபம் இசையின் சுராவளிகளுக்கு இருக்க வேண்டும்.

சில இசைகளைக் கேட்டால் ஏதோ 10 ரூ கைமாத்து விஷயமாக இரண்டு பேருக்கு நடுவில் பயங்கர சண்டை போன்று தோற்றம் அளிக்கும். நீதான் இல்லை நீதான் இல்லை நீதான் என்று மாற்றி மாற்றி லாவணியாகத் திட்டித் தீர்ப்பதற்குள் மனிதனின் பிராணனே ஓய்ந்திருக்கும் பொழுது இசையின் பிராணனைக் கேட்பானேன். அது தான் மிகவும் மானஸ்தன் என்று முன்னரே முடிந்திருக்கும். (கர்நாடக சங்கீதப் பிரியர்கள் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம், அவர்களின் இசையைப் பற்றித்தான் நான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறேனோ என்று).

பனியில் ஸ்கேட்டிங் விளையாடுவார்கள். தான் தான் என்று தன்னை நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கும் வரை தடுக்கி, விழுந்து, தட்டுக் கெட்டுக் கஷ்டம். ஆனால் அந்த பனிப்பாதைகளின் பல்வேறு நோக்குகளையும் வளைவுகளையும் மனத்தில் வாங்கிக் கொண்டு கொஞ்சம் தான் என்பதைக் கழட்டி கிளம்பும் முன் அந்த ஹாங்கரிலேயே விட்டுவிட்டால் போதும் அப்புறம் ஸிம்பனியின் இசைக் கோலமாகத்தான் இழைந்து குழைந்து விர்ரென்று எழுந்து மூவ்மெண்ட்ஸ் போய்க்கொண்டிருக்கும். கடல் நீர் ஸர்ஃபிங் கேட்கவே வேண்டாம்.

இதெல்லாம் இல்லாமல் பாசிபடிந்த குளப்படிக்கட்டுகளில் உட்கார்ந்துகொண்டு ஒரு காலால் மறுகாலின் பின்னத்திக் காலைத் தேய்த்தபடியே குளப்படிக்கட்டுகளில் தேங்கிய நீரில், பார்க்கிறியா பார்க்கிறியா இப்ப நீயா நானா பார்க்கிறியா என்றபடியான இசை மூர்ச்சனைகள் எப்படி இருக்கும். நான் பொதுவாகச் சிறகு முளைக்காத சங்கீதங்களைச் சொன்னேன். யாரும் என்னை முறைக்க வேண்டாம்.

அப்படி என்னய்யா நீ இசையைக் கண்டே? என்று கேட்கிறீர்களா... அப்படிக் கேளுங்க அப்பு... அதுக்குத்தானே இத்தினி பீடிகை....

எனக்குப் பிடித்த இசைத் துறைகள் என்ன எனில் கான்ஸர்டோ, ஸிம்ஃபனி, ராப்ஸொடீஸ் என்னும் ரஷ்ய, ஜெர்மானிய பொதுவாக ஐரோப்பிய க்லாஸிகல் இசை.

மொஸார்ட், விவால்டி, பிதோவன் கேள்விப் பட்டிருக்கலாம்.

ஆனால் ரஷ்ய க்லாஸிகல் இசை என்பது ஆத்மாவின் இசைக்கான கண்வ ஆச்ரமம். ஒஸ்தியான சரக்கு மட்டுமே கிடைக்கும் என்று சொன்னால் அது ரஷ்ய க்லாஸிகல். 12 வருஷம் ஒருவர் அடைகாத்தால்தான் இசையின் குஞ்சு பொறிக்கும் அங்கே.

அந்த அணியிலும் டாப் பிரம்மாக்கள் என்று சிலர் உண்டு. அவர்கள் இசையில் ஆத்மா என்பது தன்னிச்சையாக வந்து அமர்ந்து ஜலக்ரீடை செய்யும். ஏதோ அப்ஸரஸுகள் குளிக்கும் காட்சியைப் பார்க்க நேர்ந்த அச்சுபிச்சுகள் போல் நாம் கல்லாகி உறைந்து நிற்க வேண்டியதுதான். அப்படிப்பட்ட சிலர் சைகோவ்ஸ்கி, செர்கே ரக்மனினோஃப்.




NB -

இசை என்பது பல மொழிகளை உடையது. பல இலக்கணங்கள் உடையது என்பதும் உண்மைதான். கர்நாடக இசையின் நுணுக்கங்கள் எனக்கும் மிகப் பிடித்ததுதான். அது மட்டுமின்றி ஹிந்துஸ்தானி இசை சட்டென்று ரசிப்பதற்கு மிகவும் கஷ்டம். கீழ்ஸ்தாயிலேயே பெரும்பாலான சஞ்சாரம் நடக்கும். இவர்கள் இந்தக் குழியிலிருந்து எழுந்து எப்பொழுது வெளியில் வரப்போகிறார்களோ என்று கூடத் தோன்றும். ஆனால் அந்த இசையின் நுணுக்கம் என்று அறிந்து உள்ளே போகும் போது அதில் கிடைக்கும் சுகமும் அலாதியானதுதான். சமீபத்தில் நான் கேட்ட சீன இசையின் தாக்கத்திலிருந்து நான் இன்னும் மீளவே இல்லை.

எனவே நான் கூறுவது என் கருத்தை முழுக்க நான் கூறுவதாக ஆகாது. பார்க்கப் போனால் பல இசைகளின் ரசிகன் நான்.

ஆனால் எனக்குப் பிடித்த ஒன்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்ட அலங்காரமாக மற்ற இசைகளைக் குறை கண்டு பிடுத்துச் சொல்லும் அலங்கார உத்தியாக இதைக் கொள்ள வேண்டும்.

அதுவுமிலலமல் இசையைப் பற்றி பெரும் விவாதங்கள் இல்லாமல் இருப்பதைக் கொஞ்சம் தூண்டி விடலாமே என்ற எண்ணத்தாலும் நான் எழுதுவது. எனவே ஏதோ அறுதியான நிலைப்பாடு போன்று அப்படியே எடுத்துக்கொண்டு தவறாக நினைக்க வேண்டாம்.

அனுபவிக்கும் ரசனை பிரதானமான விஷயங்களில் அவ்வப்பொழுது கருத்துகள் மாறிக்கொண்டிருக்கும். இதுதான் என்று பிடித்து வைத்தது போல் சொல்ல முடியாது.

Candide என்பது வால்டேர் எழுதிய அற்புதமான விமரிசன ரீதியான எள்ளல் இலக்கியப் படைப்பு. Optimism என்ற ஒரு கண்மூடிக் கொள்கை -- 'உலகமெல்லாம் சௌக்கியமா இருக்கு. எல்லாரும் பேஷா நன்னா இருக்கா. அது அது நடக்குதுன்னா எல்லாம் நல்லத்துக்குத்தான்.' - இவ்வாறு பார்வையில் சர்க்கரையைக் கொட்டிக் கொட்டை இனிப்பாக ஒரு கொள்கையை அலெக்ஸாண்டர் போப் சொன்னதுண்டு. இன்னும் பலரும்.

என்ன விரசம் என்றால் பெரும் இயற்கை அழிவுகள், பூமிப் பிரளயங்கள் ஏற்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் மடிந்த தருணம். அதற்குக் காரணம் மத நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசும் சுயசிந்தனைக் காரக் கூட்டம் என்று கும்பல் கும்பலாக எரிக்கப்பட்ட தருணம்.

'என்னப்பா ஆப்டிமிஸ்டு? இதுவும் ஆப்டிமிஸம்தானா?'

வால்டேரின் கேள்வி உண்மையால் சுடுகிறது. இலக்கிய எள்ளல் என்ற சீமெண்ணையை ஊற்றி.

அதன் ஒலிநூலைக் கேட்டு கேண்டீட் பற்றித் தெரிந்துகொள்வதைவிட லியோனார்ட் பெர்ன்ஸ்டீன் இசையமைத்து அருமையான நடிகர்கள் பங்கேற்ற இசை நாட்டிய நாடகமான இந்த Opera - Candide அற்புதமாக வால்டேரின் உள்ளத்தைக் காட்டுகிறது.


*** 

 

Tuesday, February 16, 2016

கொசுகுட்ஸு

கொசுகுட்ஸு 

படிக்கவிடாமல் படுத்துகிறது கொசு. அதைத் துரத்தும் போது காணாமல் போகிறது. சரி போய் ஒழிந்தது என்று படிக்க முனைந்தால் எங்கிருந்து எப்படிப் பார்த்துக்கொண்டு இருக்கிறதோ சரியாக வந்து மூக்கில் லேண்ட் ஆகிறது.
என்ன கணக்கு ! தன் மூக்கில் தானே அடித்துக் கொள்ள மாட்டார்கள் என்று அதற்கு எப்படித் தெரிகிறது? 

நானும் விடாமல் ஒரு கொசுவை வந்து போகும் பாதையைப் பிடித்து விட வேண்டும் என்று முனையும் போது ஓரு ஹம்மிங் சைஸுக்கு ஒரு சிரிப்பு!
நான் பயந்து விட்டேன். என்ன கொசு சிரிக்குமா? 

அப்பொழுதுதான் உற்றுப் பார்த்தேன். கொசு அளவிற்குத் தன்னைச் சுருக்கிக் கொண்டு ஒரு ஸென் முனிவர், ‘இங்கு உட்காரலாமா? என்னையும் கொசு என்று நினைத்து அடித்து விடமாட்டாயே?’ என்று சியாஙித்தார்.
சியாஙித்தல் என்றால் என்ன என்று பார்க்கிறீர்களோ? தியானித்தல் இல்லை. இது சியாஙித்தல். சியாங் என்றால் சீன மொழியில் சிரித்தல்.
ஐயனே! நல்ல வேளை என் கவனத்தைப் பேச்சால் கவர்ந்தீர்கள். இல்லையென்றால் ஐயோ கொசு போலும் என்று கண்மூடித் தனமாக.....
ம்.. ம் அதுதான்.. கண்மூடித்தனம். உன்னிடம் நிறையவே இருக்கிறது. அதைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். நீ விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது இந்தக் கொசு அடிக்கும் கணத்தில்தான் என்பதைக் கவனித்தேன். அதான் இந்த நேரம் பார்த்துப் பேசலானேன்.
அது சரி ஐயனே! ஏன் இப்படிக் கொசு உருவத்தில்? என்ன இது மர்மமாக இருக்கிறது.... 

ஏன் கொசு உருவம் என்றால் கேவலமா? எவ்வளவு சௌகரியம் இதில் உனக்குத் தெரியுமா? மேலும்  எவ்வளவு காற்று மண்டலத் தொழில் நுட்பம் இதில் உள்ளது. இதை ஒப்பிட்டால் நீங்கள் எல்லாம் சரியான எருமை மாடுகள். ரத்தக் கிடங்குகள். அவ்வளவுதான். நான் வாழ்க்கையில் தியானத்தை, அதாவது ஸாஸென்னை கொசுவிடமிருந்து கற்றுக் கொண்டேன். அதற்காகவே கொசு போல் உடலை ஆக்கிக் கொண்டு, அதன் பின்னாலேயே போய் அதனுடைய இயக்கம் எல்லாம் கவனித்துப் பயின்றேன். கொசுவிடம் கலை பயின்றதால் மலைகளின் நடுவே எனக்குப் பெயர் கொசுகுட்ஸு என்று ஆனது.
என்ன இது... ஒரே ஆச்சரியமாக இருக்கிறது... நான் தான் ஏதாவது தூக்கத்தில் உட்கார்ந்து கொண்டே கனவு காண்கிறேனா 

இல்லை இல்லை... முதலில் இந்த மாமூல் பார்வையைக் கைவிடு. நிகழ்ச்சிகள் எப்படி நடந்தாலும் அத்தனையும் உண்மையில் சூனியம். எதுவும் இல்லை என்று நீ உணர்ந்தால் பின்னர் வெறும் சாதாரண ஒரு நிகழ்வு கூட எவ்வளவு ஆச்ச்சரியமானது என்பது புரியும். இப்பொழுது ஒரு கொசுவை விரட்டிச் சுற்றினாயே.. அந்தக் கொசுவை உன்னால் பார்க்கவோ பிடிக்கவோ முடிந்ததா? 

இல்லை ஐயனே... மட்டைக்கே பாச்சா காட்டிவிட்டு எங்கு போயிற்றோ?
எங்கும் போகவில்லை. அதுதான் மர்மம். நீ அது நகரும் என்று நினைத்து வேகமாக இயங்கும் போது அது தந்திரமாக நகராமல் தரையில் எங்காவது உட்கார்ந்து விடுகிறது. அது போய்விட்டது என்று நீ அசையாமல் உட்கார்ந்ததும் அது உன் ரத்த நாளத்தைத் தேடி வருகிறது.
பின் என்னதான் செய்வது? 

அசையாமல் அசை. அசைவது போல் அசையாமல் இரு.
அப்பொழுதுதான் எனக்குக் கொஞ்சம் உறைக்க ஆரம்பித்தது. ‘ நீங்கள் சொல்வது... கொசு அடிக்கவா... இல்லையென்றால்....’ 

கொசு ஒரு தொல்லையே இல்லை. அது உண்மையில் உனக்குக் கற்றுக் கொடுக்க வருவதோ ‘விழிப்பில் துயில்’ என்னும் ஒரு கலையை. அது உன்னை எவ்வளவு தூரம் இக்கணத்தின் மயமாக ஆக்கிவிடுகிறது பார்! இந்தக் கணம் மட்டுமே இருக்கிறது. அதோடு அந்தக் கணம் அழிந்து விடுகிறது. நீயும் முழுவதும் இந்தக் கணமயமாகவே ஆகிவிட்டால் நீயும் இல்லாமல் ஆகிவிடுவாய். நீ அடுத்த கணத்திற்கு இருக்கிறாய் என்று நினைவைக் கட்டியிழுத்துக் கொண்டு போவதால்தான் கொசுவின் கடி உன்னைத் துரத்துகிறது. அது உனக்கு உனக்கு உணர்த்த வருவதோ - ‘இக்கணம் மட்டுமே உண்டு. ஏன் அடுத்த கணத்தில் ஸம்ஸரிக்கிறாய்?’ என்பதுதான். 

ஒரு நிமிஷம் கொசு கடித்த கணத்தில் முழு மனத்தையும் நிறுத்திப் பார்த்தேன். அந்தக் கண மயமாகவே ஆனேன். அந்தக் கணம் முடிந்தது. நானும் முடிந்தேன். அப்பாடா.. இனிமேல் கொசுக்கடித் தொல்லை இல்லை. நன்றி ஐய்னே என்று அவரைத் தேடினேன். அவரைக் காணவில்லை. சியாங்ஙோடு குரல் மட்டும் கேட்டது. 

அதோ பார்! உன் காலடியில் அந்தக் கொசு இருக்கிறது. நீ அதை அடிக்காதே. நீ அடியாகவே மாறு. அது சாகும். 

கற்றுக் கொடுத்ததையா? அது பூர்வ கணம். அதைக் கொன்றால்தான் அடுத்த கணம் பிறக்கும். யோசிக்காதே. நினைவு என்பது ஸம்ஸாரம். இந்தக் கணம் இறந்து அடுத்த கணம் பிறக்கும். 

அப்புறம் சொன்னதைக் காதில் வாங்கவில்லை. நானும் அந்தக் கணமாகவே மாறி அடியாகக் கொசு மீது இறங்கினேன். அந்தக் கணம் அழிந்தது.
அடுத்த கணம்... என்ன ஆயிற்று...? பழையபடி நானேதான். மீண்டும் ஒரு கொசு வேவு பார்க்க வந்துவிட்டது. 

கொசுகுட்ஸு காணவில்லை. வந்தால் சில க் ஏ ள் வ் இ க் அ ள் கேட்க வேண்டும்? ஆமாம் சேர்த்துக் கேட்டால் அது நினைவுகள் செய்யும் கற்பனையாமே... கணம் கணமாகப் பிரித்து விடு. முதல் கணம் அழியும். அடுத்த கணம் பிறக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லையாம். அதான் பிரித்தே போட்டுவிட்டேன்.

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

Thursday, December 31, 2015

’இன்றைக்கு ஆகிற வேலையைப் பாருங்க.’

’இன்றைக்கு ஆகிற வேலையைப் பாருங்க. சும்மா நாளைக்கு, இன்னும் எதிர்காலத்தைப் பற்றி நமக்கு என்னத்துக்கு? அன்றைக்குப் பொழுதை ஓட்டினோமா.. நாளைக்கு வருவதை நாளை பார்த்துக் கொள்வோம். இன்னி பொழைப்பைப் பாருங்க.’ - இந்த மனப்பான்மை தனி மனிதர்கள், நிறுவனங்கள் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் நெடுநாளாகவே தொற்றிப் படரும் வியாதி. இது கொஞ்சம் தீவிரப்பட்டு ‘கண்டதே காட்சி. கொண்டதே கோலம்’ என்ற பார்வையாக மாறிக் கணநேரக் களிமயக்குகளாய்ப் பொழுதை விழுங்கும் பொழுது போக்கு அம்சங்களுக்கு ஊட்டமாய் ஆகிறது.

இன்றைய நம் செயல் நாளை என்னவாக ஆகும்? நேற்றைய எந்த நம் செயல் இப்படி நிகழ்காலமாக நமக்கு ஆகிநிற்கிறது? - என்ற கவலைகள்தாம் காலம் காலமாக ஆழ்ந்து நீண்டு ‘கர்மம்’ என்ற கொள்கையாக நெடுங்காலம் முன்னரே பாரதப் பண்பாட்டின் கொள்கையாக உருப்பெற்றது. நேற்றைய கர்மம் இன்றைய அனுபவமாக மாறும் பொழுது, இன்றைய கர்மம் நாளைய விளைவாக ஆகும் என்பது இயல்பான யூகம். ‘எல்லாம் கர்மவினை. என்ன செய்வது?’ என்று கையறு நிலைக்குச் சாதகமாக இந்த ’கர்மம்’ என்ற கோட்பாட்டையும் நம்மால் மாற்றிக் கொள்ளமுடியும் என்பது நம் அறிவின் குறைபாடேவொழிய, இந்தக் கோட்பாட்டின் குறையாக ஆகாது.

கர்மம் என்ற கோட்பாட்டை நாம் ஏற்றாலும் விட்டாலும் நிச்சயம் குறைந்தபட்சம் இந்த வாழ்க்கையில், நம் அனுபவத்தில், நாம் மற்றவர்களோடு சேர்ந்து வாழும், இயங்கும் உலகில் என்ற அளவுக்காவது கர்மம் என்ற கோட்பாடு மறுக்கக் கூடியதாகத் தெரியவில்லை. நிச்சயம் ‘அன்றைக் கணத்திற்குக் கவலைப் படு; நாளையைப் பற்றி யாருக்கு அக்கறை’ என்ற பார்வை மிகவும் குருடான பார்வை என்பதையும் மறுக்க முடியவில்லை. அவ்வாறு மறுக்க முயன்றால் இயற்கை நம்மைக் கடுமையாக தண்டிக்கிறது என்பதும் நமக்கு நிதர்சனமாகக் கிடைக்கிறது.

‘இயற்கையை வெல்வதற்கு முதல் வழியே அதனிடம் நம் தோல்வியை ஒப்புக்கொண்டு விடுவதுதான்’ என்பார்கள் அறிஞர்கள். அந்த அடக்கம் நமக்கு வந்து விட்டால் நாம் இயற்கையைப் புரிந்து கொள்வதில் முனைப்பு காட்டுவோம். இயற்கையின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்துதான் நாம் இயங்க வேண்டும். அதுதான் வாழும் வழி, தனி ஒருவராக இருந்தாலும் சரி, சமுதாயமாக இருந்தாலும் சரி அல்லது உலக அளவிலும் சரி. இந்த அடக்கமும், இயற்கையைப் புரிந்து கொண்டு நடக்கும் மனப்பான்மையும் நமக்கு ஏற்படாமல் இருக்க ஒரு பெரும் தடையாக இருப்பது நம் அகங்காரம். அந்த அகங்காரத்தின் விளைவாக நம்மிடையே கிளம்பும் பேராசை. பேராசைக்குப் பலியாகி மிஞ்சும் கண்மூடித்தனம். இந்த அகங்காரம், பேராசை, கண்மூடித்தனம் இவற்றை நாம் அமைதியாக நம்முள் ஆட்டம் போடுவதை உணர்ந்துவிட்டால் அந்த வினாடியே இவற்றின் பிடி தளரும். நன்கு உணர உணர இவை முற்றிலும் கழலும். உணர்வில் காலூன்றி நிற்கத் தொடங்கினால் இவை மறைந்து ஒழியும்.

***