Sunday, December 21, 2025

அறியாமை என்னும் புன் நாற்றம்

அறியாமையை இருளாகச் சொல்வது வழக்கம். இருள், ஒளி, நிறம் என்னும் போதே கண்ணுக்கும், காட்சிக்கும் உரிய விவரணைகள் வருகின்றன. ஆனால் யாரேனும் அறியாமையை தீய நாற்றம், புன் நாற்றம், துர்நாற்றம் என்றபடியாக விவரித்தவர்கள் உண்டா என்று தெரியவில்லை. அறியாமை என்பது ஓர் ஆள்தன்மையின் ஒவ்வாத மணம் என்றால் ஒவ்விய நறுமணம் என்பது அறிவு என்றாகிறது. அனைத்து அறிவின் உருவாய் இருக்கும் கடவுளை மறைகள் உயர்ந்த மணங்கள் அனைத்தும் ஆன உருவம் என்று கூறுகின்றன. ஆனால் அறியாமையைக் குறித்து அருவருக்கும் நாற்றம் என்று எங்கேனும் இருக்கிறதா தெரியவில்லை.

ஆனால் நம் ஆன்ற பெரும் தமிழறிஞர் ஒருவர் அவ்வாறு அறியாமையைக் குறித்து விவரிக்கும் போது அதில் தென்படும் புதுமையும், பொருத்தமும் மிக்க உவகையைத் தரக் கூடியன. யார் அந்த அறிஞர்? 

உயர்திரு சி வை தாமோதரம் பிள்ளை அவர்கள்தாம். யாழ்ப்பாணத்தில் தோன்றிய முத்துக்குமார கவிராசரிடத்தில் தமிழ் பயின்றவர் தாமோதரனார் அவர்கள். தமது ஆசான் தமக்கு என்ன செய்தார் என்று ஒரு செய்யுளில் கூறுகிறார். தமது ஆசிரியர் கவிராசர் பெரும் கவிமேகமாய் ஆனாராம். ஆகி, தம்மீது பெருமழையாகப் பொழிந்தாராம். எதற்கு? தம்முடைய வெள்ளறிவின் முடைநாற்றத்தைப் போக்குவதற்கு. வெள்ளறிவு என்றால் வொயிட்டா, பளபளன்னு இருக்கும் என்று நினைத்தல் கூடாது. உள்ளடக்கமே இல்லாது வெளிறிப் போன அறிவு. சோகையின் வெண்மை. அந்த நன்றி என்னாளும் நெஞ்சை விட்டு அகலாது என் ஆசானை வணங்குகிறேன் என்கிறார் தாமோதரனார். 

"தெள்ளுத தமிழ்க் கடல்கடந்து செழியகலைத் துறைபடிந்து
திரிபின் ஞானக்
கொள்ளைகொண்டு நுகர்ந்தமுத்துக்குமாரகவி மேகமிதைக்
கொடிச்சுன் னாக
வள்ளலென துள்ளமதி கொள்ளநறை விள்ளுதமிழ்
மணஞ்சற் றேறி
வெள்ளறிவின் முடைநாற்றம் வீவித்தான் விரைமலர்த்தாள்
மிலைவன் மாதோ.” 

வெள்ளறிவின் முடைநாற்றம் - அரிய சொற்றொடர். 

***

No comments:

Post a Comment