Monday, June 15, 2026

வர்ணதர்மமும் பாரதியாரும்

வர்ணதர்மம் என்றால் மனிதர்களால் செய்யப்பட்ட ஏற்பாடு என்று விளக்குகிறார் ஹரதத்தாசாரியர் தாம் ஆபஸ்தம்ப தர்ம ஸூத்திரத்திற்கு எழுதிய உரையில். அதாவது இன்னதைச் செய் என்பது விதி. இன்னதைச் செய்யாதே என்பது ப்ரதிஷேதம். செய்ய வேண்டியதை எப்படிச் செய்வது என்பது நியமம்.

விதி, நியமம், ப்ரதிஷேதம் இம்மூன்றும் அடங்கியது சமயாசாரம். இந்தச் சமயம் என்பது இன்றைய பயன்பாட்டில் மதம், வழிபாட்டு நெறி என்பதற்குப் பயன்படும் சொல். ஆனால் ஹரதத்தர் உரையில் அவர் சொல்வது துறைசார்ந்த சொல்லாகிய சமய ஆசாரம். அதற்குப் பொருள் மதம் அன்று. விதி, நியமம், ப்ரதிஷேதம் என்னும் மூன்று அம்சங்கள் கொண்ட சமுதாய ஒழுகுமுறை. What to do, how to do, what not to do என்பனதான் முறையே விதி, நியமம், ப்ரதிஷேதம் என்பன.

இந்த சமயாசாரத்தின் கீழ் வருவதுதான் வர்ணதர்மம். ஆபஸ்தம்பர் தமது நூலை ஆரம்பிக்கும் பொழுதே ‘சமயாசார தர்மங்களை இனி விளக்குகிறேன்’ என்றுதான் சொல்கிறார். இந்த சமயாசாரம் என்றால் என்ன என்று விளக்கும்பொழுது ஹரதத்தாசாரியர், விதி, நியமம், ப்ரதிஷேதம் என்னும் மூன்று பிரிவுகள் கொண்ட சமயாசாரம் என்னும் இதைத்தான் மனிதர்கள் செய்துகொள்ளும் ஏற்பாடு என்கிறார். அவருடைய வரிகள்:

‘..பௌருஷேயீ வ்யவஸ்தா சமய: | ஸ ச த்ரிவித: | விதிர் நியம: ப்ரதிஷேத இதி |’

ஆனால் பொதுவாக வர்ணதர்மம் என்றால் கீதையையும், அதில் ஸ்ரீக்ருஷ்ணனுடைய கருத்தான ‘குணம், தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டது வர்ணம்’ என்பதையும் மேற்கோள் காட்டுவது பொது வழக்கம். நால்வர்ணக் கருத்து என்னும் இதைக் கீதையின் சமுதாயக் கொள்கை என்று பெயரிட்டு அழைக்கிறார் மகாகவி பாரதியார்.

ஆனால் கீதையின் இந்தக் கருத்தின் அடிப்படையில் என்றேனும் நடைமுறை இருந்ததுண்டா என்னும் கேள்வியைத் தாமே எழுப்பி, அவ்வாறு என்றும் இருந்ததில்லை என்று பாரதி எழுதுகிறார். எதில்?

பாரதியார் The Crime of Caste என்று ஓர் ஆங்கிலக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் சாதி அல்லது வர்ணம் அல்லது காஸ்ட் என்பதைப் பற்றி எழுதுகிறார். பாரதியார் எழுதும் வரிகள்:

‘I may be permitted to call this Chaturvarnya (Four Varna System) by the name of "the Gita theory of society", although it is well known that the same ideal is upheld in most of the ancient writings. I do so for convenience. The Gita theory may or may not, promote the highest interests of man. It was never tried in its pure form, or, if it was, history tells us nothing about it....

'But the caste law is leagues away from the Gita theory....
'And instead of four varnas, you have four thousand castes! But, alas, the ignorant masses of our country have been made to believe that this caste chaos is a special divine gift to our country and whoever transgresses it has to go to hell. It is this belief more than anything else that makes people insensible to the injurious results of caste.'

அதாவது, சாதி அமைப்பு என்பது மாற்றவே கூடாத, தெய்வ வரமாக அமைந்த நெறிமுறை என்றும், அதை மீறினால் நரகம்தான் கிடைக்கும் என்றும் அறியாமையில் ஆழ்ந்த மக்களை நம்பவைத்து, இந்த நம்பிக்கையின் காரணமாகவே மக்கள் இதன் பாதிப்புகளைச் சகித்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள் என்று சாடுகிறார் பாரதியார்.

என்னதான் தீர்வு? பாரதி சொல்லும் விழிப்பின் வழி என்ன? அவரே தொடர்ந்து எழுதுகிறார்:

‘The sole remedy is in inter-dining and intermarrying. The others are mere quack remedies of an anaesthetic character. There are many difficulties in the way of applying this remedy on a large scale.'

அந்தக் கஷ்டங்கள் உணவு பழக்க வழ்க்கங்கள் சமபந்தமானவை என்றும், அதைப் பொறுமையாகத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் எழுதுகிறார். வேறு வழி இல்லையா? பாரதியார் எழுதுவது:

‘I repeat there are many - but not insuperable - difficulties in the way of applying that remedy. But there is no other remedy that the human mind can think of.'

'There is no rational excuse for not doing that.' என்று பாரதி எழுதியிருப்பது முக்கியமாகக் கருதத் தகும்.

சாதி அமைப்பை விமரிசித்தால் பொதுவாகச் சாதி அபிமானிகளாய் இருக்கும் மக்கள் கூறும் பதிலையும் பாரதி குறிப்பிடுகிறார். அது என்னவென்றால், ‘இங்குத்தான் இப்படி இருக்கிறதா? உலகத்தில் ஒவ்வொரு இடத்திலும் இதுபோன்று பிரிவினைகள், மக்கள் பிளவுண்ணும் பேதங்கள் இருக்கிறது அல்லவா?’ என்பதுதான். அதற்குப் பாரதியார் எழுதும் பதில்:

‘If other people are fools, that is no reason why we should be such'.

மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் நாம் செய்த தவறை இன்று அவர்கள் செய்கி்றார்கள் என்றால் அவர்களை எச்சரித்து அந்தத் தீமையிலிருந்து விலக்குகிறவர்களாக நாம் செயல்பட வேண்டுமே அன்றி, அவர்கள் செய்வதை நாம் செய்வதற்கு வாய்ப்பான சால்ஜாப்பாகக் கருதக் கூடாது என்று தெருட்டுகிறார் பாரதி.

பாரதியின் இந்தக் கருத்துகளை யாரும் பேசுகிறார்களா தெரியவில்லை. ஆனால் எனது நூலான ‘வேதம் புதுமை செய்த பாரதி’ என்னும் நூலில் இதை விரிவாகப் பேசியிருக்கிறேன். சமீபத்தில் மறுபதிப்பாக வந்த ‘பாரதியின் காளி’ என்னும் என் நூலிலும் கூட. சந்தியா பதிப்பகம் இந்த இரண்டு நூல்களையும் போட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment