Friday, February 14, 2025

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தின் கருத்துகள்

வேதாந்த தேசிகரின் விளக்கங்கள் பெரிதும் போற்றப்பட்டன, அவருடைய கருத்துகள் சில மாறுபட்டவையாய் இருந்தால் அவை விவாதிக்கப் பட்டன. அவர் மட்டுமன்று. இன்னும் சில ஆசார்யர்களின் கருத்துகளும் விவாதிக்கப்பட்டன என்னும் சூழ்நிலைதான் மணவாள மாமுனிகள் காலம், அதை ஒட்டிய காலம் வரையிலும் நிலவியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனெனில் ஸ்ரீராமாநுஜர் காலத்திலேயே கூட ஸ்ரீராமாநுஜரே ஒரு வித்வானுக்குப் பிரபத்தி நெறியைப் பற்றி விளக்கியுரைத்ததாகவும், அதைக் கேட்ட அந்த வித்வான் முடிவில் ஸ்ரீராமாநுஜரிடமே ‘ தாங்கள் உரைக்கும் அர்த்தம் அழகிது. ஆயினும் தாங்கள் உரைக்கும் நெறியைக் கைக்கொள்ளும் ருசி எனக்கில்லை’ என்று சொன்னதாக மணிப்பிரவாள நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. எனவே கருத்துகள் மாறுபடுவதும், அதன் அடிப்படையில் பரஸ்பரம் விவாதங்களும் வைணவ அறிஞர்களின் வரலாற்றில் புதிது என்று சொல்ல முடியாது. இதைக் குறித்துப் பெரும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஸ்ரீவேதாந்த தேசிகரே கூட தமது சம்ப்ரதாய பரிசுத்தி என்னும் நூலில் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றார். என்னவெனில், 

“ஸ்ரீபாஷ்யகாரருடைய சிஷ்ய ஸம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதமில்லை. வாக்ய யோஜநா பேதமே உள்ளது.” 

அதாவது பொருள் ஒன்றுதான். அதைப் பார்க்கும் கோணமும், விளக்கும் விதமும் மட்டுமே வேறுபடுகிறது என்று அழகாகச் சொல்கிறார். 

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அநேகமாக அனைத்துப் பகுதிகளுக்கும் உரையெழுதிய பெருமகனார் பெரியவாச்சான் பிள்ளை. அவரே ரஹஸ்ய நூல்களும் இயற்றினார். அவருக்கு முன்னர் ரஹஸ்யம் குறித்துப் பிரபலமாக அறியப்பட்ட ஸ்தோத்திரம் பராசர பட்டரின் அஷ்டச்லோகி ஆகும். அவர் (பெரியவாச்சான் பிள்ளை) காலத்திற்குப் பிறகு பிள்ளை லோகாசாரியார் இயற்றிய அஷ்டாதச ரஹஸ்யம் என்னும் பதினெட்டு ரஹஸ்ய நூல்களின் தொகுதி ரஹஸ்ய நூலுலகில் பெரும் பிரசித்தி பெற்றது. அந்தப் பதினெட்டு நூல்களில் ஒன்றான தத்வத்ரயம் என்னும் நூலுக்கான வியாக்கியானத்தில் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளால் ஆதரத்துடன் மேற்கோள் காட்டப்படும் நூலாகத் திகழ்கிறது ஸ்ரீவேதாந்த தேசிகரின் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்பதை நாம் காண முடிகிறது. அதேபோல் காலத்தால் தமக்கு மிகவும் அண்மையான முன்னவராகத் திகழும் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானத்தை ஆதரத்தோடு மேற்கோள் காட்டும் நிலையைத்தான் நாம் வேதாந்த தேசிகரின் நூலிலும் காண முடிகிறது. இந்தப் பெருமக்களுக்குள் கருத்து வேறுபாடு, விவாதம், மாற்றுக் கருத்து இருந்திருக்கலாம். ஆனால் யார் ஒருவருடைய நூலும் யார் ஒருவருக்கும் ’பிறருடைய’ நூலாக ஆகிவிடவில்லை என்பதைத்தான் தொகுத்து நாம் காணும் போது உணர முடிகிறது. ’நாம்’ >< ‘பிறர்’ என்ற பிளவான பார்வை பின்னர்க்காலங்களில் பரவத் தொடங்கியது என்றால் அதற்கு எந்த விதத்திலும் இந்த ஆசார்யப் பெருமக்கள் காரணமாக அமையவில்லை என்பதைத்தான் கூர்ந்து கற்கும் எவரும் உணரமுடியும். 

முந்தைய பகுதிகள் -- முதல் பகுதி , இரண்டாம் பகுதி 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் - தொடர்ச்சி

’சும்மா போகிற போக்கில் மணவாள மாமுனிகள் வேதாந்த தேசிகரை மேற்கோள் காட்டினார், வேதாந்த தேசிகர் பெரியவாச்சான்பிள்ளையை மேற்கோள் காட்டினார். இவர் அவரை அபியுக்தர் (கல்வியில் சிறந்த நிபுணர்) என்றார். அவர் தமக்கு முன்னோரை அபியுக்தர் என்றார் என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஆதாரம் எங்கே’ என்கிறார் நண்பர். ஒருவரை ஒருவர் பாராட்டினார் என்பதற்கும் ஆதாரம் கொடுக்க வேண்டிய அளவிற்கு நாம் ஆகிவிட்டோமா என்பது ஒரு கேள்வி. இருந்தாலும் இருக்கிற ஆதாரத்தைத் தருவதில் நமக்கென்ன கஞ்சத்தனம்? 

அதற்கு முன்னர் அவரவர் வாழ்ந்த காலக் கிரமத்தைப் பார்ப்போம். (குறிப்பு உதவி - ஆசார்யர்களின் கால நிர்ணயம், ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனர்) பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் காலம் 1167 - 1262 கி பி. வேதாந்த தேசிகர் இவருக்குப் பின்னர் ஏழு வருஷங்கள் கழித்துத்தான் 1269ல் தோன்றுகிறார். (1269 - 1369) மணவாள மாமுனிகள் தோற்றம் 1370 கி பி. அதாவது ஒருவர் மறைந்த பின்னர் ஒருவருடைய தோற்றம் என்ற காலக் கிரமத்தில் நிகழ்கிறது. பெரியவாச்சான் பிள்ளை திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் பாசுரமான ‘குலம் தரும் செல்வம் தந்திடும்’ என்ற இடத்தில் குலம் தரும் என்பதற்கு வியாக்கியானம் எழுதும் போது, நாராயண நாமம் ஒருவருடைய பண்டைக் குலம் எதுவாய் இருந்தாலும் அதை நீக்கித் தொண்டக் குலம் ஆக்கிவிடும்; ஆயினும் வழிவழியாக வருகின்ற திருமண உறவுகள் உலகியல் ரீதியில் அமைந்தாலும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பழகிக் கொள்வது தொண்டக் குலத்தின் ஞானப் பெருமையின் அடிப்படையாகப் பழக வேண்டுமே அன்றி அவர்களுடைய உலக ரீதியான பிறப்பின் அடிப்படையில் அன்று என்று தத்வார்த்தம் சார்ந்த உலக நடைமுறைக்கு ஒரு தெளிவான விளக்கம் தருகிறார் பெரியவாச்சான் பிள்ளை. அந்தப் பகுதியை அப்படியே தமது ரஹஸ்யத்ரய ஸாரத்தில் வேதாந்த தேசிகர், ‘ப்ரபாவ வ்யவஸ்தாதிகாரம்’ என்னும் பகுதியில் எடுத்துக் காட்டுகிறார். ‘குலந்தரும் என்னும் பாட்டுக்கு வ்யாக்யானம் பண்ணின அபியுக்தரும்’ என்று தொடங்கி, ‘ச்லாகை குணநிபந்தனம் என்று (அபியுக்தரும்) நிஷ்கர்ஷித்தார்கள்’ என்று மேற்கோள் காட்டுகிறார். ச்லாகை என்பது ஞானப் பெருமை அடிப்படையாக ஒருவரைச் சிறப்புற நடத்துவதும் கொண்டாடுவதும் ஆகும். நிஷ்கர்ஷித்தல் என்றால் பல அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஆய்ந்து அறுதியாக முடிவு கூறுதல் என்பது பொருள். தமக்கு ஏழு ஆண்டுகள் முன்னம் இருந்த ஆசாரியரை, அவருடைய தத்வார்த்தமான சமுதாயக் கருத்தியல் தீர்மானங்களை அவ்வண்ணமே உள்வாங்கிப் போற்றியுரைக்கும் பாங்கைக் கவனிக்க வேண்டும். 

விசிஷ்டாத்வைத தத்வத்திற்கும், ஸ்ரீராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யத்திற்கும் விளக்கமாகவும், அரணாகவும் பல நூல்களை இயற்றியவர் வேதாந்த தேசிகர். இதை அவருக்குப் பின்வந்த ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் எப்படிக் கருத்தில் கொண்டு அவருடைய தத்வார்த்த விளக்கங்களை மேற்கோளாக எடுத்து ஆள்கிறார் என்பதற்கு ஓர் உதாரணம் காட்டுகிறேன். ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ப்ரதாநப்ரதிதந்த்ர அதிகாரத்தில் உலகப் பொருட்களை உள்நின்று தாங்குபவனும் கடவுள்தான்; அதேநேரம் உள்நின்று தன் சங்கல்பத்தால் அவற்றின் இயக்கத்தைத் தாங்குபவன், செலுத்துபவனும் கடவுள்தான். உலகப் பொருட்களின் உள்நின்று தான் உண்மையால் அந்தப் பொருட்கள் உளதாம்படித் தன் இயல்பினாலேயே தாங்கி நிற்கவும் செய்கிறான். அதேநேரம் அவற்றின் இயக்கத்தையும், இருப்பையும் தன் சங்கல்பத்தாலும் நியமித்து நடத்துகிறான் - என்று இத்தகைய விளக்கத்தைத் தந்திருக்கிறார் வேதாந்த தேசிகர். அதற்கு உதாரணமாக அவர் காட்டுவது தூக்கத்தில் சலனம் இல்லை. நனவு நிலையில்லை. ஆனால் அப்பொழுதும் உயிர்கள் கடவுளால் தாங்கப்படுகின்றன. கடவுள் உள் இருக்கிறார் என்ற அவர் ஸ்வரூபத்தைச் சார்ந்துதான் உயிர்களின் இருப்பும் இயல்கிறது. இந்தச் சார்பு நிலையை ஸ்வரூபத்தைச் சார்ந்த இயல்பு இருப்பு நிலை என்று சொல்லலாம். அதாவது ஸ்வரூப ஆச்ரிதம். உயிர்களின் இந்தச் சார்பு நிலைக்கு ஆதேயத்வம் என்று பெயர். அதுவே விழிப்பு நிலையில் உயிர்களின் இயக்கத்தை உள்நின்று கடவுள் தன் சங்கல்பத்தால் நியமிக்கிறான். அப்பொழுது உயிர்களின் சார்பு நிலை ஸங்கல்ப ஆச்ரிதம். உயிர்களின் இந்தச் சார்பு நிலையிக்குப் பெயர் நியாம்யத்வம் (நியமிக்கப்படுவதாயிருக்கை). இந்த விளக்கத்தை வேதாந்த தேசிகர் அந்தப் பகுதியில் தருகிறார். 

பிள்ளை உலகாரியர் அருளிய 18 ரஹஸ்ய நூல்களுள் தத்வ த்ரயம் என்பது ஒன்று. அதற்கு வியாக்கியானம் எழுதிய மணவாள மாமுனிகள் அதில் சித் ப்ரகரணத்தில் 39 ஆவது சூர்ணையான 

“தார்யமாகை ஆவது அவனுடைய ஸ்வரூப ஸங்கல்பங்களை ஒழிந்தபோது தன்ஸத்தை இல்லையாம்படி இருக்கை.” 

என்பதற்கு வியாக்கியானம் எழுதும் போது ரஹஸ்யத்ரய ஸாரத்தில் வேதாந்த தேசிகர் ப்ரதாந ப்ரதிதந்த்ர அதிகாரத்தில் அளித்த விளக்கத்தை மேற்கோள் காட்டும் போது மணவாள மாமுனிகள் எழுதுவது - தார்யவஸ்துக்களை ஸ்வரூப ஸங்கல்பம் இரண்டாலும் தரிக்கும் என்னுமிடம் அபியுக்தராலே விஸ்தரேண ப்ரதிபாதிக்கப்பட்டது.”, ”என்று இப்படி ரஹஸ்யத்ரய ஸாரத்திலே ப்ரதிபாதிக்கையாலே”. 

ஆனால் 1766 கி பி யில் வரும் ஸ்ரீஅண்ணா அப்பங்கார் தமது பழநடை விளக்கம் என்னும் நூலில் பெரியவாச்சான் பிள்ளையை வேதாந்த தேசிகர் சந்தித்தார் என்று எழுதுகிறார். பெரியவாச்சான் பிள்ளையின் உபதேசத்தால் வேதாந்த தேசிகர் கொண்டிருந்த சில மாறான கருத்துகளில் திருத்தம் பெற்றார் என்றும் எழுதுகிறார். ஏழு வருஷங்கள் முன்னர் இருந்தவரை ஏழு வருஷங்களுக்குப் பின்னர்த் தோன்றியவர் சந்தித்து விமரிசனமும் விளக்கமும் நடந்தன என்பதைப் போன்ற கால மயக்கமான விவரணைகள் எழுந்ததன் காரணம் அந்தக் காலச் சூழ்நிலையின் விமரிசனப் பதில் விமரிசன இயல்பைக் காட்டும் போலும். 

இதன் முதல் பகுதியைப் படிக்க இங்கே - முன் பதிவு

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, February 12, 2025

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் - நடைமுறை வாழ்க்கையில்

ஒரு பெரும் கம்பெனி. அதன் உற்பத்தி, விரிவு, செயல்திறன் எல்லாம் சேர்ந்து பெரும் கிளைகள் கொண்ட, இயக்கம் மிகுந்த அமைப்பு. இதை நினைத்துப் பாருங்கள். என்ன இது! ரஹஸ்யத்ரய ஸாரம் என்று தலைப்பு போட்டுவிட்டு கம்பெனி, அது இது என்று யோசிக்காதீர்கள். அந்தக் கம்பெனியில் எதிர்கால சாதனையை நோக்கிய தர்சன ஊக்கம் ஒன்றை ஒரு பிரிவோ அல்லது ஒருவரோ வெகு மும்முரமாகக் காட்சிப் படுத்திக் கொண்டேயிருப்பார். அந்தத் தர்சன ஊக்கம் என்பதை மும்முரமாகத் திட்டமிடும் தலைவருக்கு இன்றைய யதார்த்தம் என்பதை விட இனிவருங்காலம் எப்படி அமைய வேண்டும், என்ன சாதிக்க வேண்டும், இன்றைய செயல்பாடுகள் எதை நோக்கிப் போக வேண்டும், கடந்தகால கம்பெனி வரலாற்றிலிருந்து என்ன கற்றுக் கொள்ள வேண்டும், இதைத்தான் அவர் முக்கியமாகக் கருதுவார். அதே கம்பெனியில் இன்னும் ஒரு பிரிவில் எஸ்டாப்ளிஷ்மெண்ட், முதலீடு, செல்வம், இருப்புத் தொகை, அன்றாடம் என்பதை எப்படிக் கட்டி மேய்ப்பது, இன்றைய கட்டாந்தரையான யதார்த்தம் என்ன, எந்த அளவுக்கு கம்பெனி துணிந்து புதுமையில் நுழையலாம், பழைய பாடங்கள் என்ன, கம்பெனிக்கு என்று இருக்கும் எழுதப்பட்ட, எழுதப்படாத விதிகள், சட்டங்களின் சூழல் இவை தரும் அவகாசமும், புழக்க வெளியும் என்ன, என்று இவையெல்லாம் பற்றிய கவலையோடு ஒரு தலைவர், ஒரு பிரிவு. அதே பெரிய வளாகத்தில் தங்களுடைய கண்ணோட்டத்தை ஆணித்தரமாக வாதித்தவாறு வளைய வந்துகொண்டிருப்பார். இந்த இருவரில் யார் முக்கியம்? நிச்சயம் கம்பெனிகளின் பழகிய பலரும் நம்மால் சொல்ல முடியும். இரண்டு பேரும். ஒவ்வொரு விதத்தில். ஒருவர் முன்னே எடுத்துச் செல்கிறார். ஒருவர் இருக்கின்ற நிலையில் நிலைகுலையாமல் ஸ்திரப்படுத்துகிறார்.

இந்த உதாரணம்தான் எனக்குத் தோன்றியது ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனாரின் ஆசார்ய ஹ்ருதயம் என்ற நூலின் வழியே ஸ்ரீவைஷ்ணவத்தைப் புரிந்துகொண்ட எனக்கு, முதன்முதலில் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகர் இயற்றிய ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்ற நூலைப் படித்த பொழுது. மகாத்மா காந்திஜிக்கு conscience-keeper என்று ராஜாஜி அவர்களைச் சொல்வார்கள். அதாவது சிறிதும் தயக்கமின்றி, துணிந்து தாம் என்ன நினைக்கிறோம் என்பதை, காந்தியின் கருத்துகளைக் குறித்தே காந்தியிடமே வெளிப்படையாக விவாதிக்கும் தன்மை உடையவராய் இருந்தார், அதனாலேயே காந்தி அவரைத் தமக்கு முக்கியமானவராகக் கருதினார் என்பதை இந்த கான்ஷியன்ஸ் கீப்பர் என்ற சொலவு குறிக்கிறது என்று நினைக்கிறேன். அரசியல் உதாரணத்தைக் காட்டுவதா என்று நீங்கள் தயங்கவில்லை என்றால் எனக்குத் தோன்றுவது ஸ்ரீவேதாந்த தேசிகர் ஆகட்டும், ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஆகட்டும் இருவருமே ஸ்ரீவைஷ்ணவத்தின் இருபெரும் கான்ஷியன்ஸ் கீப்பராகத்தான் தோன்றுகிறார்கள். அதாவது இருவரிடமும் உள்ள ஓர் ஒற்றுமை வெளிப்படையாக உடைத்துச் சொல்லும் அபாரமான துணிச்சல், தாம் ஏன் சொல்கிறோம் என்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் வாதங்கள். எனக்கு இருவரும் இன்றியமையாதவர்கள். ஏன் இனி வருங்காலத்தில் இத்தகைய மாபெரும் மனிதர்களை நாம் சந்திக்க முடியுமா தெரியவில்லை. நமக்கு இருவரில் ஒருவரிடம் சாய்வு இருக்கலாம். ஒருவர் சொல்லும் கருத்தில் நமக்கு உடன்பாடின்றி விவாதம் எழலாம். ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள் இருவரும் 700, 800 ஆண்டுகளுக்கு முன்னர்!

ஒருவர் பிரபத்தி நெறி பாகுபாடுகள், உயர்வு தாழ்வு, அந்தஸ்து, ஆண்பெண் பேதம், இல்லறம் துறவறம் வேறுபாடு எதுவும் கணக்கில்லை, அனைவருக்கும் உரியது, அதுவே நம்மாழ்வார் வழி நின்ற அனைத்து ஆசாரியர்களின் ஹ்ருதயம் என்று கூறுகிறார். அவர் ஆசார்ய ஹ்ருதயம் எழுதிய ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார். என்னைக் கவர்ந்தவர்.

மற்றவர் சாத்திரம், நியமம் என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை. பிரபன்னர்களுக்கும் சாத்திர நியமங்களின் வழி நின்று சரணாகத நெறியில் தொடர்வதுதான் சரியானது என்று கொள்கையுடைய ஸ்ரீவேதாந்த தேசிகர். விசிஷ்டாத்வைத தத்வத்தை விளக்கிப் பல நூல்கள் இயற்றியவர். மணவாள மாமுனிகள் இவர் இயற்றிய ரஹஸ்யத்ரய ஸாரத்திலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டி அபியுக்தரால் இவ்வாறு விஸ்தரேண பிரதிபாதிக்கப்பட்டது என்று கூறுகிறார். என்ன இடம் என்றால் உலகில் அனைத்துப் பொருட்களையும் கடவுள் உள் கலந்து உண்மையாகிய இயல்பால் மட்டுமே தாங்குகிறாரா அல்லது சங்கல்பத்தாலும் தாங்குகிறாரா என்பதற்கு விளக்கமாக வேதாந்த தேசிகர் காட்டிய விளக்கத்தை எடுத்துக் காட்டுகிறார். அதைப் போல் பெரிய திருமொழியில் நாராயண நாமம் குலம் தரும் என்று பாடியதற்கு விளக்கத்தை பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ஒரு பகுதியை எடுத்துக் காட்டி ‘என்று அபியுக்தர் நிஷ்கர்ஷித்தார் (அறுதியாக நிலைநாட்டினார்)’ என்று கூறுகிறார் வேதாந்த தேசிகர். 

கல்லூரி வகுப்பு என்று கருதிப் பார்த்தால் வேதாந்த தேசிகரின் வகுப்பை இழக்க விரும்ப மாட்டேன். ஆனால் அவரோடு மாறுபட்டு சதா வாக்கு வாதம்தான். அதுவே ஆசார்ய ஹ்ருதயம் என்பது நான் பிரமிப்பது. பேச்சு வராது. அவர் வாதம் செய்தாலும் வியப்புதான். ஆனால் வேதாந்த தேசிகர் என்னும் பேராசிரியரோடு நான் கேள்வி மேல் கேள்வி கேட்டு உரையாட முடியும். அவர் நான் கேட்கும் கேள்விக்கு மேல் ஆயிரம் மடங்கு கேள்விகளை எழுப்பி விடையும் சொல்லக் கூடியவர். அதில் எனக்கு அவரிடம் வியப்பு.

இருவரையும் சரியாகப் புரிந்து கொள்வதில்தான் இனிவருங்காலத்து வைணவம் பலன் பெறும் என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு யதார்த்தம் பாரதி காலத்திலிருந்தே கூட. என்னதான் ஆசார்ய ஹ்ருதயம் என்றாலும் எல்லாரும் புழக்கத்தில் பின்பற்றுவது ரஹஸ்யத்ரய ஸாரத்தைத்தான் என்று தோன்றுகிறது. ஒன்றுமில்லை. ரஹஸ்யத்ரய ஸாரத்திற்கு ஐந்து வியாக்கியானங்கள் உண்டு, சாக்ஷாத் ஸ்வாமி எழுதிய உரை இன்னும் சில உரைகள். விரிவான உரை ஸ்ரீஸாரபோதிநீ (அழகியசிங்கர் 42ஆம் பட்டம்). அதில் நினைவு தோயவே ஒரு சிந்தனை.

(தொடரும்)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Wednesday, January 29, 2025

திருப்பராய்த்துறை மேவிய தவமுனிவர் சுவாமி சித்பவாநந்தர்

சுவாமி சித்பவாநந்தரின் நூல்கள் தமிழில் நமக்குற்ற பெரும்பயனாகும். இந்துமதக் கருத்துகள் குறித்த சிந்தனைகளின் தெளிவு சுவாமிகளின் எழுத்து, உரை அனைத்திலும் காணலாம். சுவாமிகளின் மொழிநடை மிகவும் அமைதியானதும், ஆழ்ந்ததும் ஆன நடை. படிப்பவருடைய மனப்பாங்கை மிகக் கவனம் கொண்டு சுவாமி சித்பவாநந்தர் அருளியிருக்கும் எளிமையும், அழகும் காலத்தை வென்று நிலைப்பது. தர்ம சக்கரத்தில் பல ஆண்டுகளாகப் பல அன்பர்கள் பல நேரங்களில் எழுப்பிய வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் சுவாமிகள் மிகவும் பொறுமையாகவும், கனிவுடனும் அருளிய விளக்கங்களும், பதில்களும் தொகுத்து (முன்னர்ப் பல சிறு பகுதிகளாக இருந்தன) மூன்று பகுதிகளாக ‘ஐயம் தெளிதல்’ என்று ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை 1997ல் போட்டிருக்கிறது. இது ஓர் அத்யாவசியமான பொக்கிஷம். மேலும் பல வேறு தலைப்புகளில் சுவாமிகள் சிறு சிறு நூல்கள் வரைந்துள்ளார். அவை அனைத்தும் இன்றும் எவ்வளவு முக்கியமான சேகரங்கள் என்பது அவற்றைப் படித்தாலே புரியும். 

1974 க்குப் பின்னர் எண்பதுகளில் பலதடவையும் தபோவனத்திற்குப் போவதும், பொதுவாக மகாசிவராத்திரி சமயத்தில், அங்குப் பிரம்மச்சாரிகளுடனான சத்சங்கமும், அதுபொழுது சுவாமிகள் முன்னிலையில் அனைவரும் அமர்ந்து நள்ளிரவும் தாண்டி நடைபெறும் தீவேள்வியும், கடவுளின் நாமம் துலங்க வீசும் காற்றும், மூன்றாம் சாமம் அனைவரும் அணியாகச் சென்று பராய்த்துறை மேவிய சிவனாரின் ஆலயத்தில் தொழுவதும் - இன்றும் நினைவுகளில் தெய்விகமாய்ப் பதிந்த அனுபவங்கள். சுவாமிகளுடைய பகவத் கீதை உரையும், திருவாசக உரையும் தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் சிறந்த வரவுகள். ஆங்கிலத்திலும் கீதைக்குச் சுவாமியின் உரை இருக்கிறது. முதலில், 60கள் அல்லது 70களாய் இருக்கலாம், சுவாமிகள் பகவத் கீதையைத் தொடர்ச் சொற்பொழிவாக நேஷனல் பள்ளி மைதானத்தில் ஆற்றியதாகவும், அதைக் கேட்பதே ஒரு தனி அனுபவமாக இருந்தது என்றும் எந்தையார் கூறியதுண்டு. சுவாமிகளின் நூல்களில் ஸ்ரீதாயுமானவரின் பாடல்களை விளக்கி எழுதிய நூல்களைக் குறிப்பிட வேண்டும். மேலும் ஞானயோகம், ராஜயோகம், பக்தியோகம், கர்மயோகம் என்று நான்கு வழிகளுக்கும் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளும், எழுதிய உரைகளும் தனித்தனி நூல்களாக ஆனவற்றைத் தழுவி சுவாமி சித்பவானந்தரும் ஞானயோக விளக்கம், கர்மயோக விளக்கம் என்று எழுதியிருக்கிறார். அதில் கர்மயோக விளக்கம் என்னும் தொடக்கப் பத்தியே அவருடைய நடையில் திகழும் தெளிவையும், சுருக்கத்தையும், கருத்தின் உள்பரப்பையும் காட்டக் கூடியது: 

“உயிர்களை இறைவனோடு இணைத்து வைப்பதற்கு ஏதுவாயிருப்பது யோகம். கையாளும் உபாயத்துக்கு ஏற்ப யோகத்துக்குப் பெயர்கள் பல உள. கர்மத்தின் மூலம் கடவுளை அடையுங்கால் அதற்குக் கர்மயோகம் என்று பெயர். கர்ம சாதனம் செய்கின்றவன் கர்ம யோகி. இம்முறையைக் கடைப்பிடித்தவர்கள் தொண்டர் என்றும் அழைக்கப்பட்டனர். அன்னவர்களின் சிறப்பைக் கூறும் நூல் தொண்டர் புராணம் என்று வழங்கி வருகிறது. இறைவனைத் தொழுகின்ற வகைகள் பல உள. அவைகளுள் தொண்டு தலையாயது. ஏனென்றால் அது ஸ்தூலமாக எல்லார்க்கும் தென்படுகிறது.” 

 இங்கு சுவாமிகள் கர்மத்தை யோகமாகச் செய்வதையே தொண்டு என்ற கருத்தோடு ஒன்றாக்கி விட்டார். பழைய நூல்கள் கர்மயோகம் தனியாகவும், தொண்டு என்னும் கைங்கரியம் வேறாகவும் சொல்லும் போது சுவாமிகள் கர்மயோகம் என்பதே தொண்டு என்று சொல்வது கருத்தை எவ்வளவு சுலபமாக ஆக்கிவிடுகிறது என்று பார்க்கலாம். 

அதேபோல் ஸ்ரீமத் பகவத் கீதைக்கு உரையெழுதும் போது அவர் எழுதும் வரிகள் மிகச் சுருக்கமாக, மிக விரிந்த பிரச்சனை ஒன்றிற்கான தெளிவான பதிலைப் பதிவு செய்துவிடுவதைப் பார்க்கலாம்.:

“வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன, ஆனால் வேதங்களினின்று தெள்ளியெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம், இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. ... உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய் இம்மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர்பெறுகின்றன, முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை கிடையாது, தத்துவ விளக்கம் அல்லது மெய்ப்பொருள் விளக்கம் இவைகளுள் முறையாக அமைந்திருக்கிறது. ஹிந்து மதத்துக்கு சாஸ்திரம் எது என்னும் கேள்வி எழுமிடத்துப் பிரஸ்தானத்திரயம் என்றே பதில் அளிக்கவேண்டும்.” 

’ஞானயோக விளக்கம்’ என்னும் நூலில் சுவாமி சித்பவானந்தரின் எழுத்து சுவாமி விவேகானந்தரின் கருத்தை விளக்கியுரைக்கும் பகுதி:

“பாரமார்த்திக வாழ்வே மனிதனை இந்த உயர் நிலைக்குக் கொண்டுவருகிறது. ஒவ்வொரு மனிதனிடத்தும் அளப்பரிய ஆத்ம சக்தி புதைந்து கிடக்கிறது. அந்த ஆத்ம சக்தியை இயக்குவது ஞான வாழ்க்கை ஒன்றேயாம் . அது ஜீவிதத்தைப் பண்படுத்துகிறது. நலன் அனைத்தையும் அது உண்டுபண்ணுகிறது. தனக்கும் மற்றவர்க்கும் சாந்தத்தை வழங்குவது ஞான வாழ்க்கை ஒன்றேயாம். இந்த ஞான வாழ்க்கையானது யாரோ சிலருடைய தனியுரிமை என்ற எண்ணம் நெடுங்காலம் உலகில் உலவி வந்திருக்கிறது, யாரோ சில புரோகிதர்கள்தான் இதை ரகசியமாகக் காத்து வைத்திருந்தார்கள் என்றும், தேவாலயங்களில் இது பரம ரகசியமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டது என்றும் , தனியுரிமையாயிருந்த சில சாஸ்திரங்களில் மட்டும் இது குறித்து வைக்கப்பட்டிருந்தது என்றும், மற்றவர்களுக்கு விளங்காத கிரியா விசேஷங்களைக்கொண்டு சில தனிக் கூட்டத்தார் இதைப் பேணி வந்துள்ளார்கள் என்றும் - இப்படியெல்லாம் எண்ணி வந்திருந்த எண்ணங்கள் அடிபட்டுப் போய்விட்டன. உண்மையான ஞான வாழ்க்கை இனி உலகெங்கும் பரந்த பாங்கில் வளர்ச்சியடையப் போகிறது.” 

திருப்பராய்த்துறை மேவிய தவமுனிவரின் எழுத்துகள் நம்மை மேம்படுத்தட்டும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, January 20, 2025

கயிற்றில் நடக்கும் இதயம்

(முன்னர் 2008ல் வாழ்வியலோடு பூத்த தமிழ் என்னும் தலைப்பில் நான் இட்ட பதிவை இங்கு மீள்பதிவாக இடுகிறேன். இது 2008லேயே தமிழினி இதழிலும் வெளிவந்தது) 


தமிழ்ப் பாடல் வரலாற்றில் பல நெடுநிலைச் செய்யுள், தொகை நூல்கள், தனிப்பாடல்கள் இவற்றைக் காண்கிறோம். ஆனால் பெரும்பாலும் அவை மற்றொரு கதையை, ஒரு மன்னனை, அல்லது ஒரு வள்ளலை, இப்படி ஏதாவது ஒரு முனை நோக்கிய படியே இருக்கும். சாதாரண அன்றாடம் வாழும் பலவகை மக்களை வைத்துப் பாடல் எழுவது மிக மிக அருமை. அதிலும் அந்த மக்களில் ஒருவரே பாடி அது பதிவு பெறுவது, காலத்தில் கடந்து வந்து நாம் காணக்கிடைப்பது என்பது அருமையிலும் அருமை. அப்படியும் சில பாடல்கள் குனிந்து ஒதுங்கி பதுங்கி மறைந்து ஒளிந்து காலத்தின் கண்களை ஏமாற்றி வந்துவிட்டன. 


இந்த மாதிரி அபூர்வமாக வந்தது என்றாலே அது எத்தனை உணர்ச்சி பூர்வமான கதை சொல்லும்? ஏனென்றால் எளிய மக்களின் பாடல் என்னும் போது வாழ்வியலின் சுமை, வேதனை, வியர்வை, ஏக்கம் இவைதானே அங்கு சுரம் போடும். பாடலைத் தொட்டாலே பளீஇர் என்று உணர்ச்சி அடிக்கிறது.

ஒரு தெரு சந்தி. மக்கள் வந்து போகும் இடம். சந்தை, வண்டிகள்(மாட்டு வண்டி பல்லக்கு, குதிரை இப்படித்தான்) அந்தக் காலம் இல்லையா? வேதனை மட்டும் தான் எல்லாக் காலத்தும் ஒன்று. மற்ற காட்சிகள் எல்லாம் காலத்துக்குக் காலம் மாறுமே?


ஒரு கழைக்கூத்து. பறை ஒலிக்கிறது. கீழிருந்து பாங்கன் உருட்டி உருட்டிக் குரல் கொடுக்கிறான். மேலே கயிற்றில் ஒரு பெண் அநாயாசமாக நடந்து, அந்தரத்தில் தன்னையே போட்டு வாங்கி, தவறாமல் திரும்ப அந்தக் கயிற்றிலேயே வந்து அடைந்து நின்று, ஒயிலாக நடை பயின்று இத்தனையும் செய்கிறாள். கூட்டம் வைத்த கண்ணை வாங்கவில்லை. பெண்ணின் அழகு என்பதெல்லாம் தாண்டிச் செய்யும் சாகசத்தின் அபாயம் திக்க் என்கிறது. குரல் கொடுப்பவன் கணக்குப்படி இன்னும் வெகு நேரம் செல்லும் அந்தப் பெண்ணின் வியத்தகு கழை ஆட்டம். கொட்டும் அதற்கு ஏற்றாற் போல் சுருண்டு சுருண்டு விழுகிறது. ஆனால் திடீரென்று அந்தப் பெண் ஆட்டத்தை நிறுத்திவிட்டு கழையின் வழி இறங்கத் தொடங்குகிறாள். பாங்கனுக்கே புரியவில்லை.


என்ன இவள்? நல்ல விறுவிறுப்பு ஏறிய தருணத்தில், மக்களெல்லாம் எதையாவது போட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று எண்ணும் போது நிறுத்திவிட்டு வருகிறாள். தன்னை மீறி அவளாக வருகிறாள் என்றும் காட்டிக்கொள்ள முடியாது. அவர்களுக்கே உள்ள சங்கேத மொழியில் பதைத்துப் போய் வினவுகிறான். அவளோ சங்கடப் படுகிறாள். வெளிப்படையாகவே வேறு கேட்கத் தொடங்கிவிட்டான். எப்படிச் சொல்வாள்?


தான் சிறுமியாக இருந்தவள், இயற்கை நேரம் கெட்ட நேரத்தில் தன்னைப் பெரியவளாக ஆக்கிவிட்டது என்று தான் உணர்வதை எப்படி உணர்த்துவது? இந்த ஆண்களோ சரியான சமயத்தில் மூளை வேலை செய்யாது, குறிப்பறிய மாட்டாத நெடுமரமாக ஆகிவிடுவார்கள். மககள் கவனம் திரும்பும் முன் தெரிவித்தாக வேண்டும். இக்கட்டான நிலைமை...ச..நம் வாழ்க்கையும் இப்படியா? தாய் இருந்தால் என்ன சீராட்டு பாராட்டு? ஒன்றுமில்லை குழந்தாய்! இது இயற்கை. அஞ்சாதே. உடனே உற்றார் சுற்றம் அனைவரும் செய்தி அறிந்து.... ம்ம் அதெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இங்கு அரைவயிற்றுக் கஞ்சிக்கே ஆடிப்பாடி குதிக்க வேண்டியிருக்கிறது. அது போகட்டும். இந்த இக்கட்டை எப்படிச் சமாளிப்பது? தாயிருந்தாலாவது துணைக்கு வருவாள். ஆகா! என்று நினைவு வந்தவளாய் ஒரு பாட்டு வடிவில் செய்தியைச் சொன்னாள்.


கல்லுருகும் காலம்
கழுகறியும் அக்காலம்
வையகம் எல்லாம் மலர்ந்த பூ வண்டறியும்
ஓங்கல் அறியும்
உயர் கடலின் உள்ளாழம்
பாங்கனுக்குப் பாங்கன்
பயனறிவான் மன்ற
அறிவார் அறிவார்
அறியார் அறியார்
ஒரு காம்பு இருதலையும் பூ.


அறிவார் அறிந்தார். அறிவித்தது தமிழ். அந்தக் கழையணங்கும் கவலை தீர்ந்தாள். ஆனால் என்னவோ இந்தப்பாடல் நெஞ்சைப் பிசைகிறது. சீராட்டிப் பாராட்ட வேண்டிய ஒரு கணம், எல்லோரும் கைவிட்ட ஒரு பெண்குழந்தை......என்ன சமுதாயம்....என்ன வாழ்க்கை.....நல்லவேளை தமிழாவது போய்க் கைகொடுத்ததே!!
(பாடல் கிடைத்த நூல், பக்கம்--- பெருந்தொகை, பக் 423, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப் பிரசுரம், 1935--1936) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, December 29, 2024

ஒரு ரசிகனின் திருப்பாவை (திருப்பாவையை ரசித்துச் செய்தது)

திருப்பாவை மாதம் மார்கழி மாதம். ‘மார்கழித் திங்கள்ள்ள்..’ என்ற இனிய பாடலைக் கேட்டு விழித்துதான் வாழ்வின் இளங்காலைப் பொழுது. அந்தத் திருப்பாவையைத் தந்தவள் ஆண்டாள். ஆம் திருப்பாவையைத் தந்து அவள் ஆண்டாள். நம்மை, அரங்கனை, தமிழை, மிஸ்டிக் உலகத்தை. ‘எல்லாரும் போந்தாரோ.. போந்தார்.. போந்தெண்ணிக் கொள்’ என்று அனைவரையும், ஒருவர் விடுபடாமல், அழைக்கும் உள்ளம் அவளுடையது. அவளைக் கொண்டாடும் அளவிற்கு மனிதர்கள் உயர வேண்டும் என்பதைத்தான் பல நிகழ்வுகள் காட்டுகின்றன. திருப்பாவையை ஒரு ரசிகனாய் நான் ரசித்த விதத்தில் திருப்பாவையைப் போன்றே தொனிக்கும் படியாக ஒரு விதத்தில் பாடியிருக்கிறேன். நீங்கள் ரசிப்பீர்களோ தெரியாது. ஆண்டாள் ரசிப்பாள் அது தெரியும். அது போதும் என்று சொல்லி உங்களை விலக்கினால் பின்பு நான் எப்படி ஆண்டாளின் திருப்பாவையை உள்ளபடியே புரிந்துகொண்டவன் ஆவேன்? எனவேதான் இந்த வழங்கல். (நான் வழக்கமாகச் செய்வது போல், முதல் சொல் தொடர்கள் ஹைபர்லிங்க். அதைக் கிளிக் செய்தால் அந்தப் பாட்டின் பக்கம் விரியும். கூடவே பொருளும் அந்த அந்தப் பாட்டிற்கு. பொருளுள்ள பாட்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாதல்லவா!)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

01) மார்கழித் திங்கள் 

02) வையத்து வாழாது 

03) ஓங்கியுலகளந்த 

04) ஆழிசுழற்றிடும் 

05) மாயனைப் பாடியே 

06) புள்ளும் சிலம்பிற்றால் 

07) கீசுகீசென்றுநம் 

08) கீழ்வானம் வெள்வரைக்க 

09) தூமணி மாடத்துக் 

10) நோற்றுச் சுவர்க்கம் 

11) கற்றுக் குரவர் 

12) கனைத்திளம் கற்றவர் 

13) புள்ளின்வாய்க் கூற்றினில் 

14) உங்கள் புழக்கத்தால் 

15) எல்லே இளம்நெஞ்சே 

16) நாயகன் நாரணன் 

17) அம்பரமும் தண்ணீரும் 

18) உந்துமதகளிறாய் 

19) குத்து விளக்காகிக் 

20) முப்பத்துப் பாட்டிற்குள் 

21) ஏற்ற நலங்கள் 

22) அங்கண்மா கர்வத்து 

23) மாரிபெயல் நெஞ்சில் 

24) அன்றிவ் வுளமெலாம் 

25) ஒருத்தி மொழியாய்ப் 

26) மாலாய் மனவண்ணம் 

27) கூடாரைக் கோவிந்தன் 

28) கறவைகள் புன்சிரிக்கும் 

29) சிற்றஞ் சிறுகாலே 

30) வங்கக் கடல்கிளர்ந்த 

 

படிப்பவர்கள் உங்கள் ரசனையை மட்டுமின்றி விமரிசனத்தையும் எழுதுங்கள் தயங்காமல்.

(ஏனோ இந்த வேளையில் அமரராகிப் போன என் அம்மாவின் நினைவு வருகிறது. அந்தத் தள்ளாத வயதில் முப்பது திருப்பாவையையும் ஞாபகம் கொண்டு சொல்கிறேன் சரி பார் என்று சொன்னவள், சென்னையில், நான் மீண்டு வந்து ஆண்டாள் சந்நிதிக்குள் போனால் அங்கிருப்பவர் (எனக்கு முன்பின் தெரியாது) ‘வாருங்கள். கொஞ்சம் காத்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய் ஆண்டாளின் காக்கும் கரத்தின் சந்தனம் திரட்டிக் குளிகையாய்க் கொடுத்தவுடன் எனக்குப் புரியவில்லை, வெளியில் வந்து தாய்க்குத் தொலைபேசித் தெரிவித்துவிட்டு அவளுக்குச் சென்று கொடுத்துவிட்டேன். அவர்களுக்குள் ஏதோ பரிமாற்றமோ, யார் கண்டார். ஒரு வேளை எதேச்சையோ. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று என் அறிவு விரும்புகிறது.)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, December 16, 2024

நிலைப்பாடு 17

மரணம் என்பது பயம் தரும் ஒரு புதிராக இருக்கிறது. மரணத்திற்குப் பிற்றைய நிலையில் ஜீவனுக்கான உதவி என்பது பழம் மத நூல்கள் தரும் உபதேசங்கள்தாமே! நீங்கள் சாதாரண மனிதராகப் பொது புத்தி, அறிவியல், சமுதாய நல்வாழ்வு, அனைவரையும் சமமாய் மதித்துப் போற்றும் மனிதாபிமானம், புத்தகங்களைக் கற்று அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல் என்ற மாதிரியான சாதாரண மனித வாழ்க்கையைச் செவ்வனே வாழ்ந்தாலே போதும் என்றால் மரணம் நெருங்க நெருங்க உண்டாகும் அச்சத்திற்கு நீங்கள் சொல்லும் இந்தக் கைவைத்தியம் எல்லாம் போதுமானதாய் இருக்குமா? 

இது வெறும் கைவைத்தியம் என்று உங்களுக்கு யார் சொன்னார்? மனித அறிவின் வளர்ச்சி என்பதற்கான உலக வரலாற்றைப் பார்த்தால் என்ன தெரிய வருகிறது? விஞ்ஞானம் ஒரு துறையில் முனைந்து தெளிவான, துல்லியமான முடிவுகளைக் கண்டெடுக்கும் வரையில் அந்தத் துறையில் பயங்களும், பண்டைய அபிப்ராயங்களும், அமானுஷிகங்களோடு தொடர்புடைய மந்திரக்காரர்களின் அதிநிச்சயமான ஆக்ரோஷமான பிரகடனங்களும்தான் ஆட்சி புரிகின்றன. மக்களுக்கும் அதை விட்டால் வேறு கதி இல்லை என்று இருக்கிறது. இன்று நாம் சர்வ சாதாரணமாகத் தீர்த்துக் கொள்ளும் வியாதிகள் கூட ஒரு காலத்தில் எத்தகைய பீதி, மாயமந்திரம், அமானுஷம் என்பதற்கெல்லாம் ஆடுகளமாய் இருந்தன என்பதை நாம் அறிவோம்தானே! அங்கெல்லாம் சாதாரண மனிதரைக் குறித்து என்ன எதிர்பார்க்கப்பட்டது? ‘நடுங்கு.. கீழே குனிந்து வணங்கு... நீ ஒரு அற்பப் பதர். பெரும் பெரும் சக்திகள் எல்லாம் உன் மேல் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் இதோ அதீத நிலையில் ஆடுகின்ற இந்த மந்திரவாதி என்ன சொல்கிறாரோ அதை அப்படியே ஏன் எதற்கு என்று கேளாமல் கீழ்ப்படிவாய்! ஜாக்கிரதை!’ - இது போன்ற மனநிலைகள்தாமே எந்தத் துறையிலும் ஆண்டு கொண்டிருந்தன? அங்கெல்லாம் அறிவியல் முன்னேற முன்னேற, தெளிவான கருத்துகள், விழிப்பான சுய உணர்வுகள் ஏற்பட்டு, அறிவு விரிவடைந்தது. விளைவு என்ன? சாதாரண மனிதர்க்கான சுதந்திர வெளி நன்கு காப்பாற்றப் பட்டது. அன்றாட வாழ்வைச் சாதாரண மனிதர் எளிய முறையிலும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து நிறைவு பெறும் சாத்தியம் மிகுந்தது. அதுதானே முன்னேற்றம்? அதைப் போல மரணம் என்ற வாழ்வு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியும் வெற்று பயங்கள், அதீத மந்திரவாதங்கள், பண்டைய நூல்களின் அபிப்ராயங்கள், அமானுஷிகம் என்னும் மிரட்டுச் சூழ்நிலைகள் எல்லாம் மாறி, அறிவியல் ரீதியான ஆய்வுகள், அனைவருக்கும் பொதுவான அனுபவங்களுக்குப் பொருந்திய கருத்துகள் என்று உருவாகிக் கொண்டிருக்கின்றனவே நம் காலத்தில். OBE, (Out of Body Experiences), NDE (Near Death Experiences) என்றெல்லாம் பல்லாயிரக் கணக்கான ஆய்வுகள் இன்று உலகில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கையையே முற்றிலும் இந்த ஆய்வுகளுக்கு என்று செலவிடும் நிபுணர்கள், டாக்டர்கள் உலகெங்கும் பலர் இருக்கின்றனர். மருத்துவ ரீதியாக ஒருவர் இறந்து விட்டார் என்று சொல்லப்படும் நிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து மீண்டும் உயிர் இயங்கி வரப்பெற்றவர்களின் அனுபவங்களை உடனேயே பதிவுகள் செய்து அவற்றை வைத்துப் பொதுவான தன்மைகள் என்ன? அந்தத் தன்மைகள் நாம் வாழ வேண்டிய வாழ்க்கையைக் குறித்துப் புகட்டுவது என்ன? என்றெல்லாம் பல காரணிகளை வைத்து ஆய்வுகள் நடக்கின்றன. அவையெல்லாம் புகட்டுகின்ற பெரும் பாடமே சாதாரண மனிதர்களின் அறிவும், அன்பும் மிக்க, மனிதாபிமானம் நிறைந்த கனிவான வாழ்க்கையும், ஒற்றுமை உணர்வும்தானே! எனவே எதிர்கால மனிதர் மட்டுமல்ல, இன்றைய மனிதரே கூட மரணத்தையும், மரணத்தின் பிந்தைய நிலையையும் பற்றி அறிவியல் பூர்வமான அனுமானங்களைப் பெறுவதற்கு வாய்ப்புகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***