Wednesday, January 28, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் 29

பொதுவாக ஒரு நூலோ அல்லது ஒரு ஸ்தோத்திரமோ செய்பவர்கள் எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசிப் பகுதியில் அந்த நூலை, சுலோகத்தைப் படிப்பதன் பலன், அவசியம், செய்தவரின் நோக்கம் என்று பொதுவாகச் சொல்லி முடிப்பார்கள். ஆனால் ஸ்ரீஆதிசங்கரர் இந்தக் கடைசி சுலோகத்தில் மிகச் சிறந்த செய்தியையே நமக்குத் தருகிறார். ஆத்ம சாதகர்களுக்கான மிக முக்கியமான குறிப்பையும், மக்களுக்கு மிகவும் அத்யாவசியமான தெளிவையும், பொதுவாக ஹிந்துமதம் என்பதன் உயிர்நாடியையும் ஒருங்கே அளிக்கும் வண்ணம் பகவத் பாதர் எழுதியிருப்பது மீண்டும் மீண்டும் படித்து இன்புறத் தக்கதாகும். 

உலகில் இருட்டு என்பது கொடியது. ஒளியின் இல்லாமை இருட்டு. ஒளியின் விளக்கத்தில்தான் வாழ்வு துலங்குகிறது. பொருள் இருந்தாலும், காணும் கருவி இருந்தாலும், காட்டும் ஒளி இல்லையேல் காட்சி இல்லை. 

பலவித இருட்டுகள் இருக்கின்றன. புற இருட்டு என்பதே மிகவும் தொந்தரவானது. அதிலும் அக இருட்டு என்றால் கேட்கவே வேண்டாம். தெளிவும், ஊக்கமும் இல்லாத குழப்பம் அக இருட்டு. உள்ளத்தில் தன்னம்பிக்கையும், பெருமை உணர்வும் தான் ஒருவர்க்கு உண்மையில் அகத்தின் ஒளி என்கிறார் திருவள்ளுவர். ‘ஒளி ஒருவர்க்கு உள்ள வெறுக்கை’. 

உள்ளத்தின் ஒளியைப் பெருக்க உன்னதமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். Be a light unto yourself என்றார் பகவான் புத்தர். அவ்வாறு உள் ஒளியாய் ஒவ்வொருவரும் இலக வழி சொல்கிறார் சங்கரர். ஒவ்வொரு ஒளியும் அணைந்து விட்டால் பின் எது ஒளியாய் இருக்கும் என்று கேட்டுப் பல ஒளிகளைச் சொல்லிக் கடைசியில் எல்லா ஒளிகளும் இல்லாமல் போன பின்பும் நிலைத்து என்றும் மறையாது உயிர்க்கு உற்ற ஒளியாய் இருப்பது ஆத்ம ஒளி என்று உபநிஷதம் சொல்கிறது. அதை நினைவு படுத்துகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

உள்ள வெறுக்கை என்கிறார் திருவள்ளுவர். வெறுக்கை என்றால் பெருமை உணர்வு. ஓர் உன்னத இலட்சியத்தின்பால் மனிதர் ஈர்க்கப்படும் பொழுது அவர்களுடைய முழு சிந்தனையும், உள்ளமும், ஆர்வமும் எல்லாம் அந்த இலட்சியத்தில் குவிவதை இந்த உள்ள வெறுக்கை என்பது குறிக்கிறது. அப்பொழுது மனிதர் தம் அகத்துள் சிதறுண்டு நிற்காமல் ஒரே உணர்வாகத் திரண்டு இயங்குவதை யோகிகள் இதயம் என்று குறியீட்டு மொழியில் உணர்த்துகின்றனர். இது உடலில் இடப்பக்கம் இருக்கும் உறுப்பான இதயம் என்பதைக் குறிப்பது அன்று. 

உள்ளம் ஒன்றித்துத் திரண்ட உயிர்கெழு ஆர்வம் என்பதை உருவகப்படுத்த உற்ற சித்திரம் கமலம். எனவே இதய கமலம் என்று உரைக்கின்றனர் யோகிகள். புற உலகில் மொட்டாக இருக்கும் தாமரையை மலரச் செய்ய சூரியனின் கதிர்கள் அந்தக் கமலத்தின் மீது படுவது போன்று, அக உலகில் இதய கமலத்தை மலர்த்தும் கதிர், ஆத்ம ஒளி ஆகும். இந்த ஆத்ம ஒளிதான், கற்று அறிந்து பயின்ற கலைகள் அனைத்தின் சாரமும், முடிவுமாக இருப்பது. எனவே ஆத்ம ஞானம் என்பதை வேத ஸாரம் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

அத்வைதத்தின் உயிரான கருத்து ‘பிரம்மம் ஒன்றே உண்மை. உலகம் வெறும் மித்யையே. இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே. வேறன்று’ என்னும் இதுதான். இதைத்தான் ‘ப்ரஹ்ம சத்யம் ஜகன் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:’ என்னும் வாக்கியம் உணர்த்துகிறது. 

இந்தக் கருத்தின் நுணுகிய திரண்ட வடிவாக இருப்பது பிரணவம் என்னும் ஓம். பிரணவம் மூன்று எழுத்துகளைக் கொண்டு உருவானது. அ, உ, ம் என்னும் மூன்று எழுத்துகள் அவை. அ, உ இரண்டும் சேர்ந்து ஓ என்று ஆகி, ம் என்பதுடன் சேர்ந்து ஓம் என்று ஆகிறது. இந்த எழுத்துகளின் அமைப்பு ரீதியான உட்பொருளில் அத்வைதத்தின் ஆன்ற மறைமுடிவான கருத்து அடங்கியிருக்கிறது. இலக்கண ரீதியாகப் பார்த்தால் இந்த எழுத்துகள் தம்மளவிலேயே அர்த்தங்கள் உடையன. ‘அ’ என்பது பிரம்மத்தைக் குறிக்கும் எழுத்து ஆகும். ‘ம்’ என்பது ஜீவனைக் குறிக்கும் சொல்லாகும். ‘உ’ என்பது ’அதுவே’ என்னும் பொருள்தரும் ஏவகாரம் என்பதை உணர்த்தும் குறிப்பு எழுத்து. ஏவகாரம் என்பது ஒன்று அதுவேதான் என்று வலியுறுத்திச் சொல்வது. ஏன் ம் என்பது ஜீவனைக் குறிக்கும் எழுத்து என்று சொல்கிறோம்? அதற்குக் காரணம் இருக்கிறது. வேதாந்தத்தில் உலக தத்துவங்கள் ஆன 24 தத்துவங்களை (அதாவது ஞான இந்ந்திரியங்கள் 5, கர்ம இந்திரியங்கள் 5, இந்திரிய உணர்ச்சிகள் 5, பூதங்கள் 5, அந்தக்கரணம் ஆகிய மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் நான்கு - மொத்தம் 24) வடமொழி அரிச்சுவடி ரீதியாக க, க2, க3, க4, ஞ, ச, ச2, ஜ, ஜ2 என்ற வரிசையில் நிரல்படுத்திக் கொண்டே வருவார்கள். அப்படியே ப4 வரை 24 தத்துவங்கள் வரிசைபடுத்தப் படும். 25 ஆவதாக வரும் எழுத்து ‘ம’ என்பதாகும். அதை 25 ஆவது தத்துவமான ஜீவன் என்பதைக் குறிக்கப் பயன்படுத்துவார்கள். எனவேதான் ஜீவனுக்கே மகார வாச்யன் (ம என்னும் எழுத்தின் பொருளாக இருப்பவன்) அல்லது பஞ்சவிம்சதியான தத்துவம் (பஞ்சவிமசதி - 25, 25 ஆம் தத்துவம்) என்று பெயர் சொல்வார்கள். இப்பொழுது அ, உ, ம் என்னும் எழுத்துகளை வரிசையாக வைத்து அந்த எழுத்து உணர்த்தும் தத்துவத்தை நினைத்துப் பாருங்கள். அ + உ+ ம் = பிரம்மம் + அதுவே + ஜீவன். அதாவது ‘பிரம்மம் ஒன்றே சத்யம். இந்த உலகம் உண்மையில் சத்யமன்று. இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே’ என்னும் அத்வைத சாரமான, வேத ஸாரமான கருத்தையே அ, உ, ம் என்னும் எழுத்துகள் தம்மளவிலேயே உணர்த்துவதைக் காணலாம். எனவேதான் இதய கமலத்தில் ஒளிரும் ஆத்ம தீபத்தையே பிரணவமயம் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

ஓம் என்பதை விரித்தால் அ + உ + ம். இந்த மூன்று எழுத்துகளை விளக்கினால் அதுவே அத்வைத ஸாராம்சம். 

அறிவுகள் அனைத்தும் உணர்வை அடிப்படையாக கொண்டன. உணர்வோ நம்முள் இருப்பது. நாம் உணர்வுமயமாக இருக்கிறோம். சித்கனம் ஆக இருப்பது ஆத்மா. உணர்வு இருக்கப் போய்த்தான் உலகமே நம்க்கு இருப்பு உடையதாக ஆகிறது. அப்படி இருக்கும் போது இந்த உணர்வை நமக்குப் புறத்தில் இட்டு அறிய முயல முடியாது. ஏனெனில் உணர்வை புறத்தில் இட்டால் அப்பொழுது நாம் உணர்வு இல்லாத ஒன்றாக ஆகவேண்டும். அப்பொழுது அறிவோ உலகமோ என்ற பேச்சே இல்லை. எனவேதான் சித் மயமாக் இருக்கும் ஆத்மாவை, உணர்வுமயனை ஒருநாளும் தர்க்கம் கொண்டு, அல்லது அனுமானம், ஊஹம் முதலியன் கொண்டு அணுகவே முடியாது. பின் நாம் எப்படி ஆத்மாவை உணர்கிறோம் என்ற கேள்வியே பொருளற்றது. ஏனெனில் நாம் உணர்வதே ஆத்மா அடிப்படையாகத்தான். ‘விஞ்ஜாதாரம் கேன விஜானீயாத்?’ என்று கேட்கிறது உபநிஷதம். உணர்பவனை எதைக் கொண்டு உணர்வது? எனவேதான் பிரணவமயமான் ஆத்ம தீபம்தான் அனைத்தையும் நமக்குப் புலப்படுத்துகிறது. ஆனால் அதுவோ தர்க்கத்துக்கு எட்டாதது. ‘அதர்க்யம்’ என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

தர்க்கத்துக்கு எட்டாதது. புறத்தில் இட்டு ஒரு பொருள் போல் அறிய முடியாதது. என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? கையில் ஒரு டார்ச் இருக்கிறது. இருட்டில் இருக்கும் பொருளைப் பார்க்க அந்த டார்ச்சைப் பயன்படுத்துகிறோம். அது ஒளி பாய்ச்சி அந்தப் பொருளைக் காட்டுகிறது. அந்தப் பொருளில் இருக்கும் பிரச்சனையை இந்த டார்ச் ஒளிகொண்டு சரி செய்கிறோம். டார்ச்சுக்குள்ளேயே ஒரு பிரச்சனை. உடனே ஒடித்து வளைத்து டார்ச்சுக்குள் அந்த டார்ச் ஒளியை அடித்துப் பார்க்கவா முயற்சி செய்கிறோம்? உடனே டார்ச்சைத் தனித்தனியாக கழட்டி உள்ளே முதலில் அடிப்படையாக இருக்கும் கருவியின் உப பொருளில் என்ன ஆயிற்று என்று நோக்குகிறோம். 

டார்ச்சின் ஒளியைக் கொண்டு நாம் புறப்பொருளில் இருக்கும் பிரச்சனையைப் பார்ப்பது தர்க்கம். டார்ச்சினுள் இருக்கும் பிரச்சனையைப் பார்க்க டார்ச்சையே தனித்தனியாக அலசிப் பார்க்கிறோமே அதை எதற்கு உவமையாகச் சொல்லலாம்.? அதைத்தான் யோகிகள் தியானத்தில் ஆழ்ந்து புரிந்துகொள்ள முயலும் பிரச்சனைக்கு உவமையாகச் சொல்லலாம். உணர்வின் மயமாக அகத்துள் அமைந்துள்ள ஆத்மாவைப் பார்க்க உற்ற வழியாக யோகத்தில் ஆழ்ந்த தியானம் உதவுகிறது. தியானம் என்பது புறத்தைத் தள்ளி அகத்தை அலசி உற்று உணர்ந்து நோக்குதல். 

Atman is not understood inductively or deductively but you become aware of it by intuition

அதனால்தான் அரிஸ்டாடில் Contemplation is the activity of Gods என்றார். 

எனவேதான் ஸ்ரீஆதிசங்கரர் சொல்கிறார், இந்த ஆத்மா யோகிகளால் தியானத்தில் அடையப்படுகிறது. 

சிலர் நினைக்கலாம். நாங்கள் எல்லாம் விஷ்ணுவை வணங்குபவர்கள். நாங்கள் சிவனை வணங்குபவர்கள். எங்கள் குருமார் வேறு. அவர்கள் சொன்ன மார்க்கங்கள் வேறு. எங்களுக்கும் அத்வைதம் சொல்லும் இந்தக் கருத்திற்கும் என்ன சம்பந்தம்? சிவன், விஷ்ணு என்பதால் இரண்டு வழி என்றில்லை. மற்ற தெய்வங்களை வணங்குபவர்களையும் குறிக்கின்றதுதான். இப்படி அந்த அந்தத் தெய்வ வழிபாட்டைச் சொல்லக் கூடியது அந்த அந்த நெறிக்கான ஆகம சாத்திரம். எந்த ஆகம சாத்திரம் ஆகட்டும், அது சைவ ஆகமமோ, வைஷ்ணவ ஆகமமோ, சாக்தமோ, காணாபத்யமோ, கௌமாரமோ, அல்லது சூரியனை வழிபடும் சௌரமோ எதுவானாலும் அந்தத் தெய்வத்தைப் பற்றிச் சொல்லும் போது, அந்தத் தெய்வம் எதுவே வடிவானது என்று சொல்கிறார்கள்? ஏதாவது பொருளால் ஆனது என்றா சொல்கிறார்கள்? இல்லை. எந்தத் தெய்வ வடிவாயினும் அது சித் வடிவே ஆனது என்றுதான் எந்த ஆகமமும் சொல்லக்கூடிய வார்த்தை. 

சித ஆத்மகம், சின்மயம், சித்கன ரூபம் என்று சொல்லாமல் எந்தத் தெய்வத்தையும் யாரும் விவரிப்பதில்லை. ஸ்ரீஆதிசங்கரர் சொல்வதோ அந்தச் சித் கனம், சித் மயம் என்பதைத்தான் பிரம்மம் என்கிறார். அதுமட்டுமன்று. விஷ்ணு என்றால் எங்கும் விரிந்தது என்ற பொருள். பிரம்மத்தைக் குறிக்கும் பெயர். சிவம் என்றால் மங்களம், நன்மையே வடிவானது என்று பொருள். பிரம்மத்தைத் தவிர மங்களமானதும், நன்மையே வடிவானதும் வேறு எது? 

குரு என்னும் பதமே அர்த்தம் நிறைந்தது. அஞ்ஞானம் என்னும் இருட்டை நீக்கி விளக்கம் பெய்யும் ஒளியாய் இருப்பது குரு என்னும் தத்துவம். பிரம்மம் தன்னளவில் ஒற்றை ஒரே சத்யமாய் இருக்கலாம். சத்யம், ஞானம், அநந்தம், ஆநந்தம் என்று பிரம்மத்தின் இயல்பை எடுத்துக் கூறுகிறது உபநிஷதம். உலகமோ, நாமோ உண்மையில் இருக்கும் சத்யம் இல்லை என்றும் இருக்கலாம். அஞ்ஞானத்தில் பந்தப்பட்ட நிலையும், அதனால் நாம் கொள்ளும் ஓராயிரம் பிரமைகளும் சிறிதும் அடிப்படை அற்ற நிலைமாற்றத் தோற்றங்களேயாக இருக்கலாம். ஆனால் அஞ்ஞானம் விலகி நம் உண்மை இயல்பை உணரும் பொழுதுதான் அந்த ஞானம் நம் தாகத்தைத் தணிக்கும். அதுவரை தொடரும் அவஸ்தையினின்றும் விடுதலையை மித்யையோடு கலந்து வந்து நமக்களிக்கும் அருள் அதே பிரம்மத்தின் இயல்பில் இருக்கப் போய்த்தான் நமக்கு அத்வைதமே கிடைக்கிறது. அந்த அருள்முகம் பிரம்மத்தின் குரு தத்துவம். 

குரு எந்த வடிவத்திலும் வரலாம். ஸ்ரீமத் பாகவதத்தில் யதுமகாராஜனுக்கும் ஒரு பிரம்ம ஞானிக்கும் நட்ந்த உரையாடலாக எழுதும் போது அந்தப் பிரம்ம ஞானி தமக்குக் குருவாக 24 பேர்கள் அமைந்தனர் என்று கூறுகிறார். அந்த 24 ஒரு வினோதமான வரிசை.’பூமி, காற்று, ஆகாயம், ஜலம், அக்கினி, சந்திரன், சூரியன், மாடப்புறா, மலைப்பாம்பு, சமுத்திரம், விட்டில்பூச்சி, தேனீ, யானை, தேனெடுப்பவன், மான், மீன், பிங்களை என்னும் வேசி, குரரப்பக்ஷி, குழந்தை, குமரி, அம்புதொடுப்பவன், பாம்பு, சிலந்திப் பூச்சி, குளவி என்று 24 பேர்கள் தமக்குக் குருவாக இருந்தனர் என்கிறார் பிரம்ம ஞானி. அதாவது அதன் பொருள் ஒருவருக்கு அவருடைய ஆத்மாவே குருவாக உள்ளிருந்து நடத்துகிறது என்பதை ஸ்ரீகிருஷ்ணன் அப்பொழுது விளக்குகிறார் உத்தவரிடம். 

‘ஒரு மனிதருடைய ஆத்மாவுக்குச் சிறப்பாக அவருடைய ஆத்மாவேதான் குருவாக அமைகிறது. ஏனெனில் ஆத்மாவின் உந்துதலால் ஒரு மனிதர் தம் பிரத்யக்ஷத்தாலும், அனுமானத்தாலும் கூட உயர்நலனை அடைகிறார்கள்.’ (ஆத்மனோ குருர் ஆத்மைவ புருஷஸ்ய விசேஷத:| யத் ப்ரத்யக்ஷானுமானாப்யாம் ச்ரேயோSஸாவநுவிந்ததே || ) (11.7.20) 

எதேச்சையாக நம் கையில் கிடைக்கும் நூல், நாம் சந்திக்கும் மனிதர், நமக்கு நடக்கும் ஒரு நிகழ்ச்சி, நம் கண்முன் நடக்கும் ஒரு காட்சி, ஏன் ஏதோ ஒரு பறவை, ஏதொ ஒரு விலங்கு என்று எந்த ரூபத்திலும் பிரம்மத்தின் குரு முகம், அருள் பாய்வு நடந்தாலன்றி மாயைத் திரையும் கிழிவதில்லை. அப்பால் நிற்பது போல் நின்று குமிணகைக்கும் பரமசிவமோ, அறிதுயில் அமர்ந்து அனைத்தும் அறிந்த குறும்பில் புன்னகைக்கும் ஆதிநாராயணமோ அப்பொழுதுதான் நம் கனவு இரிந்த நிதர்சனமாய் நமக்கும் அர்த்தப் படுகிறது. 

இதையே தேஜோபிந்து உபநிஷத் கூறுகிறது. ‘பகுதியாக்கப் படாமல் ஒரே முழுமையான சைதன்ய ரஸம்தான் பிரம்மா, அதே சைதன்ய ரஸமே ஹரி, அதே சைதன்ய ரஸமே ருத்ரர், அதே சைதன்ய ரஸமே நான், அதே சைத்ன்ய ரஸமே ஆத்மா, அதே சைதன்ய ரஸமே குரு’ (அகண்டைக ரஸோ ப்ரஹ்ம, அகண்டைக ரஸோ ஹரி:, அகண்டைக ரஸோ ருத்ர, அகண்டைக ரஸோSஸ்மி அஹம், அகண்டைக ரஸோஹி ஆத்மா ஹி அகண்டைக ரஸோ குரு:) (2.5-6). 

வேத ஸாரத்தைச் சொல்ல வந்த ஸ்ரீஆதிசங்கரரும் அதையே சொல்கிறார். விஷ்ணு, சிவம், குரு அனைத்தும் ஒன்று கலந்தது பிரம்மம். அதுவே உன் இதய கமலத்தில் இருள் கடியும் ஆத்ம தீபமாக இருப்பது. அவ்வாறு அதை நீ தியானம் செய்வாயாக. 

அனைத்து உயிர்களிலும் அந்த ஒளி, ஆத்மா என்ற பிரம்மம் திகழ்கிறது. என்றால் பலப்பல ஜீவர்கள் போல் தோன்றினாலும் ஒரே ஆத்மாவாகத் திகழ்கிறது. ஒளிரும் சூரியன் ஒன்றுதான். ஆனால் பல நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கும் சூரியன்கள் பல போன்று தோன்றினாலும் உள்ள சூரியன் ஒன்றேதான். 

ஒருமுறை விலகிய இருள் மீண்டும் வந்து ஒட்டுவதில்லை. ஒரு முறை கலைந்த கனவு மீண்டும் வந்து தொடர்வதில்லை. ’பயப்படும் குழந்தை முகமூடி போட்டு ஆடும் நபர் தன் தந்தை என்று உணர்ந்ததும் பின்னர்ப் பயப்படுவதில்லை’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதுபோல் ஒரே ஒரு முறை நன்கு சிந்தித்து இந்தப் பிரம்மத்தைப் புரிந்துகொண்டு விட்டால் பின்னர் அந்த மனிதர் முக்தர்தான் என்று கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

’இதய கமலத்தின் உள்ளே 

இலகும் தீபமாய் வேத சாரம் 

பிரணவமயமாய், தர்க்கம் கடந்து, 

தியானத்தில் யோகிகளால் அடையப்படும். 

ஹரி, குரு, சிவம் கலந்த யோகம் 

அனைத்து உயிரிலும் திகழும் ஏகம் 

ஒருமுறை மனத்தால் சிந்தித்து உணர்ந்தால் 

போதும் அவர் முக்தரே ஆவார்.’ 

(ஹ்ருதயகமல மத்யே தீபவத் வேதஸாரம் 

ப்ரணவமயம் அதர்க்யம் யோகிபிர் த்யானகம்யம் | 

ஹரிகுருசிவ யோகம் ஸர்வபூதஸ்தம் ஏகம் 

ஸக்ருதபி மநஸா வை சிந்தயேத் ய: ஸ முக்த: || ) 

முற்றும். 

சுபம். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, January 26, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் 28

பன்மைதான் நமக்குப் பழக்கப்பட்ட ஒன்று. வேறு, வேறு, வேறு விஷயங்களில் போய்க் கொண்டிருக்கும் மனம் உடைய பிராணிகள் நாம். இந்தப் பன்மையை ஆராய உட்கார்ந்தோமானால் எந்த ஒரு பொருளும் தன்னளவில் முடிந்த பொருளாக இல்லாமல் தான் ஏதோ ஒரு மூலப் பொருளின் தற்காலிக நிலையாகத்தான் நம் அனுபவத்திற்கு வருகிறது. உண்மையில் நிலைமாற்றங்களைத்தான் நாம் அனுபவிக்கும் பன்மையில் சந்திக்கிறோம். வெவ்வேறு பொருட்கள் என்று கருதி நடந்துகொள்வது நடைமுறைக்கும், நம் அனுபவத்திற்கும் பொருந்தி வருகிறது. இவ்வாறு பல பொருட்கள் என்று கருதி நடந்து கொள்வது பொய் என்று எந்தக் கணத்திலும் நம் அனுபவம் உடைப்பு விட்டுக் கொள்வதில்லை. ஒருவேளை நீண்ட அனுபவத்தினாலும், ஆழ்ந்த ஆராய்ச்சி உணர்வினாலும், தீவிரமான நுணுகி அவதானிக்கும் உண்மைத் தேட்டத்தினாலும் ஒரு சிலர்க்கு இந்த அனுபவச் சங்கிலி அறுபடும் கணங்கள் சாத்தியப்படலாம். அத்தகைய ஆத்ம சாதகர்களோ, அல்லது ஞானிகளோ தாங்கள் புரிந்துகொண்டதைப் பிறரும் அறியும்படியாகச் சொன்னதுதான் நமக்குப் படிக்கக் கிடைக்கும் அரிய அத்வைத வேதாந்த ஞான நூல்கள். இந்த விதத்தில் ஒரு தொடர்ச்சியான நூலகமே நமக்கு ஸ்ரீஆதிசங்கரரால் தரப்பட்டிருப்பது நாம் செய்த நல்வினையோ அல்லது அவருடைய காரணமற்ற கருணையோ! 

அவர் நமக்கு ஈறுநிற்கும் உண்மையை, அறுதியான தத்துவத்தை எப்பொழுதும் தொடர்ந்து சிந்திக்கும் வழியைச் சொல்லித்தர வேண்டிப் பாடியதுதான் இந்தப் பிரம்ம அனுசிந்தனம். இப்படிச் சிந்திப்பதால் என்ன பயன்? என்றுதான் நம்முடைய வரவு செலவு மனம் எண்ணுகிறது. ஆனால் நம்முடைய உண்மையான இயல்பு இதுதான் என்பதால் வியாபாரம், வியவகாரம் எல்லாம் கடந்த பரம அர்த்தம் என்று இதைப் போதிக்கிறார் பகவத் பாதர். 

நம்முடைய சாதாரண உலக அனுபவத்திலேயே எதற்காக அதைச் சேமித்து வைத்தோம் என்றே ஆரம்பத்தில் புரியாமல் எதற்கும் இருக்கட்டும் என்று போட்டு வைத்த பொருள் ஒன்று பின்னால் மிக முக்கியமான தருணத்தில் நம் உயிரையே காக்கும் பொருளாக அமைந்தது என்பதும் சிலருக்கு நடந்த அனுபவமாக இருக்கக் கூடுமே! அதுபோல் இருக்கட்டும் என்று மனத்தில் போட்டு வைப்போம். வேறு எவரும் மெனக்கெட்டு நமக்கென்று இதைச் சொல்லப் போவதில்லை. 

ஸ்ரீஆதிசங்கரர் சொல்கிறார், ‘இருப்பது ஒரே பொருள்தான். அதுதான் ஒரே சத்யம். ஒரு பொருள்தான் இருக்கிறது. இரண்டாவதாக ஒன்று இல்லை. அதாவது ஜீவன் என்றோ, உலகம் என்றோ பிரம்மத்துக்கு அந்நியமாக ஒன்று கிடையாது. சரி அந்நியமாக இருக்க வேண்டாம். பிரம்மத்திற்குள்ளேயே ஓர் ஓரத்தில் ஜீவனும் இருக்கட்டும், ஜகத்தும் இருக்கட்டுமே என்றாலும் அப்படியும் இல்லை. தனக்கு உள்ளேயும் பிரம்மம் மட்டுமே இருக்கிறது. தனக்கு வெளியே என்று சொல்வதற்கே வழியில்லை. 

அதாவது ஒன்றை விட்டு ஒன்று வேறு என்று சொல்வது மூன்று விதங்களில் இருக்கலாம். தன்னைப் போல் ஒன்று, தன்னை விட வேறான ஒன்று, தனக்குள்ளேயே வேறாக இருக்கும் ஒன்று - இப்படி மூன்று விதங்கள். இவற்றுக்கு ஸஜாதீயம், விஜாதீயம், ஸ்வகதம் என்று பெயர். தன்னைப் போல் ஒன்று - ஸஜாதீயம், தன்னை விட வேறான ஒன்று - விஜாதீயம், தனக்குள்ளேயே வேறான ஒன்று - ஸ்வகதம். 

நீங்கள் ஒரு மனிதனைப் பார்க்கிறீர்கள். நீங்களும் மனிதர். அவரும் மனிதர். இருவருமே மனிதர் என்ற வகையைச் சேர்ந்தவர்கள். ஆனால் வேறு வேறான நபர்கள். இது ஸஜாதீய பேதம். அங்கு ஒரு மரத்தை அல்லது விலங்கைப் பார்க்கிறீர்கள். நீங்கள் மனிதர், அது ஒரு மரம் அல்லது விலங்கு. ஆனால் வேறு. நீங்கள் மனித வகை. அதுவோ மரம் அல்லது விலங்கு வகை. எனவே விஜாதீய பேதம். உங்கள் உடம்பிலேயே பார்க்கிறீர்கள். கை, கால், தலை, தலைக்குள் கண், காது, மூக்கு என்று வேறு வேறு அவயவங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒருவருக்குள்ளேயே இவ்வளவு அவயவ பேதங்கள். இது ஸ்வகத பேதம். இந்த மூன்று விதமான வேறுபாடுகளும் இல்லாத, இருக்கின்ற ஒற்றை உண்மைப் பொருள் பிரம்மமே என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். வேறு எதுவும் இங்கு இல்லை என்று எதிர்மறையாகவும் சொல்லி ஃபைலைக் குளோஸ் செய்துவிடுகிறார். 

‘ஒன்றே இருக்கிறது; 

இரண்டாவதாக எதுவும் இல்லை; 

பிரம்மத்தைத் தவிர இங்கு வேறெதுவும் இல்லை.’ 

(ஏகமேவ அத்விதீயம் வை ப்ரஹ்மணோ நேஹ கிஞ்சந | ) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, January 23, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் 27

உலகத்தில் கடவுள், பக்தி, மறுமை அல்லது தீர்ப்பு நாள் என்று மனிதர்கள் கதியைப் பற்றிப் போதிக்கும் நூல்கள் பல உண்டு. ஆனால் மனிதர் உண்மையில் இந்தமாதிரித் தோன்றி வளர்ந்து அலைந்து முதுமை எய்திப் பின் மாயும் ஸம்ஸாரியான பிராணி இல்லை. அறிவே வடிவானதும், என்றும் உளதன்மையும், உணர்வே ஆனந்த வடிவமான அந்த ஒரே உன்னதமான பிரம்மமேதான். இப்படி ஸம்ஸாரிகள் போல் வியவாகாரிக (நடைமுறை நடவடிக்கைச் செயல் நிலை) நிலையில் ஏற்படும் அனுபவமும், காட்சியும் தன் சொந்த இயல்பைப் பற்றிய ஆத்ம ஞானம் உதயம் ஆகும் போது வெறும் மித்யை என்று தெரியும். தான் என்றுமே அந்த சத் சித் ஆனந்த பிரம்மமாகவே இருக்கின்றோம் என்பது நிதர்சனமான சத்யமான, மறையாத அனுபவமாகக் கிடைக்கும் என்ற சிறந்த கருத்து எந்த நூலிலும் எந்தக் காலத்தும் வேறு எங்கும் இல்லை. 

உலகத்தின் நல்ல காலம், நம் பாரதத்தில் வேதாந்தம் என்று சேமிக்கப்பட்டு இன்றுவரை பெரும் வாய்ப்பை நல்கும் அன்னபூரணியாக இருக்கிறது. நினைத்துப் பாருங்கள். இதே வேதாந்தம் உலகில் வேறு எங்குத் தோன்றியிருந்தாலும் என்றோ மறைந்து போயிருக்கும். இது ஒரு கருத்தா என்று அன்றைய உலகம் ஒதுக்கிவிட்டுப் போயிருக்கும். இங்கோ அதற்கே வாழ்க்கையை மாறி மாறி அர்ப்பணித்த ரிஷிகள், மகான்கள், யோகிகள், ஆண்களில், பெண்களில், இளையோரில், முதியவர்களில் இந்தியாவின் மூலைமுடுக்குகளில் எல்லாம், கிராமப்புறப் பாடல்களில், யாத்ரா நாடகங்களில், பலவேறு ரூபங்களில் இந்தியாவே காதலித்த ஒற்றைக் கருத்தாக இந்த அத்வைத வேதாந்தம் பரவி தழைத்து வந்திருக்கிறதே... இதை நினைத்தால் நமக்கே பெரும் வியப்பும், ஆயாசமும் ஒருங்கே தோன்றுகிறது. 

இந்த அரும்பெரும் உலகளாவிய மூலதனத்தின் சுரங்கமாக நம் பண்பாடு திகழ்வதற்குப் பெரும் காரணம் அந்த ஒற்றை இளைஞர், நாற்பது வயது எட்டவில்லை, அதற்குள் அளப்பரிய பணிகள் - ஆம் ஆதிசங்கரர்தான். சங்கரர் லோக சங்கரர் என்பது எவ்வளவு சத்ய வாக்கு! 

அவர் போட்ட விதை என்ன விளைவு! சங்கராநந்தர் என்று ஒரு மகான். பஞ்சதசி அருளிய வித்யாரண்யரின் குரு. சங்கராநந்தர் அருளியது ஆத்ம புராணம் என்னும் நூல். 13 - 14 நூற். பெரும்யோகி. லம்பிகாயோகம் என்னும் முறையால் நெடுநாள் பூமிக்குள் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. புராணங்கள் அனைத்தின் நோக்கமும் ஆத்மஞானம் என்னும் போது ஆத்மபுராணம் என்றே ஒரு கிரந்தம் எழுதியது சாலவும் சிறந்தது. நாமெல்லாம் ‘நான்புராணம்’ எழுதுவதில் வல்லவர்கள். எப்பொழுது பார்த்தாலும், எதைத் தொட்டாலும் ‘நான் அப்படி, நான் இப்படி’ என்று ஒரு கணமும் ஓய்வின்றி நாம் பாராயணம் செய்வது ‘நான் புராணமே’ அல்லவா! அதை மாற்றி ஆத்ம புராணம் என்று யோசிக்கக் கற்றால் அடையவேண்டியது அடையப்பட்டதாகும் என்று நினைத்தாரோ என்னவோ!

இந்த ஆத்ம புராணத்தை ஒருவர் ஹிந்தியில் மொழிபெயர்த்தார் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர். அவர் எங்குப் பிறந்தார் எப்பொழுது என்ற விவரங்கள் அகப்படவில்லை. அவர் பெயர் சுவாமி சித்கனானந்தகிரி என்பதாகும். சிந்துதேசத்தில் பிறந்தவர் என்று அத்தேசத்தவர்கள் சொல்லுகின்றனர். இவருடைய ப்ரஹ்மச்சர்ய ஆஸ்ரமத்தின் போது ஹரித்வாரில் இருக்கும் கனகல் என்னும் தீரத்தில் இருந்து நியாய வியாகரணங்கள் வாசித்துப் பின்னர் வேதாந்தம் பயிலக் காசிக்ஷேத்ரம் சென்றடைந்தார் என்று தெரிகிறது. அங்கு ஸ்ரீபரமஹம்ஸ பரிவ்ராஜகாசாரியரான சுவாமி உத்தவாநந்தகிரி என்பவரிடம் சந்நியாச தீக்ஷை பெற்றார். பிறகு சிலகாலம் மனம் முற்றிலும் ஒடுங்கி நிர்விகற்பசமாதியில் ஆழ்ந்திருந்தார். பின்னர்த் தம் பணி ஏதோ இருப்பது போன்று தெய்வசங்கல்பத்தினால் தீர்த்த யாத்திரை என்று புறப்பட்டுப் பலகோவில்களைத் தரிசித்து, கத்தியவாட்டில் இருக்கும் பவநகர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்குத் திவான்களாக இருந்த ஸ்ரீகௌரிசங்கர், விஜயசங்கர் என்னும் அதிபக்குவிகளான சாதகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப அங்கேயே பதின்மூன்று ஆண்டுகாலம் இருந்து பலநூல்களை அருளினார். திவான்கள் வேண்டிக்கொண்டதற்கேற்ப ஹிந்திபாஷையில் நான்கு முக்கியமான பெட்டகம் அனைய நூல்களைத் தந்தார். சங்கராநந்தரின் ஆத்மபுராணம், ஸ்ரீபகவத்கீதைக்குக் கூடார்த்ததீபிகை, ப்ரஹ்ம ஸூத்ரங்களின் அர்த்தங்கள் நிரம்பியதான தத்வாநுஸந்தானம், பல நியாயநூல்களின் கருத்துகளை ஒருங்குறத் தொகுத்துத் தந்ததான நியாயப்பிரகாசம் என்பவையே அந்நான்கு. கணாத தர்க்கம், கௌதம தர்க்கம் இரண்டையும் பயன்பாடு கருதி விளக்கம் சுருக்கமாகக் கூறிய நூல் நியாயப் பிரகாசம். நியாயம், வைசேஷிகம் என்னும் இரண்டு தர்சனங்களின் சாரம் எனலாம்.

இந்தநான்கு நூல்களையுமே தமிழில் கொண்டு வந்துள்ளனர் என்றால் மிகவும் அதிர்ச்சி அடையமாட்டீர்களே ! ஆம். ஆத்மபுராணம் கோவிலூர் மடாலயத்து ஸ்ரீ வீரசுப்பைய சுவாமிகளால் நல்ல தமிழ்நடையில் ஆக்கப்பட்டிருக்கிறது. சுவாமி சித்கனானந்த கிரி அவர்கள் அருளிய ஸ்ரீ பகவத் கீதையின் கூடார்த்ததீபிகை என்னும் நூலையும் ஸ்ரீ வீரசுப்பைய சுவாமிகளே தமிழில் கொண்டு வந்துள்ளார். ப்ரஹ்ம ஸூத்ர அர்த்தங்களை ஒருங்குறத் தெளிவிக்கும் நூலான தத்வாநுஸந்தானம் என்னும் நூலை ஸ்ரீ கா. அரங்கநாதம் பிள்ளை என்பவர் மொழி பெயர்த்துள்ளார். நியாயப்பிரகாசம் என்னும் பென்னம் பெரிய நூலினை ஸ்ரீ சாது இரத்தின வேதாந்த விசாரணை சபையினருள் ஒருவராகிய ஸ்ரீ நாகரத்தின நாயகர் மொழிபெயர்த்துள்ளார். அதனை வேதாந்த விசாரணைச் சபையில் ஒருவரும், தர்க்க வேதாந்த சாஸ்திரங்களில் வல்லுநரும் ஆகிய ஸ்ரீ முருகேச முதலியார் அவர்கள் நன்கு பரிசோதித்து வெளியிட்டுள்ளார். 1907 தொடங்கி இந்நான்கு நூல்களும் 1917க்குள் வந்து நிறைவேறியிருக்கின்றன. மொத்தம் 3500 சொச்சம் பக்கங்கள், மூன்று ஆயிரத்து ஐந்துநூறு, நுணுகிய பிரிண்டு. என்ன  சாதனை இது! இதை உணரும் போது உங்களுக்கு மயிர்க்கூச்செறியவில்லையா? இதுவோ நடந்த சாதனைகளில் ஒரு பத்துச் சதவிகிதம் அவ்வளவே.

நம்முன்னோர்கள் அவர்கள் ஸ்ரீ வீரசுப்பைய சுவாமிகளோ, ஸ்ரீ கரபாத்திர சுவாமிகளோ, ஸ்ரீ வடிவேலு செட்டியாரோ, ஸ்ரீ முருகேச முதலியாரோ, ஸ்ரீ நாகரத்தின நாயகரோ, ஸ்ரீ ராமசந்திர ஐயரோ, ஸ்ரீ சிவசுப்ரமண்ய ஐயரோ, ஸ்ரீ ராமசாமிப் பிள்ளையோ இன்னும் கணக்கில் அடங்காத பெரியோர்கள் அவர்கள் காலத்தில் ஹிந்து சமுதாயம் எப்படி ஒருங்குற இயங்கி அளப்பரிய சாதனைகள் இயற்ற இயலும், ஆன்மிகச் செல்வத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதை நமக்கு ஒளிமிகுந்த வழிகாட்டிகளாக நின்று செய்து காட்டவில்லையா? இத்தனைக்கும் வித்திட்டது அந்த ஒற்றை இளைஞர் அல்லவா? 

ஸ்ரீ ஆதிசங்கரர் பாடுவது சரிதானே? என்ன ஆதாரம் என்றால் வேதாந்தம், ஞானிகள், உன்னுடைய, என்னுடைய, அவரவருடைய சொந்த அனுபவமே சாட்சி சான்று. மேலும் பாடுகிறார்: 

‘பிரம்மமே தான் நான். (பிறந்து வளர்ந்து மறையும்) ஸம்ஸாரி அன்று; 

பிரம்மத்தைக் காட்டிலும் பிறிது எதுவும் இல்லை நான்; 

நான் இந்தத் தேகம் இல்லை; 

இந்தத் தேஹம் என்னுடையதும் இல்லை; 

நான் என்றும் உளனான ஸநாதனமேதான்’ 

(ப்ரஹ்மைவாஹம் ந ஸம்ஸாரி ந சாஹம் ப்ரஹ்மண: ப்ருதக் | 

நாஹம் தேஹோ ந மே தேஹ: கேவலோSஹம் ஸநாதந: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

 

Wednesday, January 21, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் 26

நாம் அன்றாடம் நம்மை எப்படி உணர்கிறோம்? எவ்வளவு பலவீனங்கள்! உடல் உபாதை. மனப் பயங்கள். இருக்கின்ற சிறு அறிவையும் சரிவரப் பயன்படுத்த முடியாமல் எல்லாம் சொதப்பும் நிலை. அகங்காரமோ இத்தனைக்கும் சொல்ல வேண்டாம். நம்முடைய கணக்கில் என்றும் குறையாமல் இருப்பது அதுதான். ஒரு விதத்தில் பார்த்தால் மிகவும் ’காமிக்’ ஆளுதான் நாம். நம்மைப் பார்த்து ஸ்ரீஆதிசங்கரர் இப்படிச் சொல்லுவதைப் பார்த்தால் நமக்குச் சிரிப்புதான் வரும். ‘பாவம். நல்ல மனுஷன்’.  

ஆனால் உண்மை உணர்ந்த அவர் தாம் உணர்ந்த உண்மையை உலகுக்கு உரைக்கும் போது எவ்வளவு தனிமையாக உணர்ந்திருப்பார்! பலரும் தாம் சொல்வதைக் கேலியாகத்தான் பார்ப்பார்கள் என்று உணர்ந்துதான் மிகவும் கருணையோடு, ஒரு தாயின் அக்கறையோடு இந்த உபதேசங்களைச் சுலோகங்களாகவாவது இட்டு வைத்துப் போவோம் என்று பாடுகிறார். 

மற்ற பக்திவழியைச் சார்ந்தவர்களுக்கு இந்த அளவு தனிமை இல்லை. ஏனெனில் மனிதர்கள் புன்மை நிறைந்தவர்கள், கர்ம மூட்டையைச் சுமந்து திரியும் ஐயோ பாவம் ஜீவன்கள் என்பதுதான் பக்தி மதங்கள் எதுவானாலும் அடிப்படை. அதைச் சொல்லும் முன்னரே மக்கள் ‘ஆமாம்.. ஆமாம்..’ என்று கூடவே பாட வருவார்கள். அவர்களுக்கும் அதுதான் வேண்டும். தங்கள் அன்றாடத்தில் கூட இருந்து பச்சாதாபப் பட ஒருவர் வந்தாரே என்று நன்றியோடு வருவார்கள். எல்லாம் சூனியம், ஆத்மாவும் இல்லை, உலகமும் இல்லை, எல்லாம் துக்கம் என்று சொன்னால் கேட்கவே வேண்டாம், அதைத்தான் நானும் நினைத்தேன் என்று உடன்படுவதற்கு நான் உளபட நாம் பலரும் முன்வருவோம். ஆனால் ஆதிசங்கரர் சொல்லவந்த விஷயம் அதுபோல் இல்லை. எனவேதான் எந்த உள்நோக்கமும் இன்றி வெறும் கருணையின் அடிப்படையில் சொல்பவர் ஸ்ரீஆதிசங்கரர் என்று சொல்கிறேன். உள்நோக்கம் இருப்பவர் மக்களைத் திரட்டுவதில் அக்கறை காட்டுவார். எதைச் சொன்னால் மக்கள் கூட்டம் விரும்பும் என்றுதான் பார்ப்பார். முற்றிலும் உண்மையின் பக்கம் நின்று பேசும் பேச்சு சங்கரரின் பேச்சு. 

ஆதிசங்கரர் ஆணித்தரமாக எதைப் பேசி, எழுதி, போதித்து நிறுவிவைத்துவிட்டுப் போனாரோ அந்த அத்வைத ரீதியான கருத்துகளை உலகெங்கணும் ஞானிகள் சிலர் பலர் சொல்ல முயன்று விட்டுவிட்டார்கள். காரணம் அங்கெல்லாம் இருக்கும் பண்பாடுகள், மதங்கள், மக்கள் பொது அபிப்ராயச் சூழல் அதையெல்லாம் சகிக்கவில்லை. இங்கோ ஆதிசங்கரருக்கும் முன்னாலிருந்தே மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கருத்துகள் தீவிரமாகத் தியானம், உபதேசம், அனுஷ்டானம் என்று ஞானிகள் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதனால்தான் இங்குக் கடவுளைப் பற்றிய சொல்லாடலே அத்வைதம்தான் என்று ஆகிவிட்டது. ஆம். சங்கரர் சொல்வதுபோல் நேரடியான அத்வைதம், இல்லையேல் விசிஷ்ட அத்வைதம், இல்லையேல் சுத்த அத்வைதம் என்று, எந்தவிதமான அத்வைதம் என்பதுதான் வேறுபாடாகக் கொள்ளப்பட்டதே அன்றி, ஔவைப் பாட்டி சொல்வது போல் ‘ஒன்றாகக் காண்பதே காட்சி’ என்று ஆகிவிட்டது. 

இல்லையேல் கிரேக்க ப்ளாட்டோவிற்குப் பின்தொடர்ச்சியாக வந்த (Plotinus) ப்ளோடினஸ் என்பார் அத்வைத ரீதியாகவே பேசுகிறார். ஆனால் அதற்குத் தொடர்ச்சி இல்லை. அரேபியா, பர்ஸியா போன்ற பண்பாடுகளில் ஸூஃபிக்கள் பேசுகின்றனர். ஆனால் அவர்களை அங்குத்தைய மக்களும் பண்பாடுகளும் ஏற்கவில்லை. அதாவது திருமூலர் சொல்வது போல் ‘பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்; பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே’ என்று பரம் சார்ந்த பார்வைகள் மனித குலத்தில் அங்கங்கே ஏற்பட்டாலும் அந்தப் பார்வை நிலைத்த தரிசனமாக நின்று நிறுவப்பட்டது நம் பாரதத்தில்தான். அந்தப் பார்வை பக்திமயமான உணர்ச்சி வழக்கங்களில் மறைந்து போகாமல் மனித சிந்தனைக்கும், முனைந்த ஆழ்ந்த விசாரத்திற்கும் கிட்டும்படி இன்றும் நூல்களாக உருப்பெற்றதற்கு முக்கியமான காரணமே ஸ்ரீஆதிசங்கரர்தான். எனவேதான் அவரை நாம் நம் நிலையில்  இருந்து கேட்கும் போது, ‘உண்மையாகவா? என்ன ஆதாரம்?’ என்றெல்லாம் புரியாமல் நாம் முழிக்கும் போது திண்ணமாகக் கூறுகிறார். 

‘இந்தப் பிரபஞ்சம் வெறும் மித்யைதான். 

ஒரே சத்யமான, அழிவற்ற பிரம்மமே நான்; 

அதற்குச் சான்று வேதாந்தமும், ஞானிகளும் 

நம் சொந்த அனுபவமுமே ஆகும்’ 

(அயம் ப்ரபஞ்சோ மித்யைவ ஸத்யம் ப்ரஹ்மாஹம் அவ்யயம் | 

அத்ர ப்ரமாணம் வேதாந்தா குரவோSநுபவஸ்ததா ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, January 19, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 24,25

நான் இதுதான், இவை இவைதான் சேர்ந்து நான் என்றெல்லாம் நினைத்த அனைத்தையும் நான் இல்லை என்று உணர்ந்து, நான் இவைக்கு உட்படாத, ஆனால் இவற்றால் உட்படுத்தப்பட்டது போல் தோற்றம் அளிக்கும் அந்த ஆத்மாவே நான் என்று தொடர்ந்து நினைப்பது வலிமையை நோக்கிய ஒரு பயிற்சி. அதைச் செய்வதற்கு நமக்கு ஊக்கம் அளிக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

அவ்வாறு ஆத்ம சிந்தனையிலேயே ஊன்றி நிற்கும் போது தோற்றம் அளிக்கும் உலகம், அதுவரை தான் பழகிவந்த இந்தப் பிரபஞ்சம் அனைத்தும் எப்படிக் காட்சி அளிக்கும்? ஆத்மா, சைதன்யம், உணர்வு என்று இருக்கப் போய்த்தான் இந்த உலகமே புலனாகிறது. எனவே இந்த உலகமே என்னிலிருந்துதான் தோற்றம் கொள்கிறது. என்னில்தான் நிலை பெற்றிருக்கிறது. என்னில்தான் லயம் அடைகிறது என்று சொல்லும்வண்ணம் இருக்கிறது ஆத்ம அனுபவ நிலை. 

‘பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டதாய்க் கருதிக் கொள்ளும்’ என்று ஒரு வசனம் சொல்வார்கள். நாம் பொதுவான நிலையில் இருந்து பார்க்கும் போது இந்த வசனம் போல்தானோ என்று என்ணுவோம். அகங்காரத்தால் இப்படித்தானே பலபேர் நினைத்துக்கொண்டு திரிகிறார்கள். அதற்கும் இதற்கும் என்ன வித்யாசம் என்றும் கருதலாம். ஆனால் அகங்காரம் உள்பட அனைத்தும் நான் இல்லை என்று கழித்த பின்னர் ஏற்படும் ஆத்ம சிந்தனையில் இந்த நிலை என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நடைமுறை நிலையில் ஒரு மனித ஜீவனாக இருக்கும் அனுபவத்தில் சொல்லும் கருத்து அன்று இது. விசாரத்தில் நான் என்பது எது எது இல்லை என்று விலக்கி, தான் ஆத்மா என்ற நிலையில் ஊன்றி நிற்கும் நிலை. நாம் முன்னரே பார்த்த மூன்று சுலோகங்களுக்குப் பின்னர் வரும் நிலை இஃது. 

‘என்னிலிருந்து அனைத்தும் தோன்றியது; 

என்னில் அனைத்தும் நிலைபெற்று இருக்கின்றது; 

என்னில் அனைத்தும் இலயம் அடைகின்றது; 

அந்தத் தனக்கு அந்நியமாய் இரண்டாவது அற்றதான 

பிரம்மமே நான்’ 

(மய்யேவ ஸகலம் ஜாதம் மயி ஸர்வம் ப்ரதிஷ்டிதம் | 

மயி ஸர்வம் லயம் யாதி தத்ப்ரஹ்மாஸ்மி அஹம் அத்வயம் ||) 

இதில் மிக முக்கியமான பகுதி ‘தனக்கு அந்நியமாய் இரண்டாவது அற்றதான பிரம்மமே நான்’ என்பதாகும். பிரம்மம் ஒன்றே இருக்கிறது. இந்த ஜீவனும் உண்மையில் இல்லை என்ற நிலையில் பேசும் பேச்சு. அந்தப் பேச்சை மனத்தால், சிந்தனையில் தீவிரமாக உணர்ந்து நினைக்கும் பயிற்சியைச் சொல்கிறார் சங்கரர். ஜீவனையோ, மனிதனையோ இப்படி உன்னையே கற்பனை செய்து கொள் என்று சொல்லவில்லை. 

லாபரட்டரியில் சோதனை செய்யும் விஞ்ஞானிகளுக்கும் அவர்களின் தகவல்களை உள்ளபடி அறியப்படுவது அவரவர்தம் உள்ளில் இருக்கும் இதே ஆத்மாவால்தான். உலகனைத்தும் உயிர்களின் உள்ளே இருந்து அறிவு, அனுபவம், செயல்கள் என்று அனைத்தும் ஆத்மா அடிப்படையாகத்தான் நடைபெறுகின்றன. எனவேதான் இந்த ஆத்மா, சைதன்யம், உணர்வு என்பதையே பற்றிப் பேசாதே, அது கடக்க இயலா கடினப் பிரச்சனை, அதை ஒதுக்கிவிட்டு கணக்கைப் போடு, பரிசோதனை செய் என்பதை எழுதாக் கோட்பாடாக விஞ்ஞானிகள் பின்பற்றுகிறார்கள். அந்தச் சைதன்யம், ஆத்மா, உணர்வு என்ற மயமாகி நின்று உணரும் பயிற்சியைக் கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

‘அனைத்து அறிவும் அறிவோன் நான்; 

எல்லைகள் எதுவும் அற்றோன் நான்; 

அனைத்தையும் நியமிக்கும் ஈசன் நான்; 

அனைத்து ஆற்றலும் வாய்ந்தோன் நான்; 

ஆனந்தமாகி நிற்போன் நான்; 

உண்மையே ஆகி உணர் அறிவே வடிவானோன் நான்; 

என்றிவ்வாறு பிரம்மத்தைத் தொடர்ந்து சிந்திப்பாய்.’ 

(ஸார்வக்ஞோஹம் அநந்தோஹம் ஸர்வேச: ஸர்வசக்திமான் | 

ஆனந்த: ஸத்யபோதோஹம் இதி ப்ரஹ்மானுசிந்தனம் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Friday, January 16, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 21,22,23

நயமான விதத்திலும், பயமான விதத்திலும் சொல்லித் தத்துவக் கருத்துகளை மக்களிடம் புரியவைத்தல் என்பது பெரியோர்கள் பலகாலமாகச் செய்யும் வழிதான். பக்தி நெறிகள், புராண வழிகள் எல்லாம் இந்த மாதிரி நயம், பயம் என்பதைப் பயன்படுத்தித்தான் பல சித்திரங்கள், கதைகள், நடந்த நிகழ்ச்சிகளைக் கூட்டிக் குறைத்துத் தகவமைத்தல் என்னும் முறையில் சொல்வதற்காக வந்தன. ஆனால் நடைமுறை என்னவோ தத்துவம் மக்களிடம் போய்ச் சேருவதற்குப் பதிலாக, கதைகளும், நயம் பயங்களும் பெரிதும் ஓங்கிவிட்டன. சரக்கை ஏற்றப் போனவர் சரக்கின் மூடி, கட்டுமானப் பெட்டி முதலியவைகளை அக்கறையாக ஏற்றி, சரக்கை மட்டும் ஏற்றாமல் விட்டது போல் ஆகிவிட்டது கதை. அல்லது கதைகளில் உள்பொதிந்த தத்துவத்தைப் பிரித்து வாங்காமல் மக்கள் கதைகளிலேயே சௌக்கியம் என்று இருந்துவிட்டனர் எனலாம். 

எனவே ஸ்ரீஆதிசங்கரரும் நயம், பயம் என்னும் விதத்தில் சொன்னாலும் மிகக் குறைந்த அளவே அதைப் பயன்படுத்துகிறார், தத்துவம் மறைக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்று. இவரையாவது ஜயிக்க விடுவோமா அல்லது இவரையும் தோற்க்கடிப்போமா என்பது நம்மைப் பொறுத்து இருக்கிறது. 

முன்னரே சொல்லியிருந்தார் ஐந்து உடல்கள், பஞ்ச கோசங்கள் என்பது பற்றி. அந்த ஐந்து உடல்களைச் சற்று விரிவாகச் சொல்லி ஏன் அவை நாம் இல்லை என்று புரியவைக்கிறார். ஓர் உடலை வைத்துக் கொண்டே நாம் படுத்தும் பாடு அதிகம். ஐந்து உடலகள் இருக்கிறதாமே? சொல்லவே இல்லையே என்றுதான் முழிக்கிறோம். 

உணவால் ஆன பரு உடல், பிராண உடல், மனம் வடிவான உடல், புத்தி வடிவான உடல், ஆனந்தவடிவான உடல் என்று ஐந்து. இவற்றை அன்னமய சரீரம், பிராணமய சரீரம், மனோமய சரீரம், விஞ்ஞானமய சரீரம், ஆனந்தமய சரீரம் என்பார்கள். உடலில் இந்திரியங்கள் இருக்கின்றன. சில இந்திரியங்கள் வெளி உலகைப் பற்றிய தகவலை நமக்குத் தருகின்றன. சில இந்திரியங்கள் உலகில் நாம் செயல்புரிய உதவுகின்றன. கண், காது, மூக்கு, நாவு, தோல் இவை உலகை அறியப் பயன்படும் இந்திரியங்கள் என்பதால் ஞான இந்திரியங்கள் எனப்படுகின்றன. கை, கால், வாக்கு, குறி, குய்யம் என்பன செயல்பட உதவும் எனவே கர்ம இந்திரியங்கள். தொடு உணர்ச்சி என்னும் ஸ்பர்சம், கண்ணால் கிடைக்கும் காட்சி அல்லது ரூபம், காதால் கிட்டும் கேள்வி, நாவால் அடையும் சுவை அல்லது ரஸம், மூக்கால் முகரும் வாசனை இவையும் இருக்கின்றன. இவை எல்லாமே எந்த அடித்தளத்தில் எதைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன? 

ஐம்பூதங்கள் என்னும் மண் அல்லது ப்ருத்வீ, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம், இந்த ஐந்துதான் உடலுக்கு அடிப்படையாக இருக்கின்றன. இந்த ஐந்து பூதங்களின் தன்மைகளோ மண் அல்லது பூமியின் தன்மை கந்தம், காற்றின் தன்மை ஸ்பர்சம், நீரின் தன்மை ரஸம், நெருப்பின் தன்மை ரூபம், ஆகாயத்தின் தன்மை சபதம். 

இப்பொழுது ஐந்து ஐந்தாகச் சொன்ன இவற்றைக் கொண்டுதான் ஐந்துவித உடல்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றோடு மேலும் ஒரு ஐந்து ஆற்றல்கள் அல்லது பிராணன்கள் உண்டு. பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன் என்பன ஐந்து பிராணன்கள். மேல்நோக்கிய ஆற்றல் பிராணன், கீழ்நோக்கிய ஆற்றல் அபானன், உள்ளே பரந்து விரிந்து இயக்கும் ஆற்றல் வியானன், புசிப்பதில் உணவை கழுத்திலிருந்து வயிற்றுக்குச் செலுத்தும் ஆற்றல் உதானன், உண்டு செரித்த உணவை உடல் திசுக்களுக்குக் கொண்டு செலுத்தும் ஆற்றல் சமானன் என்றும் சொல்லலாம். இந்த ஐந்தில் உள்ளடக்கமான துணை ஆற்றல்களும் உண்டு. அவை நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்பன. விக்கல், கண் இமைத்து விழித்தல், தும்மல், கொட்டாவி விடுதல், உடலைப் படுக்கச் செய்தல் ஆகியவை முறையே இவற்றின் தொழில்கள். 

இவை அந்தக் காலத்து ஃபிஸியாலஜி, அநாடமிக் கருத்துகள். நாம் இன்றைய விஞ்ஞான ரீதியான உடலியல் கூறுகளை நினைத்துப் பார்க்கலாம். விஷயம் என்னவென்றால் ஒரு டாக்டர் இவற்றைக் குறித்து நம் உடலில் இருப்பன என்று விவரித்தால் நாமும் அவரோடு சேர்ந்து பார்வையாளராக இவற்றைப் பார்க்கவும் படிக்கவும் செய்கிறோம். நமக்குப் புறம் ஆகவும், அதாவது நாம் அல்லாதவற்றில் புறம் வைத்து நம்மால் பார்த்துப் படித்து உணரப் படும் விஷயங்களாகத்தான் நம் உடலோ, மனமோ இருக்கிறது. வயிற்றில் உபாதை என் வயிற்றில் உபாதை என்று அறிகிறோம். தலையில் வலி என்றால் என் தலையில் வலி என்று உணர்கிறோம். நடக்கின்ற வலிகள் எல்லாவற்றையும் நம்முடைய உடல் உறுப்புகள் ஒன்றிற்கு நேரும் ஒன்றாக அயல்வைத்து எண்ணும் நாம், ஏதாவது இன்பம் என்றால் நமக்கே நேர்ந்தது போல் ஒட்டிவைத்து உணர்கிறோம் என்றாலும் நமக்குப் புறம் என்பதும் நம் அனுபவத்தில் தெரிகிறது. இல்லாவிட்டால் இப்பொழுது அந்த இனிப்பு வேண்டாம் உடலுக்கு நல்லதல்ல என்று நம்மால் கொள்ளவோ விடவோ தேர்ந்தெடுக்க முடியாமல் போகும். 

ஆக உடல் என்றால் அதற்குள் இவ்வளவு இருக்கின்றன. இது ஏதாவது ஒன்றுதான் நாம் என்று ஆகியிருந்தால் இத்தனையையும் தொகுத்துக் கூட்டி வகை பிரித்துப் படிக்க முடியுமா? நாம் நம் உடலை இவ்வளவு தள்ளி வைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதே நாம் இந்த உடல் அன்று என்பதைக் காட்டவில்லையா? இதை நமக்கு உணர்த்தத்தான் ஸ்ரீஆதிசங்கரர் உடலின் தத்துவங்களைப் பற்றிய கருத்துகளை நமக்குக் கூறுகிறார். 

மேலும் உடலையே ஸ்தூல உடல், புற உடல் என்றும், சூக்ஷ்ம உடல், நுண் உடல் என்றும் வகைபடுத்திப் பார்க்கவும் முடியும். ஐந்து கோசங்களை இந்தவிதமான ஸ்தூல சூக்ஷ்ம உடல்கள் என்று இருவகையில் பிரித்துப் பார்க்கவும் முடியும். மேலும் மனம் என்பதின் உட்புரிவுகளாக நான்கு உண்டு. மனம். சித்தம், புத்தி, அகங்காரம். ஐயம், வாசனைகள், நிச்சயம், அபிமானம் என்பன இந்த நான்கின் செயல்கள்.

அன்னத்திலிருந்து ரத்தம், தசை, எலும்பு, தோல் என்பன உண்டாகின்றன. இவை சேர்ந்து அன்னமய கோசம் எனப்படுகின்றன. கை, கால், வாக்கு, குறி, குய்யம் என்னும் கர்ம இந்திரியங்கள் ஐந்தும், பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் என்னும் பிராணன்கள் ஐந்தும் சேர்ந்து பிராணமய கோசம் ஆகும். கண், காது, மூக்கு, நாவு, தோல் என்னும் ஐந்து ஞான இந்திரியங்களும், மனமும் சேர்ந்து மனோமய கோசம் ஆகும். இந்த ஞான இந்திரியங்களுடன் புத்தி சேர்ந்து அது விஞ்ஞானமய கோசம் ஆகும். 

அன்னமய கோசம் என்பதுதான் ஸ்தூல உடல் அல்லது ஸ்தூல சரீரம். பிராணமய உடல், மனோமய உடல், விஞ்ஞானமய உடல் இந்த மூன்றும் சேர்ந்து சூக்ஷ்ம சரீரம் ஆகும். இந்த ஸ்தூல, சூக்ஷ்ம ஆகிய இரண்டு உடல்களிலும் பஞ்சபூதங்களின் ஸ்தூல, சூக்ஷ்ம அம்சங்கள் கலந்திருக்கின்றன. 

ஐந்து கோசங்களில் நான்கு இப்படி வகைபடுவதைப் பார்த்தோம். ஐந்தாவதான ஆனந்தமய கோசம் என்பது அவித்தை ஆகும். அதுவே காரண சரீரம் ஆகும். ஆக ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்கள் என்று மூன்றாகப் பாப்பது ஒரு வகைபாடு. ஐந்துகோசங்கள் என்று பார்ப்பது ஒரு வகைபாடு. ஐந்து கோசங்களை மூன்று சரீரங்கள் கணக்கிலே இட்டுப் பார்ப்பதையும் பார்த்தோம். 

இவை இத்தனையும் கச்சிதமாக இருந்தாலும் எந்த நுகர்ச்சியும், உணர்ச்சியும், கருத்தும், காட்சியும் நமக்கு உண்டாகாது. இவை இத்தனைக்கும் உள்ளே அடிப்படையாகவும் இவை எல்லாவற்றையும் சாட்சியாக இருந்து பார்க்கிற சைதன்யம் ஆகிய நான் என்னும் ஆத்மா இல்லையேல் இந்த உலகமே நமக்கு இல்லை. இந்த ஆத்மாவே நாம். இதை யாரும் புறத்தில் இவ்வண்ணம் என்று காட்டி இப்படி இருக்கிறது என்று விளக்க முடியாது. ஆத்மாவாகிய நாம் நமக்கே உள் அனுபவமாக நிகழும் சாக்ஷி. ஆத்மாவாகிய நாம் இருக்கப் போய்தான் இத்தனையும் நமக்கு அர்த்தம் ஆகின்றன. நாம் இல்லையேல், ஆத்மா இல்லையேல், இந்தப் பெரும் கட்டுமானம் அனைத்தும், சுருக்கமாக ஒற்றை வார்த்தையில் - ‘இல்லை’ -. 

இதைத்தான் பாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர் : 

‘நான் உடலன்று, பிராணன்று, இந்திரியங்கள் அவை அன்று 

நான் மனம் அன்று புத்தியன்று சித்தமன்று அகங்காரம் அதுவும் அன்று 

நான் பூமியன்று, நீரன்று நெருப்பன்று காற்றுமன்று 

நான் ஆகாயமன்று சப்தம் அன்று ஸ்பர்சமன்று ரஸமன்று 

நான் கந்தம் அன்று ரூபம் அன்று மாயை அன்று சுழலும் சம்சாரம் அன்று 

என்றென்றும் சாக்ஷி ஸ்வரூபமாக நின்ற சிவம் மட்டுமே நான்’ 

(நாஹம் தேஹோ ந ச ப்ராணோ நேந்த்ரியாணி ததைவ ச | 

ந மனோSஹம் ந புத்திஸ்ச நைவ சித்தமஹங்க்ருதி: || 

நாஹம் ப்ருத்வீ  ந ஸலிலம் ந ச வஹ்நிஸ்ததாSநில: | 

ந சாகாசோ ந சப்தஸ்ச ந ச ஸ்பர்சஸ்ததா ரஸ: || 

நாஹம் கந்தோ ந ரூபம் ச ந மாயாSஹம் ந ஸம்ஸ்ருதி: | 

ஸதா சாக்ஷிஸ்வரூபத்வாத் சிவ ஏவாஸ்மி கேவல: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, January 15, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 20

ஒரு தந்தை தம் மக்களை சொந்த வயலில் உழைத்து நல்ல விளைச்சல் கண்டு வாழ்வு சிறக்க வழிதேட வேண்டும் என்று யோசித்தார். என்ன சொல்லியும் மக்கள் உழைப்புக்கு இணங்கவில்லை. ஏதாவது மாயமந்திரம், குறுக்கு வழி இவற்றில் பொருள் கிடைக்குமா என்று பார்த்தார்கள். அந்தத் தந்தை ஓர் உபாயம் செய்தார். வயலில் ஏதோ தெய்வம் தந்த பெரும் செல்வம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை அனைவரும் ஒற்றுமையாகக் கூடி நின்று சுத்தமாகப் பூஜை வழிபாடு என்று செய்து விடாமல் தோண்டினால் அந்தத் தெய்வம் கண்ணில் காட்டும் என்று தம் மக்களை நம்பச் செய்தார். 

பிறகு அவருடைய மக்கள் ஒற்றுமையாக இணைந்து பூஜை வழிபாடு என்று வயலைத் தோண்டத் தொடங்கினர். அதில் ஒரு பிரச்சனை இருந்தது. ஊர்மக்கள் ஏன் தோண்டுகிறார்கள் என்று ஆராயத் தொடங்கினால் கிடைக்கும் செல்வம் அனைவருக்கும் தெரிந்து போய்த் தங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும். எனவே செல்வத்துக்காகத் தோண்டும் ஓரிடத்தைக் குறியிட்டுவிட்டு, மற்ற இடங்களில் மும்முரமாக உழுது, பயிரிட்டுத் தண்ணீர் பாய்ச்சி விளைச்சலுக்கு உழைப்பது போல் முயன்று வந்தனர். நாள் ஆக ஆக நல்ல விளைச்சல். விற்று வந்த செல்வம் அமோகமாகச் சேரத் தொடங்கியது. ஒற்றுமையாகவும் இருந்ததனால் அனைவரது வாழ்வும் சீரும் சிறப்புமாக ஆகியது. நெடு நாள் கழித்து அவர்களுக்குள் தெய்வம் தந்த செல்வத்தைப் பற்றிய ஆத்திரமும் அடங்கிப் போய் மனநிலைகளும் சீரடைந்த காரணத்தால் யோசித்துப் பார்த்தனர். தங்களுடைய தந்தை செய்த உபாயத்தைப் புரிந்துகொண்டு நன்றிக் கண்ணீர் பெருக்கினர். 

அதைப் போல் ஸ்ரீஆதிசங்கரரும் எப்படியாவது நம்மை நம் உண்மை இயல்பான ஆத்ம சொரூபத்தை உணரவைக்க உபாயம் செய்கிறார். சொந்த வயலில் தம் மக்களை உழைக்க வைக்க உபாயம் செய்த தந்தையின் மனநிலையை நாம் புரிந்துகொண்டால் இந்தச் சுலோகமும் நமக்கு நன்கு புரியும். எது உண்மையான அஷ்டமா சித்தி என்பதும் புரியும். ஆத்ம ஞானத்தை இழந்து இருக்கும் நிலையை விட ஒரு பாபமும் கிடையாது என்பதும் புரியும். 

‘ஒரு மாதகாலம் இவ்வண்ணம் ஆத்மத் தியானம் அப்யாஸம் செய்தால் 

பெரும் பெரும் பாபங்களிலிருந்தும் விடுதலை அடைவார். 

ஒரு வருஷம் தொடர்ந்து இவ்வாறு அப்யாஸம் செய்தால் 

அஷ்டமா சித்திகளும் பெறுவார்; 

ஆத்ம சிந்தனைக்கே உண்மையாக முயல்வோர் 

வாழ்வு முழுவதும் இதே அப்யாஸம் செய்தால் 

ஜீவன் முக்தராய் ஆவார்.’ 

(த்யாநயோகேந மாஸைகாத் ப்ரஹ்மஹத்யாம் வ்யபோஹ்யதி | 

ஸம்வத்ஸரம் ஸதாSப்யாஸாத் ஸித்யஷ்டகம் அவாப்னுயாத் | 

யாவஜ்ஜீவம் ஸதாSப்யாஸாத் ஜீவன்முக்தோ பவேத்யதி: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***