Monday, January 12, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 16

ஒருவர் மற்றவர்களை நியமிக்கிறார். தந்தை குழந்தைகளை நியமிக்கிறார். ராஜா மக்களை நியமிக்கிறார். ஆசிரியர் மாணவர்களை நியமிக்கிறார். ஒரு கம்பெனியின் முதலாளி தொழிலாளிகளை நியமிக்கிறார். நியமித்தல் என்றால் என்ன? ஓர் ஒழுங்கையும், நெறிமுறையையும் நடைமுறைப்படுத்தி, நல்ல நிலைமைக்குத் தூண்டி நடத்துதல். வழிமாறிப் போகும் போது தடுத்து நல்வழியில் செலுத்துவது. 

யார் நல்ல நியமன சாமர்த்தியம் உடையவர்? யார் தாம் இருப்பதாலேயே தம்மைச் சுற்றிலும் ஓர் ஒழுங்கில் நடைபெறுமாறு செய்கிறாரோ அவரே மிகச் சாமர்த்தியமான நியமனம் செய்பவர். அப்படிப் பார்த்தால் பிறந்த குழந்தை ஒன்றுதான் மிகத் திறமையான நியமனம் செய்வது. அந்தக் குழந்தைக்குத் தேவையானதைத் தாய் செய்கிறாள். தந்தை கூடவே பார்த்துக் கொள்கிறார். வீட்டில் இருக்கும் அனைவரும் அந்தக் குழந்தை மீது கண் வைத்தபடியே இருக்கின்றனர். அது சிறிது சிணுங்கினாலும் மற்ற காரியங்கள் நின்று அது என்ன என்று பார்க்கப் படுகிறது. இத்தனைக்கும் அந்தக் குழந்தை இவ்வளவு பேர்களைத் தான் கட்டி ஆள்கிறோம் என்றே தனக்குத் தெரியாது. மேலும் அவ்வாறு அந்தக் குழந்தையை சூழ்நிலையின் யஜமானராக ஏற்ற அனைவரும் அந்த யஜமானரைக் கண்டு சலித்துக் கொள்வதில்லை. அவர் ஆள்வதைக் குறித்துக் கோபம் அடைவதில்லை. அந்தக் குழந்தை தங்களை ஆட்டிப் படைப்பதில் மிகுந்த ஆனந்தம் அடைகின்றனர். அப்படி ஆட்டி படைக்க ஒருவர் வேண்டும் என்றுதானே கோயில் கோயிலாக ஆண்டவனை வரமாக வேண்டி வந்தனர்? உச்சபட்சமாக நியமிப்பவர் எவரோ அவரே ஈசன். ஈசத்தன்மை முற்றிலும் உடையவரே ஈச்வரன். நம் நடைமுறை வாழ்க்கையில் ஈசத்தன்மைக்கு முற்றிலும் பொருந்தும் உதாரணம் ஒரு குழந்தை. 

அந்தக் குழந்தையும் புறத்தில் நின்றுதான் ஆளமுடியும். நம் அகவாழ்க்கையை ஆள்வது என்பது முடியாது. நம்முடைய புறச்செய்கை, அகநிகழ்வுகள், உணர்ச்சிகள், சிந்தனைகள், நனவில், கனவில், ஆழ்துயிலில் என்று எப்பொழுதும், எல்லாவிதத்திலும் நம்மை நியமித்து, செலுத்தி, ஆண்டு இருக்கும் ஒருவர் உண்டு என்றால் அதுவே நமக்குள் இருக்கும் நம்முடைய ஆத்மா. இத்தனைக்கும் அந்த ஆத்மா ஒரு செயலும் செய்வதில்லை. ஒரு போகத்தையும் அது துய்ப்பதில்லை. நம்முள் உடல் மனம் சொல் உணர்ச்சி என்று எதனோடும் ஒட்டிக்கொள்ளாமல் தான் தானாகவே இருக்கிறது. ஆனால் நம்முடைய வாழ்க்கை முழுவதும் கணம்தோறும் அந்த ஆத்மாவிற்காகவே தான், அந்த ஆத்மாவினாலேதான் நடக்கிறது. பரம ஈசுவரன் என்றால் ஆத்மாவைத்தான் சொல்ல வேண்டும். அந்த ஆத்மா வேறுமனே இருப்பதாலேயே, அதனுடைய சாந்நித்யத்தின் மகிமையாலேயே அனைத்தும் நடைபெறுகின்றன. நம் அனுபவங்களே அதனால்தான் நமக்குக் கிடைக்கின்றன. நம் உலகம், அதனுடைய காட்சி என்று அனைத்தும் ஆத்மாவினால் அல்லவோ! 

அந்த ஆத்மாதான் நான் உண்மையில் என்றே ஒவ்வொருவரும் பிரம்மத்தைத் தம்முள் சிந்தனை செய்ய வேண்டும். பாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்: 

‘நான் செய்பவன் அன்று; போகம் துய்ப்போன் அன்று; 

எதனோடும் தொடர்பு அற்றவன்; பரம ஈசுவரன்; 

எப்பொழுதும் என் சந்நிதியாலேயே இந்திரியங்கள் 

அனைத்தும் செயல்புரிந்து இயங்குகின்றன.’ 

(அகர்தா அஹம் அபோக்தா அஹம் அஸங்க: பரமேச்வர: | 

ஸதா மத்ஸந்நிதாநேந சேஷ்டதே ஸர்வம் இந்த்ரியம் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, January 11, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 15

ஒருவர் முடிவே அற்ற வாழ்நாள் வேண்டும் என்று நினைத்தாராம். கடவுளை வேண்டினார். தீவிரமாகத் தவம் செய்யவும் கடவுள் அவருக்கு அவர் கேட்டபடியே வாழ்நாள் தந்தார். கேட்டது கிடைத்தது. கொண்டாடினார். மற்றவர்கள் வியந்தார்கள். அவருக்குத் தெரிந்தோரெல்லாம் மறைந்தார்கள். அடுத்து அவரைக் கேள்விப்பட்டோரெல்லாம் மறைந்தார்கள். அடுத்து அவர் வயது என்னவாக இருக்கும் என்று சந்தேகப் படுபவர்கள்தான் இருந்தார்கள். அடுத்து வந்தவர்கள் அவர் பொய் சொல்கிறவர் என்று கருதுவோராக ஆனார்கள். அவருக்கு அலுக்கத் தொடங்கியது. உலகமே புதியது. அந்நியமானது என்று அனுபவம் ஆகியது. ஆனால் அவர் எவ்வளவு விரும்பினாலும் வாழ்நாள் முடிவுக்கு வராது. கேட்டு வாங்கிய வரம் அப்படி. அவர் நிலைமை அப்படி. அதாவது தம் நிலைமை தமக்கு உகந்ததாக இல்லை என்றாலும் தாம் வேறு ஒரு மாற்றத்தைத் தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை. 

இவ்வாறு மாற்றத்திற்கான வாய்ப்பு என்பதற்குப் பெயர்தான் விகல்பம் என்பது. ஆதிசங்கரர் பாடுகிறார். உணர்வு மயமாக, சித்கனமாக இருக்கும் பிரம்மம், ஆத்மா என்பது தன் இயல்பில் வேறு ஒன்றாக ஒருபோதும் மாறும் வாய்ப்பே இல்லாதது. நிர்விகல்பம் என்கிறார். சரி நீண்ட காலம் இருந்துவிட்டு ஒரு முடிவுக்கு வருமோ என்றால் இல்லை என்றும் அவ்வண்ணமே இருப்பது. நித்யம் என்கிறார். ஓர் இடத்தில், ஒரு காலத்தில் ஆக்கிரமித்து இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும் ஒரு பொருள் அன்று பிரம்மம். இடத்தை, காலத்தை ஆக்கிரமிக்கும் வடிவு எதுவும் அற்றது. நிராகாரம். ஆகாரம் என்றால் வடிவு. நிர் ஆகாரம் என்றால் வடிவற்றது. அதாவது இந்த இடத்தில் இருக்கிறது. அந்த இடத்தில் இல்லை. இந்தக் காலத்தில் இருக்கிறது. அந்தக் காலத்தில் இல்லை என்று அதைப் பற்றிச் சொல்ல முடியாது. எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் இருப்பது பிரம்மம் அதாவது ஆத்மா. 

பிரம்மம் அதாவது ஆத்மா என்று எழுதுவதைப் பார்த்து உங்களுக்குத் தோன்றலாம். என்னய்யா இது.. பிரம்மம் சரி. ஆத்மா என்றால் எவ்வளவோ ஜீவாத்மாக்கள் இருக்கின்றன. நீ பாட்டுக்கு சிங்குலரில் ஆத்மா என்கிறாய் என்று?. ஆம் அத்வைதத்தில் ஆத்மா என்றாலும் பிரம்மம் என்றாலும் ஒன்றுதான். ஒன்றேதான். பல ஜீவாத்மாக்கள் என்பதெல்லாம் உபாதிகளின் பேதத்தால் வேறு வேறான தோற்றம் மட்டுமே. 

சரி. நித்யமாய் இருக்கட்டும். நிர்விகல்பமாய் இருக்கட்டும். நிராகாரமாய் இருக்கட்டும். என்னதான் இருந்தாலும் மிகநீண்ட காலம் என்றால் Wear and Tear, குறைவு என்பது ஏற்படுமே? அதுதான் கிடையாது. ஒரு சிறிதும் குறையவே குறையாதது. வ்யயம் என்றால் குறைவு. பிரம்மமோ அவ்யயம். 

இதுவாக இல்லை. அதுவாக இல்லை என்றால் எதுவாக இருக்கிறது? அதைச் சொல்ல வேண்டாமா? அது இருப்பு வடிவாகவே இருக்கிறது. ஸத். It is Existence. அறிவு, உணர்வு மயமாக இருக்கிறது. சித். It is Consciousness. ஆனந்தமே முழுதுமாக இருக்கிறது. It is Ananda. ஸத் சித் ஆனந்தமாக இருக்கிறது. எது ?பிரம்மம் அதாவது ஆத்மா. 

சச்சிதானந்தமா? நாம் உடலாக இருக்கிறோம். நமக்கு மனம் இருக்கிறது. மூச்சு, பிராணன் போய்வரும் வரைதான் நாம். புத்தி என்பது நமக்குள் இருந்து முடிவெடுக்கிறது. சில சமயம் பரவச நிலையில் ஆனந்தமாக இருக்கிறோம். வெறுமனே இருப்பதே உன்னத மகிழ்வாக இருக்கிறது. அது எப்பொழுதாவதுதான். இவ்வளவுதான் நமது அனுபவம். ஆம். நாம் ஓர் உடலில் அல்ல. ஐந்து உடல்களுக்குள் இருக்கிறோம் என்கிறது தத்துவம். புற உடல் உணவால் ஆனது. அதனுள் பிராண மயமான உடல். அதனுள் மனோமயமான உடல். அதனுள் விஞ்ஞானமயமான உடல். அதனுள் ஆனந்தமயமான உடல். இவற்றுக்கு ஐந்து கோசங்கள் என்று பெயர். கோசம் என்றால் உறை என்று பொருள். பஞ்ச கோசங்கள் இவை. ஆத்மா ஆகிய நாம் பஞ்ச கோசங்களுக்கும் அதிகமாக இருக்கிறோம் என்கிறது தத்துவம். அதாவது இந்த ஐந்தும் உபாதிகள்தாம் இவை நாமாகத் தோற்றம் அளிக்கின்றன. ஆனால் நம்மை உள்ளே அடக்கிக் கட்டுப்படுத்திவிடுவதில்லை. இவற்றுக்கு அதிகம் ஆக இருப்பது ஆத்மா. 

‘நான் நித்யனாய் இருக்கிறேன்; நிர்விகல்பனாக இருக்கிறேன்; 

நிராகாரமாய் இருக்கிறேன்; அவ்யயனாக இருக்கிறேன்; 

சச்சிதானந்தமே உருக்கொண்டு இருக்கிறேன்; 

ஐந்துகோசங்களுக்கும் அதிகமாக இருக்கிறேன்.’ 

(நித்யோஹம் நிர்விகல்போஹம் நிராகாரோஹம் அவ்யய: | 

ஸச்சிதானந்த ரூபோஹம் பஞ்சகோசாதிகோSஸ்மி அஹம் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, January 10, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 14

உபாதி என்ற கருத்தைக் கொஞ்சம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். பால்கனியில் உட்கார்ந்திருக்கிறோம். நீல ஆகாயம் விரிந்து தெரிகிறது. ஆனால் இரும்புச் சன்னல் வழியாகப் பார்க்கும் போது சதுர ஆகாயம், பக்கத்தில் ஒரு சின்ன மலர் வடிவிற்கு ஓர் ஆகாயம், பக்கத்திலேயே ஒரு பறவை டிசைனில் ஓர் ஆகாயம் என்றும் நம்மால் பார்க்க முடிகிறது. உடனே நாம் யாரும் ஆகாயங்கள் பல இருக்கின்றன. ஓர் ஆகாயம் சதுரமானது. இன்னொரு ஆகாயம் வட்டமானது. இன்னொன்று பறவை போன்றது என்று நினைப்பதோ, வாதம் செய்வதோ இல்லை. இருப்பது ஓர் ஆகாயமேதான். அந்த ஆகாயம் இரும்பு ஜன்னல் என்ற உபாதியின் வழியே தெரியும் போது பலவாகத் தெரிகிறது. பேதம் உபாதிகளிலேயே அன்றி ஆகாயத்தில் அன்று. இதில் நமக்குக் குழப்பம் வருவதில்லை. இதைத்தான் பரம சத்யமான பிரம்ம விஷயத்தில் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். உபாதிகளின் பேதத்தால் பல பொருள்களாகக் காட்சியளிக்கிற அந்த ஒரே இருப்பு, ஸத் பொருள், பரம் பொருள் என்று கூறுகிறார். பொறுமையாகப் பலமுறை யோசித்தால் நமக்கு இது புரியவரும். உபாதிகளின் பன்மையால் இந்த உலகமாகக் காட்சியளிப்பது போல் அந்தப் பிரம்மம், பக்தி அனுபவங்களின் பன்மையால் பல தெய்வ வடிவுகள் தாங்கிக் காட்சியளிக்கிறது என்று சொல்கிறார். 

மிகப்பழைய காலத்திலேயே இந்தக் கருத்தை ரிக்வேத ரிஷிகள் நன்கு வலியுறுத்திச் சொல்கிறார்கள். ஆதி வேதக் கருத்தையே ஸ்ரீஆதிசங்கரர் அகலமும், ஆழமுமாக நன்கு நிறுவுகிறார்.

மிகப் பழமையானவை வேதங்கள். அதிலும் ரிக்வேதம் முக்கியமானதும், முந்தியதும் ஆகும். அதில் வரும் ஒரு ஸூக்தம் (திருமொழி) சொல்கிறது. 

“இந்திரன், மித்திரன், வருணன், அக்நி, திவ்யமான சிறகுடைய கருத்மான், அக்நி, யமன், மாதரிச்வான் எனக் கூறுவர். உள்ள்து ஒரே சத்யம். தெயவ தத்துவம் அறிந்தோர் அதைப் பலவிதமாய் விவரிப்பார்கள்” 

( இந்த்ரம் மித்ரம் வருணம் அக்நிம் ஆஹு: 

அதோ திவ்ய: ஸ ஸுபர்ணோ கருத்மாந் | 

 ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி 

அக்நிம் யமம் மாதரிச்வானம் ஆஹு: ||) 

(ரிக்வேதம், மண்டலம் 1, ஸூக்தம் 164, மந்திரம் 46) 

இதற்கு உரையெழுதும் ஸ்ரீசாயனர் விப்ரா என்பதற்கு ‘மேதாவிகள், தேவதா தத்வம் அறிந்தோர்’ என்று விளக்கம் தருகிறார். அதாவது Theologians. ஒன்றுதானே இருக்கும் பரம் பொருள் (ஸத் வஸ்து). அதில் பன்மையாகச் சொல்வது யாங்ஙனம்? என்று சாயனர் கேட்டுக் கொண்டே தம் உரையைத் தொடங்குகிறார். ‘கதம் ஏகஸ்ய நாநாத்வம் இதி உச்யதே’. 

ஒன்றையே பலவிதங்களில் அதன் பயன்கள் சூழ்நிலைகளைப் பொறுத்துப் பார்க்க முடியும் என்பதற்கு உதாரணமாக இரண்டு விஷயங்களை எடுக்கிறார் சாயனர். ஒன்று விண்ணில் ஒளிரும் சூரியன். மற்றொன்று மண்ணில் தழல்விடும் நெருப்பு. பரமாத்மா ஆகிய பிரம்மத்திற்குக் குறியீடுகளாக நாம் புரிந்துகொள்ளும் வகையில் நம் வாழ்வில் நிலைத்த உதாரணம் இவை. 

’ஸூர்யஸ்ய ப்ரஹ்மணோSநந்யத்வேந ஸர்வாத்ம்யம் உக்தம் பவதி’ 

‘ஜ்யோதிஷீ இதி மத்வாக்நேர் ஏவ ஸர்வாத்ம்ய ப்ரதிபாதக:’ 

கல்விக் கடலாக விளங்கும் ஸ்ரீஆதிசங்கரர் ஆதி வேதக் கருத்தை எவ்வண்ணம் அசைக்க முடியாமல் நிலைநாட்டுகிறார் என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்காக இவையெல்லாம் எழுதுகிறேன். அன்று ஸ்ரீஆதிசங்கரர் போட்ட அடிப்படைதான் பின்வந்த ஆசாரியர்கள் அனைவரும் பயன்பெற்றது சரித்திரம். இன்று நாம் நம் நாடு அனைத்து நெறிகளையும் மதித்துப் போற்றி நடக்கும் நாடு என்று அடையும் பெருமிதத்திற்கு முதல்கண் நன்றி ஆதிசங்கரருக்கே உரித்தானது. இந்த இடத்தில், சங்கரரைப் பற்றிக் கூறும்போது சுவாமி விவேகானந்தர் ‘சங்கரரின் இதயம் விசாலமில்லை’ என்பதுபோல் கூறிய கருத்து எனக்கு உடன்படாத கருத்தாகும் என்பதைச் சொல்லத் தோன்றுகிறது. உலகுக்கு நன்மை செய்தவர் என்று கணக்கெடுத்தால் நிச்சயம் அதில் முன்னணியில் இருப்பவர் சங்கரர். ’சங்கரம் லோகசங்கரம்’ என்று அவரைப் பற்றிய போற்றி உரை மிகவும் உண்மையானது. ரிஷிகளின் தத்துவப் பார்வையை என்றுமே நாம் இழக்க முடியாத அளவிற்கு நிறுவியவர் ஸ்ரீஆதிசங்கரர். 

மீண்டும் நாம் ஆகாயத்தைப் பற்றிச் சிந்திப்போம். ஏனெனில் ஆகாயம்தான் உணர்வுமயமான ஆத்மநிலையை நாம் புரிந்துகொள்ள நமக்கு வாய்த்த இயற்கையின் உதாரணம். காலையில் ஆகாயம் தெளிவாக ஒளிர்கிறது. இரவு கருமை பூசி, அங்கங்கே விண்மீன்கள் அந்த இருட்டை அதிகமாகக் காட்டியபடி இருக்கிறது அதே ஆகாயம். மேகங்கள் அலைந்தால் தெளிவில்லாமல் தெரிகிறது. மழை பொழியுமுன்னர்க் கார்மேகம் திரண்டு இருண்டு மின்னல் வெட்டுகிறது. இவ்வளவு நிலைமாற்றங்கள் ஆகாயத்திலா நடக்கின்றன? ஆகாயமா இவ்வளவு மாற்றங்களையும் அடைகிறது “ ஆனால் அவ்வண்ணம் சொல்கிறோம். 

கண்ணுக்குத் தெரிந்த பிரத்யக்ஷம்தானே? ஆனல் உண்மையா? தீரத் தத்வார்த்தமாக விசாரிப்பதில்தானே உண்மை தெரிகிறது? ‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்’ என்ற சொலவடை அத்வைதத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. என்ன நிலைமாற்றங்கள் தன்னில் நிகழ்ந்தாலும் தான் ஒரு விதத்திலும் மாறாமல் இருக்கிறது ஆகாயம் என்பதைப் போல் தான் தன்நிலையில் இருந்து மாறாதது என்பதால் ஆத்மா, பிரம்மம் என்பதை அச்யுதன் (தன் நிலையினின்றும் மாறாதது அச்யுதம்) என்று அறியப்படும். 

மாறாத நிலை என்றால் நெடுங்காலம் அப்படியே இருக்கலாம். ஆனால் என்றோ ஒருநாள் அதுவும் மாறித்தானே ஆகவேண்டும்? நாம் வாழும் பகுதியில் எல்லாம் மாறிவிடுகிறது. சாலைகள், வீடுகள் எல்லாம் மாறிவிட்டன. அன்று கண்ட இடமா என்றே அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றம். ஆனால் அந்த மரம் இருக்கிறதே அது மாறவில்லை. சின்ன வயசில் விட்ட பட்டத்தின் கலர்கயிறு மாட்டிக் கொண்ட கிளையில் இன்னும் கொஞ்சம் பகுதி கயிறு அப்படியே இருக்கிறது. மாறும் சூழ்நிலையில் அதுமட்டும் மாறாமல்.. ஆச்சரியப் படுகிறோம். அடுத்த வாரம் அங்கே செல்கிறோம். மரம் இருந்த இடத்தில் பெரிய குழி. மரம் என்ன ஆயிற்று? அத்தனை ஆண்டு அசையாமல் நின்ற மரம். போனவாரம் அடித்த பெருங்காற்று, மழையில் விழுந்துவிட்டது. இப்படிப் பட்ட மாறாத நிலை அன்று அச்யுதம் என்பது. பெரும் ஊழிகள் நடந்தாலும் தான் மாறாதது. எனவே அச்யுதம். 

காலத்தால் ஓர் எல்லைபடுத்தப் பட்டது. இந்தக் காலத்தில் இருந்தது. இன்னொரு காலத்தில் இல்லை. நெடுநாள் இருந்தது பின் ஒரு காலத்தில் போய்விட்டது. என்று கால எல்லை இடமுடியாது. அதேபோல் இந்த இடத்தில் இருந்தது. அந்த இடத்தில் இல்லை என்பது போல் இடத்தின் எல்லை இடமுடியாது. இந்தப் பொருளில் இருக்கிறது. அந்தப் பொருளில் இல்லை என்று பொருளால் எல்லைபடுத்தப் படாதது. காலத்தால், இடத்தால், பொருளால் எல்லை இல்லாதது எதுவோ அது அநந்தம். ஆத்மா, பிரம்மம் அனந்தம் ஆனது. 

ஒளிகளுக்கெல்லாம் தலையாய ஒளி. ஒளி என்றால் கோ என்று பெயர். கோ என்னும் கதிர்களுக்கெல்லாம் இந்திரன் எனவே கோவிந்தன். அனைத்தையும் உள்ளடக்கியதால் ஹரி. நந்தம் என்றால் இன்பம். முடிவே அற்ற பேரின்பம் ஆநந்தம். ஒரு பொருளும் மிச்சமின்றித் தான் நிறைந்தது. அசேஷம். என்றும் பிறவாதது. அஜம். என்றும் மிருத்யு என்பது  இல்லாதது. அம்ருதம். 

பாடுகிறார் ஸ்ரீசங்கரர்: 

‘அச்யுதன் நான்; அநந்தன் நான்; கோவிந்தன் நான்; ஹரியே நான்; 

ஆநந்தம் நான், அசேஷம் நான்; அஜன் நான்; அம்ருதமே நானாய் இருக்கிறேன்.’ 

(அச்யுதோஹம் அநந்தோஹம் கோவிந்தோஹம் அஹம் ஹரி| 

ஆநந்தோஹம் அசேஷோஹம் அஜோஹம் அம்ருதோஸ்ம்யஹம் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Friday, January 9, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 13

இந்த உலகில் எவ்வளவு பொருட்கள் இருக்கின்றன! எவ்வளவு உயிரினங்கள், மனிதர், எவ்வளவு பன்மை! ஆனாலும் எல்லாம் இருக்கிறது என்பது சைதன்யம் என்னும் உணார்வு, அறிவு இதற்குப் புலனாகித்தான் இத்தனையும் காட்சியாக வடிவெடுக்கிறது. அந்தச் சைதன்யம் என்பதை மொத்த கணக்கிலிருந்து நீக்கிவிட்டுப் பாருங்கள். அதாவது மனிதர் என்போர் இல்லாத சூழலிலும் பொருட்கள் இருக்கின்றன. பொருள் ஒன்று இல்லை என்றாலும் மற்றவை இருக்கின்றன. எனவே இந்த மொத்தக் காட்சியில் ஏதொன்று இல்லாது போனாலும் மற்றவை இருக்கும். ஆனால் அடிப்படையான சைதன்யம் இருந்து இவ்வளவையும் அர்த்தப் படுத்திப் பார்க்கவில்லையேல் இந்தக் காட்சியே இருக்காது. உலகம் என்ற இந்தப் பெரும் மேளாவே கிடையாது. ஏனெனில் அந்தச் சைதன்யம் அதுதான் ஒற்றைப் புள்ளியாகக் கடைசியில் நின்று அர்த்தங்களை உரு ஆக்குகிறது. உரு ஆன அர்த்தங்களைக் கோவைப் படுத்திச் சேமித்துக் கேட்கும் போது எடுத்துப் போடும் ஸ்டோர் கீப்பராக மூளை இருக்கிறது எனலாம். 

இந்த இடத்தில் ஸ்ரீஆதிசங்கரர் சொல்லும் கருத்தை நாம் சற்றுப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பன்மை இருக்கிறது. கூடவே அந்தப் பன்மையைக் காணும் தத்துவமாக, அர்த்தப்படுத்தும் தத்துவமாக சைதன்யம், ஆத்மா இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் சங்கரர் சொல்வதோ ஆத்மா இருக்கிறது. ஆத்மா மட்டுமே  இருக்கிறது. பன்மையும், இரண்டும் இருப்பதுபோல் நினைக்கும் நாமும் எல்லாம் உண்மையில் இல்லாதவை. ஆனால் இருப்பது போன்ற தோற்றம் இதுதான் மாயை. 

தோற்றம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தொடமுடிகிறது. தொட்டால் சுடுகிறது. ஜில் என்று இருக்கிறது. கையில் முள் குத்தினால் வலி கடும் துன்பம். ரத்தம். வாய்கூசாமல் தோற்றம் என்றால் என்ன அர்த்தம்? என்று நாம் நினைக்கிறோம். பொதுவாக மனமே இந்த மாயை என்ற கருத்தை எதிர்க்கிறது. ஆனால் நாம் ஒரு தவறு செய்கிறோம். என்ன? நாம் மாயை என்று நினைப்பது எதை? நடைமுறையில் ஏதோ ஒன்று இருப்பது போல் நிழலாடுகிறது. கிட்டே போனால் இல்லை. யாரோ ஒருவர் காம்பௌண்ட் சுவரில் ஏறிக் குதிப்பது போல் நிழலாகத் தெரிகிறது. ஏறிக் குதிக்கத் தொடங்கிப் பாதி கவிழ்ந்து கீழே ஏதோ பார்த்தபடி இருக்கும் உருவம். நாம் பதுங்கிக் கிட்டே போய் பார்த்தால் எங்கோ எதனுடைய நிழலோ ஒரு மாறிக் கலந்து அங்கு விழுகிறது. அந்தப் பொருள் எங்கோ காற்றில் அசைய இங்கு இந்த நிழல் மனித அசைவு போல் நம்மை மருளச் செய்துவிட்டது. இது ஒரு மாயத் தோற்றம் என்றால் புரிகிறது. ஆனால் சங்கரர் சொல்வது இந்தப் பொருளில் அன்று. நாம் எதைக் கெட்டியான சத்யம், உண்மை, அனுபவம் என்று சொல்கிறோமோ அதைத்தான் அவர் சொல்கிறார். 

சைதன்யம் அல்லது ஆத்மா என்பதற்குப் புலனாகி அதற்குப் பின்னர் கிடைக்கும் ரிப்போர்ட்தான் நம் உலகம். சைதன்யம் என்பதை நம்பியிராமல் தனிப்பட ஒரு நாளும் உலகம் ‘உள்ளேன் ஐயா’ என்ற ரிப்போர்ட்டைத் தராது. ஆனால் சைதன்யம் என்பது, பொருள் எதையும் நம்பி இல்லை, தான் இருப்பதற்கும், தான் இருக்கிறேன் என்று நமக்குத் தெரிவிப்பதற்கும். அது சுதந்திரமாகத் தன்னில் தானே தன்னை இருந்து காட்டும் ஒன்று. அதனால்தான் ஸ்ரீதாயுமானவர் சொன்னார் : ‘அது ஆனால் அது ஆவர். அதுவே சொல்லும்”. தனிப்படத் தன்னளவில் உண்மை என்று தன்னைக் காட்டாத உலகை மாயையின் விளைவு என்கிறார் சங்கரர். 

யா - எது, மா - இல்லையோ, எது உண்மையில் இல்லையோ அது மாயை என்ற பொருளிலும், மாயை என்றால் விசித்திரமானது என்ற பொருளிலும் பொருத்தமாக வருவது. இதைத் தெளிவுபடச் சுவாமி விவேகானந்தர் சொன்னார்: "Maya is a statement of facts" என்று. ‘வாஸ்தவங்களை நிரல்பட வைத்த வாக்கியம் மாயை’ என்றார். 

ஆத்மா மட்டுமே இருக்கிறது. அது பிரம்மமாகவே இருக்கிறது. ஜகத் என்பது மித்யையே. ஜீவன் பிரம்மத்தைத் தவிர பிறிதொன்றாகவும் இல்லை - என்று சொல்லும் ஸ்ரீஆதிசங்கரர் தெய்வங்களைக் குறித்தும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். உபாதிகளால் ஆன நடைமுறை உலகான வியாவகாரிகத்தில் (அதாவது வியவகாரம் நடைபெறும் உலகில்) எப்படி உபாதிகளால் கட்டமைத்தது போல் காட்டப்பட்டுப் பல பொருட்கள், பல உயிர்கள் என்று காட்சி தெரிகிறதோ, எப்படி பிரம்மம் அல்லது ஆத்மா ஒன்றே இருக்கிறதோ அதுபோல் சகுணமாகப் பல தெய்வ வடிவங்கள் நம் பக்திக்குப் புலப்பட்டாலும் அவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள் சத்தியமாக என்றும் இருப்பது அதே பிரம்மம் அல்லது ஆத்மாவே என்பது அவர் கருத்து. எனவே விஷ்ணு என்றாலும், சிவன் என்றாலும், நான்முகன் என்றாலும், சக்தி என்றாலும், பிள்ளையார் என்றாலும், சுப்ரமணியன் என்றாலும் அல்லது எந்தத் தெய்வ உருவை ஒருவர் வணங்கினாலும் உண்மையில் பிரம்மத்தைத்தான் பல வடிவுகளும், பல பெயர்களும் தந்து பக்திக்கு இலக்காக ஆக்குகிறார்கள். கடைசியில் நிலைநின்ற ஒரே சத்யமான பிரம்மத்திடம் அழைத்துச் செல்வதால் அவையெல்லாம் ஒரே இலக்கை நோக்கிப் போகும் பலவித பக்தி மார்க்கங்கள் என்பது ஸ்ரீஆதிசங்கரர் காட்டும் ஒருங்கிணைந்த பார்வை. எனவே தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி அவர் பாடும் போதும் அவர் உணர்த்தவரும் உள்ளுறைக் கருத்து என்னவோ அதே ஏக சத்யமான பிரம்மமே. இதைப் புரிந்துகொண்டால் இந்தச் சுலோகத்தையும் நாம் புரிந்துகொள்ள முடியும். 

“அந்த விஷ்ணுவே நான் அந்த விஷ்ணுவே நான் 

அந்த விஷ்ணுவே நான் ஹரியேதான்; 

நான் கர்த்தா நான் போக்தா என்பதெல்லாம் 

அந்த அவித்தையில் எழுந்து நிற்பவைதாம்.” 

(அஹம் விஷ்ணுர் அஹம் விஷ்ணுர் அஹம் விஷ்ணுர் அஹம் ஹரி: | 

கர்த்ரு போக்த்ரு ஆதிகம் ஸர்வம் தத் அவித்யோத்தம் ஏவ ச || ) 

விஷ்ணு - அனைத்தினுள்ளும் நுழைந்து இருப்பதால் பிரம்மம் விஷ்ணு என்று அறியப்படுகிறது. அனைத்தையும் தன்னுள் அடங்க இருப்பதால் ஹரி என்று அறியவேண்டும். கர்த்ரு - நான் செயல் புரிபவன்; போக்த்ரு - நான் போகம் அனுபவிப்பவன். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, January 8, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 11, 12

மனம் இப்பொழுது இன்னும் ஒரு சந்தேகம் எழுப்புகிறது. ‘பிரம்மம் மட்டும் இருக்கின்ற உண்மை. பிரபஞ்சம் எல்லாம் தோற்றம் அளவுக்கு உண்மை. அதாவது தத்வ ரீதியான ஆராய்ச்சியில் தள்ளப்படாத இறுதி உண்மையாக நில்லாது, அப்படி நிற்கும் மாறாத ஒரே உண்மை பிரம்மம் மட்டுமே அல்லது அந்த மாறாத உண்மையைத்தான் பிரம்மம் (பெரியது) என்று சொல்லலாம் என்றீர்கள். இந்த ஜீவன் உண்மையில் பிரம்மம்தான். உபாதிகளின் தொடர்பால் தனித்தனி உயிர்கள் போல் உபாதிகளுக்கு உட்பட்ட அனுபவத்தில் உண்மைபோல் தோற்றம் அளிக்கிறது. தத்வ விசாரத்தின் இறுதி உண்மையாக இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே என்பது புரியவரும் என்றும் சொன்னீர்கள். 

‘சரி. அப்படி என்றால் இந்த உலகில் ஜீவர்கள் மட்டுமா இருக்கின்றன? அவை வாழ்வதற்குச் சூழ்நிலையாக இருக்கும் மலை, நீர், ஆகாயம், வாயு, நெருப்பு, கல் மண், செடி கொடிகள், புல், பலவித உணவுகள், சூரியன், சந்திரன், கோளங்கள், நக்ஷத்திரங்கள், என்று எவ்வளவு பொருட்கள் இருக்கின்றன! அவையெல்லாம் அனுபவத்தில் இருக்கத்தானே செய்கின்றன. உயிர்கள் எழுந்து உலவும் முன்னரே அவை தோன்றிச் சூழலாய் இருக்கின்றனவே? அப்படி இருக்கும் போது பிரம்மம் மட்டுமே சத்யம் என்றால் என்ன அர்த்தம்?’ 

இந்தக் கேள்விக்கு விடை சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். அவர் சொல்கின்ற விடையை அன்று புரிந்துகொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து பல துணைக் கருத்துகளை நிரூபிக்காததால் அவர் காலத்தில் இதை எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பது ஒரு தனி விஷயம்தான். ஆனால் இன்றைய விஞ்ஞான கருத்தாக்கங்களில் பழகிய நம் ஆராய்ச்சி மனம் ஸ்ரீஆதிசங்கரர் சொல்வதை நன்கு புரிந்துகொள்ள முடியும். 

இன்றைய விஞ்ஞானம் சொல்வதன்படி பார்த்தால் எல்லா பொருள்களுமே ஒன்றில் ஒன்று அடங்கி அதாவது ஒன்று ஒன்றாக மாறி, கடைசியில் அணுக்களாகவும், அணு உள் துகள்களாகவும், அந்தத் துகள்களும் பொருள் என்ற வடிவைக் களைந்து, ஆற்றல் என்ற அலையுருவை எய்திவிடும் என்று தேருகிறது. அதாவது ஆரம்பத்தில் இந்த அனைத்துப் பிரபஞ்சமும் சக்தி அலைகளாக இருந்து பின்னர் அலை உருவிலிருந்து பொருள் அம்சம் கொண்ட துகளாக உருவெடுக்கிறது. அதேபோல் பொருளம்சம் கொண்ட துகள் சக்தி அலையுருவாக வெடிக்கவும் முடியும். இதற்கான வாய்ப்பாடுதான் ஐன்ஸ்டீன் அவர்கள் கொடுத்தார். E =MC2 (C square). E என்பது சக்தியலை. M என்பது பொருளம்ச எடை. C என்பது ஒளியின் வேகம். (இந்த வாய்ப்பாட்டால் விளைந்த பேரழிவை இப்பொழுது நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டாம்). 

விஞ்ஞானம் இத்துடன் நிறுத்திவிடுகிறது. ஆனால் ஸ்ரீஆதிசங்கரர் அதற்குள்ளும் போய் விளக்குகிறார். அவருக்கு நவீன விஞ்ஞானம் தெரியுமா என்று கேட்காதீர்கள். அவர் காலத்தில் ஐன்ஸ்டீன் இல்லை. அது சரிதான். ஆனால் ஸ்ரீஆதிசங்கரர் அவர் காலத்துக் கல்விப் பின்புலம், தம்முடைய பெரும் மேதைமை, தியானம் இதன் காரணமாக அன்று சொன்னது இன்று வரும் விஞ்ஞான விவரணத்தோடு மிகவும் இசைந்து போகிறது என்பது ஒரு விஷயத்தைக் காட்டுகிறது. எந்த விதத்தில் அணுகினாலும் உண்மை புலப்படத்தான் செய்யும் என்பது. ஸ்ரீஆதிசங்கரர் சொல்கிறார்: 

’பிரம்மத்திலிருந்து அஜ்ஞானம் (மாயை) யால் நீர்க்குமிழி போன்று ஆகாயம் உண்டாயிற்று. ஆகாயத்திலிருந்து வாயு. வாயுவிலிருந்து நெருப்பு. நெருப்பிலிருந்து ஜலம். ஜலத்திலிருந்து நிலம். அதனின்று அரிசி, தான்யங்கள். ஒடுங்கும் போதும் பூமி ஜலத்திலும், ஜலம் நெருப்பிலும், நெருப்பு வாயுவிலும், வாயு ஆகாயத்திலும் ஒடுங்கி, ஆகாயம் அவ்யாக்ருதம் (வெளிப்படத் தோன்றாத நிலை) என்ற மாயையின் வடிவில் ஒடுங்கி, அந்த மாயை சுத்தமான பிரம்மத்தில் லயம் அடைந்து விடுகிறது. அனைத்தையும் கவர்ந்து தன்னுள் அடக்கிக் கொண்டதால் அந்தப் பிரம்மம் ஹரி என்று அழைக்கப்படுகிறது. அந்தச் சுத்தமான ஹரியாகவே நான் இருக்கிறேன் என்று ஆத்ம தியானம் செய்வோன் சிந்திக்க வேண்டும்.’ 

(அஜ்ஞானாத் ப்ரஹ்மணோ ஜாதம் ஆகாசம் புத்புதோபமம் | 

ஆகாசாத் வாயுருத்பந்நோ வாயோஸ்தேஜஸ்தத: பய: || 

அத்ப்யச்ச ப்ருத்வீ ஜாதா ததோ வ்ரீஹியவாதிகம் | 

ப்ருதிவ்யப்ஸு பயோ வஹ்னௌ வஹ்னிர்வாயௌ நபஸ்யஸௌ | 

நபோSப்யவ்யாக்ருதே தச்ச சுத்தே சுத்தோSஸ்ம்யஹம் ஹரி: || ) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, January 7, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 10

உலகாயதமாக நினைப்பதற்கும், ஆன்மிகமாக நினைப்பதற்கும் என்ன வித்யாசம்? பானை என்று உங்களை நீங்கள் கருதினால் உங்களுக்குள் ஆகாயம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். பானைக்குள் இருக்கும் ஆகாயம் என்று உங்களைக் கருதினால், உங்களைச் சுற்றிப் பானை இருக்கிறது என்று பார்க்கிறீர்கள். முன்னது உலகாயதத்தோடு ஒப்பிட்டால் இரண்டாவது ஆன்மிகத்தோடு ஒப்பிடலாம். 

பரிணாம வளர்ச்சியில் உயிரின் சுயக்காப்பு தேவைகளுக்காக ஆரம்ப நிலைகளில் உடலே தான் என்ற ஒன்றிப்பு தேவையாக இருந்திருக்கிறது. பரிணாமம் அடைந்து வளர்ந்து, சமுதாய மனிதராக ஆன பிற்பாடும் அந்த ஆரம்ப ஐக்கிய மனப்பான்மை உடலோடு ஒன்றியது இன்னும் அப்டேட் ஆகாமலே இருக்கிறது. மேலும் தான் ஆத்மா என்று உணர்வது நுட்பமான கருத்தாக்கம் தேவைப்படும் ஒன்று. மூளையின் ஆரம்ப கட்ட வளர்ச்சிகளில் இயலாததாக இருந்திருக்கலாம். ஆனாலும் மொழி, அனுபவம் சார்ந்து சொல்லாடல்களைப் பார்த்தால் உடல் வேறு, ஆத்மாவாகிய தான் வேறு என்பது தெளிவாக மனத்தால் பேச்சில் பதிவாகிறது. என் உடல், என் கை, என் கால், என் கண், என் தலை, என் மனம் என்றுதான் சொல்கிறோமே அன்றி அவையே நாம் என்ற ஒன்றிப்பு இருந்தால் அவற்றை நம் உடைமை போல் கருதி உரையாடும் போக்கு இருக்க வாய்ப்பில்லை. எனவே ஆத்ம ஞானம் என்பது ஏற்கனவே தெளிவில்லாமல் நம் பேச்சு உணர்வு பழக்க வழ்கக்கங்களில் மறைந்திருக்கிறது, நம்மால் கவனமாக ஓர்மைகொள்ளப் படாமல். அதை உணர்வின் கவனத்திற்குத் தெளிவாக மீட்டெடுக்கிறோம் என்பதுதான் தத்துவ விசாரத்தின் அடிப்படையே. 

மேலும் ஒரு கற்பனைக் காட்சியைப் பார்ப்போம். வாஷிங் மெஷின், குக்கர் முதலிய கருவிகளைப் பயன்படுத்துகிறோம். ஒருவர் சற்று சித்தம் பேதலித்த நிலையில் இருக்கிறார் என்று நினைத்துப் பார்ப்போம். அதாவது அந்தக் கருவிகள் இயங்கும் போது, அவை இயங்குகின்றன, தாம் அவற்றை இயக்குகிறோம் என்பது மறந்துபோய், தாமே அந்தக் கருவிகள் என்று தவறான ஒன்றித்த உணர்ச்சி கொண்டு வாஷிங் மெஷின் உள்ளே சுற்றி ஆடும்பொழுது அதைத் தானே படும் அவஸ்தையாகக் கருதி ஐயோ ஐயோ என்று அலறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பார்க்கின்றவர் என்ன சொல்வார்? ஐயா! அது கருவி இயங்குகிறது. நீங்கள் வெறுமனே சாட்சியாகப் பாருங்கள். ஏன் நீங்களே கறங்குவது போல் நினைத்துத் துடிக்கிறீர்கள்? இல்லை.. இல்லை நான் தான் அது என்று அவர் சொன்னால் என்ன நினைப்போம்? சரி ஏதோ மனநிலை சரியில்லை என்று மருத்துவரிடம் காட்டுவோம். கொஞ்சம் ஓவர் கற்பனைதான். ஆனால் இந்தக் கற்பனையையே, நிஜத்தில், நம் அன்றாடத்தில் எப்படிக் கடைப்பிடிக்கிறோம் என்பது ஆச்சரியம் அல்லவா? 

கருவியோடு தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிந்த நாம் நம் உடலை நமக்கு உற்ற கருவியாகவா பார்க்கிறோம்? நாமே அந்தக் கருவி என்று ஐக்கியப் படுத்திக்கொண்டு அவதிப் படுகிறோம். நாம் சுகப்படுகிறோம் என்று நினைத்துக் கொண்டு உடலைப் பாழ்படுத்துகிறோம். உடலைக் கருவி என்று நினைக்கக் கற்றால் என்ன செய்வோம்? திறம்பட அந்தக் கருவியைக் கையாளும் விதம் என்ன, அது கெடாமல் போஷிக்கும் வகை என்ன? அதனிடமிருந்து பெரும்பயன் கொள்வது எப்படி? என்று கருத்தாக அன்றோ செயல்படுவோம். உடலையும், மனத்தையும் நாம் கருவி என்று நன்கு உணர்ந்து கையாள வேண்டும் என்றாலே நாம் ஆத்மா என்று உணர்வதைக் காட்டிலும் வேறு வழி என்ன இருக்கிறது? 

மொத்த குழப்படியும் ஒரு சின்ன பிரச்சனையில் ஆரம்பிக்கிறது என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். நான் என்று அக உணர்வான ஆத்மா, இது என்று புறப்பொருளாகத் தெரியும் உடல். இரண்டிற்கும் நடுவில் ஒரு மாறாட்டம் நடக்கிறது என்கிறார். அதாவது ஆத்மாவின் தன்மைகளை நாம் உடல் மீது ஏற்றியும், உடலின் தன்மையை, அதாவது சடப்பொருளின் தன்மையை உயிர் ஆகிய ஆத்மா மேல் ஏற்றியும் மாறுபட்டுக் கருதும் இந்த மாறாட்ட மனப்பான்மையே ஆரம்பம் என்கிறார். இவ்வாறு மாறாட்டமாகக் கருதுவதை அவர் அத்யாஸம் என்று சொல்கிறார். அதாவது ஒன்றின் தன்மையை பிறிதொன்றின் மேல் ஏற்றி உணரும் மனநிலைக்கு அத்யாஸம் என்று பெயர். தன் ஆத்மாவைக் குறித்து சிந்திக்கும் ஒருவர் ஒரு கணமேனும் தாம் உண்மையில் பிரம்மமே ஆக இருக்கின்றேன் என்று உணர்வாரேயானால் அவர் பெரும் பெரும் பாபக் குவியலில் தீராத இருளில் இருந்தால் கூட அந்த இருள் அக்கணமே பொடிந்து போய், சூரியன் உதித்தது போல் ஆகிவிடுகிறது என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

“கணமேனும் நான் பிரம்மமாகவே  இருக்கின்றேன் 

என்று ஆத்மசிந்தனம் செய்வோன் உணர்ந்தாலே கூட 

அவனில் மாபாதகங்கள் நசித்து சூரிய உதயம் போல் ஆகிவிடும்” 

(க்ஷணம் ப்ரஹ்மாஹமஸ்மீதி ய: குர்யாத் ஆத்மசிந்தனம் | 

தந்மஹாபாதகம் ஹந்தி தம: ஸூர்யோதயோ யதா ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, January 6, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 07, 08, 09

பிறந்ததிலிருந்து நாம் இந்த உடல்தான் என்ற நிச்சயம் கொண்டுதான் இயங்குகிறோம். வளர்கிறோம். தேவைகள், ஆசைகள், திட்டங்கள், கனவுகள், செயல்பாடுகள் அனைத்தும் இந்த உடலை அடிப்படையாக வைத்துத்தான். அப்படி இருக்கும் போது, ‘பிரம்மமே நான்’ என்று நினைவில் பழகு என்றால் எப்படி? உடலைக் கடந்த, உருவைக் கடந்த, அறிவே மயமான ஆகாயம் போன்ற நிலையோடு எப்படி நான் என்று ஐக்கிய பாவனை கொள்வது? முதலில் நான் இந்த உடல் இல்லை என்பதையே ஒரு விளையாட்டாக மனத்தில் நினைத்துப் பார்க்கலாமேவொழிய அடுத்த தேவை என்று வந்ததும் உடல் என்றுதானே ஓட வேண்டியிருக்கிறது. 

வாழ்க்கை அனுபவம் அடிபட்டு நிதானம் ஏற்பட்டு, அன்றாடம், தேவைகள் எல்லாவற்றையும் விட வாழ்க்கையின் பொருள், மெய்ம்மையைக் குறித்த தேட்டம் என்பது தீவிரப்படும் பொழுது, மரணம் என்பது மிகவும் அருகில் இருக்கின்ற அதிர்வுகள், பதட்டம் மனத்தில் உண்டாகும் பொழுது ஏதோ ஆசுவாசமாகப் பிரம்மத்தைப் பற்றிய எண்ணம் மனத்தில் உவப்பாக இருக்கிறது. ஆனால் அன்றாடம் என்பதையே அவசரம், தேவை, ஆசைகள், நிர்பந்தங்கள் என்பனவற்றின் குறுகிய வட்டத்தில் சுருக்காமல், அந்தப் பிரம்மம் என்பதன் அடிப்படையிலேயே அன்றாடம் என்பதையும் அமைத்துக் கொள்ள முடிந்தால் அன்றாடத்திற்கும், ஆன்மிக நிலைக்கும் எழுந்து விழுந்து, எழுந்து விழுந்து திண்டாட வேண்டாம். இரட்டைக் கம்பத்திற்கிடையில் அல்லாடும் பந்தாக அலையவும் வேண்டாம். அதற்கு என்ன வழி? 

இந்தக் கேள்விக்கான பதிலைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தை நன்கு நாம் கற்பனையோடு புரிந்துகொண்டால் உதவியாக இருக்கும். சிறு பாத்திரங்கள், அதற்குள் ஒவ்வொன்றிலும் நிரம்பியிருக்கும் சின்ன சின்ன ஆகாயம் என்று கற்பனை செய்வோம். முன்னரே இதைக் குறிப்பிட்டிருக்கிறோம். இப்பொழுது சற்று விரிவாகக் கற்பனை செய்வோம். அதாவது நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாத்திரம் என்று கற்பனை செய்து பாருங்கள். இப்பொழுது உங்களை ஒரு கேள்வி கேட்போம். ‘உங்களுக்குள் என்ன நிரம்பியிருக்கிறது?’ என்பது கேள்வி. என்ன சொல்வீர்கள்? ‘என்னுள் ஆகாயம் நிரம்பியிருக்கிறது. நான் ஆகாயத்தை முழுதும் உள்ளே கொண்ட பாத்திரமாக இருக்கிறேன்’ என்றுதானே. நல்லது. 

இப்பொழுது கேள்வியைச் சற்றே மாற்றுவோம். அதற்கு முன்னர் இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒரு கற்பனை செய்ய வேண்டும். அதாவது இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் அந்தச் சிறு பாத்திரம் அன்று. பதிலாக நீங்கள் ஒவ்வொருவரும் அந்த அந்தப் பாத்திரத்தினுள் இருக்கும் அந்த அந்தச் சிறு ஆகாயம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களை நோக்கி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. என்ன? ‘நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?’ பதில் என்ன? ‘நான் சிறு ஆகாயமாக இருக்கிறேன். பாத்திரம் என்னை உள்ளடக்கிய பொருள் வடிவாக இருக்கிறது’ இதுதானே? இந்தக் கற்பனையிலிருந்து மாறாமல் அதிலேயே நில்லுங்கள். 

நீங்கள் அந்தப் பாத்திரம் இல்லை. உங்களைச் சுற்றி அந்தப் பாத்திரம் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தின் பயனே உள்ளே இருக்கும் ஆகாயமாகிய உங்களால்தான். ஆகாயமாகிய நீங்கள் உள்ளே இல்லையேல் பாத்திரம் வெறுமனே ஒரு சிறு தூளான பொருள் உருண்டை அவ்வளவே. நவீன விஞ்ஞானம் கூறுகிறது, பொருளிலும் அந்த அணுக்களையும், எலக்ட்ரான்களையும் தாங்கிக்கொண்டு இருப்பது வெட்ட வெளிதான் என்று. அந்த வெளியை அகற்றிவிடடால் வெறும் துகள்கள் மட்டும் திரட்டினால் கண்ணிற்கே தெரியாத சிறு தூள் அவ்வளவுதானாம். பொருளே பெரும் வடிவாகத் தெரிவதற்கே அதனுள் கரந்து தாங்கும் வெளி என்பதுதான் முக்கியம் என்று அணுவிஞ்ஞானம் சொல்லும் செய்தி. அதாவது பார்ப்பதற்குப் பருப்பொருள் முக்கியம் போல் தோன்றுகிறது. ஆனால் மெய்ம்மையில் ஆகாயம்தான் பொருள் அம்சத்தை விட மிக மிகப் பெரியதும், முக்கியமானதும் ஆன ஒன்று. 

சரி போகட்டும். நீங்கள் இன்னும் ஆகாயம் என்ற நிலையில்தானே நிற்கிறீர்கள்? இப்பொழுது உங்களைச் சுற்றி இருக்கும் பாத்திரம், மற்ற பாத்திரங்கள், அவற்றுள் இருக்கும் ஆகாயங்கள் அந்த ஆகாயங்களின் உள்நிலை அனுபவங்கள் எல்லாவற்றையும் சுற்றி நோக்குங்கள். காட்சி எப்படி இருக்கிறது? இந்தச் சிறு ஆகாயம் என்பதற்குப் பதில் உங்கள் ஆன்ம நிலை என்பதை மனத்தில் ஏற்றுங்கள். ஆகாயம் போன்ற உணர்வு மயமான வெளி நீங்கள். உங்களைச் சுற்றிப் பாத்திரம் போல் உங்கள் உடல், நரம்பு, மனம் மூளை அமைப்பு. அதைப் போல் பிறர். அனைவரும் ஆன்மாக்கள். அவர்களைச் சுற்றி அவரவர் உடல்கள். பாத்திரத்திற்குள் இருக்கும் ஆகாயம் தன்னை அந்த முழுதுமாய்ப் பரந்த பெரும ஆகாயத்தினின்றும் வேறான சிறு ஆகாயம் மட்டும்தான் என்று கருதுமா? அல்லது ஆகாயம் என்ற விதத்தில் தான் அந்த முழு ஆகாயமேதான். பாத்திரத்தில் தோன்றும் தோற்றம் பாத்திரம் என்ற உபாதியால் (சுற்றுச் சூழ்நிலையால்) ஏற்படும் மேம்போக்கான காட்சி மட்டுமே என்று சொல்லுமா? இதை நன்கு நீங்கள் புரிந்துகொண்டால் ஆத்ம நிலைக்கும் பிரம்மம் என்ற முழுமைக்கும் உள்ள ஐக்கியம் நன்கு புரிந்துவிடும். 

ஆத்மா என்பதற்கும், புறப்பொருள் என்பதற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, அதுவும் நாம் புரிந்துகொள்வதில். புறப்பொருள் இருப்பது அந்தப் புறப்பொருளுக்கே அர்த்தம் ஆகும் அறிவு கிடையாது. அறிவு உள்ள உணர்வுமயமான பொருளான நமக்குத்தான் புறப்பொருள் ஒன்று இருக்கிறது என்ற அர்த்தமே விளங்கும். இவ்வாறு தனக்குத் தானே அர்த்தப்படாமல் அறிவுள்ள பிறிதொன்றுக்கே அர்த்தப்படும் பொருளுக்குப் பெயர் ’பராக்’ என்பது. தான் இருப்பது தனக்கே அர்த்தப்படும் அறிவுடைய உணர்வுப் பொருளுக்கு ‘ப்ரத்யக்’ என்று பெயர். ஆத்மா ப்ரத்யக். சடப்பொருள் பராக். ஸ்ரீஆதிசங்கரர் எழுதுகிறார்: 

“நான் ஆத்மாவாக இருக்கிறேன். பிறிதொன்றாக இல்லை. 

பிரம்மமே ஆக இருக்கிறேன். சோகத்தில் தொடர்புடையவன் இல்லை. 

ஸத் சித் ஆனந்த உருவமாகவே இருக்கிறேன். 

நித்யமாக விடுதலையுற்று (முக்தமாக) இருப்பதுவே 

என் ஸ்வபாவமாகக் கொண்டிருக்கிறேன்.” 

(அஹமாத்மா ந சான்யோSஸ்மி ப்ரஹ்மைவாஹம் ந சோகபாக் | 

ஸச்சிதானந்தரூபோSஹம் நித்யமுக்தஸ்வபாவவான் ||) 

பாத்திரத்திற்குள் இருக்கும் ஆகாயமாக இருந்தால் தான் முழு ஆகாயமே என்பது புரிகிறது. அதுபோல் உடலுள் ஆத்மா தான் என்ற நிலையில் நின்றால் பிரம்மமே தான், தனக்கும் சோகத்திற்கும் தொடர்பு கிடையாது; சச்சிதானந்தமயமான உரு தான்; நித்யமாகவே முக்தனாக, விடுதலையுற்றவனாக இருக்கும் சுபாவம் கொண்டவன் என்பதெல்லாம் புரியும். உள்ளே ஆகாயமாக இருப்பது புறத்தில் பாத்திரத்தின் பயனுக்கு முழுவதும் இன்றியமையாத அடிப்படை என்பது புரிகிறது. அதுபோல் உடலினுள் தான் ஆத்மா என்பது புரிந்தால் ஆத்ம ஞானம் உலக வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதும் புரியவரும். 

 

பாபம் என்பது எப்படி ஏற்படுகிறது? பொருந்தாத ஆசை, எப்படியாவது ஒன்றை அடைந்துவிட வேண்டும் என்ற ஆத்திரம், யாரும் தன் செயலைப் பார்க்கவில்லை அல்லது பார்த்தாலும் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற மூடத்தனம் இது போன்ற மனநிலை பாபத்திற்கான வசதியான களமாக அமைகிறது. இது எல்லாவற்றிற்கும் அடிப்படையாகத் தத்துவரீதியாகப் பார்த்தால் தான் இந்த உடல் என்பதில் தீவிர எண்ணம், அந்த உடலின் இச்சைகளுக்கு அடிமைப்பட்ட பழக்கம். வாழ்க்கை அனுபவங்களில் அடிவாங்கி, சிந்தனை எழுந்து தீவிரமாகத் தத்துவ சிந்தனை செய்யத் தொடங்கியவருக்கு இச்சை ஆசைகள், எதிர்பார்ப்பு, வசதி, சுகம் என்பதை விட தான் தேடும் வாழ்க்கையின் அர்த்தம், உலகின், பிரபஞ்சத்தின் மெய்ம்மை எது என்ற நாட்டம் இதுதான் மேலோங்கி இருக்கும். அந்த நிலையிலேயே கூட அவர் பாபம் என்ற வட்டத்தினின்றும் வெளியே வந்துவிடுகிறார். கவனப் பிசகினால் சில தவறுகள் நேரலாமேவொழிய நாம் பார்த்த பாபத்தின் களம் அவரிடம் மறைந்து விடுகிறது. விசாரத்தில் தீவிரமாக இறங்கியவரின் நிலையே இதுவென்றால் உணர்வின் பிழம்பான பிரம்மமே நான் என்று அறிந்தவரிடம் பாபத்தைப் பற்றிய பேச்சுக்கு இடமில்லை. ஏனெனில் அதற்கான உந்துதல்கள், காரணிகள் அனைத்தும் இல்லாமல் போய்விடுகின்றன. ஆன்ம சாதனையின் பாதையில் நிகழும் இந்த இயல்பான நிலையைச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். எனவேதான் இந்த பிரம்மத்தைத் தொடர்ந்து சிந்தித்தல் என்பதைக் குறித்தே ஒரு நூலே எழுதுகிறார். 

“சதாகாலமும் தன்னைப் பிரம்மம் என்று எண்ணியபடியே 

சஞ்சரிக்கும் மனிதர் எவரோ அவர்களுக்குப் பாபம் கிஞ்சித்தும் இல்லை. 

பாபத்தின் விளைவாகத் தோன்றும் துன்பமும் இல்லை” 

”தன்னை எப்பொழுதும் பிரம்மமாகக் கருதியே 

சுகமாய்ச் சஞ்சரிக்கத் தகும்” 

(ஆத்மானம் ஸததம் ப்ரஹ்ம ஸம்பாவ்ய விஹரந்தி யே  

ந தேஷாம் துஷ்க்ருதம் கிஞ்சித் துஷ்க்ருதோத்தா ந சாபத: || 

ஆத்மானம் ஸததம் ப்ரஹ்ம ஸம்பாவ்ய விஹரேத் சுகம் || ) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***