Saturday, May 27, 2017

ஸ்ரீமணவாள மாமுனிகளைப் பற்றி இருபது வெண்பா 2

Mamunivan Irupadhu Verse 11

மாமுனிவன் இருபது வெண்பா 11

மீண்டுமிங்கு வந்ததுகொல் பொன்னூழி மாதவற்கே
ஈண்டு விளைந்ததுகொல் பொற்காதல் -- யாண்டும்
அரங்கேசர் தாமரங்கில் தந்துவந்த வாழ்த்தே
சிரங்கொள்ளும் பூவுலகம் இன்று.

Has the Golden age come back again? Has the unchanging golden devotion to Madhavaa waken up in the human heart? Perhaps is it to signify that, Sri Ranganatha has joyfully tendered his euology, which the whole devotional world upholds in its head.

பொற்காலம் மீண்டும் வந்ததோ? மாறாத காதல் என்பது மாதவன்பால் மனித குலத்தில் எழுந்து விட்டதோ? அதுதான் போலும் அரங்கேசர் ஈடு வியாக்கியானம் உபந்யஸிக்கும் அரங்கில் வந்து தாம் உவந்து அந்த வாழ்த்துப் பாவைத் தந்தருளினார். அதனால்தான் போலும் உலகமெல்லாம் அந்த வாழ்த்துப் பாவை தலைமேல் கொண்டுள்ளது.

*
Mamunivan Irupadhu Verse 12

மாமுனிவன் இருபது வெண்பா 12

இன்றோ அவன்மூலம் ஈருலகும் ஒன்றாமோ
சென்றோ அவனும் சுருள்படியும் இட்டதுவும்
வென்றோ கலியெல்லாம் மாமுனிவன் வாழிடத்தைப்
பொன்றாமல் காக்கும் அருள்.

Oh! today, is it his star Moolam! Have this world and the beyond, the two have merged into one! Has he gone thither to release down the spiral conveyer-belt? Yea it is his motherly grace, passionate in protecting, the eternal space of divine life, winning over from Kali!

இன்றைக்குத்தான் மாமுனிவனின் மூல நட்சத்திரமோ? மண்ணுலகும், திருநாடும் ஒன்றாக ஆயிற்றோ? அங்கிருந்து சுருள்படி இறக்கத்தான் அவ்வளவு வேகமாகப் போயினனோ? ஆன்ம வர்க்கம் உய்ய வேண்டி ஆன்மிக வாழ்வின் இடத்தைக் கலியினின்றும் வென்று மாமுனிவன் காக்கும் அருள் அன்றோ ஈது!

*

Mamunivan Irupadhu Verse 13

மாமுனிவன் இருபது வெண்பா 13

அருள்கொண்டோ ராயிரமாய் ஆன்றமறை ஈந்தான்
பொருள்கொண்டு பாடியமாய்ப் பிள்ளானால் தந்தான்
மருளகற்றி மக்களுய்ய நம்பிள்ளை ஈட்டை
அருளப்பா டந்தணனாய் வந்து.

Out of His measureless grace He revealed the songs of thousand as the neo-vedas, more complete. And out of His grace He started the commentorial tradition through Pillan. To dispel people's darkness in understanding, under the pretext of arulappadu, He published to all, the great Eedu, the Holy One.

நம்மாழ்வார் ஆயிரம் திருவாய்மொழி பாடியதும் அவன் அருளால் அன்றோ! பின்னர் வியாக்கியான மரபைத் தொடங்கியதும் பிள்ளானால் அவனுடைய அருள்தானே! இருந்தும் மக்கள் உள்ளத்தில் பிரபத்தி மார்க்கத்தில் இருந்த மருள் அனைத்தும் அகற்றும் வண்ணம், அருளப்பாடு என்னும் வியாஜத்தால் நம்பிள்ளை அருளிய ஈடுதன்னை மணவாள மாமுனிவன் மூலம் வெளியிட்டது அவனுடைய பேரருளேயாம்.
*
Mamunivan Irupadhu Verse 14

மாமுனிவன் இருபது வெண்பா 14

வந்தணைந்த செய்யதவம் சீர்வசனத் தாழ்பொருளை
மந்தணமாம் முப்பொருளைப் பேராமல் -- அந்தமிலா
தத்துவ முப்பொருளைத் தண்குருகூர் தீந்தமிழை
நித்தமும்நாம் கற்கச்செய் தான்.

The unique tapas of waiting in full faith and total reliance on His Grace alone is called Prapatti. By writing commentaries on Sri Vachana Bhushana expounding its deep meanings, on Rahasyatrayam, the three great secrets of Prapatti, on the eternal three principles of Visishtaadvaita philosophy he has made us study deeply these great works. And more so by writing commentary on Acharya Hrudayam, expounding the world of honey-tamil of Nammalvar, he has made our daily life, a divine living.

அவன் வந்து நம்மை உய்யக் கொள்ளும்வரை ஆற்றியிருக்கும் தவம் என்பது செய்ய தவமாகிய பிரபத்தி. பிரபத்தியின் ஆழ்பொருளைத் தெரிவிக்கும் ஸ்ரீவசன பூஷணத்துக்கும், பிரபத்தியின் நுட்பமான மறை பொருளைத் தரும் மூன்று ரகசியங்களுக்கும், விசிஷ்டாத்வைத தத்துவங்கள் மூன்றையும் விளக்கும் தத்வ திரயத்திற்கும் வியாக்கியானங்கள் இயற்றி அதன் மூலம் நாம் அவற்றை நன்கு கற்கும் வழியைச் செய்தான் மாமுனிவன். அம்மட்டோ! திருக்குருகூரனின் தீந்தமிழை நாம் தினசரி அனுபவிக்கும் படியாக அன்றோ செய்து விட்டது மாமுனிவன் ஆசார்ய ஹ்ருதயத்திற்கு எழுதியிருக்கும் அரும் பெரும் வியாக்கியானம்!
*
Mamunivan Irupadhu Verse 15

மாமுனிவன் இருபது வெண்பா 15

தானுகந்த அந்தாதி பாடும் அமுதனவன்
வானுகந்த போகம் விடுத்தானோ -- தேனுகந்த
தெள்ளுரையால் சீரடியார் காயத்ரி தான்விளக்கும்
அள்ளுசுவை ஆசைக்காட் பட்டு.

The great Amuthanar who composed Sri Ramanuja Nutrandadhi, on attaining Moksha, would have been appointed there also to sing that Prapanna Gayatri to His pleasure. Even that Amuthanar perhaps has relinquished that supreme pleasure and come back to enjoy the clear exposition of his own work, in the puissant commentary of Mamunivan.

வானுலகத்தில் இருக்கும் ஒரே தான் என்னும் பரம சேஷியான பகவானின் உகப்புக்கு வேண்டி அங்கும் தான் இயற்றிய ஸ்ரீராமாநுஜ நூற்றந்தாதி பாடும் உயர்ந்த ஆனந்தத்தில் திளைக்கும் அமுதனாரும் கூட அந்த போகத்தை விடுத்து, பிரபந்ந காயத்ரியை மாமுனிவன் மேலும் மேலும் சுவை மிகுமாறு விளக்கும் அந்த மிக்க போகத்திற்கு ஆசைப்பட்டு வந்துவிட்டானோ என்னும்படியாய் இருக்கும்.

***

Mamunivan Irupadhu Verse 16

மாமுனிவன் இருபது வெண்பா 16

பட்ட சிரமம் பெரிதால் பயில்வோர்க்கே
இட்டகலை யேடும் கிடைப்பரிதால் -- நிட்டையாய்
நீள்வயதில் ஆழ்நிசியில் நூல்காக்கும் மாமுனிவன்
வேள்வியில்நம் உள்ளம் அவிசு.

High indeed were the difficulties undergone by Mamunivan for the sake of us; Rare indeed were the manuscripts of various books for study. Realising that enough copies should be made available for posterity for the benefit of future generations, he in his old age, deep into the oil-lit nights used to write in Olais, unmindful of the hardship he was undergoing, not contented with commissioning the disciples to do the job . His unselfish deed was a yagna and our melting hearts are the havis in that yagna.

அந்தக் காலத்தில் பல நூல்களுக்கும் ஓலைப் படிகள் கிடைப்பது மிகவும் அரிதாகப் போனமையால் கற்போருக்கு ஓலைச் சுவடிகள் கிடைக்காமல் மிகவும் இடர்ப்பாடு ஏற்பட்டது. இதை உணர்ந்த மாமுனிவன் தம்முடைய முதுமை காலத் தளர்ச்சியையும் பொருட்படுத்தாமல் இரவு வெகு நேரம் வரையில் விளக்குகள் ஏற்றி வைத்துக்கொண்டு மற்றவர்களை நியமித்ததோடு மட்டுமின்றித் தாமே தம் கைப்பட ஓலை எழுதிக் கொண்டிருந்தார் என்னும் அது வேள்வியாகும். அந்த வேள்வியில் நம் உருகும் உள்ளங்கள் எல்லாம் அவிசு ஆகச் சொரிகின்றன.

*

Mamunivan Irupadhu Verse 17

மாமுனிவன் இருபது வெண்பா 17

அவிசன்னம் நாய்நுகர்தல் ஒத்ததே மாலின்
புவிமக்கள் மற்றவைபின் னேகல் -- கவிக்கோதை
சொல்லில்வாழ் தூயனுக்கே நம்வாழ்வைச் சொத்தாக்கும்
வல்லமையால் வென்றான் முனி.

The human beings born in the world belong to Thirumal. And those beings to go behind other things forgetting Him is like the havis anna being thrown to dogs. So said the poetess supreme and He resideth in her words pure! And how ably conquered us all Mamunivan, by restoring us back to Him!

இந்த உலகின்கண் பிறந்த மனிதர் யாவரும் திருமாலுக்கே சொந்தமானவர்கள். அவனை மறந்து மற்றவை பின் போவது என்பது யாகத்தில் அவிசு என்னும் அன்னத்தை நாய்க்கு இடுவது போன்ற செய்கையாகும். இந்தக் கருத்து கவிக்கோதையான ஆண்டாளால் சொல்லப்பட்டது அன்றோ! அவளுடைய தூய சொல்லில் அல்லவோ அவன் நித்ய வாசம் செய்வது! மாமுனிவன் அவனுக்கே நம்மை மீண்டும் உரிமையாக்கும் வல்லமையால் அன்றோ நம்மை மீண்டும் வென்று விட்டான்!
*

Mamunivan Irupadhu Verse 18

மாமுனிவன் இருபது வெண்பா 18

முனிந்தமுனிப் பின்னேகிக் கற்றான் பெருமாள்
முனிவில்லா அந்தணன்பால் கற்றதுவும் கண்ணன்
கனிந்தநல் லாசிரியன் கிட்டாமல் ஏங்கி
முனிவன்பால் கற்றானோ ஈடு.

Bhagavan, in His Ramavatar, became a disciple to learn vidya under Visvamitra, who was famous for his anger. He, in His Krishnavatar, became the disciple of the pious brahmin, Sandeepani. After so many attempts in acquiring a mature Master, He became so longing for one such Guru. Perhaps that is why He chose to learn Eedu under Mamunivan.!

இராமாவதாரத்தில் பகவான் மிகவும் கோபிஷ்டன் என்று பிரபலமான விசுவாமித்திர முனிவனிடம் சிஷ்யன் ஆனான். ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலோ என்னில் ஆசிரியனாகிய சாந்தீபனி என்னும் அந்தணர் கோபம் என்ற குற்றம் அற்றவர் ஆயினும் குரு தக்ஷிணை என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது உயர்ந்த ஆசாரியருக்கு இலக்கணமாக முன்மாதிரியாக இருக்கும் வகையில், மிகச்சிறந்த ஆன்மிக நிலையைத் தரக்கூடிய பரமாத்வாகத் தான் இருந்தும், அதைத் தம்மிடத்தே கேட்கத் தக்க மனன சீலம் அற்றவராய், என்றோ பறிகொடுத்த குழந்தைகளை மீட்டு வந்து கொடுக்குமாறு கேட்டார். இதனால் எல்லாம் மனம் நொந்து, நல்லதோர் ஆசாரியனை அடைய வேண்டி ஏங்கியிருந்த பகவான் நல்லதோர் வாய்ப்பு கிட்டியதும் மாமுனிவனிடம், நேரடியாக சிஷ்யன் ஆகிறேன் என்றால் ஒருப்படார் என்று கருதி, ஈடு என்னும் மகா வியாக்கியான கிரந்தத்தைக் கற்கும் வியாஜத்தால் சிஷ்யன் ஆகித் தம்முடைய உளத்தின் நோவு தீர்ந்தான் போலும்!

*

Mamunivan Irupadhu Verse 19

மாமுனிவன் இருபது வெண்பா 19

ஈடும் எடுப்புமில் ஈசன் உவந்திங்கே
ஈடளித்த பெற்றிக்கே என்னுள்ளம் தானுருகும்
காடுவாழ் மானிடராய்க் காகுத்தன் தோன்றலாய்
நீடுபுகழ் பெற்றிமையும் விஞ்சு.

The Great Lord, who has nothing to equal or excel has been immensely pleased to bestow on mankind the gift of Eedu, which act of Him just melts my heart than His much vaunted advent as Sri Rama, who they say, mingled with even forest dwellers to bring them into the divine fold.

உயர்வற உயர்ந்த நலம் உடைய பகவான் மிகவும் உவந்து மனித குலத்திற்கு ஈடு என்னும் பெரும் வரத்தை அளித்த இந்தக் கருணையில் என் நெஞ்சம் மிகவும் உருகுகிறது. ஸ்ரீராமனாய் அவதாரம் செய்து காடு வாழ் சாதியும் கலந்து பழகி அவர்களையும் தெய்வநெறியில் அகப்படுத்தினான் என்று பெரும் புகழாகச் சொல்வார்கள், அதைவிட ஈடளித்த அருளில் என்னுள்ளம் உருகும்.

*

Mamunivan Irupadhu Verse 20

மாமுனிவன் இருபது வெண்பா 20

விஞ்சுமிருள் தானகல வீறுடன் ஆன்றவுயிர்
துஞ்சுங்கால் நற்றுணையா தான்வருமே -- மிஞ்சுகுணம்
வான்பொலியும் நம்மின் மணவாள மாமுனிவன்
தேன்பிலிற்றும் தாளிணையே நந்து.

The darkness of worldliness even though abounding, yet it is dispelled and the soul's mission fulfilled by the ever accompanying Lotus Feet of Mamunivan, the very personification of unbounded grace and the honey of eternal bliss, Mamunivan, whose splendid qualities even the Lord Almighty of Nithya Vibhuti extols high.

இமையவரையும் செறும் என்னும்படியான உலகியல் இருள் தான் மிஞ்ச முயன்றாலும், மிக்க வீறுடனும், அபார கருணையுடனும் கூடவே துணையாக வருகின்ற நம்முடைய மணவாள மாமுனிவனின் நிலைத்த அருள் என்னும் அமுதத் தேன் பிலிற்றுகின்ற தாளிணையே புகல். மாமுனிவனின் குணங்களால் ஆகிய புகழானது வான் ஆகிய நித்ய விபூதியையும் வியப்பில் ஆழ்த்தியதால் அன்றோ ஸ்ரீரங்கநாதனும் உவந்து தனியன் இட்டுக் கொண்டாடியதும்!

***

சாற்று வெண்பா -

மாமுனிபால் அன்புற்றே மோகித்த ரங்கனவன்
காமுற்றுச் சொற்றக் கலையிதுவும் - தாமுற்றார்
எந்நாளும் எந்நிலையும் எவ்விடத்தோர் எத்தொழிலோர்
அன்னார்தம் அன்பால் தமர்.

This composition by one doped of love on Mamunivan, Mohanarangan, whoever takes to this, whenever, wherever, of whatever state and whatever livelihood, all of them are kindred because of love in Him.

பெரும் பேரருளாளரான மாமுனிவன் மீது கொண்ட மோகத்தால் அன்றோ மோகன ரங்கன் இந்த இருபது என்னும் கலையை யாத்தான், தகுதியால் அன்றே! இந்தக் கலையைப் படிப்பவர்கள் யாரேனும் எந்நாளிலும், எந்நிலையிலும், எவ்விடத்தும். எத்தொழில் செய்பவராய் இருந்தாலும் அவர்கள் அனைவரும் மாமுனிவன்பால் பூண்ட அன்பால் தம்மையெல்லாம் அவனைச் சேர்ந்தவர்களாய்க் கருதுவர் என்பது அவனுடைய சிறப்பே.


***


No comments:

Post a Comment