மெட்ரோ தடம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பெரிய சைஸ் பொருட்களை அநாயாசமாகத் தூக்கி வைக்கிறது ஒரு கிரேன். கீழே பாறை போன்று கல்பகுதி இருந்தால் வெடி வைத்துத்தான் தகர்க்க முடிகிறது. மிக உயரத்தில் உழைப்பாளர் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார். கீழே இருந்து பார்த்தால் மிகச் சின்ன உருவம். அவர்தான், அவரைப் போலப் பலர்தான் சிறுகச் சிறுக, கணத்திற்குக் கணம் வேலை செய்து இத்தனை பெரிய, நீளமான வேலையை இயற்றுகின்றனர். ஒரு நிமிஷம், இந்தப் பெரிய கற்கள், இரும்புப் பொருட்கள், இயந்திரங்கள், மனிதர்கள், கிரேன்கள் எல்லாம் உண்மையில் கனமற்ற வெட்ட வெளி என்று சொன்னால் என்னை நீங்கள் சிரிக்க மாட்டீர்களா? எவ்வளவு கனம், பரிமாணம், நிச்சயம் எல்லாம் கண்ணுக்கும், அனுபவத்துக்கும் தெரிந்தும் எல்லாம் உண்மையில் வெட்ட வெளி என்று சொன்னால் அது சரியான முட்டாள்தனம் இல்லாமல் வேறு என்ன?
நான் சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் அறிவியல் சொன்னால் என்ன செய்வீர்கள்? சாதாரண அனுபவத்தில் நீங்கள் நினைப்பதுதான் சரி. நானும் அதைத்தான் உணர்கிறேன். ஆனால் ஆழமாக அறிவியல் ரீதியாக ஆராய்ந்து போகும் பொழுது. பொருளின் அடிப்படைத் தன்மை என்று போய்ப் பார்க்கும் பொழுது விஞ்ஞானம் சொல்வது என்ன? இரும்பையோ, கல்லையோ எடுத்துக் கொள்வோம். நுணுக்கமான நிலையில் அது எதனால் ஆனது என்று பார்த்தால் அணுவால் ஆனது. அணுவின் அமைப்பு ரீதியாகப் போய்ப் பார்த்தால் ந்யூக்ளியஸ் அதைச் சுற்றி எலக்ட்ரான்கள். இந்த ந்யூக்ளியஸுக்கும், எலக்ட்ரானுக்கும் இடையில் இருப்பது வெட்ட வெளிதான். ந்யூக்ளியஸுக்குள் ஓர் அமைப்பு. அதனுள்ளும் வெட்ட வெளி. அதாவது வெட்ட வெளி என்பதை அகற்றி விட்டுப் பொருட் கூற்றின் பகுதியை மட்டும் உருட்டி வைத்தால் இந்த பூமியே சின்ன கோலி குண்டு அளவுக்கான குளிகை ஆகிவிடும் என்கிறார்கள். அப்படியென்றால் வெட்ட வெளியே பெரும்பாலும் நிறைந்த அமைப்புக் கட்டிடம்தான் நாம் காணும் கனமான பொருட்கள், நமது உடல், வெளியில் இருக்கும், நகரும் நகரா பொருட்கள் அனைத்தும். அதாவது வெட்ட வெளிக்கு மேல் வெட்ட வெளி நின்று கொண்டும், நகர்ந்து கொண்டும் போடும் ஆட்டம்தான் உலக இயக்கமோ என்று கவிதை இயற்றலாம் போல் இருக்கிறது யதார்த்த உலகம்.
ஆனால் நடைமுறை அனுபவத்தில் அப்படித் தெரிவதில்லை. ஆழ்ந்து ஆராய்ந்து விஞ்ஞான ரீதியாகச் சிந்தித்தால்தான் இந்த உண்மை தெரிகிறது. இதைத்தான் அத்வைதம் வேறு மொழியில் சொல்கிறது. அதாவது வியாவகாரிக நிலையில் ஒருவித உண்மையாக உலகம் புரிய வருகிறது. ஆனால் பாரமார்த்திக நிலையில் உண்மை என்பது முற்றிலும் வேறு என்று. பரம அர்த்தம் என்றால் Final Meaning. பரம அர்த்தம் என்பதனுடைய adjectival form பாரமார்த்திகம். பாரமார்த்திகம் என்றால் Meaning arrived at the final analysis என்று பொருள். ஆனால் பாரமார்த்திகம் என்ற சொல்லை நாம் போட்டுக் குழப்பிக் கொண்டு என்னவோ ஏதோ என்று பூடகமாக்கி மயங்குகிறோம்.
சரி. இதுதான் இப்படி என்றால், நமக்குத் தெரிந்தவர் ஒருவர் அயல்நாடு போகிறார். இன்றுதான் கிளம்பினார். இன்றைக்கு என்ன தேதி என்று கூட நம்மிடம் கேட்டார். சொன்னோம். ஆனால் பல மணி நேரங்கள் கழித்து, மறு நாள் இரவு போன் பண்ணுகிறார். பேச்சு வாக்கில் இன்றைக்குத் தேதி என்று நேற்றைய தேதியையே சொல்கிறார். இல்லை சார். இன்றைக்குத் தேதி என்று கரக்டாக நாம் சொல்கிறோம். இல்லவே இல்லை. இந்தத் தேதிதான் என்று அவர் முதலில் தவறாகச் சொன்னதையே மீண்டும் சொல்கிறார். என்ன ஆயிற்று இவருக்கு! அப்புறம்தான் விளக்குகிறார். அவ்வளவு நெடிய தொலைவு பறக்கும் போது காலக் கோடு மாறுகிறதாமே! இன்றைக்குக் கிளம்பி, நாளைக்குப் போய், மீண்டும் இன்றைக்கே அந்தத் தொலைதூர இடத்தை அடைந்து விடுகிறார் அவருடைய கணக்கின் படி. இதற்கே தலை சுற்றினால் எப்படி?
விஞ்ஞானம் வேறு ஒரு விஷயம் சொல்கிறது. ஒளிதான் இருப்பதிலேயே மிக அதிக வேகமாகச் செல்லும் ஒன்று. ஆனால் அந்த ஒளியே சூரியனை விட்டுக் கிளம்பி நம்மை வந்தடைவதற்குள் 8 நிமிஷம் கடந்துவிடுகிறது. அதாவது எட்டு நிமிஷத்திற்கு முந்தைய சூரியனைத்தான் ஒவ்வொரு கணமும் நாம் காண முடிகிறது என்று பொருள். சூரியனாவது பரவாயில்லை. இன்னும் சில விண்வெளிக் கோளங்களிலிருந்து நமக்கு ஒளி வந்து சேரப் பல ஆண்டுகள், பல நூற்றாண்டுகள் கூட ஆகின்றன என்று விஞ்ஞானம் சொல்கிறது. அதாவது இன்று நேற்று நாளை என்பது ஒரு சின்ன எல்லைக்குள் நாம் ஆடுகின்ற பாண்டி விளையாட்டு. நமக்கு வாய்த்த எல்லைக்குள். நம் எல்லைகளை நாம் விரிவுபடுத்திப் பார்க்கலாம். அதாவது சில்லாக்கைச் சற்றுத் தள்ளித் தள்ளிப் போட்டு விளையாடலாம். ஆனாலும் என்றுமே இச்சா இனியாதான்.
ஒரு கற்பனை. ஒளியின் வேகத்தை விட அதிகமாகச் செல்லும் ஒரு ராக்கட் கட்டி அதில் பயணப்பட்டுப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். போய்விட்டு ஓர் அரைமணி நேரத்தில் திரும்பி வந்து விடுவோம் என்றும் வைத்துக் கொள்வோம். வந்து பார்த்தால் பல நூறு வருஷங்கள் கடந்து போய்விட்ட பூமிக்கும், அதில் நாம் கிளம்பிய நம்முடைய வீட்டிற்கும் ( அப்படி ஒரு வேளை அப்படியே அந்த வீடும், சூழலும் காப்பாற்றப் படுமானால் ) வந்து சேருவோம்.
விஷ்ணு புராணத்தில் ககுத்மியின் பெண் ரேவதியைப் பற்றிய கதை வருகிறது. ரேவதியை அழைத்துக் கொண்டு ககுத்மி பிரம்ம லோகம் போகிறார். பிரம்மா ஏதோ வேலையாக இருக்கவும் சற்றே காத்திருக்கிறார். மிகச் சிறிய காலம்தான் காத்திருக்க வேண்டியிருந்தது. உடனேயே பிரம்மா ‘என்னப்பா! என்ன இங்கெ வந்திருக்கிறாய்?’ என்று கேட்டார். பெண்ணுக்கு நல்ல வரன் அமைய வேண்டும். நீங்கள்தான் வரம் தர வேண்டும் என்றார். பிரம்மா சிரித்தார். ‘என்ன ஆளுய்யா நீ? காலம் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு கணக்கில் ஓடுகிறது. நீ ஒரே காலம்தான் பூமியிலும், இந்த மண்டலத்திலும் என்று நினைத்துக் கொண்டு வந்து விட்டாய். நீ இங்கே காத்திருந்த சில நிமிஷப் போதுகளில் உங்கள் பூமியில் பல சதுர்யுகங்கள் கடந்து போய்விட்டன. நீ இப்பொழுது மீண்டும் போனால் உன் ராச்சியம் இருக்காது, உன் உறவினர் யாரும் இருக்க மாட்டார்கள். நீ வரும் பொழுது இருந்த உலகமே இருக்காது. எல்லாம் மாறிவிட்டது, கடந்து விட்டது’ என்று கூறுகிறார். ககுத்மி, ரேவதி, பிரம்மா எல்லாம் புராணப் பெயர்களாக இருக்கலாம். ஆனால் சொல்லப் பட்ட விஷயம் காலத்தையும், ஆகாய வெளியையும் பற்றிய உண்மை விஞ்ஞானம் இன்று சொல்லும் உண்மை.
இந்த சிருஷ்டி, இந்தப் பிரபஞ்சம் இதை நன்கு புரிந்துகொள்ளக் கவனம் செலுத்தினால் முழுக்க முழுக்க வியப்புதான். இந்த வியப்புதான் மாயை. இந்த மாயையை உடலும், மனமும் கொண்ட சமுதாய நிலைப்பட்ட மனிதன் என்ற கோணத்திலிருந்து விஞ்ஞானம் வியந்தும், நயந்தும் ஆய்வு நடத்துகிறது.
இந்த மாயையை உடலும், மனமும் உபாதிகளாகக் கொண்ட ஜீவநிலை கடந்த, காலம், தேசம் என்ற எல்லைகள் அற்ற ஆத்மாவின் நிலையில் நின்று வியந்து ஸ்ரீஆதிசங்கரர் பாடிய ஐந்து சுலோகங்கள்தாம் இந்த மாயா பஞ்சகம் என்பது.
காலம், தேசம், உடல், மனம், பஞ்ச பூதங்கள் என்ற உபாதிகளின் உள்ளே நிலவும் பிரபஞ்சத்திலேயே ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானம் இயற்கையின் அதிசயத்தை, காலத்தின் தன்மை, வெட்ட வெளியின் தன்மை எல்லாம் எவ்வளவு வினோதமாகவும், விடை ஓயாத புதிராகவும் விரிகிறது, மாறுகிறது என்னும் மாயா விசித்ரத்தை வியக்கிறது.
மெய்ஞ்ஞானமோ உபாதிகளைக் கடந்து, உணர்வுமயமாகி நின்று, ஆத்ம போதத்தில், சித் ஸ்வரூபமாய் நின்ற அகண்டத்தில் இந்தப் பேத விசித்ரங்களை எப்படி மாயா ஜால நிகழ்ச்சிகள் போன்று நடத்துகிறது இந்த மாயை என்று வியக்கிறது. விஞ்ஞானத்தின் வியப்பு இன்றைய நவீன க்வாண்டம் அறிவியல் என்றால், மெய்ஞ்ஞானத்தின் வியப்பு பகவத்பாதரின் இந்த மாயா பஞ்சகம்.
இந்த மாயா பஞ்சகத்தில் பேசுவது யார் என்று பார்த்தால் நீங்கள், நான், அவர். ஆம். உடல்கள் தோறும் உள் நின்ற உயிராக இருப்பது நான் என்ற கண்ணன் கூற்றின் வெளிப்பாடுதான் இந்த வியப்பு.
இதைப் புரிந்துகொள்ள ஒரு சின்ன உத்தி: வெட்ட வெளியில் இருக்கும் பொருளாக இல்லாமல் நீங்கள் உங்களை அந்த வெளியாகவும், உங்களுக்குள் இந்தப் பொருட்களும், பிரபஞ்சமும் உள்ளடங்குவதையும் ஒரு கற்பனையாகவேனும் தியானித்துப் பாருங்கள். உபாதிகளின் கட்டமைப்பிலிருந்து வெளியேறிய பார்வையைப் பெற அது ஒரு நல்ல பயிற்சி ஆகும். அந்தப் பார்வைக் கோணத்தில் நின்று புரிந்துகொள்ள வேண்டிய கருத்துகள் ஸ்ரீஆதிசங்கரர் இங்கே கூறும் கருத்துகள் என்பதை மறக்காதீர்கள்.
பார்த்தல் என்றதுமே நமக்கு மனத்தில் எழும் சித்திரம் ஓர் உருவம், அதற்குக் கண்கள். அதன் விழியில் படும் பொருட்கள். இந்தச் சித்திரத்தை மாற்றி உருவம் இல்லாது, விழி, கண் என்று இல்லாமல் பார்வை மட்டுமே, பார்வையாகவே பரந்த, நிறைந்த ஆகாயம். பார்வையாகவே ஆகிய தளம். Perceiving Field. அதுதான் நீங்கள் என்பதை எவ்வளவு ஆழமாக உள்வாங்குகிறீர்களோ அந்த அளவிற்கு ஸ்ரீஆதிசங்கரர் உங்களுக்கு அர்த்தம் ஆவார்.
நிச்சயம். சித் மயமாக இருக்கும் ‘உங்களுக்கு’ (எனக்கு, அவருக்கு) ஒப்புமையாக, உதாரணமாகக் காட்டக் கூடிய வேறு ஒன்று எங்கே இருக்கிறது? அன்றும், இன்றும், என்றும் இருக்கும் சித் கனமாகிய உங்களுக்கு மாற்றமோ, மறைவோ, என்றும் இல்லை என்பதனால் நீங்கள் நித்யம் ஆனவர். முற்றிலும் அறிவே மயமாக சித் மயமாக இருக்கும் உங்களிடம் இவ்வளவு அம்சம் என்று கூறுபோட்டுப் பார்க்க இயலாது ஆகையினாலே நீங்கள் நிரம்சகர். உடலாக இருந்தால் இதுதான் உங்கள் உருவம். இதனோடு நீங்கள் முடிந்துவிடுகிறீர்கள் என்று எல்லைகளை வகுத்துக் கூறலாம். ஆனால் அறிவு மயமான ஆகாயமாக இருக்கும் உங்கள் இருப்பு கண்டமானது (பகுதிபடுத்தக் கூடியது) அன்று. நீங்கள் அகண்டம். அறிவு மயமான உங்களிடம் (சித் மயமான உங்களிடம்) சித் இல்லாத வேறு எதுவும் கலந்திருந்தால் உங்களுக்குள்ளேயே கூட எதுவரை சித், இது சித் பகுதியா அல்லது சித் அற்ற பகுதியா என்று வேறுபடுத்திப் பார்க்க (விகல்பித்துப் பார்க்க) முடியும். முழுக்க முழுக்க சித் மயமே ஆன அகண்டாகார வெளியாக இருக்கும் உங்களிடம் அப்படி ஏதும் விகல்பிக்க முடியாது. அனைத்துவித விகல்பிக்கலாம் சாத்யங்களும் அற்றுப் போன நிலை உங்கள் நிலை. ஸர்வவிகல்பனாதிசூந்யம். இங்குதான் உங்கள் வியப்பின் தொடக்கம்.
இப்படி சித் மயமான அகண்டாகார வெளியாக, மாற்றம், மறைவு, கூடுதல், குறைவு, வேறுபடுதல் எனும் எதுவுமற்ற சைதன்யமாகிய என்னிடம் (நீங்கள் சிதாகாசம், உங்களுக்குள் அடங்கியிருப்பது பிரபஞ்சம்) ஜகத் என்றும், அதில் ஜீவர்கள் என்றும், அதில் நான் ஒரு ஜீவன் என்றும், ஜகத்துக்கும், ஜீவர்களுக்கும் நியாமகமாய் ஈச்வரன் என்றும் இப்படிப் பேதமயமான சித்திரத்தை, சாத்யமே இல்லாத இத்தகைய வியாவகாரிக உலகைச் சாத்யப்படுத்தி நடத்துகிறதே இந்த மாயை! என்ன வியப்பு என்ன வியப்பு !
‘நிருபம நித்ய நிரம்சகேSபி அகண்டே
மயி சிதி ஸர்வ விகல்பநாதி சூன்யே |
கடயதி ஜகதீச ஜீவ பேதம்
து அகடித கடநாபடீயஸீ மாயா ||’
‘சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்குச்
சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்
ஆகப் பலபல நல்லழகுகள் சமைத்தாய்’ (மகாகவி பாரதி)
’சக்தி முதற்பொருள்
பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு
சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை
சக்திவீணையிலே ஞாயிறு ஒரு வீடு, ஒரு ஸ்வரஸ்தானம்
சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்’ (மகாகவி பாரதி)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment