பிறந்து வளர்கிறோம். அப்பொழுது இயற்கையின் ரீதியாகப் பல நெறிகளை நாம் கடைப்பிடித்தாக வேண்டியிருக்கிறது. வளர்ந்த நிலையில் நம்மால் தாங்கக் கூடிய சில விஷயங்கள், பிறந்த குழந்தை நிலை, சற்று வளர்ந்த சிறுவயது நிலையில் எல்லாம் சாக்கிரதையாகத் தவிர்க்கப் படவேண்டியவையாய் இருக்கும். வளர்ந்த பின்னரும் பல சூழல்களைப் பொறுத்துச் செய்ய வேண்டியன, செய்யத் தவிர்க்க வேண்டியன, தட்பவெட்ப நிலையைப் பொறுத்து, மக்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து, நோக்கங்களைப் பொறுத்து என்று பல காரணங்களால், வழிவழியான பண்பாட்டின் காரணமாகவும் கூட, செய் செய்யாதே என்றபடியான விதிகள், விலக்குகள் எல்லாம் வாழ்க்கையின் இயற்கையில் நமக்கு ஏற்படுகின்றன.
இதுவரையில் சொன்னதில் இந்த ‘நமக்கு’ என்ற சொல்லைத்தான் உன்னிப்பாக ஆராயச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். அதாவது பிறக்கிறோம், வளர்கிறோம், செய் செய்யாதே என்ற விதி விலக்குகள் ரீதியாக நமது கடமைகள், முயற்சிகள் எல்லாம் அமைகின்றன என்றோமே, இதில் நாம் என்பது எதைக் குறிக்கிறது என்று கேட்கிறார். அதாவது அவரவர், தம்மைப் பொறுத்தவரையில், ‘நான்’ என்பது என்ன என்று யோசிக்க வேண்டும். இந்த உடல், தானே தன் போக்கில் நான் என்று சொல்லிக் கொள்வதில்லை. நான் என்பது இந்த உடல் இல்லை. அதனால்தான் என்னுடைய உடல் என்று நம்மால் சொல்லவும் முடிகிறது. இந்த உடலை தன்னுடையது என்று சொல்லிக் கொள்ளும் ஒன்றுதான் நான்.
அந்த நான் உணர்வு மயமாக இருக்கும் ஆத்மா. அது பிறப்பதில்லை. பிறப்பது உடல்தான். வளர்வதும் ஆத்மா அன்று. பலவேறு சூழல்கள், கட்டுபாடுகள், விதிகள், விலக்குகள் எல்லாம் ஆத்மாவுக்கு இல்லை. அதாவது அவரவர் தன்னுள் எண்ணிக்கொண்டால் ‘எனக்கில்லை’. நான் பிறப்பதும் இல்லை. வளர்வதும் இல்லை. இயற்கையாக அமைந்த பல நெறிகளும், செய் செய்யாமைகளும் எனக்கில்லை. நான் செய்தேன் என்னும் கர்த்துருத்துவம் (செய்வோன் என்னும் தன்மை) அகங்காரத்திற்குத்தானே ஒழிய ஆத்மாவான எனக்கில்லை. ஆத்மா ஆகிய நான் சின்மயமாக, ஞான மயமாக இருக்கிறேன். பொருள்தன்மை சிறிதும் என்னிடம் கிடையாது. பொருள்தன்மை இருக்கும் எதுவும் பிறக்கும், மாறும், மறையும். நிலைத்து இராமல் இவ்வாறு தோன்றி மாறி மறையும் தன்மை என்பது சுபம் அற்றது. இத்தகைய அசுபம் சற்றும் இல்லாத நிலைத்த நித்யமான ஞானமயன் ஆகிய ஆத்மா நான். எனவே நான் சிவம்.
‘நான் பிறந்தவன் அன்று, வளர்ந்தவன் அன்று அழிபவனும் அன்று
இயற்கையில் அமைந்த தர்மங்கள் இந்த உடலுக்கு அமைந்தவை ஆகும்
செய்வோன் என்ற தன்மையும் அகங்காரம் பற்றியது ஆகும்
சின்மயன் ஆகிய ஆத்மா என்னைப் பற்றியது அன்று சிவமே நான்’
‘நாஹம் ஜாதோ ந ப்ரவ்ருத்தோ ந நஷ்டோ
தேஹஸ்யோக்தா: ப்ராக்ருதா: ஸர்வதர்மா: |
கர்த்ருத்வாதிச்சின்மயஸ்யாஸ்தி நாஹங்
காரஸ்யைவ ஹ்யாத்மனோ மே சிவோஹம் ||’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment