Saturday, May 2, 2026

அத்வைத பஞ்சரத்னம் 03

'விழித்துக்கொண்டே கனவு காண்கிறாயா?’ என்று சிலரைக் கேட்போம். நம்மையும் சிலர் கேட்டிருப்பார்கள். என்ன காரணம்? தூக்கத்தில்தான் ஒருவர் கனவு காண்பார். தமக்குள் எதையோ காண்பார். பேசுவார், முனகுவார். கனவின் விளைவு என்று புரிந்துகொள்வோம். அதாவது தூக்கத்தின் காரணமாக, உறக்க நிலையில் கனவுகள் நிகழ்கின்றன. கனவு காணும் போது, ‘விழித்துக் கொண்டிருந்தேன்.. பிறகு தூங்கினேன். தூக்க நிலையில் கனவு காண்கிறேன்’ என்றெல்லாம் நமக்கு நினைவு இருக்காது. விழித்தவுடன் தெரியும் அதுவரை கனவு கண்டோம் என்பது. கனவில் எத்தனை காரியம் செய்கிறோம். நாம் நம்மைப் பற்றிக் கூட எண்ணம் கொண்டும் இருக்கிறோம். ஆனால் அது விழிப்பு நிலையில் இருந்த நம்மைப் பற்றிய எண்ணத்தோடு தொடர்பு உடையதாய் இருக்காது. ஆனாலும் கனவில் நாம் நாமேதான் என்பதில் எந்தச் சந்தேகமும் ஏற்படுவதில்லை. 

கனவு கண்ட நிலையில் நாம் ஜீவனாக இருந்தோம் என்று ஓர் உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். விழித்த பின்னர் நாம் ஆத்மாவாக இருக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். இதே போல்தான் விழிப்பு நிலையில் நம்மை ஜீவனாக உணர்கிறோமே, இது ஞானம் அடையும் போது மாறி விடுகிறது. அப்பொழுதுதான் நாம் ஆத்மா என்பதைப் புரிந்துகொள்கிறோம். அதாவது ஆத்ம ஞான நிலையைக் கருத்தில் கொண்டால் நமது இந்த விழிப்பு நிலையும் ஒருவித கனவு நிலை போலத்தான். 

தூக்கத்தால் எப்படி நமக்குக் கனவுகள் உண்டாகின்றனவோ அது போன்று அஞ்ஞானத்தால் இந்த உலகம் என்ற நிலையில்லாத, வியவகாரத்தில் மட்டும் உண்மை போன்று இருக்கின்ற இது தோன்றுகிறது. நாமோ சத்யமான ஞான ஆனந்த உருவமான ஆத்மாவாய் இருக்கிறோம். நம்மிடமே தோற்றம் தரும் இந்த உலகம் உண்மையன்று. ’நானோ’ அஞ்ஞானத்தால் உண்டான இந்தத் தோற்றத்தால் பாதிக்கப்படாமல் சுத்தமாக இருக்கிறேன். இந்தத் தோற்றம் மறைந்துவிட்டால் அதனால் எந்தக் குறைவும் என்னிடம் உண்டாகாத வகையில் நான் பூர்ணமாக இருக்கிறேன். கனவுகள் முடிவுக்கு வருவது போல இந்தத் தோற்றமய உலகம், அதன் விஷயங்கள் முடிவுக்கு வருகின்றனவே அன்றி நானோ நித்யமாக இருக்கிறேன். ஒன்றை நம்பிப் பிறிதொன்றின் தோற்றம் ஏற்படும் தன்மை உடையதாக இருக்கிறது உலகம். நானோ இருப்பதற்குப் பிறிதொன்றின் சார்பு எதுவும் வேண்டாத ஏகமாய் இருக்கிறேன். ஞானம், சத்யம், ஆனந்தம் மயமாகவே நான் நிறைந்து இருப்பதால் என்றும் சிவமாக இருக்கிறேன். 

‘ஆபாதி இதம் விச்வம் ஆத்மனி அஸத்யம் 

ஸத்யஞானானந்த ரூபே விமோஹாத் | 

நித்ராமோஹாத் ஸ்வப்னவத் தந்ந ஸத்யம் 

சுத்த: பூர்ணோ நித்ய ஏக: சிவோஹம் ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

No comments:

Post a Comment