Sunday, December 27, 2020

சுவாமி விலக்ஷணாநந்தர்

சுவாமி விலக்ஷணானந்தர் என்னும் மஹான் ஒருவர் இருந்திருக்கிறார். 20 நூற் தொடக்கமாக இருந்திருக்கலாம். அவர் திருப்பதியில் ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் திருக்கோவிலுக்கு சற்றுத் தொலைவில் சனத்குமார தீர்த்தம் என்னுமிடத்தில் ஏகாந்த நிஷ்டையில் அமர்ந்திருந்த காலத்தில் அவருடைய ஹ்ருதயத்தில் தோன்றிய சில முக்கியமான கருத்துக்களைத் தொகுத்து ஞான ரகஸ்யம் 1008 என்று 1927ல் போட்டிருக்கிறார்கள். அதில் சில பொன்மொழிகள் :- 

’சகலாதீத வஸ்துவை இன்னதென்று யாதொரு சந்தேகமும் விபரீத தர்க்கங்களறத் தெரிந்து கொள்வது அதிமானுஷ்யனது லக்ஷணம்.’
’உலகப் பொருளில்லாத உத்தமனைப் பரமாத்மா ஒருவர் மட்டும் கொண்டாடுகிறார்.’ 

’அசூயை, துவேஷம், கோபம் இம்மூன்றையும் யாரிடத்திலும் உபயோகப் படுத்தாத மனிதனைத் தேவர்கள் கொண்டாடுகிறார்கள்.’
’ஈஸ்வர நியதியின் ஒரு காரணத்தினாலேயே பிரபஞ்ச மாறுதல்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன.’ 

‘மத ஆராய்ச்சி செய்வதிலும் ஞான ஆராய்ச்சி செய்வது சிரேஷ்டம்.’
‘பாஷாஞானம், அர்த்தஞானம், ஆத்மஞானம் இம்மூன்று மின்றியவர்களுக்கு வேதாகம புராண இதிகாச ஸ்ம்ருதிகள் பயன்படமாட்டாது.’
‘மாறுங்கடமை மாறாக்கடமை என்ற இரண்டு கடமைகளையும் முடித்தவனை மஹரிஷிகள் ஆசீர்வதிக்கிறார்கள்.’ 

’பிரஹ்மம் ஒன்றைத்தவிர வேறு ஏதாவது ஒன்றில் மனதுபற்றி யிருப்பவர்களுக்கு தீக்ஷண்யம் சக்தி ஞானம் சுவாதந்தரியம் சாந்தம் சமம் உதாரம் உறுதி வீர்யம் இவைகள் முன்னேற்றமடையாது.’ 

‘பிரபஞ்ச ஜனங்கள் வரமுடியாத காட்டில் தபஞ்செய்வதைவிட மனோ வாஸனை சஞ்சரிக்காத பெரிய காட்டில் தனித்திருப்பது மஹா விசேஷம்.’
‘இச்சையற்ற காலத்தில் இச்சையில்லாத வஸ்துக்களெல்லாம் அழையாமலே வந்து சுற்றுகின்றன.’ 

‘பற்றைவிடுவதும் வைத்துக்கொள்வதுமான முயற்சியைக் காட்டிலும் பற்று நம்மை விட்டுவிடும்படி செய்துகொள்ளுகிற முயற்சியே விசேஷம்.’ 

‘மனத்தையும், செவியையும், ஒருமுகூர்த்தகாலம் வரை அந்தராத்மாவில் அடக்கிப்பழகியவனுக்கு உண்மையான ஞானோபதேசம் செய்யும்படி எல்லாம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.’ 

மஹான்களின் ஆசீர்வாதம் நமக்கு உண்டாகட்டும்.
Srirangam Mohanarangan 

***

No comments:

Post a Comment