Thursday, October 21, 2021

நான் எனும் பொய்யை நடத்துவோன் நான்!

மிகவும் ரகசியமாக, தனிப்பட்ட முறையில் பேசுவதற்கென்று ஏற்பட்ட செல்பேசி, டவர் கிடைக்காத கோளாறு, ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நல்லிருளாய் ஆனபின்பும் ஊருக்கே கேட்கும் படி ஒருவர் தமது சொந்த ரகசிய விஷயங்களைக் கூட உரக்கக் கூவ வைத்துவிடுகிறது. ஓர் இரண்டு மூன்று மாடிகள் தள்ளி ஒருவர் பாவம், தமது அந்தரங்கச் செய்தியையெல்லாம் ஊரே உறங்கிவிட்டது என்ற நிம்மதியில் பொங்கிப் பொழிந்து கொண்டிருக்கிறார். கோபம், தாபம், கேலி, வேட்கை, வெறுப்பு என்று மனித உள்ளத்தின் நிறமாலை மொத்தமும் அங்கு பட்டியடித்துக் காட்டுகிறது. அவர் பேசுகின்ற தனிப்பட்ட குறிப்புகள் பற்றி எனக்கு அக்கறையில்லாத காரணம் மனம் அதில் போகவில்லை. ஆனால் பேச்சின், அதாவது நமக்குக் கேட்பது கைக்கிளை பேச்சுதானே? அந்தப் பேச்சின் பொதுப் படிவம் கருத்தில் படுகிறது. எல்லாமே 'நான்' என்பதில் தொடங்கி 'நான்' என்பதில் முடிகிறது. அதாவது இங்கிருந்து நான் குத்து மதிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் காதலிப்பது 'நான்' ஐ.

அவர் மட்டும்தானா? எல்லோருமே அப்படித்தானே? என்னதான் அடக்கம், நைச்சியம், தன்னை முன்னிறுத்தாமல் பின்னாடித் தள்ளிக் கொள்ளும் பான்மை என்றெல்லாம் எவ்வளவு முக்கினாலும் கடைசியில் தாய்ச்சிக் கோட்டை முந்திக் கொண்டு வந்து தொட்டு விடுவது ஒவ்வொருவருக்கும் அவரவர் 'நான்' தான்.

சதா சர்வ காலமும் ஒவ்வொருவரும் குளிப்பாட்டி, போஷணை பண்ணி, அலங்காரம் செய்து, தூப தீபம் ஏற்றி, என்னென்ன பதிகம் உண்டோ அத்தனையையும் தானும் சொல்லி, பிறரையும் எப்பாடு பட்டேனும் சொல்லச் சொல்லி நித்ய பூஜையாக நடத்திக் கொண்டிருப்பது அஹங்கார கும்பாபிஷேகம்தான்.

அஹங்காரம் என்பதைப் பற்றி அன்றைக்கு நீங்கள் ஒரு லெக்சர் கொடுத்தேளே..

என்னிக்கு...தெரியலை...எல்லாம் பரமேசுவரனின் சித்தம்..அவன் பேசச் சொன்னால் பேசுகிறோம்...நானாக என்ன பேசிவிட முடியும்...

அருமையான உரை சார் அது. அப்படியே புட்டு புட்டு அஹங்காரம் என்பது என்ன என்ன பண்ணும் என்று கிழிச்சிப் பிட்டீங்க...

ஓ இருக்கும்...எல்லாம் அவனோட கிருபை..நம் கையில் என்ன இருக்கு... அதை ரெக்கார்ட் பண்ணி வைச்சுருக்கேளா.. எதுக்குன்னா..அது இருந்தா... இன்னும் பல பேர் கேட்கலாம்... சத் விஷயங்கள் எல்லாரையும் போய்ச் சேரணும்.

பாருங்கள். என்ன அழகாக, உள்ளே நுழைவது தெரியாமல் நுழைந்து தன்னை பீடத்தில் அமர்த்திக் கொண்டு விடுகிறது இந்த அஹங்காரம் என்பது! அவர் ரெக்கார்டு இருக்கா என்று கேட்பது அவருக்காக இல்லை என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கா? ஆனால் இவ்வளவு முகமூடிகளுக்குப் பின்னால் மண்டலாபிஷேகம் ஆகிக் கொண்டிருப்பது அவருடைய 'நான்' என்பதற்குத்தான் என்பதை உணராமல் இருக்க முடியுமா?

இது தவறா என்று கேட்பதை விட இதைத் தவிர்த்து விட்டு ஒருவரால் இருக்க முடியுமா? என்று கேட்பது உத்தமம். ஏனெனில் பதில் 'இல்லை' என்பதே.

ஏன் தவிர்க்க வேண்டும்? என்ற ஒரு கேள்வி எழுகிறது. அஹங்காரம் என்ன அவ்வளவு கொடியதா? என்பது இருக்கட்டும். முதலில் இதைத் தவிர்க்க முடியுமா? முடியும் என்று சொல்லி முதலில் இதை நேரடியாகப் போய் முரட்டுத் தனமாகப் பிடுங்கி எறிந்தவர் புத்தர். 'நான்' என்பதே கிடையாது போ. ஆத்மா என்றே ஒன்று இல்லை. ஆளில்லாமல் தானே ஓடும் சைக்கிள் இது. சைக்கிள் ஓடுகிறது. ஆனால் யாரும் அதை ஓட்டவில்லை. யாருக்காகவும் அது ஓடவில்லை. ஆனால் அவர் துரத்திய 'நான்' வேறு முகமூடி போட்டுக் கொண்டு புத்த சங்கமாகவும், பௌத்த மதமாகவும் மாறி தன்னை உலகெங்கும் பழிக்குப் பழி நிறுவிக் கொண்டதா இல்லையா?

சரி. அடுத்த கேள்வி. ஏன் இதைத் தவிர்க்க வேண்டும்? அப்படி என்ன இந்த 'நான்' என்பது பொல்லாதது?

அதாவது இப்பொழுது நீங்களும் நானும் பேசுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். 'நான்' என்பதை என்னிடத்தில் நேரே நிற்க வைக்காத பேர்வழி நானென்றால் என்ன பண்ணுவேன்? என்னைப் பற்றி உங்கள் மூலமாக எதையாவது சொல்லச் சொல்லி தூண்டி, என்னையே நான் குழியில் தள்ளிவிட்டு உங்களை விட்டு அதைக் காப்பாற்றி வெளியில் எடுக்கும் படியாக பேச்சிலேயே அமைப்புகளை உண்டாக்கி, கூடியவரை நாம் இருவரும் பேசுகின்ற நேரத்தில் முக்கால் வாசி நேரம் என் பங்குக்கு இந்த வேலையை நான் செய்து கொண்டிருப்பேன். உங்கள் பங்குக்கு நீங்களும் அதே வேலையை உங்களுக்காக ஆற்றிக் கொண்டிருப்பீர்கள். அதாவது இந்த 'நான்' என்பதற்கு நாமெல்லோருமே முழு நேரப் பணியாள் என்பதுதான் நடைபெறும் செய்தி.

ஏன் இதை மூடி மறைத்து, நாணிக் கோணி, முகமூடி போட்டுக்கொண்டு, ஒளிவு மறைவாகச் செய்வதைவிட நேரடியாக முகத்திற்கு முகம் நோக்கி இதை ஏற்றுக்கொண்டு விட்டால்?

அதாவது நான் என்பதைத்தான் நான் பேணுகிறேன். நான் தான் செய்கிறேன். நான் தான் விரும்புகிறேன். நான் செய்ததைப் பற்றிப் பாராட்டினால் நான் தான் மகிழ்கிறேன். நான் செய்ததைக் குற்றம் சொன்னால் நான் தான் வருந்துகிறேன். நான் தான் ஒன்றை விழைகிறேன். நான் தான் அதை அடைய என்னால் ஆன வேலைகளைச் செய்கிறேன். என்னை மீறிய சூழல்களில் நான் தான் தெய்வத்திடம் என் சுகத்திற்காகவும் விருப்பத்திற்காகவும் மன்றாடுகிறேன். நான் என்னை இல்லை என்று சொல்லிக் கொண்டால் தெய்வம் என் பால் சந்தோஷப்படும் என்று நானே எண்ணிக்கொண்டு என்னை இல்லை இல்லை என்று சொல்லித் தெய்வத்தை குஷிப் படுத்திவிட்டதாக நானே நினைத்துக் கொள்கிறேன். நான் என்பதில் நின்றால் எங்கேனும் தெய்வம் கோபித்துக் கொள்ளுமோ என்று நானே எனக்குள் பயந்து நான் என்பதை விட்டு விலகி நிற்பதைப் போல் பாவனை செய்து அதனால் தெய்வக் குற்றம் ஆக நேருவதைத் தவிர்த்து விட்ட நிம்மதியை நானே எனக்குக் கொடுத்துக் கொள்கிறேன் - இவ்வாறு நிலைமையை அப்படியே பச்சையாக ஏற்றுக் கொண்டு விட்டால் என்ன?

அடுத்து நான் என்பதில் நேரடியாக நான் நிலை பெற்ற பின்பு, நானே என்னை நியாயமாக நடத்த ஆரம்பிக்க வேண்டும்.

அதாவது நான் என்பதற்குப் பெருமை வேண்டும் என்று நான் நினைத்தால் உண்மையாக பெருமையான சாதனைகளை நான் புரிய வேண்டும். அவ்வாறு செய்த பின் நான் எனக்குப் பெருமையாக நினைத்தால் அது தகும். யார் தயவும் தேவையில்லை. யாரையும் ஏமாற்றிப் போலிப் பெருமையை நான் ஈட்டவில்லை. நான் கடினமாக உழைத்துச் சாதித்த பெருமையை நான் அடைகிறேன். நியாயம். அதேபோல் நான் சரியாகச் செய்யவில்லை. பிழைகள் புரிந்தேன். குற்றம் செய்தேன். அதனால் நான் கண்டிக்கப் படுகிறேன். ஏசப் படுகிறேன். வெறுப்புக்கு ஆளாகிறேன். எனவே நான் அந்தக் கஷ்டத்தைத் தேடிக் கொண்ட படியால் அதையும் அனுபவித்தல் என்பது நியாயம். எதுவும் என்னைப் பற்றி அநியாயமாக நடந்துவிடவில்லை. எனக்காக நான் பச்சாதாபப் பட வேண்டிய அவசியம் இல்லை. அதோடு போயிற்று. அதற்காக நான் தவறு செய்து விட்டேன் என்பதற்காக என்னை நானே கோதண்டம் கட்டித் தவணை முறையில் தண்டித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னை நானே வெறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. எனக்கு வேண்டும் என்று நான் எதை விழைகிறேனோ அதை அடைய நான் நியாயமான முறையில் வெளிப்படையாக கௌரவமாக முயற்சி செய்து அடைய வேண்டும். அவ்வாறு அடைவதில் இன்பம் காண்பது தூய இன்பம். ஆனால் எனக்கு வேண்டும் விஷயங்களை நான் முதலில் எனக்கு நன்மையானதா என்பதை நன்கு யோசித்துப் புரிந்து கொண்டு முயல வேண்டும் என்பது சொல்லாமலே போதரும். அப்படி நான் நன்கு புரிந்து கொள்ளவில்லையெனில் அது என் முட்டாள்தனம். அதற்கு உரிய விளைவை அடைந்து பெறும் துன்பம் என்பதும் தூயது. ஏனெனில் அது என்னைத் தெளிவு பெறச் செய்து தூய்மை படுத்தும். ஆனால் என்றைக்கும் நான் என்னை நேசிக்க வேண்டும். நன்மை செய்தாலும் சரி. தவறு செய்தாலும் சரி. நன்மை செய்தால் தூய இன்பம் தந்து நேசிக்க வேண்டும். தவறு செய்தால் ஏற்படும் தூய துன்பத்தில் என்னைத் தூய்மை படுத்தவும் என்னை நேசிக்க வேண்டும்.

'இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொறையரும் துன்பப் புணர்ப்பெலாம் நான்

நான் எனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்கும் முதற்சோதி நான்.'

(முதற்சோதி என்றால் எது இருந்தால் மற்ற பொருள்கள் எல்லாம் எனக்கு அர்த்தம் ஆகிறதோ அந்த முதல் வெளிச்சம் எனக்கு 'நான்'. அந்த 'நான்' என்பது அறிவாய் விளங்குவது.)

***



No comments:

Post a Comment