நல்ல தூக்கம். கடுமையான கனவு. மலையில் ஏறிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று மலைச்சரிவு. பெரிய பாறை அப்படியே உருண்டு நெட்டுக் குத்தாகத் தலைமேல் விழ வருகிறது. ஓடுகிறீர்கள். ஓடி, பார்த்தால் நெடுஞ்சாலைக்கு வந்து விட்டீர்கள். ஓட்டம். திரும்பிப் பார்க்கிறீர்கள். அப்பொழுது கால்தடுக்கிப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் விழுந்து நனைந்தபடி நிலைமை. அப்பொழுது விழிப்பு. அந்தப் பாறை, ஓட்டம், தடுக்கு, குளம், நீரில் நனைதல் எல்லாம் என்ன ஆயிற்று? படுத்த நிலையில் எழுந்து உட்கார்ந்து என்ன ஆயிற்று என்று முழிக்கிறீர்கள். ஞானத்திற்கும், கர்மாவிற்கும் இதுதான் தொடர்பு. ஞானம் என்பது விழிப்பு. கர்மா, வினைப்பயன்கள் என்பது கனவு நிகழ்வு. ஆனால் கனவு முடிந்திருக்கலாம். ஆனால் அந்தப் பயம், அதில் வேர்த்து, ரத்த ஓட்டம் எகிறிப் பதட்டம் எல்லாம் விழித்த பின்பும் தொடரத்தானே செய்கிறது. அதனால்தானே ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டி எழுந்து போய் ஒரு டம்பளர் தண்ணீர் குடிக்கிறீர்கள். நனவில் தொடரும் அந்தப் பதட்டம்தான் கர்மாவின் பிராரப்த வினைப்பயன்.
அதாவது கேள்வி என்னவென்றால், பிரம்மம்தான் சத்யம். இந்த உலகம் மித்யை என்று குருவின் உபதேசத்தாலும், அதை நன்கு உணர்வு பூர்வமாகத் தனக்குள் சுய ஞானமாக ஆக்கிகொண்டதாலும் அந்த ஞானியின் ஞானத்தீயில் அவரின் கர்ம பலன்கள் அழிந்து விடுகின்றன. என்றால், அது எப்படி? அதற்குத்தான் கனவு உதாரணம். ஆனாலும் கர்மாவில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. சேர்ந்து போன பழைய கர்மா (சஞ்சிதம்), இனிப் புதிதாகச் சேரும் கர்மா(ஆகாமி), இப்பொழுதைக்குப் பலன் தரத்தொடங்கியிருக்கும் கர்மா (ப்ராரப்தம்). பலன் தரத் தொடங்கியிருக்கும் வினைப்பயனால்தான் ஒரு ஞானியின் உடல் வாழ்க்கையே தொடர்கிறது. ஒரு ஞானி தொடர்ந்து இருந்து இந்த உலகிற்கு அவரால் விளையும் நன்மைக்கு வழிவகுப்பது இந்தப் பிராரப்த கர்மம் என்னும் தொடங்கியுள்ள கர்மாதான்.
விழிப்புற்ற ஞானியானவர் என்ன செய்கிறார்? தம் உடல், அதைச் சார்ந்த வாழ்க்கை இதையெல்லாம் பிராரப்த கர்மாவிற்கு ஒப்புக் கொடுத்துவிட்டுத் தாம் எந்த வினைப்பயனும் அற்றவராக இருக்கிறார். ஏன்? நிலைத்தது ஒன்றுதான். அது பிரம்மம். நிலயற்றது மற்றது அனைத்தும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட காரணத்தால் அவர் மனத்தில் ஏற்பட்ட பதிவுகள் என்னும் வாசனைகள் நீங்கி விடுகின்றன. மனம் புதிதாக எந்த அலையையும் ஏற்படுத்துவதில்லை. மனம் அடங்கிய நிலையில் உள்ளிருக்கும் ஆன்ம ஒளி தடைப்படாமல் பிரகாசிக்கிறது. இதுதான் என் முடிவான கருத்து என்று கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
‘சச்வந்நச்வரமேவ விச்வமகிலம் நிச்சித்ய வாசா குரோ:
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருசதாம் நிர்வ்யாஜசாந்தாத்மநாம் |
பூதம் பாவி ச துஷ்க்ருதம் ப்ரதஹதாம் ஸம்விந்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்பிதம் ஸ்வவபு: இத்யேஷா மநீஷா மம ||’
(தொடரும்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment