விளக்கை ஏற்றுகிறோம். பொருள்கள் தெரிகின்றன. அதற்கு முன்னர் இருட்டிலும் பொருள் இருந்தது. ஆனால் அதன் இருப்பு தெரியவில்லை. விளக்கின் ஒளி அதைத் தெரிவிக்கிறது. நம்மால் விளக்கின் ஒளியையும் பார்க்க முடிகிறது. பொருளையும் பார்க்க முடிகிறது. ஆனால் அல்ட்ராவைலட் ஒளி இருக்கிறது. அது நம் பார்வைக்குத் தெரியாது. ஆனால் பொருளில் அந்த யூ வி வெளிச்சம் பட்டு அந்தப் பொருள் ஒளிரும். இருட்டில் யூ வி லைட் போட்டால் பொருள் மட்டும் அலாதியாக ஒளிரும். பொருள் ஒளிர்வதை வைத்து நாம் யூ வி லைட் ஒளி இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறோம்.
ஆத்மா என்பது அறிவுமயமான ஒளி. அது இருப்பதால்தான் நாம் வெளியில் பொருள் இருப்பதையோ, அல்லது நமக்குள் மனம், புலன்கள், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் உணரமுடிகிறது. நம்மில் ஐம்புலன் அறிவு ஏற்படுவதே நமக்குள் ஆத்ம ஒளி இருக்கிறது என்பதை அடையாளமாக நின்று காட்டுகிறது.
எனவே, நமக்குக் கண்ணில் பொருள் தெரிகிறதே! அது போல் ஆத்மா எங்குத் தெரிகிறது? என்று நாம் நினைத்தால் அது நன்கு யோசிக்காமல் பேசும் பேச்சு. நமக்குக் கண்ணின் மூலம் காட்சி ஏற்பட்டு அந்தப் பொருள் இருப்பதாகப் புலன் அனுபவம் உண்டாவதே, அடிப்படையாக ஆத்ம ஒளி இருக்கப் போய்த்தான் ஏற்ப்படுகிறது. நாம் கண்ணால் பார்க்கிறோம் என்பதே, காதால் கேட்கிறோம் என்பதே, மூக்கால் முகர்கிறோம் என்பதே, நாவால் சுவைக்கிறோம் என்பதே, தொட்டு உணர்கிறோம் என்பதே உண்மையில் பார்க்கப் போனால் ஆத்ம ஒளி இருக்கிறது, இருக்கிறது என்று சான்று சொல்லும் அடையாளங்கள்தாம். இது விசித்திரமாக இல்லை! உலகில் நாம் அன்றாடம் அடையும் புலன் அறிவுகளே பார்க்கப் போனால் ஆத்மாவை நமக்குக் காட்டித்தரும் சாட்சிகள்தாம் என்பது?
ஆனால் ஆத்ம ஒளியால்தான் நாம் புலன் அறிவுகளை அர்த்தப் படுத்திக் கொண்டாலும், உலகைக் காணும் உற்சாகம் நமக்கு உள் ஒளியான ஆத்ம ஒளியை மறைத்து விடுகிறது. சூரியனின் ஒளியில்தான் மேகங்கள் பலவேறு வடிவங்களில், பிரகாசமாக நமக்குக் கண்ணில் தெரிகின்றன. ஆனால் அதே சூரியனை அந்த மேகங்களே நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்தும் விடுகின்றன. அதைப் போன்று ஆத்ம ஒளியால் நமக்குப் புலனாகும் உலகம் அதே ஆத்மாவை நம் அனுபவத்தில் மறைக்கவும், மறக்கவும் செய்துவிடுகிறது.
ஆனால் ஞானியானவர் என்ன செய்கிறார், உலகம் என்பதைக் காணும் போதே அதுவே ஆத்மா என்பதைக் காட்டும் என்பதை உணர்ந்து, உலகக் காட்சிகளூடே ஆத்மாவையே பார்க்கிறார். கோவிலுக்குப் போகிறோம். சந்நிதியில் தீபம் ஏற்றிக் காட்டுகிறார்கள். நாம் அந்தத் தீபத்தைப் பார்ப்பதில்லை. அந்தத் தீபத்தால் காட்டப்படும் மூர்த்தியைத் தரிசனம் செய்கிறோம். உலகமே ஒரு பெரும் தீபத் தட்டு. சதாசர்வ காலமும் தீபம் ஏற்றி நமக்கு இந்த உலகம் எதைக் காட்டுகிறது? நமக்குள் இருக்கும் ஆத்மாவைத்தான், அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்த பிரம்மத்தைத்தான் நாம் உணரக் காட்டுகிறது. ஆனால் உலகத்தின் தீபத்தட்டைப் பார்த்தபடியே நாம்தான் ஆத்மாவைப் பார்க்கத் தவறுகிறோம். ஞானி அந்த ஆத்மாவைப் பார்க்கிறார். அவர் பார்வையில் உலகமே ஆத்மாவுக்கான அடையாளம். அவருக்கு இந்த உலகமே ஆத்மாவைக் காட்டும் தீபம். என்றும் தடைப்படாத ஆத்ம தரிசனத்தைத் தியானித்தபடி இருக்கும் அவரே உண்மையில் குரு. இதுதான் என்னுடைய அறுதியான கருத்து என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
‘யா திர்யங்நரதேவதாபி: அஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேஹ விஷயா பாந்தி ஸ்வதோSசேதநா: |
தாம் பாஸ்யை: பிஹிதார்க்கமண்டலநிபாம் ஸ்பூர்த்திம் ஸதா பாவயந்
யோகீ நிர்வ்ருத மானஸ: ஸ குரு: இத்யேஷா மநீஷா மம ||’
(தொடரும்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment