அதாவது குரு என்பவர் யார் என்றால் தாம் இந்தத் தேகம் இல்லை. உள்ளே சதாசர்வ காலமும் விளங்கும் உணர்வு, சைதன்யம் இதுதான் தாம் என்று யார் உறுதியாக உணர்ந்துவிட்டாரோ அவர்தான் குரு. A teacher is one who has realised that one's identity is Consciousness and not the body. அவர் எதுவும் பேச வேண்டாம். அவர் இருந்தாலே போதும். அது உபதேசம் ஆகும். ‘எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி’ என்று வர்ணிக்கிறது திருவிளையாடல் புராணம். ‘பொய்யாம் சடக்கைச் சடக்கெனச் சதமென்று சின்மயம் தானாகி நிற்பது என்றோ’ (கடைசியில் பொய்யாகிப் போகும் இந்த உடலைப் பொய் என்று முதலிலேயே உணர்ந்து, நிலைத்தது சைதன்யம் என்று உணர்ந்து சின்மயம் ஆகித் தன் இயல்பும், உருவும் உண்மையில் சைதன்யமே என்று அவ்வாறே உணர்ந்து நிற்பது என்றோ) என்று பாடுகிறார் ஸ்ரீதாயுமானவர்.
‘தான்’ என்பது இந்த உடல், புலன்கள், மனம், புத்தி, சூழ இருக்கும் இந்த உலகம், இதில் தான் யார் என்றும், தன்னுடையது எது என்றும் பல உபாதிகளின் தொடர்பில் அந்தத் ‘தான்’ என்பது ஒருவருக்கு ஜீவன் என்றும், இன்னார், இன்ன பெயருடைய மனிதர் என்றும் சுய அடையாளமாக நடைமுறையில் தெரிகிறது. நீங்கள் யார் என்று கேட்டால் நாம் ஒரு பயோடேட்டாவே வைத்திருப்போம். ஆனால் இந்த உபாதிகள் சமபந்தப்பட்டுத் தோன்றும் சுய அடையாளம் நன்கு தத்துவ விசாரம் செய்யும் போது பரம உண்மையாக இருப்பதில்லை. நனவில் இருக்கும் மனிதர் கனவில் இருப்பதில்லை. கனவில் இருந்தவர் முழித்தபின் எங்குப் போனார் தெரிவதில்லை. ஆனால் எல்லாம் நாம்தான் என்று நினைவின் தொடர்ச்சியை வைத்துக்கொண்டு வியவகாரம் (நடைமுறை) போகிறது. நாம் என்பது உண்மையில் யார் என்று அக்கறையோடு விசாரம் செய்யப் போனால் உபாதிகளின் சம்பந்தம் அற்ற தூய சைதன்யம், சித் என்பதுதான் மிஞ்சுகிறது. அந்தச் சைதன்யம் என்பது அந்தப் பிரம்மமேதான். இவ்வாறு நன்கு விசாரம் செய்து ‘நான் இந்த உபாதிகளோ, உபாதிகளால் கட்டமைக்கப்பட்டுத் தோற்றமளிக்கும் ஜீவனோ, ஸம்ஸாரி மனிதரோ இல்லை. நான் உண்மையில் பிரம்மமே தான்’ என்ற நிச்சயம், ஐயங்கள் அற்ற திடமான உணர்வு ஒருவருக்கு ஏற்படுமேயானால் அவர் யாராய் இருந்தால் என்ன? சாத்திரம் கற்ற பிராம்மணராய் இருந்தாலும் சரி, அல்லது கீழ்க்குலம் என்று சொல்லப்படும் எவராய் இருந்தாலும் சரி அவரே உண்மையில் குரு என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு ‘நான் பிரம்மமே தான். இந்த உலகம் அனைத்தும் அந்தச் சைதன்யத்தின் விரிவாகத்தான் புலப்படுகிறது. சைதன்யம் இல்லாது நேரடியாக இந்த உலகம் என்பது நம் உணர்வுக்கு வந்ததும் இல்லை. வருவதும் இல்லை. வரப்போவதும் இல்லை. எனவே ஜகத் முழுமையும் சித் என்பதின் விஸ்தாரம்தான். இந்த விஸ்தாரமான இவையனைத்தும் மட்டுமா உணர்வில் தோன்றுகிறது? தான் ஜீவன் என்றும் தோன்றுகிறது. ஜீவனாகிய தான் நற்கதிக்கு வேண்டிப் பிரார்த்திக்கின்ற ஈசுவரன் என்றும் வியவகார உலகில் உணர்வில் தோன்றுகின்றன. ஜீவன், ஜகத், ஈசுவரன் என்னும் மூன்றுவகையான இந்த வியவகார உலகின் உண்மைகள் எப்படி அனுபவத்தில் ஏற்படுகின்றன? நான் பிரம்மமே என்னும் அந்த பாரமார்த்திக உணர்வு நிலையில் ஊன்றி நிற்கும் போது ஒரே சத்யம்தான் இருக்கிறது. ஆனால் வியவகார நிலையிலோ என்றால் ஜீவனாகிய தான்தான் அவித்யையின் காரணமாக, முக்குணங்களின் வசப்பட்டு, ஈசுவரன், ஜகத், ஜீவன் என்னும் இந்த முப்படையான காட்சி அனுபவ நிலையைக் கல்பித்துக் கொள்கிறேன்.’ - இவ்வாறு மிக உயர்ந்த ஆனந்தமும், நித்யமும், தான் அவித்யையின் காரணமாகக் கல்பித்துக் கொள்ளும் இந்த வியவகார நிலையால் எந்தப் பாதிப்பும், குறைவும் தன்பால் ஏற்படாத நிர்மலமானதும், என்றும் மாறாத சத்யமுமான பரத்தில் நிலைத்த திடமான மதி யாருக்கு இருக்கிறதோ அவர் எந்தச் சாதியாக இருந்தாலும் சரி, அவரே உண்மையில் குரு’ என்று இரண்டாவது சுலோகத்தில் பாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
பரமசிவன் உலகிற்கு எந்த வெளிச்சம் தர வேண்டும் என்று நினைத்தாரோ அது நடந்தேவிட்டது.
‘ப்ரஹ்மைவாஹம் இதம்ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைதத் அவித்யயா த்ரிகுணயா ஸேசம் மயா கல்பிதம் |
இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகதரே நித்யே பரே நிர்மலே
சாண்டாளோSஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மநீஷா மம || ‘
(தொடரும்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment