Sunday, April 12, 2026

யார் உண்மையில் குரு? (ஸ்ரீ ஆதிசங்கரர்) - 05

எல்லையே அற்ற சுகவாரி ஆக இருப்பது ஆத்மா. அந்த ஆத்ம சுகத்தின் ஒரு திவலையில் திளைத்துத்தான் இந்திரன் முதலிய பதவியில் இருப்போரும் சுகிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த ஆத்ம சுகத்தை, தம் ஸ்வரூப சுகத்தை, தம் மனத்தில் அலைகளே எழாவண்ணம் மனம் அடங்கிய முனிவர்கள், என்றும் துய்த்தவாறு ஆனந்தபரர்களாக இருக்கின்றனர். அந்த நித்ய சுகம் ஆகிய எல்லையில்லாத பெருங்கடலில் தம்முடைய மனம் கரையப் பெற்றவர் எவரோ, அவர் யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் பிரம்ம ஞானியாகக் கூட ஆவதில்லை. பிரம்மமேயாக ஆகிவிடுகிறார். அவர் யாராய் இருந்தால் என்ன? அவர் குருமட்டும் அன்று. இந்திரன் முதலிய தேவதைகள் எல்லாம் தொழத்தக்க நிலையை அடைந்து விடுகிறார். இதுதான் தம்முடைய நிச்சயமான கருத்து என்று மநீஷா பஞ்சகத்தை நிறைவு செய்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

இனிப்பு இருக்கிறது. அதை ஒருவர் வாயிலிட்டுச் சுவைத்தால் அதன் இனிப்பை உணர முடியும். பிரம்மானந்தமாகிய ஆத்ம சுகத்தை அவ்வாறு அனுபவிப்பவரை நாம் பிரம்மத்தை உணர்ந்தவர் என்று கூறலாம். ஆனால் ஒருவர் பிரம்மமேவாக ஆகிவிட்டார் என்று சொன்னால் அவரை எப்படிப் பிரம்ம ஞானி என்று சொல்ல முடியும்? இனிப்பேயாக ஒருவர் ஆகிவிட்டால் இனிப்பைச் சுவைக்கும் அனுபவம் நிகழ முடியுமா? இனிப்பு விஷயத்தில் அது முடியாது. ஏனெனில் ஒரு சில புலன்கள், சூழ்நிலைகள், பொருட்கள் என்ற மாதிரியான உபாதிகளை முன்னிட்டு ஜீவன் உணரும் சுகம்தான் உலக சுகம் எல்லாம். அதுபோல் அறிதல் என்னும் உபாதியை முன்னிட்டு, மனத்தின் அறிவு நிகழ்ச்சி என்னும் உபாதியை முன்னிட்டுப் பிரம்மத்தை அனுபவிப்பது என்பது பிரம்மத்தை அறிந்து அனுபவித்தல் என்னும் பொருள்கொண்ட பிரம்மவித் என்னும் நிலையைத் தருகிறது. ஆனால் அந்த உபாதியும் அகன்று, எந்த உபாதியும் இல்லாத பிரம்மமேயாக ஒருவர் ஆகிவிட்டால், உபாதிகளுக்கு நிலைக்களனாய் இருக்கும் மனம் என்பதே ஆத்மா என்பதில் கரைந்து போய்விட்டால் பின்னர் யார் அறிவதற்கு இருக்கிறார்கள்? அங்குப் பிரம்மம் மட்டுமே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ‘அது ஆனால் அதுவாவர். அதுவே சொல்லும்’ என்கிறார் ஸ்ரீதாயுமானவர். 

‘யத்சௌக்யாம்புதி லேசலேசத இமே சக்ராதயோ நிர்வ்ருதா: 

யத்சித்தே நிதராம் ப்ரசாந்தகலனே லப்த்வா முநிர்நிர்வ்ருத: | 

யஸ்மின்நித்ய சுகாம்புதௌ கலிததீர் ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித் 

ய: கச்சித் ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூநம் மநீஷா மம ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment