நூறு செய்யுள், பத்துச் செய்யுள், ஐந்து செய்யுள் என்ற அளவில் எல்லாம் அத்வைதப் பேருண்மையை எளிமையாக விளக்கி நூல்கள் செய்த ஆதிசங்கரர் ஒரே செய்யுளிலும் அந்த அத்வைத தத்துவத்தைப் புரிய வைக்கும் அற்புத சுலோகம்தான் இந்த ஏகச்லோகீ என்பது. முக்கால் வரியிலேயே கூட அத்வைதத்தை விளக்கிக் காட்டியவர்தான் ஆதிசங்கரர்.
அத்வைத தத்துவம் யாது என்று அறியத் துடிக்கும் மனத்திற்கு அந்த முக்கால் வரியே போதுமானது. அந்த வரி இதுவாகும். ‘ப்ரஹ்ம ஸத்யம், ஜகன்மித்யா, ஜீவோ ப்ரஹ்மைவ, நாபர:’
இதன் பொருள் - பிரம்மம் மட்டுமே சத்யம். இந்த ஜகம் மித்யையே ஆகும். இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமேயாக இருக்கிறது. வேறாக இல்லை.
முக்கால் வரியில் உணர்த்தியதை ஒரு சுலோகத்திலும் உணர்த்துகிறார் பகவத்பாதர். இந்த ஒரு சுலோக நூல் தோன்றிய சூழலைப் பற்றி உரையாசிரியர்கள் சில தகவலைத் தருகின்றனர். கண்ணொளி இல்லாது போன ஒருவர் ஸ்ரீஆதிசங்கரரைக் காண ஏங்கியதாகவும், அவரிடம் பகவத்பாதர் சென்று காண்பதற்கான ஒளி என்பதை வைத்தே படிப்படியாக விளக்கி, ஒற்றை விளக்காகவும், ஒற்றை ஜோதியாகவும் இருப்பது ஆத்மா என்றும், அதுதான் உண்மையில் அவரே என்றும் உணர்த்தி ஞானம் நல்கினார் என்பது சூழலின் கதை.
ஒரே சுலோகம் என்பதால் ஒவ்வொரு சொல்லும் நன்கு நிறுத்தி நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உலகில் பொருளை நமக்குக் காட்டித்தரும் ஒளி எது? ஜோதி எது? என்ற கேள்விதான் தொடக்கம்.
இதை ஸ்ரீஆதிசங்கரர் கண்ணொளி இழந்த அந்த மனிதரை நோக்கிக் கேட்டதாக நினைப்பதைவிட நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கிறார் என்பதும் பொருத்தமாக இருக்கும். நாம் உண்மையைக் காணும் கண்ணொளி இல்லாமல்தானே அவதிப்படுகிறோம்? இனி சுலோகத்துள் போவோம். ஆதிசங்கரர் கேட்பதற்கு நம்முடைய பதில் என்று படிப்படியாகப் போகிறது.
”
பொருள் இருப்பதைத் தெரிவிக்கும் வெளிச்சம் உனக்கு எது?
பகலில் சூரியன் தான். சூரிய ஒளியில்தான் நாம் பொருட்களைப் பார்க்கிறோம்.
ஆனால் இரவில் உனக்குச் சூரிய வெளிச்சம் இருக்காதே! அப்படியென்றால் இரவில் உனக்கு உற்ற வெளிச்சம் எது?
இரவில், ஏற்றிவைக்கப்படும் விளக்கு, மற்ற தீபங்கள் (நம் காலத்தில் இன்னும் அதிகமான விளக்குச் சாதன வகைகள்) இவைதாம் எனக்கு வெளிச்சம்.
அப்படியா? இருக்கலாம். ஆனால் சூரியனும், விளக்குகளும் இருந்தாலும் அந்தச் சூரியனும், விளக்குமே இருப்பது தெரியவேண்டும் என்றால் அதற்கு என்ன வெளிச்சம்?
சூரியனையும், விளக்கையும் காட்டும் வெளிச்சமா? ஹாங்.. அது என் கண்கள்தாம்.
சரி. உன் கண்கள் 24 மணி நேரமும் மூடாமல் அயராமல் திறந்து பார்த்துக்கொண்டேவா இருக்கிறது? தூக்கத்தில் கண்கள் மூடிவிடுகின்றன. மூர்ச்சையில் கண் திறந்திருந்தாலும் பார்ப்பதில்லை. அப்படியென்றால் கண்ணே மூடிய பொழுதும் இருக்கும் வெளிச்சம் எது?
கண்ணே மூடிய பொழுது ... என் புத்திதான் அப்பொழுது வெளிச்சம். அதாவது மனம். கண் தூங்கிய நிலையிலும் என் மன உணர்வு இருக்கிறதே. கனவு காண்கின்றேனே!
சரி. சிலசமயம் ’என் புத்தி சரியில்லை’ என்று கூறுகிறாய். ’மனம் சரியில்லை’ என்று உணர்கிறாய்? அப்படியென்றால் மனத்தையும், புத்தியையும் உணரும் வேறு ஒரு வெளிச்சம் உண்டல்லவா? அது எது?
... அது ’நான்’ தான்.
ஆம். நீர்தான் உமக்கு மேலான ஒரே வெளிச்சம். கடைசியில் மறையாமல் நிற்கும் ஒற்றை விளக்கு நீர்தான். நன்கு யோசித்துப் பாரும். புரியும்.
ப்ரபுவே! அந்த ஏக ஜோதி, ஒற்றை விளக்கு, தனிச்சுடர், அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியான ஒளி, அருட்பெரும் ஜோதி, அதுவாகத்தான் நான் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன் பிரபுவே! திறக்க வேண்டிய கண் திறந்து கொண்டது. என்றும் இருக்கும் ஒற்றை விளக்கு, அதுதான் நான் என்பது புரிந்தது. “
“ கிம்ஜ்யோதிஸ்தவ பானுமான் அஹநி மே ராத்ரௌ ப்ரதீபாதிகம்
ஸ்யாதேவம் ரவிதீபதர்சநவிதௌ கிம் ஜ்யோதிராக்யாஹி மே |
சக்ஷுஸ்தஸ்ய நிமீலநாதிஸாமயே கிம்தீர்தியோதர்சநே
கிம் தத்ராஹமதோ பவாந் பரமகம் ஜ்யோதிஸ்ததஸ்மி ப்ரபோ || “
இந்த ஒற்றைச் சுலோகத்தில் ஸ்ரீஆதிசங்கரர் பிரகதாரண்யக உபநிஷதத்தின் 4ஆவது அத்யாயம், மூன்றாவது பகுதியில் யாக்ஞவல்க்யருக்கும், ஜனகராஜருக்கும் நடந்த ஸம்வாதமான ஜோதி என்பது எது என்னும் உபதேசத்தையே சுருக்கித் தந்துவிட்டார் என்கிறார்கள் உரையாசிரியர்கள். பிரகதாரண்யக உபநிஷதத்தில் வரும் அந்தக் கட்டத்தில் சொல்லப்படும் நிகழ்ச்சி என்னவென்றால் -
ஒரு நாள் ஜனகரின் சபைக்கு யாக்ஞவல்கியர் அரசரைக் காணச் சென்றார். போகும் பொழுதே இன்று மன்னன் என்ன கேட்டாலும் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்று முடிவு கட்டியவண்ணம் சென்றார்.
(கேள்வி கேட்டே எல்லாவற்றையும் போட்டு வாங்கி விடுவார் போல் இருக்கிறது ஜனகர்!).
ஆனால் மன்னர் அதைவிடக் கெட்டிக்காரர். முன்னொரு சமயம் ஏதோ சந்தர்ப்பத்தில் இதே யாக்ஞவல்கியர் ஜனகருக்கு ஒரு வரம் தந்திருக்கிறார். அதாவது எப்பொழுது வேண்டுமானாலும், விரும்பிய எதைப் பற்றியும் வேண்டியவாறு கேட்டுத் தன்னிடமிருந்து விடையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அந்த வரம். பாவம் முனிவர் மறந்து விட்டார். மன்னர் அதை நினைவு வைத்திருந்து இப்பொழுது அந்த வரத்தின்படிப் பதில் சொல்லுமாறு கேட்க வேறு வழியில்லாமல் யாக்ஞவல்கியர் பதில் சொன்னார் என்று வருகிறது அந்தச் சூழல்.
(எப்படியாவது நம்மையெல்லாம் கேள்வி கேட்குமாறு தூண்டுவதற்குச் செய்யப்படும் சூழ்ச்சி! நாமா அசருவோம்?)
மன்னர் கேட்ட கேள்வியே இதுதான். எது நமக்கு வெளிச்சம்? எது மாறாத ஜோதி? என்னும் கேள்வி. அந்தப் பகுதிக்கே பெயர் ஜோதிப் பிராம்மணம் என்பது. அதை இன்னும் சுருக்கித்தான் இங்கே ஒற்றைச் செய்யுள் ஆக்கித் தந்துவிட்டாரே கருணையின் மூர்த்தி!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment