பொதுவாக உலகில் ஒரு பொருள் தான் என்னவாக இருக்கிறதோ உண்மையில், அது தெளிவாகவும், திடமாகவும் இருக்கும். தன்னை வேறு ஒரு பொருளாக யாரேனும் நினைத்து மயங்கினால் அவர் பொருளாகிய தன்னை நன்கு நோக்கினால் போதும், உண்மையில் தான் எந்தப் பொருள் என்பதை விளக்கும் வகையில் அந்தப் பொருள் இருக்கும்.
உலோகத்தால் ஆனது போல் ஒரு சிறிய பெட்டி கீழே கிடக்கிறது. பார்த்தால் உலோகம் போல்தான் படுகிறது. ஆனால் நிச்சயம் இல்லை. வேறு பொருளாக இருக்குமோ என்று சந்தேகம். எடுத்துப் பார்த்தால் அது ஏதோ ப்ளாஸ்டிக் போன்ற மென்மையான பொருளால் ஆனது. உலோகச் சாயம் பூசியதால் அப்படித் தெரிகிறது என்று புரிய வருகிறது. பேருந்து வருவதற்குக் காத்திருக்கிறோம். நாம் எதிர்பார்த்த நம்பர் பேருந்துதான் வருகிறது என்று தோன்றுகிறது. ஆனால் கிட்ட வந்ததும் நன்கு கவனித்தால் அது வேற நம்பர்.
அதாவது உண்மையில் இருப்பது எதுவோ அது நம் ஐயத்தைப் போக்கித் தன்னை நன்கு திடமாகக் காட்டுவதாக அமைந்திருப்பதுதான் உலகில் அனுபவம். ஆனால் மாயை இந்த அனுபவத்திலும் ஒரு விசித்திரத்தை நிகழ்த்துகிறது. நடைமுறையில், வியவகாரத்தில், தோற்றம் மிகத் தெளிவாகவும், திடமாகவும் அனுபவப் படுகிறது. ஆழ்ந்த சிந்தனை ஆராய்ச்சி என்பதன் விளைவாகப் புரியவரும் உண்மை வெறும் தோற்றம் போல் நிழலாடச் செய்கிறது. தோற்றம் திடமாகவும், தத்துவம் நிழலாகவும் தோன்றும் விசித்திரம் இந்த மாயையின் ஜாலம்.
இருக்கின்ற ஒரே உண்மை என்னவோ இந்த ஆத்மா. அறிவு மயமாகவும், ஆனந்த மயமாகவும் ஆனது ஆத்மா. சித் வடிவாகவும், சுக வடிவாகவும் உள்ள இந்த ஆத்மா யாருக்கேனும் நிச்சயமாகத் தெரிகிறதா? ‘அப்படி என்று சொல்வார்கள்’, ‘ஏதோ புத்தகத்தில் படித்தது. யார் கண்டார்?’ - இப்படித்தான் பதில் சொல்வோம். ஆனால் அந்தப் பதிலைச் சொல்வதும் ஆத்மாவாகிய நாம்தான் என்பது விநோதம்.
வெட்ட வெளிச்சமான, பட்டப் பகல் போன்ற உண்மை நிச்சயமற்றது போல் தோன்றுகிறது. ஆராய்ந்து பார்த்தால் தன் இருப்பே இல்லாமல் போகும் வியவகார வஸ்துகள் ஆகப்பெரும் சத்யம் போல் திடமாகத் தோன்றுகின்றன. குணம், வர்ணம், ஜாதி என்று எதுவுமற்ற ஆத்மாவில் நான் பிராம்மணன், நான் வைச்யன், போன்ற வர்ண ஜாதி பேதங்கள் சார்ந்த அஹங்காரம் எப்படித் தோன்றுகிறது? இது என் பிள்ளை, இது என் மனைவி, கணவன், இது என் வீடு போன்ற மமகார மயக்கங்கள் தோன்றுவது எப்படி இந்த ஆத்மாவில்? இப்படி வியவகாரத்தில் தோற்றத்தை மிகத் தெளிவானது போல் காட்டும், ஆகாததை ஆக்கி, கூடாததைக் கூட்டி வைக்கும் வல்லமை உள்ள இந்த மாயையின் விசித்ரம்தான் என்னே!
‘அபகத குணவர்ண ஜாதி பேதே
ஸுகசிதி விப்ரவிடாதி அஹங்க்ருதிம் ச |
ஸ்புடயதி ஸுததாரகேஹ மோஹம்
து அகடிதகடநா படீயஸீ மாயா ||’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment