படித்தவர்களையும் சிலசமயம் பட்டிநிகராக ஆக்கிவிடுகிறது இந்த மாயை. சேராததைச் சேர்த்து, கூடாததைக் கூட்டி இந்த மாயை ஆடும் விளையாட்டு இந்த உலகம். பொருள் இல்லாப் பொருளின் விளைவு இல்லா விளைவு என்கிறார் மகாகவி பாரதியார். ஸ்ரீஆதிசங்கரர் இந்த மாயையின் விளையாட்டை, விசித்திரத்தை வியக்கிறார். காரணம், உண்மையில் இருப்பது சித் மயமாகவும், ஆனந்த மயமாகவும், தன்னைத் தவிர இரண்டாவது இல்லாததும், எல்லை பிரிவு அற்றதுவாய், என்றும் உளதான ஆத்மா ஒன்றே இருக்கிறது. ஆயினும் எங்கிருந்து ஆகாயம், வாயு, நெருப்பு, நீர், மண் என்று ஐம்பூதச் சேர்க்கையும், அதனால் ஆன உடலும், அந்த உடலே தான் என்ற மயக்கமும், அந்த மயக்கத்தால் அடுத்து அடுத்து மாறி மாறி நீளும் பிறப்பு இறப்பு என்னும் பிறவாழித் தொடரும் எல்லாம் இந்த அகண்டமான அறிவு மயமான ஆத்மா என்பதற்குள்தான் நடக்கிறது. பிரபஞ்சமே தோன்றி, தொடர்ந்து, தோய்வதும் இந்த சித் மயமான ஆத்மாவினுள்தான்.
‘சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகு சமைத்தாய்’ என்கிறார் பாரதி. ஆகாததை ஆக்கிவைக்கும் சாமர்த்தியம் உள்ள மாயை என்று வியக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். ‘அகடிதகடனா படீயஸீ மாயா’.
‘அம்மா! காளீ! நீயும் என்னை விழிப்புடன் பார்த்தவண்ணம் இருக்கிறாய். நானும் உன் பிரசன்னத்தில்தான் விழிப்புடன் இருக்கிறேன். பின் எப்படி நடந்தது இந்தக் களவு?’ என்று சண்டை போடுகிறார் வங்காளத்துக் காளிபக்தர் ஸ்ரீராம்பிரசாதர்.
‘ஸுகசித் அகண்ட விபோதம் அத்விதீயம்
வியத் அநிலாதி விநிர்மிதே நியோஜ்ய |
ப்ரமயதி பவஸாகரே நிதாந்தம்
து அகடிதகடனா படீயஸீ மாயா ||’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment