Monday, October 14, 2024

மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 02

’அவர் யோகத்தில் அமர்ந்தார் என்றால் உடலையே மறந்து விடுவார்’. ‘ஆன்ம உணர்வில் அப்படியே இலயமாகிப் பல நாட்கள் அன்னம், நினைவு எதுவும் இன்றி இருந்தார்’. ‘ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சமாதிப் பரவச நிலை இருக்கிறதே!’ - இப்படிப் பலவிதமான விவரணைகள் நிறைந்ததுதான் நம் பண்பாடு. இருந்தாலும் நோய், உடலுக்கு உபாதை என்று வந்ததும் ஆன்ம உணர்வாவது, ஒன்றாவது! யார் கண்டார்கள்? எல்லாம் படிக்க நன்றாக இருக்கிறதே அன்றி, நாம் அனுபவிப்பதோ வெறும் குத்து வலி, குடைச்சல் வலி, பிடிப்பு, மூச்சு வாங்கறது, ஒரே அசதி, உடல் எல்லாம் யாரோ அடித்துத் துவைத்தாற்போல் வலி. டாக்டரிடம் போனால் வலி தெரியாமல் இருக்க ஏதாவது தருகிறார். தீர்ப்பதற்கு வழி சொல்லய்யா என்றால் பொறுத்துக் கொள், பழகிவிடும் என்கிறார். இது நம் நிலை. 

உண்மையில் யோசித்தால், அப்படியெல்லாம் உடலை மறந்து ஆன்மிக நிலை என்றெல்லாம் உண்டா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. அப்படி ஒரு நிலை உண்டு என்று நினைக்கக் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது என்றாலும் ... எல்லாம் யாரோ எதற்கோ எதையோ எழுதிப் பரப்பி விட்டுவிட்டார்கள். டாக்டர் கொடுக்கிறாரே.. வலி தெரியாமல் இருக்க மாத்திரை, மருந்து, அது மாதிரிதான் வாழ்க்கையின் கொடிய யதார்த்தம் மறக்கடிக்க யாரோ எழுதி வைத்திருப்பது. படிக்கும் போது கொஞ்சம் எம்பினா மாதிரி இருக்கு. அவ்வளவுதான். - இதுதானே நம்மில் பலரும் தேற்றிக் கொள்வது.! 

 இல்லையேல், புத்தம் புதிதாக யாரோ ஆன்மிகம், சாதனை என்று கிளம்பியவர் என்றால், நமக்கும் நாலு திட்டு விடுவார். எல்லாம் கிரமமாக, ஒரு குரு மூலம் தெரிந்து கொண்டு அப்யாசம் செய்தால் குரு கடாட்சத்தால் கிடைக்கும். இந்த மாதிரி தாந்தோணியா முயன்றால் இப்படித்தான் என்று நம் மூக்கில் ஒரு குத்து விட்டுப் பெருமிதம் அடைவார். அவரும் சில காலம் சென்று, கேட்டுப் பாருங்கள். அது ... நம்பிக்கை வேணும் சார். நம்பிக்கைதான் வாழ்க்கை. என்று சொல்லியபடியே நழுவுவதைப் பார்க்கலாம். 

ஆனால் 204 CE ல், எகிப்தில் பிறந்த கிரேக்க ஞானியான ப்ளோடினஸ் (Plotinus) என்பவர் சொல்லும் பொழுது பொளேர் என்று தலையில் யாரோ தட்டியது போல் உணர்வு வரத்தான் செய்கிறது. என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்கள், தமது என்னியட்ஸ் என்னும் நூலில். 

“ Many times it has happened: Lifted out of the body into myself; becoming external to all other things and self-encentered; beholding a marvellous beauty; then, more than ever, assured of community with the loftiest order; enacting the noblest life, acquiring identity with the divine; stationing within It by having attained that activity; poised above whatsoever within the Intellectual is less than the Supreme: yet, there comes the moment of descent from intellection to reasoning, and after that sojourn in the divine, I ask myself how it happens that I can now be descending, and how did the soul ever enter into my body, the soul which, even within the body, is the high thing it has shown itself to be.” (Enneads, Fourth Ennead, VIII 1) 

ஒரு தடவை இல்லை. பல தடவைகள் தமக்கு அத்தகைய அனுபூதி நிலை வாய்த்திருக்கிறது என்றும், அந்த நிலையை விட்டு மீண்டும் தேகத்தைப் பற்றிய நினைவுக்கு வருவதற்கே தமக்கு மிகவும் அயர்ச்சியாக இருந்தது என்றும் சொல்கிறார். அவர் கிரேக்க பாஷையில் பேசி, அது யாரோ பதிவு செய்து, பின்னர் அந்தப் பதியப்பட்ட சுருள்களை யாரோ கண்டு பிடித்து, 1800 ஆண்டுகளுக்கும் மேலாக உருண்டு உருண்டு வந்து, ஆங்கிலத்தில் ஏறி இன்று நம் கையில் வந்த பதிவு இது. ஆனால் நமக்கு விழுகின்ற அடி இன்றைக்கு, இப்பொழுது விழுவது போல் உறைக்கிறது. இவருக்கும், எனக்கும் என்ன தொடர்பு? நான் படிப்பேன் என்று அவர் கண்டாரா? அவர் இப்படிச் சொல்லியிருப்பார் என்று நான் தான் எதிர்பார்த்தேனா? ஆனால் என்னைச் சுற்றியுள்ள பலரைக் காட்டிலும் அவர் எனக்கு மிகவும் நெருங்கிய உறவாக ஆகிவிடுவது எதனால்? அவர் மட்டுமா உறவாக ஆகிறார்! 

’ஊனக் குரம்பையின் உள் புக்கு, இருள் நீக்கி,

 ஞானச் சுடர் கொளீஇ,..” 

என்று கூறுகிற பொய்கையார் புதிய நெருக்கத்தில் பக்கத்தில் நிற்க வில்லையா? 

“எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு, என் உள்ளம்! 

தெளிய, தெளிந்தொழியும் செவ்வே!..” 

என்று அவர் சொல்லும் போது பேசுவது பொய்கையாரா அல்லது ப்ளோடினஸா .. குரல் ஒத்திசைந்து ஒலிக்கிறதே! 

”பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி 

மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே! 

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! 

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே!” (திருவாசகம்)

என்று பேசும் குரல் மணிவாசகமா அல்லது ப்ளோடினஸா? ஆனால் குரல் ஒன்றுதானே? எங்கோ, எந்தக் காலத்திலோ பிறந்த நம் ஆன்ம உறவுகள் ஒருவருக்கொருவர் தீப்பந்தம் கொளுத்திக் காட்டும் காட்சியில் காணாதிருக்க நாம் என்ன மடையரா?  

உடலில் எப்படி ஆத்மா உள் புகுந்து நிலவுகிறது என்று ப்ளோடினஸ் கேட்கும் கேள்விக்குக் காலத்தால் தள்ளி நின்றாலும் பக்கத்தில் ஒலிக்கும் குரலாய் ஸ்ரீஆதிசங்கரரின் ப்ரபோத ஸுதாகரம் சொல்கிறது: 

’சுத்தமான சைதன்யம் புத்தியில் பிரதிபலித்து ஜீவன் என்னும் தன்மையை அடைந்து, கண் முதலிய இந்திரியங்களின் வழியாக உலகப் பொருட்களைக் காட்டி நிற்கிறது’ 

சித்ப்ரதி பிம்ப: தத்வத் புத்திஷு யோ ஜீவதாம் ப்ராப்த:| 

நேத்ராதீந்த்ரிய மார்கை: பஹிரர்த்தாந் ஸோSவபாஸதி|| 

காலத்தால், தேசத்தால், பண்பாட்டால், மொழியால், சூழல்களால் வேறுபட்ட, தூரமான இவர்கள் எல்லாம் நமக்கு அந்யோந்யம் ஆக நெருக்கம் ஆனது எப்படி! 

‘அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய், 

ஆனந்த பூர்த்தியாகி, அருளொடு நிறைந்தது எது? 

தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் 

தங்கும் படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த் 

தழைத்தது எது? மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது?’ 

என்று எங்கள் ஊர்க்காரர், மலைக்கோட்டை ஞானதீபம், ஸ்ரீதாயுமானவர் எப்பொழுது ப்ளாடினஸோடு உறவாடினார்! 

அங்கிங்கெனாதபடி எங்கும் நிலவும் சரடில், நம் உறவுகள் உண்மையில் வலுக்கின்றன என்றுதானே அர்த்தம்!

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

 

No comments:

Post a Comment