Thursday, April 30, 2026

அத்வைத பஞ்சரத்னம் 02

ஜீவன் என்பது சுகம், துக்கம், வியவகாரங்கள், காலம், இடம் என்று அனைத்தோடும் சமபந்தப்பட்டு, ஓர் உடலில் இருந்து செயல்கள் புரிவது. ஆத்மா என்பது காலம், இடம், வியவகாரங்கள், சுகம், துக்கம் என்று அனைத்திலும் தொடர்பின்றிச் சாட்சியாய் இருப்பது. அப்படியென்றால் ஜீவன், ஆத்மா என்று இரண்டு இருக்கிறதா? இல்லை. ஒருவர் தம்மை ஜீவன் என்று கருதும் போது அங்கு ஆத்ம ஞானம் மறைபடுகிறது. தாம் ஆத்மா என்ற ஞானம் நிலவும் போது ஜீவன் என்ற உணர்வு இருப்பதில்லை அப்படியென்றால் ஜீவன் என்ற நினைவுதான் ஏன் ஏற்பட வேண்டும்? ஆத்மா என்ற ஞானமே இருந்துவிட்டால் என்ன? இதற்குக் காரணம் அத்யாஸம். ஒரு பொருளின் தன்மையை மற்றொரு பொருளில் ஏற்றி அந்தப் பொருளை அந்தத் தன்மை கொண்ட பொருளாகக் கருதுதல் அத்யாஸம். ஒருவர் ஒரு கயிற்றைப் பாம்பு ஆகக் கருதிவிட்டால் அந்தத் தருணத்தில் அவர் காட்சிக்கு அங்குப் பாம்புதான் தென்படுகிறது. அதைப் பொறுத்துத்தான் அவருடைய செயல்கள், அவருடைய உடலில் ஏற்படும் அட்ரினலின் சுரப்பு, இரத்த அழுத்தம் எல்லாம். அவரே துணிந்து சென்று ஒரு குச்சியால் கிண்டிப் பார்த்தாலோ அல்லது யாராவது அவருக்குச் சொன்னாலோதான் அந்த மாதிரி கயிற்றில் பாம்பின் தன்மையை ஏற்றி உணர்ந்ததான அத்யாஸம் நீங்குகிறது. அந்த ஆத்யாஸம் நீங்குவதற்குத்தான் துணை தேவையாக இருக்கிறது. அந்தத் துணை அவருடைய துணிச்சலான முனைப்பாக இருக்கலாம் அல்லது அவர் நலனில் அக்கறை உள்ள நண்பராக இருக்கலாம் அல்லது பொதுவில் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் யாரேனும் இருக்கலாம். அந்த அத்யாஸம் நீங்கிய பின்னர் இதுதான் கயிறு என்றும், கயிற்றின் தன்மையைக் குறித்தும் யாரும் அவருக்கு விளக்க வேண்டுவதில்லை. அந்த விளக்கத்தை அந்தக் கயிறே, தான் உணரப்பட்ட அந்தக் கணமே தந்துவிடுகிறது. இந்த உதாரணத்தைப் போலவே ஜீவன், ஆத்மா, பிரம்மம், ஜகத் போன்ற விஷயங்களிலும் ஒன்றின் தன்மையைப் பிறிதொன்றில் ஏற்றிக் காணும் அத்யாஸம் நடைபெறுகிறது என்று கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். உலகப் பொருட்களின் தன்மையைத் தன்னில் ஏற்றித் தான் ஜீவன் என்று நினைப்பதும் அத்யாஸம். ஜீவனின் தன்மையை ஆத்மாவில் ஏற்றி ஆத்மாவாகிய தான் ஜீவன் என்று நினைத்து ஸம்ஸாரத்தில் ஆட்படுதலும் அத்யாஸமே. அப்பா நீ இந்த ஜீவன் இல்லை. உண்மையில் ஆத்மாவே என்று யாராவது இவருக்குச் சொல்லி, அந்த மனிதரின் சான்றாண்மையில் இவருக்கும் பூரண விச்வாசம் இருந்து அதை ஏற்றால், அப்பொழுது அந்த அத்யாஸம் நீங்கிச் சத்யத்தில் தாம் ஆத்மா என்ற ஞானம் பிறக்கிறது. ஆத்மா என்னவாக இருக்கிறது என்பது அவருக்கு அனுபூதியில் ஸ்புரித்துவிடும் ஒன்று. சாத்திரங்கள் செய்கின்ற வேலையெல்லாம் இவருடைய அத்யாஸம் நீங்க வேண்டிய உபதேசங்களும், அதனால் இவரது அவித்தையின் நீக்கமும்தான். அத்யாஸம் காரணமாக எழும் அவித்தையை அகற்ற வேண்டித்தான் சாத்திரங்கள். என்றும் இருக்கும் ஆத்மாவின் ஞானம் ஒளிர்வது சொந்த சத்யத்தின் அடிப்படையில். நேரடி அனுபூதிக்கு அப்பாற்பட்டது பரோக்ஷம். அவ்வாறு நேரடி அனுபூதிக்கு அப்பாற்படாதது அபரோக்ஷ அனுபூதி. ஆத்ம ஞானம் அபரோக்ஷ அனுபூதி. அத்யாஸம் காரணமாக எழுந்த அவித்தையின் நீக்கம் சாத்திரத்தின் பலன். 

‘இது கயிறு என்று அறியாத காரணத்தால் கயிற்றில், கயிற்றை மறைத்துத் தோன்றும் பாம்பு. அதுபோல் தன் ஆத்மாவில் அறியாமையின் காரணத்தால் ஜீவன் என்ற தோற்றம். சான்று மிக்கோரின் (ஆப்தர்கள்) வார்த்தையால் பாம்பு என்ற மயக்கம் விலகி, கயிறு என்ற உண்மை தெரிவது போல, குருவின் உபதேசத்தால் நான் ஜீவன் இல்லை; ஆத்மாவாகிய சிவமே நான் என்று உணரப்படும்.’ 

‘ரஜ்ஜ்வக்ஞானாத் பாதி ரஜ்ஜௌ யதாஹி: 

ஸ்வாத்மாஜ்ஞானாத் ஆத்மனோ ஜீவபாவ: | 

ஆப்தோக்த்யாSஹிப்ராந்திநாசே ஸ ரஜ்ஜு: 

ஜீவோ நாஹம் தேசிகோக்த்யா சிவோSஹம் ||’ 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 



No comments:

Post a Comment