Friday, February 7, 2020

திருப்பாவைக்கு ரசனைப் பாடல் முப்பது - இரண்டாம் பகுதி

திருப்பாவை 16 - 'நாயகனாய் நின்றநந்த கோப னுடைய'

இதுவரையில் விழிப்புற்ற ஜீவர்களாகிய பெண்கள் தங்களுக்குள் அனைவரையும் எழுப்பிக் கொண்டார்கள். ஒருவரும் விட்டுப் போகாமல் எழுந்து வந்து விட்டார்கள் என்றதும் இப்பொழுது அனைவரும் பெரும் கோஷ்டியாகச் சேர்ந்து சென்று பரம்பொருள் பரமபுருஷனின் கோயில் வாசலில் நின்று உள்ளே புகுவதற்கான விண்ணப்பம் இடுகிறார்கள். அனைவருக்கும் உள்ளே இருக்கும் ஒன்றை அனைவரும் சேர்ந்து தமக்குப் புறத்தில் வைத்துக் கண்டு பேசி ஆடிப் பாடிக் காதல் செய்து காணும் ஆனந்தத்தை இப்பாட்டு தொடங்கிச் செய்கிறார்கள். உலக இன்பம் என்றால் அதற்குத் தனிமைதான் முதலில் வேண்டியிருக்கும். ஆனால் பகவானை, பரம்பொருளை, பரமபுருஷனை ஜீவர்கள் அனுபவிக்கும் காலம் காலமான ஆனந்தத் தேடுதலுக்கு மொத்த ஜீவ சமுதாயமும் ஒருவர் பாக்கியில்லாமல் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்னும் பேரவா என்பதுதான் தேவையாக இருக்கும். அதைச் சொல்கிறது திருப்பாவை. அதை நிகழ்த்திக் காட்டுகிறது இப்பாட்டு தொடங்கி.

இதற்கான ரசிகப் பாடல் --

நாயகன் நாரணன் நங்கையராம் நல்லுயிர்காள்
வேய்ங்குழல் ஓசை விதித்த திருப்பாவை
மாயனை நாடித்தான் மாதவனார் கோயில்முன்
தூயோர்தம் தொல்லுரைகள் நற்றுணையாய் நாமணுகி
ஏய்ந்தமன மென்னும் இணங்குநல் காவலனால்
தோய்ந்த உளமென்னும் நந்தகோ பன்தன்னால்
ஆயன்தான் ஆதியில் நேர்ந்த உயிர்த்தொண்டே
வாய்ந்துநாம் வாழ விழைந்தேலோ ரெம்பாவாய். 


திருப்பாவை - 17  - அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் -

மிக அருமையான ஆன்மிக அர்த்தங்களைப் பொழிகிறார்கள் பூர்வாசாரியர்கள் தம் உரைகளில். உயிருக்கு உடை, நீர், உணவு என்பது என்ன என்ன என்ற சிந்தனையைக் குறிப்பு காட்டுகிறார்கள். உயிரின் ரூபத்தை எது நிரூபிக்கிறதோ அது அம்பரம் ஆகிய உடை. தாரகமாக உயிருக்கு எது இருக்கிறதோ அது நீர். உயிரைத் தன் உண்மையான இயல்பில் நன்கு செழிக்க வளர்க்கிறது எதுவோ அது சோறு என்று அவர்கள் காட்டும் பொருள் மிஸ்டிஸிஸத்தில் மிக உன்னதமான அர்த்தமாகும். உலக மிஸ்டிக் பள்ளிகள் எல்லாவற்றுக்கும் கேந்திரம் என்னலாகும் சங்கத் தமிழ் மாலை முப்பதும் செப்பிய ஆண்டாளின் அருளோதயம். இத்தனையும் வாய்ந்தால்தான் கடவுள்பேறு. இத்தனையையும் எது தரும்? பரம ஹிதமே வடிவு கொண்ட இதயம் எதுவோ அதுதான் இவற்றைத் தரும். ஹிதம் என்றால் மன்னுயிர்க்கு நன்மையையே வேண்டும் உள்ளம். அந்த உள்ளமே முழு வடிவு எடுத்து வந்தால் எப்படி இருக்கும்! அந்த ஹிதமே வடிவு கொண்டதுதான் நந்தகோபர். சகல உயிர்களுக்கும் நன்மை விழையும் சிந்தையோடு, அனைத்து உயிர்கள் பாலும் பிரியமே வடிவு கொண்டால் அந்த பிரியமயமான வடிவமே யசோதை. இவ்வாறு சகல உயிர்கள் பாலும் ஹிதமயமான இதயமும், சகல உயிர்கள் பாலும் பிரியமே வடிவுகொண்ட சிந்தையும் சேர்ந்துதான் உயிர்களுக்கு பரம்பொருளைப் பெற்றுத் தர முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள். நமது அகவாழ்வில் இந்த நந்தகோபனையும், யசோதையையும் வாழ விடுகிறோமா? அல்லது கம்சனையும், பூதனையையும் திரிய விடுகிறோமா? என்பது அவரவர்க்குத் தானே தெரியும்? உள்ளமாகிய பள்ளிக் கட்டிற் கீழே யசோதை ஆச்சியையும், நந்தன் என்ற அந்த இடையர் குலக் கொழுந்தையும் கொஞ்சம் குடியமர்த்திப் பார்த்தால் அல்லவோ தெரியும் கோகுலம் சதா சர்வ காலமும் நம் உள்ளத்தில் உயிரின் அந்தரங்கத்தில் ஒரே விளையாட்டும் கும்மாளமுமாக இருக்கிறது என்பது! அதற்கு நமது மனம் ஒத்துழைக்க வேண்டாமா? அதனால்தானே வாசலில் காவல் நிற்கும் மனத்தைத் தன்னக்கட்டிக் கொண்டார்கள் முதலில். அந்த மனமாகிய காவலன் ஓம் பறைந்தால் பின்னர் உள்கட்டில் வந்து புகுர என்ன தடை? அந்த மனம் மட்டும் நமக்கு நன்மையை விரும்பும் ஒன்றாக ஆகிவிட்டது என்றால் நாம் கவலையே பட வேண்டாம் நிச்சயம் உள் கட்டில் நந்தகோபனும், யசோதை ஆச்சியும் பரம்பொருளை கண்ணின் பாவை போல் நோக்கிக்கொண்டு நமக்காகக் காத்திருப்பதைப் பார்க்கலாம். இந்த பரம பாவனமான, தூய நல் சேதியை உலகுக்கு உற்சவம், கொண்டாட்டம் என்ற உருவில் மார்கழி முப்பது நாளும் உலகுக்குத் தந்த தமிழுக்கும், தமிழனுக்கும் அல்லவோ நாம் முதலில் கோயில் கட்ட வேண்டும்! வேறு எந்த மொழியில், உலகத்திலேயே இப்படி இந்த மகோன்னதமான உயிர்க்குல நன்மைச் செய்திக்கு உரைகள் மேல் உரைகள் இட்டுப் பெரும் திருவிழாவாக ஆக்கித் தந்திருக்கிறார்கள்.? ஆனால் கேட்பதற்குத்தான் ஆள் யார் இருக்கிறார்கள்? ஆனானப்பட்ட 'திருப்பாவை ஜீயர்' என்னும் பெயருள்ள எம்பெருமானாரே தோற்றுப் போய், 'திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைத்தாலும் கிடைப்பார்கள்; ஆனால் திருப்பாவைக்கு ஆள் கிடைப்பது அரிதிலும் அரிது; ஆண்டாளே சொல்லி ஆண்டாளே கேட்கும் அத்தனை' என்று கைவாங்குவாரேயானால் என்போலியர் எம்மூலை!

இதற்கான ரசிகப் பாடல் -
அம்பரமும் தண்ணீரும் சோறும் நமக்காகும்
உம்பர்கோன் உத்தமன்பால் உள்ளும் உயிருமாய்
எம்பிரான் தாளிணையில் என்றுமே காதலாகிச்
செம்புலத்துப் பெய்நீராய்ச் சேர்ந்தென்றும் ஒன்றிவாழும்
அம்புலத்துக் கான்றவழி ஆண்டாள் தகவுரைத்தாள்;
நம்பிகாள் நங்கைமீர்காள் நாடுமினோ நல்லுரைகள்;
நம்பரும் நன்மையெலாம் நானிலம் காணலாகும்
வம்புலாம் சீர்திகழ வாழ்த்தேலோ ரெம்பாவாய்.


திருப்பாவை 18 - எம்பெருமானார் திருப்பாவை -

'உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்' 


இதற்கான ரசிகப் பாடல் -

உந்து மதகளிறாய் உன்மத்த மாகிமனம்
தந்ததொல்லை தீரத் திருப்பாவை தான்தந்தாள்
அந்தமிலா வாழ்ச்சிக்கே அச்சாரம் தானானாள்
கந்தம் கமழும் குழலால் கிருட்டினனைப்
பந்தித்து வைத்தே பரமாகத் தந்தருளிச்
செந்தமிழ் வேதியர்க்கே செப்பும் மொழியானாள்
வந்தித் தவருரைத்த வானுரைகள் வாசித்தே
சிந்தித்து வாழ்பொருளே செப்பேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 19 - குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

இதற்கான ரசிகப் பாடல் -
குத்து விளக்காகிக் கோதுகலப் பாட்டாகி
வித்துமாய் வீட்டிற்குத் தானாம் திருப்பாவை
நத்தி நமக்காக நாச்சியார் தானருளப்
புத்தியோகு தானருளும் பூரணன் பள்ளிகொள்ளும்
தத்துவமும் தண்தகவும் தெள்ளுரைகள் தாம்விளக்க
எத்துக்கிவ் வின்னாமை இப்பாரைத் தான்நலியும்
தித்திக்கும் பாடல் திகட்டா அருளமுதம்
பத்தியுடன் பாடிப் பொலிந்தேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 20 - 'முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று'

இதற்கான ரசிகப் பாடல் -
முப்பத்துப் பாட்டிற்குள் மாதவனைப் பூட்டியே
எப்போதும் நந்தமக்கே எய்ப்பில்வைப் பாக்கினாள்
செப்பன்ன மென்முலையாய்ச் சீருரைக்குள் ஆட்பட்டே
அப்பாஞ்ச சன்னியனும் ஆரா வமுதானான்
கப்பம் தவிர்த்திங்கு காதலாய்க் கண்ணனுக்கே
எப்போதும் ஏங்கி இயல்வதாம் வாழ்விதனில்
முப்பதும் முந்துரையும் உக்கமும் தட்டொளியாய்
இப்போதும் என்றும் இயம்பேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 21 - 'ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப'

இதற்கான ரசிகப் பாடல் -
ஏற்ற நலங்கள் இயல்வாகித் தாம்சுடர
மாற்றா மதிநலத்தால் பேருரைகள் தாமொளிரப்
போற்றியாம் பாடத் திருப்பாவை தந்தருளி
ஆற்றப் படைத்தவர் அஞ்சுகுடிக் கோர்மகளாய்
ஊற்ற முடைய உத்தமனைத் தான்வரித்தாள்;
நாற்றத் துழாய்முடி நாரணனை நாம்பெறவே
தோற்றே அவள்தமிழில் தொல்புகழ் பாடிப்போய்
ஆற்றா தடிபணிந்தே ஆழ்ந்திடுவோ மெம்பாவாய்.

*


திருப்பாவை 22 - 'அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான'

இதற்கான ரசிகப் பாடல் -
அங்கண்மா கர்வத் தகங்காரம் விட்டகன்று
செங்கமலை தானருளச் செய்யதிருப் பாவைக்கே
எங்கள் இதயமெலாம் ஏக்கமும் கொண்டதுவால்
மங்காப் புகழுடைய மாகுரவோர் தம்முரையால்
சங்கத் தமிழ்மாலைச் செய்யபொருள் போந்ததுவால்
திங்களும் ஒண்சுடரும் தண்கதிர் கண்மலர
எங்கள்மேல் சாபம் இழிந்து திருமாலும்
அங்கண்ணால் நோக்கி அருளேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 23 - 'மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்'

இதற்கான ரசிகப் பாடல் -
மாரி பெயல்நெஞ்சில் மாவுணர்த்தும் காலத்து
வேரி கமழ்சிந்தை வீடளிக்கும் வேராகிச்
சீரிய சிங்கா தனமாம் திருப்பாவைப்
பேரியல்வே பல்குநல் பாங்கான பேருரைகள்
மூரி நிமிர்ந்து முழங்கிடவே யாம்வந்த
காரியம் ஆராய்ந்து கண்ணன் கருணையினால்
சீரிய சிந்தையும் சிந்தாநல் பத்திமையும்
ஆராய்ந் தருளநாம் ஆர்த்திடுவோ மெம்பாவாய்.

*


திருப்பாவை 24 - 'அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி'

இதற்கான ரசிகப் பாடல் -
அன்றிவ் வுளமெலாம் ஆண்டாள் அடிபோற்றி
சென்றங்கு நம்மகந்தை செற்றாள் திறல்போற்றி
பொன்றவே சங்கை புகன்ற உரைபோற்றி
கன்றுதீய சிந்தை கெடுத்தாய் கழல்போற்றி
குன்றாத காதல் கொடுத்தாய் குணம்போற்றி
வென்றே எமையெடுக்கும் நின்தாள் விறல்போற்றி
என்றென்றுன் பாசுரமே ஏத்தி உரைகொள்வான்
இன்றுயாம் வந்தோமால் ஏற்றேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 25 - 'ஒருத்தி மகனாய்ப்  பிறந்தோ ரிரவில்'

இதற்கான ரசிகப் பாடல் -
ஒருத்தி மொழியாய்ப் பிறந்தே உரவோர்
அருத்த வுரையாய்ப் பரந்தே ஒளிர
தரிக்கிலா தாகிநம் தீங்கு கழியக்
கருத்தைக் கவர்வித்துக் கள்ளம் அகற்றி
விருப்பென்ன நின்ற நெடுமாலாய் வேயர்
திருப்பாவை தந்த தமிழால் திருமால்
திருத்தக்க அன்பால் தமியர்யாம் பட்ட
வருத்தமும் தீர்ந்துநாம் வாழ்ந்தேலோ ரெம்பாவாய்.

*



திருப்பாவை 26 - 'மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்'

இதற்கான ரசிகப் பாடல் -
மாலாய் மனவண்ணம் மாதவற்கே ஆகிடுமால்
வாலறிவர் தாம்விரித்த வானுரைக்கே ஏங்கிடுமால்
பாலாழி விட்டிங்குப் பார்வண்ணம் தாங்கிடுமால்
நூலாழி நுட்பம் நுவன்றநம் கோதைக்கே
மாலாகி நெஞ்சழிய மன்னுபெரு வாழ்வுக்காம்
சாலப் பெரும்பறையும் சங்கமுடன் நீள்கொடியும்
ஞாலமெலாம் உள்ளடக்கும் ஞான விதானமும்
ஆலின் இலைகிடந்தே ஆள்வானை ஆண்டாளைக்
கோல விளக்காகக் கொள்வோம்நாம் எம்பாவாய்.

*


திருப்பாவை 27 - 'கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னை'

இதற்கான ரசிகப் பாடல் -
கூடாரைக் கோவிந்தன் வெல்லும் உரையாகி
நாடாரை நாரணர்க்கே ஆட்படுத்தும் ஆண்டாளைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடும் நயக்கும் நல்லுரையும் நாவினிக்கச்
சூடகமும் தோள்வளைக்கும் மாலுக்குத் தோதாகிப்
பாடும் அகச்செவியின் பூவாகிப் பேருரைகள்
ஆடும் பொருளாழம் ஆடையும் பாற்சோறும்
மூடுநெய் தோய முழங்கேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 28 - 'கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்'

இதற்கான ரசிகப் பாடல் -
கறவைகள் புன்சிரிக்கும் கல்விக்கே தேர்ந்தோம் 
துறவிலோம் திண்மையிலோம் தீமைக்கே கற்றோம்
அறமிலாப் பாரிதனில் ஆண்டாளைப் பெற்றோம்
குறையொன்று மில்லாத கோதைமொழி கற்றோம்
உறவேல் நமக்கென்றும் ஓதுமுரை உற்றோம்
அறியாதப் பிள்ளைகளோம் அன்பினால் செய்யும்
சிறுமை மதிமாற்றிச் சிந்தையினை ஆளும்
பொறுமை யுனக்கேயாம் போந்தேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 29 - 'சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்'

இதற்கான ரசிகப் பாடல் -
சிற்றஞ் சிறுகாலே நின்திருப் பாவையினை
முற்றா மதியுடையோம் வந்துநாம் சேவித்துப்
பெற்றதாம் பேருரைகள் நல்கும் பொருளாழ்ந்து
கற்றுன் திருவடிக்கே குற்றேவல் யாம்வாய்ந்தே
இற்றைப் படிப்பால் இயம்பியசொல் அன்றுகாண்
இற்றைக்கும் என்றைக்கும் நின்னருள் பாவையினால்
உற்றோமே யாவோம் உலகெலாம் ஒன்றாவோம்
மற்றைநம் வேகங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை - நிறைவுத் திருப்பாவை - வங்கக் கடல்கடைந்த'

இதற்கான ரசிகப் பாடல் - 

வங்கக் கடல்கிளர்ந்த மாவுரைகள் காட்டுபொருள்
திங்கள் முழுதும் திருப்பாவை தான்விளங்க
எங்கள் இயல்வும் எமைக்காக்கும் தன்னியல்வும்
மங்காப் புகழ்பறையாம் மாதவனார் சேவடியும்
சங்கத் தமிழிசைத்து நங்கள் குலம்வாழ
அங்கத் திருப்பாவை ஆண்டாள் அருளியவா
பொங்கு மலியுவகை பூரிப்பத் தாம்சொல்வார்
எங்கும் திருவருளால் தாம்மகிழ்வ ரெம்பாவாய்.

* * *

திருப்பாவை முப்பதில் தீந்தமிழால் வீடும்
அருள்பாவை போற்றிப் புனைந்தேன் - மருள்தீர
மார்கழியில் ஆண்டாளம் மாதவனை மன்னியசீர்
ஆரமுதப் பாவின் அருள்.
***
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


திருப்பாவையின் பாடல்களின் முதல் சொற்களை வைத்துக் கொண்டே ஒரு கவிதை. அழகியமணவாளப் பெருமாள் நாயனாரைப் படித்ததனால் வந்த விளைவோ?

*
மார்கழி மதியால் வையம் வாழும்
ஓங்கி உலகளக்கும் ஆழி மாயன்
புள்ளும் சிலம்பும் கீசுகீசென்னும்
கீழ்வானம் வெளுக்கும்
தூமணி மாடத்தில் நோற்கும் சுவர்க்கம்
கற்றுக் கறவை கனைத்திளங் கன்றுக்கிரங்கும்
புள்ளின்வாய் உங்கள் புழக்கடையில்
எல்லும் இளங்கிளியும்
நாயகனாய் நின்று
அமபரமும் தண்ணீரும் சோறும்
உந்து மத களிறும்
குத்து விளக்கெரிய
முப்பத்து மூவர் ஏற்ற கலங்களில்
அங்கண் மாஞாலம் மாரிமலை முழைஞ்சில்
அன்றிவ்வுலகம் அளக்கும்
ஒருத்தி மகனாய் மாலும் மணிவண்ணமும்
கூடாரை வெல்லும்
கறவைகள் சிற்றஞ் சிறுகாலை
வங்கக் கடல்கடையும்.

***

திருப்பாவைக்கு ரசனைப் பாடல் முப்பது - முதல் பகுதி

திருப்பாவை முப்பதுக்கும் ரசித்து ஒரு ரசனைத் திருப்பாவையாகப் பாடிப் பார்க்கும் பேராசை இந்த விபரீத முயற்சி. அதாவது அனைத்துப் பாடல்களிலும் ஆண்டாள் பற்றிய குறிப்பு, திருப்பாவையின் சிறப்பு, அதைக் கற்கத் தூண்டும் ரசனைக் குறிப்பு ஆகியன அமைந்து வர வேண்டும் என்று சங்கல்பம்.

மார்கழித் திங்கள் மதியத்தே மால்நினைந்து
ஆர்கழலைச் சிந்தித்து ஆண்டாள் திருப்பாவை
தேரும் பொழுதத்துத் தித்தித்த தீஞ்சுவைகள்
யாரோ டுரைக்கேன்யான் யாமம் கடந்தாலும்
பாரோர் பையத் துயின்று பின்னிருளும்
காரோத வண்ணர்க் கரிய திருமேனிப்
பேரோதும் பெற்றித்தாய்ப் புந்திப் புலரியெழத்
தாராய் நறுங்கோதாய் தண்ணருளே யெம்பாவாய்.


வையத்து வாழாதே வெய்ய துயர்க்கடலில்
பையவே மாழாந்து புல்லும் கவலைக்கே
ஐயகோ தாம்விலையாய் ஆனார் வழியொற்றி
நைவதுவோ நானிலத்தீர்! நாளும் சுடர்க்கொடியே
தைவந்த பூச்சூட்டித் தான்திகழும் அச்சுதனார்
கைவந்த குன்றின்கீழ் கன்றுகளும் தாமகிழ
உய்யும் திருப்பாவை உத்தமனுக் கோதியதும்
வையத்தீர் நாம்வாழ வாழ்த்தீரோ எம்பாவாய்.

*
ஓங்கி யுலகளந்த உத்தமனார் சேவடிக்கே
தாங்கித் தமராக்கித் தான்செலுத்தும் தீந்தமிழாள்
பாங்கியராய் யாமுமிங்கு பங்கெடுத்தால் பற்பநாபன்
ஓங்குபுகழ் பாடி உயிரில் உறவாகித்
தேங்குமகிழ் தெய்வத் திரளுக்கே தான்வாடி
வாங்க உளம்நிறைக்கும் வற்றா விரிவுரைக்கே
பாங்காகிப் பக்குவமாய்ப் போந்த மனமுடையீர்!
நீங்கா அருளே நிறைந்தேலோர் எம்பாவாய் !

*
ஆழி சுழற்றிடும் அச்சுதனை அன்பினால்
வாழ்வில் சுழற்றிய வான்கோதை பேசினாள்
ஆழ்பொருள் அத்தனையும் ஆசிலோர் தாம்வடித்தார்
ஊழிதோ றூழி யுளத்தில் பெயராமே
வாழி யுலகளந்த வண்ணத் திருமாலைப்
பாழில் பிறவி பயிலுமோர் நற்றுணையாய்
வாழ்த்தி மனத்திருத்தி வஞ்சமிலா வாழ்க்கையினில்
ஏழ்மைக்கும் ஈடாய் இயற்றுவோ மெம்பாவாய்.

*
மாயனைப் பாடியே மாதவனை நாம்பாடி
தூயோமாய்ச் சேவித்தால் தண்ணளியும் தாரானோ
சேயன் எனினுமே சேவைக் கரியானோ
ஆயர் குலவிளக்காய் ஆரா வமுதானான்
வேயர் குலவிளக்கால் வாழ்வில் துணையானான்
நேயன் நிமலன் நமக்கென்றும் அண்ணித்தான்
மாயப் பிறவி மயக்கறுத்தே மாமதியால்
ஆய தனக்கே அறக்கொள்வா னெம்பாவாய்.

*
 புள்ளும் சிலம்பிற்றால் போதச் சிறகார்ந்து
கள்ளம் தவிர்ந்திங்கு கண்ணனும் வாரானால்
குள்ளக் குளிரக் குடைந்துதிருப் பாவைக்கே
தெள்ளமுத விள்ளுரைகள் தீங்குரவோர் தாமியற்றிப்
பள்ள மடையாக்கிப் போந்தார்நம் நெஞ்சத்தை
விள்ளற் கரியனாம் வேதப் பெருமானும்
உள்ளம் கலந்தொளிர உற்றபொழு தாயிற்றால்
துள்ளி யெழுந்து தோய்ந்தேலோ ரெம்பாவாய்.

*
கீசுகீ சென்றுநம் உள்ளம் கிளுகிளுப்பப்
பேசுதிருப் பாவைப் பலபதியம் பார்த்தனையோ
வாச நறுங்குழல் கேசவனும் நம்வாழ்வில்
தேசு பொலியவும் தீர்ந்தவன் சேவடிக்கே
ஆசு கடிந்தேநாம் ஆளாக ஆண்டாளும்
பேசும் திருவுளமும் திண்பொருளும் ஓர்ந்தனையோ
நாயகத் தென்மனமே! நாரா யணன்கீர்த்தி
வாசிக்க விண்ணும் விழைந்தேலோ ரெம்பாவாய்.

*
கீழ்வானம் வெள்வரைக்க கோவிந்தன் வாசற்கீழ்
ஆழ்ந்தோம் அருமறைகள் ஆண்டாள் அருள்செய்ய
வாழ்ந்தோம் வரம்பெற்றோம் வையம் திருநாடாய்
ஏழ்மைக்கும் உய்ய இயன்றநல் ஈடாகித்
தாழ்ச்சி தவிர்ந்தோம் நமனுக்கிங் கென்கடவோம்
வாழ்ச்சி விழைந்தோம் விரிநீர் உலகெங்கும்
சூழ்ச்சி தவிர்ந்து சுடரும் மனத்துள்ளீர்
ஏழ்பாரு முய்ய இயம்பேலோ ரெம்பாவாய்.

*
தூமணி மாடத்துக் கற்றுத் தெளிந்திடவே
தாமோ தரனார்க்குத் தக்க நெறியென்றே
நாமுணரச் சொன்ன திருப்பாவை நற்பொருளால்
ஊமையரோ முள்ள முணர்வெழுந்து உன்னதமாய்த்
தீமை யகன்று திறல்விளங்கு மன்பிற்குச்
சேமம் புகன்றிட்ட செய்யமறைப் பாவைக்கு
நாமம் நவின்று நலந்திகழ் கோதைக்கே
நாமென்றும் ஆளாய் நவின்றேலோ ரெம்பாவாய்.

*
நோற்றுச் சுவர்க்கம் புகுந்தாலும் நாமினியும்
ஏற்ற அருந்துணையாய் ஈடன்ன பேருரைகள்
ஆற்றப் படைத்தோம் அழிவுறோம் ஆண்டாளைப்
போற்றிப் புகலடைந்தோம் பூமன்னு மார்பனடி
ஏற்றும் தகவுடையோம் இவ்வுலகம் வாழ்ந்திடவே
ஆற்றும் பணிகற்றோம் அல்லல் அகன்றிடவே
ஊற்றுப் பெருக்காகி உள்ளம் புரந்திடவே
போற்றித் தொழுது புகன்றேலோ ரெம்பாவாய்.

*
கற்றுக் குரவர் குணங்கள் பலபொலிந்து
உற்றார் உவகைக்கே ஓதுதமிழ் வேதத்தில்
பெற்ற பலபொருளும் பேணும் மறைமுடியாய்
உற்ற திருப்பாவை ஓதினாள் நற்பாவை
கற்ற மதியுடையோம் கண்ணன் கழலிணையே
உற்ற கதியுடையோம் ஊக்கத்தில் ஒன்றானோம்
எற்றைக்கும் யாம்கவலோம் எவ்வுலகும் சுற்றமென
உற்ற உணர்வில் உகந்தேலோ ரெம்பாவாய்.

*
கனைத்திளம் கற்றவர் கல்விக் கிரங்கி
நினைத்துளம் வீற்றெழில் நாரணர்க் காக்கும்
பனித்துடல் மெய்விதிர்ப்பப் பத்திமை செய்யும்
குனித்தவக் கோவலன் கொண்டிடச் செய்யும்
தனித்தவம் மாற்றித் திரள்விசும் பாற்றும்
வினைமுகம் பாற்றியே விண்ணெறி காட்டும்
மனத்துக் கினியநம் மாதவன் கோதை
புனைந்த தமிழ்மாலை போற்றுவோ மெம்பாவாய்.

*
புள்ளின்வாய்க் கூற்றினில் பார்வண்ணம் கண்டெழுந்து
கள்ளம் தவிர்ந்துநீ கோதைமொழி கூறாயோ?
உள்ளம் புலர்ந்துநீ உத்தமனை நாடாயோ?
விள்ளற் கரியபொருள் விந்தையாம் பேருரைகள்
மெள்ள உனக்கே முயங்கித் திளைத்திடவோ?
தள்ளத் தகுமோ? தரணிவாழ வேண்டாமோ?
பிள்ளைப் படியுரைத்துப் பாருலகு தானுய்ய
மெள்ளப் புகன்று முழங்கேலோ ரெம்பாவாய்.

*
உங்கள் புழக்கத்தால் உள்ளத்துள் கோவிந்தன்
திங்கள் கதிர்முகம் தண்ணருள் செய்துநின்றே
எங்களை முன்னம் எழுப்பிடச் செய்தானால்
சங்கத் தமிழ்மாலை சூட்டும் சுடர்க்கோதை
துங்கப் பொருளுரைக்கும் தூயோர்தம் தெள்ளுரைகள்
அங்கப் பறைகொள்ளும் ஆர்வத்தால் வாசற்கண்
சங்கை அகற்றியே சேர்ந்தியாம் கற்பதற்கே
நங்களோ டுங்களை நாடிவந்தோ மெம்பாவாய்.

*
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ -

இந்தப் பாட்டிற்கு விசேஷமாகத் 'திருப்பாவைப் பாட்டு' என்று பெயர் சூட்டுகிறார் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அதாவது திருப்பாவையின் அர்த்தங்கள், நோக்கம் எல்லாம் துலங்க வெளிப்படும் பாட்டு இது என்று பொருள். பகவானைப் பற்றிய அனைத்து இயல்பு, சிறப்பு, குணங்கள், பெருமைகள் எல்லாம் சொல்லும் திருப்பாவை 29 ஆம் திருப்பாவையாம். 'சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து'. அடியார்களின் சிறப்பையெல்லாம், பாகவத் விஷயத்தின் சிறப்பையெல்லாம் சொல்லும் திருப்பாவை இந்த 15ஆவது பாடல் என்று சிறப்பான குறிப்பு தருகிறார் ஸ்ரீநாயனார்.

'எல்லே இளங்கிளியே! இன்ன முறங்குதியோ?
சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக
ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.' (15) 

*

இதற்கான ரசிகப் பாடல் - 

எல்லே இளம்நெஞ்சே! இன்னம் தயங்குதியோ
அல்லல் படுவதுமேன் ஆன்றோர் உரையுளவே
வல்லையுன் கற்பனைகள் வாலறிவும் யாமறிதும்
வல்லீர்நும் பேருரையில் யானேதான் ஆழ்ந்திடுக
ஒல்லைநீ இவ்வுலகிற் கோதாமல் உந்தனக்கோ
எல்லாரும் தோய்வாரோ தோய்வார்தாம் தோய்ந்தறிய
வல்லானை ஆழ்வார்கள் வாழ்வான விண்ணாண்டாள்
நல்லானை நம்பியைநாம் பாடேலோ ரெம்பாவாய்

*

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*


Tuesday, February 4, 2020

கருமுகைப் பூ

பக்தியில் யார் பெரியர்? மகளா? தந்தையா? கண்டுபிடிப்பது கஷ்டம். கருமுகைப் பூ சூட்டவேண்டும் வா என்று குழந்தை கிருஷ்ணனைக் கூப்பிடுகிறார் யசோதையான பெரியாழ்வார். அந்த கிருஷ்ணன் யார் எங்கிருக்கிறான் என்று அவர் சொல்லும்பொழுது மொத்த வேதாந்தம் அனைத்தையும் சொல்லிவிடுகிறார். சொல்ல வேண்டும் என்பது அவர் குறிக்கோள் அன்று. அங்கு பக்திதான் பேசுகிறது. ஆனால் விவரம் வேதாந்தமாக ஆகிவிடுகிறது.

அண்டத்து அமரர்கள் சூழ
அத்தாணியுள் அங்கிருந்தாய்

(அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் - நம்மாழ்வார்) அத்தாணி - ஆஸ்தான மண்டபம். இருப்பதுதான் அங்கு. உறைவிடம் எது?

தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்

விண்ணகத்தே ஆஸ்தான மண்டபத்திலேயே நினைத்தால் இருப்பது, நினைத்தால் கிளம்புவது என்று இருக்கும் மன்னாதி மன்னன் தொண்டர்கள் நெஞ்சில் மட்டும் அப்படியே நிரந்தர இடமாகக் கொண்டு உறைவாரா? ஆம். பெரிய பிராட்டியாரின் அருளோடுதானே தொண்டர்கள் அவரை அணுகுவதே. திருமகள் எங்கோ அங்குதானே திருமால் உறைவிடம்.

தூமலராள் மணவாளா

மாயன் என்பது சரிதான். உலகு ஏழினையும் உண்டிட்டு உறங்குவது எங்கு எனில் ஓர் ஆலின் இலையின் மீது.

உண்டிட்டு உலகினையேழும் ஓராலிலையில் துயில்கொண்டாய்

இவ்வளவு எல்லாம் இருக்கின்றவர் சரி. ஆனால் இந்த உலகில் இந்தக் கண்காண வந்தால்தானே நாம் மகிழ்வது... மற்றது எல்லாம் செய்யத் தெரிஞ்ச பிள்ளை நம் கண்காண வருவதற்கு மட்டும் ஏன் இந்தப் பிகு பண்ணுகிறது?

கண்டு நான் உன்னையுகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய் !

பிரபஞ்சத்தையே உருட்டி ஒரு பாட்டில் தகப்பனார் தந்துவிட்டாரா? உலகுமுண்ட பெருவாயன் - அவனையும் அவன் செயல்களையும் ஓர் பாட்டில் அடக்கும் மாமனார். அவருடைய மகள் எப்படி இருப்பாள்? பாவம் அந்தப் பிள்ளை. கொஞ்சம் அடங்கித்தான் போகவேண்டும்.

அண்டத்தமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கிருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய்
தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினையேழும்
ஓராலிலையில் துயில்கொண்டாய்
கண்டுநான் உன்னையுகக்கக்
கருமுகைப் பூச்சூட்ட வாராய்.
(பெரியாழ்வார் திருமொழி 2 9)

*
அதாவது இந்தக் காட்சியை இப்படிப் பார்க்கவேண்டும். ஒரு தாய் தன் குழந்தைக்குப் பூச்சூட்டவேண்டி வெளியில் வந்து நிற்கிறாள். - எங்கே போச்சு இது? ஏண்டியம்மா எங்காத்து குழந்தையைப் பார்த்தியா? உங்காத்துக்கு வந்தானா?

இல்லை மாமி. அங்க கடைவீதியில் நின்று கொண்டிருந்தது நண்பர்களுடன்.

அங்க ஏன் போச்சு?

இல்லை மாமி அங்க இல்லை. அந்த மாடியாத்துல விளையாடிண்டு இருக்கு.

ஏன் மாமி ஊரெல்லாம் தேடுறீங்க. கடைசியில் உள்ளயே எங்காவது ரூம்ல ஒளிஞ்சிண்டு இருக்கப் போறது

என்னமோடிம்மா... இது படுத்தற படுத்தல் தாங்கலை. சித்த இந்தப் பூவை வைச்சுண்டு போய் விளையாடட்டுமே... வேண்டாங்கலை... இதை அதனுடைய தலையில வைத்தால் என் கண்ணே பட்டுடும் அப்படியிருக்கும். அதைப் பார்க்கணும் எனக்கு. இது என்னடான்னா அகப்படவே மாட்டேன்னு போக்கு காட்றது.

இந்த மாமியாக பெரியாழ்வாரும், கண்ணனைத் தேடும் இடங்களாக விண்ணும், நெஞ்சும், திருமகள் மஞ்சமும் ஆகப் பொருத்திப் பார்த்தால்தான் என்ன பா4வம் என்று! அந்த இதய கனத்தை எப்படி வார்த்தையால் சொல்லிவிட முடியும்? பக்தியின் உலகமே அலாதியானது.

ஏதோ மாமி தன் குழந்தையைத் தேடும் அக்கப்பக்கத்து விஷயம் அன்று இது. விஷயம் அப்ராகிருதம். இயற்கையைக் கடந்த பரத்துவம். ஓர் ஆன்ம சாதகன் பக்தியில் முற்றி பகவானைச் சாத்திரங்களில், தத்துவ ஞானத்தில் தேடுகிறான். கொஞ்சம் புரிகிறது. யோகத்தில் முனைகிறான் நெஞ்சில் திகழ்வதை உணர முடிகிறது. பக்தியில் கதறுகிறான் திருமகள் கேள்வனாய் திருமால் தூய உள்ளத்தில் தோன்றி மறைகிறான். ஏன் அந்தக் காட்சி புறத்தில் தான் கட்டலாம்படி, தொடலாம்படிக் காணக் கிடைக்கக் கூடாதா? என்று ஆகாத வேகம் பொங்குகிறது. அந்த வேகத்தில் உள்ளே உயிரே உருவெளிப்பாட்டில் மாறுகிறது. மனித உறவுகளில் ஏதோ ஒன்றைச் சட்டையாய் மாட்டிக்கொண்டு புறப்படுகிறது. அகக்காட்சியைப் புறத்தே வென்றுவிட வேண்டும் என்று. இங்கே அது தாய் குழந்தை என்ற உறவில் தான் தாயாகத் தவிக்கிறது. எல்லாம் கடந்த பரம்பொருள் இந்தப் பக்திக்குக் கட்டுப்பட்டுக் குழந்தையாகி விளையாட்டு காட்டுகிறது.

என்று நமக்குப் புரியும் இதெல்லாம்?. இந்த பக்தி உலகத்தை முழுவதும் தொலைத்துவிட்டோம். அணாபைசா உலகத்தைக் கட்டி அழுகிறோம். நாம் இழந்ததைப் பற்றிய உணர்வு கூட நமக்கு இல்லை என்பது எவ்வளவு சோகமானது, துர்பாக்கியமானது!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பக்தி என்னும் வேதம் தொட்டுவரும் வரவாறு

ஹிந்துமத பாரம்பர்யத்தில் வேத காலமாகட்டும், பக்தி ப்ரபந்த காலமாகட்டும், பக்திக்கான மொழியாடலும், உள்ளக்கிடக்கைகளும், இதயம் பொசிந்து வெளிப்படும் ஊற்றுச் சொற்களும், ஒரே மாதிரியான ஆழத்துடனும், பொருள் ஆர்ப்புடனும் அமைந்திருக்கின்றன. இதை இன்னும் கவனமாகக் கூர்ந்து நோக்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது. என் பார்வையில், முறியாத தொடர் கோட்டில்தான் நமது ஹிந்து ஆன்மிக வரவாறு (சம்ப்ரதாயம்) அமைந்திருப்பதாகக் காண்கிறேன்.

உதாரணத்திற்கு ரிக்வேதத்தில் வாமதேவ கௌதமர் பாடுகின்ற இந்த ரிக் பரமாத்மாவிடம் ஒரே சமயம் எப்படி உயர்ந்த ஒழுங்கு எனப்படும் ருதம் என்பதே அழகின் உருவம் என்றபடியும் இருக்கிறது. பரமாத்மாவானது உயிர்களை ஆன்மிக ஒழுங்கில் நிலைநாட்டுவது என்பது தன்னுடைய அப்ராக்ருதமான ஆகர்ஷணத்தால்தான் என்று வாமதேவரின் அபிப்ராயம். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் உரைப்பதும் அதுவேதான். முதல் நாமம் அது உரைப்பது விச்வம். பிறகு விஷ்ணு. மூன்றாவது நாமமே வஷட்கார: என்பது. அனைத்துமாகி, அனைத்தின் உள்ளுமாகி நிற்கும் பரம்பொருள் அனைத்தையும் நெறியில் நிறுத்துவதே தன் அழகால், அந்த அழகின் வசீகரத்தால் என்பது மிகவும் அபூர்வமான கருத்து அன்றோ!. அந்த அழகு என்பதுதான் அழகு. நாம் எதை அழகு என்று கருதுகிறோமோ அது நம் புத்தியின் பேதலிப்பு. உண்மை எதுவோ அதுவே அழகு என்பதைத்தான் எப்படியோ அந்தர்முகமான கணங்களில் பெரும் கவிஞர்களும் தம்மை மீறி உரைத்துவிடுகிறார்கள். கவிதையின் ஆக உயர்ந்த அதிமானத வடிவமான மந்த்ரம் என்பதைக் கைவந்த பரமரிஷிகளோ மிகவும் ஸ்வச்சமாக அதீந்திரியத்தைத் தர்சிக்கின்றனர். வாமதேவர் பாடுகிறார் -

ருதஸ்ய த்ருல்ஹா தருணாநி ஸந்தி
புரூணி சந்த்ரா வபுஷே வபூம்ஷி |
ருதேந தீர்க்கம் இஷணந்த ப்ருக்ஷ
ருதேந காவ ருதம் ஆ விவேச: ||

ருதம் என்பது நேர்ச்சி, ஒழுங்கு, முறை, சீர்மை, நிதானம், தர்மம், பிறழ்வின்மை ஆகிய பொருட்களைக் கொண்ட பதம். ஆனால் அது அழகின் வடிவம் என்பது ரிஷியின் தர்சனம். அந்த அழகோ மடியும், மறையும், மங்கும் பொருள் சார்ந்ததாய் இன்றி, அப்ராக்ருதம் நிலைத்த எழில். அந்த எழிலின் வடிவங்கள் ஒவ்வொன்றும் காண்போரைக் கரைசேர்க்க வல்லன. அந்த எழிலே நம் ஆன்மாவைப் போஷிக்கவும் வல்லது. அந்த போஷணையோ அந்தம் என்பதை அறியாதது. உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்பது சடஜித் ரிஷியின் வாக்கியம்.

இந்த மந்திரத்திற்கு உரையெழுதும் ஸாயணர் (இவரை யார் யாக்ஞிகர் என்று சொல்லி வைத்தது? என்ன பக்த உள்ளம் கொண்டவர் இவர்!)
கூறுகிறார்:

’ருதேந ருததேவஸ்ய ஸம்பந்தீநி த்ருல்ஹா த்ருடாநி தருணாநி தாரகாநி புரூணி பஹூநி சந்த்ரா சந்த்ராணி ஆஹ்லாதகாநி வபூம்ஷி ரூபாணி ஸந்தி..’

இது இப்படி என்றால். திருமழிசையாழ்வார் தமது திருச்சந்தவிருத்தத்தில் பாடும்பொழுது

’மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய்!
பொலன் கழல் விட்டு விள்விலாத போகம்
விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டெனும் கயிற்றினால்
மனம்தனைக் கட்டி
வீடிலாது வைத்த காதலின்பம்
ஆகுமே?’

இந்த இடத்தில் அவன் ஆகர்ஷணத்தில் ஈடுபட்டு இடைவீடின்றி தைலதாரை போல் கொள்ளும் பக்தியைக் கயிறு என்று உருவகமாகச் சொல்லும் அழகு வேதத்தின் அழகு. ’ருதஸ்ய த்ருல்ஹா தருணாநி ஸந்தி’. எப்படிப்பட்ட கயிறு? அதை பக்தி என்று எங்கே சொல்கிறார்? எட்டும் இரண்டும் ஆன கயிறு. எட்டும் இரண்டும் பத்து. பத்து உடை அடியவர்க்கு எளியவன். இந்தப் பத்து என்னும் என்னும் பக்தியை எண்ணிக்கை பத்தால் சுட்டி, அதையும் எட்டும் இரண்டும் என்று கூட்டிச் சொல்லும் அழகு ரஹஸ்ய த்ரய அழகு. அஷ்டாக்ஷரமும், த்வயமும் சேர்ந்த பக்தி. இவ்வாறு இடைவிடாத பக்தி இன்பமே தாரகம், போஷகம், போக்யம் என்று ஆனபிற்பாடு வீடு என்று சொல்வது அவ்வளவு ஆகுமே? என்று கேட்கிறார் ஆழ்வார். அனைத்தும் கண்ணன் என்றார் நம்மாழ்வார். நம்மாழ்வார் என்றால் அமுது என்றார் மதுரகவி. ஆதியில் ரிக்வேதத்தில் வாமதேவரின் உள்ளம் பொங்கி புறம்பொசிந்ததைத்தான் இடைவிடாமல் பக்த உள்ளங்கள் தம் அனுபவத்தால் கண்டு பாடுகின்றன. இருப்பது ஒரே காலம். பக்தியின் காலம். இதில் கால ஆராய்ச்சிகள் பாத்திகட்டுவதற்கும் உள்தொடர்ந்து வரும் மெய்மைக்கும் பொருந்தி வரவில்லை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

மருவூர் கணேச சாஸ்திரிகள்

20 ஆம் நூற் தொடக்கம். 1903 அல்லது 1904 இருக்கலாம். நெபாளத்து ஜனக்பூர் என்பதைச் சேர்ந்த சகஜாநந்தர் என்னும் வேதாந்தியார் சென்னையில் தமது வாழ்வின் கடைசி ஆறு ஆண்டுகளைக் கழித்தார். அதுகால் சென்னைக்கு வந்த மருவூர் கணேச சாஸ்திரி என்பவர் அவரிடம் ஆழ்ந்து வேதாந்தம் பயின்றார். அப்பொழுதுதான் விவேகாநந்தர் மறைந்து பிற்றைய காலம்.

சென்னை, தமிழ்நாடு பிராந்தியங்களில் அதற்கு முந்தியே பல நூற்றாண்டுகளாக வேதாந்தப் பயிற்சி தமிழிலேயே சிறந்து விளங்கியதுண்டு. தத்துவராயர், ஸ்வரூபாநந்தர், சேஷாத்ரி சிவனார், கோவிலூர் மடத்துத் துறவியர், ஞானவாசிட்டத்தைப் பதிப்பித்த சுப்பையா அவர்கள் இன்னும் பல பெரிய மகான்கள் எல்லாம் தமிழில் வேதாந்தம் என்பதை நன்கு வளர்த்த புண்ணியர்கள். அந்த வழிவழி வேதாந்த ஊக்கத்தை 1910ல் தொடர்ந்த மகனீயர்களில் மருவூர் கணேச சாஸ்திரியாரும் ஒருவர்.

1910ல் அவருடைய மனஸ் தத்துவம் என்னும் நூல் வந்தது. ஹிந்துமத நூல்களில் தத்துவ நுட்பங்களை விளக்கியும், குறிப்பாக மனம் என்பதன் தத்துவச் செறிவுகளை விதந்து எடுத்துக் காட்டியும் எழுதிய நல்ல நூல். அதை நன்கு வரவேற்றனர் அன்றைய அறிஞர் பெருமக்களாகிய குப்புசாமி சாஸ்திரியார், டாக்டர் உ வே சாமிநாதய்யர், மயிலாப்பூர் சம்ஸ்க்ருத கல்லூரி பிரின்ஸிபல் சந்திரசேகர சாஸ்த்ரியார் போன்றோர்.

1913ல் வேதசாஸ்திர தத்துவம் என்னும் ஹிந்துமத ஸார நிரூபணம் என்ற இன்னும் ஒரு நூல் வெளிவந்தது. அதுவும் ஹிந்துமதக் கருத்துகளை நன்கு தமிழில் எழுதிக் காட்டிய முயற்சியாகப் பலராலும் பாராட்டப் பெற்றது. கும்பகோணம் பேராசிரியர் சுந்தரராமன் நீண்ட ஆங்கில முன்னுரையே அளித்திருந்தார்.

ஹிந்துமதம் சிறப்புகள் அனைத்தும் கொண்டு பொலிய வேண்டும் என்று ஆசைப்படும் நம் போல்வார் இத்தகைய முன்னோர்களை நினைத்து நன்றியுணர்ச்சி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*

அயின் ரேண்ட் பற்றிய கருத்துகள்

என் ஆசிரியர்களில் முதன்மை அணியில் திகழ்பவர்களில் Aristotle ம், Ayn Rand ம் அடக்கம். ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த நுட்பங்களையே எனக்குப் புரிய வைத்தவர் அரிஸ்டாடில். அரிஸ்டாடிலை எனக்குப் புரிய வைத்தது அயின் ரேண்ட். ஆனாலும் எப்பொழுதும் போலவே நான் மிகவும் மதிக்கும் இடங்களில் சிறிதும் தயக்கமின்றிச் சுதந்திரமாக என் ஐயங்களையும் விமரிசனங்களையும் வெளியிடுவது என் வழக்கம். கேள்வி கேட்காத வழிபாட்டுணர்வு என் இயல்புக்கு விரோதமானது. கருத்தியல் ரீதியான முன்னேற்றமும் எனக்கு நிதரிசனமாக இதனால் மட்டுமே கிடைக்கிறது. பெரும் மேதைகளின் அறிவுச் செறிவையும் இந்த வழியினால்தான் என்னால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த ஓர் ஆசிரியரைப் பற்றியேனும் எடுத்தவுடன் தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ எதிர்மறையான கருத்துகளால் மட்டுமே அணுகுவார் என்றால் அந்த நிரலில் அயின் ரேண்டும் வருவார் எனலாம். காரணம் அவர் எடுக்கும் நிலைப்பாடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமுதாயங்கள் எடுத்து வந்திருக்கும் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறான, மாறான, தெள்ளத் தெளிவான, சிறிதும் விட்டுக் கொடுக்காத நிலைப்பாடு. அது மட்டுமன்று. மிகவும் அறிவு ரீதியாக விவாதிக்கப்பட்டு முன் வைக்கப்படும் நிலைப்பாடும் கூட. நீங்கள் அவர் கருத்துகளை ஏற்றுக்கொண்டு, அதே சமயத்தில் வழக்கப்படியான கருத்துகளின் கலந்துகட்டிகளில் எதையாவதும் ஒரு கையால் ஏற்றுக் கொள்வது என்பது முடியாது. இதுவா அதுவா - Either Or - என்னும் கறார்த்தன்மை பூரணமாக நிறைந்தது அவருடைய அணுகுமுறை. 

அவர் பெண். ஆனால் பெண்ணியம் என்று வழமையான நிலைப்பாடுகளுக்கு எதிரானவர். ஆண்களின் ஆதிக்கம் என்பதை அர்த்தமற்றது என்று காண்பிப்பதில் தன்னிகரில்லாதவர். 'சுயநலம்' என்பதைத் தத்துவ ரீதியாக நிலைநாட்டியவர். ஆனால் சுய இச்சைகளின் கண்மூடித்தனத்தைக் கண்ட துண்டமாகக் கண்டித்து எறிந்தவர். Individuality என்பதைக் கோயில் கட்டி வைத்தவர். ஆனால் ஆங்காரத்தால் ஆடும் தன் மமதைக்குச் சிறிதும் இடமில்லை என்று காண்பித்தவர். கடவுள், மதம் என்பதை அதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்துடன் அடிவேர் மிச்சமின்றிக் கேள்விக்கு உள்ளாக்குபவர். ஆனால் அவருடைய தத்துவத் தெளிவில் ஆன்மிகத்தின் தனித்துவமான பொருள் ஒன்று துலங்கக் காணலாம். பிறர் நன்மைக்காகத் தன்னை அழித்துக் கொள்வது என்ற altruism என்பது எவ்வளவு பேதைமையும், புன்மையும் நிறைந்தது என்பதை விண்டு விளக்கியவர். 

காப்பிடலிஸம் என்பதைப் பெரும் தத்துவ சாஸ்திரமாக வளர்த்தெடுத்தவர். கம்யூனிஸம் என்பதைத் தத்துவ ரீதியாக எதிர்க்கும் லுட்விக் வான் மைஸஸ், ஹெயெக் போன்ற ஆஸ்த்ரியப் பொருளாதாரப் பள்ளிகளின் கருத்தியலுக்கு வலுசேர்ப்பவை அவருடைய எழுத்துகள். இப்படி இருக்கும் ஒருவரை எப்படி யார்தான் முழுமையாக ஏற்று ஒப்பிவிட முடியும்? இத்தனையையும் அவர் சாதித்தது ஒரே ஓர் அடிப்படைக் கருத்தை மட்டுமே முற்றிலும் அதன் தத்துவார்த்தக் கடைக்கோடிவரைப் பிசகாமல் கைக்கொண்டதனால் மட்டுமே எனலாம். அந்த அடிப்படைக் கருத்து - 'பகுத்தறிவு'. ஆனால் அவரை முதலில் எதிர்ப்பது பகுத்தறிவுவாதிகளே. காரணம் அவர் பகுத்தறிவு வாதத்தின் முழு வீச்சுவரை போகின்றார். பகுத்தறிவுவாதிகளுக்கோ பகுத்தறிவு என்பது தாம் கைக்கொண்ட ஒரு சித்தாந்தம் அல்லது மதம் என்பது மாதிரிதான். அதுவும் பிற சித்தாந்தங்களுக்கு எதிர் நிலையாக. அப்படிப் பார்த்தால் பகுத்தறிவு என்பதையே முற்ற முழுக்க ஒரு தரிசனம் என்ற வகையில் பூரணமாக வளர்த்தெடுத்தவர் அயின் ரேண்ட். ஆனால் அவர் பேரைச் சொன்னதும் அன்றிலிருந்து இன்றுவரை எங்குமே ஆக்ரோஷமான எதிர்ப்புகளும், பழிப்புகளும், சாடல்களும் விமரிசனங்கள் என்னும் பூச்சில் குவிக்கப்படும். 

கருத்துகளைப் பற்றி மிக ஆழமாகவும், உண்மையாகவும் அக்கறை கொண்டு தம் கருதுகோள்களைத் திறமையான முறையில் நாவல், கட்டுரைகள் என்ற இரு வடிவிலும் வடித்த சிறந்த தத்துவ அறிஞர் அயின் ரேண்ட். ஆனால் முறை சார்ந்த தத்துவ இயல் படிப்பு வளாகங்கள் அவரையும், அவர் தத்துவத்தையும் மிகவும் அலட்சியம் செய்ய முயன்று தோற்று, இப்பொழுது சிறுகச் சிறுகக் கவனம் கொள்ளத் தொடங்கியுள்ளனர். புன்மைக்காலம் என்பது திறமையற்றவர்கள் தாங்கள் திறமையற்றவர்கள் என்பதையே தங்களுடைய உரிமைக்கான சான்றாகக் காட்டிக் கையோங்குவதும், திறமையுள்ளவர்கள் தாங்கள் திறமையுள்ளவர்கள் என்ற உண்மையாலேயே திறமையற்றவர்களின் உரிமைகளை ஒப்பி மெய்ம்மையாக்க இடப்படும் பலிகளாய் ஆவதுமான சூழ்ச்சிக்காலம் என்பதை நன்கு புரிய வைத்தவரே அயின் ரேண்ட்தான். 

அயின் ரேண்ட் அவர்களின் தத்துவம் என்ன? அவர் அந்தத் தத்துவத்திற்கு அளித்த பெயர் Objectivist Philosophy. அப்ஜெக்டிவிஸ்ட் எபிஸ்டமாலஜி அதாவது அறியும் நெறி என்பது என்ன? அவர் கூறிய Rational Self-interest என்பது யாது? அவர் ஏன் Reason என்பதை மறுக்க இயலாத ஒரே அறிவு நெறியாகக் கருதினார்? The Objectivist Newsletter, August, 1962 இதழில் அவர் தம்முடைய தத்துவம் குறித்த சுருக்கமான அறிமுகமாகப் பத்தியளவில் எழுதியது ரத்தினச் சுருக்கமாக அவருடைய சித்தாந்தத்தின் அடிப்படைகளைத் தெரிவிக்கிறது. 

My philosophy, Objectivism, holds that: 

Reality exists as an objective absolute – facts are facts, independent of man’s feelings, wishes, hopes or fears. 

Reason (the faculty which identifies and integrates the material provided by man’s senses) is man’s only means of perceiving reality, his only source of knowledge, his only guide to action, and his basic means of survival. 

Man – every man – is an end in himself, not the means to the ends of others. He must exist for his own sake, neither sacrificing himself to others nor sacrificing others to himself. The pursuit of his own rational self-interest and of his own happiness is the highest moral purpose of his life. 

The ideal political-economic system is laissez-fare capitalism. It is a system where men deal with one another, not as victims and executioners, nor as masters and slaves, but as traders, by free, voluntary exchange to mutual benefit. It is a system where no man may obtain any values from others by resorting to physical force, and no man may initiate the use of physical force against others. 

அவருடைய சித்தாந்தம் ‘புறப்பொருள் மெய்யியல்’ என்று கூறலாம். புறத்தில் பொருள்படு தன்மையாக அன்றி ஒருவருக்கு மட்டும் அவர் தமக்கு மட்டும் தெரியவருவதான, அறிவிற்கு அப்பாற்பட்ட, யாருக்கும் காட்டலாகா மெய்ம்மை என்பதை அயின்ரேண்ட் அவர்களுடைய அப்ஜெக்டிவிஸ சித்தாந்தம் ஒப்பவில்லை. ஒருவர், இருக்கின்ற ஒரே மெய்ம்மைக்குச் சற்றும் தொடர்பின்றி, தம் கருத்துகளை அறிவை நோக்கி முன் வைக்காமல் வெற்று உணர்ச்சிகளுக்கும், அறிவுக்குச் சம்பந்தமற்ற கேவலம் நம்பிக்கைக்கும் நோக்கி வைப்பாரானால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியன்று. 

நிஜம் அல்லது உலக மெய்ம்மை என்பது மனிதருடைய உணர்ச்சிகளை நம்பி இல்லை. எதிர்பார்ப்புகளை நம்பி மாறுவதில்லை. விருப்பங்கள், பயங்கள் இவற்றைப் பொறுத்து இம்மியும் அசைவதில்லை. நிஜம் என்பது, இருக்கின்ற ஒரே மெய்ம்மை என்பது, புறப்படுத்திப் புரிந்து கொள்ளத்தக்க, மீற இயலாத முற்ற முழு ஒரே நிஜமாக இயன்று நிற்பது. அந்த நிஜத்தை, முழுச் சான்றுடன் நிற்கும் அந்த மெய்மையை அறிய ஒரே வழி அறிவுதான். மனிதரின் பகுத்தறிவுதான் மெய்ம்மையை நமக்கு மிகச்சரியாக அறிவிக்கும். பகுத்தறிவுதான் செயலுக்கான ஒரே வழிகாட்டி; வாழ்க்கையின் அடிப்படையான பிழைக்கும் உபாயம். 

மனிதர், ஒவ்வொரு மனிதரும், அவரவர் தம் தமக்கே தம்முடைய செயல்களுக்கான முழுச் சான்றுடைய ஒரே பயனாளியாக இருத்தற்குரியவர். தம்முடைய செயல்களுக்கான இலட்சியம் ஒருவருக்குத் தாமேயாகத்தான் இருக்க வேண்டும். வேறு யாரும் இல்லை. வேறு யாருடைய பயனுக்கோ உதவும் ஒரு வழிக்கருவி இல்லை மனிதன் என்பவன். அவன் யாருடைய நோக்கங்களுக்குமான உபயோகப் படுத்திக் கொள்ளத்தக்க சௌகரியமான மார்க்கம் அன்று. அவன் கைக்கொள்ளும் செயல்களுக்கு அவனேதான் இலக்கு ஆகவும், நோக்கம் ஆகவும், பயன் ஆகவும் இருக்க வேண்டும். தனக்காகத்தான் மனிதன் வாழ வேண்டுமே அன்றிப் பிறருக்காகக் காவு கொடுக்கப்படும் பலியாக அன்று. 

மனிதருடைய வாழ்க்கையின் மிக உயர்ந்த அறமே பகுத்தறிவு ரீதியான தம்முடைய சொந்த சுயநலத்திற்கு, தம்முடைய சொந்த சந்தோஷத்திற்கு என்று நோக்கம் கொண்டு அதைத் தம்முடைய அறிவு பூர்வமாக இயற்றிச் சாதித்தலே ஆகும். கவனம்! அவர் சொல்வது ஒவ்வொருவர் தம்முடைய பகுத்தறிவு ரீதியான சொந்த சுயநலத்திற்கே அன்றி, மற்றபடியான ஒவ்வொருவரின் சொந்த உணர்ச்சிகளுக்காகவோ அல்லது சுய விருப்பத்திற்காகவோ அல்ல. இந்த மாதிரியான பகுத்தறிவு ரீதியான சுயநலத்தையும், சுய சந்தோஷத்தையும் ஈட்டல் என்ற அறத்தின் வழிப்படு வாழ்க்கையை ஒருவர் முழுமையாகச் சாத்தியப்படுத்திக் கொள்ளத் தகுந்த ’அரசியல் – பொருளாதார அமைப்பு’ என்பது கட்டற்ற சுதந்திரம் இலகும் காப்பிடலிஸம் என்பதேயாகும். 

தனக்கென வாழாப் பிறக்குரியாளர் – இந்தச் சொற்றொடர் தெரிவிக்கும் கருத்து அல்ட்ரூயிஸம், சுயநலத்தைப் பிறர்க்காகப் பலிகொடுத்தல். ஆஹா என்ன உயர்ந்த லட்சியம் என்று ஒரு விதத்தில் தோன்றுகிறதா? ஆனால் இதுவே பகுத்தறிவு சார்ந்து அயின் ரேண்டின் விளக்கத்தின்படிப் பார்த்தால் ஒரு விதத்தில் ஒருவர் தாமே தமக்கு அநியாயமாகத் துரோகம் இழைத்துக்கொண்டு பலியாய் ஆக்கிக்கொள்ள வைக்கும் மோசமான கருத்து என்று புரியவரும். அயின் ரேண்ட் அதை விளக்குவதைப் பார்க்கலாம். 

What is the moral code of altruism? The basic principle of altruism is that man has no right to exist for his own sake, that service to others is the only justification of his existence, and that self-sacrifice is his highest moral duty, virtue and value. 

Do not confuse altruism with kindness, good will or respect for the rights of others. These are not primaries, but consequences, which, in fact, altruism makes impossible. The irreducible primary of altruism, the basic absolute, is self-sacrifice – which means: self-immolation, self-abnegation, self-denial, self-destruction – which means: the self as a standard of evil, the selfless as a standard of the good. (Philosophy Who Needs It, Faith and Force) 

பிறருக்கு உதவுவது, மற்றவர்களின் கஷ்டங்களில் தலையிட்டு அதைக் குறைக்க வழி தேடுவது என்பதெல்லாம் தவறா என்றால் அதுவன்று இங்கே அயின் ரேண்ட் கண்டிக்க வருவது. ஏனெனில் அவையெல்லாமும் தன்னுடைய உள்ளத்தின் நிம்மதி, சந்தோஷம் என்பதை முன்னிறுத்தி எழுவன. ஆனால் இங்கு அல்ட்ரூயிஸம் என்பது பிறருக்காகத் தான் அழிதல் என்னும் கொள்கை. ஒருவருடைய வாழ்க்கைக்கே நியாயம், தார்மிக அனுமதி என்பதே பிறருடைய சந்தோஷமும், நல்வாழ்க்கையும்தான் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தும் அல்ட்ரூயிஸம் என்பதைத்தான் மிகவும் தீயது என்று விமரிசனம் வைக்கிறார் அயின்ரேண்ட். இவ்வாறு, அல்ட்ரூயிசம் என்னும் கோட்பாட்டை மிகத்துல்லியமாக விமரிசனத்திற்கு இலக்காக்கியவர் அயின்ரேண்ட் மட்டுமே இதுவரையிலான மானிட தத்துவ வரலாற்றில் எனலாம். 

Capitalism என்றால் என்ன? யாரேனும் காபிடலிஸத் தத்துவம் என்பது என்ன என்று தத்துவார்த்தமாகச் சொல்லியிருக்கின்றனரா? என்று பார்த்தால் ஏமாற்றம்தான். காப்பிடலிஸத்தைத் திட்டுபவர்களின் வார்த்தையின் மூலம்தான் காப்பிடலிஸம் என்றால் என்ன என்ற அபிப்ராயம் பரப்பப் படுகிறது. ஆனால் நியாய பூர்வமாக நன்கு நிரூபிக்கப்பட்ட அறிவுநெறித் தத்துவத்தின் அடிப்படையில் காப்பிடலிஸம் என்றால் என்ன என்று அயின் ரேண்ட் ஓர் உரை ஆற்றியுள்ளார். அஃது அயின் ரேண்டின் ’காபிடலிஸம் த அன்நோன் ஐடியல்’ என்ற நூலின் முதல் அத்தியாயமாகத் திகழ்கிறது. 

Capitalism is a social system based on the recognition of individual rights, including property rights, in which all property is privately owned. 

The moral justification of capitalism does not lie in the altruist claim that it represents the best way to achieve “the common good”. It is true that capitalism does – if that catch-phrase has any meaning – but this is merely a secondary consequence. The moral justification of capitalism lies in the fact that it is the only system consonant with man’s rational nature, that it protects man’s survival qua man, and that its ruling principle is: justice. (What is Capitalism? Capitalism the Unknown Ideal) 

மனிதனுடைய இயல்பு பகுத்தறியும் ஜீவன் என்பதற்கேற்ப, மனிதன் தன் வாழ்க்கையின் முழுமையை அடைய முடிவது என்பது காப்பிடலிஸம் அதுவும் அரசாங்கத்தின் தலையீடு சிறிதும் அற்ற இலட்சிய காப்பிடலிஸ அமைப்பில்தான் என்பது அவருடைய சித்தாந்தத்தின் அரசியல் பொருளாதாரக் கோட்பாடு. 

ஃபிப்ரவரி 19. 1926 கம்யூனிஸ ரஷ்யாவை விட்டு அமெரிக்கா வந்த ஆலிஸ் ரோஸென்பாம், அதாவது அயின் ரேண்ட் ந்யூயார்க்கில் இறங்கியதும் விண்முட்டும் கட்டிட வரிசையைக் கண்டு ஆனந்தத்தில் அழுதே விட்டார். ரஷ்யாவில் கம்யூனிஸ ஆட்சி அவரது தந்தையாரின் தொழிலை அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டது. தனி மனிதர், அறிவின் இயக்கம், ஒவ்வொருவரும் தம் சொந்த சந்தோஷத்தை அடைவதற்கான உரிமை என்ற இவையனைத்தும் கம்யூனிஸ சித்தாந்தத்தின் எதிர்ப்பான விஷயங்கள் என்பதைத் தம் வாழ்வில் கண்கூடாகக் கண்டதையும், தம் வாழ்வில் தாக்குண்டதையும் வைத்து அவர் எழுதிய நாவல் We the Living. 

அயின் ரேண்ட் தமது அப்ஜெக்டிவிஸ்ட் சித்தாந்தப்படியான இலட்சிய மனிதனைச் சித்திரித்து எழுதிய நாவல் Fountainhead. அதை எழுதிக் கொண்டிருக்கும் போதே ஒரு குறுநாவலையும் எழுதினார். எங்கோ எதிர்காலத்தில், மக்கள் சமுதாயம் தன்னுடைய அறிவுக்கான எதிர்ப்பிலும், தனி மனிதனை நோக்கிய எதிர்ப்பிலும், ஒவ்வொரு மனிதனுள்ளும் அல்ட்ரூயிஸத்திற்கே எதிர்க்குரலாக ஒலிக்கும் ‘நான்’ என்ற அகங்காரத்தைக் கண்டடைவது எத்தனை பெரிய சாதனையாக ஆகிவிட்டது என்பதை இரண்டு பாத்திர படைப்புகள் கொண்டு விளக்குகிறார் Anthem என்னும் அந்தக் குறுநாவலில். 

தத்துவ இயல் என்பது இருக்கின்ற ஒரே நிஜத்தைப் பற்றிப் பேசுவது; அதுவும் எந்தக் கலப்படமும் இல்லாத மனித அறிவுடைமையை மட்டும் வைத்துப் பேசுவதும், புரிந்து கொள்வதும் ஆகும் என்ற ஆணித்தரமான பார்வையைத் தமது நாவல்கள், மற்றும் கட்டுரைகளால் முன்னிறுத்தியவர் ருஷ்யாவில் பிறந்து அமெரிக்காவைத் தம் தாய்நாடாய் வரித்துக்கொண்ட ஆசிரியப் பெருந்தகையான அயின் ரேண்ட் அவர்கள். என்றோ கிரேக்க உலகத்தில் அரிஸ்டாடில் என்னும் அந்தப் பேரறிஞர் காட்டிய தெளிவுகளையே அவர் தமது பெரும் நாவலாக ஆக்கினார் என்றால் மிகையில்லை என்னும் அளவிற்கு அமைந்தது அவர்தம் ‘அட்லஸ் உதறிவிட்டான்’ என்று பொருள்படும் அட்லஸ் ஷ்ரக்டு என்னும் நாவல். என்றுமே இந்த அளவிற்குத் தத்துவக் கருத்துகள் புதின வடிவம் கொண்டதில்லை; புதினங்களும் தத்துவ உட்செறிவு கொண்டதாய் இருந்ததில்லை என்னும் படி அமைந்தது நவீன மனிதரின் மாபெரும் இதிகாசமான அவரது நூல். 

இந்தப் புதினத்தை மூன்று பாகங்களாய் அமெரிக்கக் கம்பெனியார்கள் சினிமா ஆக்கியிருந்தாலும், அவை நாவலின் அண்மையில் வருகிறதா என்று ஐயுற வேண்டியிருந்தாலும், ஆசிரியரின் மையச் செய்தியை இன்றைய தலைமுறைகளுக்கு அந்த முயற்சிகளும் கொண்டுதான் செல்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அவர் காலத்திலேயே சினிமா ஆக்கப்பட்ட அவரது முதல் நவீன மனித காவியமான ஃபௌண்டன்ஹெட் என்னும் ஊற்றுமுகம் என்பது ஓரளவிற்கு நாவலுடன் உறவாடும் பீடு கொண்டதாய் இருக்கிறது என்பது எத்தனை தூரம் அவர் அதில் தலையிட்டிருப்பார் என்பதைக் காட்டுகிறது. ஆனாலும் அதிலும் எனக்கு நாவலத்தனை அளவு சினிமா வடிவத்தில் திருப்தி இல்லை. ஆனால் அந்தச் சினிமா தொடங்கி Gary Cooper இன் ரசிகனாக ஆகிவிட்டேன். ஹோவர்டு ரோர்க் என்ற பாத்திரத்திற்காகச் செதுக்கப்பட்டவர் போன்று அவருடைய தோற்றமும் பேச்சும். நவீன வாழ்க்கையின் உன்னத கணங்களைத் தந்திருப்பவர் என் வணக்கத்திற்குரிய ஆசிரியப் பெருந்தகைகளில் ஒருவரான அயின் ரேண்ட். ஆயினும் அவரிடமும் எனக்கு விமரிசனங்கள் உண்டு. அதைப்பற்றிக் கடைசியில் கூறுகிறேன். 

உலகின் மிகப்பெரிய இதிகாசங்களில் நம் காலத்தில் இயற்றப்பட்ட காவியம் என்றால் அஃது Atlas Shrugged By Ayn Rand. சுதந்திரமான பகுத்தறிவு மனிதனை ஃபௌண்டன்ஹெட் சித்தரித்தது என்றால், அத்தகைய சுதந்திர மனிதர்களின் சாதனைகளில்தான் இந்த உலகம் இயங்குகிறது. அவர்கள்தாம் இந்த உலகைத் தாங்கும் அட்லஸ். அத்தகைய அட்லஸ் போன்றவர்கள், தாம் சமுதாயத்தின் அஸ்திவாரம் என்றும், மனித இயல்புக்கும், அறிவுக்கும், தனிமனித சுதந்திரத்திற்கும், சுயவாழ்வின் உரிமைக்கும் விரோதமான பொதுச் சமுதாயத்தின் சூழ்ச்சியான விதிமுறை அடக்கல்களுக்குப் பலியாகாமல் அப்படிப்பட்டவர்கள் ஒத்துழைக்க மறுக்கும் பொழுது, அவர்களையே நம்பித் தம் வாழ்வைப் பெறும் சமுதாயம் தன்னுடைய சூழ்ச்சிக்குத் தானே பலியாவதையும் கதைக் கட்டங்களாக ஆக்கி நிற்கும் நாவல் அட்லஸ் ஷ்ரக்டு. 

தங்களுடைய ஒளிவு மறைவற்ற சுதந்திரச் சிந்தனை திகழும் இயல்பால், சமுதாயம், நாடு என்ற அனைத்து கூட்டு வாழ்க்கைக்கும் அச்சாணி போன்றவர்கள் இத்தகைய உற்பத்தியாளர்களே. அவர்கள் அறிவுத் துறையாகட்டும், தொழில் முனைவோராக இருக்கட்டும், முனைந்து சென்று தம் திறனையெல்லாம் முதலிட்டு நல்வாழ்வுக்கான ஊற்றுக் கண்களைத் திறப்பவர்கள் இத்தகையோரே. இவர்கள் நல்வாழ்க்கையின் பாட்டைகளைப் போட்ட பிறகுதான் பிறர் அதிலிருந்து பலன் காண விழைகின்றனர். நல்வாழ்வுக்காகப் புதிய மார்க்கங்களைக் காணத் துணிந்து முனையும் இத்தகையோர்தாம் மனித வாழ்க்கையின் சுழல் கோளத்தைப் பிதிர்ந்து போய் விடாமல் தம் முதுகில் சுமந்து நிற்கின்றனர். அவ்வாறு சுமந்து நிற்கும்வரைதான் உலகம் சுழலும். அவர்களுக்குத் துரோகம் செய்யும் வகையில், அவர்களுக்குக் குந்தகம் விளைத்து, ’உண்டாக்கும்வரை நீ; உண்டாக்கியதும் ஒதுங்கி நில்’ என்று பிடுங்கிக் கொள்ள எந்த ஒரு சித்தாந்தமோ சமுதாயமோ யத்தனிக்குமானால் விளைவு என்ன ஆகும் என்பதை அட்லஸ் ஷ்ரக்டு நாவல் பேசுகிறது. அட்லஸ் போன்றவர்களுக்குப் பாதுகாப்பு நிலவும்வரைதான் உற்பத்தி என்னும் திருவின் ஆக்கம் திகழும். அவர்களிடமிருந்து அவர்களின் முனைப்பின், முயற்சியின் பலன்களைத் தட்டிப் பறிப்பதோ, அல்லது பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்வதோ செய்ய முயற்சி செய்தால் விளைவு என்ன என்றும் சொல்கிறது. அல்ட்ரூயிஸச் சூழ்ச்சிகள் புதைந்த, ‘உன் வாழ்வுக்கான நியாயம் நீ இல்லை; மற்றவர்களுக்கு உன் வாழ்வைத் தியாகம் செய்வதில்தான் உன் வாழ்க்கையின் நியாயம் அடங்கியிருக்கிறது’ என்பது போன்ற வாழ்க்கைக்கு முரணான தத்துவங்களுக்கு ஆட்பட்டுத் தாமாகவே, தம்மிடமிருந்து தம்முடைய நியாயமான, தமக்கே சொந்தமான தம்முடைய சாதனைகள் சமுதாயத்தால் பிடுங்கிக் கொள்ளப்படும் பொழுதும் ஊமைகளாகி நிற்கும் நிலையினின்றும் அட்லஸ் போன்றவர்கள் விழித்துக்கொண்டால் என்ன ஆகிறது என்பதையும் அயின் ரேண்டின் நாவலான அட்லஸ் ஷ்ரக்டு காட்டிவிடுகிறது. அவ்வாறு காட்டும் அந்தக் கணத்தில் தங்கள் உள்ளத்திற்கு உண்மையாகத் தங்கள் அறிவாலும், உழைப்பாலும் அரிதின் பெற்ற தங்கள் சாதனைகளைச் சக மனிதரின் சூழ்ச்சிகளுக்குப் பலிகொடுத்த எவரும் அயின் ரேண்ட் அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. 

புதிய கருத்தை, புது தத்துவத்தை அளிப்பவர் தம் கருத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போனால் எவ்வளவோ உத்தமம் என்றுதான் தோன்றுகிறது. அதைச் சமுதாயத்தில் இயக்கமாக மாற்ற ஊக்கம் கொண்டால் மிகவும் நகைச்சுவையான முடிவுகள்தாம் மிஞ்சுகின்றன. அறிவு, சுதந்திரம், தனித்துவம், கட்டளைக் குரல்கள் எதற்கும் கீழ்ப்படியாமை என்று ஆரம்பித்துக் கருத்துலகில் முரண்பாடற்ற பெரும் அமைப்பாய் எழுபவை இயக்கமாக ஆகும் பொழுது என்ன முரண் நகையாகி நிற்கின்றன!. முரே ரோத்பேர்ட் என்னும் ஆசிரியர், லுட்விக் வான் மைஸஸ் கழகத்தின் அறிஞர் எழுதும் இந்தச் சமுதாய இயல் கட்டுரை அயின் ரேண்ட் கருத்துகளின்பால் எழும்பும் இயக்கம் பற்றிய முரண் நகையை அலசுகிறது. 

“ … cults become particularly fascinating when the esoteric and exoteric creeds are not only different, but totally and glaringly in mutual contradiction. The havoc that this fundamental contradiction plays in the minds and lives of the disciples may readily be imagined… 

”We conclude our analysis of the Rand cult with the observation that here was an extreme example of contradiction between the exoteric and the esoteric creed. That in the name of individuality, reason, and liberty, the Rand cult in effect preached something totally different. The Rand cult was concerned not with every man's individuality, but only with Rand's individuality, not with everyone's right reason but only with Rand's reason…” 

https://www.lewrockwell.com/1970/01/murray-n-rothbard/understanding-ayn-randianism/ 

மனித வாழ்க்கை பலமுகப் பிரச்சனைகளால் ஆன நுணுக்கம் உடையது. அதை எந்த ஒரு சித்தாந்தமும் தங்கள் முடிவிற்கேற்ப விடைகண்டு தெளிவாக்கிவிட்டதாகப் புதினங்கள் மட்டுமே எழுத முடியும். நடைமுறையில் வரும் பொழுது சித்தாந்தத்தில் அடங்காத பல பிரச்சனைகளாகத்தான் வாழ்க்கை தொடர்கிறது. அப்பொழுது அநேகமாக அனைத்துச் சித்தாந்தங்களும் ஒரே விதத்தில்தான் எதிர்ப்பு காட்டுகின்றன. மனித வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும், பொறுமையும் இழந்து ’சித்தாந்தம் என்னவோ சரியாகத்தான் இருக்கிறது, வாழ்க்கையைத் தான் சித்தாந்தத்திற்கு ஏற்பத் திருத்த வேண்டும்’ என்று முயற்சி செய்கின்றன. 

அயின் ரேண்ட் அவர்களின் கருத்திலும் பகுத்தறிவின் அடிப்படையிலான கட்டமைப்பு புனைவின் வெளியில் இயற்ற முடிகிறது. ஆனால் அந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட ஒருவரோ ஒரு நாடோ தம் வாழ்வில் வரும்பொழுது உள்ளத்திற்கு மட்டுமே புலனாகும் வாழ்க்கையின் பல பிரச்சனைகள் எதிர்ப்படுகின்றன. நாடு என்று எடுத்துக்கொள்ளும் பொழுது ஏழ்மை, வறுமை, சமுதாய ஏற்றத் தாழ்வுகள், இயற்கையால், மனிதக் குழுக்களால், பணபலம், படைபலம் என்பன கொண்டு ஒடுக்கும் சக்திகளால் அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் நிலைமை என்றெல்லாம் வரும்பொழுது வெறுமனே அறிவு ரீதியாகக் கச்சிதமாக எழுதப்பட்ட சித்தாந்தம் என்பதன் போதாமையே வெளிப்படுகிறது. கருத்திற்குச் சரியாகப் படுவது களத்தின் மெய்ம்மைக்குப் போதாத போது தோல்வியை ஒப்புக்கொண்டு தன்னை அதற்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் பக்குவம் பொதுவாகச் சித்தாந்தம் எதற்குமே இருப்பதில்லை. 

அயின் ரேண்டின் நிலைப்பாடு முற்றிலும் அறிவு என்பதில் நிலைகொண்டிருப்பது. நிரூபிக்கக் கூடிய வாஸ்தவம் என்பது அவர்களது அணுகுமுறையின் அடித்தளம். அயின் ரேண்ட் அவர்களின் நூல்களில் கருத்தியல் தெளிவு என்பது படிப்பவர்க்கு ஏற்படக் கூடிய ஒரு நன்மை. அயின் ரேண்டின் அப்ஜக்டிவிஸ்ட் தத்துவம் என்பது ரீஸன் என்ற ஒன்றுதான் அறிவுக்கான வழி. அறிவதற்கான மாற்று வழியோ, அறியப்பட வேண்டிய மாற்று மெய்ம்மைகளோ இல்லை என்பது அவருடைய திடமான வாதம். அறிவுக்கு அப்பாற்பட்ட, மெய்ம்மையைக் கடந்த கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை மிக அழுத்தமாகக் காட்டுகிறார். பன்னெடுங்காலப் பாரம்பரியக் கருத்துகளின் நேரெதிரானது அவர் வாதம். அதில் சிறிதும் இப்படி அப்படி விட்டுத்தரும் அவசியம் அவருக்கு இல்லை. 

ஆனால் வேதாந்தம் என்பது ரீஸனுக்கு உரிய முழு இடத்தையும் அங்கீகரித்து, கடவுள் என்ற ஒற்றை விஷயத்திற்கு மட்டும் சுருதி என்னும் ரெவலேஷன் என்பதை அடிப்படையாகக் கொள்ளும் உபநிடத தத்துவ அணுகுமுறை. அதாவது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் வரம்பு மீறாத பாத்தி கட்டி வைத்து அணுகும் முறை. வேதாந்தத்தோடு ஒப்பிட வேண்டுமெனில் செயிண்ட் தாமஸ் அக்வினாஸ் அவர்களின் தியாலஜிகல் அணுகுமுறைகளைச் சொல்லலாம். ரீஸனுக்கானப் பிரதேசத்தில் நம்பிக்கை ஊடு நுழையக் கூடாது என்ற கருத்தினர் அக்வினாஸ். 12 ஆம் நூற் (?). அயின் ரேண்ட் தமக்குப் பிடித்த கருத்தியல்களில் அக்வினாஸின் தியாலஜி துறைப் பங்களிப்புகளைக் குறிப்பிட்டக் காரணமே இதுதான். For the greatness of his contributions towards epistemological clearance. 

அயின் ரேண்டை ஒவ்வொருவர் படிக்க அறிமுகமான தருணம் குறித்துப் பேசுவது ஒரு சுவையான நினைவுப் போதை. என்னுடைய அறிமுகம் மிகவும் எதேச்சையானது. ஸ்ரீரங்கத்தில் ரயில்வே டாக்டராக இருந்த (1981 களில்) வி காசிவிச்வநாதன் அவர்களது மேஜையின் மீது Atlas Shrugged அட்லஸ் ஷ்ரக்டு என்னும் நூல் இருந்தது. நூலைப் புரட்டிப் பார்த்தால் பின்னட்டைப் பிளர்ப்பில் a metaphysical novel என்று போட்டிருந்தது. முன்னரே பேராசிரியர் திரு சி எஸ் கமலாபதி அவர்களின் உள இயல் உரைகளில், திருச்சியில், அயின் ரேண்டின் The Virtue of Selfishness பற்றிக் கேட்ட நினைவு. சரி இந்த ஆசிரியர் அப்படி என்ன எழுதியிருக்கிறார் என்று அறிய ஆவல். உட்கார்ந்து இராப்பகலாகப் படித்து முடித்தேன். உடனே பழம் புத்தகக் கடையில் சென்று ஒரு பிரதியும் வாங்கிவிட்டேன். 

அயின் ரேண்ட் சம்பந்தமான மூடிய குழுமனப்பாங்கு என்று பொருள்படும் கல்டிஸம் என்ற விமரிசனத்தைத் தம் கட்டுரையில் முர்ரே ரோத்பார்ட் வைக்கின்றார். அஃது என் அனுபவத்தின்படியும் உண்மை என்றுதான் படுகிறது. அயின் ரேண்டின் கருத்துகள் மனத்தில் பதிந்த அந்தக் காலத்தில் எதையுமே அவருடைய பார்வைகளை வைத்தே அளந்து பார்ப்பது என்பது எண்ணப் பழக்கமாக ஆயிற்று. அதற்கு முன்னரும் பல சித்தாந்தங்களின் வயப்பட்டு எண்ணம் கொள்ளும் பழக்கம் இருந்ததினால் பொதுவாகவே சித்தாந்தங்கள் நம்முடைய மனத்தை எப்படி ஆக்கிரமிக்கின்றன என்னும் ஓர்மையும் வளர்ந்திருந்த காரணத்தால் ஒன்றின் வயப்பட்டு எண்ணுவதும், அதற்குப் புறமாகி அதை விமரிசித்துப் பார்க்கும் பழக்கமும் கூடவே ஏற்பட்டது. அதனால்தான் முர்ரே ரோத்பேர்ட் தமது விமரிசனத்தில் கூறும் சில அவதானிப்புகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. குறிப்பாக அவர் ஒரு கருத்தைக் கூறுகிறார். அது என்னவென்றால் அயின் ரேண்ட் கல்ட் என்பதில் ஆட்பட்டவர்கள் பொதுவாக அயின் ரேண்ட் எதை, எந்த ஆசிரியர்களை, எந்த நூல்களைக் கண்டித்தாரோ, அப்ஜக்டிவிஸ்ட் சித்தாந்தத்திற்குக் குந்தகம் என்று குற்றம் சாட்டுகிறாரோ அந்த நூலை, அந்த ஆசிரியரை அயின் ரேண்ட் அபிமானிகள் படிக்க விரும்ப மாட்டார்கள். உதாரணத்திற்கு, அப்பொழுது புத்தகக் கடையில் ஒரு முறை ப்ளேட்டோவின் முழுநூல் தொகுதியைக் கண்டும் அதை வாங்காமலே வந்திருக்கிறேன் என்றால் உள்ளே என்னுள் இருந்த அந்த கல்ட் மனப்பான்மையும் ஒரு காரணம். பிறகு அதை எப்படியோ வாங்கிவிட்டேன் என்பது வேறு. கல்ட் மனப்பான்மை என்பது எப்படி ஆழமாகச் செயல்படுகிறது என்பதற்காகக் கூறினேன். முர்ரே ரோத்பேர்ட் எழுதுகிறார்: 

“Reading the Enemy (which, with a few carefully selected exceptions, meant all non- or anti-Randians) meant “giving him your moral sanction,” which was strictly forbidden as irrational. In a few selected cases, limited exceptions were made for leading cult members who could prove that they had to read certain Enemy works in order to refute them…” 

ஏற்கனவே வேதாந்தப் படிப்புகளின் மூலம் இது தெரியவந்த ஒன்றுதான். மாற்றாருடைய கருத்துகளைப் பூர்வபக்ஷம் அல்லது பரபக்கம் என்னும் கோணத்தில்தான் ஒரு சித்தாந்தி படிக்க முடியும். அதாவது அதை எடுத்துக் கண்டிப்பதற்காக மட்டும் அந்த நூல்களைப் படிக்கலாம். சாதாரண அபிமானிகள் கூடிய மட்டும் அப்படியான எதிராளிகளின் நூல்களைப் படிக்காமல் இருப்பதுதான் நல்லது. ’மிகச் சிறந்தது என்பதை வாழ்வில் வந்து அடைந்தபின் ஏன் மற்றவற்றைப் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டும்’ என்ற எண்ணமே தோற்றுவிக்கப்படும். ஆனால் ப்ளேட்டோவோ, காரல் மார்க்ஸோ அல்லது உலகில் இன்னும் பல துறைகளோ அவற்றையும் படிக்கும் போது அதில் பல நன்மைகள் கிடைப்பதைக் கல்ட் மனப்பான்மையைக் கடந்து சென்றால்தான் புரியும். அதே நேரத்தில், அந்தந்தச் சித்தாந்தங்களில் தீவிரமாக ஆழ்ந்து போவோருக்கும் இதேபோல்தான் பிரச்சனைகள் இருக்கின்றன. எனக்கு அந்தப் பிரச்சனை இல்லாமல் போன காரணம் அறிதல் என்னும் நிலையான நிகழ்காலச் செய்கைக்கு எந்தவித வரம்புகளும் கூடாது என்ற தெளிவு ஏற்பட்டமையேயாகும். அதனால் யாரையும் அவர்களைக் கண்டிப்பவர்களின் பார்வையில் நின்றுகொண்டு ஒரு நாளும் படிக்கக் கூடாது என்னும் நிச்சயம் ஏற்பட்டது. 

மேலும் அயின் ரேண்ட் நாவல்களைப் படித்து அதன் தாக்கத்தில் இருந்த நாட்களில் கல்டிஸத்தின் மற்றும் ஒரு பழக்கமும் ஏற்படுவதைக் கண்டேன். அதாவது நம்மை அந்த நாவல்களில் வரும் ஏதாவது உன்னத பாத்திரங்களில் ஒன்றாக ஐக்கியப்படுத்திக் கொள்வது; நாம் சந்திக்க நேரும் அல்லது நம்மோடு மோத நேரும் யாரையும் மிகச்சுலபமாக நாவல்களில் வரும் கதைக்கட்டங்களை நினைவில் கொண்டு அதற்குத்தக ஒரு பாத்திரத்தோடு ஐக்கியப்படுத்தி விடுவது. அதாவது ‘நான் சரி / நீ சரியில்லை’ என்னும் எதிர் இரட்டை நிலை. இந்தப் பழக்கம் வெகு சுலபமாகக் கருத்துகள் ரீதியான பார்வையை நீக்கிவிட்டு அங்கு பழக்கப்பட்ட சித்திரங்களைக் கொண்டுவந்து வைத்துவிடும் அபாயத்தைத் தோற்றுவித்துவிடும். ஆனால் சித்தாந்தங்களுக்கும் மனத்திற்குமான ஊடாட்டத்தை நான் முன்னரே ஓர்மையில் கொண்டிருந்த காரணத்தால் இதிலிருந்தெல்லாம் எளிதாக வெளிவர முடிந்தது. இந்தப் பிரச்சனைகள் அயின் ரேண்ட் குறித்த ஈடுபாட்டில் மட்டுமன்று. மற்ற சித்தாந்தங்களில் ஈடுபட்டோரும் அவரவர் தம் தம் அளவில் இந்தச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு இருந்ததை நெடுகப் பார்த்திருக்கிறேன். என்னைப் போல் சிலர் அங்கங்கிருந்து வெளிப்படவும் இயன்றிருக்கலாம். ஆனால் கல்டிஸம் என்னும் மூடிய மனப்பாங்கு உலகெங்கணும், காலம் நெடுக வந்து கொண்டிருக்கும் அறிவு போன்ற அறியாமை என்பதை வளரும் சமுதாயம் முதலிலேயே கவனம் கொள்வது நல்லது. 

ஆனால் ஒன்று நிச்சயம். சமுதாய வாழ்க்கையில், அன்றாடம் பழகும் சூழ்நிலைகளில் தவறான எண்ணம் கொண்டவர்கள், தங்களுக்கு மட்டுமே சௌகரியமான விதத்தில் ஒப்பந்தம் போட்டு அது நியாயமானது என்றும் நம்மையே பல உணர்ச்சி பூர்வமான உரைவீச்சுகளால் சாய்த்து, நமக்கு ஒவ்வாததை நம்மைக் கொண்டே வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள வைக்க நினைப்பவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் கனத்துச் செயல்படும் தருணங்களில் எல்லாம் நமக்குப் பெரும் உதவியாய் இருப்பது அயின் ரேண்ட் தமது நாவல்களில் காட்டிய அறிவு ரீதியான விவகாரத் தெளிவு என்பது இன்றும் அனுபவபூர்வமான உண்மைதான். 

***

சர்க்கரை போடாத தேநீர்

சர்க்கரை போடாத தேநீர் நன்றாகத்தான் இருக்கிறது.
ஏதோ அதன் புண்ணியத்தில் ஓர் எண்ணம் நிச்சயப்பட்டு எழுந்தது.

நாம் உண்மையில் வாழவில்லை.
இது வாழ்க்கையில்லை.
பிணத்தைக் குதிரையேறிச் சவாரி செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த உடலையே நாம் என்று எண்ணித் தூக்கிச் சுமக்கிறோம்.
இடுகாட்டிற்குச் சற்று நேரம் முன்வரையில்.
என்று பிணத்தை நாமாக மயங்கிய இந்தச் சவாரியை நிறுத்துகிறோமோ
குறைந்தபட்சம் இந்த உடல் இது நாம் இல்லை
என்றாவது ரோசம் வந்து மனத்தால் இதனோடு படுத்துப் புரள்வதை
வெட்டிவிடுகிறோமோ அன்றுதான்
நாம் நம் உண்மை இயல்பு என்ன என்று உணரத் தொடங்குகிறோம்
அன்றே உண்மையான நித்திய வாழ்க்கையும் ஆரம்பம்.

பிணத்தொடு கூடிப் பிணக்கென வாடி
இணங்கும் இதுவோ இயல்பு - சுணக்கறத்
தேகம்நான் என்ற நசையறத் தானுணர்தல்
ஏகவாழ் வாகும் இயல்.

ஆனால் யதார்த்தமான உண்மை இதுவாக இருக்கிறது. சுறுசுறுப்பான வாழ்கதியில் இருப்போர்க்கு இது என்ன சோம்பேறி தத்துவம் என்றும் படுகிறது. ஆர்வம் கொண்டு முனைவோருக்கு எளிதோ என்றால் பிடிகொடுக்காமல் படுத்துகிறது.

வந்தவழியே போ - என்கிறார் ஸ்ரீரமணர். அதைவிட எளிமையுற உரைக்க முடியாது. ஆனாலும் வாரிச்சுருட்டிக்கொண்டு வந்த ஒன்று ரிவர்ஸில் போவது என்றால் நடக்கிற காரியமா... முன்வைத்த காலை பின் வைக்கலாமோ என்று வாசனைகள் ஓவர்டைம் போடுகின்றன. என்னதான் வழி என்றால் அருணை வள்ளல் ஏற்கனவே கீதையுரைத்த வழி என்கிறார். அப்பியாசம், வைராக்கியம். இதில் சோர்ந்து போவது ஆச்சரியமே அன்று. ஆனாலும் தொடர்கிறோமே அங்குதான் நாம் நிற்கிறோம்.

ஆனால் மாறும் உலகம், மறையும் வாழ்க்கை, பிணி பசி மூப்பு இறப்பு கொண்ட உடல் இன்பம் துன்பம் என்ற குப்பைமேடு போல் இருக்கும் உலகவாழ்வில் ‘நாம் உண்மையில் அறிவே சொரூபமான ஆன்மா. உடல் எனக் கருதி மயங்கி நிற்கிறோம்.’ என்று நினைப்பதைப் போல உபயோகமான செயலே வெறொன்று இல்லை, தனக்கோ, உலகிற்கோ. இந்த நிச்சயம் சொந்த அனுபவம். மற்றபடி என்ன மனக்கஷ்டங்கள் வந்தால் என்ன போனால் என்ன என்றுதான் ஒருவித அசிரத்தை வந்துவிட்டது.

’அநித்யம் அசுகம் லோகம்
இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்’.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***