Friday, February 7, 2020

திருப்பாவைக்கு ரசனைப் பாடல் முப்பது - இரண்டாம் பகுதி

திருப்பாவை 16 - 'நாயகனாய் நின்றநந்த கோப னுடைய'

இதுவரையில் விழிப்புற்ற ஜீவர்களாகிய பெண்கள் தங்களுக்குள் அனைவரையும் எழுப்பிக் கொண்டார்கள். ஒருவரும் விட்டுப் போகாமல் எழுந்து வந்து விட்டார்கள் என்றதும் இப்பொழுது அனைவரும் பெரும் கோஷ்டியாகச் சேர்ந்து சென்று பரம்பொருள் பரமபுருஷனின் கோயில் வாசலில் நின்று உள்ளே புகுவதற்கான விண்ணப்பம் இடுகிறார்கள். அனைவருக்கும் உள்ளே இருக்கும் ஒன்றை அனைவரும் சேர்ந்து தமக்குப் புறத்தில் வைத்துக் கண்டு பேசி ஆடிப் பாடிக் காதல் செய்து காணும் ஆனந்தத்தை இப்பாட்டு தொடங்கிச் செய்கிறார்கள். உலக இன்பம் என்றால் அதற்குத் தனிமைதான் முதலில் வேண்டியிருக்கும். ஆனால் பகவானை, பரம்பொருளை, பரமபுருஷனை ஜீவர்கள் அனுபவிக்கும் காலம் காலமான ஆனந்தத் தேடுதலுக்கு மொத்த ஜீவ சமுதாயமும் ஒருவர் பாக்கியில்லாமல் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்னும் பேரவா என்பதுதான் தேவையாக இருக்கும். அதைச் சொல்கிறது திருப்பாவை. அதை நிகழ்த்திக் காட்டுகிறது இப்பாட்டு தொடங்கி.

இதற்கான ரசிகப் பாடல் --

நாயகன் நாரணன் நங்கையராம் நல்லுயிர்காள்
வேய்ங்குழல் ஓசை விதித்த திருப்பாவை
மாயனை நாடித்தான் மாதவனார் கோயில்முன்
தூயோர்தம் தொல்லுரைகள் நற்றுணையாய் நாமணுகி
ஏய்ந்தமன மென்னும் இணங்குநல் காவலனால்
தோய்ந்த உளமென்னும் நந்தகோ பன்தன்னால்
ஆயன்தான் ஆதியில் நேர்ந்த உயிர்த்தொண்டே
வாய்ந்துநாம் வாழ விழைந்தேலோ ரெம்பாவாய். 


திருப்பாவை - 17  - அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் -

மிக அருமையான ஆன்மிக அர்த்தங்களைப் பொழிகிறார்கள் பூர்வாசாரியர்கள் தம் உரைகளில். உயிருக்கு உடை, நீர், உணவு என்பது என்ன என்ன என்ற சிந்தனையைக் குறிப்பு காட்டுகிறார்கள். உயிரின் ரூபத்தை எது நிரூபிக்கிறதோ அது அம்பரம் ஆகிய உடை. தாரகமாக உயிருக்கு எது இருக்கிறதோ அது நீர். உயிரைத் தன் உண்மையான இயல்பில் நன்கு செழிக்க வளர்க்கிறது எதுவோ அது சோறு என்று அவர்கள் காட்டும் பொருள் மிஸ்டிஸிஸத்தில் மிக உன்னதமான அர்த்தமாகும். உலக மிஸ்டிக் பள்ளிகள் எல்லாவற்றுக்கும் கேந்திரம் என்னலாகும் சங்கத் தமிழ் மாலை முப்பதும் செப்பிய ஆண்டாளின் அருளோதயம். இத்தனையும் வாய்ந்தால்தான் கடவுள்பேறு. இத்தனையையும் எது தரும்? பரம ஹிதமே வடிவு கொண்ட இதயம் எதுவோ அதுதான் இவற்றைத் தரும். ஹிதம் என்றால் மன்னுயிர்க்கு நன்மையையே வேண்டும் உள்ளம். அந்த உள்ளமே முழு வடிவு எடுத்து வந்தால் எப்படி இருக்கும்! அந்த ஹிதமே வடிவு கொண்டதுதான் நந்தகோபர். சகல உயிர்களுக்கும் நன்மை விழையும் சிந்தையோடு, அனைத்து உயிர்கள் பாலும் பிரியமே வடிவு கொண்டால் அந்த பிரியமயமான வடிவமே யசோதை. இவ்வாறு சகல உயிர்கள் பாலும் ஹிதமயமான இதயமும், சகல உயிர்கள் பாலும் பிரியமே வடிவுகொண்ட சிந்தையும் சேர்ந்துதான் உயிர்களுக்கு பரம்பொருளைப் பெற்றுத் தர முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள். நமது அகவாழ்வில் இந்த நந்தகோபனையும், யசோதையையும் வாழ விடுகிறோமா? அல்லது கம்சனையும், பூதனையையும் திரிய விடுகிறோமா? என்பது அவரவர்க்குத் தானே தெரியும்? உள்ளமாகிய பள்ளிக் கட்டிற் கீழே யசோதை ஆச்சியையும், நந்தன் என்ற அந்த இடையர் குலக் கொழுந்தையும் கொஞ்சம் குடியமர்த்திப் பார்த்தால் அல்லவோ தெரியும் கோகுலம் சதா சர்வ காலமும் நம் உள்ளத்தில் உயிரின் அந்தரங்கத்தில் ஒரே விளையாட்டும் கும்மாளமுமாக இருக்கிறது என்பது! அதற்கு நமது மனம் ஒத்துழைக்க வேண்டாமா? அதனால்தானே வாசலில் காவல் நிற்கும் மனத்தைத் தன்னக்கட்டிக் கொண்டார்கள் முதலில். அந்த மனமாகிய காவலன் ஓம் பறைந்தால் பின்னர் உள்கட்டில் வந்து புகுர என்ன தடை? அந்த மனம் மட்டும் நமக்கு நன்மையை விரும்பும் ஒன்றாக ஆகிவிட்டது என்றால் நாம் கவலையே பட வேண்டாம் நிச்சயம் உள் கட்டில் நந்தகோபனும், யசோதை ஆச்சியும் பரம்பொருளை கண்ணின் பாவை போல் நோக்கிக்கொண்டு நமக்காகக் காத்திருப்பதைப் பார்க்கலாம். இந்த பரம பாவனமான, தூய நல் சேதியை உலகுக்கு உற்சவம், கொண்டாட்டம் என்ற உருவில் மார்கழி முப்பது நாளும் உலகுக்குத் தந்த தமிழுக்கும், தமிழனுக்கும் அல்லவோ நாம் முதலில் கோயில் கட்ட வேண்டும்! வேறு எந்த மொழியில், உலகத்திலேயே இப்படி இந்த மகோன்னதமான உயிர்க்குல நன்மைச் செய்திக்கு உரைகள் மேல் உரைகள் இட்டுப் பெரும் திருவிழாவாக ஆக்கித் தந்திருக்கிறார்கள்.? ஆனால் கேட்பதற்குத்தான் ஆள் யார் இருக்கிறார்கள்? ஆனானப்பட்ட 'திருப்பாவை ஜீயர்' என்னும் பெயருள்ள எம்பெருமானாரே தோற்றுப் போய், 'திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைத்தாலும் கிடைப்பார்கள்; ஆனால் திருப்பாவைக்கு ஆள் கிடைப்பது அரிதிலும் அரிது; ஆண்டாளே சொல்லி ஆண்டாளே கேட்கும் அத்தனை' என்று கைவாங்குவாரேயானால் என்போலியர் எம்மூலை!

இதற்கான ரசிகப் பாடல் -
அம்பரமும் தண்ணீரும் சோறும் நமக்காகும்
உம்பர்கோன் உத்தமன்பால் உள்ளும் உயிருமாய்
எம்பிரான் தாளிணையில் என்றுமே காதலாகிச்
செம்புலத்துப் பெய்நீராய்ச் சேர்ந்தென்றும் ஒன்றிவாழும்
அம்புலத்துக் கான்றவழி ஆண்டாள் தகவுரைத்தாள்;
நம்பிகாள் நங்கைமீர்காள் நாடுமினோ நல்லுரைகள்;
நம்பரும் நன்மையெலாம் நானிலம் காணலாகும்
வம்புலாம் சீர்திகழ வாழ்த்தேலோ ரெம்பாவாய்.


திருப்பாவை 18 - எம்பெருமானார் திருப்பாவை -

'உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்' 


இதற்கான ரசிகப் பாடல் -

உந்து மதகளிறாய் உன்மத்த மாகிமனம்
தந்ததொல்லை தீரத் திருப்பாவை தான்தந்தாள்
அந்தமிலா வாழ்ச்சிக்கே அச்சாரம் தானானாள்
கந்தம் கமழும் குழலால் கிருட்டினனைப்
பந்தித்து வைத்தே பரமாகத் தந்தருளிச்
செந்தமிழ் வேதியர்க்கே செப்பும் மொழியானாள்
வந்தித் தவருரைத்த வானுரைகள் வாசித்தே
சிந்தித்து வாழ்பொருளே செப்பேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 19 - குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

இதற்கான ரசிகப் பாடல் -
குத்து விளக்காகிக் கோதுகலப் பாட்டாகி
வித்துமாய் வீட்டிற்குத் தானாம் திருப்பாவை
நத்தி நமக்காக நாச்சியார் தானருளப்
புத்தியோகு தானருளும் பூரணன் பள்ளிகொள்ளும்
தத்துவமும் தண்தகவும் தெள்ளுரைகள் தாம்விளக்க
எத்துக்கிவ் வின்னாமை இப்பாரைத் தான்நலியும்
தித்திக்கும் பாடல் திகட்டா அருளமுதம்
பத்தியுடன் பாடிப் பொலிந்தேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 20 - 'முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று'

இதற்கான ரசிகப் பாடல் -
முப்பத்துப் பாட்டிற்குள் மாதவனைப் பூட்டியே
எப்போதும் நந்தமக்கே எய்ப்பில்வைப் பாக்கினாள்
செப்பன்ன மென்முலையாய்ச் சீருரைக்குள் ஆட்பட்டே
அப்பாஞ்ச சன்னியனும் ஆரா வமுதானான்
கப்பம் தவிர்த்திங்கு காதலாய்க் கண்ணனுக்கே
எப்போதும் ஏங்கி இயல்வதாம் வாழ்விதனில்
முப்பதும் முந்துரையும் உக்கமும் தட்டொளியாய்
இப்போதும் என்றும் இயம்பேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 21 - 'ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப'

இதற்கான ரசிகப் பாடல் -
ஏற்ற நலங்கள் இயல்வாகித் தாம்சுடர
மாற்றா மதிநலத்தால் பேருரைகள் தாமொளிரப்
போற்றியாம் பாடத் திருப்பாவை தந்தருளி
ஆற்றப் படைத்தவர் அஞ்சுகுடிக் கோர்மகளாய்
ஊற்ற முடைய உத்தமனைத் தான்வரித்தாள்;
நாற்றத் துழாய்முடி நாரணனை நாம்பெறவே
தோற்றே அவள்தமிழில் தொல்புகழ் பாடிப்போய்
ஆற்றா தடிபணிந்தே ஆழ்ந்திடுவோ மெம்பாவாய்.

*


திருப்பாவை 22 - 'அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான'

இதற்கான ரசிகப் பாடல் -
அங்கண்மா கர்வத் தகங்காரம் விட்டகன்று
செங்கமலை தானருளச் செய்யதிருப் பாவைக்கே
எங்கள் இதயமெலாம் ஏக்கமும் கொண்டதுவால்
மங்காப் புகழுடைய மாகுரவோர் தம்முரையால்
சங்கத் தமிழ்மாலைச் செய்யபொருள் போந்ததுவால்
திங்களும் ஒண்சுடரும் தண்கதிர் கண்மலர
எங்கள்மேல் சாபம் இழிந்து திருமாலும்
அங்கண்ணால் நோக்கி அருளேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 23 - 'மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்'

இதற்கான ரசிகப் பாடல் -
மாரி பெயல்நெஞ்சில் மாவுணர்த்தும் காலத்து
வேரி கமழ்சிந்தை வீடளிக்கும் வேராகிச்
சீரிய சிங்கா தனமாம் திருப்பாவைப்
பேரியல்வே பல்குநல் பாங்கான பேருரைகள்
மூரி நிமிர்ந்து முழங்கிடவே யாம்வந்த
காரியம் ஆராய்ந்து கண்ணன் கருணையினால்
சீரிய சிந்தையும் சிந்தாநல் பத்திமையும்
ஆராய்ந் தருளநாம் ஆர்த்திடுவோ மெம்பாவாய்.

*


திருப்பாவை 24 - 'அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி'

இதற்கான ரசிகப் பாடல் -
அன்றிவ் வுளமெலாம் ஆண்டாள் அடிபோற்றி
சென்றங்கு நம்மகந்தை செற்றாள் திறல்போற்றி
பொன்றவே சங்கை புகன்ற உரைபோற்றி
கன்றுதீய சிந்தை கெடுத்தாய் கழல்போற்றி
குன்றாத காதல் கொடுத்தாய் குணம்போற்றி
வென்றே எமையெடுக்கும் நின்தாள் விறல்போற்றி
என்றென்றுன் பாசுரமே ஏத்தி உரைகொள்வான்
இன்றுயாம் வந்தோமால் ஏற்றேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 25 - 'ஒருத்தி மகனாய்ப்  பிறந்தோ ரிரவில்'

இதற்கான ரசிகப் பாடல் -
ஒருத்தி மொழியாய்ப் பிறந்தே உரவோர்
அருத்த வுரையாய்ப் பரந்தே ஒளிர
தரிக்கிலா தாகிநம் தீங்கு கழியக்
கருத்தைக் கவர்வித்துக் கள்ளம் அகற்றி
விருப்பென்ன நின்ற நெடுமாலாய் வேயர்
திருப்பாவை தந்த தமிழால் திருமால்
திருத்தக்க அன்பால் தமியர்யாம் பட்ட
வருத்தமும் தீர்ந்துநாம் வாழ்ந்தேலோ ரெம்பாவாய்.

*



திருப்பாவை 26 - 'மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்'

இதற்கான ரசிகப் பாடல் -
மாலாய் மனவண்ணம் மாதவற்கே ஆகிடுமால்
வாலறிவர் தாம்விரித்த வானுரைக்கே ஏங்கிடுமால்
பாலாழி விட்டிங்குப் பார்வண்ணம் தாங்கிடுமால்
நூலாழி நுட்பம் நுவன்றநம் கோதைக்கே
மாலாகி நெஞ்சழிய மன்னுபெரு வாழ்வுக்காம்
சாலப் பெரும்பறையும் சங்கமுடன் நீள்கொடியும்
ஞாலமெலாம் உள்ளடக்கும் ஞான விதானமும்
ஆலின் இலைகிடந்தே ஆள்வானை ஆண்டாளைக்
கோல விளக்காகக் கொள்வோம்நாம் எம்பாவாய்.

*


திருப்பாவை 27 - 'கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னை'

இதற்கான ரசிகப் பாடல் -
கூடாரைக் கோவிந்தன் வெல்லும் உரையாகி
நாடாரை நாரணர்க்கே ஆட்படுத்தும் ஆண்டாளைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடும் நயக்கும் நல்லுரையும் நாவினிக்கச்
சூடகமும் தோள்வளைக்கும் மாலுக்குத் தோதாகிப்
பாடும் அகச்செவியின் பூவாகிப் பேருரைகள்
ஆடும் பொருளாழம் ஆடையும் பாற்சோறும்
மூடுநெய் தோய முழங்கேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 28 - 'கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்'

இதற்கான ரசிகப் பாடல் -
கறவைகள் புன்சிரிக்கும் கல்விக்கே தேர்ந்தோம் 
துறவிலோம் திண்மையிலோம் தீமைக்கே கற்றோம்
அறமிலாப் பாரிதனில் ஆண்டாளைப் பெற்றோம்
குறையொன்று மில்லாத கோதைமொழி கற்றோம்
உறவேல் நமக்கென்றும் ஓதுமுரை உற்றோம்
அறியாதப் பிள்ளைகளோம் அன்பினால் செய்யும்
சிறுமை மதிமாற்றிச் சிந்தையினை ஆளும்
பொறுமை யுனக்கேயாம் போந்தேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை 29 - 'சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்'

இதற்கான ரசிகப் பாடல் -
சிற்றஞ் சிறுகாலே நின்திருப் பாவையினை
முற்றா மதியுடையோம் வந்துநாம் சேவித்துப்
பெற்றதாம் பேருரைகள் நல்கும் பொருளாழ்ந்து
கற்றுன் திருவடிக்கே குற்றேவல் யாம்வாய்ந்தே
இற்றைப் படிப்பால் இயம்பியசொல் அன்றுகாண்
இற்றைக்கும் என்றைக்கும் நின்னருள் பாவையினால்
உற்றோமே யாவோம் உலகெலாம் ஒன்றாவோம்
மற்றைநம் வேகங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

*


திருப்பாவை - நிறைவுத் திருப்பாவை - வங்கக் கடல்கடைந்த'

இதற்கான ரசிகப் பாடல் - 

வங்கக் கடல்கிளர்ந்த மாவுரைகள் காட்டுபொருள்
திங்கள் முழுதும் திருப்பாவை தான்விளங்க
எங்கள் இயல்வும் எமைக்காக்கும் தன்னியல்வும்
மங்காப் புகழ்பறையாம் மாதவனார் சேவடியும்
சங்கத் தமிழிசைத்து நங்கள் குலம்வாழ
அங்கத் திருப்பாவை ஆண்டாள் அருளியவா
பொங்கு மலியுவகை பூரிப்பத் தாம்சொல்வார்
எங்கும் திருவருளால் தாம்மகிழ்வ ரெம்பாவாய்.

* * *

திருப்பாவை முப்பதில் தீந்தமிழால் வீடும்
அருள்பாவை போற்றிப் புனைந்தேன் - மருள்தீர
மார்கழியில் ஆண்டாளம் மாதவனை மன்னியசீர்
ஆரமுதப் பாவின் அருள்.
***
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 


திருப்பாவையின் பாடல்களின் முதல் சொற்களை வைத்துக் கொண்டே ஒரு கவிதை. அழகியமணவாளப் பெருமாள் நாயனாரைப் படித்ததனால் வந்த விளைவோ?

*
மார்கழி மதியால் வையம் வாழும்
ஓங்கி உலகளக்கும் ஆழி மாயன்
புள்ளும் சிலம்பும் கீசுகீசென்னும்
கீழ்வானம் வெளுக்கும்
தூமணி மாடத்தில் நோற்கும் சுவர்க்கம்
கற்றுக் கறவை கனைத்திளங் கன்றுக்கிரங்கும்
புள்ளின்வாய் உங்கள் புழக்கடையில்
எல்லும் இளங்கிளியும்
நாயகனாய் நின்று
அமபரமும் தண்ணீரும் சோறும்
உந்து மத களிறும்
குத்து விளக்கெரிய
முப்பத்து மூவர் ஏற்ற கலங்களில்
அங்கண் மாஞாலம் மாரிமலை முழைஞ்சில்
அன்றிவ்வுலகம் அளக்கும்
ஒருத்தி மகனாய் மாலும் மணிவண்ணமும்
கூடாரை வெல்லும்
கறவைகள் சிற்றஞ் சிறுகாலை
வங்கக் கடல்கடையும்.

***

No comments:

Post a Comment