Tuesday, September 1, 2020

மாறன் கோவை

 சுமார் 334 வருஷங்களுக்கு முன்னர் ஒரு மகான் இருந்தார். அவரின் பெயர் ஸ்ரீமான் வாலப்பிரமசரிய இராமவிரதர் என்பதாகும். இஃது அவருக்குச் சிறப்புப் பெயாராக அமைந்தது. அவரது இயற்பெயர் ஸ்ரீவேங்கடத்துறைவான் கவிராயர் என்பதாகும். வேளாளர் குலத்தில் உதித்தவராய் வாழ்க்கை முழுவதும் பிரமசரிய விரதமே பூண்டு, கல்விக் கடலாய், இலக்கண இலக்கியங்களை நல்லாசிரியர்பால் ஐயந்திரிபறக் கற்று, ஸ்ரீராமபிரான் மீது அசஞ்சல பக்தி பூண்டவராய், ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ உ வே ஆத்தான் ஆசாரியர் என்பவரிடத்தில் ஆச்ரயித்துப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பெற்று, திவ்யப் பிரபந்தங்களும், அவற்றின் வியாக்கியானங்களும், ஸ்ரீவைஷ்ணவ ஸத்சம்பிரதாய கிரந்தங்களையும் ஆசாரிய ஸந்நிதியில் கேட்டுத் தெளிந்து, பிரபந்ந அனுஷ்டானத்தில் மிக்கவராய், வாலபிரமசரிய ராமவிரதர் என்னும் சிறப்பு பெயரும் பெற்று விளங்கினார். ஆழ்வார் திருநகரியில் ஆழ்வாருக்குத் திருமஞ்சன கைங்கரியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவராய் இருந்தார்.

‘தேரீர் என்னுள்ளம் குருகூர்ச் சொல் வீறன் திருமஞ்சன
நீரீர வாடை உண்டார் நாவுக்கே மற்ற நீரினிதோ’
என்று இவர்தாமே பாடுகின்றார்.
இவர் மாறன் சடகோபன் மேல் கோவை பிரபந்தம் பாடியுள்ளார். 526 செய்யுட்கள் அடங்கிய நூல். 1906 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பூளைமேடு ஸ்ரீ மு வேணுகோபாலசாமி நாயுடு என்பவாரால் பதிப்பித்துக் கொண்டுவரப் பட்டிருக்கிறது.
கோவை என்னும் பிரபந்த வகை அகத்துறையின்பாற் பட்டது. தலைவனும் தலைவியும் ஒருவருக்கொருவர் சந்தித்து இதயம் மாறிப் புக்கு இல்லறம் புகும் நிலைவரையில் மனத்தின் நிகழ்வுகளைப் பல துறைகளாக ஆக்கி, காட்சி, ஐயம் என்றபடி நாடகப் பண்போடு அமைத்துக் காட்டுவது. நம்மாழ்வாரின் முதல் பிரபந்தமே திருவிருத்தம் என்னும் கோவை பிரபந்தமாகும். ஆனால் அஃது நூறு பாட்டுகள் மட்டுமே கொண்டது. மாறன் கோவையில் ஸ்ரீமான் வாலப்பிரமசரிய ராமவிரதர் நம்மாழ்வாரையே தமது தலைவனாகவும், தாம் அவரிடத்தும், அவரது திருவாய்மொழியிடத்தும் ஈடுபடும் தலைவியாகவும் வைத்துப் பாடுகிறார். தமக்கு உள்ள ஆழ்வார் பக்தி, திருவாய்மொழியில் ஆழங்கால்பட்ட தோய்வு அனைத்தையும் அழகான அகத்துறைப் பாடல்களின் மூலம் வெளியிடுகிறார். உதாரணத்திற்கு ஐயம் என்னும் துறையின் கீழ் இவர் பாடும் பாடல்:
’பூமேவு வாச மகிழலங் காரப் புயப்புனிதர்
தாமேவு தென்குரு கூர்நில மோ சங் கணித்துறைசூழ்
கோமேவு சங்கத் திரைக்கட லோ தமிழ்க் கோலவெற்போ
மாமேவும் ஆசனப் போதோ பதியிம் மதிநுதற்கே.’
அதுபோல் ‘தெய்வத்திறம்பேசல்’ என்னும் துறையில் இவர் அருளும் பாட்டு அமுதமே ஆகும்.
‘வானில் கலந்தொளிர் மின்னையும்
பூவின் மணத்தையும் பைந்
தேனில் கலந்த சுவையையும்போல்
தெய்வம் சேர்த்ததெம்மைக்
கானில் கலந்த வகுளாபரணன் கவின்குருகூர்
யானில் கலந்த நலம்பிரிப்பார் எவர் ஏந்திழையே.’
தலைவனோடு கானில் கலந்த தலைவியின் நினைவு அகத்துறை. ஆனால் இவர் நம்மாழ்வாரோடு ஒன்றறக் கலந்த ’கான்’ என்பது தமிழாரணம் என்னும் திருவாய்மொழி. திருவாய்மொழியில் தோயுங்கால் நம்மாழ்வாரோடு, அவருடைய கிருஷ்ண திருஷ்ணா தத்துவத்தோடு ஒன்றறக் கலக்கும் பேறுடையாரின் இறும்பூதை அப்படியே பாட்டாகி இருப்பது மிகவும் இனியது.
***

அத்திகிரி அருளாளரின் அழகு!

 அத்திகிரி அருளாளரின் குணங்களைக் கூறும் அழகே தனிதான், ஸ்ரீவேதாந்த தேசிகர்:

‘வேரொப்பார் விண்முதலாம் காவுக்கெல்லாம்
விழியொப்பார் வேதம் எனும் கண் தனக்குக்
காரொப்பார் கருணைமழை பொழிந்தி டுங்கால்
கடலொப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்
நீரொப்பார் நிலமளிக்கும் தன்மை தன்னால்
நிலமொப்பார் நெடும்பிழைகள் பொறுக்கும் நேரால்
ஆரொப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால்
அருளாளர் தாம் எனினும் தமக்கொவ் வாரே.’
***

கந்தன் திருவருள்

 ’குழகனை அழியாக் குமரனை, அட்ட

குணத்தனைக் குறித்திடல் அரிதாம்
அழகனைச் செந்தி லப்பனை மலைதோறு
ஆடல்வாழ் அண்ணலைத் தேவர்
கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
காலனை வேலனை மனதிற்
சழக்கிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.’
என்று கந்தனை, குமரனை துதிக்கின்றார் ஸ்ரீராமலிங்க வள்ளலார் சுவாமிகள்.
காலையில் கந்தசஷ்டிக் கவசம் டிவியில் பார்த்துக் கேட்பது மனம் நிம்மதியைத் தருகிறது. ஸ்ரீதேவராய சுவாமிகள் பகர்ந்த அற்புதமான துதி இதுவாகும்.
‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடம்செயும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக..’
என்று ஆரம்பித்தால் மனம் அடங்கி அவன் அபிஷேகத்தைக் காணத் தொடங்கிவிடுகிறது.
‘எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே.’
என்ற வரிகளின் உருக்கம் சொல்ல முடியாது.
‘குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்ற
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ! போற்றி’
***

ஆழ்வார்களின் பெருமை

 ஆழ்வார்களின் பெருமை அளவிடற்கரியது. ஆழ்வார்கள் என்ற சொல்லின் பொருள் யாது? என்பதை திருமழிசை கோயில் கந்தாடை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி விளக்குகிறார் தமது பழநடை விளக்கம் என்னும் நூலில் :

“நாராயணனுடைய மகிமைகளைக் கரைகண்டு அதிலே முழுகிக் கீழேகீழே ஆழ்ந்து போருகிறார் ஆகையாலே இவர்களுக்கு ஆழ்வார்கள் என்று பெயர்.”
‘தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை” என்று தெருளுற்று இருக்கையே ஆழ்வார்களின் சீர்மை என்று ஸ்ரீஉபதேச ரத்தின மாலை பேசுகிறது. உலக விஷயங்களில், உலகக் கடல்களில் ஆழ்ந்து போகப் போக மயக்கமே மிஞ்சும். ஆனால் பகவத் விஷயத்தில் ஆழ்ந்து போகப் போகத் தெளிவே கூடும். அந்தத் தெளிவே ஒரு வடிவு எடுத்தால் எப்படி இருக்குமோ அந்தச் சீர்மை ஆழ்வார்களுடையது என்றால் அவர்கள்தாம் ‘ஆழ்வார்கள்’.
‘ஆழ்வார்கள் ஏற்றம்’ என்று சொல்லும் பாட்டில் ஸ்ரீஉபதேச ரத்தின மாலையின் வியாக்கியானமான ஸ்ரீபிள்ளை லோகம் ஜீயரின் உரை அந்த ஏற்றமாவது யாது என்று கூறும் பொழுது ஸ்வயத்ந சாத்ய ஜ்ஞாநரான ருஷிகளைப் போலன்றிக்கே அவனுடைய ஆகஸ்மிக க்ருபையாலே ‘மயர்வற மதிநலம் அருளப்பெற்ற மாஹாத்ம்யத்தை உடையராய் இருக்கை என்றும், ப்ராப்ய ஸித்தியைப் பெற்றபோது பெறுகிறோம் என்று ஆறியிருந்து லோக யாத்ரையிலும் கண்வைத்திருக்கை அன்றிக்கே அவனைப் பெற்றல்லது தரியாத பரமபக்தியை உடையராய் இருக்கை என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
என்னைப் போன்று குறைகளும், தோஷங்களுமே நிறைந்திருக்கும் அல்ப ஜீவர்களுக்கு இதைப் பார்த்து அயர்வும், மனத்தொய்வுமே ஏற்படுகிறது. காரணமற்ற அவன் அருளே கதி.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
*
நம்மாழ்வாரின் சொற்கள் எப்படிப் பட்டன?
“நிரம்பின எரி நெளிக்குமாபோலே
நிமிகிற வாய்கரை
மிடைந்து புறப்பட்ட சொற்கள்”
(ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள்)
தமிழ் நடம் பயிலும்.

நம்மாழ்வார் யார்? யார் என்று சொல்வது! அவருடைய திருவாய்மொழியின் தன்மை என்ன? என்ன என்று சொல்வது!
’சொல் என்கேனோ?
முழுவேதச் சுருக்கு என்கேனோ?
எவர்க்கும் நெல் என்கேனோ?
உண்ணும் நீர் என்கேனோ?
மறை நேர் நிறுக்கும் கல் என்கேனோ?
முதிர்ஞானக் கனி என்கேனோ?
புகல வல் என்கேனோ?
குருகூர் எம்பிரான் சொன்ன மாலையையே?’
(கம்பர்)
*
நம்மாழ்வாரின் தமிழ் எத்தகையது? அஃது..
‘உயிருருக்கும்
புக்கு உணர்வுருக்கும்
உடலத்தில் உள்ள செயிர் உருக்கும்
கொண்ட நம் தீங்கு உருக்கும்
திருடித் திருடித் தயிருருக்கும்
நெய்யொடு உண்டான் அடிச் சடகோபன்
சந்தோடு அயிருருக்கும்
பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே.’
(கம்பர்)
*
நம்மாழ்வாராகிய சடகோபன் மொழித்தொகை என்பது அமுதம். யாருக்கு அமுதம்? கம்பர் பட்டியலிடுகிறார்:
‘சித்தர்க்கும்
வேதச்சிரம் தெரிந்தோர்கட்கும்
செய் தவர்க்கும்
சுத்தர்க்கும்
மற்றைத் துறை துறந்தோர்கட்கும்
தொண்டு செய்யும் பத்தர்க்கும்
ஞானப் பகவர்க்கும்’
அவ்வளவுதானா?
அவசரப் படாதே கேள்.
‘ஞானப் பகவர்க்குமேயன்றிப்
பண்டு சென்ற முத்தர்க்கும் இன்னமுதம்
சடகோபன் மொழித் தொகையே.’
*
திருவாய்மொழி பயின்றால் என்ன ஆகிறது? பயிலும் வைணவர்பால் அஃது செய்யும் குணங்கள்?
‘உயிர்த்தாரையில் புக்குறு குறும்பாம்
ஒருமூன்றனையும் செயிர்த்தார்
குருகைவந்தார் திருவாய்மொழி
செப்பலுற்றால்...
மயிர்த்தாரைகள் பொடிக்கும்
கண்கணீர் மல்கும்
மாமறையுள் அயிர்த்தார்
அயிர்த்த பொருள் வெளியாம்’
(கம்பர்)
*
மகிழ்மாறன் செய்யுள் செய்தார் திருவாய்மொழி.
அந்தச் செய்யுளாகிய திருவாய்மொழியைத் தியானிக்கும் தகைமை கொண்டோரான மெய் யோகிகளுக்கோ அவர்களுடைய ஞானமேதான் அவர்களுடைய கண், மனம், செவி எல்லாம். அவ்வாறு ஞானமே கண்ணாக, மனமாக, செவியாக் கொண்டு அந்த மெய்யோகிகள் திருவாய்மொழியைத் தியானிப்பதாகிய தவத்தைச் செய்யும் பொழுது என்ன நடந்தது?
’பண்ணும் தமிழும் தவம் செய்தன
பழநான்மறையும் மண்ணும் விசும்பும்
தவம் செய்தன
மகிழ்மாறன் செய்யுள் எண்ணும் தகைமைக்குரிய
மெய்யோகியர் ஞானமென்னும் கண்ணும்
மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே.’
(கம்பர்)
*
’பழநடை விளக்கம்’ என்பது ஸ்ரீ உ வே திருமழிசை கோயில் கந்தாடை அண்ணா அப்பங்கார் ஸ்வாமி செய்தருளியது. ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளின் காலத்தைத் தொடர்ந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் சூழல், பெருமை ஆகியவைகளைச் சொல்லும் சில நூல்களில் ஒன்று இந்த பழநடை விளக்கம்.

’ஆண்டாள்’ என்றால் என்ன பொருள்? எக்காரணம் பற்றி ‘ஆண்டாள்’ ‘ஆழ்வார்’ என்ற பெயர்கள் அமைந்தன என்பது பற்றியும் இந்த ஸ்வாமியே பட்டு கத்தரித்தால் போல் தெளிவாகச் சொல்கிறார்.
“நாராயணனுடைய மகிமைகளைக் கரைகண்டு அதிலே முழுகிக் கீழேகீழே ஆழ்ந்துபோருகிறார் ஆகையாலே இவர்களுக்கு ஆழ்வார்கள் என்று பெயர்.
”இவர்களிலே இனி சொல்லப் போகிற கோதையும் நாயகனான நாராயணனுடைய கல்யாண குணங்களாகிய அம்ருதக்கடலிலே முழுகிக் கீழேகீழே ஆழ்ந்து போருமவள் ஆகையாலே இவளுக்கு ஆண்டாள் என்று பெயர். ஆழ்வார் என்று ஆண்களைச் சொல்லும் சொல்லு. ஆண்டாள் என்று பெண்ணைச் சொல்லும் சொல்லு...”
ஆழ்வார், ஆழ்ந்தாள் என்று இயல்புறக் காட்டிய பின்னும் இனியும் குழப்பமுண்டோ?
*

ஸாதுக்களின் உலகம்

 ஸாதுக்களின் உலகம் அலாதியானது. சிறுவயதிலேயே தந்தை, பெரியப்பா, தந்தையின் நண்பர்கள் இவர்கள் பேசும் பெரும் விஷயங்களையே வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பதே இன்பமாக இருந்தவனுக்கு சாதுக்களோடு ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு அவர்களுக்குள் நடக்கும் பரஸ்பரம் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டும், பின்னர் அவற்றை மனத்தில் நினைத்த படியும் இருப்பது மிகவும் இன்பமாக இருப்பது என்றால் எவ்வளவு பட்டிக்காடு என்பதுதான் என்னைப் பற்றிய அறிய வேண்டிய செய்தி. ஆனால் நவநாகரிக உலகில் பட்டிக் காட்டிற்கு என்ன வேலை? தெரியவில்லை. ஏதோ நடுவாந்தரத்தில் வைத்து அவன் நடத்தும் நாடகம். அல்லது ஒரு ஸ்ட்ரீட் தமாஷா. ஆனால் நாம் நினைப்பதுதான் நம் தகுதி ஆகிவிடுமா? நம் யோக்கியதை என்ன என்பதை அவளல்லவோ அறிவாள்! என்னைப் பற்றி ஓவராக நான் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் எங்கோ பார்த்தால் பழைய சாக்ஸை எடுத்துச் சுருட்டி ஒளித்து வைத்துக் கொண்டிருப்பேன். அது நாறுகிற நாற்றம் எனக்கு உறைக்காது. வைத்த இடத்தில் நன்றி என்று இருப்பது உத்தமம் என்பது புரிகிறது. ஆயினும் யூட்யூபில் ஸ்ரீராமகிருஷ்ண மட சாதுக்களின் பரஸ்பர பழைய நினைவுகளைக் காணவும் கேட்கவும் செய்யும் போது ஓர் ஏக்கம், கண்ணீர் பூசத்தான் செய்கிறது. யார் யாருக்கு எந்த வழி எங்கு கிளம்பி எங்கே போகிறது என்று யாரே அறிவார் ஆனந்தமயி அவளை அன்றி!

*
மனித நிலை என்ன? என்ன ஆர்ப்பாட்டம்! ஆனால் சிறுமை, நொய்ந்த தன்மை, தெரிந்த சோழிகளை உருட்டிக் கொண்டு பெரும் சத்தம் எழுப்பும் மூளை, தன் நிலை உணராத தடுமாட்டம். ஆனாலும் என்ன நினைப்பு! யம்மாடி...
“This faint and fluid sketch of soul called man
Shall stand out on the background of long Time
A glowing epitome of eternity,
A little point reveal the infinitudes. “
(சாவித்ரி, பக் 100)
ஏதோ அன்னையினுடைய காரணமற்ற தயவு ஒன்றுமே காக்க முடியும். காக்க வேண்டும் அன்னையே !
*
ஆரம்பத்திலேயே சொன்னார். எங்க புத்தி இருந்தது கேட்பதற்கு? அடிபட்டு, நொந்து, சுருண்டப்புறம்தான் தெரியுது. ஏன் சொன்னாருன்னு? அப்ப என்னடான்னா ஆங் அதைப் படிக்கணும், இதைப் படிக்கணும், மண்ணாங்கட்டி..
“What will you achieve by mere reasoning? Be restless for God and learn to love Him. Reason, mere intellectual knowledge, is like a man who can go only as far as the outer court of the house. But bhakti is like a woman who goes into the inner court.”
(The Gospel of Sri Ramakrishna, 1942 )
ஊரிலேன், காணியில்லை, உறவு மற்று ஒருவர் இல்லை; பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி !
ஐயோ பாவம் என்று நீயாக இரங்குவது ஒன்றுதான் கதி ஐயா! இரங்கு கண்டாய்.
*
’பாண்டித்ய கீ ஆச்சே? ப்3யாகுலொ ஹொயே தா3க்கொலே தாம்கே பாவோயா யாயொ. நாநா பி3ஷொயொ ஜானொபா3ரொ தொ3ரொகாரொ நாய்.’
‘பாண்டித்யத்தால் என்ன பயன்? வியாகுலம் உற்று அவனைப் பரிந்தழைப்பதால் அன்றோ அடையமுடியும். நாநாவிஷயங்களைப் பற்றிய ஞானம் உதவாது.’
(ஸ்ரீஸ்ரீராமகிருஷ்ண கதாம்ருதம்)
வெறிதே கழிந்தன நாட்கள் விழலுக்கிறைத்த நீராய். வறியனாய் வந்தேன் வரதா! நீ அளித்தால் வாழ்வு !
*
’உலகத்தில் ஓரிருவர் சமாதிநிலையில் இருந்துகொண்டு தங்கள் ‘அஹம்’ நீங்கப் பெறக் கூடும். ஆனால் பொதுவாகப் பார்த்தால் இந்த ‘அஹம்’ என்பது ஏதோ போய்விடக் கூடியது அன்று. ஆயிரந்தான் விசாரம் செய்தாலும் அப்படியும் பார்த்தால் இந்த ‘அஹம்’ மீண்டும் நிலைபெற்றுவிடும். அஸ்வத்தமரத்தை இன்று வெட்டினால் மறுநாள் காலையில் துளிர் விட்டுவிடும். இந்த ‘நான்’ என்பது போகமாட்டேன் என்றால் இந்த ’சாலா (ராஸ்கல்)’ ’தாச நான்’ ஆக இருந்துவிட்டுப் போகட்டும். ‘ஹே ஈஸ்வரா! நீர் பிரபு. நான் தாசன்’. இந்த பா4வத்துடன் வாழுங்கள். ‘நான் தாசன்’ ‘நான் பக்தன்’ இந்த உருவத்தில் ‘நான்’ என்பதில் தோஷம் இல்லை. தித்திப்புப் பண்டம் வயிற்றில் தொந்தரவு ஏற்படுத்தும். ஆனால் கற்கண்டு தித்திப்புப் பண்டத்தில் ஒன்றாகக் கருதப் படுவதில்லை அன்றோ !’
(ஸ்ரீஸ்ரீராமகிருஷ்ண கதாம்ருதம்)
கூடியமட்டும் வங்காள மூலத்தை ஒட்டித் தமிழில் சொல்லிப் பார்த்தால் அதில் ஒரு தனி ரஸம் தென்படுகிறது.
*

பக்தி யோகம் என்றால் என்ன?

 நாம் ‘பக்தி யோகம்’ என்றால் ஒரு கருத்தை மனத்தில் கொண்டிருக்கிறோம். விக்ரஹ ஆராதனை என்றால் ஒரு கருத்தை மனத்தில் வைத்திருக்கிறோம். இந்தக் கருத்துகள் எல்லாம் பெரும்பாலும் போகிற வாக்கில் பலர் பலவிதமாகச் சொல்ல முயற்சிப்பதன் இடையில் பல அபிப்ராயங்களின் சராசரிக் கருத்தாய் ஒரு வடிவில் நம் மனத்தில் படிந்தவை. அவசர அடி உலகில் இஃது இயல்புதான் என்றாலும் நாம் பல கருத்துகளை வாழ்க்கையின் எப்பகுதியிலேனும் மீண்டும் எடுத்து நாம் கொண்ட கருத்து மிகச் சரியானதுதானா என்று சரிபார்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு என்றுமே உண்டு. தெளிவற்ற மேம்போக்கான கருத்துகளே ஏற்படக் கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தத் தெளிவின்மையே அசைக்க முடியாத தீர்மானமான கருத்து என்ற அடம் நம்மிடம் ஏற்படாமல் இருக்க நாம் தொடர்ந்து இந்த வீட்டுப் பாடம் செய்தே தீர வேண்டும். சொல்லப் போனால் இன்றைய சூழலில் நம்மால் இயன்ற தார்மிக வழி இதுவாகும். ஞானத் தெளிவு பெறுவதற்கான உச்சக் கட்ட சாத்தியங்களைச் சூழவும் வைத்துக் கொண்டு நாம் சாக்கு போக்கு சொல்ல முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் கருத்துத் தெளிவின்மை என்பதாகும். இவ்வாறு எனக்குத் தோன்றுவதற்குக் காரணம் கபிலர் தம் தாயான தேவஹூதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய தாய் எத்தனையோ ஆத்மிக விஷங்களைத் தம் மகனிடமிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறார். தம் தாய்க்கு கபிலர் அளிக்கும் விளக்கமாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருவது இந்தப் பகுதி:

”பிறர் உடலில் உறையும் என்னைப் பகைப்பவனாய், தன்னையே போற்றிக் கொள்பவனாய், பேதபாவனை உள்ளவனாய் உள்ளவனுடைய மனது ஒரு போதும் சாந்தியை அடையாது.
“.. பலவகையான திரவியங்களைக் கொண்டு பல கிரியைகளின் மூலம் விக்கிரகத்தில் என்னை அர்ச்சித்த போதிலும் ஜீவ சமுதாயத்தை அவமதிப்பவர்களாயின் அவர்கள் பூஜையால் நான் சந்தோஷமடையமாட்டேன்.
“எல்லாப் பிராணிகளிடத்தும் உறையும் என்னைத் தனது உள்ளத்தில் எதுவரை கண்டுகொள்ளவில்லையோ அதுவரை (அப்படிக் காண்பதற்குச் சாதனமாக) விக்கிரங்கள் முதலியவற்றில் ஈசுவரனாகிய என்னைத் தனது கடமையைச் செய்துகொண்டு ஒருவன் பூஜிக்க வேண்டும்.”
த்விஷத: பரகாயே மாம்
மாநிநோ பிந்ந தர்சின: |
பூதேஷு பத்தவைரஸ்ய
ந மந: சாந்திம் ருச்சதி ||
அஹம் உச்சாவசைர் த்ரவ்யை:
க்ரியயோத்பந்நயாநகே |
நைவ துஷ்யேSர்ச்சிதோSர்ச்சாயாம்
பூதக்ராம அவமாநிந: ||
அர்ச்சாதாவர்ச்சயேத் தாவத்
ஈச்வரம் மாம் ஸ்வகர்ம க்ருத் |
யாவந்ந வேத ஸ்வஹ்ருதி
ஸர்வபூதேஷு அவஸ்திதம் ||
(ஸ்ரீமத் பாகவத ஸாரம் வால்யூம் 1, ஸ்ரீஅண்ணா, ஸ்ரீராமகிருஷ்ண மடம், 3.29.23 - 25 )
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

ஷண்முக வழிபாடும் வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரமும்

 தெய்வ வழிபாடுகள் மிகவும் புராதனமானவை. வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரத்தில் குஹன், ஷண்முகன், கார்த்திகேயன் வழிபாடும், குஹாலயம் பற்றிய குறிப்பும் வருகிறது. புஷ்பங்கள், அப்பம், தக்ஷிணை முதலியன எடுத்துக் கொண்டு போய், பாலனையும் குஹாலயத்திற்கு அழைத்துச் சென்று நடத்தும் வழிபாடு, அர்ச்சனை, மந்திர உச்சாடனம் பற்றிப் பேசுகிறது வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரம் (ப்ரச்னம் 3 காண்டம் 22). அதே வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரம் ப்ரச்னம் 4, காண்டம் 10 ல் மிக விரிவாக விஷ்ணு பூஜையைப் பற்றிய விவரிப்பும் வருகிறது, விஷ்ணு அர்ச்சனம் என்றே அப்பகுதி தொடங்குகிறது. வைகானஸ ஸூத்ரங்கள் பற்றி போதாயனரும் குறிப்பிடுகிறார் என்பதைக் கணக்கில் கொண்டு பார்த்தால் வைகானஸரின் காலம் பொது யுகத்தின் முன் 600க்கு முந்தையதா? அல்லது காலண்டு 300 பொது யு பின் என்று கீழ் எல்லை வகுப்பதா? கால ஆய்வுகள் ஒரு புறம் இருக்க ஸ்கந்தன், ஷண்முகன், குஹன் ஆலயம் பற்றியும், அங்கு சென்று ஒரு தந்தை தன் பாலனுக்காகச் செய்யும் பூஜைகளும், அதே நேரத்தில் விஷ்ணு பூஜை என்னும் விரிவான பகுதியும் ஸநாதநமான தர்மத்தின் ஆணிவேர்க் கருத்தான ‘ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ என்பதையன்றோ காலம் காலமாக நமக்கு உணர்த்துகிறது.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
பி.கு. - வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரங்களின் சம்ஸ்க்ருத மூலப் பகுதி இங்கு அதைத் தருகிறேன். அதைப் பதிப்பித்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டபிள்யூ காலண்டு கொடுக்கும் அடிக்குறிப்பையும் சேர்த்து - ப்ரச்நம் 3 காண்டம் 22
”ததாத்யத ப்ரவாஸாகமநம் புஷ்பாபூப தக்ஷிணாதி ஸம்பாராந் குமாரம் ச க்ருஹீத்வா கநிக்ரதாதிநா ஆலயம் குஹஸ்ய கச்சேத் ப்ரதக்ஷிணம் அர்ச்சனம் ப்ரணாமா குஹஸ்ய தச்சிஷ்டேந புஷ்பாதிநா குஹஸ்ய சேஷம் இதி தந்நாமோஹித்வா பாலம் அலங்க்ருத்ய சாந்திம் வாசயித்வா நிர்வர்தயேத் ப்ரோக்ஷ்யாகதம் ஸோமஸ்ய த்வேத்யங்கமாரோப்யாயுஷே வர்சஸ இதி..”
புஷ்பாதிநா.. பாலம் அலங்க்ருத்ய - என்னும் பகுதிக்குக் கீழ்க்குறிப்பு எழுதும் ஆசிரியர் கீழ்வரும் பகுதியைத் தருகிறார். - புஷ்பம் ததாமி வரதஸ்ய ஷண்முகாத். (வரதன் என்பது பொதுவாக பாலன் என்பதற்குத் தரும் கற்பனைப் பெயர்)
ப்ரச்நம் 4 காண்டம் 10 - அதாக்நௌ நித்யஹோமாந்தே விஷ்ணோர்நித்யார்சா ஸர்வதேவாஅர்ச்சநா பவதி
*
பொதுவாகவே ஹிந்துமதத்தின் சாத்திரங்களில் வரும் சொற்கள், அவற்றின் கருத்தாழங்கள், பொருள் விரிவுப் புலங்கள் எல்லாம் மிகவும் கவனம் கொண்டு நுண்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியவை. ஏதோ சராசரியாக ஒரு பொருளை ஒரு வார்த்தைக்கு நாமாகக் கொள்வது என்பது நம்மை என்றுமே தெளிவின்மையில் வைத்துவிடும். ஏனெனில் ஏதேதோ பழங்காலங்களில் தன் சமுதாயத்தில் உண்டான கருத்துகளையெல்லாம் ஒன்றையும் ஒதுக்காமல் ஹிந்து சமுதாயம் சொற்களிலும், நூல்களிலும் செறிவாகச் சேமித்து வைத்துக் கொண்டு வந்துள்ளது என்பதையே ஒரு சிறு நூலான வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரம் காட்டுகிறது. வேதம் கற்கும் மாணவர்களில் எத்தனை வகை, இல்லறத்தாரில் எத்தனை வகை, அதேபோல் யோகிகளிலும் எத்தனை வகை! ஸாரங்க யோகிகள், ஏகார்ஷ்ய யோகிகள், விஸரக யோகிகள். இதில் ஏகார்ஷ்ய யோகிகள் ஐந்துவகை. தூரகர், அதூரகர், ப்ரூமத்யர், அஸம்பக்தர்கள், ஸம்பக்தர்கள் என்று ஐந்து. இதில் தூரகர் என்னும் யோகிகள் பிங்கல நாடியினால் ஆதித்ய மண்டலம் புக்கு அவ்வழிக்கிரமத்தில் ஸ்ரீவைகுண்ட ஸாயுஜ்யம் அடைவோர். அதூரகர் என்போர் க்ஷேத்ரஜ்ஞனுக்கும் பரமாத்மனுக்கும் உள்ள யோகத்தை க்ஷேத்ரஜ்ஞன் மூலமாக அடைந்து, அனைத்து பொருட்களின் நாசத்தை நன்கு தியானத்தில் கொண்டு, ‘ஆகாசத்தைப் போன்று நான் வெறும் ஸத் மாத்ரமே’ என்று ஒன்றுபவர்கள். ‘யே அதூரகாஸ் தேஷாமயம் தர்ம: க்ஷேத்ரஜ்ஞ பரமாத்மநயோர் யோகம் க்ஷேத்ரஜ்ஞ த்வாரேண காரயித்வா தத்ரைவ ஸமஸ்த விநாசம் த்யாத்வா ஆகாசவத் ஸத்தாமாத்ர: அஹம் இதி த்யாயந்தி’ (8. 11). ஆன்மிக உலகின் பெரும் ஆழ ஸமுத்ரங்களாய் இருப்பவை நம் சாத்திரங்கள்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***