Tuesday, November 26, 2024

நிலைப்பாடு 07

பக்தி மதக்காரர்கள் உண்மையில் பக்தியின் மகத்துவத்தையும், கடவுளுக்கு முன்னர் அனைவரும் சமம் என்பதையும் சொல்ல வேண்டும். ஆனால் பிரம்ம சூத்ர ரீதியாகப் பக்தி என்றாலே அவரவர் வர்ணதர்மம் சொல்லும் கடமைகளைத் தவறாமால் நிறைவேற்றிப் பகவானுக்குப் பூஜை செய்வதுதான் பக்தி என்று அர்த்தம் என்று ஆக்கிக்கொண்டார்கள். ஆனால் பகவான், பக்தன், ஜீவன், ஜகத், சாத்திரம், உலக வியவகாரங்கள், உலகம் எல்லாமே மித்யை, வெறும் தோற்றம், கயிற்றினில் தோன்றும் பொய்ம்மை அரவு என்று சொல்லும் ஸ்ரீசங்கரர் ஏன் வர்ணதர்மத்தை விடாமல் சேர்த்துக் கொள்கிறார்? பிரம்மசூத்ரத்தின் அபசூத்ராதிகரணத்தில் அவர் எழுதுகின்ற உரை என்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம் அவருடைய கொள்கையின்படியே பார்த்தாலும்? ‘ஜகத்தே மித்யை, சாத்திரமும் அந்த மித்யையில் அடங்கியதே என்கிறேன்; என்னிடம் வந்து யாருக்குத் தகுதி வேதாந்தம் படிக்க என்று கேட்கிறாயே; போ எல்லாம் மித்யை. பிரம்மம் ஒன்றே சத்யம்’ என்று சொல்வார் என்று எதிர்பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை. வேதம் கற்க அதிகாரம் இல்லை, யக்ஞம் செய்ய அதிகாரம் இல்லை என்றெல்லாம் காரணம் சொல்கிறார் ஸ்ரீசங்கரர் மற்ற சித்தாந்தக்காரர்களைப் போலவே. 

யக்ஞங்களால்தான் மோக்ஷத்திற்கு எந்தப் பலனுமில்லை, கர்மங்களால் ஒரு நாளும் முக்தி உண்டாகாது என்று கர்மங்களைக் கண்டித்தவர்தானே ஆதிசங்கரர்? பின் அவர் ஏன் வர்ணதர்மம் என்று வரும்போது வேதம் படிக்கத் தகுதி, யக்ஞம் செய்யத் தகுதி என்றெல்லாம் பேசுகிறார்? ஜகத்தே மித்யை, சாத்திரமும் அந்த மித்யையில் அடங்கியதே என்று சொன்னவருக்கு இங்கு ஏன் பேச்சு மாறுகிறது? சரி இவரைக் கேள்வி கேட்கும் ஸ்ரீராமானுஜர் தாம் எழுதும் போது அதே பிரம்மசூத்ரங்களுக்கான உரையில் பிரபத்திதான் சிறந்தது என்றும், அந்தப் பிரபத்தி நெறி நம்மாழ்வார் திருவாய்மொழியில் காட்டிய அனைவருக்கும் பொதுவான நெறி என்றும், பிரபன்னர்களின் சமுதாயத்தில் சாதி பார்த்தல் கூடாது என்றும், வெளிப்படையாக எழுதி வைக்கலாமே? இல்லை அப்படி வேதாந்த சூத்ரங்களின் உரையில் எழுத முடியாத கருத்தைச் சொல்லத்தான் கத்யத்ரயம் எழுதினார் என்று ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை தம்முடைய கத்யத்ரய உரையில் எழுதுவதைக் கொண்டால் பிரபத்திக்கு என்று உரிய சுலோகமாகிய பகவத் கீதை 18ஆம் அத்யாயம் ‘ஸர்வதர்மான் பரித்யஜ்ய’ என்னும் சுலோகத்தின் உரைக்கான தமது உரையில் எழுதலாமே.? அதற்கும் தடை இருந்த காரணத்தால்தான் திருவாய்மொழிக்கான உரைமரபைத் தோற்றுவித்தார் என்று சொன்னால் மணிப்பிரவாள நூல்களில் நஞ்சீயர் தொடக்கம், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீமணவாளமாமுனிகள், பிள்ளைலோகம் ஜீயர் ஆகியோர் எழுதியதை அப்படியே யாரும் ஏற்றுக் கொள்வதாகக் காணோமே. மீண்டும் வர்ணதர்மத்திற்கு முரணாகாத வகையில், அதுவும் விதிவிலக்குகளாக நம்மாழ்வார் போன்ற சிறப்பான ஞானிகள் விஷயத்தில் மட்டும் பொருத்திப் பொருள் காண வேண்டும் என்று வியாக்கியானிக்கப்படுகிறதே!

ஸ்ரீராமானுஜர் தம் வடமொழி நூல்களில் என்ன எழுதினாரோ அதற்குப் பொருந்திய வகையில்தான் மணிப்பிரவாள நூல்களில் எழுதப்பட்ட கருத்துகளுக்கும் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்று என்று இல்லை. பாரதியார் காலத்திலும் இப்படித்தான் நிலைமை போலும்! பாரதியார் எழுதுகிறார்: “விஷ்ணு பக்தியுடையோர் எந்தக் குலத்தோர் ஆயினும் எல்லாவகையிலும் ஸமானமாகப் போற்றுவதற்குரியர் என்பது ராமானுஜாசார்யருடைய பரம சித்தாந்தம்’ என்பதை நன்குணர்ந்த
தற்காலத்து வைஷ்ணவர்கள் பிராமண சூத்ர பேதங்களை மறற வகுப்பினரைக் காட்டிலும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை தென்கலைச் சண்டைகளைக்கூட விடாமல் வீண்சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்றார்கள்.” (வாசகஞானம்). இன்னும் சொல்லப்போனால் பாரதியார் சொல்வது போல் ராமானுஜாசாரியாரின் பரம சித்தாந்தம் இதுதானா என்பதிலேயே முரண்படுகிறார்களோ என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. 

ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு சாதாரண இந்துவாக இந்தக் கருத்துகளை எதிர்கொள்ளும் எனக்கு எந்தக் கஷ்டமும் இருப்பதில்லை. நன்றாக இருக்கிறதா? நல்லது. பொருந்தவில்லையா? சரியில்லாத கருத்துகளை, தவறான கருத்துகளை விமரிசனம் செய்வதோ, ஒதுக்கிவிட்டுப் போவதோ செய்ய முடிகிறது. ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர் போன்றவர்கள் என் சிறுவயது முதலே என் ஆர்வத்தை ஈர்த்தவர்கள். அவர்கள் விஷயமாக இருந்தாலும் கூட ஒவ்வாத கருத்துகளை விமரிசனம் செய்ய முடிகிறது. இதைத்தான் இந்துமதத்தின் சிறப்பாக நான் கருதுவது. இந்தியாவில் விவேகானந்த சங்கங்கள் நடத்துவதற்கான குறிப்புகள் தருமிடத்தே சகோதரி நிவேதிதை அவர்கள் எழுதுகிறார்: “There is a danger of turning the Swami's books into a new bondage, by treating every word of the text as sacred, and reading and re-reading constantly, till the brain is dazed and the ears are deafened and we lose all chance of understanding,” 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, November 25, 2024

நிலைப்பாடு 06

ஸ்ரீராமானுஜர் அத்வைத சித்தாந்தத்தை நோக்கி அதன் குறைகள் என்ற கணக்கில்தான் சொல்கிறார். என்ன சொல்கிறார்? ‘அத்வைதம் சொல்லும் ஞானத்திற்கு வர்ணதர்மம் கட்டாயமில்லை. இன்னாருக்குத்தான் அத்வைதம் சொல்லும் மோக்ஷ ஞானம் ஏற்படும் என்று வர்ணதர்ம ரீதியான நியதி ஒன்றும் இல்லை. இன்னாருக்குத்தான் உபதேசிக்க வேண்டும் என்ற கட்டாயமும் பிரம்ம ஞானம் அடைந்தவர்களை (அத்வைத சித்தாந்தத்தின்படி பார்த்தால்) கட்டுப்படுத்தாது. ஏனெனில் அவர்கள் தர்ம சாத்திரம் என்பதையெல்லாம் கடந்து போய்விட்டவர்கள் (அத்வைதத்தின் கருத்துப்படி)’. 

ஸ்ரீராமானுஜர் இப்படிச் சொல்கிறார் என்றால் அந்தக் காலத்தில் இருந்தவர்களுக்கு அத்வைதத்தைப் பற்றி இப்படி ஒரு பார்வை இருந்திருக்கிறது என்றுதானே பொருள்?. இதே பார்வை அத்வைத ஆசிரியர்களுக்கும் இருந்திருக்கலாமே? ஏன் யாரும் இந்த அம்சத்தைக் குறித்து எழுதவில்லை. பிரம்ம சூத்திரத்தின் எந்த அதிகரணத்தில் (அதாவது அபசூத்ராதிகரணத்தில்) ஸ்ரீராமானுஜர் இந்த மாதிரி தம் பார்வைகளைப் பதிந்து வைத்திருக்கிறாரோ, அதே அதிகரணத்திற்கு உரை எழுதும் அத்வைத ஆசிரியர்கள் இந்த அம்சத்தைக் குறித்து எதுவுமே எழுதாமல், வேதாந்த சாத்திரம் கற்றால்தான் பிரம்ம ஞானம் ஏற்படும், வேதாந்தம் கற்க இன்னாருக்குத்தான் தகுதி என்று எழுதிவிட்டுக் கடந்து போய்விடுகிறார்கள். 

இன்று நாம், அனைவருக்கும் அத்வைத ஞானம் உரியது, அதற்கு வர்ணதர்மம் தடையில்லை என்று சொன்னால் உடனே கூக்குரல் இடுவார்கள் - ‘இந்த மாடர்ன் இந்துக்களே இப்படித்தான். யாராவது நவீன சந்நியாசிகள், விவேகானந்தரோ, சித்பவானந்தரோ, அபேதானந்தரோ அல்லது யாரோ நவீனர்கள் ஆங்கிலத்தில் எழுதியதைப் படித்துவிட்டு இப்படிப் புரட்சி பண்ணுகிறேன் பேர்வழி என்று சொல்வார்கள்!’ என்று சாடுவார்கள். ஆனால் இங்குச் சொல்வதோ அந்தக் காலத்து ஸ்ரீராமானுஜர். என்ன வித்யாசம்? அவர் நேர்முகமாகச் சொல்லாமல் அத்வைதத்தின் குறைபாடுகள் என்ற கணக்கில் இவ்விதம் சொல்கிறார். சொன்னால் என்ன? அத்வைதத்தைக் குறித்து இத்தகைய பார்வை அன்றே அத்வைதத்தைக் கண்டிக்க நினைத்தவர்கள் மொழிதலில் வந்திருக்கிறது என்றுதானே பொருள்? இதோடு நிற்கவில்லை ஸ்ரீராமானுஜர். சமயத்தில், ஆதரவாளர்களை விட எதிர்த்துக் கண்டிப்பவர்கள் கூடுதல் உண்மையை வெளிக்கொணர்ந்து விடுவார்கள். 

மேலும் ஸ்ரீராமானுஜர் சொல்வது என்னவென்றால் ’அத்வைதம் சொல்லும் ஞானம் என்பது வேதாந்தம் என்ற சாத்திரப் படிப்பின் மூலமாகத்தான் ஏற்படும் என்று இல்லை. உலகின் நிலையாமையும், நிலைத்த மாறாத ஞானமயமான பரவஸ்து ஒன்று இருக்கிறது என்னும் உணர்வும் சாதாரணமான பிரத்யக்ஷம், அனுமானம் என்னும் அறிவைக்கொண்டே ஒருவர் வாழ்க்கையில் போதிய பக்குவம் அடைந்து தியானம் என்பதால் மனமும் அடங்கி இருக்கும் போது சாதாரண அறிவுக்கே எட்டக் கூடிய ஞானம்தான் அத்வைதம் சொல்லும் ஞானம் என்கிறார். இதை ஸ்ரீராமானுஜர் குறையாகச் சொன்னாலும் என் காதிற்குத் தேன் வந்து பாய்ந்தது போல் இருக்கிறது. எங்கே விவேகானந்தர் 11 ஆம் நூற்றண்டிற்குப் போனார் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. ஆம். அறிவு ஆராய்ச்சிக்கு உகந்த மதம் ஒன்று உண்டென்றால் அஃது அத்வைதமே என்று விவேகானந்தர் சொன்னதற்கும், ஸ்ரீராமானுஜர் அன்று சொன்னதற்கும் அக்ஷரம் பிசகாமல் ஒத்துப் போகிறதே என்று மகிழ்ந்து போகிறேன் நான். நீ மகிழ்வதற்காக அவர் சொல்லவில்லை என்று என்னைக் கோபித்துப் பயனில்லை. சில சமயம், ஆதரவாளர்கள் குழப்புவதை விட எதிராளிகள் தெளிவாகச் சிறப்புகளை எடுத்துக் காட்டிவிடுவார்கள், சிறப்பு காட்ட வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே. 

இப்படித்தான் பாருங்கள் சைவ சமயத்தில் வர்ணதர்மம், சாதி என்னும் பிரிவினைப் பார்வை இல்லை என்று சிலர் சொல்கிறார்களே, ஆனால் சிவஞான போதம் மாபாடியம் எடுத்துப் படித்தால் வர்ணதர்மம் மிகக் கட்டாயமாக ஆதரிக்கப் பட்டிருக்கிறதே என்ற சந்தேகம் எனக்குப் பலநாள் இருந்தது. ஒரு சமயம் ஸ்ரீஆளவந்தார் எழுதிய ஆகம ப்ராமாண்யம் என்ற நூலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஸ்ரீஆளவந்தார் வைதிக நெறிக்கு ஏற்றது பாஞ்சராத்திர ஆகமம் முதலிய வைணவ ஆகமமே என்று நிறுவ நினைத்தவர், சைவ ஆகமம் அவ்வாறு வைதிக நெறிக்குப் புறம்பானது என்று குறையாகக் கூற நினைத்தவர், அதற்கு காரணமாகக் கூறுவது ‘சைவம் வர்ணதர்மத்தை ஏற்காமல் புறக்கணிக்கிறது’ என்று தம் காலத்தில் இருந்த நிலைமையையோ அல்லது அப்படி வர்ணதர்மம் ஏற்காத சைவ சமயப் பிரிவு எதையோ குறித்து எழுதுகிறார். அவர் கணக்கில் அது குற்றச்சாட்டு. ஆனால் எனக்கு ஒரு குழப்பம் தெளிவாகிவிட்டது. அவர் காலத்தில் இருந்த சைவமோ அல்லது சைவ சமயப் பிரிவு ஏதோ ஒன்றோ வர்ணதர்மம் ஏற்காமல் புறக்கணித்தது என்ற விஷயம், சைவத்திற்கு எதிர்ப்பு நிலை எடுத்தோரால் தம் நூலில் பதியப் படுகிறது. அப்பொழுது அத்தகைய கருத்திற்கு ஸ்ரீராமானுஜருக்கு முந்தையரான ஸ்ரீஆளவந்தார் நூலிலேயே ஒரு சான்று கிடைக்கிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! அதாவது எதற்கு இவ்வளவும் சொல்கிறேன் என்றால் தேடிப்பார்த்தால் சாதாரண இந்துவாய் இருப்பதற்குப் பலமான ஆதாரங்கள் பழையவர்களின் நூல்களிலேயே கிடைக்கின்றன. எனவே இன்று சொல்வார் எதையாவது சொல்லிக்கொண்டு போகட்டும். நம்ம கட்சி ஸ்ட்ராங் என்னும் திருப்திதான் என்று வைத்துக்கொள்ளுங்கள். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, November 24, 2024

நிலைப்பாடு 05

பண்டைய ஆசாரியர்கள் எல்லாம் சமுதாய சீர்திருத்தம் என்பதைக் கண்டனம், தகர்த்தல், விமரிசனம் என்ற போக்கைக் கையாளாமல் ஆதரவு போன்ற அணுகுமுறையில், ‘நல்லது. இதைவிட அது நல்லது’ என்ற பாணியில் நயமுற உபதேசம் செய்து வளர்ச்சி முறையைக் கையாண்டார்கள் என்பது சுவாமி விவேகாநந்தரின் கருத்து என்று பார்த்தோம். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல ஞானிகளும் அத்தகைய அணுகுமுறையைக் கையாண்டு வந்து என்ன பலன் விளைந்தது? 

விவேகாநந்தர் குறிப்பாக எடுத்துக் காட்டும் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீசங்கரர் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். ஸ்ரீராமானுஜரோ, ஸ்ரீசங்கரரோ, ஸ்ரீமத்வரோ அல்லது எந்த சித்தாந்த ஆசிரியரோ, மற்ற எந்த தத்துவ சித்தாந்த முடிவுகளில் மாறுபட்டாலும் ஒரு விஷயத்தில் ஒருமித்த குரலாகத்தான் அவர்களுடைய நூல்களில் எழுதிவைத்துள்ளனர். அது எந்த விஷயம்? வர்ணதர்மம் என்னும் விஷயத்தில் ஒரே மாதிரிதான் அவர்களுடைய எழுத்து பேசுகிறது. ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் அவர் வழிவந்த, அவர் காலத்தை அடுத்து அதை ஒட்டிய அண்மைக் காலத்தில் வந்த ஆசாரியர்களான நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, அவரது மகனார் நாயனாராச்சான்பிள்ளை, வடக்குத்திருவீதிப்பிள்ளை, அவருடைய குமாரர்களான பிள்ளை லோகாசாரியார், அழகியமணவாளப்பெருமாள் நாயனார், ஸ்ரீமணவாள மாமுனிகள், இவர் காலத்திற்குப் பின்னர் வந்த ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் என்னும் இவர்களின் மணிப்பிரவாள நூல்களில் ஸ்ரீராமானுஜரைப் பற்றிய பதிவுகள் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றன. நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ்வேதம் என்றும், அதன் தாத்பர்யமான கருத்து பிரபத்தி நெறி என்றும், அந்தப் பிரபத்தி நெறிக்கு ஆசையுடைய அனைவரும் உரியவர் என்றும், அந்தப் பிரபத்தி நெறியைக் கைக்கொண்ட பிரபன்னர்கள் விஷயத்தில் வர்ணதர்மம் செல்லாது, பிரபன்னர்கள் என்னும் பாகவதர்களிடத்தில் என்ன ஜாதி என்று யோசித்தல் கூட பெரும் தீமை என்றும், இந்தக் கருத்துகளே ஸ்ரீராமானுஜரால் தம் வாழ்வில் கைக்கொள்ளப் பட்ட கருத்துகளும் வழிமுறையும் ஆகும் என்றும் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த ஆசாரியர்களின் மணிப்பிரவாள நூல்களில் தெரிவிக்கப் படுகின்றன. ஆனால் ஸ்ரீராமானுஜருக்குப் பின்வந்த ஆசாரியர்களில் ஒருவரான ஸ்ரீவேதாந்த தேசிகர் பிரபன்னர்களும் வர்ணதர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களே, சாத்திரம் ஒன்று சொல்ல அதற்கு மாறாக ஒரு சம்பிரதாயம் என்று சொல்ல வழியில்லை என்று தமது ரஹஸ்யத்ரயஸாரம் முதலிய நூல்களில் சொல்கிறார். ஸ்ரீராமானுஜர் தமது நூல்களில் வெளிப்பட எழுதியுள்ள கருத்துகளுக்கு முரணாகாத வழியில்தான் மணிப்பிரவாள நூல்களின் கருத்துகளைக் கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் பொதுவான போக்காக இருக்கிறது. 

ஸ்ரீராமானுஜரின் நூல்களை எடுத்துக் கொண்டால் வர்ணதர்மத்தை முற்றிலும் உடன்பட்டு எழுதுகின்ற முறைதான் காணப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் அத்வைதத்தை எதிர்த்துக் கண்டித்து எழுதும் பகுதியில் இன்னும் ஆணித்தரமாகவே வர்ணதர்மத்தை வலியுறுத்திப் பேசுகிறார் ஸ்ரீராமானுஜர். அதாவது என்ன இடம் என்றால், முக்தி என்னும் மோக்ஷத்திற்கு ஞானமே வழி. ஞானத்தால்தான் மோக்ஷம் ஏற்படும். அத்வைதம் சொல்கின்ற ஞானம் எத்தகையது? எத்தகையது என்றால் என்ன சொல்ல வருகிறார்? இதைப் புரிந்துகொள்ள ஓர் அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பெறுகின்ற ஞானம் அல்லது அறிவு என்பது இரண்டுவிதமாக இருக்கக் கூடும். ஒரு பொருளைப் பார்க்கிறோம். உடனே அது என்ன பொருள் என்று அறிவு ஏற்படுகிறது. யாரும் நமக்குச் சொல்ல வேண்டியதில்லை. இது பொருள் சார்ந்த அறிவு. இதற்குப் பெயர் வஸ்து தந்த்ரம் (வஸ்து - பொருள்; தந்த்ரம் - சார்ந்த). இன்னொரு வகை அறிவு ஏற்படலாம். ஒரு விஷயத்தைப் பற்றி யாரோ ஒருவரிடம் சென்று அவரிடம்தான் தெரிந்துகொள்ள முடியும். அவருடைய சௌகரியம், அவருடைய விருப்பம், நமக்குத் தகுதி இருக்கிறதா என்று அவருடைய தீர்மானம் என்று பல நிபந்தனைகளின் பேரில் அவர் நமக்கு அந்த விஷயத்தைச் சொல்லி நாம் தெரிந்து கொண்டால் அஃது ஆள் சார்ந்த அறிவு என்ற வகைபடும். இதற்குப் பெயர் புருஷ தந்த்ரம். (புருஷ - ஆள்; தந்த்ரம் - சார்ந்த). பொருள் சார்ந்த அறிவில் ஒரு பொருளானது நமக்கு நிபந்தனைகள் போடாது. தன்னைக் கண்டதும் தன்னைப் பற்றிய அறிவை நல்கிவிடும். ஆனால் ஆள் சார்ந்த அறிவில் அந்த ஆளின் மனம் குளிர்ந்து ஒப்பிய பிறகுதான் அவரிடமிருந்து அறிவைப் பெற முடியும். 

ஸ்ரீராமானுஜர் அத்வைதத்தைக் குறித்து எழுப்பும் கேள்விக்கு வருவோம். அத்வைதம் சொல்கின்ற மோக்ஷம் தரும் ஞானம் என்பது பரம்பொருளைத் தெரிந்துகொண்டதும் அந்தப் பரம்பொருளின் இயல்பால் தானாக நம்பால் உண்டாகிவிடும் ஞானம். அந்தப் பரம்பொருளோ எப்பொழுதும் இருக்கிறது. ஜீவன், ஜகத் என்னும் வேறுபாடுகள் எல்லாம் மித்யை. அவித்யையால் உண்டான வெறும் தோற்றம். பரம்பொருளைப் பற்றிய ஞானமோ என்றும் மாறாமல், மறையாமல் இருந்துகொண்டிருக்கும் அந்தப் பொருள் சார்ந்து நம்மிடம் உண்டாகும் ஞானம். அதற்கு எந்த நிபந்தனைகளும் தேவை இல்லை. தர்ம சாத்திரங்களைக் கைக்கொண்டு அவரவர் வர்ண ரீதியாகக் கடமைகளை இயற்றி அதன் மூலம் கடவுள் மனத்தைக் குளிரச் செய்து, அதன் பலனாக விளையும் கிருபையால்தான் அந்த ஞானம் ஏற்படும் என்ற நிபந்தனை எதுவும் இல்லாததால் வர்ணதர்மம், தர்ம சாத்திரம், பொதுவாகவே சாத்திரம் என்று எந்தத் தேவையும் அத்வைதம் சொல்லும் மோக்ஷ காரணமான ஞானத்திற்கு இல்லை என்பதால் அத்வைதிகளுக்குத் தர்ம சாத்திரமே தேவையில்லை. அவர்களும் சாத்திரத்திற்குப் புறம்பானவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால் விசிஷ்டாத்வைதிகளாகிய எங்களுக்கோ மோக்ஷத்திற்குக் காரணமான ஞானம் என்பது பரமபுருஷனை ஆராதித்து, அவன் மனத்தைக் குளிரச் செய்து, அவனுடைய கிருபையால் பெறுகின்ற ஞானம் என்பதால், தர்ம சாத்திரம் என்பது அவனுடைய ஆணையாக இருப்பதால், தர்ம சாத்திரம், வர்ணதர்ம அனுஷ்டானம் எல்லாம் முற்றிலும் கட்டாயமாகி விடுகிறது. அதையெல்லாம் அனுஷ்டிப்பதன் மூலம் பரம புருஷனின் மனத்தைக் குளிரச் செய்து அவன் கிருபையால் பெறும் புருஷதந்த்ர ஞானம் எங்கள் சித்தாந்தம் சொல்லும் ஞானம். 

அதாவது ஸ்ரீராமானுஜர் சொல்வதைப் பார்த்தால் அத்வைதம் என்னும் சித்தாந்தம் வர்ணதர்மத்தைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. தன்னியல்பில் அதைக் கடந்தது. தர்ம சாத்திர நிபந்தனைக்கு உட்படாதது என்று அர்த்தமாகிறது. ஆனால் இதை அத்வைத ஆசிரியர்கள் ஏன் சொல்லவில்லை? ஸ்ரீசங்கரரே தமது நூல்களில் ஜகத்தே மித்யை, அவித்யை என்று பேசினாலும் வர்ணதர்மம் என்பதை ஏன் உடன்பட்டே எழுதுகிறார்? சரி. இவரை அப்படிக் கேள்வி கேட்ட ஸ்ரீராமானுஜர் பிரபத்தி என்னும் அனைவருக்குமான பொதுநெறி என்பதை ஏன் தம் நூல்களில் வெளிப்படையாக எழுதவில்லை? சம்பிரதாயமாக அவர் சொல்லி வந்து சேர்ந்து அவருக்குப் பின் வந்த பூர்வாசாரியர்கள் தாம் எழுதிய மணிப்பிரவாள நூல்களில் அதைப் பதிவு செய்தார்கள் என்றால், அந்தக் கருத்தை இதுவரை வந்த காலங்களிலும், ஏன் இன்றும் கூட யாரும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லையே! வெறுமனே ஏட்டில் பதியப்பட்ட விஷயங்கள், ஏதோ சில ஆசாரியர்கள் தம் அளவில் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்திருக்கலாம்; ஆனால் பொதுப்பட பார்த்தால் அதே பழைய வர்ணதர்மமே அனைவருக்கும் பொருந்தியது என்ற நிலை நிலவக் காரணம் என்ன? 

சுவாமி விவேகாநந்தர் சொன்னது போல் இவர்கள் எல்லாம் சமுதாயச் சீர்திருத்தக் கண்டன முறையைக் கையாளாமல், நன்கு செய்தாய் மேலும் நல்லவிதமாகச் செய்வோம் என்ற வளர்ச்சி முறையைக் கையாண்டவர்கள்தாமே? ஒரு மாற்றமும் ஏன் கருத்தளவில் கூட ஒரு எல்லைக்குட்பட்ட வட்டத்தில் கூட ஏற்படவில்லையே! இன்னும் சொல்லப் போனால் மணிப்பிரவாள நூல்களில் சொல்லப்பட்ட கருத்தை உரக்கச் சொல்ல வேண்டியவர்களே கூட வர்ணதர்மத்தைத் தானே உரக்கச் சொல்கிறார்கள்.! ஆனால் விவேகானந்தர் மறுக்கும் முறையான சமுதாய சீர்திருத்தவாதிகளின் கண்டனப் போக்குதான் நம் காலத்தில் தோன்றிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை மறுக்க இயலாதே! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, November 23, 2024

நிலைப்பாடு 04

விமரிசனத்தையும், கண்டனத்தையும் தவிர்த்து ஆக்கபூர்வமாக எழுது, பாஸிடிவா எத்தனையோ இருக்கே அதையெல்லாம் எழுதலாமே என்று சொல்லும் போது அழகாக இருக்கிறது. ஆனால் அதன் பின்னால் பல நுண்ணரசியலான, உள்நோக்கம் புதைந்த போக்குகள் இருக்கின்றன. முதலில் விமரிசனமாக எழுதப்படுவதைத் தவிர்க்க வேண்டித்தான் அவ்விதம் சொல்லப்படுகிறது. பிறகு அவ்விதம் ஆக்கபூர்வமாக எழுதவேண்டி உபதேசம் செய்த மனங்கள் அடுத்த கட்டத்தில் தங்கள் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. 

உதாரணத்திற்கு ஒரு பழம் நூலில் இன்னவிதமான தீய கருத்துகளும், மொழிவுகளும் இடம் பெற்றிருக்கின்றன என்று எடுத்து எழுதும் போது ‘ஏன் இதுதான் கண்ணில் படுகிறதா? பழம் நூல்களில் பல நல்லதும் அல்லாததும் கலந்து இருக்கலாம். இன்றைக்கு எடுத்து எழுதுவோர் அதில் இருக்கும் நல்ல கருத்துகளை எடுத்து எழுதுவதுதானே ஆக்கபூர்வமானது. அதை விடுத்து என்றோ பழைய காலங்களில் எழுதப்பட்டவற்றை ஏன் விமரிசனம் என்ற ரீதியில் இப்பொழுதும் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று அன்று விவேகாநந்தர் கருதியது மட்டுமல்லாமல் இன்றும் பலரும் உபதேசம் செய்வார்கள். அல்லது கால ஓட்டத்தில் பல தேவையற்ற கெட்டதுகள் இடைச்செருகலாய்க் கலந்து வந்திருக்கலாம் என்று சமாதானம் சொல்வார்கள். சரியென்று நீங்கள் நல்ல கருத்தைத் தேடி எடுத்து அதைக் குறித்து எழுதினால் சிறிது காலம் சென்று, முன்னர் உபதேசம் செய்தவர்களே இப்பொழுது வேறு ஒரு ரீதியில் பேசுவார்கள். என்னவென்றால், ‘இதை மட்டும் நல்லது என்று காண்பிக்கிறாயே? இந்தக் கருத்தைச் சொன்னவர்தானே அந்தக் கருத்தையும் (அதாவது தீயது என்று எதைக் கருதுகிறோமோ, மனிதாபிமானத்திற்குப் பகையானது என்று கருதுவதை) அதே அருள்வாய்ந்த பெரியவர்தானே, அவர் முனிவரோ, அவதாரமோ, அவர்தானே தாமே சொல்லியிருக்கிறார். அவர் சொன்னவற்றில் ஒன்றை மட்டும் எடுத்து நல்லது என்று ரசித்துச் சிலாகித்து நீ எழுதுவதற்கும், மற்றதைக் குறித்து தீது என்று காட்டிக் கண்டிப்பதற்கும், விமரிசித்து எழுதுவதற்கும் நாம் யார்? நீ என்ன அவரைவிடப் பெரியவராக ஆகிவிட்டாயா? உனக்கு இன்று புரியாமல் இருக்கலாம். நாளை பின்னொரு காலத்தில் புரியவரலாம். எனவே பழம் நூல்களில் பெரியவர்கள் சொல்லியிருப்பதெல்லாம் நாம் விமரிசனம் செய்ய முடியாது என்று மேட்டிமையோடு பேசுவார்கள். 

எனவே விவேகாநந்தர் சொல்வது போல் பார்த்தால் என்றும் கண்டனம் அற்ற வளர்ச்சிமுறை அணுகுமுறை என்பது சும்மாவேனும் மாற விருப்பமில்லாதார், சமுதாயம் தீய கருத்துகளினின்றும் மாறி உண்மையான மாற்றமும், முன்னேற்றமும் அடைவதை உள்ளூற வெறுப்பவர்களின் சூழ்ச்சிகளுக்கு ஒத்துழைக்கும் பேதைமையாய் ஆகிவிடுவதைத்தான் வரலாறும், அனுபவங்களும் நமக்கு உணர்த்துகின்றன. கண்டித்தால் மட்டும், விமரிசித்தால் மட்டும் உடனே எல்லாம் மாறிவிடுமா என்று கேட்டால் மாறினாலும், மாறாவிட்டாலும் இவை மாற வேண்டியவை, மறைய வேண்டியவை, கைவிடப்பட வேண்டியவை இன்னது, கைக்கொள்ளப் பட வேண்டிய வழி இன்னது என்பதில் விமரிசனம், கண்டனம் என்பது குழப்பமில்லாமல் தெளிவாக இருப்பதால் நிச்சயம் சிறந்த வழி. இந்த விதத்தில் பார்த்தால் காரல் மார்க்ஸ் சொன்ன கருத்து மிகவும் பொருத்தம் உடையது. அதாவது ‘அறிவு என்பது நிலைமையைப் புரிந்துகொள்வதோடு நிற்பது மட்டுமன்று. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. அறிவு மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவாக இருக்க வேண்டும் என்றால் அஃது விமரிசன மயமான, கண்டிக்கத் தவறாத, க்ரிடிஸிஸம் ரீதியிலான அறிவாக இருத்தல் முக்கியம். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, November 21, 2024

நிலைப்பாடு 03

பொதுவாகவே எழுத்து என்பதே விமரிசனமயமாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு விஷயத்தின் அவலத்தையும், சீர்கேட்டையும் உரித்து எழுதுவதுதான் உண்மையில் நல்லது. பிறர் உணர்கிறார்களோ இல்லையோ, நாம் நம் கருத்தைப் பதிவு செய்தோம் என்பது நிம்மதி. பழம் நூல்களைக் குறித்தும், அதன் கருத்துகளைக் குறித்தும் எழுதும் போது ஒரு பாணியைக் கையாண்டேன். அதில் இருக்கும் சாதகமான, பாஸிடிவ் ஆன அம்சங்களைக் குறித்து மட்டும் எழுதுவது; அதில் காணப்படும் ஒவ்வாத கருத்துகளை ஒதுக்கிவிடுவது என்பது நான் பொதுவாகக் கையாளும் முறை. இது சரியான முறை என்று சொல்லமாட்டேன். ஒரு வேளை விவேகாநந்தரைப் படிக்கும் போது அவர் கருத்தைக் கண்டு ஈர்க்கப்பட்டு இவ்வாறு ஒரு போக்கு என்னுள் படிந்தது என்றுதான் நினைக்கிறேன். விவேகாநந்தர் சமுதாய சீர்திருத்தம் குறித்தும், சமுதாய சீர்திருத்தவாதிகள் குறித்தும் சொன்னவற்றோடு நான் முரண்படுகிறேன். எதையும் கண்டிக்காதே, எதையும் சீர்திருத்தாதே என்று அவர் சொல்வது என்ன பயனுடையது? 

“To the reformers I will point out, that I am a greater reformer than any one of them. They want to reform only little bits. I want root-and-branch reform. Where we differ is in the method Theirs is the method of destruction, mine is that of construction, I do not believe in reform ; I believe in growth. I do not dare to put myself in the position of God and dictate to our society, ‘This way thou shouldst move and not that.’ I simply want to be like the squirrel in the building of Rama’s bridge, who was quite content to put on the bridge his little quota of sand-dust. That is my position.” 

சும்மாவாக நான் அணிலாக இருக்க விரும்புகிறேன் என்றேல்லாம் சொல்வது கேட்பதற்கு இனிமையாய், கவிதையாய் இருக்கலாம். ஆனால் காரியத்தில் உதவாது. மேலும் கூறுகிறார், ஸ்ரீராமானுஜர் பற்றியும், ஸ்ரீசங்கரர் பற்றியும். அவர்கள் எல்லாம் எவ்வளவு விசால இதயம் கொண்டவர்களாய் இருந்தனர் என்கிறார். விசால இதயம் என்றால் என்ன? ஸ்ரீராமானுஜரைப் பற்றிக் குறிப்பிடும் இடத்து அவர் சாதி வேறுபாடு கருதாது அனைவரையும் தம் மார்க்கத்தில் அணைத்துக் கொண்டார் என்கிறார். அது எப்படி அவருக்குத் தெரிந்தது? ஸ்ரீராமானுஜருடைய நூல்களில் எங்கேனும் அவர் அங்ஙனம் அனைவரையும் அணைத்து விசால இதயம் வெளிப்படும்படியாக எழுதியுள்ளாரா? அவரைப் பற்றிய சமத்துவ சித்திரமே அவரைப் பற்றிய மணிப்பிரவாள நூல்களில் தெரிய வருவதுதான். அந்த மணிப்பிரவாள நூல்களுக்கு என்ன சான்றுத்தன்மை ஸ்ரீராமானுஜரின் வழிவந்தோர் தருகின்றனர்? விவேகானந்தரின் காலத்தில் இருந்தோர் என்ன சான்றுத்தன்மை தந்தனர்? ஸ்ரீராமானுஜர் தாம் எழுதிய நூல்களில் என்ன வெளிப்படுத்தியிருக்கிறாரோ அந்தக் கருத்துகள்தாம் அவருடையவை. அவர் காலத்திற்குப் பின்னால் வந்தவர்கள் மணிப்பிரவாள நடையில் எழுதியிருக்கும் நூல்களில் இருக்கும் கருத்துகளை ஸ்ரீராமானுஜர் தாமே எழுதிய நூல்களில் நேரடியாக என்ன சொல்லியிருக்கிறாரோ அந்தக் கருத்துகளுக்கு ஏற்றபடிதான் அர்த்தம் செய்ய வேண்டும் என்று வாதிப்பவர்கள்தான் அதிகம் அன்றும் சரி; இன்றும் சரி. 

அப்படியே ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் சமத்துவம் என்பதை மணிப்பிரவாள நூல்களின்படிச் சொன்னாலும் கூட அது பிரபத்தி என்னும் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட பாகவதர்கள் என்ற எல்லைக்குள்தான். பொதுவான மக்களுக்கு என்ன கருத்தைக் கையாண்டார் ஸ்ரீராமானுஜர் என்று விவேகானந்தர் கருதுவது யாது? பொதுவான மக்களுக்குக் கூட வர்ண தர்மம் என்ற பிறப்பில் அடிப்படையான பிரிவினை நெறிகள் கிடையாது என்று மணிப்பிரவாள நூல்கள் எழுதிய வைணவ ஆசிரியர்களும் கூட சொல்லவில்லையே. ஸ்ரீராமானுஜரின் உரைகளாகிய ஸ்ரீபாஷ்யம் முதலானவற்றில் வர்ண தர்மத்தை ஏற்றுதான் எழுதுகிறாரே அன்றி மறுத்து அல்லவே. ஸ்ரீராமானுஜர் விஷயத்திலேயே இப்படி என்றால் ஸ்ரீசங்கரர் விஷயத்தில் கேட்க வேண்டியதில்லையே. சமுதாய சீர்திருத்தவாதிகளை நோக்கி விவேகானந்தர் கேட்கிறார், ஸ்ரீராமானுஜர் என்ன செய்தார்? ஸ்ரீசங்கரர் என்ன செய்தார்? அவர்களுடைய செயல்பாட்டு முறைக்கும், சீர்திருத்தக்காரர்களின் செயல்பாட்டு முறைக்கும் உள்ள வித்யாசம் என்று சொல்லிவிட்டுக் கூறுகிறார்: 

“The difference in this. They had not the fanfaronade of the reformers of to-day ; they had no curses on their lips as modem reformers have ; their lips pronounced only blessings. They never condemned. They said to the people that the race must always grow. They looked back and they said, “O Hindus, what you have done is good, but, my brothers, let us do better.” They did not say. You have been
wicked, now let us be good. ” They said. You have been good, but let us now be better.” That makes a whole world of difference.” 

வளர்ச்சி முறையால் என்ன பலன்? நீங்கள் நன்றாகச் செய்தீர்கள்; இன்னும் நன்றாகச் செய்வோம் என்றதும் எது மாறிவிட்டது? இவர் சீர்திருத்தக்காரர்களின் கண்டன வழி என்று எதை மறுக்கிறாரோ அந்த வழியால்தானே மாற்றங்கள் விளைந்தன. இல்லை இவரே சொல்வது போல் ‘முதலில் மக்களைக் கல்வியில் உயரச் செய்யுங்கள்; அனைவருக்கும் கல்வி கொடுங்கள்’ என்றால் கல்வியின் விளைவு ஏன் எதற்கு என்ற சீர்திருத்தமும், சரியல்லாத நிலையை மாற்றி அமைப்பதும்தானே? 

எதற்குச் சொல்கிறேன் என்றால் இவ்விதம் எல்லாம் சிந்திப்பதும், செயல்படுவதும் சாதாரண ஹிந்துவாய் இருக்கும் போது மறுத்து, விமரிசனம் செய்து எதையும் பொருந்தாது என்றால் விட்டுவிட்டு முன்னேற முடியும். அதுவே ஒரு ஐடியாலஜி என்று கடிவாளம் போட்டுக் கொண்டால் கண்ணில் தெரியும் நிதரிசனம், பொது புத்திக்குப் புரிகின்ற மனித நியாயம் எல்லாவற்றையும் திரித்து மாற்றி தாம் ஏற்றுக் கொண்ட ஐடியாலஜிக்கு விரோதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் போக்கே நிலவும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, November 20, 2024

நிலைப்பாடு 02

இதுவும் முன்னர் எழுதியதுதான். இப்பொழுது பார்க்கும் போது தோன்றுகிறது, ‘பரவாயில்லை; நம்மைக் குறித்து நாமே தெளிவாகத்தான், அதாவது தனக்குள்ள போதாமைகள், இயலாமைகள் குறித்துத் தெளிவாகத்தான் இருந்திருக்கிறோம்’. ஆங்கிலத்தில் சொல்வார்கள் ‘தன் காலைத் தானே சுட்டுக் கொண்டு கிளம்ப யத்தனிப்பது’ என்று. அந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் இல்லாமல் இருப்பதே எவ்வளவோ மேல், மேற்கொண்டு என்ன அறிவையும், தெளிவையும் அடைகிறோமோ இல்லையோ! முன்னர் எழுதியது என்று குறிப்பிட்டது இதை:

“சாதாரண மனிதராக இருப்பது அவ்வளவு சிறப்பில்லை; ஏதோ சித்தாந்தங்களுக்கோ, சம்ப்ரதாயங்களுக்கோ நம்மை முற்றிலும் ஈடுகொடுத்து விடுவதுதான் சிறப்பு என்ற எண்ணம் எனக்கு ஒரு காலத்தில் உள்ளில் மறைவாக இருந்தது. பிறகு உண்மையில் சாதாரண மனிதராக இருப்பதுதான் இயல்பானதும், சிறந்ததும் ஆகும் என்பது சிறிது சிறிதாகப் புரிந்தது. ஏனெனில் ஒரு நெறியில் நம்மை முற்றிலும் கொடுத்துவிடும் போது, ஒரு சித்தாந்தம் ரீதியாக நாம் முற்றிலும் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும் போது அது ஏதோ ஒரு வேகத்தை நம்முள் ஏற்படுத்துவது போன்ற ஒரு உணர்வை உண்டாக்குவது. ஆனால் மிகச் சாதாரணமான பல அம்சங்களையும், மிக இயல்பான விஷயங்களையும் கூட நாம் அப்பொழுது உரிய கவனம் கொள்ளத் தவறிவிடுகிறோமோ என்றுதான் தோன்றுகிறது. என் வரையில் பார்க்கும் பொழுது நான் அப்படி உணர்ந்தேன். பிறருக்கு எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது.

“ஒன்றுமில்லை. இத்தனைக்கும் பகுத்தறிவை மிகக் கறாராகப் போதிக்கும் சித்தாந்தம்தான் அயின் ரேண்டின் கொள்கைகள். ஆனால் அதில் முற்றிலும் தோய்ந்து ஈடுகொடுக்கும் நிலை வந்த போது என் மனத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், நான் பிறரோடு கொண்ட பரிமாற்றங்கள் எல்லாம் நான் உற்று கவனித்து வந்தேன். இத்தனைக்கும் அயின் ரேண்ட் சித்தாந்தத்தில் யாரையும், எதையும், பண்டைய சான்று என்ற காரணமாக மாறாக்கோள் என்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆயினும் ஒரு சித்தாந்தம், ஒரு நெறி என்ற அளவில் ஆகும் பொழுது அவருடைய சித்தாந்தத்தில் தம்மை ஈடுபடுத்தி கொண்ட ஒருவரின் மனத்தளவில் என்ன மாதிரியான பார்வைக் குருடுகள் ஏற்பட முடியும் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“’அப்படி அவர் சொன்னாரா? நீயாகச் செய்துகொண்டால் அவர் என்ன பண்ணுவார்?’ இந்த கேள்வி கேட்கப்படலாம் எந்த சித்தாந்தத்தைக் குறித்தும். ஆனால் இந்தக் கேள்விக்கான நியாயம் எந்த சித்தாந்தத்திலும் கிடைக்குமா தெரியாது. ஏனெனில் எந்த சித்தாந்தம் என்பது இல்லை. ஒரு சித்தாந்தம் என்ற அளவில் முற்றிலும் ஈடுகொடுத்துத் தோயும் போது அது மனத்தை எப்படித் தன்வயப் படுத்தும் என்பதுதான் விஷயம். பொது புத்தியில் உறைக்கக் கூடிய பலதும், இயல்பாக அர்த்தம் ஆகக் கூடிய பலதும், ஸ்வாபாவிகமாகப் புரியக் கூடிய மென்மையான பல தர்மசங்கடங்களும் ஏன் ஒரு கோட்பாட்டில் தன்னை முற்றிலும் தோய்த்துக் கொள்ளும் மனத்திற்குக் காண முடியாத, கண்டாலும் உணர்வில் பொருள் கொள்ளாதவைகளாய் ஆகிவிடுகின்றன என்பது நான் உணரும் போது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“இத்தனைக்கும் நான் அயின் ரேண்ட் சித்தாந்தத்தில் ஈடுபட்டது வாழ்வில் படிப்பு முடிந்து வேலைக்குப் போன காலத்தில்தான். அந்த நிலையிலும் ஒரு சித்தாந்தத்தில் முற்றிலும் ஈடுகொடுத்தல் என்பதன் விளைவு அத்தகையதாகத்தான் இருந்தது. அதேபோல் சம்ப்ரதாயங்களை அவற்றின் மூல நூல்கள், பண்டைய ஆசிரியர்களின் விளக்கங்கள் என்ற ரீதியில் உடன்பாட்டோடு தோய்ந்து ஈடுபடும் நிலையில் மனத்தளவில் எழுந்த மாற்றங்கள், ‘நாம் சிறப்பானவர்கள்; இதை இழந்த பிறர் ஐயோ பாவம்’ என்றவிதமான நாம்>< பிறர் என்ற மனப்பிளவு, பார்வையை எவ்வளவு தூரம் மாற்றும் என்பதைக் கவனத்தில் உணர்ந்தேன். ஆனால் இந்த கவனம் என்பதை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. சம்ப்ரதாயம் சார்ந்த பார்வைதான் இயல்பானதாக மனம் கருதியது. ‘கொடுத்து வைத்தவர்கள் >< இழந்து போனவர்கள்’ என்ற எதிர்புதிர் இல்லாமல் பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பின்னர்தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 'உண்மையைப் பல நிலைப்பாடுகளில் நின்றும் பார்க்கப் பழகுவது' என்ற அணுகுமுறையின் உன்னத தாத்பர்யம் சிறிது சிறிதாக விளங்கியது. இது என் அனுபவம். மற்றவர்களுக்கு இது என்ன பயன்படும் என்பதை அறியேன். ஆனால் என் வாழ்க்கை இனிமையாய் இருக்கிறது. என் வாழ்க்கை, என்னுடைய வாழ்க்கையாக எனக்குக் கிடைக்கிறது என்பது சந்தோஷம்தானே! ”

அது என்ன சாதாரண ஹிந்து என்று சொல்லிக் கொள்கிறாயே, என்ன அர்த்தம் என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். நல்ல கேள்வி. ஏனென்றால் நான் ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ஸ்ரீஅரவிந்தர், அன்னை, பாரதி, ஸ்ரீரமணர் என்றெல்லாம் சொன்னவுடனே சிலர் கஷ்டப்பட்டு அவர்களின் நூலைக் குடைந்து அவர்களே சில சூழல்களிலோ, அல்லது அவர்கள் சொன்னதாக, கூட இருந்தவர்கள் தங்களுக்குப் புரிந்தவகையில் ஏதோ பதிவு செய்தோ வைத்ததை எடுத்து வந்து ‘பார்! அவர்கள் கூட இன்ன வகைக் கருத்தை மறுக்கவில்லை; வெறுத்து ஒன்றும் சொல்லவில்லை. அவர்களைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு நீ என்னமோ பெரிய பிடுங்கி போல் பேசுகிறாய்’ என்றெல்லாம் மடக்குவதுண்டு. அவர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள், எதற்கு, எந்த வாதத்திற்காகச் சொன்னார்கள் என்று அவர்களின் எழுத்துகளை முழுவதும் வாசிக்கும் எனக்குப் புரிகிறது. அப்படியே அவர்கள் கவனமின்றிப் பிழையான கருத்துகளைச் சிலசமயம் சொல்லக் கூடும். எதை விட்டு எதைக் கொள்ள வேண்டும் என்பது எனக்குப் புரிந்த விஷயம். ஆனால் மடக்க வேண்டும் என்று ஆத்திரத்தில் பேசும் ஒருவரிடம் நான் என்றும் எதிர்வாதம் செய்வதில்லை. ‘மடமை வாழ்க’ என்று கடந்து போய்விடுவதுதான் வழக்கம். ஏனென்றால் நான் ஒரு சாதாரண ஹிந்து.

அதாவது எனக்குப் பொது புத்தியில், மானிட நன்மை என்னும் உணர்வில் எது சரி, எது தவறு என்று சிம்பிளாக முடிவு செய்து கொண்டு போகின்றவன். நல்ல கருத்தாக ஒன்று பழைமையில் இருந்தால் அதை ரசிப்பதும், பொருந்தாத, மானிடத்திற்கு முரணான கருத்தாக இருந்தால் அதை விமரிசன புத்தியோடு விட்டுவிட்டு வேலையைப் பார்ப்பதும் செய்வதால் சாதாரண ஹிந்து என்று சொல்லிக் கொண்டேன் என்று சொல்லி நண்பருக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. ஒரு வேளை அவர் மனத்தில் ‘ஒரு வடை போச்சே’ என்ற மோமெண்டாக இருக்கலாம். யார் கண்டது?

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Monday, November 18, 2024

நிலைப்பாடு 01

" முன்பும் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் ஒரு விஷயத்தைச் சொல்வது சரி என்று படுகிறது. அதாவது நான் எழுதுகின்ற சில விஷயங்கள் சிலருக்கு அனுஷ்டானம், நம்பிக்கை சார்ந்த விஷயங்களாக இருக்கலாம். ஒரு நெறியில் நம்பிக்கை கொண்டவர்கள் அதிலேயே, அதில் மட்டுமே ஈடுபாடு என்ற ப்ரத்யேக மனப்பான்மை கொண்டும் இருக்கலாம். அவர்கள் நினைக்கக் கூடும். ஒரு சமயம் விஷ்ணுவைப் பற்றியும், ஒரு சமயம் சக்தியைப் பற்றியும், ஒரு சமயம் சிவனைப் பற்றியும், கணபதி, முருகன், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், வேதம், தந்த்ரம், வேதாந்தம் என்றெல்லாம் பலதையும் தொட்டு எழுதும் என் நிலைப்பாடுதான் என்ன என்ற சங்கடம் ஏற்படக் கூடும். அவர்களுக்காக முன்னரே விரிவாகவும் எழுதியுள்ளேன். இப்பொழுதும் சொல்கிறேன். ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ஸ்ரீரமணர், ஸ்ரீஅரவிந்தர், அன்னை முதலான நம்காலத்து மகான்களின் வழியில் சிரத்தை கொண்ட ஒரு ஹிந்து என்பது என் நிலைப்பாடு. ஹிந்துமதத்தைச் சேர்ந்த பல நெறிகள், அதன் ஞானிகள் அனைவருமே எனக்கு வணக்கத்திற்குரிய பெரியோர்கள். மேலும் நான் அறிந்ததெல்லாம் அச்சுபோட்டு சந்தை விற்பனைக்கு வந்த நூல்களைப் படித்து மட்டுமே. குரு, சீடர் என்ற முறையில் ப்ரத்யேக ரஹஸ்யத்தில் கற்றது எதுவும் என்னிடம் இல்லை. அனைவருக்கும் பொதுவான கடையிலோ அல்லது இணையத்திலோ கிடைக்கும் நூல்கள்தாம் எனக்கும் குறிப்புகள். ஹிந்துமதத்தின் ஞானிகளின் வாக்குகளில் திகழும் ஒற்றுமையைக் கண்டு மகிழ்கிறேன். ப்ரத்யேகமாக ஒரு நெறிதான் சரி. மற்றவை தவறு என்றவிதமான மனநிலை எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. மனிதரிடையே பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு சார்பான அணுகுமுறைகள், ஆண் பெண் என்ற அடிப்படையிலான உயர்வு தாழ்வு சார்ந்த அணுகுமுறைகள் எதிலும் ஈடுபாடோ, பரிவோ சிறிதும் எனக்கில்லை. வேதங்கள் தொடங்கி இன்றுவரையிலான பல பக்தி நூல்களிலும் காணக்கிடைக்கும் ஒரே படித்தான ஆன்மிக விளக்கமும், உள்ள எழுச்சியும் என்னுடைய ஆர்வம். ஹிந்துமத சாத்திரங்களையும், பண்டைய ஞானாசிரியர்களின் உபதேசங்களையும் தற்காலத்தில் வந்துதித்த அவதார புருஷர்கள், ரிஷிகள், மகான்கள் ஆகிய ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீஅரவிந்தர், அன்னை, ஸ்ரீரமண மஹரிஷி போன்றோரின் விளக்கங்கள் மூலமாகவே நான் புரிந்துகொள்கிறேன். இவர்கள் தந்த விளக்கங்கள்தாம் எனக்குச் சனாதன தர்மமாக என் நெஞ்சில் நிலைநிற்பவை. ‘இல்லை; இவர்கள் சொன்ன உபதேசம் வேறு; சனாதன தர்மம் என்பது வேறு’ என்று நீங்கள் கருதி வாதம் செய்வீர்கள் என்றால் பரவாயில்லை, மறக்காமல் என்னை ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீஅரவிந்தர், அன்னை, ஸ்ரீரமணமஹரிஷி முதலியோர் உபதேசங்களில் ஈடுபாடு கொண்ட ஒரு சாதாரண ஹிந்து என்று மட்டுமே வகைப்படுத்திக் கொள்ளுங்கள். " 
 
இவ்வாறு முன்னர் எழுதியிருந்தேன். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பார்க்கப் போனால் இன்னும் சில விஷயங்கள் தீவிரப் பட்டிருக்கின்றன. கல்லூரி நாட்களிலேயே சுவாமி விவேகாநந்தரின் வாழ்க்கைச் சரிதத்தைப் படித்து அதன் விளைவாக ஓர் ஈடுபாடு, தாமஸ் எ கெம்பிஸ் என்பார் எழுதிய ‘இமிடேஷன்ஸ் ஆஃப் க்ரைஸ்ட்’ என்ற நூல். டிசம்பர் 25 க்ரிஸ்ட்மஸ் என்றால் அதன் முதல் நாள் இரவு க்ரிஸ்ட்மஸ் ஈவ் சமயம் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் அனைவரும் சேர்ந்து அமர்ந்து துறவறம் மேற்கொண்டார்கள் என்பது நினைவுக்கு வரும். அந்த ஆரம்ப நாட்களில் அவர்களிடம் இருந்த சில நூல்களில் ஒன்று இமிடேஷன்ஸ் ஆஃப் க்ரைஸ்ட். சிறு வயதிலேயே கூட பைபிள் (கிங் ஜேம்ஸ் வர்ஷன்) படித்த ஈடுபாடு. பிறகு பல ஆய்வுத் துல்லியம் மிக்க ஆங்கில மொழிபெயர்ப்புகளில் வந்த பைபிள்.
இதனோடு நிற்காமல் ஜலாலுதீன் ரூமியின் மஸ்னாவிஸ், அதனுடைய விளக்கங்கள் (நிகல்ஸனுடையவை, ஆர்பரியும் உண்டு). பிறகு உலகின் பல மிஸ்டிக்ஸ், நியோப்ளாடோனிஸ மிஸ்டிக்குகள். மிஸ்டிக் என்பது மொழிபெயர்க்க முடியாத ஒரு வார்த்தை என்று நினைக்கிறேன். நானும் என்ன என்னவோ செய்து பார்த்தேன். மிஸ்டிக் என்பதுதான் சரி. சூஃபிக்களின் மிஸ்டிக் கருத்துகள், ஸென் மிஸ்டிக் கருத்துகள், ஸ்பானிஷ், ரஷ்ய மிஸ்டிக் கருத்துகள் என்று மிஸ்டிக்குகளின் உலகம் கொஞ்சம் யார் கண்ணிலும் படாத ஏகாந்த உலகம். காரணம் மிஸ்டிஸிஸத்தை வைத்து நிறுவனம் ஆக்க முடியாது. அனுஷ்டானம், ஒழுகுமுறை, ஆம்னாயம் எதற்கும் ஒத்துவராது. மிஸ்டிஸிஸத்தில்தான் என்னுடைய அந்தரங்க சஞ்சாரம். 
 
அயின் ராண்ட் படித்துக் கடும் பகுத்தறிவு, நாத்திகம் என்று இருந்த காலத்தில் மிஸ்டிக் என்றால் ஆகாது, ப்ளாட்டோ என்றால் ஆகாது, காரல் மார்க்ஸ் என்றால்.. இப்படி இருந்தது மன நிலைமை. பிறகு ஐடியாலஜி என்பது எப்படி மனத்தைக் குறுக்கிவிடுகிறது என்பதை உணர்ந்து வெளிவந்தேன். மீண்டும் மிஸ்டிஸிஸம் ஈடுபாடு. ப்ளாட்டோவில் ஆழ்ந்து போக முடிந்தது. காரல் மார்க்ஸின் கருத்துகளில் நன்கு ஈடுபட முடிந்தது. இந்தப் பலவித ஈடுபாடுகளைக் கண்டு நண்பர் ஒருவர் சந்தேகப்பட ஆரம்பித்தார். ‘மறைமுக கிருத்தவரோ? கம்யூனிஸ்டோ? இதுவோ அதுவோ என்று அவர் படும் பாட்டைப் பார்த்து நானே அவரிடம் ஒரு நாள் சொன்னேன். ‘நண்பரே! மிகவும் கஷ்டப் படாதீங்க. சீக்கிரமா ஒரு முத்திரை குத்துங்க. மறைமுக கிருத்தவர் என்றாலும் சரி, கம்யூனிஸ்ட் என்றாலும் சரி, நோ ப்ராப்ளம். ஆனால் எனக்கு முற்றிலும் பிடிக்காத கருத்துகள் மூன்று. வர்ணதர்மம், சாதி, பிறப்பினால் ஏற்றத் தாழ்வு என்னும் கருத்தியல் அது எந்த வடிவத்தில் எந்த ஆள் சொல்லியிருந்தாலும் சரி, அது எனக்குப் பிடிக்காத, நான் வெறுக்கும் கருத்து. அதை யார் சொன்னாலும் மறுக்கிறேன். அடுத்தது, ஆண், பெண் உயர்வு, தாழ்வு என்னும் கருத்து. அது எனக்குப் பிடிக்காத ஒன்று. அடுத்தது மதங்கள் காரணமாகப் பிரிவினைப் படுத்திப் பார்த்தல். அதனால், இந்தக் கருத்துகள்தாம் உயர்ந்த தர்மம் என்று நீர் சொன்னால் அதை நீரே வைத்துக் கொள்ளும். எனக்கு வேண்டாம்.’ இப்படிச் சொன்னதும் தொடர்ந்து நண்பராக இருக்க அவர் என்ன அவ்வளவு முட்டாளா.. நிச்சயம் இல்லை. (ஒரு வடை போச்சே --- மொமெண்ட்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 
 
***