Tuesday, March 1, 2016

நீ.....

அன்று காலையிலிருந்தே தான் ஆகிய ஜெனி ஏதோ எங்கோ மறந்து வைத்துவிட்டவளைப் போல்தான் பொருந்தாமல் இருக்கிறாள்கைவிரல் நகங்கள் கச்சிதமாகக் கடிக்கப்பட்டுவிட்டன. முன்னத்தி மயிர்ச்சுருள் இறுக்கி, நெகிழ்த்தி, இறுக்கிப் பல ஆவ்ருத்தி ஆகிவிட்டது

பிரபாகரன் அவளுக்குக் காலையில் காப்பிப் போட்டுக்கொண்டு வந்து கொடுத்தவனைப் பார்த்து, “நீ...” என்றவள்தான் பிறகு ஒன்றும் பேசவில்லை. பிரபாகரன் நயமறியும் ஜீவன். ஏதோ எண்ண ஓட்டம் என்று எடுத்துக்கொண்டு அவள் செய்யும் வழக்கமான வேலையை எல்லாம் தானே முடித்துவிட்டான். தெரியும் அவனுக்கு. அவளை இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வேலை செய்யத் தொணப்பினால் பல குளறுபடிகள் நடக்கும்

அவன் சுறு சுறுவென்று வேலை செய்வதை நெட்டுக்குத்தினால் போல் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம். ஏதும் அவள் அறியாள் என்பதும் உண்மை. ஆனால் அவன் தடுமாடும் போது தன்னிச்சையாக அவள் வாயும் பழக்கமும் சில உதவிக் குறிப்புகள் கொடுப்பதை வைத்து அவள் மனத்தில் பதிந்திருக்கும் இதெல்லாம் என்பது சொல்ல முடியாதுபிரபாகரனுக்குப் புதிதில்லை. ஆயினும் அவனுக்கு இது புரிபடவில்லை

பெரிய அக்கா ஒரு சமயம் அலுத்துக்கொண்ட போதும் அவனிடமிருந்து எந்த உடன்பாட்டுப் பதிலும் இல்லை --- ‘இதுக்குத்தான் வீட்டுல பெரியவா பார்த்துப் பண்ணி வைக்கணும்ங்கறது’ 

அந்தச் சொல் ஜெனியின் மனத்தில் எப்படி தைத்தது என்று அவனுக்குப் புரியவில்லை. பின்னொரு சமயம் அவள் கேட்டாள் அவனை -- பெரியவா பார்த்து ஒரு பெண்ணை நீ பண்ணிக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா

பெரிய அக்கா கிடக்கிறா விடு

ஏன் பெரிய அக்காவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்

அவள் சொன்னதைத்தானே நீ கேட்கிறாய்

இல்லை. எனக்குத் தெரியாது அவள் சொன்னாளா என்று. ஏதோ எனக்குத் தோன்றியது

அவள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்வது சரி என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் பிரபாகரன்

ஏன்? இவ்வளவு மாவு இருக்கிறதே. எதற்கு இப்பொழுது மீண்டும் ஊறப்போட்டாய்?’ 

இல்லை. மிகவும் புளித்துப் போய்விட்டது. அது வேண்டாம்

இவனோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு. பால் பூத்திலா? இல்லை எதாவது நிச்சயம் ஏதோ கடையில்தான். என்னமோ ஒரு துள்ளல். இவனே வேறு மாதிரிதான் தெரிந்தான். அதுதான் இவனா? அல்லது இவன் தான் அதுவா? இது ஒன்றும் புரிந்து கொள்ள சுளுவாய்த் தெரியவில்லை. அக்கறை அன்பு கடமை பொறுப்பு இதில் எல்லாம் ஒன்றும் குறைவு இல்லை. இலட்சியக் கணவனா என்பது அநாவசியக் கேள்வி. நம்முடைய வாழ்க்கையை வேறு எங்கோ மாட்டிவைத்து ஒப்பிடுவது. ஆனால் அன்று நம் கண்ணுக்குப் பட்ட அந்தக் காதலன்...என்ன ஆனான்? அல்லது நாமும்தான் அவன் கண்ணுக்கு அப்படித்தானோ

ரொம்பப் பண்ணாத! தலைமுடி உதிரும் பார்த்து

சரி காதல் என்பதுதான் என்ன? உடல் இச்சைக்கு உள்ளம் பூசும் சாயமா? அப்படி என்றால் உடலோடு போய்த் தொலையாமல் உள்ளத்தை இந்தப் பாடு படுத்துவானேன். அன்று தேவ குமாரனாய்க் காட்சி தந்தவன் இன்று ஏன் மடைப்பள்ளி பரிசாரகன் போன்று ஆகிவிட்டான்? அவனுக்குத் தான் செய்யும் எந்தப் பணிவிடையிலும் அவன் தனக்குச் செய்ய என்றும் சளைத்தவனில்லை என்றாலும் அந்தக் காதல் மனிதன் மறைந்தவன் தான். காணவில்லை. இத்தனைக்கும் அன்று, காதல் காலத்தில் பேசிய பேச்சு எல்லாம் பிதற்றல். இன்றோ உளறாமல், தடுமாறாமல் எந்தச் சூழலையும் சமாளிக்கும் நேர்த்தி மிக்கவன். ஆனாலும் அந்தப் பிதற்றலில் திகழ்ந்த வாழ்வின் ஆழம் அடிமண் இட்டுப்போய் வாழ்வே கணுக்கால் அளவு ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறது

சாப்பிட்டுவிடு. ஆறுகிறது பார். மறுபடியும் கொஞ்சம் சூடு பண்ணிவிடவா

இல்லை. இப்படியே இருக்கட்டும்

எல்லாப் பெண்களின் வாழ்விலும் இப்படித்தானோ? காதலன் ஒரு தோற்ற மயக்கம் தானோ? கண்ணுக்கு மையிட்டுக் காணும் மயல் காட்சியோ? முன்னொரு முறை இதைப் பற்றி வினவியபொழுது வாழ்க்கை வேறு, கற்பனை வேறு என்று சொல்லிப் போய்விட்டான். ஆனால் அந்தக் காதலனை விரும்பித்தானே நான் இவனை மணந்தேன். அவன் மறைந்து போன இவனின் மிச்ச வடிவத்தை வைத்து வாழ்வு ஓடுவதை எப்படிச் சீரணித்துக்கொள்வது? எல்லாப் பெண்களுமே இப்படிக் காதலனை இழந்து இப்படிக் கொடுப்பினை இருந்தால் பரிசாரகனுடனோ அல்லது துரதிருஷ்டம் என்றால் பாதகனுடனோ தான் காலம் தள்ளுவர் போலும். ஆதியிலிருந்தே அப்படித்தானோ? அதனால்தான் வாழ்வின் முடை நாற்றங்களில் சிக்காத நிதய கற்பனையாக, கற்பனைக்கும் எட்டாத நிதய காதலனாக கிருஷ்ணனை வைத்தார்களோ? ஆஅம் அவன் ஒருவன் தான் காதலனாக இருக்க முடியும். மனிதர்கள் எப்படிக் காதலர்களாக இருத்தல் கூடும்? இங்குதான் நடைமுறை என்னும் தரைமட்டப் பிசாசு அனைத்துக் காதல்களையும் துடைத்துவிடுகிறதே. ராதையும் உலகத்தைச் சேர்ந்தவள் இல்லை. கிருஷ்ணனும் உலகத்தைச் சேர்ந்தவன் இல்லை. காதல் என்பதே உலக சமாச்சாரம் இல்லை

கையை அலம்பிண்ட்ரேன், காயறது பாரு.....ஹலோ....ஜெயபத்மாசினி... 

ஹாங்.... 

அப்ப காதல் என்பதை யார் தமக்குள் நிரந்தரமாகக் குடிகொள்ள வைத்துவிடுகிறார்களோ அவர்களிடத்தில் கிருஷ்ண பிரஸன்னம் என்று கொள்ளலாமா? ராதையின் லீலை என்று சொல்லலாமா? ஆனால் பாவம், இந்த ஆண்பிள்ளைகள் அச்சுப் பிச்சுக்கள் பாவம். நமக்காவது காதல் என்பதற்குக் காதலன் தெய்வம் இருக்கிறது. இதுகளுக்குக் காதலி தெய்வம் எங்கிருக்கிறது? எல்லாம் அம்மா அம்மா என்று சொல்லிக் காதலியைத் தெய்வமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டதுகள். ஏதோ பாரதியே கஷ்டப்பட்டுக் கண்ணம்மா என்றெல்லாம் சொன்னாலும் மரபில் வரவில்லையே! ஒரு வேளை காதலி தெய்வம் ஏற்படாத காரணம்தானோ இதுகள் எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு மண்ணாந்தைகளாய் ஆகிவிடுகின்றன. ... ரொம்ப பாவம்... 

என்ன ஒரே யோசனை? இப்படியேவா உட்கார்ந்துண்ட்ருக்கப் போற

ம் இல்லல்ல........... நீ....
சாப்பிட்டாயா

சரிதான். இவ்வளவு நேரம் நீதானே பரிமாறினே..... 
சரி வா தூங்கு. ராத்திரி கண் முழிக்காத
(முதல் இடுகை - 12-2-2011)

No comments:

Post a Comment