Friday, February 11, 2022

அன்னையிடம் பிரார்த்தனை

யா ஸ்ரீ: ஸுக்ருதினாம் பவநேஷு அலக்ஷ்மீ: 
பாபாத்மனாம் க்ருததியாம் ஹ்ருதயேஷு புத்தி: | 
ச்ரத்தா ஸதாம் குலஜன ப்ரபவஸ்ய லஜ்ஜா 
தாம் த்வாநதா: ஸ்ம பரிபாலய தேவி விச்வம் || 

நல்லவர்களின் உறைவிடங்களில் ஓங்கும் செல்வமாக நீ இருக்கிறாய். பாபிகளிடம் அலக்ஷ்மியாக இருப்பதும் நீ. பக்குவப்பட்டவர்களின் இதயத்தில் புத்தியாக விளங்குவதும் நீ. ஸத்துக்களின் சிரத்தையாக நீயே இருக்கிறாய். நல்லொழுக்கம் வாய்ந்தவர்பால் பிறந்து வளர்வோரிடத்தில் மிளிரும் வெட்கமாக நீயே இருக்கிறாய். அன்னையே! உன்னையே வணங்கினோம். உலகம் அனைத்தையும் பாதுகாத்தருள்வாய்! 

மேதாஸி தேவி விதிதாகில சாஸ்த்ர ஸாரா 
துர்காஸி துர்கபவஸாகர நௌரஸங்கா | 
ஸ்ரீ:கைடபாரி ஹ்ருதயைக க்ருதாதிவாஸா 
கௌரீ த்வமேவ சசிமௌலிக்ருத ப்ரதிஷ்டா || 

அனைத்து சாத்திரங்களையும் உணரவல்ல மேதைமையாக நீயே இருக்கிறாய். கடத்தற்கரிய பவ சாகரத்தைக் கடப்பதற்கேற்ற படகாகவும் நீயே விளங்குகிறாய். கைடபன் போன்ற அசுரர்களை அழிக்கவல்ல திருமாலின் இதயத்தில் விளங்கும் ஸ்ரீதேவி நீ. தலையில் நிலவு சூடிய சிவனின் பாகமான கௌரியும் நீயே. 

தே ஸம்மதா ஜனபதேஷு தநாநி தேஷாம் 
தேஷாம் யசாம்ஸி ந ச ஸீததி பந்துவர்க்க: | 
தந்யாஸ்த ஏவ நிப்ருதாத்மஜ ப்ருத்ய தாரா 
யேஷாம் ஸதாப்யுதயதா பவதீ ப்ரஸந்நா || 

யாரிடம் நீ அகம் மகிழ்ந்து அருள் பூத்துக் குன்றாத வளத்தை வழங்குகிறாயோ அவர்களே ஜனங்களிடம் இதயம் ஒப்பிய நன்மதிப்பைப் பெறுகிறார்கள். அவர்களே மெய்யான புகழை அடைகின்றனர். அவர்களின் உறவுகள் கெடுதல் உறுவதில்லை. தனம், மக்கள் செல்வம், வேலைக்காரர், மனைவி கணவர் என்று அவர்களே உலகில் சிறந்து வாழ்கின்றனர். 

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிம் அசேஷ ஜந்தோ: 
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி | 
தாரித்ரிய துக்க பயஹாரிணி கா த்வதந்யா 
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா || 

கஷ்டத்தில் உன்னை நினைத்தால் எந்த உயிர்க்கும் உள்நிலவும் அச்சத்தை மிச்சமின்றி நீக்கிவிடுகிறாய். நன்றாக இருக்கும் போது உன்னை நினைத்தாலோ அளவற்ற சுபங்களை ஈட்டும் புத்தியை அருள்கிறாய். ஏழ்மை, துக்கம், அச்சம் அனைத்தையும் முழுதும் அழிக்கும் உன்னை விட்டால் வேறுயாருண்டு அம்மா! அல்லல்படும் உயிர்களுக்கு அனைத்து விதங்களிலும் உதவும் அருள்வடிவம்? 
(மார்க்கண்டேய புராணத்தில் வரும் சில சுலோகங்கள்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment