Saturday, February 12, 2022

அனுமனைத் துதி மனமே! காலை, மதியம், மாலையில்...

அனுமன் என்பவர் கடவுளை ஸ்ரீராமனாகவே கண்டு அந்த அனுபவத்தில் தோய்ந்தவர். தொண்டன் என்னும் பக்தி மனநிலைக்கு மிக உயர்ந்த உதாரணமாக விளங்குபவர். காலம் காலமாகப் பாரதத் திருநாட்டில் வலிமை, நல்ல இதயம், மிக நுண்ணிய புத்தி கூர்மை, இடர்களையெல்லாம் கடந்து கடவுளுக்குரிய தொண்டை நிறைவேற்றும் பராக்கிரமம், சொல்வன்மை, ஆனால் அதேநேரம் யாரையும் மனம் நோகச் செய்யாத இனிய கூறும் நாகரிகம், உண்மையை என்றும் கைக்கொள்ளுதல், தம்மிடம் மிகப்பெரும் பலம் இருப்பினும் அதை அரக்கத்தனமாகப் பயன்படுத்தாமல் தெய்விகமாக அந்த வலிமையை அனைவருக்கும் பயன்படும்படிச் செய்தல் என்னும் நற்குணங்கள் அத்தனைக்கும் இளைஞர்களுக்கும், முதியோர்க்கும் ஒருங்கே ஓர் உத்வேகமாக விளங்கி வருவது அனுமன். அவரைக் குறித்து நெடுங்காலமாக ஒரு தோத்திரம், ஹனுமத் ஸ்மரண ஸ்தோத்திரம் என்று வழங்குகிறது. காலை, பகல், மாலை என்று மூன்று வேளைகளிலும் அனுமனை நினைத்துப் பார்ப்பதால் மேற்கூறிய நற்குணங்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஊக்கமுடன் எழுவதற்குக் காரணமாகிறது. 


ப்ராதஸ்மராமி ஹனுமந்தம் அநந்தவீர்யம் 
ஸ்ரீராமசந்த்ர சரணாம்புஜ சஞ்சரீகம் | 
லங்காபுரீதஹன நந்தித தேவ வ்ருந்தம் 
ஸர்வார்த்த ஸித்தி ஸதனம் ப்ரதித ப்ரபாவம் || 

அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதில் வல்லவர் 
மிகுந்த மகிமை கொண்டு விளங்குபவர் 
எல்லையற்ற ஆற்றல் வாய்ந்து திகழ்பவர் 
ஸ்ரீராமசந்திரரின் இணையடித் தாமரையில் வட்டமிடும் வண்டு போன்றவர் 
தீயோரின் இடங்களை அழித்துத் தேவர்களுக்கு மகிழ்ச்சி தந்தவர் 
அந்த அனுமந்தரைக் காலையில் வணங்குகிறேன். 

மாத்யம் நமாமி வ்ருஜினார்ணவ தாரணைக 
தீரம் சரண்யம் உதிதானுபம ப்ரபாவம் | 
ஸீதாSSதிஸிந்து பரிதோஷண கர்ம தக்ஷம் 
வந்தாரு கல்பதரும் அவ்யயம் ஆஞ்ஜநேயம் || 

(S - என்று சுலோகத்தின் நடுவில் குறி வந்தால் குழம்ப வேண்டாம். அங்கு ‘அ’ என்ற உச்சரிப்பு என்று பொருள். இரண்டு S வரும்போது ஆ என்று கொள்ளலாம். இது சுலோகங்களை எழுதும் போது நெடுநாளைய ஒரு வழக்கம்) 

நம்மைப் பாபக் கடலைத் தாண்டவைப்பதில் தவறாத உறுதி பூண்டவர். சரணம் புகத் தகுந்த தெய்வம் அவர். தனக்குவமையில்லாப் பேராற்றலைக் காட்டுபவர். சீதையின் துயர்க்கடலை வற்ற அடிப்பதில் வல்லவர். வணங்கும் அடியார்க்குத் தேய்வற்ற நன்மைகளைப் பொழியும் கற்பக மரமே அவர். அத்தகைய ஆஞ்ஜநேயரை மதியம் வணங்குகிறேன். 

ஸாயம் பஜாமி சரணோபஸ்ருதாகிலார்த்தி 
புஞ்ஜப்ரணாசனவிதௌ ப்ரதிதப்ரதாபம் | 
அக்ஷாந்தகம் ஸகலராக்ஷஸ வம்சதூம 
கேதும் ப்ரமோதித விதேஹஸுதம் தயாளும் || 

சரணடைந்தோரின் துயரங்களை ஒருசேரக் குவித்து அழித்துவிடுவதில் பெரும் நிபுணர். விளங்கித் தோன்றும் வல்லமை மிக்கவர். அக்ஷனுக்கு அழிவாய் வந்தவர். அனைத்துத் தீயபுந்தி அரக்கர்களை வழிவழியாக மாய்ப்பதில் தூமகேது அவர். விதேஹரின் புத்ரியான சீதைக்கு மகிழ்ச்சியை விளைவிப்பவர். தயையின் உருவம் அவரே. அத்தகைய அனுமனை சாயங்காலத்தில் வழிபடுகிறேன். 
(தோத்திரக் குறிப்புகள் உதவி நூல் -- ஸ்ரீஹனுமத் ஸ்துதிமஞ்ஜரீ, மஹாபெரியவாள் ட்ரஸ்ட்,) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment