Saturday, February 5, 2022

சுதர்சன அஷ்டகம் - சக்கரத்தாழ்வார் மீது எட்டு சுலோகங்கள்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய அழகிய சுலோகங்களில் ஒன்று சுதர்சன அஷ்டகம். அஷ்டகம் என்றால் எட்டு சுலோகங்கள். சொல்லும் போதே மிகுந்த மன எழுச்சியைத் தரக் கூடியது. மனக்கஷ்டங்களைத் தீர்க்கவல்லது.

ஆறு கோணச் சக்கரத்தைப் பின்னணியில் கொண்டு சக்கரத்தாழ்வார் சந்நிதியில் கண்டு வழிபட்டிருப்போம். சக்கரத்தாழ்வாருக்குப் பெயரே சுதர்சனர் என்பதாகும்.

ஸு தர்சனம் என்றால் நற்காட்சி என்று பொருள். அனைத்து நன்மைகளுக்கும் அச்சாணியாய் அமைவது நல்ல காட்சியாகும். நாம் காண்பது சரியாகவும் நன்மையாகவும் அமைவதுதான் நம் முன்னேற்றத்தின் தொடக்கம். அத்தகைய காட்சி ஒருவருக்கு காலத்தில்தான் கனிந்து வரவேண்டும். எனவேதான் சுதர்சனர் காலம் என்ற தத்துவத்தைக் குறிப்பவராய் இருக்கின்றார்.

காலம் என்ற தத்துவத்தைத் தம் கையில் சக்கரமாக ஏந்தி ஆள்பவர் நாராயணர். நாராயணர் என்ற பெயரே பெரும் பொருளுடையது. நாரம் என்றால் நீர் என்று பொருள். மேலும் நித்யமான தத்துவங்களையெல்லாம் ஒரு சேரக் குறிக்கும் சொல்லும் நாரம் என்பதாகும். நாரம் என்றால் உயிர்கள் என்றும் பொருளாகும். அயநம் என்றால் புகல். சென்றடையும் இடம். உயிர்களுக்கெல்லாம் உற்ற புகலாய் இருப்பவன் என்பதை நாராயணன் என்னும் பெயர் குறிக்கும். அவர் கையில் சுழலும் காலச்சக்கரம் சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வான்.

சுதர்சனரின் அருளால் நமக்கு ஸ்ரீகடாக்ஷம் கிட்டுகிறது. திருமகள் பார்வை என்பதே நன்மை அனைத்துக்கும் வித்து. என்றால் இந்தச் சுலோகம் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை உணரலாம். அத்தனையும் உள்ளடக்கி ஸ்ரீ வேதாந்த தேசிகர் அழகான, சிறிய சிறிய செறிவான பதங்களால் இந்தச் செய்யுளை இயற்றியிருப்பது மிகவும் சிறப்பு. இதை நெடுங்காலமாகப் பலரும் சொல்லி வருகின்றார்கள். பொருளும் உணர்ந்து சொன்னால் கூடுதல் சிறப்பன்றோ!

*

முதல் சுலோகம் : 

ப்ரதிபட ச்ரேணி பீஷண
வரகுண ஸ்தோம பூஷண
ஜநிபய ஸ்தாந தாரண
ஜகதவஸ்தான காரண I
நிகில துஷ்கர்ம கர்சன
நிகம ஸத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன II

பகைகளின் அணிக்குப் பயமானவர்
உயர்குணங்கள் எல்லாம் அணியானவர்
பிறவியச்சம் நீக்கிக் காப்பவர்
பிரபஞ்சம் நிலைக்கும் காரணம் ஆனவர்
தீச்செயல் அனைத்தும் துடைப்பவர்
நல்வழி அனைத்தும் காட்டுபவர்
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன !
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன !!




இரண்டாவது சுலோகம் : 

சுபஜகத் ரூப மண்டன
ஸுரகண த்ராஸ கண்டன
சத மக ப்ரஹ்ம வந்தித
சத பத ப்ரஹ்ம நந்தித |
ப்ரதித வித்வத் ஸபக்ஷித
பஜதஹிர் புத்ன்ய லக்ஷித
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ||


நலந்திகழ உலகுருவாய் ஒளிர்பவனே!
தேவர்கள் அச்சத்தை மாய்ப்பவனே!
இந்திரன் நான்முகன் வணங்க நின்றவனே!
எண்ணிலா மறைகள் போற்றி மகிழ்பவனே!
மெய்ப்புகழ் ஞானியர் பக்கல் நின்றவனே!
அகிர்புத்ன்ய ருத்ரன் போற்றும் பரம்பொருளே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன!
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன !!



மூன்றாவது சுலோகம் : 

ஸ்புட தடிஜ்ஜால பிஞ்ஜர
ப்ருதுதர ஜ்வால பஞ்ஜர
பரிகத ப்ரத்ன விக்ரஹ
படுதர ப்ரக்ஞ துர்க்ரஹ |
ப்ரஹரண க்ராம மண்டித
பரிஜந த்ராண பண்டித
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ||


நின்றொளிரும் மின்னல்கள் சூழ் பொன்னுருவே !
பொங்குசுடர் மண்டும் பெரும் கூடாய் பொலிந்தவனே!
தேவர்கள் சூழ்ந்தமர்ந்த யந்திர விக்ரகனே!
மதிமிகுந்த அறிஞர்களும் மனம் கொள்ள அரியவனே!
ஆயுதப்படைகள் பொலிய அருள்பூத்து நின்றவனே!
அடியவரைக் காப்பதிலே தவறாத பண்டிதனே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



நான்காவது சுலோகம் : 

நிஜபத ப்ரீத ஸத்கண
நிருபதி ஸ்பீத ஷட்குண
நிகம நிர்வ்யூட வைபவ
நிஜபர வ்யூஹ வைபவ |
ஹரி ஹய த்வேஷி தாரண
ஹர புர ப்லோஷ காரண
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ||


மெய்யான பதம் அடைந்து மகிழும் ஞானியர் சூழ இருப்பவனே!
இயல்பாய்ப் பொலிந்த குணங்கள் ஆறும் பூரணமாய்த் திகழ்பவனே!
வேதங்கள் விளக்கி ஓயும் வைபவம் மிக்கவனே!
சத்யமாய் விளங்கும் பரம் முதலிய வ்யூஹங்களில் ஒளிர்பவனே!
இந்திரனார் எதிரிகளை முறியடிக்கும் வல்லவனே!
புரமெரித்த அரனார்க்குத் துணைசெய்யும் புங்கவனே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



ஐந்தாவது சுலோகம் : 

தநுஜ விஸ்தார கர்த்தன
தநுஜ வித்யா நிகர்த்தன
ஜநிதமிஸ்ரா விகர்த்தன
ஜகதவித்யா நிவர்த்தன |
அமர த்ருஷ்ட ஸ்வவிக்ரம
ஸமர ஜுஷ்ட ப்ரமிக்ரம
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ||


அசுரர் வளராது அழிக்கும் ஆற்றலோய்!
அசுரரின் மாயையை அகற்றும் திறலோய் !
பிறவிப் பேரிருள் போக்கும் பெருஞ்சுடரே !
பக்தரின் அவித்தையை நீக்கும் நிர்மலனே!
அமரர் வியக்கும் தன் விக்ரமம் மிக்கோனே!
சமர்களில் பிரமித்திடும் செயல்பல செய்வோனே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



ஆறாவது சுலோகம் : 

ப்ரதிமுகாலீட பந்துர
ப்ருதுமஹா ஹேதி தந்துர
விகடமாலா பரிஷ்க்ருத
விவிதமாயா பஹிஷ்க்ருத |
ப்ருதுமஹா யந்த்ர தந்த்ரித
த்ருட தயா தந்த்ர யந்த்ரித
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ||


காப்பதற்கு எப்பொழுதும் ஒரு காலை முன்வைத்தபடி நீ நிற்கும் அழகால் உருக்குகின்றாய்!
பெரிதும் மகத்தானதுமான படைகள் பூண்டு நிற்பவனே !
உன் அருளில் உள்ளம் நிறைந்து பக்தர்கள் சூட்டிய பல்வித மாலைகளை அவர்கள் உள்ளம் குளிர அணிந்து நிற்பவனே!
விதவிதமான மாயைகள் எத்தனை வரினும் அவையெல்லாம் அண்டாதபடிப் புறத்தில் ஓட்டுபவனே!
பெரும் மகத்தான யந்த்ரமான ஸம்ஸாரத்தைச் சுழட்டும் வலவா!
ஆனாலும் பக்தர்கள்பால் தயை என்பதால் கட்டப்பட்டு அவர்கள் அன்பிற்கு ஆடும் யந்த்ரம்போல் இருப்பவனே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



ஏழாவது சுலோகம் : 

மஹித ஸம்பத் ஸதக்ஷர
விஹித ஸம்பத் ஷடக்ஷர
ஷடர சக்ர ப்ரதிஷ்டித
ஸகலதத்வ ப்ரதிஷ்டித |
விவித ஸங்கல்ப கல்பக
விபுத ஸங்கல்ப கல்பக
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ||


மகத்தான ஞான நிதி வாய்த்த ஞானிகளின் அழியாத பேறே!
விதித்தபடி உன்னை உபாசிப்பவருக்கு அனைத்து வளமும் தரும் ஆறெழுத்து மந்திரமாய் அமைந்த விஷ்ணுவே!
ஆறு கோணங்கள் திகழும் சக்கரத்தில் நிலைபெற்றவனே!
தத்துவங்கள் அனைத்திலும் பெயராமல் நிலைகொண்டவனே!
விதவிதமான சங்கல்பங்களைச் செய்து நீ கருதியதை முடித்துவிடுகிறாய்!
தேவர்களின் சங்கல்பங்களையெல்லாம் அருளும் கல்பகமரமாய் விளங்குகின்றாய்!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



எட்டாவது சுலோகம் : 

புவன நேத்ரஸ் த்ரயீமய
ஸவனதேஜஸ் த்ரயீமய
நிரவதி ஸ்வாது சிந்மய
நிகிலசக்தே ஜகந்மய |
அமித விச்வ க்ரியாமய
சமித விஷ்வக் பயாமய
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ||


உலகத்தினர்க்கு புலனுக்கெட்டாத கடவுளைக் காணவல்ல கண் போன்ற வேதமயனே!
வேள்விகளுக்கு இன்றியமையாத முத்தீயாய்த் திகழ்பவனே!
ஆரா அமுதே நிறைந்த சின்மயனே!
சக்திகள் அனைத்துமாய்த் திகழ்பவனே! உலகுள் உறைபவனே!
அளவற்ற உலகின் படைப்பு முதலிய கிரியையானவனே!
புறமெங்கும் சூழும் வியாதிகளைத் தணித்துப் பயத்தை நீக்குபவனே!
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன !!



த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம் படதாம் வேங்கடநாயக ப்ரணீதம் |
விஷமேSபி மநோரத: ப்ரதாவந்ந விஹந்யேத ரதாங்க துர்யகுப்த: ||


இருநான்கு சுலோகமிது
எல்லையற்ற சுவையுளது
வேங்கடநாதர் இயற்றியது
இதைப் படிப்பவரின் மனோரதங்கள் நிறைவேறும்
விஷமத்தால் அலைபாய்ந்திடினும்
விறல்மிகு சக்கரம் காத்திடுமே
வேண்டிய நன்மைகள் விளைந்திடுமே. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment