Friday, February 25, 2022

ஸ்ரீத்வாதச நாம பஞ்ஜரம் - பன்னிரு நாமங்கள் பாதுகாக்கட்டும் !

நெடுங்காலமாக ஞானியரும், மக்களும் சொல்லும் துதிகளில் ஒன்று ஸ்ரீத்வாதச நாம பஞ்ஜரம் என்பது. த்வாதச என்றால் பன்னிரண்டு. பஞ்ஜரம் என்றால் கூடு, கூண்டு அல்லது கவசம், சுற்றிலும் பாதுகாக்கும் வளையம் அல்லது கூடம். 

ஏன் பன்னிரண்டு? இதற்கு மிஸ்டிகல் காரணங்கள் உண்டு. உலகில் இருக்கும் மிஸ்டிக் சம்ப்ரதாயங்கள் பலவற்றிலும் இந்தப் பன்னிரண்டு என்பது முக்கியமான எண். காலமே வருடத்திற்குப் பன்னிரண்டு பிரிவுகள் என்பது ஒரு புறம். வாழ்க்கையின் நன்மைகளும் பன்னிரண்டாகத்தான் பிரித்துப் பார்க்கச் சொல்லும் ஜோதிஷ சாத்திரம். பிரபஞ்ச விரிவில் நக்ஷத்திரங்களைப் பன்னிரு பிரிவுகளில் வகைதொகை செய்யவும் ஜோதிஷம் சொல்கிறது. பன்னிரண்டு என்பதைக் குறித்துப் பெரும் நூலே எழுதலாம். இந்த ஆழ்ந்த சூக்ஷ்ம விஷயங்களையும் அழகான துதிகள் ஆக்கி, பக்தியுடன் கலந்து தரும்பொழுது நாம் என்ன சொல்ல முடியும்? 

வாழ்க்கையின் பன்னிரண்டு நன்மைகளுக்கும் அருள் சக்திகளைப் பன்னிரு கடவுள் நாமங்களாகச் சொல்லி அதை அன்றாடம் சொல்வதிலேயே அந்த நன்மைகளை நம்முள் செயலூக்கத்திற்குக் கொண்டு வரும் முறைதான் இது. கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்னும் பன்னிரு நாமங்களில் துயிலெழுப்பப்படுவன நம் வாழ்க்கையின் நன்மைகள் என்ற நினைவோடு இந்தத் துதியைப் படிப்பது சிறந்தது. 

இந்தத் துதியில் ஓர் அழகைப் பார்க்கலாம். கிழக்கு, மேற்கு, மேலே, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, கீழே, இதய மத்தி, உடல் முழுவதும் - என்ற கிரமத்தில் கடவுளின் நாமங்கள் இயங்கிக் காக்கின்றன என்பதுபோல் துதியானது அமைந்துள்ளது. அதாவது ஒருவர் கிழக்கை நோக்கி நின்று துதிக்கும் போது மனத்தால் கடவுளின் மூலம் 360 பாகைகளையும் ஓர்மை கொள்வது சிந்தித்துப் புரிந்துகொள்ளத்தக்கது.


புரஸ்தாத் கேசவ: பாது சக்ரீ ஜாம்பூநத ப்ரப: | 
பச்சாந்நாராயண; சங்கீ நீலஜீமூத ஸந்நிப: || 

கிழக்கில் கேசவர் காக்கட்டும். அவர் சக்ரம் தரித்தவர். ஜாம்பூநதம் என்னும் தங்கத்தின் நிறம் கொண்டவர். மேற்கில் நாராயணர் காக்கட்டும். அவர் சங்கம் தரித்தவர். நீலமேக சியாமளர். 

இந்தீவரதளச்யாமோ மாதவோர்த்வம் கதாதர: | 
கோவிந்தோ தக்ஷிணே பார்ச்வே தந்வீ சந்த்ரப்ரபோ மஹாந் || 

இந்தீவர மலரின் இதழ்போல் கருநீல அழகர், கதை ஆளும் மாதவர். அவர் மேலே காக்கட்டும். கோவிந்தர் தெற்குப் பக்கத்தில் காக்கட்டும். வில்லாளர். சந்திரன் ஒளிதிகழ் மகான் அவர். 

உத்தரே ஹலப்ருத் விஷ்ணு: பத்ம கிஞ்ஜல்க ஸந்நிப: | 
ஆக்நேய்யாம் அரவிந்தாபோ முஸலீ மதுஸூதந: || 

வடக்கில் விஷ்ணு காக்கட்டும். கலப்பையைத் தாங்கியவர் அவர். தாமரையின் அகவிதழ் போன்ற நிறத்தர். அக்நி திசையான தென்கிழக்கில் அரவிந்த ஒளி திகழும் மதுசூதனர் காக்கட்டும். உலக்கை திகழும் கரத்தர். 

த்ரிவிக்ரம: கட்கபாணி: நிர்ருத்யாம் ஜ்வலனப்ரப: | 
வாயவ்யாம் வாமனோ வஜ்ரீ தருணாதித்ய தீப்திமான் || 

திரிவிக்ரமர் கத்தியைத் தரித்தவர், தீப்பிழம்பென ஒளிர்பவர் நிர்ருதி திசையாம் தென்மேற்கில் காக்கட்டும். வடமேற்கில் வஜ்ராயுதம் தரித்த வாமனர் காக்கட்டும். இளம் சூரிய ஒளியாய்த் திகழ்பவர். 

ஐசான்யாம் புண்டரீகாப: ஸ்ரீதர: பட்டஸாயுத: | 
வித்யுத் ப்ரபோ ஹ்ருஷீகேசோ ஹ்யவாச்யாம் திசிமுத்கரீ || 

ஈசான்ய திசையான வடகிழக்கில் தாமரைபோல் சுடரும் ஸ்ரீதரர் காக்கட்டும். ஈட்டி ஆயுதம் கொண்டவர். மின்னலென ஒளிவீசும் ஹ்ருஷீகேசர் கீழே திசையில் காக்கட்டும். சுத்தியலைத் தரித்தவர். 

ஹ்ருத்பத்மே பத்மநாபோ மே ஸஹஸ்ரார்க்க ஸமப்ரப: | 
ஸர்வாயுத: ஸர்வசக்தி: ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக: || 

இதய கமலத்தில் பத்மநாபர் திகழட்டும். ஆயிரம் கதிரொளிக்கீடான பிரகாசம் மிக்கவர். அனைத்து வல்லமைகளும், அனைத்து சக்திகளும் உடையவர். அனைத்தும் அறிந்தவர். அனைத்து திசையிலும் செல்லும் வல்லவர் காக்கட்டும். 

இந்த்ரகோபக ஸங்காச: பாசஹஸ்தோSபராஜித: | 
ஸ பாஹ்யாப்யந்தரம் தேஹம் வ்யாப்ய தாமோதர: ஸ்தித: || 

இந்திரகோபப் பூச்சிபோன்ற நிறத்தால் நம் கண்ணைக் கவரும் தோற்றத்தர். பாச வல்லிழையைக் கையில் கொண்டவர். பிறரால் வெல்லப்பட முடியாதவர். அவரே உடம்பில் உள்ளும் புறமும் வியாபித்து நின்று காக்கட்டும். 

ஏவம் ஸர்வத்ரம் அச்சித்ரம் நாமத்வாதச பஞ்ஜரம் | 
ப்ரவிஷ்டோஹம் ந மே கிஞ்சித் பயமஸ்தி கதாசந || 

பயம் நாஸ்தி கதாசந ஓம் நம இதி || 

இத்தகையதான பன்னிருநாமங்களால் ஆன இந்தக் கூண்டானது அனைத்துவிதமான பாதுகாப்பும் தருவது. எதிர்க்க இயலாதது. இந்தக் காக்கும் கூண்டினுள் நுழைந்து நான் சிறிதும் எந்தப் பயமும் அற்று நிம்மதியாக இருக்கிறேன். பயம் எதுவும் ஒரு போதும் இல்லை. அந்தப் பிரணவ வடிவான கடவுளை வணங்குகிறேன் இவ்வாறு. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


No comments:

Post a Comment