Friday, February 18, 2022

ஸ்ரீலலிதா பஞ்சரத்னம்

கோவிலுக்குச் சென்று வழிபடும்போதோ, வீட்டில் பூஜையில் வழிபடும் போதோ ஒரு கிரமம் இருக்கிறது என்பதை இந்தத் துதியில் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதர் நமக்கு உணர்த்துவது போல் இருக்கிறது. அதாவது முதலில் தெய்வத்தின் முகமண்டலத்தை நினைவில் கொள்ளுதல், பிறகு நமக்கு அருள் செய்யும் கரங்களைப் போற்றுதல், பின்னர் அனைத்திற்கும் காரணமாய் விளங்கும் தெய்வத் திருவடிகள், அந்தத் திருவடிகளிலேயே நாம் சரண் அடையவேண்டும் என்பதைக் குறிக்க திவ்ய பாதங்களை வந்தனம் செய்தல். மனம், சொல், செயல் என்று மானஸ, வாசிக, காயிக மூன்று விதத்திலும் கடவுள் வணக்கம். பின்னர் தெய்வத் தத்துவத்தைக் குறித்து ஆழ்ந்து தியானித்தலாகிய அனுசந்தானம். நிறைவாக கடவுளின் நாமங்களை ஆனந்தத்துடன் கீர்த்தனம் செய்தல். ஸ்மரணம், பஜனம், வந்தனம், அனுசந்தானம், நாம கீர்த்தனம் என்று ஐந்து முக்கியமான பகுதிகளையும் அமைத்து உலகு புரக்கும் அன்னையாகிய ஸ்ரீலலிதாம்பிகையைத் துதிக்க நமக்கு உன்னதமான துதியைத் தந்துள்ளார். அதற்குப் பெயர் ஸ்ரீலலிதா பஞ்சரத்னம். 



ப்ராதஸ்மராமி லலிதா வதநாரவிந்தம் 
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம் | 
ஆகர்ண தீர்க்க நயநம் மணிகுண்டலாட்யம் 
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வல பாலதேசம் || 

ஸ்ரீலலிதா அன்னையின் முகக்கமலம் அதையே காலையில் நினைக்கிறேன். கோவைபழம் போல் சிவந்த உதடுகள், பெரிய முத்தினால் இயன்ற மூக்குத்தியானது திகழ்கின்ற நாசி, காதுகள் வரை நீண்ட கடைக்கண் ஓடும் கண்கள், மணிகளால் செய்யப்பட்ட குண்டலங்கள் விளங்கும், புன்முறுவல் பூத்துத் திகழும், கத்தூரிமணம் விரியும் நெற்றித்தடம் - இவ்வாறு திகழும் முகக்கமலத்தை நினைக்கின்றேன். 



ப்ராதர்பஜாமி லலிதா புஜகல்பவல்லீம் 
ரத்நாங்குலீய லஸத் அங்குலி பல்லவாட்யாம் | 
மாணிக்யஹேம வலயாங்கத சோபமாநாம் 
புண்ட்ரேக்ஷு சாப குஸுமேஷு ஸ்ருணீர்ததாநாம் || 

ஸ்ரீலலிதாம்பிகையின் கைகளோ நினைத்ததையெல்லாம் அருளும் கல்பகக் கொடிகள் போன்றவை. ரத்னங்களால் இழைத்த மோதிரம், அந்த மோதிரம் திகழும் துளிர் போன்ற விரல்கள், மாணிக்கங்களால் அமைந்த வளைகள், வளைகள் அணியாகித் திகழும் வரமருளும் கைகளின் சோபை, வெண்ணிறக் கரும்புவில், பூவினால் இயன்ற அம்புகள், அங்குசம் என்றிவை சுடர்ந்து திகழும் கற்பகக் கைகள் விளங்கும் லலிதா அன்னையை காலையில் வழிபடுகிறேன். 



ப்ராதர்நமாமி லலிதா சரணாரவிந்தம் 
பக்தேஷ்ட தாந நிரதம் பவஸிந்துபோதம் | 
பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம் 
பத்மாங்குச த்வஜ ஸுதர்சந லாஞ்சனாட்யம் || 

பக்தர்கள் வேண்டுவன எல்லாம் அளிப்பதிலேயே எப்பொழுதும் மும்முரமாய் இருப்பவளும், பவக்கடலில் காப்பாற்றும் ஓடமாக இருப்பவளும், பதுமத்தில் வீற்ற நான்முகன் முதலா அனைத்து தேவர்களும் வழிபட நின்றவளும், பத்மம், அங்குசம், த்வஜம், சுதர்சனம் ஆகிய ரேகைகளும் சின்னங்களும் விளங்கித் திகழும் ஸ்ரீலலிதா அன்னையின் சரண கமலங்களில் காலையில் வணங்குகிறேன். 



ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவாநீம் 
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம் | 
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம் 
வித்யேச்வரீம் நிகம வாங்மனஸாதிதூராம் || 

பரமார்த்த மங்களமாய்த் திகழ்பவள், பரமேச்வரனின் சக்தியாய் விளங்குபவள், த்ரயீ என்னும் வேதங்களின் அந்தமாக விளங்கும் வேதாந்தங்களால் உணரத் தக்க மஹிமை மிக்கவள், சற்றும் குறைவற்ற கருணையே ஆனவள், விச்வத்தின் படைப்பு, லயம், இருப்பு என்று அனைத்திற்கும் காரண பூதையாய் இருப்பவள், சகல வித்யைகளுக்கும் ஈச்வரியாய்த் திகழ்பவள், நிகமம் ஆகிய வேதத்திற்கும், வாக்கிற்கும், மனத்திற்கும் மிகத் தொலைவில் இருப்பவள் ஆகிய ஸ்ரீலலிதாம்பிகையைக் காலையில் துதிக்கின்றேன். 



ப்ராதர்வதாமி லலிதே தவ புண்யநாம 
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி | 
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீ பரேதி 
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி || 

அன்னையே! நினது புண்யநாமங்களை, காமேச்வரீ என்றும், கமலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், ஜகத்திற்கெல்லாம் உற்ற பெரும் ஜநநீ என்றும், வாக்தேவதையே என்றும், திரிபுரேச்வரீ என்றும் அழைத்து வார்த்தைகளால் காலையில் நின்னையே மொழிகின்றேன் ஸ்ரீலலிதாம்பிகையே! 



ய: ச்லோகபஞ்சகம் இதம் லலிதாம்பிகாயா: 
ஸௌபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே | 
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நா 
வித்யாம் ச்ரியம் விமலஸௌக்யம் அநந்த கீர்த்திம் || 

மிக அழகியதும் உயர்ந்த சௌபாக்யத்தைக் கொடுப்பதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் மீது இயன்ற இந்த ஐந்து சுலோகங்களை விடியற்காலையில் யார் படிக்கின்றார்களோ அவர்களுக்கு லலிதா அன்னை சீக்கிரம் பிரசன்னம் ஆகிறாள். அவர்களுக்கு வித்யை, செல்வம், குறைவற்ற சௌக்யம், எல்லையற்ற புகழ் ஆகியவற்றைத் தருகிறாள். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

No comments:

Post a Comment