Wednesday, January 4, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 19

குத்து விளக்காகிக் கோதுகலப் பாட்டாகி
வித்துமாய் வீட்டிற்குத் தானாம் திருப்பாவை
நத்தி நமக்காக நாச்சியார் தானருளப்
புத்தியோகு தானருளும் பூரணன் பள்ளிகொள்ளும்
தத்துவமும் தண்தகவும் தெள்ளுரைகள் தாம்விளக்க
எத்துக்கிவ் வின்னாமை இப்பாரைத் தான்நலியும்
தித்திக்கும் பாடல் திகட்டா அருளமுதம்
பத்தியுடன் பாடிப் பொலிந்தேலோ ரெம்பாவாய்.

கௌதுகம் அல்லது கௌதூகலம் என்பது வார்த்தையின் வடிவம். உற்சாகமான, கொண்டாட்டமான, வெளிப்படையாகப் பொங்கும் மகிழ்ச்சி என்பதெல்லாம் இந்த வார்த்தையின் பொருள்கள். அதுவே இங்குக் கோதுகலம் என்று மாறியிருக்கிறது. குத்துவிளக்கு என்பதில் ஒளிரும் சுடர் மங்கலத்தைக் குறிப்பது. மங்கலம் நிறைந்த கொண்டாட்டம் என்பதையே கௌதூகலம் என்னும் வார்த்தை குறிக்கும். இங்கே நாச்சியார் அருளிய திருப்பாவை மோக்ஷம் என்னும் பெரும் ஆனந்தமான கொண்டாட்டத்திற்கும், நித்தியமான மங்களத்திற்கும் ஏற்றிவைத்த குத்துவிளக்காக இருக்கிறது. பரம்பொருளுக்கும், ஜீவர்களுக்கும் நடைபெறும் திருமணம் என்னும் குதூகலத்தைக் குறிக்கும் பாட்டாகவும் இருக்கிறது. அந்த மோக்ஷமாகிய வீடுபேறு விளையும் வித்தாகவும் இருப்பது திருப்பாவை. முப்பது பாட்டுகளில் மொத்த ஜீவர்களின் நல்வாழ்வை உறுதி செய்து விட்டாள் ஆண்டாள். ‘ஜீவனுக்கு மோக்ஷம் நல்குவதற்கு முன்னர் ஜீவனுக்கு நான் புத்தியோகம் தருகிறேன்’ என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன். அந்தப் பூரணன் நம்முள்ளத்துள் என்றும் நிலைபேராமல் விளங்குவதற்குப் பெயர் பள்ளிகொள்ளுதல் என்பது. அதற்கான தத்துவங்களையும், அவனைக் குளிரச் செய்யும் தகவுகளையும் நமக்குத் தெளிய உரைப்பன வியாக்கியானங்கள். இவ்வளவு ஆக்கங்கள் செய்து வைத்திருக்கும் போதும் இந்த உலகில் எப்படி இன்னாமை என்பது மனித குலத்தை நலியமுடியும்? திருப்பாவை மருந்து மட்டுமன்று. இனிப்பும் ஆகும். அதுவும் ஒருநாளும் திகட்டாத அருளின் அமுதம். நம் வேலையெல்லாம் பக்தியுடன் பாடிப் பொலிவு அடைய வேண்டுவதே ஆகும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


No comments:

Post a Comment