Sunday, January 1, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 17

அம்பரமும் தண்ணீரும் சோறும் நமக்காகும்
உம்பர்கோன் உத்தமன்பால் உள்ளும் உயிருமாய்
எம்பிரான் தாளிணையில் என்றுமே காதலாகிச்
செம்புலத்துப் பெய்நீராய்ச் சேர்ந்தென்றும் ஒன்றிவாழும்
அம்புலத்துக் கான்றவழி ஆண்டாள் தகவுரைத்தாள்;
நம்பிகாள் நங்கைமீர்காள் நாடுமினோ நல்லுரைகள்;
நம்பரும் நன்மையெலாம் நானிலம் காணலாகும்
வம்புலாம் சீர்திகழ வாழ்த்தேலோ ரெம்பாவாய்.

உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்றார் நம்மாழ்வார். உண்கின்ற உணவை உண்மையில் பிரம்மம் என்று உணர் - என்று சொல்கிறது உபநிஷதம். அயர்வறும் அமரர்கள் அதிபதியான புருஷோத்தமனையே நமக்கான எல்லாமும் ஆகக் கருதும் நிலை கடவுள் பக்தியில் உயர்ந்த நிலை. அந்த நிலையை நமக்கு உண்டாக்கவல்லது திருப்பாவை. காதலின் உளம் தோய்ந்து ஒன்றிய நிலையைச் ‘செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் கலத்தல்’ என்கிறது சங்கத் தமிழ். உயிர்க்குயிராய் உலவும் உத்தமனோடு அத்தகைய காதலில் ஒன்றுவதே அறிவுக்கு அழகிய நிலை ஆகும். திருப்பாவையின் அத்தகைய ஆழ்பொருட்களை உரைகளில் நமக்கு உணர்த்துகின்றனர் ஆன்றோர்கள். அவற்றைக் கற்றுப் பகவத் விஷயத்தில் ஈடுபாடு ஆழும் போது புதுப்புது சிறப்புகள் தோன்றும். (வம்பு எனில் புதுமை.) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

1 comment:

  1. இராமானுசனடியேன். சிறப்பாக உள்ளது

    ReplyDelete