Monday, January 9, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 24

அன்றிவ் வுளமெலாம் ஆண்டாள் அடிபோற்றி
சென்றங்கு நம்மகந்தை செற்றாள் திறல்போற்றி
பொன்றவே சங்கை புகன்ற உரைபோற்றி
கன்றுதீய சிந்தை கெடுத்தாய் கழல்போற்றி
குன்றாத காதல் கொடுத்தாய் குணம்போற்றி
வென்றே எமையெடுக்கும் நின்தாள் விறல்போற்றி
என்றென்றுன் பாசுரமே ஏத்தி உரைகொள்வான்
இன்றுயாம் வந்தோமால் ஏற்றேலோ ரெம்பாவாய்.

என்று நம் உள்ளம் விழித்துக் கொண்டதோ, என்று நம் இயல்புக்கு ஏற்ற நலம் நமக்கு விளையத் தொடங்கியதோ என்று நாம் திருப்பாவையில் மனம் தோய ஆரம்பித்தோமோ, அன்றே நம் உள்ளமெல்லாம் ஆளத் தொடங்கிவிட்டவள் ஆண்டாள். அவளுடைய ஆட்சி நம் உள்ளத்தில் நடக்கும் போது எப்படி அகந்தை இருக்க முடியும்? கடவுளை நோக்கிச் செல்லும் வழியில் தோன்றும் சங்கைகளை, சந்தேகங்களை எல்லாம் உரைகள் நன்கு நீக்கித் தெளிவைத் தருகின்றன. இந்த நலம் எல்லாம் நம்முள் விளைய விதைநடுவாய் இருந்தது ஸ்ரீஆண்டாளின் பேரருள். அதை உணர்ந்த மறுகணம் நம் உள்ளம் பாடத் தொடங்கிவிடுகிறது ஆண்டாளை நோக்கி. அவள் நம்மையும் ஆண்டாள் தன் அருளால். கண்ணனையும் ஆண்டாள் தன் அன்பால். என்ன பாடுகிறது நம் உள்ளம் ஆண்டாளை நோக்கி? ‘எங்கள் கருத்த தீய சிந்தையைக் கெடுத்தவளே! உன் கழல் போற்றி! நின்பால், நிமலன்பால் சிறிதும் குறையாத பக்தியைத் தந்தாய் நின் குணம் போற்றி! உன் திருவடிகளால் எம்மை வென்று விட்டாய் அம்மா! நின் சோபனமான வெற்றி போற்றி!’ என்று என்று ஏற்றிப் போற்றி உன் பாசுரங்களையே என்றும் வாய்வெருவி, அதன் உரைகளை நாங்கள் கற்போம். அதற்கும் உன் அருளே பெருந்துணை என்று இன்று வந்து நிற்கின்றோம். எம்மை ஏற்றருள்வாய்! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment