Friday, January 13, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 28

கறவைகள் புன்சிரிக்கும் கல்விக்கே தேர்ந்தோம்
துறவிலோம் திண்மையிலோம் தீமைக்கே கற்றோம்
அறமிலாப் பாரிதனில் ஆண்டாளைப் பெற்றோம்
குறையொன்று மில்லாத கோதைமொழி கற்றோம்
உறவேல் நமக்கென்றும் ஓதுமுரை உற்றோம்
அறியாதப் பிள்ளைகளோம் அன்பினால் செய்யும்
சிறுமை மதிமாற்றிச் சிந்தையினை ஆளும்
பொறுமை யுனக்கேயாம் போந்தேலோ ரெம்பாவாய்.

கறவைகள் என்னும் ஆனினங்கள் நம்மைக் காணும் போது அவற்றை நாம் நன்கு நோக்கினால் ஏதோ ஓர் எள்ளல் நகை அவை புரிவது போல் இருக்கும். ’நான்கு காலில் நின்றுகொண்டு நாங்கள் வாழ்வதை விடவும் தரம் குறைந்துதான் இரண்டு காலில் நின்று, இருநிலம் எல்லாம் ஆண்டு, மதிவல்லமை கொண்டு மனிதர் என்று நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கை’ என்று அவை சொல்லாமல் சொல்வது போல் தோன்றும். டாக்டர் டூலிட்டில் என்னும் படத்தில் வருவதைப் போன்று ஒருவேளை அவை பேசும் மொழி நமக்குப் புரியக் கூடுமானால் நமக்கு என்றும் இரத்தக் கொதிப்புதான். எனவேதான் ஓரிரு கணங்களுக்கு மேல் அவற்றை நாம் உற்று நோக்க முடியாது. ஏனெனில் நம் மனசாட்சியும் அவற்றோடு கட்சி சேர்ந்து விடுமோ என்ற பயம் என்றும் நமக்கு உண்டு. நாம் கற்ற கல்வியெல்லாம் பார்க்கப் போனால் கறவைகளின் புன்சிரிப்புக்கு எதிர் நிற்க முடிவதில்லை. ஆசைகளை அனுபவிப்பதைத்தான் மிகப்பெரிய சாதனை என்று கருதுகிறோம். உண்மையில் ஆசைகள் என்பவை இயற்கை நம்மை ஸ்விட்ச் தட்டி ஆட்டிவைக்கும் இயந்திரத் தனங்கள். இதை ஒரு நாளும் நாம் உணர்வதில்லை. உணர்ந்தாலும் நம்மிடம் உணர்வில் நிலைநிற்கும் திண்மை இல்லை. இயற்கையின் அடிமைகளாய் இருந்துகொண்டு நாம் கற்பது எல்லாம் தீமைக்கே குற்றேவல் என்று ஆகிவிடுகிறது. நாம் உள்ளூற அந்நியப்பட்டு நிற்பது எதனோடு என்றால் அறம் என்பதனோடு. இந்த அறமிலாப் பார் இதனில் நல்ல வேளையாக நாம் ஆண்டாளைப் பெற்றிருக்கிறோம். அவளுடைய மொழி குறை ஒன்றும் இலலாதது. குறையொன்றுமில்லாத கோதைமொழியை நாம் கற்பதே உய்வுக்கு வழி. நமக்கு உறவாக உரைகளையும் பெற்றோம். அறியாதப் பிள்ளைகளோம் நாம். அன்பு ஒன்றைக் கைக்கொண்டால் நம்முடைய சிறுமை மதியை மாற்றி நம் சிந்தையினை ஆளும் பொறுமை வாய்ந்தவள் ஸ்ரீஆண்டாள் ஒருவரே. அந்த ஆண்டாளையே அடைக்கலமாய் நாம் புகுகின்றோம்! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment