Tuesday, January 10, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 25

ஒருத்தி மொழியாய்ப் பிறந்தே உரவோர்
அருத்த வுரையாய்ப் பரந்தே ஒளிர
தரிக்கிலா தாகிநம் தீங்கு கழியக்
கருத்தைக் கவர்வித்துக் கள்ளம் அகற்றி
விருப்பென்ன நின்ற நெடுமாலாய் வேயர்
திருப்பாவை தந்த தமிழால் திருமால்
திருத்தக்க அன்பால் தமியர்யாம் பட்ட
வருத்தமும் தீர்ந்துநாம் வாழ்ந்தேலோ ரெம்பாவாய்.

ஒருத்தி என்பது அஞ்சுகுடிக்கு ஓர் சந்ததியாய், தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இலலாத மகிமை உடைய ஸ்ரீஆண்டாளைக் குறிப்பது. அவள் எப்படி தன்னிகரின்றிச் சிறந்து விளங்குகிறாரோ அதேபோல் அவளது மொழியும் மொழி என்பதற்கே இலக்கணமாகத் திகழ்கிறது. அத்தகைய ஒருத்தி மொழியாய்ப் பிறந்தது திருப்பாவை. வேயர்தம் குலத்தின் திருப்பாவை மொழிந்தது திருப்பாவை. பெரும் ஞானிகளாலும் அநவரதம் தியானிக்கப்பட்டு அதற்கான உரைவளம் பெருகியது. ஆழ்பொருள்கள் நம் நெஞ்சில் ஒளிரவும் நாம் அறியாமையால் சேர்த்துக் கொண்டிருந்த தீமையெல்லாம் கழிந்தது. ஸ்ரீஆண்டாள் நம் கருத்தையெல்லாம் கவர்ந்து, அதில் உள்ள கள்ளமெல்லாம் அகற்றி, நம் விருப்பமெல்லாம் நெடுமாலுக்கே என்று ஆக்கினாள். திருமகள் நமக்குப் பரிந்துரைக்க, திருமாலின் அன்பு நம்பால் வளர்ந்தது. வளரவே, நாம் பட்ட வருத்தம் எல்லாம் தீர்ந்தது. நாம் இப்பொழுதுதான் வாழ்ந்தோம் என  ஆனோம். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment