Thursday, January 12, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 27

கூடாரைக் கோவிந்தன் வெல்லும் உரையாகி
நாடாரை நாரணர்க்கே ஆட்படுத்தும் ஆண்டாளைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடும் நயக்கும் நல்லுரையும் நாவினிக்கச்
சூடகமும் தோள்வளைக்கும் மாலுக்குத் தோதாகிப்
பாடும் அகச்செவியின் பூவாகிப் பேருரைகள்
ஆடும் பொருளாழம் ஆடையும் பாற்சோறும்
மூடுநெய் தோய முழங்கேலோ ரெம்பாவாய்.

சிருட்டி என்பதே ஜீவர்கள் தம்முடைய அறிவைக் கொண்டு உலகின் உள்ளர்த்தத்தை உணர்ந்து கடவுளை அடையத் தலைப்படுதலே நோக்கமாக உடையது. ஆனால் அந்த அறிவைக் கொண்டு ஜீவர்கள் தமக்குக் கேடே சூழ்ந்தனர். அவர்களைக் கடவுளை நோக்கி வழிநடத்த சாத்திரங்கள் தந்தார் கடவுள். ஆனால் அப்பொழுதும் சாத்திரங்களுக்கு அவப்பொருள் எல்லாம் உரைத்து, அதையே அகங்கார விஷயமாக்கி நிஷ்பலம் ஆக்கிவிட்டனர் ஜீவர்கள். ஜீவர்களை ஜீவர்களைப் போன்றே வந்துதான் ஆட்கொள்ள முடியும் என்று அவதாரம் செய்து பார்த்தான் பகவான். அப்பொழுதும் தம்மைப் போல் ஒரு ஜீவன் என்று அலட்சியம் செய்தனர் ஜீவர்கள். ஆழ்வார்களைப் பிறப்பித்து அருளிச்செயலைப் பாடச் செய்தபின்னர் ஜீவர்கள் மிகவும் ஈடுபாடு கொண்டு கண்ணன் புகழில் ஈடுபட்டனர். அதுவும் ஆழ்வார்களின் தத்துவ வடிவாய்ப் பிறந்த ஆண்டாளின் திருப்பாவையோ கூடாமல் விலகிச் சென்ற ஜீவர்களையும் வென்று அவனுக்கு ஆட்படுத்தும் உரையாகிவிட்டது. கடவுள் நாட்டமே இல்லாமல் இருந்த ஜீவர்களுக்கும் நாரணனைக் காட்டி அவர்களை ஆட்படுத்தும் ஆண்டாளைப் பாடி நாம் பெறும் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. ஆண்டாளின் திருமொழிகளுக்கும், திவ்யப் பிரபந்தங்களுக்கும் ஏற்பட்ட வியாக்கியானங்களோ அனைவரும் நயக்கும் இனிமை உடையன. அவற்றைக் கற்கும் போது அகம் பூரிக்கிறது. தோள் தானே வளைந்து திருமாலைத் தொழுகிறது. திருமாலுக்கே தோதாக ஆகிப்போன நம் அகமோ அவனைப் பற்றியே பாடுகிறது. பகவத் விஷயத்தின் அர்த்த நுட்பங்கள் நம் அகச்செவியில் பூக்கின்ற உயிர்ப்பூவாக மலர்கின்றன. அந்த உரைகளில் ஆழும் போது காணும் ஆழங்கள், அதன் இனிமை எல்லாம் தீஞ்சுவை அடிசிலாக நெய்யாடி மணக்கின்றன. இந்த பகவத் இனிமையில் நம் அகமோ முழங்குகிறது ஆண்டாளின் பெருமையை. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment